Friday, December 30, 2005

தமிழில் இலக்கணம் கடைப்பிடித்தல்.

VoW அவர்களின் எண்ணத்தில் வந்த பதிவைப் பார்த்ததும் இலக்கணத்தைக் கடைப்பிடித்தல் என்பதன் மீது எனக்கிருந்த சந்தேகத்தையும் சிக்கலையும் ஒரு பதிவாக எழுதும் எண்ணம் வந்தது.
ஆகவே ஓர் அவசரப்பதிவு.

நான் சில இலக்கணத் தவறுகளைத் தெரிந்தே செய்கிறேன். அதாவது மீறுகிறேன்.
பல இடங்களில் 'ல்' --'த்' புணர்ச்சியைத் தெரிந்தே தவிர்க்கிறேன்.
காவல் + துறை = காவற்றுறை
கல் + தூண் = கற்றூண்
கடல் + தொழில் = கடற்றொழில்

இவை, காவல் துறை, கல் தூண், கடல் தொழில் என்றே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. சிலர் இடையிலே 'த்' போடுவார்கள். இப்புணர்ச்சிவிதியைக் கடைப்பிடிப்பதில் எனக்கொன்றும் சிக்கலில்லை. வாசிப்பவருக்கு, பெரும்பாலும் புழக்கத்திலில்லாத சொல் சங்கடத்தைக் கொடுக்குமென்பது தவிர்த்தலுக்கான ஒரு காரணம்.

மேலும் நான் உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன். என்னிடம் யாராவது வலிமிகும் (ஒற்று வரும்) , வலிமிகா (ஒற்று மிகா) இடங்கள் பற்றிக் கேட்டால் நான் சொல்வது:
'நீ எப்படி உச்சரிக்கிறாயோ அப்படி எழுது'
என்பதுதான். எந்தெந்த இடங்களில் ஒற்று வரவேண்டுமோ அந்தந்த இடங்களிலெல்லாம் ஒற்றுப்போட்டுத்தான் நாம் உச்சரிக்கிறோம். இது தொன்னூறு வீதம் பொருந்தும். அதேபோல் சொற்புணர்ச்சியும் எமது உச்சரிப்பில் தான் (உச்சரிப்பிற்றான் என்று எழுத முடியுமா?) பெரிதும் தங்கியுள்ளது.

ஆனால் கடற்றொழில், காவற்றுறை, கற்றூண் என்று நாங்கள் யாரும் பேச்சுவழக்கில் உச்சரிப்பதில்லை.
நிறையப் பொழுதுகளில் 'த்' சேர்த்து உச்சரிக்கிறோம்.
கடல் + தொழில் = கடல்த்தொழில்
காவல் + துறை = காவல்த்துறை
கல் + தூண் = கல்த்தூண்

அதாவது இப்புணர்ச்சிவிதி ('ல்'-- 'த்') எங்கள் பேச்சுவழக்கிலிருந்து மிகமிக விலத்தி நிற்கிறது. எம்மால் உச்சரிப்பிற் கடைப்பிடிக்க முடியாத விதியை, அல்லது இயல்பினின்று பிறழ்ந்த விதியை ஏன் காவித்திரிய வேண்டுமென்ற கேள்வி எனக்குண்டு.
இலக்கண விதிகளனைத்தும் இயல்பினின்று உருவானவைதாம் என்ற தெளிவு எனக்குண்டு. எனவே எம்முன்னோர்களின் உச்சரிப்பில் இயல்பாக இப்புணர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் அதைத் தொலைத்துவிட்டோம் ('ழ'கர உச்சரிப்பைத் தொலைத்ததைப் போல). இன்றைய நிலையில் இப்புணர்ச்சிவிதியைக் கைக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எனக்குண்டு. நானறிய, பெருமளவானோர் இக்குறிப்பிட்ட விதியைக் கைக்கொள்வதிலிருந்து விலகிவிட்டனர். சிக்கலான இச்சந்தர்ப்பத்தில் சொற்களைப் புணர்த்தாமல் இரண்டையும் தனித்தனியே எழுதும்படி அறிவுறுத்துகின்றனர், காவல் துறை, கடல் தொழில் என்றவாறு.

