Thursday, September 27, 2007

நேற்றும் ஒருவன் போனான் - சயந்தன்

நீண்ட நாட்களாக தீண்டப்படாமல் இருந்ததாலேயோ என்னவோ எனது சாரல் வலைப்பதிவை spamblog எனக்கருதி பூட்டி வைத்துள்ளார்களாம். கதவு திறக்கவேண்டுமெனில் அவர்களுக்கு அறிவித்து இரு நாட்கள் காத்திருக்க வேண்டுமாம். பதிவொன்றினை எழுதிக்கொண்டு உட்சென்ற பிறகு தான் இந்த விடயமே எனக்குத் தெரிந்தது. ஆகவே அவசரத்திற்கு வசந்தனின் பக்கத்தினைப் பயன்படுத்தி இப்பதிவை இடுகின்றேன்.

நிசாந்தன் என்னிலும் இருவயது இளையவன். ஆகவே பாடசாலை வகுப்புக்களிலோ அல்லது ரியூசன் வகுப்புக்களிலோ நான் அவனோடு சந்தித்துப் பழகியிருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஊரின் கலைநிகழ்வுகள் கோயில் நிகழ்வுகள் அல்லது விளையாட்டுத் திடலாய் நிரந்தரமாய் நாம் மாற்றியிருந்த சீக்காய் வயல் என்பவற்றில் நாம் அறிமுகமாகி நெருங்கியிருக்க முடிந்தது.

நிசாந்தன் சிறுவயது முதலே சங்கீதம் கற்றிருந்தான். என்னோடு மிருதங்கம் கூட கற்க வந்தவன் எனக்கு முன்பே அதை கைவிட்டது ஏனென்று தெரியவில்லை. நடிப்பு ஆற்றலும் கூடவே இருந்தது.

தொன்னூறின் இறுதி , மாவீரர் தினமென்று நினைக்கின்றேன். இசை நிகழ்ச்சி நாடகம் வில்லுப்பாட்டு என பல நிகழ்ச்சிகளில் நானும் அவனும் பங்குபற்றியிருந்தோம்.

பாதைகள் வளையாது - இந்தப்
பயணங்கள் முடியாது
போகுமிடத்தைச் சேரும் வரைக்கும்
பாதைகள் வளையாது - இந்தப்
பயணங்கள் முடியாது

என அவன் பாடினான்.

அதன் பின்வந்த ஒரு சில ஆண்டுகளில் ஒரு நவராத்திரி நிகழ்வு. எல்லாளன் நாடகத்தில் துட்டகைமுனுவின் தம்பி பாத்திரத்தை விருப்பமின்றி ஏற்று நடித்தான். எதுவாக இருப்பினும் எல்லாளன் பக்கத்துப் பாத்திரமொன்றைத் தாருங்கள் என்றவனை ஏதோவெல்லாம் சொல்லிச் சமாளித்தார்கள். இறுதியில் கைமுனுவின் தம்பியாக நடிக்கச் சம்மதித்தான். நான் கைமுனுவாக நடித்திருந்தேன். ஒரு காட்சியில் அவன் சுழற்றிய வாள் பார்வையாளர் மத்தியில் விழுந்து பரபரப்பை உண்டுபண்ணியது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு 2002 இல் மீசை முளைத்த வாலிபனாகக் கண்டேன். கணக்கியல் துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். கணணி தொடர்பிலும் நிறைய ஆர்வமுற்றிருந்தான். கொழும்பு சென்று கல்வியைத் தொடர விரும்புவதாகச் சொன்னான்.

அப்போது ஊரின் பொறுப்பான இளைஞனாகிவிட்டிருந்தான். வாசிகசாலை சனசமூக நிலையம் என பல அமைப்புக்களில் பொறுப்புக்கள் அவனிடமிருந்தன.

2005 இல் அவனைச் சந்தித்த போது GCE – O/L பரீட்சையில் சித்தியடைந்த அவ்வூரினைச் சேர்ந்த மாணவர்களை பாராட்டிப் பரிசில் வழங்கும் நிகழ்வொன்றிற்காக மும்மரமாய் நின்றான்.

