Wednesday, December 10, 2008

மரங்கள் - 3 - தேன்தூக்கி -

==============================
நான் இவ்வலைப்பதிவில் எழுதத் தொடங்கி
நான்காண்டுகள் நிறைவடைகின்றன.
இதற்காக ஓரிடுகை. ;-)

==============================

மரங்கள் - 1 - வெடுக்குநாறி
மரங்கள் -2- விண்ணாங்கு



கடந்த ஈரிடுகைகளிலும் முறையே வெடுக்குநாறி, விண்ணாங்கு ஆகிய மரங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இப்போது 'தேன் தூக்கி' என்றொரு மரம் பற்றி கொஞ்சம் அலசலாம்.

இதன் பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. தேனுக்கும் இம்மரத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. வேறேதேனும் பெயரிலிருந்து மருவி 'தேன் தூக்கி' என்று வந்திருக்கலாம். வேறிடங்களில் இம்மரம் வேறு பெயர்களில் அழைக்கப்படவும் கூடும்.

உருவம், பயன்பாடு:
வன்னிக் காடுகளில் இம்மரம் மிக அதிகளவில் வளர்கிறது. மிகப்பெரிய மரமாக வளராது; அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட அளவில் வளரும். சுமார் முப்பது தொடக்கம் நாற்பது அடி உயரத்துக்கு வளரும். இளம் பருவத்தில் இதன் பட்டை மஞ்சள் கலந்த மண்ணிறமாக இருக்கும். மரத்தின் உட்பாகமும் மஞ்சளாகவே இருக்கும். முற்றிய மரமாயின் தண்டின் நடுவே கோறையாக இருக்கும். காய்ந்த நிலையில் சோத்தியான மரமாகவே இருக்கும்.

பச்சையாகவே வெட்டினால் குறிப்பிட்ட காலத்துக்கு இம்மரத்தைப் பயன்படுத்தலாம். கப்புகளுக்கு இம்மரம் பயன்படுத்தப்படுவதுண்டு.
விறகுத் தேவைக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை.

தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது. வெயில் கிடைக்கும் இடமாயிருந்தால் புற்கள் மட்டும் பசுமையாக வளரும், மற்றும்படி வேறெந்தத் தாவர வகைகளும் இம்மரத்தின் கீழ் வளரா. இது அனுபவத்தில் கண்டது தானேயொழிய விஞ்ஞானபூர்வமான முடிபு அன்று.

வன்னியில் 'வெட்டைக்காடு' என்ற சொல்லாடல் உண்டு. வெட்டையும் காடும் எதிர்மறையான பொருளுடைய இரு சொற்கள். வெட்டை என்பது மரஞ்செடிகளற்ற வெறும் வெளியைக் குறிக்கும். பிறகெப்படி இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லானது?

இங்கு 'வெட்டைக் காடு' என்பது உயரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகவுள்ள அதேநேரத்தில் பற்றைகளையோ உயரம் குறைந்த சிறு மரஞ்செடிகளையோ -அதாவது கீழ்வளரிகளைக் கொண்டிராத காடுகளைக் குறிக்கும்.

பெரிய மரங்களைக் கொண்டிருந்தாலும் நிலப்பகுதியில் அடர்த்தியான பற்றைகளைக் கொண்ட காடுகளுமுண்டு. இக்காடுகளில் இருபது யார் தூரத்துக்கப்பால் எதையும் அவதானிக்க முடியாதிருக்கும். இவற்றில் மனித நகர்திறன் மிக மோசமாக இருக்கும். அவ்வாறன்றி, நிலமட்டத்தில் பற்றைகளின்றி வெளியாக இருக்கும் அடர்ந்த காடுகளுமுள்ளன. நூறு யார் தூரத்துக்கும் அப்பாற்கூட நன்றாக அவதானிக்கலாம். தெருவில் நடப்பதைப் போல கைவீசிக் கொண்டு நடந்து போகலாம். அதேவேளையில் வெயில் நிலத்தில் விழாதபடி மிக அடர்ந்த காடாகவும் அது இருக்கும். இப்படியான காடுகளையே 'வெட்டைக் காடு' என்ற சொல்லால் அழைப்பதுண்டு.

தேன் தூக்கி பற்றிக் கதைக்க வந்து வெட்டைக்காடு பற்றி கதைக்கத் தேவையென்ன?
தேன்தூக்கி மரங்கள் அதிகமுள்ள காடுகள் அனேகமாக வெட்டைக் காடுகளாக இருக்கும். ஏனென்றால் தேன்தூக்கியின் கீழ் பற்றைகளோ வேறு தாவரங்களோ வளரா.

வன்னியில் முத்தையன்கட்டுப் பகுதிக் காடுகள் - குறிப்பாக முத்தையன்கட்டுக் குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் அடர்ந்த வெட்டைக் காடுகள்.

தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-)

தேன்தூக்கி தொடர்பில் இன்னொரு குறிப்புண்டு.
இம்மரத்தில் ஒருவகை உண்ணி இருக்கும். (அல்லது இவ்வகை உண்ணி இம்மரத்தில்தான் அதிகமாக இருக்கும்). தனியொரு உண்ணியை வெற்றுக்கண்ணால் உடனடியாகப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகமிகச் சிறிய உண்ணி. கூட்டமாக ஊர்ந்தால்தான் உடனடியாகக் கண்ணுக்குத் தட்டுப்படும். தேன்தூக்கி இலைகளில் கும்பலாகக் குடியிருக்கும் இக்கூட்டம் அவ்வழியே நகரும் மனிதர் மீது ஒட்டிக்கொள்ளும். பின் உரோமங்கள் அதிகமுள்ள இடங்கள் தேடி அமர்ந்துகொள்ளும். தேவையான நேரத்தில் அவ்வப்போது கடித்துக்கொள்ளும். ஒருவர் முழுமையாக உண்ணி பொறுக்கி முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.

ஆனால் தேன்தூக்கி உண்ணியின் தாக்குதலுக்கு உள்ளாவது மிக அருந்தலாகவே நடைபெறும். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, January 21, 2008

மரங்கள் - 1 - வெடுக்குநாறி

தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்து வைக்கும் நோக்கத்தோடு இது எழுதப்படுகிறது.

மரங்கள் பற்றிய அறிவு, அனுபவம் என்பன வித்தியாசமானவை. பாடப் புத்தகங்களிலும், வேறு வழிகளிலும் மரங்கள் பற்றிய அறிவைப் பெறுவது ஒருமுறை. ஆனால் மரங்களை நேரிற்பார்த்து பழகி அனுபவம் பெறுவது வேறொரு முறை. நாம் அறிபவற்றில் அனுபவிக்கக் கிடைப்பவை சிலவே. அது நாம் வாழும் அமைவிடங்களைப் பொறுத்தது.

சிலமரங்கள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். பூக்களின் பெயர்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் வேறுபடுவதை வலைப்பதிவுகளில் கண்டிருக்கிறோம்.

இங்கே, மரங்களை அறிமுகப்படுத்த முடியாது. அவைபற்றிய முழுமையாக தரவுகள், படங்களுடன் இடுகையெழுத முடியாது. ஆனால் நான் பழகிய மரங்களின் பெயர்களைப் பதிந்து வைப்பது என்பதே இவ்விடுகையின் நோக்கம். இன்னும் ஈராண்டுகள் கழித்து, எனக்கே சில மரங்களின் பெயர்களை ஞாபகப்படுத்திக்கொள்வதுதான் இதன் முதன்மை நோக்கம்; மற்றவர்களுக்குப் பயன்படுமென்று நினைக்கவில்லை.