நானும் இச்சந்தர்ப்பங்களில் நிலைமைக்கு ஏற்றவாறு சரியாகப் புணர்த்தியோ, புணர்த்தாமல் தனித்தனியாகவோ எழுதுகிறேன். (ஆனால் இடையில் 'த்' போடுவதில்லை. விதியைக் கடைப்பிடிக்கவில்லையென்று இருக்கலாமேயொழிய, புதிய விதி உருவாக்கியவன் என்று இருக்கக்கூடாது:-).

இதைப்பற்றி வலைப்பதிவாளர்களின் கருத்தென்ன?
சரியானபடி புணர்த்தியெழுதினால் வாசிக்கும்போது அந்நியத் தன்மையை யாராவது உணர்ந்திருக்கிறீர்களா? (இதன்பொருள் அச்சொல் புரியாது என்பதன்று)

நான் மேலே எழுதியது விளங்கவில்லையென்றால் அதையும் சொல்லுங்கள். அடுத்தமுறை கவனமெடுக்கிறேன்.
------------------------------------------------------
இலக்கணத்தைக் கடைப்பித்தல் தொடர்பில் மேற்கூறிய விதியொன்றின் மீது மட்டுந்தான் எனக்குச் சிக்கல். இதுகூட ஒவ்வாத தன்மைகொண்ட விதி என்பதால் மட்டுமே. கடைப்பிடிக்கத்தான் வேண்டுமென்று வந்தால் அதில் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை.
மற்றும்படி ஏனைய நடைமுறைகள் பற்றி எவ்விதக் குறையுமில்லை. அவை கடைப்பிடிக்கப்பட வேண்டியவையென்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
------------------------------------------------------

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, December 27, 2005

தாடியறுந்த வேடன் - சிறுவர் பாடல்

நவாலியூர் சோமசுந்தரப் புலவர் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏற்கெனவே அவரின் 'கத்தரித் தோட்டத்து வெருளி'ப் பாட்டும், 'ஆடிப்பிறப்புக் கொழுக்கட்டை'ப் பாட்டும் மதி கந்தசாமியால் பதிவாக இடப்பட்டன. இப்போது அவரின் இன்னொரு பாடலை நானிங்கு பதிவாக இடலாமென்றிருக்கிறேன்.

சோமசுந்தரப் புலவரைத் 'தங்கத் தாத்தா' என்று செல்லமாக அழைப்பதுண்டு. தாத்தாவென்றால் தாடியில்லாமலா? இவருக்கும வெண்பஞ்சுபோல வெள்ளைத்தாடி இருந்ததாம். இவர் தாடி பற்றியும் ஒரு பாட்டெழுதியுள்ளார். அது "தாடியறுந்த வேடன்".

தன் தாடிக்கு இப்படி நடந்தால் எப்படியிருக்குமென்று நினைத்தோ உண்மையிலேயே அவர்தாடிக்கு வந்த ஆபத்தை வைத்தோ இப்பாடலை அவர் எழுதியிருக்கக்கூடும்.

நாயை வைத்து வேட்டையாடும் ஒருவன் ஒருநாள் அணில் வேட்டைக்கு தன் நாயுடன் போகிறான். அதில் அவன் தாடி அறுந்துவிட்டது. எப்படி அறுந்ததென்று 'தங்கத் தாத்தா' சொல்கிறார்.

தேமா - இப்பாட்டிற் சொல்லப்படும் தேமா என்பது ஒருபூமரத்தை என்றுதான் நான் விளங்கி வைத்திருந்தேன். ஆனால் இது மாமரத்தில் ஒருவகையென்றும் சிலர் சொல்வதுண்டு. எதுசரியெனத் தெரியவில்லை.
---------------------------------

வீமா! வீமா! ஓடி வாவா - அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி


மரத்தில் இருந்து குதித்தே - அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?


பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.

--------------------------------------


என்ன நடந்ததென்று பாடலில் முழுதும் விளங்காதவர்களுக்கு:
வேடன் தன் நாயான வீமனைக் கொண்டு அணிலைத் துரத்துகிறான். அது வேறோர் பெரிய மரத்தின் பொந்துக்குட் சென்று பதுங்கிக்கொள்கிறது. உடனே வேடன், நாயை பொந்தின் இந்தப் பக்கம் நிற்கச்சொல்லிவிட்டு, தான் மரத்தின் மறுபக்கம் வந்து பொந்துக்குள் எட்டிப் பார்க்கிறான். அப்போது எதிர்ப்பக்கம் நின்ற வீமனுக்கு வேடனின் தாடி பொந்துக்குள்ளால் தெரிகிறது. அதுதான் அணிலென்று நினைத்துக் கவ்வியிழுத்தது வீமன். தாடியும் போச்சு. அணிலும் தப்பியோடி விட்டது.

