Monday, March 24, 2008

அஞ்சாதே - கோமாளித் திரைக்கதை?

அண்மையில் 'அஞ்சாதே' என்றொரு தமிழ்த் திரைப்படம் வெளிவந்திருந்தது. அதைப்பற்றி பலரும் சிலாகித்து எழுதியிருந்தார்கள். நானும் படம் பார்த்தேன்.
பார்த்து முடித்தபின் மனதுள் ஒரு கேள்வி வந்தது. நாயகன் விடும் தவறொன்றை மையமாக வைத்து எந்தக் கேள்வியுமின்றிக் கதையை நகர்த்தியிருக்கிறார்களே என்று. தமிழ்த்திரைப்படங்கள் என்றாலே இப்படித்தான் ஏதாவது கோமாளித்தனமாக செய்தாக வேண்டுமென்ற புரிதல் இருந்தாலும் பலரும் தலையில் தூக்கிவைத்து ஆடிய இப்படத்திலுமா என்ற கேள்வி வந்தது.

படத்தில் நரேன் காவல்துறையினனாக ஆகிறான். தொடக்கத்தில் அத்தொழிலை விருப்பமின்றிச் செய்கிறான். இரத்தத்தைக் கண்டால் பயம்; கொலையைக் கண்டால் பயம் என்றிருக்கும் நரேன் ஒருசந்தர்ப்பத்தில் அப்பயங்களையும், அருவருப்பையும் தூக்கியெறிந்து செயற்படுகிறான். திரைப்படத்தின் மிகமுக்கிய திருப்பமாக நான் கருதுவது அதைத்தான். ஏற்கனவே தாக்கப்பட்டிருக்கும் ஒருவனைப் பாதுகாக்கச் செல்லுமிடத்தில் இத்திருப்பம் நடக்கிறது.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவனை (பார்த்தீபன்?) வைத்தியசாலையில் அனுமதிக்கிறார்கள். அவனுக்குப் பாதுகாப்பாக நரேனும் இன்னொருவரும் செல்லும்போது அங்கே அவனைக் கொல்ல நாலுபேர் வருகிறார்கள். நால்வரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள்.
'அவன போடுறதுக்கு வந்திருக்காங்க.. வா நாம போய் ஒரு ரீ குடிச்சிட்டு வந்திடலாம்' என்று நரேனை அழைக்கிறார் மற்றவர். நரேன் போகவில்லை. துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி கொலை செய்யவந்தவர்களை மிரட்டுகிறார். அதற்கு நால்வரில் தலைவன் ஏதோ சொல்கிறான் (மிரட்டவில்லை). பிறகு கையிலிருந்த துப்பாக்கியைக் கீழே போடுகிறார் நரேன்.

திடீரேன தான் முன்பு தெருரெளடியாக இருந்தது ஞாபகம் வந்தோ என்னவோ செயற்படத்தொடங்குகிறார் நரேன். அந்தக்காலத்தில் செய்தது போலவே வாய்க்குள் எதையோ போடுகிறார், உடம்பைக் குலுக்கி ஒரு துள்ளுத் துள்ளுகிறார், 'என்னை செஞ்சிட்டு அவனச் செய்யுங்கடா' என்று சொல்லி அவர்களைச் சண்டைக்கு அழைக்கிறார்.

முகமூடியோடு வந்தவர்கள் கையில் கத்தியோடு ஒவ்வொருவராக நரேனிடம் வந்து அடிவாங்கிப் போகிறார்கள். அவர்கள் ஓடக்கூட இல்லை. இயல்பாக நடப்பதைவிடவும் மெதுவாகவே நடந்து போகிறார்கள். நால்வரும் தனித்தனியாக அடிவாங்கியபின் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்கிறார்கள்.

அவர்களில் ஒருவனையாவது பிடித்து முகமூடியைக் கழற்றி முகத்தைப் பார்ப்பதோ, ஏன் பிடித்துக் காவல்நிலையம் கொண்டுவருவதோ இயலாத காரியமன்று. 'திரைப்பட நாயகனை'த் தவித்த்து நூறுவீதமான காவல்துறையினரும் செய்திருக்கக் கூடியதும் அதுவேதான். ஆனால் பார்வையாளருக்குத் 'திருப்பத்தை'க் கொடுக்க நினைத்தோ என்னவோ மிஷ்கின் அப்படிச் செய்யவில்லை.