இப்படிச் செய்யவேண்டி வந்ததற்கு தலைப்பிலுள்ள 'வெடுக்குநாறி' தான் காரணம்.
இம்மரம் பற்றிய சம்பவமொன்றை அசைபோட்ட பொழுதில், அம்மரத்தின் பெயர் உடனடியாக நினைவுவர மறுத்துவிட்டது. இதென்ன கொடுமை? மிக அதிகளவில் பழகிய மரத்தின் பெயரொன்று வெறும் மூன்று வருடத்துக்குள், சடாரென்று நினைவு வராமற் போகுமளவுக்கு மங்கிவிட்டது திகைப்பாக இருந்தது. கொஞ்சம் யோசித்து பெயரை நினைவுபடுத்திக்கொண்டேன்.

சரி, இப்பிடியே போனா இன்னும் ரெண்டு வருசத்தில் மூளை மக்கிப்போன நேரத்தில இன்னும் பிரச்சினையாக இருக்குமே எண்டு நினைச்சு, அந்த நேரத்தில் உதவக்கூடிய மாதிரி எழுதி வைக்கிறதெண்டு முடிவெடுத்ததன் விளைவுதான் இவ்விடுகை.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அறிந்த மரங்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திற் காணக்கிடைக்காத மரங்களில் நான் கேள்விப்பட்டிருந்த பெயர்கள்: பாலை, முதிரை, கருங்காலி போன்றன. இவைகள் தளபாடங்கள் மூலம் அறிந்த பெயர்கள். இவற்றில் பாலையைத் தவிர ஏனையவற்றை வன்னிக்கு நிரந்தரமாக இடம்பெயரும்வரை நேரிற் கண்ட ஞாபகமில்லை. இரண்டொருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து மடுத் திருநாளுக்காக வந்து போனதில் பாலைமரம் நல்ல பரிச்சயம். அவற்றைவிட வீரை, சூரை என்பவற்றைக் கேள்விப்பட்டதன்றி நேரிற் பார்த்ததில்லை.

1996 இன் தொடக்கத்தில் வன்னிக்கு வந்தபின்பு புதுப்புது மரங்கள் பலவற்றை அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவற்றிலொன்றுதான் இவ்விடுகைக்குரிய தலைப்பான 'வெடுக்கு நாறி'.

இந்தப் பெயர்வர என்ன காரணமென்று தெரியவில்லை. இம்மரத்தை வெட்டினால் ஒரு மணம் வரும், எல்லா மரத்துக்கும் வருவதைப் போலவே. ஆனால் அருவருக்கத்தக்கதாக அது இருக்காது. வெடுக்கு, நாறுதல் போன்ற சொற்களுக்கு தற்காலத்தில் நாம் கொண்டிருக்கும் பொருட்படி பார்த்தால் அது கொஞ்சம் அருவருக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை.

இது நெடுநெடுவென்று நேராக உயர்ந்து வளரும், கிட்டத்தட்ட தேக்குப் போல. இளம் வெடுக்குநாறிகளைப் பார்த்தால் மின்கம்பங்களாக நடக்கூடிய மாதிரித்தான் நேராக உயர்ந்து வளர்ந்திருக்கும். பின்னர் முற்றிப் பருக்கும். நாலைந்து பேர் சுற்றிநின்று கட்டிப்பிடிக்கக் கூடியளவுக்குப் பருமனான வெடுக்குநாறிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப் பருத்த மரங்கள் எண்ணிக்கையில் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே ஏதோவொரு வகையில் இம்மரங்கள் தமது வாழ்நாளை முடித்துக்கொள்வதாகக் கருதுகிறேன்.

இதன் இலைகள் கரும்பச்சை நிறத்திலிருக்கும். இதன் பட்டை கறுப்பாக இருக்கும். கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்தால் கருங்காலி மரத்துக்கும் வெடுக்குநாறி மரத்துக்கும் உடனடியாக வித்தியாசம் பிடிக்க முடியாதபடி இருக்கும். கருங்காலிக்கு பட்டை தனிக்கறுப்பாக இருக்கும். அத்தோடு சிறிய செதில்கள் போல பட்டைத் துண்டுகள் மேற்கிளம்பியிருக்கும்.
ஆனால் வெடுக்குநாறிக்கு பட்டை மேற்பரப்பு மிகமிக அழுத்தமாக இருக்கும். அத்தோடு கறுப்பினிடையே (உண்மையில் வெடுக்குநாறியின் பட்டையின் நிறத்தைக் கறுப்பென்று சொல்லமுடியாது. கறுப்பும் கடும்பச்சையும் கலந்தவொரு நிறம்) வெளிர்நிறக் கோடுகள் நெடுக்காகத் தெரியும்.

அதைவிட மரத்தின் கிளையமைப்பு வெடுக்குநாறிக்கு வித்தியாசம். நெட்டையாக நிற்கும் இள வெடுக்குநாறிகளின் கிளைகள் கற்தேக்குப் போல ஓரளவு குடைவடிவக் கிளையமைப்பைக் கொண்டிருக்கும். (ஆனால் நன்கு முற்றிப் பருத்த வெடுக்குநாறி மரம் முற்றிலும் மாறுபட்டு சாதாரண மரங்கள் போன்று காட்சிதரும்.)

சரி, வெடுக்குநாறியின் பயனென்ன எனக் கேட்டால் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை. இதிலிருந்து தளபாடங்கள் எவையும் செய்ய முடியாது. வைரமான மரமன்று. விறகுக்குக்கூட இதைப் பயன்படுத்துவதில்லை. காய்ந்தபின், அடர்த்திகுறைவாகத் தெரியும்.
ஆனால் குறுகிய கால நோக்கில் இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நேராக நெடுத்து வளருவதால், அவ்வாறான கம்பங்களின் தேவையை இம்மரங்கள் நிறைவேற்றுகின்றன. அண்ணளவாக ஓராண்டு காலம்வரை இம்மரத்தைக் கொண்டு குறிப்பிட்ட பயனைப் பெறலாம். காய்ந்த பின் நிறை மிகக்குறைவாக இருப்பது இன்னொரு சிறப்பு.