* * * * *

இது நாலாம் ஆண்டில் (மூன்றாம் தரம்) படித்ததாக நினைவு. அழகான மெட்டு, அழகான பாட்டு. படத்துடன் பாடலைப் படித்தால் இன்னும் அருமையாக இருக்கும். தாத்தாவுக்கு 'வாலைக் கிழப்பிக் கொண்டோடுதே' என்ற சொற்றொடரில் நல்ல மயக்கம் போலிருக்கிறது எங்களைப் போலவே. 'கத்தரி வெருளி'ப் பாட்டிலும் இதே சொற்றொடர் வரும். உண்மையில் அந்த வயதில் வாலைக்கிழப்பிக் கொண்டோடும் ஒரு பசுவை இச்சொற்றொடர் அப்படியே கண்முன் கொண்டுவரும். கன்றுக்குட்டியோ ஆட்டுக்குட்டியோ துள்ளி விளையாடுவதைப் பார்க்கும்போது அறியாமலேயே இந்த வரி வாயில் வந்துவிடும். அந்த வரிக்கு அமைந்த மெட்டும் (இரு பாட்டிலும் இந்தவரிக்கு ஒரே மெட்டுத்தான்) வசீகரித்ததால் அந்தவரியை மட்டும் அடிக்கடி பாடிக்கொள்வோம்.

நன்றி: தங்கத் தாத்தா.
------------------------------

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, December 12, 2005

ஒன்று ரெண்டு மூன்று - சிறுவர் பாடல்

சுந்தரவடிவேல் அவர்கள் மிருகக்காட்சி சாலை என்றொரு பாட்டை, படங்களுடன் அழகிய கோப்பாக்கி தரவிறக்க விட்டிருந்தார். அழகான சிறுவர் பாடலது.

அதே மெட்டிலமைந்த - எண்களை எண்ணும் பாடலொன்றை இப்போது நான் இங்கே இடுகின்றேன். சுந்தரவடிவேலரின் மிருகக்காட்சி சாலைப் பாடலின் மெட்டுத்தான் இந்தப்பாட்டுக்கும். எனவே அப்பாடலின் மெட்டு தெரிந்தவர்கள் அதே மெட்டில் இப்பாடலையும் பாடலாம்.
(ஆம், இப்பாடலின் மெட்டுத் தெரிந்தவர்கள் இதே மெட்டில் அப்பாடலையும் பாடி மகிழலாம்.)

இப்பாடலின் சிறப்பு, ஒன்று தொடக்கம் பத்துவரையான எண்கள் பாடலில் வரக்கூடியதாக அமைக்கப்பட்டதே.
இனி பாடல்.

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணுவோமே நாங்கள்.

ரெண்டுசதம் கொண்டுசென்று மூன்றுகடை தேடி
நாலுபழம் வாங்கிக்கொண்டு நாங்கள்வரும் வழியில்
ஐந்துபெரும் நாய்கலைத்து ஓடிவர நம்மை
தேடிஆறு கல்லெடுத்து தீட்டிவிட்டோ மெல்லோ.

உருண்டுருண்டு சிரித்துக்கொண்டு ஏழுபேரு மாக
எட்டுமணி வண்டியிலே உல்லாசமாய் ஏறி
ஒன்பதுக்குள் வீடுசென்று உணவருந்தி நாமும்
பத்துமணி அடிப்பதற்குள் படுத்துறங்கி னோமே.
-------------------------------------------

மேற்கண்ட பாடலைப் பாட வசதியாக அசை பிரித்துப் பார்த்தால் கீழ்க்கண்டவாறு வரும். அதையும் தருகிறேன்.

ஒன்று ரெண்டு மூன்று நாலு ஐந்து ஆறு ஏழு
எட்டு ஒன்பது பத்து என்று எண்ணு வோமே நாங்கள்.