நிகழ்வின் இறுதியில் இசை நிகழ்வு - அன்றும் அவன் பாடினான் - முதன் முறையாக அவ்வாறான நிகழ்வொன்றிற்காக நான் அறிவிப்புச் செய்தேன். சொல்லத்தான் நினைக்கிறான் பாடலைப் பாடப்போவதாய்ச் சொன்னவனை மேடைக்கு அழைத்து உண்மையாகவே காதல் சுகமானது தானா எனக் கேட்ட போது வெட்கப்பட்டுச் சிரித்தான். நான் விளங்கிக் கொண்டேன்.

இதற்கு மேல் நேற்றைய புதினம் இணையச் செய்தியினைப் படியுங்கள்.

யாழில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மானிப்பாய் காரைநகர் சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய இத்துப்பாக்கிச் சூட்டில்,
சங்கானை சிவப்பிரகாச வித்தியாசாலை இசை ஆசிரியையான சாரதா பரஞ்சோதி ,
உடுவில் உதவி அரசாங்க அதிபர் செயலக தொழில்நுட்பப் பணியாளர் காந்தன் நிசாந்தன்
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னே விரித்துக் கிடக்கும் ஆல்பத்தில் கசூர்ணா கடற்கரையோரத்தில் நானும் அவனும். தன் விரல்களால் என் தலையின் பின்னால் கொம்புகள் வைத்தபடி சிரித்த முகத்துடன் நிசாந்தன் !

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, September 21, 2007

ஒரு குடிகாரன் உருவான கதை

பெரிய குடிகாரனாக என்னைப் புரிந்துகொள்ளும் உங்களிற் பலருக்கு நான் குடிகாரனான கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனாலென்ன? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியளவுக்கு இதுவொன்றும் முக்கியமானதன்று. என் அலட்டல்களை விழுந்துவிழுந்து வாசிக்க நானொன்றும் புரட்சிக்காரனோ கலகக்காரனோ அல்லன். விரல்கள் குறுகுறுத்த விசர்ப் பொழுதொன்றில் எழுதப்பட்ட/தட்டப்பட்ட என் குடிப்புராணத்தைப் படிக்க விரும்புவோர் மேற்கொண்டு படிக்கலாம்.

முதலில ஒண்டைச் சொல்ல வேணும். தொடக்கத்தில, குடி மீது எனக்கு மோகம் இருக்கேல; மாறா குடிகாரர் மேலதான் மோகமிருந்தது, நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவீதமான குடிகாரரைப்போல.

குடிக்கத் திட்டமிட்ட நாளும் வந்தது. திட்டமிட்டது நானும் என்ர நண்பனொருவனும். எங்களுக்கெல்லாம் கள்ளைவிட்டால் கதியேது?
அரைப்போத்தல் கள்ளைவாங்கி வீட்டில குடிச்சா ஆட்டத்தில் சேர்த்தியில்லை. தவறணையில குடிச்சால் மட்டுமே குடிகாரராக் கணக்கெடுபடும்.
அதால தவறணையில குடிக்கிறதெண்டு முடிவெடுத்தாச்சு.

ஊர்த்தவறணையில குடிக்க வெட்கமா இருந்திச்சு. இது ஒருவிதத்தில் களவாகச் செய்யிற விளையாட்டுத்தான். ஒருநாள் பொழுதுபட அயலூர்த் தவறணைக்குப் போய்க் குடிச்சம். நண்பன் நேர தன்ர வீட்டுக்குப் போயிட்டான். 'சோம்பேறி மடம்' எண்டு செல்லமா அழைக்கப்படுற, இராத்திரியில நண்பர்கள் கூடியிருந்து கடுதாசியோ தாயமோ விளையாடுற இடத்துக்கு நான் போனன். வீட்ட போய் பிரச்சினை கிளப்பிறதைத் தவிர்க்கிறது ஒரு நோக்கமெண்டால், நான் குடிச்சிருக்கிறதை நண்பர்களுக்குக் காட்டிறதும் ஒரு நோக்கம்தான். சைக்கிளோட்டத்தில ஒரு சிக்கலுமில்லை.