அவசரமாக பதுங்கு - குழியமைக்க, கிணற்றுக்குக் குறுக்காக வளையொன்று (கப்பி கட்ட) போட, குறுகியகால வதிவிடம் அமைக்க வளையாக, தீராந்தியாக, கப்பாக என இம்மரம் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வின மரங்கள் வன்னிக் காடுகளில் மிகமிகச் செறிவாகக் காணப்படுகின்றன.
~~~~~~~~~~~~~~~~~~~~~
இம்மரத்தைப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள், அல்லது எனது தகவல்களில் முரண்படுகிறவர்கள் பின்னூட்டங்களில் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.

இன்னொரு மரத்தோட அடுத்த இடுகையிற் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.

நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~

இடுகைக்குத் தொடர்பில்லாதது; டி.சேயின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து இப்படம் இங்கு இணைக்கப்படுகிறது.
நாயுண்ணிப் பூவின் படம். (பீநாறியும் நாயுண்ணியும் வெவ்வேறு செடிகள்)



படம்: அருச்சுனா

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, December 19, 2007

விருது வழங்குவது சரியா?

தமிழ் வலைப்பதிவுச்சூழலில் அவ்வப்போது ஏதாவது குளறுபடி நடந்துகொண்டேயிருக்கும். இப்போது விருது என்றொரு பிரச்சினை வந்துள்ளது. என்ன நடக்கிறது என்பது தெரியாமலே பலரைப்போல நானும் விருது பற்றியோர் இடுகை எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டேன்.
ஒன்றைப்பற்றி எழுதியே ஆகவேண்டிய நிலைக்கு பதிவர்கள் ஆளாவது அவ்வப்போது நடப்பதுதான். சந்திரமுகி, சிவாஜி பற்றி கட்டாயம் ஓரிடுகையாவது எழுதியாக வேண்டிய நிலையிருந்தது. அதனாலேயே படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுத வேண்டிய நிலை எனக்கும் வந்தது. அதுபோல் விருது பற்றியும் ஏதாவது உளறி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் வலைப்பதிவராக இருக்க முடியாது. எனவே இவ்விடுகை எழுதப்படுகிறது.
அதைவிட, வருடம் முடிகிறது; நீண்டகாலமாக ஏதும் எழுதவில்லை; இவ்விடுகை மூலம் நானும் இருக்கிறன் என்று காட்டிக்கொள்வதும் ஒரு காரணம்.


தற்போது வலைப்பதிவுகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லையென்பதால் இந்த விருதுக்கூத்து எப்போது தொடங்கியது, அதில் என்ன சிக்கல் என்பவை தொடர்பில் முழுமையான அறிவில்லை. மோகன்தாசின் எழுத்தைப்பார்த்தால் இது தமிழ்மண நிர்வாகத்துக்குப் போட்டியாக யாரோ செய்யும் நரிவேலை என்பதாகப் புலப்படுகிறது. விருது கொடுத்து அப்படி என்னதான் கிழித்துவிட முடியுமென்றும் தெரியவில்லை. அவர் சொல்வது உண்மையாயின் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வலைப்பதிவுகளில் வரும் பெரும்பாலான எதிர்ப்புப் பதிவுகள் மேலெழுந்தவாரியான எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றன.

தற்போது பார்த்தளவில் அனேகம்பேர் இந்த விருது வழங்கலை எதிர்த்து எழுதிக்கொண்டிருப்பது தெரிகிறது.
அவற்றில் பெரும்பாலானவை கும்பலில் கோவிந்தாவாக வெளிப்படும் கருத்துக்களென்பதே எனது எண்ணம். விருதை ஆதரித்து ஒரு போக்கு இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவர்கள் அதையாதரித்து இடுகை எழுதியிருப்பார்கள். யாரோ காரசாரமாக எதர்த்தெழுதத் தொடங்கியதன் பின்னணியில் அதைத்தொடர்ந்து தாங்களும் ஏதாவது எழுதியாகவேண்டுமென எழுதுபவர்கள் பலர். (இது தமிழ்வலைப்பதிவுலகில் காலகாலமாக நிலவிவரும் ஒரு நடைமுறைதான். வேண்டுமானால் கடந்த சிலநாட்களில் விருது வழங்குவதை எதிர்த்து வெளிவந்த இடுகைகளை வாசித்துப் பாருங்கள். அடிப்படைத் தர்க்கமேதுமற்ற இடுகைகள் பல.)

சிலர் மட்டும் (சங்கமம் குழுவை மட்டுமன்றி) விருது வழங்கும் நடைமுறையை பொதுவாகவே கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். பலர் இதைமட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.
வலைப்பதிவுகளுக்கு விருது வழங்குவது இதுதான் முதுன்முறையன்று. இதற்குமுன் வலைப்பதிவு விருதுகளை எதிர்த்து காரசாரமாக யாரும் பிரச்சினை பண்ணியதாக நினைவில்லை. அப்படி வந்தவைகூட, போட்டியில் அதிக தமிழர்கள் கலந்துகொள்ளவில்லையென்ற குறையைத்தான் (முக்கியமானவர் தருமி) சொன்னதாக ஞாபகம். மற்றும்படி அனைவரும் விருது வழங்குவதை ஏற்றுக்கொண்டனர். விருதில் வெற்றிபெற்றவர்களை வாழ்த்தி ஒரு கிழமை வாழ்த்துப் பதிவுகளெழுதிக் கொண்டாடினர்.

சரி, அவை குறிப்பிட்ட நடுவர்களன்றி, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்ற வாதத்தை வைக்கலாம். ஆனால் வாக்குப்போட்டவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறு என்றுதான் ஞாபகம். (போட்டி நடைபெறப்போவது தங்களுக்குத் தெரியாது, சரியான முறையில் விளம்பரப்படுத்தப்படவில்லையென்ற குறைகள் பலரால் வைக்கப்பட்டன). அங்கே இருநூறு பேரால் தெரிவு செய்யப்பட்டது போன்று, இங்கே பதினேழு பேரால் தெரிவுசெய்யப்படப் போகிறார்கள்.