அதன்பிறகு நடப்பதுதான் நகைச்சுவையே.
நரேனை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். காவல்துறையில் அவர் புகழ் பரவுகிறது. குறிப்பிட்ட நோக்கத்துக்காகச் சிறப்பாக நியமிக்கப்பட்ட பொன்வண்ணன் நரேனைத் தனக்குத் தரும்படி கேட்டுப் பெறுகிறார். அவர்களின் உடனடி வேலைத்திட்டம் என்னவென்றால் நரேனிடம் அடிவாங்கியவர்களைப் பிடிப்பது. அதுவும் எப்படி? நரேன் அடித்த சம்பவத்தில் ஒருவன் பேசினான் அல்லவா? அவனுடைய குரலை நரேனைக் கொண்டு அடையாளப் படுத்த வேண்டும். அதற்காக பொன்வண்ணன் நரேனையும் கூட்டிக்கொண்டு அலைகிறார்.

அடப்பாவிகளா! அண்டைக்கே ஒருத்தனின்ட முகமூடியைக் கழட்டிப் பாத்திருந்தா, ஏன் ஒருத்தனையாவது பிடிச்சுக் கொண்டந்திருந்தா இந்த ஆர்ப்பாட்டம் ஒண்டும் தேவையில்லையே?
சரி, அது நரேனின் தவறாகவே இருக்கட்டும். ஆனால் அத்தவறு குறித்து ஒரு கேள்விகூட நரேனிடம் கேட்கப்படவில்லை. உண்மையில் நரேன் மீது இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டும்; நரேன் கண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். இப்படியொரு 'உஷார் மடையனை' ஆகா ஓகோ வெனப் புகழ்ந்து தள்ளியிருக்க எந்த நியாயமுமில்லை.
குறைந்தபட்சம் பொன்வண்ணனாவது இது குறித்து நரேனைக் கடிந்திருக்கும் காட்சியொன்றை வைத்திருக்கலாம்.

'அரண்' என்ற திரைப்படத்திலும் இதுபோல் மிக அற்பத்தனமான காட்சியொன்றை வைத்திருப்பார்கள். நாட்டையே ஆபத்தில் தள்ளக்கூடிய முட்டாள்தனமொன்றை 'ஹீரோயிசம்' என்ற பேரில் நாயகன் செய்துவிட்டு தன்னோடு இருப்பவர்களைச் சாககக்கொடுத்துவிட்டு தன்பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பார். அச்செயல் குறித்த கதையாடல், குற்றவுணர்வு எவையும் படத்தில் இல்லை. "அரண்" பற்றித் தனியாக எழுதிக் கிழிக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~~
இப்படத்தில் உறுத்திய இன்னொரு காட்சி, கரும்புத்தோட்டத்தில் நரேனும் பிரசன்னாவும் சண்டைபிடிக்கும் காட்சி. நகைச்சுவைக்கென தனியாக ஒருகாட்சியும் வைக்கவில்லையென்ற காரணத்தாலோ என்னவொ அந்தக் காட்சியை வைத்திருக்கிறார் மிஷ்கின் என்று நினைக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~
இப்படி எழுதுவதால் இது தரமற்ற படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். மற்றவர்கள் எழுதிய பல விடயங்களில் எனக்கு உடன்பாடுண்டு.
இன்னும் சொல்லப்போனா, நாங்கள் மினக்கெட்டு ஓரிடுகை எழுதிறதுகூட அது ஒரு வித்தியாசமான, முக்கியமான படமெண்டபடியாத்தான்.

அதுக்காக, இவ்விடுகையை வைத்து அது தரமான படமென்று நான் சொல்வதாக எண்ண வேண்டாம். அதுவேறு இதுவேறு. ;-)

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, March 15, 2008

கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்

கேள்விக்குறி என்ற தமிழ்த் திரைப்படமொன்றை அண்மையில் பார்க்கக் கிடைத்தது. சிலவிதங்களில் என்னை அது கவர்ந்திருந்தது.
ஆனால் இப்படம் அதிகம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. வலைப்பதிவுகளில் இப்படம் பற்றி ஒரிடுகைகூட வந்திருக்கவில்லையென்றே கருதுகிறேன்.

அதிகம் பேசப்படாமற்போன ஒருபடம். ஆனால் தமிழ்ச்சினிமாவில் அண்மையில் வந்தவற்றுள் கவனிக்கத்தக்க படம் என்றே கருதுகிறேன்.

