Saturday, August 26, 2006

பனங்காய்ப் பணியாரம் -பாடல்

துளசி கோபாலின் பனங்காய்ப் பணியாரம் பதிவு பார்த்திருப்பீர்கள்.
அப்பாடலை அவவின் அனுமதியோடு ஒலிவடிவாக இங்கே பதிவாக்குகிறேன்.

பாடியவர்கள் புஸ்பவனம் குப்புசாமி குழுவினரா?
எழுதியவர் யார்?
களுத்துறைக் கருவாடா, மன்னார்க் கருவாடா பிரபலம்?
அல்லது கீரிமலைக் கள்ளுக்கு களுத்துறைக் கருவாடுதான் தோதோ?

பாடலும் அனுமதியும் தந்த துளசியம்மாவுக்கு நன்றி.





வல்லை வெளியிலே காற்றடிக்கும்
திரளிமீன் துள்ளியெழும்
ஒடியல்கூழ் குடித்தால்
மனமெல்லாம் விண் கூவும்
===========
பனங்காய் பணியாரமே (2)

பச்சைக் கொழும்பு வெத்திலையே -உன்
பார்வை கொஞ்சம் பத்தலையே

பனையோலைப் பாய் விரித்து படுத்துறங்கும் மணியக்கா
கமுகமர பாக்கு தந்து கவுக்கிறது என்னக்கா (1)

காங்கேசந்துறை சுண்ணாம்பை கொஞ்சம் தடவிதடவி கொடடி -உன்
கையாலே வாய் சிவக்க வெத்தலை மடிச்சு கொடடி
ஒக்கார மூலைக்குள்ளே கொக்கு வந்து நிக்குது
கொக்கரக்கோ சேவல் வீட்டு கூரையிலே ஏறுது
கீரிமலைப் பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாக சேர்த்தடித்தால் கிக்குதான் கிக்குதான்
கீரிமலைப் பனங்கள்ளும் களுத்துறைக் கருவாடும்
ஒன்றாக சேர்த்தடித்தால் மப்புதான் மப்புதான்

நான் கோவில்கடவை ஆளு,
நீ சேலை கட்டிய தேரு
நீ சுன்னாகத்து மாங்காய்,
நான் கொடிகாமத்துத் தேங்காய்

பனங்காய் பணியாரமே......

***



கீச்சுமாச்சு தம்பலம் கீயா மாயா தம்பலம்
மாச்சு மாச்சு தம்பலம் மாயாமாயா தம்பலம் (2)

***


மட்டுநகர் தயிர் எடுத்து வளைஞ்சு நெளிஞ்சு வாடி -என்
உயிரை பிடித்து உறைய வைத்து உறியில் வைத்து போடி
மண்பானை தயிர் கனக்கும் என் நெஞ்சு துடிக்கும்
சும்மாடாய் நான் வரவா? சும்மாடாய் நான் வரவா?
கண்டி குளிரிலதான் கைகால் விறைக்குதடி
கொஞ்சம் சூடேத்த நெஞ்சு நினைக்குதடி

முல்லைத்தீவு போவோம்
முயலிரண்டு பிடிப்போம்
நீமூச்சிழுக்கும் நேரம்
நான் பேச்சிழந்து போவேன்

பனங்காய் ...பணியாரமே

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தரவிறக்க மூன்று இணைப்புக்கள் தந்துள்ளேன். ஏதாவதொன்று சரிவரும்.

இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு
இணைப்பு மூன்று



_____________________________________________

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, August 11, 2006

கடகம் - பெட்டி - ஓலை - நார் - நான்

யோகனின் கடகம் பற்றிய விகடனுக்கான விளக்கமும் அதைத்தொடர்ந்த பதிவும் பின்னூட்டங்களும் யோகனின் வலைப்பதிவுத் தொடக்கமும் என்று கடந்த நாலைந்து நாட்களாக வலைப்பதிவில் கடகம் பற்றிய கதை கொஞ்சம் பரவலாக இருக்கிறது.
ஏற்கனவே ஒரு பின்னூட்டத்தில் நான் என் கருத்தைச் சொல்லிவிட்டாலும் கடகம் போன்ற ஒன்றைப் படமாக வெளியிடுவதால் தனிப்பதிவொன்று போடலாம் என்று தோன்றியதே இப்பதிவு.
ஏற்கனவே "கடகத்துட் குழந்தை" என்ற தலைப்பில் என்னால் பதியப்பட்டதே இப்படம்.
படத்திலிருப்பது கடகமா பெட்டியா என்று சொல்லுங்கள்.


எனக்குத் தெரிந்த பனம்பொருட்கள் பற்றி சிறுகுறிப்பைத் தரலாமென்று நினைக்கிறேன். பல சொற்களை ஞாபகப்படுத்தலாமென்பதோடு பின்னூட்டங்களில் சில விசயங்களை அறிந்துகொள்ளலாம் என்பதும் காரணம்.

கடகம்:
பதிவிலும் பின்னூட்டங்களிலும் நான் பலவிடயங்களைத் தெரிந்துகொண்டேன். இப்போதும் கடகம் இழைக்கப்படுவது ஓலையாலா நாராலா என்று திட்டவட்டமாக முடிவுக்கு வரமுடியவில்லை. கண்ணை மூடி யோசித்தால் இரண்டுமே சரிபோலத் தெரிகிறது. ஆனால் ஓலையின் பக்கம் தராசு சாய்கிறது.