ரெண்டு சதம் கொண்டு சென்று மூன்று கடை தேடி
நாலு பழம் வாங்கிக் கொண்டு நாங்கள் வரும் வழியில்
ஐந்து பெரும் நாய் கலைத்து ஓடி வர நம்மை
தேடி ஆறு கல் லெடுத்து தீட்டி விட்டோ மெல்லோ.

உருண்டு ருண்டு சிரித்துக் கொண்டு ஏழு பேரு மாக
எட்டு மணி வண்டி யிலே உல்லாச மாய் ஏறி
ஒன்ப துக்குள் வீடு சென்று உண வருந்தி நாமே
பத்து மணி அடிப்ப தற்குள் படுத் துறங்கி னோமே
--------------------------------------------------
இதை யாராவது பாடி ஒலிப்பதிவாகத் தந்தால் நன்று. செய்பவர்கள் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பவும்.

ஓய், சயந்தன்!
கேக்குதா?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, December 04, 2005

சுனாமி மற்றும் காலநிலை அவதானிப்பு.

அண்மையில் கிளிநொச்சியில் காலநிலை அவதானிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. இது வெறுமனே காலநிலைகளை அவதானிப்பதாக மட்டுமன்றி, சுனாமி எச்சரிக்கை மையமாகவும் தொழிற்படுகிறது. இது எப்படி தொடங்கப்பட்டது, இதன் பின்னாலுள்ள உழைப்பு என்பன பற்றி இதை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவரின் கருத்துக்கள் இங்கே பதிவாகின்றன. இது பற்றி ஈழநாதத்தில் வெளிவந்த கட்டுரையொன்றை இங்கே இடுகின்றேன்.

இயற்கை அழிவிலிருந்து மக்களைப்பாதுகாக்கும் தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்

தமிழீழ தனியரசை நோக்கிய கட்டுமானங்களில் தமிழர் தாயகம் பல துறைகளில் அதீத வளர்ச்சிபெற்று வருகிறது. அந்த வகையில் அதன் தனியரசு நோக்கிய வளர்ச்சிப் பாதையின் ஒரு அங்கமாகத்தான் அண்மையில் கிளிநொச்சி அறிவியல் நகரில் ஆரம்பிக்கப்பட்ட (weather monitoring center) காலநிலை அவதானிப்பு நிலையமாகும். எமது தாயக மக்களை பல்வேறு இயற்கை அனர்த்தங்களிலிருந்தும் பாதுகாப்ப தற்கு இந்நிலையம் பெரும் பங்காற்றும்.
அந்த வகையில் காலநிலை அவதானிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக அதன் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிய புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் குகதாசன் கண்ணன் அவர்கள் தரும் விளக்கங்கள்.

"சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட பின்பு எமது தாயகத்தில் ஏற்பட்ட இழப்புக்களின் விளைவால் இனி இவ்வகையான இயற்கை அனர்த்தத்தி லிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக முதலில் சுனாமியை அவதானிப்பதற்கான ஒரு ஒழுங்கு படுத்தலை ஏற்படுத்தத் திட்டமிட்டு கணினி மென்பொருள் ஒன்றை கொண்டுவந்து கணினி யோடு இணைத்து சுனாமியை மட்டும் அவதானித்துக் கூறக்கூடிய ஒரு ஒழுங்குபடுத் தலைத்தான் நாங்கள் முதலில் சிந்தித்தோம். இதன்படி இந்தத் தகவலை அரசியல்துறைப் பொறுப்பாளர் ஊடாக தேசியத் தலை வருக்கு தெரியப்படுத்தியபோதுதான் அவர் கூறினார்,
'ஏன் நாங்கள் எங்களுடைய வளங் களை பயன்படுத்தி ஒரு காலநிலை அவதானிப்பு நிலையத்தை ஆரம்பிக்கக்கூடாது?' என்று.

எனவேதான் தமிழீழத்தில் இவ்வாறானதொரு நிலையம் இன்மையால் தலைவரினது சிந்தனையின் செயல் வடிவமாகத்தான் இந்த காலநிலை அவதானிப்பு நிலையம்.