விருது வழங்குவது பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற வாதம் ஏன் வந்ததென்று தெரியவில்லை. இதே கோணத்தில் ஆழப்போனால் தமிழ்மணத்திரட்டியில் நட்சத்திரக் குத்துக்கள் வந்தது, பின்னூட்டங்கள் திரட்டப்பட்டது என 'பதிவர்களிடையே சண்டையை மூட்டும்' சமாச்சாரங்கள் பலவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். அப்படி பல சண்டைகள் வலைப்பதிவுலகில் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் பின்னூட்டத் திரட்டிச் சேவையை நிறுத்திவிடுவதென்று தமிழ்மணம் முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பும் வெளியாகியது. அண்மையிற்கூட நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெறும் இடுகைகள் திரட்டப்படா என திரட்டி அறிவித்து பெரிய கலவரமே நடந்து முடிந்தது. அதற்கு முன்பு பின்னூட்ட மட்டுறுத்தலை திரட்டி கட்டாயப்படுத்தியபோது, சில பதிவர்களை திரட்டியை விட்டு நீக்கியபோது என வலைப்பதிவுலகம் கொந்தளித்த பல சம்பவங்களுள்ளன.
ஓரிடுகைக்கு யார் அதிகபட்சப் பின்னூட்டங்கள் வாங்குவதென்ற போட்டி சுவாரசியமான முறையில் நடந்தது. [டோண்டு தனது பின்னூட்டங்களை ஒரேயிடுகையில் திரட்டி 500 வரை போய் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பு இருநூறு என்ற இலக்கை முதன்முதல் எட்டியவர் இட்லிவடையென்பதும், அந்தப் பின்னூட்டவிழாவை வெற்றிகரமாகத் தொடக்கிவைத்தவன் நானென்பதும் ஒரு துணைத்தகவல்.;-)]
எல்லாம் கடந்துதான் தமிழ்வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு கடந்து வந்தவர்கள் கேவலம் ஒரு விருதுக்காக தங்களுக்குள் சண்டை போடுவார்களென்பதோ, அப்படிச் சண்டைபோடுவது எப்போதும் நடக்காதது என்பதோ அபத்தமென்றே படுகிறது. சண்டை போட்டால் போட்டுவிட்டுப் போகிறார்கள். அதற்காக விருது கொடுக்காமலிக்க முடியுமா? சண்டை போடுகிறார்கள், தனது பதிவு தொடர்ந்தும் திரட்டியில் தெரியவேண்டுமென்பதற்காக தமக்குத்தாமே பின்னூட்டமிடுகிறார்கள், பின்னூட்டங்களில் சாராம்சமில்லை என்ற காரணங்களால் பின்னூட்டத் திரட்டி நிறுத்தப்பட்டுவிட்டதா என்ன?

தமிழ் வலைப்பதிவுலகம் என்பது எல்லோரையும் சேர்த்தது. சில்லறை விசயத்துக்கு வருடக்கணக்கில் சண்டை பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய விசயத்தைக்கூட அன்றோடே முடித்துவிட்டுப் போய்விடும் பதிவர்களும் இருக்கிறார்கள். மொக்கை, கும்மியுட்பட ஒருவகைப்பதிவுகளும் மிகவும் காத்திரமான படைப்புக்களும் ஒரேநேரத்தில் தமிழ்மணத்தில் வருகின்றன. ஒருவரிடமிருந்தேகூட அவை வருகின்றன. இந்த விருதைப் பிரச்சினையாக்குபவர்கள் இருப்பார்கள் என்பதைப்போல அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்பவர்களும், ஏன் அதையொரு பொருட்டாகக்கூட கவனிக்காதவர்களும் இருக்கிறார்கள்.

எனவே விருது கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், பங்குபற்றுபவர்கள் பங்குபற்றட்டும், வெல்பவர்கள் வெல்லட்டும். இவற்றில் நொட்டை பிடித்துக்கொண்டிருப்பது தேவையற்றது.
நான் கலந்துகொள்ளவில்லையென்பதைப் போலவே நிறையப்பேர் கலந்துகொள்ளப்போவதில்லை. நானும்தான். இதுவரை எந்தப்போட்டியிலும் கலந்துகொண்டதில்லை. போட்டியென்ன? ஆறு போட, எட்டுப்போட, நாலுபோட என வந்த அழைப்புக்களைக்கூட ஏற்றுக்கொண்டதில்லை. (ஒரேயொரு தடவைமட்டும் - அதுவும் வேறோர் பிரச்சினையைத் திசைதிருப்ப எழுதினேன்). அந்த அழைப்புக்கள்கூட வலைப்பதிவர்களிடையே சண்டையை, பிரச்சினையை மூட்டும் வல்லமை வாய்ந்தவை. பதிவர்களின் வாசிப்பு, அவர்கள் வைத்திருக்கும் புத்தகங்கள் பற்றிய (புத்தக மீம் என்று நினைக்கிறேன். பிரகாஷரால் தொடக்கப்பட்டது) அழைப்பு பதிவர்களிடையே தாழ்வுமன்பபான்மை ஏற்படுத்துகிறது, அது தவிர்க்கப்பட வேண்டியது என சுந்தரமூர்த்தி இடுகையெழுதினார், பலர் அக்கருத்தை ஆமோதித்தனர். பலர் புழுகிக்கொள்ள வேண்டி நேர்ந்த அந்த அவல நிலையை இந்த விருது ஒருபோதும் ஏற்படுத்திவிடாது என நினைக்கிறேன்.

விருது, பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து ஒரு கேள்வி.
இரண்டு நடுவர்களை மட்டும்கொண்ட புகைப்படப் போட்டி எந்தவிதத்தில் சரியென்று நினைக்கிறீர்கள்?
பதினேழு நடுவர்களைக் கொண்ட (ஒப்பீட்டளவில் சரியான முடிவு வருவதற்கு அதிக சாத்தியமுள்ள) சங்கமம் விருது எப்படி தவறென்று கருதுகிறீர்கள்?
புகைப்படப் போட்டி முடிவால் பதிவர்களிடையே சண்டை மூண்டதா?

*** கவனிக்க: புகைப்படப் போட்டி தவறென்று நான் சொல்லவில்லை. விருதை எதிர்க்கும் சிலரின் குற்றச்சாட்டுக்குரிய விளக்கத்தைக் கோரியே இது சொல்லப்பட்டது. அவர்கள் சொல்லிய கருத்துக்கள் எவ்விதத்தில் புகைப்படப் போட்டிக்குப் பொருந்தாமற்போகுமென்ற கேள்வி எனக்குள் எழுகிறது. பொருந்தினால் அப்போட்டியை எதித்து ஏன் பிரச்சினைகள் எழவில்லையென்ற கேள்வியும் வருகிறது. உண்மையிலேயே விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

*** சங்கமம் விருதின் பின்னாலிருக்கும் அரசியல், இராஜதந்திரம், மந்திரம், சூனியம், நயவஞ்சகம் என்றெல்லாம் கருத்துச் சொல்லிப் பின்னூட்டமிட வேண்டாம். அவற்றைப் புறந்தள்ளியே எனதிடுகையுள்ளது.

*** ஒரு விருது யாரால் கொடுக்கப்படுகிறதென்பதை வைத்தே அதற்குரிய மதிப்பைக் கொடுக்க நாங்களெல்லாம் பழகிவிட்டோம். சகட்டு மேனிக்கு முளைக்கும் டாக்டர்கள், கலைமாமணிகள் தொடக்கம் நிறையப் பேரைப் பார்க்கிறோம். திரைத்துறைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் அளிக்கும் விருதுக்கும் தேசிய விருதுக்குமுள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக அறிந்தே அணுகுகிறோம். அதுபோற்றான் எல்லா விருதுகளும்.

*** இது இவ்வருடத்தின் கடைசி இடுகையன்று.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, September 21, 2007

ஒரு குடிகாரன் உருவான கதை