அங்கபோனா, என்ர செட் ஆக்களைக் காணேல. ஒருத்தன் மட்டும் நிண்டான். எங்களைவிட மூத்த செட் ஒண்டு நிண்டுது. திரும்புவம் எண்டு வெளிக்கிட்டா மாட்டுப்பட்டுப் போனன்.முன்னூற்றி நாலுக்கு ஒருகை குறைஞ்சதால வலுக்கட்டாயப்படுத்தி என்னையும் இருத்திப்போட்டாங்கள்.

கள்ளடிச்ச வாசம் என்னிலயிருந்த வரப்போகுது... நக்கலடிக்கப்போறாங்கள்... எண்டு யோசிச்சு நெளிஞ்சுகொண்டு நிண்டன். ஆனா அவையளும் ஆளாளுக்கு ஏத்திப்போட்டுத்தான் நிண்டதால என்ர பிரச்சினை கணக்கெடுபடேல.

விளையாட்டில ரெண்டு சுத்துப்போக தலை கிறுகிறுக்கிற மாதிரி ஓருணர்வு. எண்டாலும் விளையாடினன். வந்துசேந்த கலாவரை ஏரை வீறு எண்டு நினைச்சு அடுத்த கன்னையான் கேட்ட இருநூற்றம்பதை மேவிக் கேட்டதும், வலக்கையானின்ர முதலிறக்கமே துரும்பு வீறாய் விழுந்ததைக் கண்டு அதிர்ந்ததும், தோல்வியைச் சமாளிக்க 'அதண்ணை... அடுக்குப் பிழைச்சுப்போட்டுது' எண்டு கதை விட்டதும் கள்ளின் மகத்துவத்தால் நடந்தவை.
இனி உதில இருந்தா சரிவராது எண்டது விளங்கீட்டுது.
'அண்ணை, விடிய ஒரு முக்கிய வேலகிடக்கு, அவசரமாப் போகோணும்' எண்டு சொல்லி நழுவியாச்சு. வீட்ட போறவழியில சைக்கிள் தள்ளாடிச்சு. இடையில ஓரிடத்தில சத்திவேற எடுக்கவேண்டி வந்திட்டுது. தட்டுத்தடுமாறி போய்ச் சேந்து சத்தம்போடாமல் பாயிலபோய் விழுந்திட்டன்.

அடுத்தநாள் மத்தியானம், முந்தினநாள் சோம்பேறிமடத்தில நிண்ட எங்கட செட்காரன் வந்துகேட்டான்.
"என்ன... நேற்று லைட்டா கள்ளடிச்சமாதிரிக் கிடந்துது?"
"ஓ... சும்மா லைட்டா ரெஸ்ட் பண்ணிப் பாத்தது"
"ஆனா வெறிச்சமாதிரித் தெரியேலயே?"
"வெறிச்சது... அதாலதான் விளையாட்ட இடையிலவிட்டிட்டு ஓடியந்திட்டன். வாறவழியில றோட்டில சத்தியும் எடுத்தனான்."
"உதை ஆர் வெறியெண்டு சொன்னது?"
"அப்ப எதை வெறியெண்டுறது?"
"வெறியெண்டா குளறிக் கதைக்க வேணும்... ஒருமாதிரி இழுத்திழுத்துக் கதைக்க வேணும்... தள்ளாடி நடக்க வேணும்... நாலுபேரைத் தூசணத்தால பேசவேணும்... நீ வெறிகாரர் ஒருத்தரையும் பாக்கேலயோ?.."
"பாத்திருக்கிறன்... ஆனா உப்பிடி ஒரு குணமும் எனக்கு வரேலயே?"
"அது வராது... நாங்கள்தான் வரவைக்க வேணும். போகப்போகச் சரியாயிடும்"

இதென்ன கோதாரி? அடிச்சது காணாதுபோல... அடுத்தமுறை இன்னொரு போத்தல் அதிகமா அடிக்க வேணும் எண்டு அப்பாவியா நினைச்சுக்கொண்டன்.