நாங்கள் லண்டனிலிருந்து இங்கு வரும்போது இவ்வாறான ஒரு சிந்தனையோடு வரவில்லை. ஆனால் இங்கு வந்ததன் பின்புதான் தலைவரின் ஆலோசனைக்கு அமைய இத்துறைசார்ந்த இந்நிலையத்தை இருக்கின்ற வளங்களைக்கொண்டு ஆரம்பித்தோம். இந்நிலையத்தின் செயற்பாடுகள் இரண்டுவகையானவை.
அதாவது ஒன்று சுனாமி அவதானிப்பு நிலையம், மற்றது காலநிலை அவதானிப்பு நிலையம். இதில் மூன்று பேர் கடமையாற்றுகிறார்கள். இவர்களில் ஒருவர் காலநிலை அவதானிப்புப் பிரிவிலும், ஏனைய இரண்டு பேரும் சுனாமி அவதானிப்புப் பிரிவுகளிலும் 24மணி நேரமும் கடமையில் இருப்பார்கள். முதலில் சுனாமி தொடர்பான எமது செயற்பாடு எப்படி இருக்குமென்று பார்ப்போம்.

சுனாமி பல வகையில் ஏற்படலாம். அதில் பிரதானமாக கடலடியில் ஏற்படுகின்ற பூகம்பம், மற்றது கடலடியில் இடம்பெறும் எரிமலை வெடிப்பு, இதைவிட நிலநடுக்கத்தாலும் ஏற்படலாம். இதை அறிவதற்கு மூன்று நிறுவனங்கள் உண்டு.
1. I.O.C
2. P.T.W.C
3. U.S.C.S

இந்த மூன்று அமைப்புகளோடு 24 நாடுகள் சேர்ந்து ஹவாய் தீவில் அந்த நாடு களினுடைய 12இற்கு மேற்பட்ட செயற்கைக் கோள்களின் உதவியுடன் ஒரு வலைப்பின்னலில் முழு உலகையும் கண்காணித்து வருகின்றன. இதன்படி உலகில் எங்கேனும் ஓர் இடத்தில் சாதாரண ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டால் கூட அதாவது 01.5ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டால் கூட அவர்களுக்குத் தெரியும். இதனைக் கவனத்தில்கொண்டுதான் லண்டனிலிருந்து ஹவாய் தீவிலுள்ள நிலையத்தோடு தொடர்புகொண்டு எங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று கேட்டபோது அதற்கு அவர்கள் முதலில் மறுத்தார்கள். 'எதுவாக இருந்தாலும் தாங்கள் இலங்கை அரசினூடாகத்தான் செய்வோம்' என்றார்கள். ஆனால் நாங்கள் தொடர்ந்தும் தொடர்புகளை ஏற்படுத்தி சுனாமி, மற்றும் இயற்கை அனர்த்தம் தொடர்பாக மக்கள் அறிவது ஒரு இராணுவ இரகசியம் சார்ந்த விடயமல்ல. இதுவொரு மனிதாபிமான உதவி. எனவே இலங்கையிலுள்ள வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் நலன் கருதி நீங்கள் இவ் உதவியைச் செய்யவேண்டும் என்று மீண்டும் கேட்டபோது அதற்கு இறுதியில் அவர்கள் சம்மதித்தனர்.