கடகம் கட்டாயமாக நியம அளவொன்றைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் அதுவோர் அளவுகருவி. கல், மணல், மண், ஊரி, சல்லிக்கல் என்பன முதற்கொண்டு பலபொருட்கள் இவற்றால் அளக்கப்படுகின்றன. அளவுகள் பற்றி யோகன் அளித்த தகவல்:
// சாதாரண விற்பனைக்குரிய கடகங்கள்;சுமார் 18 அங்குல வாய்விட்டம் ;9 அங்குல உயரம்; அடியின் அமைப்பு 4 மூலை வைத்த சதுரமாக இருக்கும். இதை நார்ச் சிக்கனம் கருதி முதல் சற்று முற்றிய (குருத்திலிருந்து 2ம்;3ம் சுற்றில் வரும் ஓலை)பனையோலையில் ஐதாக இழைத்து விட்டு.பின் வெளிப்பகுதிக்கு பனை நாரால் இழைக்கும் போது; பலம் பெறும்; இறுதியாக வாய்ப்பக்கத்திற்கு சுமார் 2 அங்குல அகலத்தில் சுற்றி சற்றுத் தடிப்பன வாராத நாரை வைத்து பனையீக்கினால் கட்டுவார்கள். 5 கடகங்கள் உள்ள ஒரு கட்டுக் கடகங்களை ஒரு சேர்வை கடகம் எனக் குறிப்பிட்டு விற்பனை செய்வார்கள்; ஒரு வீடுகட்டுமான வேலைக்கு; 2 சேர்வை கடகம் வாங்குவோம்; குளத்துமண் தோட்டத்துக்கு ஏற்றும் போது சுமார் 20 கூலிகள் வேலை செய்யும் போது 4 சேர்வை தேவை.
அந்த நாட்களில் சாதாரணமாக ஒரு வீட்டில் குறைந்தது 3 கடகங்கள் பாவனையில் இருக்கும்! ஒரு பழங் கடகம் குப்பை கூளம் அள்ள; அடுத்தது சந்தைக்குக் கொண்டு செல்வது; 3 வது மிகப் பவுத்திரமானது. சாமியறையில் இருக்கும் சமய சம்பந்தமான காரியங்களுக்காக!கோவில்களுக்கு பொங்கல் வைக்கப் போகும் போது சாமான் காவவும்; பின் பொங்கலுடன் பானை சுமக்கவும்; இந்தப் புனித கடகம் பாவிக்கப்படும். ஆண்டுக்கு ஐந்தாறு தடவை சுவாமியறையை விட்டு வெளியே வரும். அப்பபோ பாவனைக்கு முதல் கழுவிக் காயவைக்கும் பழக்கமும் உண்டு. கட்டாயமும் கூட.
//

நானறிந்த அளவில் கடகங்களின் அளவைப்பொறுத்து இரு வகையானவையுண்டு. சிறிய கடகம், பெரிய கடகம்.
ஒருமுறை எங்கள் ஊர்க் கடற்கரையிலுள்ள கோவிலொன்றில் சுற்றுப்பிரகாரம் கட்டும் வேலை நடந்தது. இரண்டு தொழிலாளிகள் செய்தார்கள். சீமெந்து, மணல், ஊரி கலந்து அச்சுற்றுப்பிரகாரம் செய்யப்பட்டது. அப்போது மணலையும் ஊரியையும் கொண்டுவந்து கொட்டுவதை எங்கள் ஊர் இளைஞர்கள் சிலர் பொறுப்பெடுத்தனர். அதை எண்ணும்படி பங்குத்தந்தையால் நான் பணிக்கப்பட்டேன். (அப்போது பதினொரு வயது) பெரிய கடகத்தில் 30 கடகம் மணலும் சிறிய கடகத்தில் 30 கடகம் ஊரியும் கொண்டுவந்து கொட்ட வேண்டும். மணலில் சிறுகுச்சியால் கோடுபோட்டு எண்ணிக்கொண்டிருந்தேன். தொடக்கத்தில் சரியாகத்தான் இருந்தது. ஒருவர் மணல் கொண்டுவந்து கொட்ட மற்றவர் ஊரி கொண்டுவந்து கொட்டினார். இறுதிவரை ஆட்கள் மாறவில்லை. ஆனால் ஒருகட்டத்தில் அவர்கள் கொண்டுவரும் கடகம் மாறிவிட்டது. சிறியகடகத்தில் மணலும் பெரிய கடகத்தில் ஊரியும் வந்தன. மணல் சற்று எட்டவாகவும் ஊரி பக்கத்திலும் இருந்தது அதற்குக் காரணம். இருபதாவது கடகத்தில் கையும் கடளவுமாகப் பிடித்ததோடு சுவாமியிடமும் சொல்லிவிட்டேன். ஆனால் எத்தனையாவது கடகத்தில் இந்த மாற்றம் நடந்ததென்று தெரியவில்லை.
அதில் இருவர் இரண்டு கடகங்களின் கனவளவுகளைக் கொண்டு கணித்து மிகுதியைச் சரிசெய்து விடப்பார்த்தனர். எத்தனையாவது கடகத்தில் மாற்றம் வந்ததென்று சரியாகத் தெரியாததால் கொட்டியவற்றை மீண்டும் அளந்து பக்கத்தில் குவிக்கவேண்டியாகிவிட்டது.

ஏன் சொல்கிறேனென்றால் கடகங்களில் இரு அளவுகள் இருந்ததாக நான் நினைப்பதற்கு இதுவொரு காரணம். உண்மையில் அப்படித்தானா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும்.