படத்தில் காதல் இல்லை; நகைச்சுவை நடிகர்கள் இல்லை; நகைச்சுவைக்கென தனியான காட்சிகளில்லை; வில்லன் என்று தனியாக ஒருவனில்லை. நாயகன் தனியாக பத்துப்பதினைந்து பேரை பறந்துபறந்து அடிக்கும் காட்சிகளில்லை. நடனங்கள் இல்லை; ஏன் பாடல்களே இல்லை.

ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து.

தமிழிலே இப்படியொரு படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது வியப்புத்தான். (அண்மையில் பாடல்களேயில்லாமல் 'அசோகா' என்றொரு தமிழ்ப்படமும் வந்ததைக் குறிப்பிடத்தான் வேண்டும்.)

படத்தின் நாயகன் ஒரு குடும்பத்தலைவன். வில்லன் என்று சொல்ல வேண்டுமானால் காவல்துறையைச் சொல்லலாம்.

படமானது முக்கியமான சிக்கலொன்றை கேள்விக்குட்படுத்துகிறது. அது 'விசாரணை முறை'. படத்தின் அடிநாதமே காவல்துறையினரின் விசாரணை முறைகள் மீதான கேள்விதான். அதை மையமாக வைத்துத் திரைக்கதை பின்னப்பட்டுள்ளது.

படத்தின் இறுதிக்கட்டத்தில் நாயகன் சொல்வான்:
"விசாரணை என்பது அறிவு தொடர்பானது. குற்றங்களையும் குற்றவாளிகளையும் கையாள்வதும் விசாரணை செய்வது அறிவுபூர்வமாக இருக்க வேண்டும். மிருகத்தனமாக எல்லோரையும் போட்டு அடித்து நொருக்குவதற்குப் பெயர் விசாரணை இல்லை. பலர்கூடி பலகோணங்களில் விசாரித்து, தகவல்கள் திரட்டி, அலசி ஆராய்ந்து முடிவுக்கு வருவதுதான் விசாரணை"

மிகமுக்கியமான விவாதமொன்றை எழுப்பியிருக்க வேண்டிய படமானது எதுவுமின்றி படுத்துவிட்டது. திரைப்படத்திலும் இவ்விடயத்தைச் சரியான முறையில் அழுத்தமாகச் சொன்னார்களா என்பதில் எனக்கு ஐயமுண்டு. 'தமிழ்ப்படம்' பார்க்கிறோம் என்ற உணர்வைக் கழற்றிவைத்துவிடும் ஒருவசதி தேவையென்பதும் முக்கியம்.

இத்திரைப்படத்தில், எதைச்சொல்ல வந்தார்களோ, அதை மட்டும் சொல்கிறார்கள். தேவையற்ற அலட்டல்களில்லை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காவல்துறையின் தலைமை அலுவலர் ஒருவரின் வீட்டினுள் புகும் நாயகன் அங்குள்ளவர்களைப் பணயக் கைதியாக்குவதோடு படம் தொடங்குகிறது.
தலைமை அலுவலரைக் கட்டிவைத்துவிட்டு தேவையானவர்களை அங்கு வரவழைத்து நாயகனே விசாரணை செய்கிறான். படம் முழுவதும் விசாரணைதான். விசாரிக்கப்படும் ஒவ்வொருவரினதும் வாக்குமூலங்கள் காட்சிகளாகக் காட்டப்படுகின்றன.
அப்படி என்னதான் விசாரிக்கிறான்?

குற்றவாளி ஒருவனைப்பற்றி விசாரிப்பதற்காக கணவனும் மனைவியும் காவல் நிலையத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். இருவரையும் பிரித்துவைத்து விசாரிக்கிறார்கள். கணவனை மிகுந்த சித்திரவதை செய்கிறார்கள். மறுநாள் அவனை விடுவிக்கிறார்கள். ஆனால் மனைவிக்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை. மனைவி குற்றவாளியுடன் ஓடிவிட்டாள் என காவல்துறை
தரப்பிற் சொல்லப்படுகிறது. என்ன நடந்ததென்று எதுவுமே தெரியாதநிலையில்தான் நாயகன் தலைமை அலுவலரின் முன் தனது விசாரணையைத் தொடங்குகிறான்.

