Wednesday, December 10, 2008

மரங்கள் - 3 - தேன்தூக்கி -

==============================
நான் இவ்வலைப்பதிவில் எழுதத் தொடங்கி
நான்காண்டுகள் நிறைவடைகின்றன.
இதற்காக ஓரிடுகை. ;-)

==============================

மரங்கள் - 1 - வெடுக்குநாறி
மரங்கள் -2- விண்ணாங்கு



கடந்த ஈரிடுகைகளிலும் முறையே வெடுக்குநாறி, விண்ணாங்கு ஆகிய மரங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இப்போது 'தேன் தூக்கி' என்றொரு மரம் பற்றி கொஞ்சம் அலசலாம்.

இதன் பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. தேனுக்கும் இம்மரத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. வேறேதேனும் பெயரிலிருந்து மருவி 'தேன் தூக்கி' என்று வந்திருக்கலாம். வேறிடங்களில் இம்மரம் வேறு பெயர்களில் அழைக்கப்படவும் கூடும்.

உருவம், பயன்பாடு:
வன்னிக் காடுகளில் இம்மரம் மிக அதிகளவில் வளர்கிறது. மிகப்பெரிய மரமாக வளராது; அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட அளவில் வளரும். சுமார் முப்பது தொடக்கம் நாற்பது அடி உயரத்துக்கு வளரும். இளம் பருவத்தில் இதன் பட்டை மஞ்சள் கலந்த மண்ணிறமாக இருக்கும். மரத்தின் உட்பாகமும் மஞ்சளாகவே இருக்கும். முற்றிய மரமாயின் தண்டின் நடுவே கோறையாக இருக்கும். காய்ந்த நிலையில் சோத்தியான மரமாகவே இருக்கும்.

பச்சையாகவே வெட்டினால் குறிப்பிட்ட காலத்துக்கு இம்மரத்தைப் பயன்படுத்தலாம். கப்புகளுக்கு இம்மரம் பயன்படுத்தப்படுவதுண்டு.
விறகுத் தேவைக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை.

தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது. வெயில் கிடைக்கும் இடமாயிருந்தால் புற்கள் மட்டும் பசுமையாக வளரும், மற்றும்படி வேறெந்தத் தாவர வகைகளும் இம்மரத்தின் கீழ் வளரா. இது அனுபவத்தில் கண்டது தானேயொழிய விஞ்ஞானபூர்வமான முடிபு அன்று.

வன்னியில் 'வெட்டைக்காடு' என்ற சொல்லாடல் உண்டு. வெட்டையும் காடும் எதிர்மறையான பொருளுடைய இரு சொற்கள். வெட்டை என்பது மரஞ்செடிகளற்ற வெறும் வெளியைக் குறிக்கும். பிறகெப்படி இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லானது?

இங்கு 'வெட்டைக் காடு' என்பது உயரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகவுள்ள அதேநேரத்தில் பற்றைகளையோ உயரம் குறைந்த சிறு மரஞ்செடிகளையோ -அதாவது கீழ்வளரிகளைக் கொண்டிராத காடுகளைக் குறிக்கும்.

பெரிய மரங்களைக் கொண்டிருந்தாலும் நிலப்பகுதியில் அடர்த்தியான பற்றைகளைக் கொண்ட காடுகளுமுண்டு. இக்காடுகளில் இருபது யார் தூரத்துக்கப்பால் எதையும் அவதானிக்க முடியாதிருக்கும். இவற்றில் மனித நகர்திறன் மிக மோசமாக இருக்கும். அவ்வாறன்றி, நிலமட்டத்தில் பற்றைகளின்றி வெளியாக இருக்கும் அடர்ந்த காடுகளுமுள்ளன. நூறு யார் தூரத்துக்கும் அப்பாற்கூட நன்றாக அவதானிக்கலாம். தெருவில் நடப்பதைப் போல கைவீசிக் கொண்டு நடந்து போகலாம். அதேவேளையில் வெயில் நிலத்தில் விழாதபடி மிக அடர்ந்த காடாகவும் அது இருக்கும். இப்படியான காடுகளையே 'வெட்டைக் காடு' என்ற சொல்லால் அழைப்பதுண்டு.

தேன் தூக்கி பற்றிக் கதைக்க வந்து வெட்டைக்காடு பற்றி கதைக்கத் தேவையென்ன?
தேன்தூக்கி மரங்கள் அதிகமுள்ள காடுகள் அனேகமாக வெட்டைக் காடுகளாக இருக்கும். ஏனென்றால் தேன்தூக்கியின் கீழ் பற்றைகளோ வேறு தாவரங்களோ வளரா.

வன்னியில் முத்தையன்கட்டுப் பகுதிக் காடுகள் - குறிப்பாக முத்தையன்கட்டுக் குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் அடர்ந்த வெட்டைக் காடுகள்.

தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-)

தேன்தூக்கி தொடர்பில் இன்னொரு குறிப்புண்டு.
இம்மரத்தில் ஒருவகை உண்ணி இருக்கும். (அல்லது இவ்வகை உண்ணி இம்மரத்தில்தான் அதிகமாக இருக்கும்). தனியொரு உண்ணியை வெற்றுக்கண்ணால் உடனடியாகப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகமிகச் சிறிய உண்ணி. கூட்டமாக ஊர்ந்தால்தான் உடனடியாகக் கண்ணுக்குத் தட்டுப்படும். தேன்தூக்கி இலைகளில் கும்பலாகக் குடியிருக்கும் இக்கூட்டம் அவ்வழியே நகரும் மனிதர் மீது ஒட்டிக்கொள்ளும். பின் உரோமங்கள் அதிகமுள்ள இடங்கள் தேடி அமர்ந்துகொள்ளும். தேவையான நேரத்தில் அவ்வப்போது கடித்துக்கொள்ளும். ஒருவர் முழுமையாக உண்ணி பொறுக்கி முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.

ஆனால் தேன்தூக்கி உண்ணியின் தாக்குதலுக்கு உள்ளாவது மிக அருந்தலாகவே நடைபெறும். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, September 14, 2008

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி

கோவணக் கொடை வள்ளலின் முகமூடி இன்னொருமுறை  கிழிந்திருக்கும் இவ்வேளையில் பொருத்தம் கருதி இக்கவிதை மீள இடப்படுகிறது.

வள்ளல் வாழ்த்து
-------------

வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.

மீதியும் மிதியும்
-------------------

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.

மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.

திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.

கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.

அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.

இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.


14/ஜூன்/'00

====================================
படைப்பு என்னுடையதன்று.

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, August 10, 2008

தலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவிதை மீளிடுகை

2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் இக்கவிதை மீள இடப்படுகிறது.
==============================

* தலைப்பில்லாக்கனவு.

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.

இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.

~~~~~

அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.

உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்துவலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன்
கடப்பார்கள்.

என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை
விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.

அன்று
இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றியை
அறைகூவித்தான் அலறும்#

~~~~~

அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.