யோகன் சொல்வது போல எங்கள் வீட்டில் கூட்டிய குப்பையை அள்ள பழைய கடகமொன்றுதான் பாவிக்கப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பெட்டிகள்:
இவை முழுக்க முழுக்க பனையோலையாலும் ஈர்க்காலும் செய்யப்படுபவை. பனையோலை என்று சொன்னாலும் 'சார்வு' எனப்படும் முற்றாக விரியாத இளம் ஓலையைக் கொண்டே இவை செய்யப்படுகின்றன. மிகச்சிறிய பெட்டிகள் முதற்கொண்டு பெரிய பெட்டிகள் வரை உள்ளன. கோழிச்சாயத்தால் நிறமூட்டப்பட்ட ஓலைகளால் வண்ண வேலைப்பாடுகள்கூட செய்யப்பட்டிருக்கும். மிகக்கச்சிதமாகப் பொருந்தக் கூடிய மூடிகளோடுகூட ஓலைப்பெட்டிகளுண்டு.
எங்கள் ஊரில் அதிகாலையில் வீடுகளுக்குச் சென்று இடியப்பம், தோசை, அப்பம், சம்பல் விற்கும் ஆச்சி ஒவ்வொன்றுக்கும் விதம்விதமான சிறிய பெட்டிகள் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
வெத்திலை, பாக்கு, சுண்ணாம்பு, சுருட்டு, புகையிலை போன்றவற்றை வைத்திருப்பதற்கும் பெட்டியுண்டு. (கொட்டைப் பெட்டி : நன்றி ஜெயபால்).
சந்தையில் பணம்போட்டு வைப்பதற்கு சிறிய ஓலைப்பெட்டிகளைப் பாவிப்பதைப் பெருமளவிற் காணலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நீத்துப்பெட்டி:
(எழுதும்போது நீர்த்துப்பெட்டி எனப்தே சரியென்று நினைக்கிறேன்).
இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பெரும்பாலும் பிட்டவிப்பதற்கும் அவ்வப்போது மா அவிப்பதற்கும் பாவிக்கப்படுகிறது. நீராவியில் அவிக்கும் பண்டங்களை இதில் வைத்து அவிக்கலாம். (இட்லியை வைக்கலாமா என்று கேட்காதீர்கள்;-))
இதுவும் பெரும்பாலும் நியம அளவொன்றைக் கொண்டிருக்கும். கூம்பு வடிவில் இழைக்கப்பட்டிருக்கும். கூம்பின் முனைப்பக்கம் கீழ்நிற்கத்தக்கவாறு நீருள்ள பானையுள் வைத்தால் அரைவாசி நீத்துப்பெட்டி உள்ளேயும் அரைவாசி பானைக்கு வெளியேயும் இருக்கத்தக்கதாக பானையில் விளிம்பில் பெட்டி பொருந்தி நிற்கும். நீத்துப்பெட்டி தொடாதவாறு பானையில் நீர் இருக்க வேண்டும். பிடித்துத் தூக்கத் தக்கதாக இரண்டு செவிகள் வைத்து இழைக்கப்பட்டிருக்கும்.
பத்துப்பேருக்குள் என்றால்தான் நீத்துப்பெட்டி கட்டுப்படியாகும். அதைவிட அதிகமென்றால் வேறுவழிதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குட்டான்:
இதுபற்றியும் ஏற்கனவே பின்னூட்டங்களில் கதைக்கபட்டுவிட்டது.
பனையோலையால் செய்யப்படும் ஓர் உருளை என்று சொல்லலாம். மிகச்சிறிய அளவிற்கூட குட்டான் செய்வது எனக்கு ஆச்சரியம்.
நாங்கள் குட்டானைப் பாவிக்கும் ஒரே இடம் பனங்கட்டிக்காகத்தான். (வேறு ஏதாவது இருக்கிறதா?)
பனங்கட்டிக்குட்டான் என்று சிறுவயதில் சொல்லத் தொடங்கி இடையில் அதற்காக நக்கலடிபட்டு இப்போது பனங்குட்டான் என்று மட்டுமே சொல்கிறேன். பனங்கட்டி காய்ச்சுவது, குட்டான் இழைப்பது பற்றி தமிழீழப்பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்படும் சஞ்சிகையான "அதாரத்தில்" ஒரு கட்டுரை வாசித்தேன்.
அதன்படி,
பனங்கட்டி காய்ச்சும் தொழில் அருகிவருகிறது. பனங்கட்டி காய்ச்சுவது சுலபமானதில்லை. எந்த நவீன வசதிகளோ அளவுகருவிகளோ இன்றி குடிசைக்கைத் தொழிலாகவே இருந்துவிட்டது. இதற்கு மிகுந்த கைப்பக்குவம் தேவை.பதம் சற்றுப்பிசகினாற்கூட விற்கமுடியாதபடி வந்துவிடும். இதையொரு குலத்தொழில் என்றே பலர் கருதுகின்றனர். இத்தொழில் நுட்பங்கள் வெளியில் பரவுவதில்லை. கட்டுரையாசிரியர் பனங்கட்டி காய்ச்சுவதை நேரில் பார்ப்பதற்காக மிகுந்த கஸ்டப்பட்டுள்ளார். எல்லோரும் மற்றவர்களை அனுமதிப்பதில்லை.
காய்ச்சும் வெப்பநிலை அளவுகள், நேர அளவுகள், கலவை அளவுகள் என்பன சம்பந்தப்பட்ட தொழிலாளின் பட்டறிவுகள் தானேயன்றி தரவு வடிவில் எவையுமில்லை. காய்ச்சுவதற்கு தேர்ந்தெடுக்கும் விறகு முதற்கொண்டு எல்லாவற்றிலும் நுணுக்கமாக இருக்கிறார்கள்.
சரியான வெப்பத்தில் காய்ச்ச வேண்டும். எல்லாவற்றிலும் உச்சக்கட்டம் இறக்கும் பதம்தான். கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் குட்டானில் ஊற்ற முடியாதது மட்டுமன்றி, அதன் சுவையும் மாறிவிடுமாம்.
இத்தொழில் விரிவுபடுத்தப்படாவிட்டால் இன்னும் இரண்டு சந்ததியுடன் அருகிவிடுமென்று எச்சரிக்கப்படுகிறது.