பெரிய குடிகாரனாக என்னைப் புரிந்துகொள்ளும் உங்களிற் பலருக்கு நான் குடிகாரனான கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனாலென்ன? கட்டாயம் தெரிந்திருக்க வேண்டியளவுக்கு இதுவொன்றும் முக்கியமானதன்று. என் அலட்டல்களை விழுந்துவிழுந்து வாசிக்க நானொன்றும் புரட்சிக்காரனோ கலகக்காரனோ அல்லன். விரல்கள் குறுகுறுத்த விசர்ப் பொழுதொன்றில் எழுதப்பட்ட/தட்டப்பட்ட என் குடிப்புராணத்தைப் படிக்க விரும்புவோர் மேற்கொண்டு படிக்கலாம்.

முதலில ஒண்டைச் சொல்ல வேணும். தொடக்கத்தில, குடி மீது எனக்கு மோகம் இருக்கேல; மாறா குடிகாரர் மேலதான் மோகமிருந்தது, நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது சதவீதமான குடிகாரரைப்போல.

குடிக்கத் திட்டமிட்ட நாளும் வந்தது. திட்டமிட்டது நானும் என்ர நண்பனொருவனும். எங்களுக்கெல்லாம் கள்ளைவிட்டால் கதியேது?
அரைப்போத்தல் கள்ளைவாங்கி வீட்டில குடிச்சா ஆட்டத்தில் சேர்த்தியில்லை. தவறணையில குடிச்சால் மட்டுமே குடிகாரராக் கணக்கெடுபடும்.
அதால தவறணையில குடிக்கிறதெண்டு முடிவெடுத்தாச்சு.

ஊர்த்தவறணையில குடிக்க வெட்கமா இருந்திச்சு. இது ஒருவிதத்தில் களவாகச் செய்யிற விளையாட்டுத்தான். ஒருநாள் பொழுதுபட அயலூர்த் தவறணைக்குப் போய்க் குடிச்சம். நண்பன் நேர தன்ர வீட்டுக்குப் போயிட்டான். 'சோம்பேறி மடம்' எண்டு செல்லமா அழைக்கப்படுற, இராத்திரியில நண்பர்கள் கூடியிருந்து கடுதாசியோ தாயமோ விளையாடுற இடத்துக்கு நான் போனன். வீட்ட போய் பிரச்சினை கிளப்பிறதைத் தவிர்க்கிறது ஒரு நோக்கமெண்டால், நான் குடிச்சிருக்கிறதை நண்பர்களுக்குக் காட்டிறதும் ஒரு நோக்கம்தான். சைக்கிளோட்டத்தில ஒரு சிக்கலுமில்லை.

அங்கபோனா, என்ர செட் ஆக்களைக் காணேல. ஒருத்தன் மட்டும் நிண்டான். எங்களைவிட மூத்த செட் ஒண்டு நிண்டுது. திரும்புவம் எண்டு வெளிக்கிட்டா மாட்டுப்பட்டுப் போனன்.முன்னூற்றி நாலுக்கு ஒருகை குறைஞ்சதால வலுக்கட்டாயப்படுத்தி என்னையும் இருத்திப்போட்டாங்கள்.

கள்ளடிச்ச வாசம் என்னிலயிருந்த வரப்போகுது... நக்கலடிக்கப்போறாங்கள்... எண்டு யோசிச்சு நெளிஞ்சுகொண்டு நிண்டன். ஆனா அவையளும் ஆளாளுக்கு ஏத்திப்போட்டுத்தான் நிண்டதால என்ர பிரச்சினை கணக்கெடுபடேல.

விளையாட்டில ரெண்டு சுத்துப்போக தலை கிறுகிறுக்கிற மாதிரி ஓருணர்வு. எண்டாலும் விளையாடினன். வந்துசேந்த கலாவரை ஏரை வீறு எண்டு நினைச்சு அடுத்த கன்னையான் கேட்ட இருநூற்றம்பதை மேவிக் கேட்டதும், வலக்கையானின்ர முதலிறக்கமே துரும்பு வீறாய் விழுந்ததைக் கண்டு அதிர்ந்ததும், தோல்வியைச் சமாளிக்க 'அதண்ணை... அடுக்குப் பிழைச்சுப்போட்டுது' எண்டு கதை விட்டதும் கள்ளின் மகத்துவத்தால் நடந்தவை.
இனி உதில இருந்தா சரிவராது எண்டது விளங்கீட்டுது.
'அண்ணை, விடிய ஒரு முக்கிய வேலகிடக்கு, அவசரமாப் போகோணும்' எண்டு சொல்லி நழுவியாச்சு. வீட்ட போறவழியில சைக்கிள் தள்ளாடிச்சு. இடையில ஓரிடத்தில சத்திவேற எடுக்கவேண்டி வந்திட்டுது. தட்டுத்தடுமாறி போய்ச் சேந்து சத்தம்போடாமல் பாயிலபோய் விழுந்திட்டன்.

அடுத்தநாள் மத்தியானம், முந்தினநாள் சோம்பேறிமடத்தில நிண்ட எங்கட செட்காரன் வந்துகேட்டான்.
"என்ன... நேற்று லைட்டா கள்ளடிச்சமாதிரிக் கிடந்துது?"
"ஓ... சும்மா லைட்டா ரெஸ்ட் பண்ணிப் பாத்தது"
"ஆனா வெறிச்சமாதிரித் தெரியேலயே?"
"வெறிச்சது... அதாலதான் விளையாட்ட இடையிலவிட்டிட்டு ஓடியந்திட்டன். வாறவழியில றோட்டில சத்தியும் எடுத்தனான்."
"உதை ஆர் வெறியெண்டு சொன்னது?"
"அப்ப எதை வெறியெண்டுறது?"
"வெறியெண்டா குளறிக் கதைக்க வேணும்... ஒருமாதிரி இழுத்திழுத்துக் கதைக்க வேணும்... தள்ளாடி நடக்க வேணும்... நாலுபேரைத் தூசணத்தால பேசவேணும்... நீ வெறிகாரர் ஒருத்தரையும் பாக்கேலயோ?.."
"பாத்திருக்கிறன்... ஆனா உப்பிடி ஒரு குணமும் எனக்கு வரேலயே?"
"அது வராது... நாங்கள்தான் வரவைக்க வேணும். போகப்போகச் சரியாயிடும்"

இதென்ன கோதாரி? அடிச்சது காணாதுபோல... அடுத்தமுறை இன்னொரு போத்தல் அதிகமா அடிக்க வேணும் எண்டு அப்பாவியா நினைச்சுக்கொண்டன்.

ரெண்டுநாளைக்குப் பிறகு தவறணையால நேரா நண்பர்கள் நிண்ட மைதானத்துக்கு வந்திட்டன். வாயிலயிருந்து நல்லா வாசம் வந்துகொண்டிருந்திச்சு. ஆனால் ஒருத்தன்கூட என்னை ஒரு பொருட்டா மதிக்கேல. குடிச்சனியோடா எண்டு ஒருவார்த்தைகூட கேக்கேல. அவனவன் தன்ர பாட்டுக்குக் கதைச்சுக்கொண்டு நிண்டாங்கள். எனக்குச் சரியான அவமானமாப்போட்டுது. நான் குடிச்சதின்ர நோக்கமே அடிபட்டுப் போச்சு. நான் குடிகாரனாயிட்டன் எண்டதை ஒருநாய்கூடக் கவனிக்கேல.