ரெண்டுநாளைக்குப் பிறகு தவறணையால நேரா நண்பர்கள் நிண்ட மைதானத்துக்கு வந்திட்டன். வாயிலயிருந்து நல்லா வாசம் வந்துகொண்டிருந்திச்சு. ஆனால் ஒருத்தன்கூட என்னை ஒரு பொருட்டா மதிக்கேல. குடிச்சனியோடா எண்டு ஒருவார்த்தைகூட கேக்கேல. அவனவன் தன்ர பாட்டுக்குக் கதைச்சுக்கொண்டு நிண்டாங்கள். எனக்குச் சரியான அவமானமாப்போட்டுது. நான் குடிச்சதின்ர நோக்கமே அடிபட்டுப் போச்சு. நான் குடிகாரனாயிட்டன் எண்டதை ஒருநாய்கூடக் கவனிக்கேல.
நண்பன் சொன்னதுகள் ஞாபகத்துக்கு வந்திச்சு. ஒண்டு விளங்கீச்சு.
குடிக்கிறதால ஒருவன் குடிகாரனாகவோ வெறிகாரனாகவோ ஆகமுடியாது.. குடிகாரனாகவும் வெறிகாரனாகவும் காட்டிக்கொள்ள வேணும்.
அதால இனி நானும் அப்பிடிக் காட்டிக்கொள்ளிறதெண்டு முடிவெடுத்தன்.

அடுத்தநாளே குடிச்சுப்போட்டு அதே மைதானத்துக்குப் போனன்; வெறியில தள்ளாடுறமாதிரி சைக்கிளை ஓட்டினன்; சைக்கிளைக் கொண்டுபோய் ஒருத்தனுக்கு இடிச்சன்; எல்லாரையும் ஒருமாதிரிப் பாத்தன்; இடிவாங்கினவனை தூசணத்தால பேசினன்; எல்லாரும் என்னைப்பாத்துத் திகைச்சது வடிவாத் தெரிஞ்சுது. சரி, நாடகம் சரிவந்திட்டுது எண்டது விளங்கீட்டுது. அங்கால நிண்டுகொண்டிருந்த ஒருத்தனோட கொழுவி கண்டபாட்டுக்குத் தூசணத்தால பேசப்பேசினன். சரியோ பிழையோ பிறத்தியான் ஒருத்தன் தங்கட தோழரில கைவைக்க எங்கட செட்காரங்கள் பாத்துக்கொண்டிருக்க மாட்டாங்கள். அந்தத் துணிவிலதான் இந்தளவு விளையாட்டும் விளையாடினன். நினைச்சமாதிரியே அவன் அடிக்கவந்தான், மற்றவங்கள் வந்து பிடிச்சாங்கள்.
"டேய் அவனக்கு வெறி... ஆளை முதல் அங்கால கொண்டுபோ" எண்டு சொல்லி என்னை ரெண்டுபேர் பிடிக்க, அவங்களையும் பேசிக்கொண்டு வெறிகாரன் மாதிரியே இழுபட்டுக்கொண்டு போனன்.

நான் நினைச்சபடி நடந்திட்டுது. அதையே தொடர்ந்தும் செய்யத் தொடங்கினன். நண்பர்களிடத்தில நான் குடிகாரன் எண்ட 'மரியாதை' வந்திட்டுது. இதைச் சாட்டா வைச்சே தனிப்பட்ட கோபம் இருந்தவனையெல்லாம் ஆசைதீர தூசணத்தால திட்டித் தீர்த்தன். ஆனா நான் உண்மையில நிலைமறந்து வெறியிலதான் இப்பிடி நடக்கிறன் எண்டு எல்லாரும் நம்பிக்கொண்டிருந்தாங்கள்.