பனங்கட்டிகளும் அதன் தயாரிப்பிடத்தைப்பொறுத்து மதிப்பு ஏறி இறங்குகிறது.
மடு ஆலயத்திருவிழாவில் பனங்கட்டியும் பெருமளவில் விற்பனை செய்யப்படுகிறது. சிங்களவரின் கித்துல் வெல்லமும் தமிழர்களின் பனங்குட்டான்களும் பரிமாறுகின்றன.

யாழ்ப்பாணத்திலும் சரி, வன்னியிலும் சரி தேனீருக்குக்கூட சீனியில்லாத நிலைமைகள் பலதடவை வந்துள்ளன. அந்நேரத்தில் சிறிதளவு சினியை ஓர் உள்ளங்கையில் வைத்து நக்கிநக்கித் தேனீர் குடிப்போம். அந்தளவுகூட சீனியில்லாத நாட்களில் ஓர் இனிப்பை வாயில் வைத்துக்கொண்டு குடிப்போம். அல்லது சிறு சக்கரைத் துண்டோடு குடிப்போம். இப்படிக்குடிப்பதை "நக்குத்தண்ணி" என்று நாம் அழைப்பதுண்டு. பருவகாலங்கள் மாறிமாறி வருவதைப்போல இப்படியான காலமும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும்.

வன்னியில் அடிக்கடி இப்படி நிலைமை வரும். எல்லாம் அரசின் கைகளில்தான் இருந்தது. அரசு நினைத்தநேரத்தில் எந்தப்பொருளையும் நிப்பாட்டும். யாழ்ப்பாணத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு மட்டும் சீனிபோட்டுத் தேனீர் கொடுக்ப்பது வழக்கமாக இருந்தது. வன்னியில் அதுவும் தகர்ந்தது. நக்குத்தண்ணிக் காலங்களில் வீடுகளுக்குப் போனால் நக்குத்தண்ணியே தரச்சொல்லி விருந்தினரே சொல்லவிடுவார்.

இதை எதிர்கொள்ள புலிகள் உள்நாட்டு உற்பத்தியாக பனஞ்சீனித் தயாரிப்பை ஊக்குவித்து வழங்கினார்கள். தட்டுப்பாடற்ற முறையில் குறைந்த விலையில் பனஞ்சீனி வழங்கினாலும் யாழ்ப்பாணத்தில் எங்கள் மக்கள் நடந்துகொண்ட முறை சுவாரசியமானது. கறுப்புச்சீனி பாவிப்பது கெளரவக்குறைச்சலாகக் கருதிய மேற்தட்டு, நடுத்தட்டு (பெரும்பாலும் மணியோடர் போருளாதார வர்க்கம்) கூடுதல் காசு கொடுத்து வெள்ளைச்சீனி வாங்கும், அல்லது குடித்தால் வெள்ளைச்சீனி அல்லது ஒன்றுமில்லை என்று இருக்கும். படித்த வர்க்கம் தானே, புரிந்துகொள்ளும் என்று நினைத்தோ என்னவோ, கரும்புச்சீனியையும் பனஞ்சீனியையும் ஒப்பிட்டு பனஞ்சீனியின் அதிக பலனை விஞ்ஞான ரீதியாக மக்களிடத்தில் சேர்க்க மருதுத்துவர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள் பிரச்சாரம்கூட செய்தார்கள். பீட்ரூட்டில் சர்க்கரைத் தாயரிப்பில்கூட பெருவெற்றியடைந்தது தமிழீழப்பொருண்மியம். ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு போகத்திலேயே மகத்தான தோல்வியை வழங்கினார்கள் எங்கள் மக்கள். இறுதியில் வன்னியிலிருந்து யாழ்பபாணத்துக்கு விறகு இறக்கிய செலவுகூட எடுக்காமல் பனஞ்சீனித் திட்டம் யாழ்ப்பாணத்தில் தோல்வியில் முடிந்தது. (இதுபற்றி இங்கு அதிகம் தேவையில்லை. திசை மாறிவிடும்)

வன்னியில் சீனிக்கு மாற்று ஏற்பாடாக பனங்கட்டி உற்பத்திபற்றி அதிக கரிசனை எடுக்கப்பட்டது. அப்போதுதான் இத்தொழிலை பெருமெடுப்பில் செய்யமுடியாத நிலை உணரப்பட்டது. இந்நுட்பத்தைப் பெற்றுப் பரவலாக்கி தன்னிறைவடைய முயன்றார்கள். வெற்றியளித்ததா தெரியவில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பாய்கள்:
பனையோலைப் பாய் பற்றித் தெரியாதவர்கள் உண்டா?
தனியே படுப்பதற்கு மட்டுமன்றி பல தேவைகளுக்கும் பனம்பாய் பாவிக்கப்படுகிறது.
எங்கள்வீட்டில் 15 x 25 அடியில் பெரிய பனம்பாயொன்று இருந்தது. இடையில் பனஞ்சிலாகை வைத்துச் சுருட்டி தீராந்தியில் போட்டுவிடுவோம். அக்கம்பக்கத்தில் ஏதும் விசேசமென்றால் அந்தப்பாய்க்கு வேலை வந்துவிடும்.
பாயிலும் இடையிடையே கோழிச்சாயம் போட்ட ஓலைகளால் வண்ண வேலைப்பாடுகள் இருக்கும். ஓர் அங்குல அகலங்கொண்ட சார்வோலைகள் தொடக்கம் கால் அங்குல அகலங்கொண்ட சார்வோலைகள் வரை பல்வேறு அளவுகள் கொண்ட ஓலைகளால் பாய்கள் செய்யப்பட்டிருக்கும்.
வயது போனவர்கள் சிலர் பொழுதுபோக்காக இப்படி பாய் இழைப்பார்கள்.
பினாட்டு (பனாட்டு) போடவென்று நல்ல நெருக்கமாக பாய் இழைப்பார்கள். ஊரில் எங்கள் வீட்டில் தொடர்ந்து பினாட்டுப் போடுவோம். போட்ட பினாட்டை பாயிலிருந்து எடுப்பது ஒரு கலை. கிழியாமல் எடுக்கவேண்டும். ஒரேபாயில் நான்கு, ஐந்து முறைகூட பனாட்டுப் போட்டிருக்கிறோம்.
பின்பொருநாள் நண்பர்களுடன் சேர்ந்திருந்தபோது பனாட்டுப் போட்டோம். இறுதியில் பனாட்டைக் கழற்றும்போது தோல்விதான். பாயோடு சேர்த்து சதுரம் சதுரமாக வெட்டிவைத்துவிட்டோம். சாப்பிடும்போது அவரவரே பாய்த்துண்டை உரித்துச் சாப்பிடவேண்டியதுதான்.