நண்பன் சொன்னதுகள் ஞாபகத்துக்கு வந்திச்சு. ஒண்டு விளங்கீச்சு.
குடிக்கிறதால ஒருவன் குடிகாரனாகவோ வெறிகாரனாகவோ ஆகமுடியாது.. குடிகாரனாகவும் வெறிகாரனாகவும் காட்டிக்கொள்ள வேணும்.
அதால இனி நானும் அப்பிடிக் காட்டிக்கொள்ளிறதெண்டு முடிவெடுத்தன்.

அடுத்தநாளே குடிச்சுப்போட்டு அதே மைதானத்துக்குப் போனன்; வெறியில தள்ளாடுறமாதிரி சைக்கிளை ஓட்டினன்; சைக்கிளைக் கொண்டுபோய் ஒருத்தனுக்கு இடிச்சன்; எல்லாரையும் ஒருமாதிரிப் பாத்தன்; இடிவாங்கினவனை தூசணத்தால பேசினன்; எல்லாரும் என்னைப்பாத்துத் திகைச்சது வடிவாத் தெரிஞ்சுது. சரி, நாடகம் சரிவந்திட்டுது எண்டது விளங்கீட்டுது. அங்கால நிண்டுகொண்டிருந்த ஒருத்தனோட கொழுவி கண்டபாட்டுக்குத் தூசணத்தால பேசப்பேசினன். சரியோ பிழையோ பிறத்தியான் ஒருத்தன் தங்கட தோழரில கைவைக்க எங்கட செட்காரங்கள் பாத்துக்கொண்டிருக்க மாட்டாங்கள். அந்தத் துணிவிலதான் இந்தளவு விளையாட்டும் விளையாடினன். நினைச்சமாதிரியே அவன் அடிக்கவந்தான், மற்றவங்கள் வந்து பிடிச்சாங்கள்.
"டேய் அவனக்கு வெறி... ஆளை முதல் அங்கால கொண்டுபோ" எண்டு சொல்லி என்னை ரெண்டுபேர் பிடிக்க, அவங்களையும் பேசிக்கொண்டு வெறிகாரன் மாதிரியே இழுபட்டுக்கொண்டு போனன்.

நான் நினைச்சபடி நடந்திட்டுது. அதையே தொடர்ந்தும் செய்யத் தொடங்கினன். நண்பர்களிடத்தில நான் குடிகாரன் எண்ட 'மரியாதை' வந்திட்டுது. இதைச் சாட்டா வைச்சே தனிப்பட்ட கோபம் இருந்தவனையெல்லாம் ஆசைதீர தூசணத்தால திட்டித் தீர்த்தன். ஆனா நான் உண்மையில நிலைமறந்து வெறியிலதான் இப்பிடி நடக்கிறன் எண்டு எல்லாரும் நம்பிக்கொண்டிருந்தாங்கள்.

எவ்வளவுகாலத்துக்கு இதை நம்புவாங்கள்? அவங்கள் குடிக்கத் தொடங்கும்வரைக்கும்தான். அதுக்குப்பிறகு, பாம்பின் கால் பாம்பறியும் எண்டமாதிரி உந்த வெறி பற்றின மாயைகள் கலைஞ்சு போகும். நான் குடிக்க வெளிக்கிட்டபிறகுதான் வெறிக்குட்டிகளின்ர பல திருகுதாளங்களை விளங்கிக்கொண்டன்.

குடிச்சு வெறிவந்தவன் என்ன செய்வான்? பேசாமல் மூலையிலபோய் படுத்திடுவான். அல்லது சத்தியெடுத்துக் களைச்சுப்போவான். கண்டபடி தூசணத்தால பேசிக்கொண்டிருக்கிறவையள் வெறியில தன்னிலைமறந்து சொல்லிறதாத்தான் சனம் நினைச்சுக்கொண்டிருக்கு. ஆனா எந்தவொரு குடிகாரனும் உதை நம்பமாட்டான். ஏனெண்டா அவனுக்குத் தெரியும் உண்மை என்னவெண்டு. அதேபோல எந்தவொரு குடிகாரனும் உது வெறும் நடிப்பெண்டு சொல்லவும் மாட்டான். ஏனெண்டா அவனும் தொடர்ந்து நடிக்க வேணும். ஒருத்தனையொருத்தன் காட்டிக்குடுக்காமல் ஓர் எழுதப்படாத ஒப்பந்தப்படி தோழமையாக இருக்கினம் குடிகாரர்.

நானும் குடிகாரரின்ர உந்த விளையாட்டெல்லாம் நிறையச் செய்தன். என்னோட இருந்த குடிக்கத் தெரியாதவங்கள் அப்பாவியா நம்பிக்கொண்டிருந்தாங்கள்.

சரி, அதை விடுவம். நான் ஏன் குடிக்கத் தொடங்கினன் எண்டு உங்களுக்குச் சொல்லேலயெல்லோ?

எல்லாருக்கும் குடிக்கத் தொடங்கிறதுக்கு காரணங்கள் இருக்கு. நண்பர்களிடத்திலயும் சமூகத்திலயும் ஓர் அதிர்வை ஏற்படுத்திறது, பயத்தை உருவாக்கிறது எண்டு சிலது இருக்கு. குடிச்சா பெரியாளாகக் காட்டிக்கொள்ளலாம் எண்டதும் இருக்கு. புகைபிடிக்கிறதுக்கு உது முக்கியமான ஒரு காரணம். சிகரெட் பத்தினால் தாங்கள் பெரிய கொம்பனுகள் எண்டு சிலருக்கு நினைப்பிருக்கு. பெட்டையள் விரும்புவாளவை எண்டுகூட பிடிக்கத் தொடங்கினவை சிலர் இருக்கினம்.

உதெல்லாத்தையும்விட நான் குடிக்கத் தொடங்கினதுக்கு ஒரு காரணம் இருக்கு. புரட்சிக்காரனாகவும் கலகக்காரனாகவும் உருவாவது அல்லது காட்டிக்கொள்வதுதான் அது.

இளம்வயசில திடீரெண்டு உந்த ஆசை வந்திட்டுது. புரட்சிக்காரனாக, கலகக்காரனாக, தீவிர சிந்தனையாளனாகக் காட்டிக்கொள்ளிற ஆசை வந்திட்டுது. வட்டத் தொப்பியொண்டை சரிச்சுப் போட்டுக்கொண்டு விசரன் மாதிரி றோட்டுவழிய திரிஞ்சிருக்கிறன். சேட்டின்ர மேல் ரெண்டு பட்டினையும் திறந்துவிட்டிட்டு, நெஞ்சில முளைக்காத மயிரைச் சபிச்சுக்கொண்டும் திரிஞ்சிருக்கிறன். எந்தநேரமும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில இருக்கிற மாதிரி நடிச்சுக்கொண்டு திரிஞ்சிருக்கிறன். உந்த விசயத்துக்கு பெட்டையளிட்ட நல்ல வரவேற்புக் கிடைச்சது. ஒருத்தரும் வாசிக்காத, இலகுவில விளங்கமுடியாதபடி எழுதப்பட்டிருக்கும் ஏதாவது புத்தகத்தை (குறிப்பா ரஸ்யனிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த சில புத்தகங்கள்) எந்தநேரமும் கொண்டு திரியிறது, இடைக்கிடை அதை வாசிக்கிறமாதிரி நடிக்கிறது எண்டெல்லாம் உந்த விளையாட்டுக்கள் தொடந்தது.

உதையேன் கேக்கிறியள்?
ஒருக்கா உப்பிடித்தான், ரியூசன் முடிஞ்சபிறகு மேசைப்பலகையில இருந்து றோட்டுக்கு எதிர்ப்பக்கம் பாத்தபடி யோசிச்சுக்கொண்டிருந்தன். ரியூட்டறியில படிப்பிக்கிற வாத்தியொண்டுக்குக் கலியாண வாழ்த்து அச்சடிக்கிறதுக்கு டிசைன் பற்றி என்னட்ட ஆலோசனை கேக்கவெண்டு (உதெல்லாம் உந்த கலகக்கார, புரட்சிக்கார, போராளி இன்னபிற கோதாரி நடிப்பின்ர உபயம்தான்) வந்த ரெண்டு பெட்டையள் கொஞ்சம் எட்டநிண்டு குசுகுசுத்தினம்.