எவ்வளவுகாலத்துக்கு இதை நம்புவாங்கள்? அவங்கள் குடிக்கத் தொடங்கும்வரைக்கும்தான். அதுக்குப்பிறகு, பாம்பின் கால் பாம்பறியும் எண்டமாதிரி உந்த வெறி பற்றின மாயைகள் கலைஞ்சு போகும். நான் குடிக்க வெளிக்கிட்டபிறகுதான் வெறிக்குட்டிகளின்ர பல திருகுதாளங்களை விளங்கிக்கொண்டன்.

குடிச்சு வெறிவந்தவன் என்ன செய்வான்? பேசாமல் மூலையிலபோய் படுத்திடுவான். அல்லது சத்தியெடுத்துக் களைச்சுப்போவான். கண்டபடி தூசணத்தால பேசிக்கொண்டிருக்கிறவையள் வெறியில தன்னிலைமறந்து சொல்லிறதாத்தான் சனம் நினைச்சுக்கொண்டிருக்கு. ஆனா எந்தவொரு குடிகாரனும் உதை நம்பமாட்டான். ஏனெண்டா அவனுக்குத் தெரியும் உண்மை என்னவெண்டு. அதேபோல எந்தவொரு குடிகாரனும் உது வெறும் நடிப்பெண்டு சொல்லவும் மாட்டான். ஏனெண்டா அவனும் தொடர்ந்து நடிக்க வேணும். ஒருத்தனையொருத்தன் காட்டிக்குடுக்காமல் ஓர் எழுதப்படாத ஒப்பந்தப்படி தோழமையாக இருக்கினம் குடிகாரர்.

நானும் குடிகாரரின்ர உந்த விளையாட்டெல்லாம் நிறையச் செய்தன். என்னோட இருந்த குடிக்கத் தெரியாதவங்கள் அப்பாவியா நம்பிக்கொண்டிருந்தாங்கள்.

சரி, அதை விடுவம். நான் ஏன் குடிக்கத் தொடங்கினன் எண்டு உங்களுக்குச் சொல்லேலயெல்லோ?

எல்லாருக்கும் குடிக்கத் தொடங்கிறதுக்கு காரணங்கள் இருக்கு. நண்பர்களிடத்திலயும் சமூகத்திலயும் ஓர் அதிர்வை ஏற்படுத்திறது, பயத்தை உருவாக்கிறது எண்டு சிலது இருக்கு. குடிச்சா பெரியாளாகக் காட்டிக்கொள்ளலாம் எண்டதும் இருக்கு. புகைபிடிக்கிறதுக்கு உது முக்கியமான ஒரு காரணம். சிகரெட் பத்தினால் தாங்கள் பெரிய கொம்பனுகள் எண்டு சிலருக்கு நினைப்பிருக்கு. பெட்டையள் விரும்புவாளவை எண்டுகூட பிடிக்கத் தொடங்கினவை சிலர் இருக்கினம்.

உதெல்லாத்தையும்விட நான் குடிக்கத் தொடங்கினதுக்கு ஒரு காரணம் இருக்கு. புரட்சிக்காரனாகவும் கலகக்காரனாகவும் உருவாவது அல்லது காட்டிக்கொள்வதுதான் அது.

இளம்வயசில திடீரெண்டு உந்த ஆசை வந்திட்டுது. புரட்சிக்காரனாக, கலகக்காரனாக, தீவிர சிந்தனையாளனாகக் காட்டிக்கொள்ளிற ஆசை வந்திட்டுது. வட்டத் தொப்பியொண்டை சரிச்சுப் போட்டுக்கொண்டு விசரன் மாதிரி றோட்டுவழிய திரிஞ்சிருக்கிறன். சேட்டின்ர மேல் ரெண்டு பட்டினையும் திறந்துவிட்டிட்டு, நெஞ்சில முளைக்காத மயிரைச் சபிச்சுக்கொண்டும் திரிஞ்சிருக்கிறன். எந்தநேரமும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்கிற மாதிரி நடிச்சுக்கொண்டு திரிஞ்சிருக்கிறன். உந்த விசயத்துக்கு பெட்டையளிட்ட நல்ல வரவேற்புக் கிடைச்சது. ஒருத்தரும் வாசிக்காத, இலகுவில விளங்கமுடியாதபடி எழுதப்பட்டிருக்கும் ஏதாவது புத்தகத்தை (குறிப்பா ரஸ்யனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சில புத்தகங்கள்) எந்தநேரமும் கொண்டு திரியிறது, இடைக்கிடை அதை வாசிக்கிறமாதிரி நடிக்கிறது எண்டெல்லாம் உந்த விளையாட்டுக்கள் தொடந்தது.