பெரிய சமையல்களில் சோறு பரப்ப பனம்பாய்தான் அதிகம் பாவிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

திருகணை/திருகணி:
பேச்சுவழக்கில் திருகணி என்றுதான் எங்கள் பக்கம் சொல்வார்கள். சட்டி, பானை, தாச்சி என்பவற்றை இதன்மேல் வைப்போம். தனியே பனை ஈர்க்கால் மட்டும் செய்யப்பட்டவையுள்ளன. தும்புக்கயிறினால் செய்யப்பட்டவையுமுள்ளன.
'உறி' தெரியும்தானே? கள்ளத்தீனி தின்னும் என்னைப்போன்றவர்களுக்கு எப்போதும் பிடித்தது.
இதுவும் பனை ஈர்க்கால் செய்யப்படுவதுதான். என்னுடைய அம்மம்மாவீட்டில் நான் தேடுவது உறியைத்தான். அனேகமாக பொரித்த மீனோ, இறாலோ, கணவாயோ எனக்காகப் பதுக்கப்பட்டிருக்கும்.

ஒரு சந்தையில் திருகணை விற்கும்போது பார்த்தேன். அதற்குக்கூட நிறச்சாயம் போட்ட ஈர்க்கால் அழகுவேலைப்பாடுகள் செய்திருந்தார்கள். எனக்கு ஆச்சரியம். கரிபூசப்படப்போகும் திருகணைக்கு வண்ண அலங்காரம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஓலைத் தொப்பிகள், விசிறிகள்:
பனையோலைத் தொப்பிகளும் விசிறிகளும் நல்ல பிரச்சித்தம். ஆடம்பரப்பொருட்களாகவே இவை மாறிவிட்டன.
யாழ்ப்பாணத்தில் ஒரு நேரத்தில் (93,94) பெண்களின் மிகவிருப்புக்குரிய கவர்ச்சிப்பொருளாக ஓலைத்தொப்பி இருந்தது. துவிற்சக்கர வண்டி வைத்திருப்பவர்கள் இத்தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு போவது அந்நேரத்தில் பெரிய கவர்ச்சி. ஏதோ எங்கள் பெண்கள் வெயிலில் கறுக்காமல் இருக்கிறார்களே என்று பெருமூச்சுவிட்டால் கொஞ்சநாளின்பின் அதை ஹாண்டில் பாரில் முன்பக்கமாக கட்டித் தொங்கவிட்டுக்கொண்டு போவது பெரிய கவர்ச்சிப் பாணியாக மாறிவிட்டது.
யாராவது இளைய வலைப்பதிவாளர்களுக்கு இக்காலம் ஞாபகம் வருகிறதா?
ஆண்பிள்ளைகள் ஓலைத்தொப்பி போடுவதை நினைத்துப்பாருங்கள்.
ஆனால் வெயில்காலத்தில் ஓலைத்தொப்பி மிகஉன்னதமானது.

