Saturday, December 25, 2004

வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?

இவ்வலைத்தளத்தில் அன்பே சிவம் பற்றி நானெழுதியதைப் பார்த்த நண்பனொருவன் என்னுடன் கதைக்கும்போது, இது சிறந்த படமாக இருந்தால் தோல்வியடைந்தது ஏன்? (அவன் அதைச் சிறந்த படமாக ஏற்கவில்லை.) என்று வினவினான். “உன்னைப் போல் நிறையப்பேர் நல்ல படமில்லை என்று நினைப்பதால்தான்” என்று கூறி அத்தோடு பேச்சை முடித்து விட்டேன். ஏன் இக்கேள்வியை வலைத்தளத்திற் பதியவில்லை எனக்கேட்டதற்கு, தனக்குத் தமிழில் எழுதும் வழிமுறை தெரியவில்லை எனச் சடையத் தொடங்கினான். உண்மையில் அதற்குக் கிடைக்கும் பின்னூட்டங்களையிட்டுக் கவலைப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டேன். என் எழுத்துக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என் பார்வையையொட்டியே இருந்தன. சரி, இது அவனது இரசனை. எனக்குப் பிடித்ததற்காக இன்னொருவனுக்கும் இது பிடித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க் கூடாது தானே? ஆனால் இக்கேள்வி பற்றிப் பின்பு யோசித்தேன். இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என்னென்ன செய்திருக்க வேண்டும் என்ற என் யோசனைகளை எழுதுகிறேன். தவறேதும் இருந்தாலோ மேலதிகமாக இருந்தாலோ தயவு செய்து எழுதவும்.

கதாநாயகன் அறிமுகமாகும் முதற் காட்சியில் ஒரு குத்தாலங்கடிப் பாட்டுக்கு நூறு பேரோடு சேர்ந்து குதியன் போட்டிருக்க வேண்டும். அப்பாடல் கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவதாயிருந்தால் நன்று.
“அன்பும் நாந்தாண்டா…ஆண்டவனும் நாந்தாண்டா
சிவனும் நாந்தாண்டா…சிங்கமும் நாந்தாண்டா
எமனும் நாந்தாண்டா….
இப்படியே தொடரலாம். வார்த்தைகள் புரியாவிட்டாற்கூடப் பரவாயில்லை. கமலால் அப்படி ஆடமுடியாதென்றால் மாதவனுக்காவது சந்தப்பம் வழங்கியிருக்கலாம்.

ஐந்தாறு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டும். (படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் இது போதாது.) குறிப்பாக, காய்கறிச் சந்தையிலும் பாத்திரக்கடையிலும் சண்டை போட வேண்டும். (குறிப்பிட்டளவு மக்களிடம் வரவேற்பைப் பெறாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்) அடிவாங்குவதற்கு ஆட்கள் இல்லாவிட்டால் மாதவனையும் கமலையுமாவது மோத வைத்திருக்கலாம்.

ஆடிக்கடி பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆகக்குறைந்தது “அன்பே சிவம்…அன்பே சிவம்…அன்வே சிவம்...” என்றாவது எக்கோ (echo) தொனியில் அடிக்கடி சொல்லியிருக்கலாம்.

50 ஆண் பெண்கள் அரைகுறை ஆடையிற் புடைசுழ நாலு பாட்டு இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டுத் தெருக்களில் காட்சிப்படுத்துவது முக்கியம். கமலுக்கும் கிரணுக்குமான பாடற் காட்சியை இப்படிப் படமாக்கியிருக்கக் கூடாது. கிரணின் தொப்பையையாவது காட்டியிருக்கலாம் (திருமலை மாதிரி). பாடல் வரிகளிலும் “சரக்கு” இல்லை.

இரசிகர்களைக் கிளுகிளுப்பூட்ட எதுவுமில்லை. சகிலா வகையறாக் காட்சிகள் எதையாவது வைத்திருக்கலாம். ஆகக்குறைந்தது கமலுக்குரிய சர்ச்சையான முத்தக் காட்சியையாவது வைத்திருக்கலாம்.

நகைச் சுவைக்கென யாரையாவது தனியா வைத்துப் புலம்பச் சொல்லியிருக்க வேண்டும். கதையோடு சம்பந்தப்படாமலிருந்தாலும் பரவாயில்லை.

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய போக்கான இரண்டு கதாநாயகி முறையைக் கைவிட்டது பெரிய தவறு. அதுவும் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும்போது “முறைப்படி” நான்கு நாயகிகள் இருந்திருக்க வேண்டும். இரண்டு பேரையாவது உரித்துக் காட்டியிருக்கலாம். மாதவனுடன் வெளிநாட்டில் ஒருத்தி லவ்வினதாகக் காட்டினால் உரித்துக் காட்ட இன்னும் வசதி.