அதனால்,
நினைவுகளின் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல
விளைந்து.

~~~~~

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி
ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.


* இஃது
எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல;
இன்றைய நாளினை நினைவிலே
வைத்துக்கொள்ளமட்டும்
எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே

#"My country did not send me to Mexico City to start the
race. They sent me to finish the race."


- During
1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen
Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place
winner.

மூலவிடுகை எழுதப்பட்டது: 12/17/2004 01:53:00 AM
===============================

எம்மைப் போன்றோர்க்குப் பொதுவான கனவு.
வாசிக்கும்போதே விளங்கியிருக்கும்; இக்"கவிதை" என்னால் எழுதப்பட்டதன்று.
இச்சொற்கூட்டச் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன?

முன்பொருநாள் படியெடுத்துச் சேமித்து வைத்திருந்ததைப் பதிந்திருக்கிறேன். விரைவில் மூலவிணைப்பை வழங்குகிறேன்.

===============================

மீளிணைப்பு:

மேற்கண்ட கவிதையின் மூலவிணைப்பு:
http://kanam.blogspot.com/2004/12/blog-post_110326651516180283.html

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, May 27, 2008

'கேள்விக்குறி' இயக்குநரின் பதில்

"கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்" என்ற தலைப்பில் முன்பொரு இடுகை இட்டிருந்தேன்.
அவ்விடுகைக்கு அத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெய்லானி பின்னூட்டத்தில் பதிலளித்திருந்தார்.

அப்பதிலை இங்குத் தனியிடுகையாக இடுகிறேன்.
இது அவ்வியக்குநருக்கு நானளிக்கும் மரியாதை எனக்கொள்க.

முந்திய இடுகையில் அப்படம் தொடர்பில் நான் குறிப்பிட்ட சில குறைபாடுகள் தொடர்பான விளக்கத்தை இயக்குநர் அளித்திருந்தார்.

விளக்கத்துக்கு நன்றி ஜெய்லானி.
உங்களின் திரைத்துறைப் பயணம் மேலும் சிறக்க ஓர் இரசிகனாக எனது ஆசிகள்.

இனி இயக்குநர் ஜெய்லானியின் பதில்.


Jailani(Director) said ... (19 May, 2008 03:09) :

வசந்தன், கேள்வி சரிதான்:-)
நான் இயக்குனர் தான். எனது இ-மெயில் : mjailani அட் gmail டாட் com. ஆர்குட்டில் இதெ இ-மெயிலை தேடினால் எனது பக்கம் கிடைக்கும், புகைப்படத்துடன். ஆனால் அதிலும் தில்லுமுல்லு செய்ய இயலும் என்பது வேறு விசயம்.

மீண்டும், என் படத்தை பற்றிய உங்களின் மனமார்ந்த பாரட்டுகளுக்கு நன்றி. மிகச்சில உறுத்தல்களையும் சுட்டிக்காட்ட்டியுள்ளீர்கள்.

//"நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன."//

இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறையினரால் அன்றாடம் பாதிக்கப்படும் சாமான்ய மக்களின் பார்வையில் எடுக்கப்பட்டது. அதை இன்னும் அழுத்த்தமாக்கும் நோக்கத்த்தில் தான் 'போட்டுத்தள்ளலயா' நபரின் கோபமான வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் உங்களைபோல இன்னும் சிலரும் அது எரிச்சலூட்டுவதாய் உணர்ந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

//"ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்?"//

இது தெரிந்தே செய்த பிழை.. தவிர்க்கமுடியாத நிலை. காரனம் வேடிக்கையானது. இந்த காட்சி படப்பிடிப்பின் போது, இதற்கு முந்தைய மற்றும் அடுத்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கபட்டுவிட்டன.

இக்காட்சியில் நான் இரன்டு கைத்துப்பாக்கிகளுடன் வெளியெ வருவேன், கமிஷனரையும் உதவி கமிஷனரையும் மிரட்டியபடி.. இந்த நிலையில் மூன்றாவதாய் ஏ கே ரக துப்பாக்கியை பறித்து நான் சுட வேன்டிய நிலை. கமிஷனரையும் விட்டுவிடக்கூடாது. அப்போதே ஒரு விதமான காமெடியாய் தோன்றியது எனக்கு. மற்ற காட்சிகளை திரும்ப எடுத்து சரி செய்ய பொருளாதார நிலை இல்லை.ஒரு வழியாய் சமாளித்து ஒரு கையில் கைதுப்பாக்கியுடன் கமிஷனரை மிரட்டியபடி இன்னொரு கையால் ஏ கே ரக துப்பாக்கியால் சுடுவதாக எடுத்தோம்.:-)

//"சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம்.(அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)
"//


:-) என்னிடம் நீங்கள் சொன்ன அதே பதிலிருந்தது. ஆனால் அதை சொல்லவேண்டுமென அப்போது தோன்றவில்லை.

//"ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து."//

படம் துவக்கிய நேரத்தில் பாடல் வைப்பதாய் எண்ணமே இல்லை. ஆனால் இருவரின் நெருக்கத்தை ஒரு சிறு கவிதையாய் சொல்லவேண்டுமெனெ நினைத்திருந்தேன். அதே காட்சிகளை ஒரு பாடலின் பின்னனியில் காட்டினால் படத்தின் விளம்பரத்திற்க்கும் உதவும் என்ற கருத்து வந்த போது அது தவறாகவோ, திணிப்பதாகவோ எனக்கு தெரியவில்லை.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, May 20, 2008

நினைவுப்பயணம்-2 (சித்தங்கேணி, சண்டிலிப்பாயூடாக மானிப்பாய்) - ஒலிப்பதிவு

'நினைவுப்பயணம்' என்ற பெயரில் ஒலிப்பதிவுத் தொகுப்பொன்றை நான் தொடங்கியது சிலருக்கு ஞாபகமிருக்கலாம். (எனக்கே இடையிடையேதான் ஞாபகம் வரும்). கடந்தவருடம் ஜூன் முதலாம் திகதி இத்தொடரின் முதலாவது ஒலிப்பதிவை இட்டேன். சரியாக ஒருவருடம் முடிவதற்கு இன்னும் பத்துநாட்கள் உள்ள நிலையில் (இதன்மூலம் ஒருவருடம் இழுத்தடித்தான் என எவரும் சொல்ல முடியாதபடி செய்துவிட்டேன்.)இரண்டாவது ஒலிப்பதிவை வெளியிடுகிறேன்.

இப்போது சயந்தனும் என்னோடு கூட்டுச் சேர்ந்துள்ளார்.
எனவே இனி நிறையக் கதைப்போமென்று நினைக்கிறேன். அவசர அவசரமாகச் செய்யப்பட்ட ஒலிப்பதிவிது. சிறிதளவும் திருத்தங்களின்றி அப்படியே தருகிறோம்.

யாழ்ப்பாண நினைவலைகள விரைவில் முடித்து, வன்னிபற்றி நிறையக் கதைப்பதாகத் திட்டம்.

இனி, ஒலிப்பதிவைக் கேளுங்கள்.







ஒலிப்பதிவின் அடிப்படையில் காலவழுவொன்று இடம்பெறுகிறது. கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________