மன்னார் மாவட்டத்தின் மடுத்திருவிழாவுக்குச் சென்றால் ஓலைத்தொப்பி, ஓலை விசிறி, சுளகு உள்ளிட்ட பனம்பொருட்களின் என்பவற்றின் விற்பனை தெரியும். விதம்விதமான வண்ண வேலைப்பாடுகள் கொண்ட ஓலைத்தொப்பிகள், விசிறிகள் விற்கப்படும். ஒரே மாதிரி வண்ணத்தில் தொப்பி போட்டுக்கொண்டு கூட்டமாகத் திரிவார்கள். ஆனால் விலை கடுமையாகவே இருக்கும். கிட்டத்தட்ட கொழும்பு விலை விற்பார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுளகு:
இதை தமிழகத்தில் எப்படிச் சொல்வார்கள்?
பெரும்பாலும் அரிசி பிடைக்கப் பாவிக்கப்படுகிறது.
ஆனால் எங்கள் வீட்டில் புட்டு கொத்துவது தொடக்கம் பல தேவைகளுக்குப் பாவிக்கப்படும்.
குசினி வெளிப்படிகளில் நின்று அரிசி பிடைக்க, முன்னால் கோழிகள் சண்டைபோட்டுக்கொண்டு "ஆ"வென்று காத்திருப்பதைப் பார்த்துக்கொண்டிருப்பது சுவாரசியம்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பட்டம்:
பனைநார் கொண்டு பட்டங்கள் செய்வோம். கொக்கன், பிராந்தன், பெட்டி, எட்டுமூலை, பாம்பன் என்று பலவிதப் பட்டங்கள். வெளவால் பட்டத்துக்கு தென்னை ஈர்க்குப் போதும். பெரிய பட்டங்களுக்குப் பனைநார் நல்லது.
யாழ்ப்பாணத்துக்குள்ளேயே பட்டமே முக்கிய பொழுதுபோக்காகக் கொண்ட ஊர்களும், பாடப்புத்தகத்தில் அறிந்ததோடு தொடர்பு முடிந்த ஊர்களும் உள்ளன. இடம்பெயர்ந்து வந்திருந்த ஓரிடத்தில் பிராந்தன் பட்டம் ஏற்றியபோது, 'அதெப்படி வாலில்லாமல் பட்டம் பறக்கிறது?' என்று ஆச்சரியப்பட்ட மக்களைப் பார்த்திருக்கிறேன். மின்விளக்குகள் பூட்டி பட்டங்கள் பறக்கிவிடுவதெல்லாம் இப்போது கனவுபோலத்தான் தெரிகிறது. பத்துவயதில் (இந்திய இராணுவ காலம்) வீட்டுக்குத் தெரியாமல் இன்னொருவரோடு பலமைல்கள் சைக்கிளில் போய், அதுவும் காங்கேசன்துறைப் படைமுகாம் கடந்து மயிலிட்டி வந்து பட்டம் வாங்கிச் சென்றது (வீட்டாரைப் பொறுத்தவரை இது உயிரைப் பணயம் வைக்கும் வேலை. இளங்கன்று பயமறியாது என்பது "இந்த" விசயத்தில் உண்மை) உட்பட பல இனிய ஞாபங்களுள்ளன. 89 இல் வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வானம் தெரியாமல் பறந்துகொண்டிருந்த விதம் விதமான பட்டங்களின் காட்சி இன்றும் பசுமையாகவே உள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பனையீர்க்கு:
பனையீர்க்கு பலவிதங்களில் பயன்படுகிறது.
தனியே ஈர்க்கு என்று பார்தால் கிடுகு வேய்வதற்கு (பேச்சில் மேய்தல் என்றும் சொல்வதுண்டு) பனையீர்க்குத்தான் அதிகம் பாவிக்கப்படுகிறது. நீரில் ஊறப்போட்டுப் பாவிப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

பனையோலையில் செய்யப்படும் முக்கிய பொருள் பிளா.
இதுபற்றிச் சொல்லத்தேவையில்லை;-)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இப்போது உடனே ஞாபகம் வந்தது இவைதாம்.
வேறு என்ன முக்கியபொருட்கள்?

இப்பதிவுக்கான மூலப்பதிவுகள்
யோகன் பாரிஸ் அவர்கள் கவனத்திற்கு -இலவசக் கொத்தனார்
சுஜாதா-நான்-கடகம் -யோகன்.
இப்போதெல்லாம் பதிவு எழுதவே பஞ்சி. அரைகுறையாகவென்றாலும் இந்தப்பதிவை எழுத ஒரு தூண்டுதலாயிருந்தவர்களுக்கு நன்றி.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

****உடம்பைக் குறிக்க "மேல்" என்ற சொல்லை நாங்கள் பாவிக்கிறோம். ஈழத்தார் அனைவரும் பாவிப்பதாக நினைக்கிறேன். சரியா?
இச்சொல்லை தமிழத்தார் பாவிக்கிறார்களா?
இது எப்படி வந்தது? 'மெய்'யிலிருந்து வந்திருப்பதாகத் தெரியவில்லை. 'மேனி'யிலிருந்து???


_____________________________________________

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


திருமலையில் நூறு தமிழர்கள் கொலை.

நேற்றும் இன்றும் திருகோணமலையில் கடும் தாக்குதல்கள் நடைபெறுகின்றன.
புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள்மீது நேற்றும் இன்றும் சிறிலங்கா அரசபடையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் குறைந்தது நூற்றுப்பத்துப் பேர்வரை கொல்லப்பட்டுள்ளனர். 300 பேருக்குமதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இடம்பெயர்நது சென்ற மக்களைக்கூட துரத்தித்துரத்திக் கொன்றுள்ளது அரசபடை.
இத்தோடு மாவிலாற்றை நோக்கி பெருமெடுப்பில் முன்னேற்ற முயற்சியைச் செய்துகொண்டிருக்கிறது. அதை எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருக்கின்றனர் புலிகள்.

சிலநாட்கள் முன்பு புலிகள் இராணுவத்தினர் மீது தொடுத்த போரில் மூதூர்ப்பகுதி மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. அதுவும் தாக்குதல் நடத்தப்பட முன்பே அம்மக்களுக்குத் தெரிவித்து, பாதுகாப்பாக விலகியிருக்கும்படி சொல்லிய பின் நடத்தப்பட்ட தாக்குதல் அது.
ஆனால் ஏதோ முஸ்லீம்கள் மட்டும்தான் அதில் பாதிக்கப்பட்டது போல எல்லா செய்தி ஊடகங்களும் நடந்துகொண்டன. கிடைத்த சந்தர்ப்பத்தை சில முஸ்லீம்களும் பயன்படுத்தி புலிகள் மீதும் தமிழர்கள் மீதும் சேறடிக்கத் தவறவில்லை. இதுவொரு திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கை என்பது போலவும் சிலர் எழுதினர்.

உண்மையில் யதார்த்தம் என்ன?
இடம்பெயர்ந்த முஸ்லீம்களுக்கும் சிங்களவருக்கும் இடப்பெயர்வு நிவாரணம் முதல் அனைத்தும் உடனடியாகக் கிடைக்கிறது. ஊடகங்கள் சுத்திச்சுத்தி அவர்களையே பேசவைக்கிறார்கள். ஆனால் அதே மூதூர் நிகழ்வில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு என்ன நடந்தது? பலருக்கு அப்படி தமிழர் இடம்பெயர்ந்ததே தெரியாது. இன்றுவரை அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு உதவச்சென்ற செஞ்சிலுவைச்சங்கம் உட்பட்ட பன்னாட்டுத் தொண்டர் நிறுவனங்களைக்கூட இன்னும் அரசபடைகள் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கென்று எடுத்துச்சென்ற பொருட்கள் பாரஊர்திகளோடு தடுத்து வைக்க்பபட்டுள்ளன. மூதூர் முஸ்லீம்களுக்கு இது முதலாவது இடப்பெயர்வு. ஆனால் தமிழர்களுக்கு???