"என்னடி ஆள் ஏதோ தீவிரமா யோசிச்சுக்கொண்டிருக்கு?"
"இந்த நேரத்தில குழப்பக்கூடாது... வா போயிட்டு நாளைக்குக் காலம கேப்பம்"

ஆனா, எதிர்வளவுக்க இருக்கிற பிலாக்காய எப்பிடிக் கடத்திறதெண்டுதான் நான் யோசிச்சுக்கொண்டிருந்தன் எண்டது அதுகளுக்கு எங்க விளங்கப்போகுது?

இப்பிடியாக நான் நடத்திய சில கூத்துக்களுக்குப்பிறகு, முழுமையான கலகக்காரனாக, புரட்சிக்காரனாக உருவாகிறதுக்கு மிஞ்சியிருந்த ரெண்டு விசயங்களில ஒண்டான குடிக்கிறதைத் தொடங்கினன். இதுதான் நான் குடிகாரனானதுக்கான காரணம்.

புரட்சிக்காரன், கலகக்காரன் எண்டா நல்லாக் குடிக்க வேணும். அரவயசில செத்துப்போக வேணும். சாகிறதும் ஏதோ கொண்ட கொள்கை, லட்சியத்துக்காக சாகிறதெண்டுமில்லை. குடிச்சுக் குடிச்சே தானும் மெல்ல மெல்லச் செத்து சுத்தியிருக்கிறவையையும் சாகடிச்சுச் சாகவேணும்.

நான் புரட்சியாளனாவதற்கு குடிகாரனாகவேண்டியிருந்தது.

"ஒரு புரடசியாளன் உருவான கதை" எண்டு இன்னோர் இடுகை எழுதக்கூடும்.
உண்மையில "புரட்சியாளனொருவன் உருவான கதை" எண்டுதான் தலைப்பு வரவேணும்.
இவ்விடுகைக்குக்கூட "குடிகாரனொருவன் உருவான கதை" எண்டுதான் தலைப்பு வச்சிருக்க வேணும்.

அதனால் என்ன? பிழையாக எழுதுவதுகூட புரட்சி என்றாகிவிட்ட இன்றைய நிலையில் புரட்சியாளனாகிய நான் பிழையாகத்தானே எழுதவேணும்?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லேபிள்ஸ்: கொழுவி குடிகாரன்
கலகக்காரன் புரட்சிக்காரன்
கள்ளு தூசணம் நடிப்பு கோதாரி

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, March 06, 2007

நாங்கள் பொம்பிளை பார்க்கும் முறை

சயந்தனின் பதிவுக்குரிய பின்னூட்டம் நீண்டதால் அலட்டலைச் சொந்த வலைப்பதிவிலேயே வைக்கலாமென்று நினைத்ததால் இவ்விடுகை.

நானறியவும் உப்பிடி பெண்பார்க்கும் படலம், பஜ்ஜி இன்னபிற, என்பன நடக்கவில்லை. (டி.சே சொன்னமாதிரி பஜ்ஜி செய்யத் தெரியாததும் காரணமா இருக்கலாம்). புகைப்படத்தோடே தொடங்கி ஓரளவு சரிவரும் நிலையில் எங்காவது பொது இடத்தில் இருவரையும் பார்க்க வைப்பது தான் பெரும்பாலும் நடக்கிறது. அப்படிப் பார்ப்பதில்கூட நிறைய நுட்பங்கள் கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக கோயில்களில்தான் இச்சந்திப்பு நடைபெறுவதால் - அதுவும் ஏதாவது திருநாள் பெருநாளுக்கு நடைபெறுவதால் இருக்கக்கூடிய நனநெரிசலுக்குள், பார்க்க வேண்டியவர்கள் சரியாகப் பார்த்துக்கொள்வதற்கு ஏற்றாற்போல் இயலுமானவைகளைச் செய்ய வேணும்.

நான்கூட இதைச் செய்திருக்கிறேன். அப்போது எனக்குப் பதினொரு வயது இருக்கும். எங்கள் ஊர் தேவாலயத்திருநாள் ஒன்றில் இது நடந்தது. திருநாள் திருப்பலி முடிந்ததும் ஒருவர் என்னிடம் ஒரு திட்டம் விளக்கினார். கோயில் முற்றத்தில் நிற்கும் மலைவேம்பின் கீழே நான் இடம்பிடித்து வைத்திருக்க வேண்டும். என்னோடு சேர்ந்த சிறுவர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு போய் அம்மரத்தின்கீழ் நின்றுகொண்டு குறிப்பிட்ட பெரியவர் வரும்வரை நேரத்தைப் போக்காட்ட வேண்டும். இதுமட்டும்தான் எனக்குச் சொல்லப்பட்டது. சொன்னவர் ஊரில் நல்லது கெட்டது எதற்கும் முன்னின்று நடத்தும் பெரியவர். எல்லா இடத்திலும் திறப்பை இவர்தான் வைத்திருப்பார். (திறப்பு என்ற சொற்பயன்பாடு யாருக்காவது ஞாபகம் வருகிறதா?). அதனால் மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டாயிற்று. அப்போது, ஏன் என்று கேட்காமல் வரக்கூடிய கூட்டமும் என்னோடு இருந்தது.

திட்டப்படி பூசை முடிந்தவுடன் நாலைந்து பேரைக்கூட்டிக்கொண்டு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுவிட்டேன். ஒருவனை விட்டு நாலு கச்சான் சரைகளையும் வாங்கியாச்சு. ஏராளமான சனம். பூசை முடிந்ததும் கோயில்வளவில் நின்று கதைத்துக்கொண்டிருந்தார்கள். அனேகம்பேர் மரத்தைநோக்கித்தான் வருகிறார்கள். ஆனால் இருக்கும் கூட்டத்தை வைத்து அந்த இடத்தைத் தக்க வைக்க வேணும். என்னைத்தவிர வேறெவருக்கும் கட்டளை தெரியாது. அங்கிருந்து வெளிக்கிட்ட என் கூட்டத்தவரைத் தக்கவைக்க புதுப்புது முயற்சிகள் செய்தேன். வள்ளக்காச்சி அடித்து விளையாட்டு விளையாடினோம். குறிப்பிட்டவர் வந்தபாடில்லை. பிறகு நின்ற இடத்தில் இருந்து ரெண்டு காலையும் சேத்துவைச்சு ஆர் கனதூரம் பாயிறது எண்டு எங்களுக்குள்ள ஒரு போட்டி வைச்சன். அது கொஞ்சம் புழுதியும் கிளப்ப, பக்கத்தில நிண்டவை விலத்தினதால இன்னும் கொஞ்சம் பெரிய இடம் பிடிச்சம்.

இப்ப குறிப்பிட்ட பெரியவர் வந்து சேர்ந்தார்.

'சரிசரி தம்பியவை, புழுதியைக் கிழப்பாமல் அங்கால போய் விளையாடுங்கோ'