இறுதியில் என்ன நடந்ததென்று தெளிவாகிறது. அதற்குள் அவ்வீட்டை சிறப்புப்படை சுற்றிவளைத்துவிடுகிறது. நாயகன் காவற்றுறை அமைச்சரிடம் சில கோரிக்கைகளை முன்வைக்கிறான். அவற்றுள் முதன்மையானது எல்லாக் காவல்நிலையங்களிலும் வீடியோ கண்காணிப்பு இருக்க வேண்டுமென்பது.

கோரிக்கை நிறைவேற்றப்படுகிறதா இல்லையா என்று தெரிவதற்கிடையில் சிறப்புப்படை படத்தை முடித்துவிடுகிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விமர்சனங்கள் இல்லாமலில்லை. விசிலடிச்சான் குஞ்சு மனப்பான்மையோடு சில காட்சிப்படுத்தல்கள் உள்ளதாகப் படுகிறது. நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன. இருந்தாலும் இறுதிவரை படத்தின் முடிவு பற்றிய எதிர்பார்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. திரைக்கதை ஓட்டத்தின்படி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை பார்வையாளர்களை நம்ப வைத்திருக்கிறார்கள்.

நட்சத்திர அந்தஸ்து இல்லாத நடிகர்களின் படமாதலால் கதையை விரும்பியபடி சொல்லியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இப்படத்தின் இறுதிக்காட்சி வேறுமாதிரித்தான் எடுத்திருக்க வேண்டிவரும்.

படத்திலிருக்கும் வேறோர் அபத்தம் என்னவென்றால் ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்? ஆனாலும் அந்தக்காட்சி எந்தவிதத்திலும் உறுத்தாத அளவுக்கு திரைக்கதைப் போக்கு இருந்தது என்பது உண்மைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம். (அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)

ஆனால் காட்சிகளில் இருந்து நானொன்றை உணர்ந்துகொண்டேன். அதாவது நாயகனின் விசாரணையில் காவல்துறையினர் யாருமே உண்மை சொல்லவில்லை. எல்லோருமே தாம் தயார்ப்படுத்தி வைத்திருந்த அல்லது தான் தப்புவதற்காக அந்தநேரத்தில் தோன்றிய கதையைத்தான் சொல்கிறார்கள். கட்டித் தொங்கவிட்டு அடித்தும்கூட காவல்நிலையப் பொறுப்பதிகாரி தான் தயாரித்து வைத்திருந்த கதையை மட்டுமே இறுதிவரை சொல்லிக்கொண்டிருந்தான். உண்மை படிப்படியாக வெளிவருவது ஒவ்வொருவரும் தனித்தனியாகச் சொல்லும் முரண்பட்ட கதைகளிலிருந்துதான். அத்தோடு சம்பவம் நடந்தபோது காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இன்னொரு கைதியின் துணையும் சேர்ந்து முழுக்கதையும் வெளிவருகிறது.

ஆக, அடித்துத் துன்புறுத்தினாலும் சரியான உண்மை வெளிவருவதற்கு உத்தரவாதமில்லையென்பதை நாயகன் காவல்துறையினரைத் துன்புறுத்துவதன் ஊடாகவும் இயக்குநர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். ஆனால் இதை பத்திரிகையாளனைக் கொண்டு கேட்கவைத்து நாயகனைக் கொண்டு பதில் கொடுத்திருக்கலாம். (பார்ப்பது தமிழ்ப்படமாயிற்றே. இப்படி வசனங்களை வைத்துப் பேசினால் மட்டுமே புரிந்துகொள்ளும் நிலைமையிலிருக்கிறோம். நகைச்சுவையொன்றைச் சொல்லிவிட்டு அதைவிடவும் அதிகநேரம் அதைப்பற்றி விளங்கப்படுத்தி நடிக்கும் விவேக்கை 'ஜனங்களின் கலைஞன்' என்ற அடைமொழி கொடுத்து மிகச்சிறந்த நகைச்சுவையாளனாக தூக்கிவைத்த இரசிகக்கூட்டத்திடம் இப்படி திரைக்கதையிலேயே விடையைச் சொல்லும் உத்தி பலனளிக்குமோ தெரியவில்லை.) சிலவேளை இயக்குநருக்கே இப்படியெல்லாம் தோன்றாமல் தற்செயலாக அமைந்த காட்சிகளுக்கு நான்தான் புதுப்புது விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ;-)

~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழ்ப்படங்களை விட்டு வெளியில் சென்றால் திரைப்படங்களுக்கான வகைப்படுத்தல்கள் பலவுள்ளன.
Action, Adventure, Comedy, Documentary, Drama, Horror, Romance, SciFi, Fantasy Thriller என்று பலதரப்பட்ட வகைப்படுத்தல்களுள்ளன.