இப்போது நடந்த சம்பவத்தை விடுவோம். கடந்த ஏப்ரல் மாதம் முதல் திருகோணமலைக்குள் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் மட்டும் முப்பதாயிரம் பேர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இடம்பெயர்ந்தனர்.
மாவிலாற்று நீர்தடுப்புக்குக் காரணங்கள் என்ன? விடுதலைப்புலிகளின் பகுதி மக்களுக்கு அத்தியாவசரிய உணவுப்பொருட்கள் கூட தடைசெய்யப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான பால்மா முதல் பல பொருட்கள் அங்கே தட்டுப்பாடானவை.
சம்பூர் மக்களுக்கு நீண்டகாலமாகவே பல்வேறு பொருளாதாரத் தடைகள். புலிகள் அரசோடு வெளிநாட்டில் பேசித்திரிந்த காலத்திலேயே சம்பூருக்கு பொருளாதாரத் தடை இருந்தது. இடையிடையே மக்கள் போராட்டம் நடத்துவதும் விடுவதுமாகவே காலம் கழித்தனர். இன்றுவரை கட்டடப் பொருட்களுக்கான தடை தொடர்ந்து வருகிறது.
பன்னாட்டு நிறுவனமொன்று கட்டித்தரப் புறப்பட்ட நீர்த்தாங்கியொன்றைக் கட்டவிடாமல் அரசாங்கம் தடை செய்ததால் ஆத்திரமுற்ற மக்கள், ஏற்கனவே அவர்கள் எதிர்கொண்ட பல பிரச்சினைகளோடு சேர்த்து எல்லாவற்றுக்குமாக ஆற்றைத் தடைசெய்ய வேண்டி வந்தது. அதன் பின் புலிகள் இருக்கிறார்களோ இல்லையோ, மிகமிக நியாயமான போராட்டம் அது.

அந்த விசயத்தில் சிங்களஅரசு எப்படி நடந்துகொண்டதென்பது எல்லோருக்கும் தெரியும். மக்களின் கோரிக்கையைக் கேட்கக்கூட விரும்பாத அரசு அதற்கு இராணுவப்பரிமாணம் கொடுத்து இன்றுவரையான போருக்குத் தூபமிட்டது. ஆற்றுநீருக்குத்தான் சண்டையென்றால் புலிகள் நல்லெண்ண அடிப்படையாக ஆற்றைத்திறந்தபின் ஏன் மூர்க்கமான தாக்குதலை நடத்த வேண்டும். ஆற்றுநீரைத் திறந்துவிட்டபின் நூற்றுக்குமதிகமான பொதுமக்களைப் படுகொலை செய்துள்ளது இலங்கை அரசு.

இன்று அகதிகளாக பாதுகாப்புத் தேடி ஓடிய மக்களைக் கலைத்துக் கலைத்துக் கொல்கிறது. யாரும் ஏனென்று கேட்கப்போவதில்லை. கண்காணிப்புக்குழுவோ தாங்கள் அந்தப்பகுதிக்கு வர பாதுகாப்பு உத்தரவாதமில்லை என்று ஒரு சொல்லில் பிரச்சினையை முடித்துவிடும். மிகமிக அதிகபட்சமாக அரசை நோகாமல் கண்டித்து ஒரு அறிக்கைவிடும். அதை மிஞ்சி எதுவுமில்லை. எங்கள் பாதுகாப்புக்கு யாரையும் நம்பிக்கொண்டிருக்க முடியாது.
பாலஸ்தீன மக்களையும் ஈழத்தவரையும் ஒப்பிட்டு நாம் கொஞ்சம் நிம்மதி அடையலாம். எப்போதும் பரிதாபத்துக்குரியவர்களாயிருப்பது ஒருபோதும் வி்டுதலையைத் தராது. பாலஸ்தீனியருக்குக் கிடைத்த உலக அனுதாபம், ஆதரவுடன் ஒப்பிடும்போது ஈழத்தவருக்குக் கிடைத்தது ஒன்றுமேயில்லை. இவ்வளவு காலத்தின் பின்னும் இன்றும் கேட்பாரற்றுச் செத்துக்கொண்டிருக்கும் லெபனான் மக்களைப் பார்த்தால் அவர்கள் மேல் தான் கோபம் வரும்.
ஈழத்தவரும் பரிதாபத்துக்குரியவர்களாக இருந்தகாலத்தில் எல்லோரும் உச்சுக்கொட்டிக் கொண்டிருந்தார்கள் இன்று லெபனானுக்குக் கொட்டுவது போல. ஆனால் உலகம் விழுந்தடித்து வந்தது எப்போதென்றால் எதிர்த்தரப்பைப் பரிதாபத்துக்குரியவர்களாக ஆக்கியபோதுதான்.