படத்தைச் சுபமாக முடித்திருக்க வேண்டும். சாத்தியப்படும் சில உச்சக் காட்சிகள் (climax) இதோ:

  1. எப்படியோ கிரண் கமலைக் கண்டுபிடித்து கட்டிப்பிடித்திருக்க வேண்டும்.
  2. கமல் வந்து போனதை எப்படியோ அறிந்து கமலைத் தேடி கிரண் ஒரு பாட்டுப் பாட கமல் ஓடி வந்து….
  3. தமிழ்ச் சினிமாவின் பெரும்பான்மை உச்சக் காட்சியான ரயில் நிலையத்தில் மாதவன் கமலைப் பிடித்து அழைத்து வந்து…..
  4. இறுதி நேரத்தில், கிரணுக்கு முன்னமே எல்லாம் தெரிந்திருந்து அவர்தான் மாதவன் மூலம் இப்படி ஒரு நாடகமாடி கமலை வரவழைத்தார் என்று படத்தை முடித்திருக்கலாம்.
  5. கமலின் நாய் தாலியைத் தூக்கிக் கொண்டு கமலைத் தேடி ஓட துரத்திக் கொண்டு வரும் மாதவனும் கிரணும் கமலைக் காண….
  6. கமலே நாசருடனும் அடியாட்களுடனும் பயங்கரச் சண்டை போட்டு கிரணை மீட்டிருக்கலாம். தேவையானால் மாதவனுடன் கூட சண்டை போட்டிருக்கலாம். அதிலும் பயங்கர அடிவாங்கி சாகுந்தருவாயில் கமல் இருக்கையில் காதலியின் கதறல் கேட்டு மீண்டும் சக்தி வந்து செயலற்றிருந்த கை காலெல்லாம் சரிவந்து ஒரே அடியில் அனைவரையும் தூக்கியெறிந்திருந்தால்... இன்னும் நன்று. அல்லது ஏதாவதொரு சாமியின் அருள் வந்து செய்வதாகக் கூட காட்டியிருக்கலாம். செத்துப் போனதாக மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு கூட இவ்வளவும் சாத்தியமே. (சொக்லேட் மாதிரி).


இன்னும் நிறைய வழிகள் இருக்கிறது. ஏதாவது செய்திருக்கலாம்.

சினிமாக் காரர்களின் உச்சக் காட்சித் தொல்லை (climax) சில படங்களில் தாங்கமுடியவில்லை. அண்மையில் ஒரு படம் பார்த்தேன். (காதல் சுகமானது என்று நினைக்கிறேன்). அதில் சினேகாவும் தருணும் மனசுக்குள் காதலித்தாலும், இறுதியில் சினேகாவுக்கும் இன்னொருவருக்கும் திருமணம். தருண்கூட திருமணத்திற்கு வந்துவிட்டு தாலிகட்டுவதைப் பார்க்கப் பொறுக்காமல் புறப்படுவார். தாலிகட்டும் போது வாசிக்கும் நாதஸ்வரமும் கெட்டிமேளச் சத்தமும் கூட கேட்டுவிட்டது. அடடா! புதுசா இருக்கே என்று திறந்த வாய் மூடவில்லை,.. வைத்தார்களே ஆப்பு. “ஓடிப் போகும்” தருண் முன் மணப்பெண் கோலத்தில் சினேகா. தொலைக்காட்சிப் பெட்டியில் மாப்பிள்ளையைத் திடீர் மணம் புரிந்த தங்கை சிறிதேவி பேசுகிறார். இருவரையும் சேர்த்து வைக்கிறார்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (24 December, 2004 11:39) : 

கமர்ஷியல் ஹிட்டை விட்டுத் தள்ளுங்க வசந்தன். ஒரு சிலர் மனசுல நீங்கா இடம் பிடிக்குதா அது தான் ஹிட். எத்தனை ஹிட் படம் கொஞ்ச நாளைக்கு அப்புறம் சொல்லிகிற மாதிரி மனசுல நிக்குதா? இல்லையே?

 

said ... (24 December, 2004 11:55) : 

வசந்தன்,
செம தூள் உங்க பதிவு! இதெல்லாம் இல்லாததினால்தான்
அன்பேசிவம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது!

என்றும் அன்புடன்,
துளசி.

 

said ... (24 December, 2004 12:18) : 

நல்ல தமிழ் படங்கள் பல படங்கள் தோல்வி அடைவதற்கு காரணம் தன்னுடைய நண்பனுக்கு பிடிக்கவில்லை என்றால் தனக்கும் பிடிக்காது என்று நினைப்பதுதான். தன்னுடைய ரசனை பிறரைவிட வேறாக இருக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வில்லை. பல படங்கள் என் நண்பர்களுக்கு பிடிக்காதது எனக்கு பிடித்து இருந்து இருக்கிறது.
எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 

said ... (24 December, 2004 21:27) : 

தமிழில் இப்படியெல்லாம் படங்கள் வருமா? என்று அதிசயக்கவைத்த படங்களில் ஒன்று அது.

 

said ... (25 December, 2004 00:44) : 

நீங்கள் போட்டிருக்கும் பட்டியல் சினிமாக்காரர்களின் மூட நம்பிக்கைகள். இதில் எதுவுமே இல்லாமல் இதே கமல் நடித்து அபார வெற்றி பெற்ற சலங்கை ஒலி, வறுமையின் நிறம் சிவப்பு போன்ற படங்கள் நினைவுக்கு வருகிறது. இந்த உலகில் நல்லது செய்ய நினைத்தாலும் சரி; கெட்டது செய்ய நினைத்தாலும் சரி மிகவும் சாமர்த்தியமாகச் செய்தால்தான் மக்கள் அங்கீகாரம் கிடைக்கிறது.

- சத்யராஜ்குமார்

 

said ... (21 February, 2006 23:59) : 

எழுதிக்கொள்வது: ஜோ

வசந்தன்,
பின்னிட்டீங்க!

20.23 22.12.2005

 

said ... (22 February, 2006 21:11) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
அட பதிவு தொடங்கிய காலப்பகுதியில் பின்னூட்டமிட்டவருக்கு நன்றிகூடச் சொல்லத் தெரியாமலிருந்திருக்கிறேனே?

இறுதியாகப் பின்னூட்டமிட்ட ஜோவுக்கு நன்றி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________