இன்றைய காலகட்டத்தில் எந்தத் தமிழ்ப் படத்தையெடுத்தாலும் மேற்படி வகைகளுக்குள் தனித்தனியாக அடக்கமுடியாது. 'மசாலா' என்ற வகைக்குள் மட்டுமே அடக்கக்கூடியதாக உள்ளது. அதாவது அனைத்து வகைகளையும் கலந்துகட்டிய ஒரு பொட்டலாம்தான் மசாலா. (தமிழில் வந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் சிலவற்றை மட்டும் விதிவிலக்காக 'நகைச்சுவை' என்ற வகைக்குள் அடக்கலாம்.)
மசாலா என்பதற்கு வெளியில் தனியொரு வகைப்படுத்தலுக்குள் அடக்கக்கூடியதாக மிக அருந்தலாக வந்துள்ள தமிழ்ப்படங்களில் 'கேள்விக்குறி'யும் ஒன்று.

~~~~~~~~~~~~~~~~~~~~~~


காவல்துறையின் அராஜகப் போக்கு, குற்றவாளியைக் கண்டுபிடிக்காமல் யாராவது ஒருவரைக் குற்றவாளியாக்குவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயற்படுவது, பெண்களை நடத்தும் முறை என்பன நாளாந்தம் நாம் அனுபவித்து வரும் நிகழ்வுகளே. அந்நிகழ்வுகளையும் அவற்றால் பாதிக்கப்படும் அப்பாவிகளையும் அவர்களின் பாதிப்புக்களையும் சரியாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்படத்தில்தான் இசையமைப்பாளருக்கான பணி சரியாகப் பொருந்திவரும். தமிழ்த்திரைப்படங்களில் இசையமைப்பவர்களுக்கு இருக்கும் முதன்மை நோக்கம் நாலு பாடல்களை வெற்றிகரமாக இசையமைத்துவிட்டால் சரி. மக்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான். திரைப்பட விமர்சனங்கள்கூட இசையமைப்பைப் பற்றிய குறிப்பில் பாடல்களைப்பற்றிக் குறிப்பிடுவதோடு சரி.
உண்மையில் இசையமைப்பென்பது படத்துக்கான பின்னணி இசைதான். அதில் கவனம் செலுத்த ஏதுவான சூழ்நிலையில் அதிகம் படங்கள் வருவதில்லை. யாராவது மிக நுணுக்கமாக பின்னணி இசை கோர்த்திருந்தாலும் அதுபற்றிப் பேசப்படுவதில்லை. பாடல்கள் "மட்டுமே" இசையமைப்பாளர் ஒருவரின் தகுதியை நிர்ணயிக்கும் காரணியாகவுள்ளன.

இந்நிலையில் ஒரேயொரு பாடலை மட்டுமே கொண்ட இப்படத்தில்தான் இசையமைப்பாளரின் தேவை சரிவர உணரப்பட வாய்ப்புண்டு. அவ்வகையில் இப்படத்தின் இசையமைப்பாளர் திருப்திகரமாகவே செய்துள்ளார் எனச் சொல்லலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~

இறுதியாக,
அண்மையில் வந்தவற்றுள் சிறந்த படமாக எனக்குத் தெரியும் தமிழ்ப்படமிது.
அதிகம் கவனிப்படாமல் போய்விட்டது.

சிறுசிறு விமர்சனங்களைத் தாண்டி இப்படியொரு முயற்சி எடுத்ததற்காகவே பாராட்டப்படவேண்டிய துணிச்சல் இது.
அந்தச் சிறுசிறு விமர்சனங்கள்கூட இப்போதிருக்கும் தமிழ்ச்சினிமா ஓட்டத்தில் பொருட்படுத்தத் தேவையற்றவை.

~~~~~~~~~~~~~~~~~~~~

படத்தைப் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன்.

படத்தின் நாயகன் ஜெய்லானி தான் இப்படத்தின் இயக்குநரும் என அறிகிறேன்.
ஜெய்லானிக்கு உளமார்ந்த வாழ்த்து.

கமரா: கே.வி. மணி.
இசை: சத்யபிரசாத்
Photo: tamilcinema.com

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________