இன்று நூறு பொதுமக்களை திருகோணமலையில் அரசு கொலை செய்துள்ளது. இதற்கு சர்வதேசத்திடமிருந்து எந்தத் தீர்வும் இல்லை. முதலில் அந்தத் தொகையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை உறுதிசெய்து அவர்களை நம்பவைக்கவே நிறைய உழைக்கவேண்டியிருக்கும். இனியும் போர்நிறுத்த உடன்படிக்கை, உலக ஒழுங்கு, பன்னாட்டு அழுத்தம், பன்னாடை என்று யோசித்துக் கொண்டிருந்தால் கதை கந்தல்தான்.
அண்மையில் புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைப்பற்றிய இடங்களைக்கூட விட்டுவிட்டு திரும்பினர். காரணம் ஒப்பந்தமாம். சிங்களவன் ரெண்டு கிழமையாக நிலங்களைப் பிடிக்க படாதபாடு படுறான். ஒருவேளை அரசபடைகள் புலிகளின் நிலையைப் பிடித்தால் அவர்களைத் திரும்பிப்போ என்று யாரும் சொல்லப்போவதில்லை.
முன்னேறிவரும் எதிரிகள்மேல் நீண்டகாலத்துக்கு மறிப்புத்தாக்குதல் மட்டும் நடத்திக்கொண்டிருப்பது களத்தில் பாதகமான நிலை. மக்களும் அன்றாடம் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் உடனடியாகச் செய்யவேண்டியது புதிய களமுனைகளைத் திறந்து தமது வலுவைக்காட்ட வேண்டும். புலிகள் நிலமீட்பைத் தொடங்கினால் சில கோமாளிகள் "ஐயோ ஆக்கிரமிப்பு, இனஅழிப்பு, போர்நிறுத்த மீறல், பாசிசம்" என்று ஒப்பாரி வைக்கத்தான் போகிறார்கள். இவர்களைக் கருத்திற்கொண்டால் அம்போதான்.
முன்னைய மூதூர் நடவடிக்கையிலும் புலிகளுக்கு வேறு தெரிவுகள் இல்லாதபட்சத்தில்தான் அவர்கள் முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

இன்றைய நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தின் பயங்கரவாதத்தை, பேச்சுமூலம் தீர்வுகாணுவதில் அதற்கிருக்கும் விருப்பின்மையை, போர்மூலம் தீர்வு காண்பதில் அதற்கிருக்கும் வேட்கையை, மக்களைக் கொன்றுகுவிக்கும் அதன் காட்டுமிராண்டித்தனத்தை இதற்கு மேலும் உலகுக்கு வெளிப்படுத்தத் தேவையில்லை. இவ்வளவு நிகழ்விலும் அதைப்புரிந்துகொள்ளாதவர்கள் இனிமேல் எதையும் புரிந்துகொள்ளப்போவதில்லை. தமிழர் பிரச்சினையை அது எப்படி அணுக முற்படுகிறது? இவர்களிடமிருந்து தமிழர்களுக்கு எப்படியான தீர்வை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி மிகத்தெளிவான முடிவுக்கு வரமுடியும்.

யுத்தம் மட்டுமே தீர்வு என்று சிங்களத்தரப்பு மிகத்தெளிவாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் அதைக்கண்டிக்காத, கண்டுகொள்ளா சக்திகளின் நற்சான்றிதழுக்கு தமிழர் தரப்புக்காத்திருப்பது சுத்த முட்டாள்தனம். சிங்களத்தரப்பின் அறிவிப்பை, சவாலை எதிர்கொள்வது மட்டுமே தமிழர்முன்னுள்ள தெரிவு. அதைமட்டுமே எமது தெரிவாகவும் கொள்ளவேண்டும்.
விரைவில் களநிலைகள் மாறுமென்று நம்புகிறேன்.


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, August 05, 2006

புலிகளின் இராணுவப் பேச்சாளரின் செவ்வி

விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளரான இளந்திரையன் அவர்கள் தற்போது நடக்கும் திருமலைச் சண்டைகள் தொடர்பாக சிங்களச் சேவையான சந்தேசியவுக்கு வழங்கிய செவ்வி.
இளந்திரையன் அவர்கள் சிங்களத்திலேயே வழங்கிய செவ்வியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்கள்.



Translation of the Aug 2nd interview with Sandeshaya:

Q: Why did LTTE close the sluice gate?

A: “LTTE neme meka vahala thiyanne.” The sluice was closed by ordinary people. They wanted drinking water, milk powder for children, protection to travel through government control area was their concern. The people were meeting with the SLMM officials and when they were just about coming into solution for the grievances, the Sri Lankan Air Force responded with bombs.

Q: You are saying the people closed the sluice gate, so why cant LTTE ask the people to re-open it?

A: We can’t ignore the requests of the people and demand them to remove the blockade. The LTTE has the moral responsibility to protect the people. “Janathavage illima..adu padu balandona LTTE”


முழுவதையும் படிக்க
நன்றி: http://tamilweek.com


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, August 04, 2006

கவிஞர் பொன்.கணேசமூர்த்தி சுட்டுக்கொலை

ஈழத்தைச் சேர்ந்த முக்கிய படைப்பாளியான கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஈழத்தின் வடபுலத்தில் கவிஞர் மிகப்பிரபலமானவர்.
புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான 'இலங்கை வேந்தன்' 'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் என் மனத்தில் நிற்கிறது. அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர். பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர்.
பல படைப்புக்களை வெளியிட்டவர்.

இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு (அவன் என்னுடைய வகுப்புத் தோழன்) அவர் எழுதிய இறுதிநாவல் (எடுக்கவோ தொடுக்கவோ???) உருக்கமானது.

இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென அருமையான சில பாடல்களை எழுதியளித்துள்ளார்.

இவருடைய மூன்றாவது மகன் (மதன மெளனி) விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்து 1996 இல் யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்தவர்.
விடுதலைக்காக நிறைவான பணியாற்றிய இக்கலைஞன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேரிலறிந்த, மிக நெருக்கமான குடும்பம் அவருடையது.

கவிஞரின் குடும்பத்துக்கு என் மனமார்ந்த வருத்தங்கள்.


_____________________________________________

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________