இதற்கு முதல் அவர்களுடன் முதலில் தொடர்புகொண்டு எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று கேட்டபோது அவர்கள் கூறிய முக்கியவிடயம் என்னவெனில் இலங்கை அரசு கூட இதுவரை தங்களோடு தொடர்புகொண்டு இத்தகைய உதவியை கேட்கவில்லை என்றார்கள். இன்னும் தென் இலங்கையில் இப்படியொரு ஒழுங்குபடுத்தல் இல்லையென்றுதான் கூறவேண்டும். எனவே இதன்படி ஹவாய் தீவு நிலையம் தங்களது 12இற்கு மேற்பட்ட செயற்கைக்கோள்கள் மூலம் பெற்றுக்கொள்கின்ற அனைத்துத் தரவுகளையும் இணையத்தளம் மூலம் நாங்கள் உள்வாங்கி இங்குள்ள கணனிகள் மூலம் பரிசீலனை செய்து 05.5ரிச்டர் அளவுக்கு மேல் உள்ள நிலநடுக்கங்களை எங்களுக்கு உடன் அறியப்படுத்தும். (பதினைந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஹவாய் தீவிலிருந்து நாம் தகவல்களை பெற்றுக்கொள்வோம்) இது எங்களுடைய கணனியில் எச்சரிக்கை ஒலியுடன் எழுத்து வடிவிலும் பெற்றுக்கொள்வோம். அதே நேரம் இங்குள்ள கண்காணிப்பாளர் ஒருவர் நித்திரை யில் இருந்தால் கூட அந்த சத்தத்தைக் கேட்டு எழுந்து உடனே அவர் அடுத்த கட்டமாக கணனி மூலம் உலக வரைபடத்தை எடுத்துப் பார்த்து, இந்த நிலநடுக்கம் எங்கு இடம்பெற் றுள்ளது? கடலிலா நிலத்திலா என்பதை அறிந்து கடலடியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தால் அது இலங்கைத்தீவுக்கு அண்மையில் ஏற்பட்டிருக்கின்றதா என்பதையும் அறிந்து அது எவ்வளவு அளவுகோலில் உள்ளது என்பதையும் அறிந்து இங்குள்ளவர்களுக்கு எமது நிலையத்தின் மூலம் அறிவிப்பு விடுக்கப்படும்.

இவ் எச்சரிக்கையை நாங்கள் மூன்று வகையாகப் பிரித்துள்ளோம். அதாவது பச்சை, மஞ்சள், சிவப்பு என்று. இதில் பச்சை சமிக்ஞை என்றால் நிலநடுக்கம் இடம்பெற்றுள்ளது என்றும், 05.5சமிக்ஞை புள்ளிக்கு மேல் என்றால் மஞ்சள் என்றும், 08புள்ளிக்கு மேல் என்றால் சிவப்பு சமிக்ஞை என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 08 புள்ளி என்பது கடும் ஆபத்து, 05.5புள்ளிஎன்றால் அது கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் நிலையாக இருக்கும்.

இதன்படி தமிழீழக் காலநிலை அவதானிப்பு நிலையம் பெற்ற தகவல்களை இங்குள்ள ஊடகங்கள் ஏனைய வசதிகளோடு எமது மக்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவோம் என்றவரிடம் இனியொரு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டால் எமது மக்களின் உயிரிழப்பை தவிர்த்துக்கொள்ளலாமா எனக் கேட்டபோது சடுதியாக ஆம் நிச்சயமாக என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,குறைந்தது இரண்டு மணித்தியாலங்களுக்கு முன் நாம் தகவல்களை ஹவாயிலிருந்து அறிந்து எமது மக்களுக்கு முன் எச்சரிக்கையாக விடுப்போம் என்றார்.இக்காலநிலை அவதானிப்பு நிலையத்தை பொறுத்தவரையில் முதலில் நாங்கள் கிளிநொச்சியில்தான் ஆரம்பித்துள்ளோம். இதனால் ஏனைய மாவட்ட மக்கள் யோசிக்கக்கூடாது, எங்களுடைய பிரதேசங்களில் ஆரம்பிக்கவில்லை என்று. இனிவருங்காலங் களில் தமிழர் தாயகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறு சிறு காலநிலை அவதானிப்பு நிலையத்தை ஆரம்பிக்கவுள்ளோம்.

இப்போது காற்றின் ஈரப்பதன், காற்றழுத்தம், இடிமின்னலுடன் மழையா? சாதாரண மழையா? புயல் போன்ற தகவல்களை அறிந்து 24மணித்தியாலங்களுக்கு முன் எதிர்வு கூறக்கூடியதாக ஒழுங்குபடுத்தி யுள்ளோம். ஆனால் காலநிலை மாற்றங்களை துல்லியமாக அறியவேண்டு மென்றால் அதற்கு எங்களுக்கென தனியான செயற்கைக்கோள் தேவை இருந்தும் நாங்கள் சாதாரணமாக மழை, வெயில் போன்ற காரணிகளில் ஏற்படுகின்ற மாற்றங்களை அறியக்கூடியதாக இருக்கிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கமுடியாது இருந்தாலும் எங்களிடம் உள்ள வசதி வாய்ப்புக்களைக் கொண்டு எமது மக்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றார் கண்ணன்.
--------------------------------------------

நன்றி:- ஈழநாதம்.


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________