உதையேன் கேக்கிறியள்?
ஒருக்கா உப்பிடித்தான், ரியூசன் முடிஞ்சபிறகு மேசைப்பலகையில இருந்து றோட்டுக்கு எதிர்ப்பக்கம் பாத்தபடி யோசிச்சுக்கொண்டிருந்தன். ரியூட்டறியில படிப்பிக்கிற வாத்தியொண்டுக்குக் கலியாண வாழ்த்து அச்சடிக்கிறதுக்கு டிசைன் பற்றி என்னட்ட ஆலோசனை கேக்கவெண்டு (உதெல்லாம் உந்த கலகக்கார, புரட்சிக்கார, போராளி இன்னபிற கோதாரி நடிப்பின்ர உபயம்தான்) வந்த ரெண்டு பெட்டையள் கொஞ்சம் எட்டநிண்டு குசுகுசுத்தினம்.
"என்னடி ஆள் ஏதோ தீவிரமா யோசிச்சுக்கொண்டிருக்கு?"
"இந்த நேரத்தில குழப்பக்கூடாது... வா போயிட்டு நாளைக்குக் காலம கேப்பம்"

ஆனா, எதிர்வளவுக்க இருக்கிற பிலாக்காய எப்பிடிக் கடத்திறதெண்டுதான் நான் யோசிச்சுக்கொண்டிருந்தன் எண்டது அதுகளுக்கு எங்க விளங்கப்போகுது?

இப்பிடியாக நான் நடத்திய சில கூத்துக்களுக்குப்பிறகு, முழுமையான கலகக்காரனாக, புரட்சிக்காரனாக உருவாகிறதுக்கு மிஞ்சியிருந்த ரெண்டு விசயங்களில ஒண்டான குடிக்கிறதைத் தொடங்கினன். இதுதான் நான் குடிகாரனானதுக்கான காரணம்.

புரட்சிக்காரன், கலகக்காரன் எண்டா நல்லாக் குடிக்க வேணும். அரவயசில செத்துப்போக வேணும். சாகிறதும் ஏதோ கொண்ட கொள்கை, லட்சியத்துக்காக சாகிறதெண்டுமில்லை. குடிச்சுக் குடிச்சே தானும் மெல்ல மெல்லச் செத்து சுத்தியிருக்கிறவையையும் சாகடிச்சுச் சாகவேணும்.

நான் புரட்சியாளனாவதற்கு குடிகாரனாகவேண்டியிருந்தது.

"ஒரு புரடசியாளன் உருவான கதை" எண்டு இன்னோர் இடுகை எழுதக்கூடும்.
உண்மையில "புரட்சியாளனொருவன் உருவான கதை" எண்டுதான் தலைப்பு வரவேணும்.
இவ்விடுகைக்குக்கூட "குடிகாரனொருவன் உருவான கதை" எண்டுதான் தலைப்பு வச்சிருக்க வேணும்.

அதனால் என்ன? பிழையாக எழுதுவதுகூட புரட்சி என்றாகிவிட்ட இன்றைய நிலையில் புரட்சியாளனாகிய நான் பிழையாகத்தானே எழுதவேணும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லேபிள்ஸ்: கொழுவி குடிகாரன்
கலகக்காரன் புரட்சிக்காரன்
கள்ளு தூசணம் நடிப்பு கோதாரி

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________