எண்டு சொல்லி அனுப்பினார். அவரோட இன்னொரு குழு வந்திருந்தது. தெரியாத முகங்கள்; வேற ஊர்க்காரர் எண்டது விளங்கிச்சு. சொன்னதைச் செய்துகாட்டின வெற்றிக்களிப்போட இஞ்சாலவந்து எங்கட பிராக்கைப் பாத்துக்கொண்டிருந்தம். அப்பதான் ஒருவிசயத்தைக் கவனிச்சன். நாங்கள் இடம்பிடிச்சு வைச்சிருந்த இடத்தில நிண்ட கூட்டத்திலயிருந்து ஒவ்வொருத்தரும் பக்கத்திலயிருக்கிற ஆக்கள் பாத்திடக்கூடாதெண்ட எச்சரிக்கையோட நைசா கடைக்கண்ணால அங்கால ஓரிடத்தை இடைக்கிடை பாத்துக்கொண்டிருந்திச்சினம். அதுக்குள்ள நல்லா வெளிக்கிட்டு நிண்ட அக்காவும் ரெண்டொருதரம் நைசா கண்ணைத் திருப்பிறதும் பிறகு ஒளிக்கிறதும் எண்டு விளையாட்டு நடக்குது. அவையள் பாக்கிற இடத்தில இன்னொரு கூட்டம். அது ஒரு பிட்டி. முந்தி என்னத்துக்கோ மண்கொட்டி பிறகு பாவிக்காமல் இறுகி பிட்டியா வந்திட்டுது. இவையள் நிக்கிற மரத்திலயிருந்து இருபது, இருபந்தைஞ்சு யார் தூரத்தில அந்தப்பிட்டி இருக்கு. என்ன நடக்குதெண்டு எனக்கு இன்னமும் விளங்கேல.

பிட்டிக்குப் பக்கத்தில போனன். நம்மட ஊர்க்காரர்தான். ஒருநாளும் வேட்டி கட்டிப் பாத்திராதவர் ஒருத்தர் அதுக்குள்ள பட்டுவேட்டி கட்டிக்கொண்டு கலாதியா நிக்கிறார். மரத்தடியில நடக்கிற கூத்துத்தான் இஞ்சயும் நடந்துகொண்டிருக்கு. அண்ணருக்குப் பொம்பிளை பாக்கினமாம் எண்டதை அரசல்புரசலா வீட்டில கதைக்கிறதை ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தன். எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுப் பாத்துக் கண்டுபிடிச்சிட்டன். இவர் பொம்பிளை பாக்கக் கோயிலுக்கு வந்திருக்கிறார்; அவ மாப்பிள்ளை பாக்கக் கோயிலுக்கு வந்திருக்கிறா.
அந்தக் கலியாணத்துக்கு என்ர உதவியா பொம்பிளை வீட்டாருக்கு இடம்பிடிச்சுக் குடுத்த திருப்தியோட கலியாண வீட்டுச்சாப்பாடும் சாப்பிட்டன்.

இதில என்ன சொல்ல வாறன் எண்டா, பொம்பிளை பாக்கிற, மாப்பிள்ளை பாக்கிற சடங்கை நடத்திறவர் எவ்வளவு நுட்பமாச் செய்தார் எண்டதை. இருதரப்புமே மற்றத்தரப்பை வடிவாகப் பார்க்கக்கூடியமாதிரி இடங்களைத் தெரிவு செய்யிறதும், அந்த இடங்கள் சனநெரிசலில் பறிபோயிடக் கூடாதெண்டதுக்காக முற்கூட்டியே அணிகள் ஒழுங்கமைத்து அவ்விடங்களைக் கைப்பற்றிக் கொள்வதும் ஒரு தேர்ந்த செயற்பாடு. அந்தப் பிட்டியைக் கைப்பற்ற அவர் என்ன செய்தார் என்று தெரியாது. மரத்தடியைவிட அதற்குத்தான் போட்டி அதிகம். சுழட்டலுக்கு வந்துநிற்கும் மைனர் மச்சான்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட இடம் அது. அதில நிண்டு கூட்டத்தை ஒரு சுழட்டுச் சுழட்டலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொம்பிளை பாக்கக் கோயிலுக்குப் போறது தொடர்பா இன்னொரு சுவாரசியமான சம்பவம் இடம்பெயர்ந்து இருக்கேக்க எங்கட ஊர்க்காரருக்கு நடந்தது.

எங்கள் ஊராள் ஒருத்தருக்குக் கலியாணம் பேசி, சீதனம் உட்பட்ட பிறவிசயங்கள் ஓரளவு சரிவந்து, பொம்பிளையை பார்க்க வைக்க ஏற்பாடாகியது. பக்கத்து ஊர் மாதாகோயில் திருநாளுக்குப் பொம்பிளை வீட்டாரை வரச்சொல்லியாச்சு. மாப்பிள்ளை வீட்டார் திருநாளுக்குக் கார்பிடிச்சுப் போக ஏற்பாடாகிவிட்டது. காரில போறவங்கள வேற்றுக்கிரகத்து ஆக்களாப் பாக்கிற நிலையிலதான் அப்ப யாழ்ப்பாணம் இருந்தது. திருநாளுக்கு முதல்நாள்தான் பொடிப்பிள்ளைக்குச் சொல்லப்பட்டது. அந்தநேரத்தில யாழ்ப்பாணத்தில பகல்-இரவு உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி நடந்துகொண்டிருந்தது. 3 நாட்களில முழுச்சுற்றுப்போட்டியும் முடிஞ்சிடும். மாப்பிள்ளை கழக விளையாட்டு வீரன். திருநாள் அண்டைக்கு பகல் அவர் விளையாடவேண்டியிருந்தது.
இந்தநிலையில மாப்பிள்ளை திருநாளைக்கு வர ஏலாது எண்டிட்டார். வீட்டில குழப்பம்.

'டேய்! என்ன சொல்லிறாய்? உன்னை நம்பி பெட்டைய வரச்சொல்லிப் போட்டம். இந்தநேரம்போய் இப்பிடி சொல்லிக்கொண்டிருக்கிறாய்? வேற ஒருத்தனை விளையாட விட்டிட்டு மரியாதையா பூசைக்கு வா. பிறகு விளையாடப் போ'
எண்டு அர்ச்சனை நடக்குது. மாப்பிள்ளை மசியிற பாடில்லை. ஆள் ஒரு விறுமன்தான். இரவுவரைக்கும் ஆள் முடிவு சொல்லேல. விடிய வெளிக்கிட்டுப் போறதுக்காக கார்க்காரனை இரவே வரச்சொன்னதால காரும் வந்திட்டுது.

'பொடிப்பிள்ளை கொஞ்சம் முறுக்கிக்கொண்டு நிக்கிறார். விடிய எல்லாம் சரிவந்திடும். பெட்டையப் பாக்க வராமல் உவரெங்க விளையாடப் போறது?' எண்டு பெரிசுகள் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு பிரச்சினையை முடிச்சுக்கொண்டு படுத்தாலும் அதையெல்லாம் பொய்யாக்கி, சொன்னமாதிரி விடியவெள்ளன மாப்பிள்ளை விளையாடப் போட்டார்.

குடும்பம் அல்லோலகல்லோலப்பட்டது. ஆளாளுக்குச் சத்தம்போட்டார்கள். 'எளிய நாய், நாய்ப்புத்தியக் காட்டிப்போட்டான்' எண்டது தொடக்கம் வரையறையின்றி மாப்பிள்ளைக்கு வசவுகள் விழுந்தன. சும்மாநிண்டு பிரியோசினமில்லை எண்டு விளக்கி வெளிக்கிட்டவயளோட காரில ஏறி கோயிலுக்குப் புறப்பட்டார் எல்லாத்தையும் ஒழுங்கு செய்தவர்.

மாப்பிள்ளை இல்லாமல் கார் போனது. காருக்குள்ளயே சண்டை. தங்கட குடும்ப மானம் கப்பலேறியதாய் மாப்பிள்ளை குடும்பம் அலட்டிக்கொண்டிருக்க, 'என்ர மானத்தை வாங்கிப்போட்டியள், பிள்ளையச் சமாளிச்சு வரவைக்கத் தெரியேல உங்களுக்கு. இனி என்னை எவன் மதிப்பான்? அதுகளின்ர முகத்தில நான் எப்பிடி முழிக்கிறது?' எண்டு ஒழுங்கு செய்தவர் தாய்தேப்பனோட ஏறிப்பாய கார் கோயிலுக்குப் போய்ச்சேர்ந்தது. அங்கபோய் சடையப்பாத்து, ஏலாமல் ஒழுங்கு செய்தவரே நடந்ததைச் சொல்லி, 'பிள்ளை! உனக்கு அவன் சரிப்பட்டு வரான். காவாலிப் புத்தியக் காட்டிப்போட்டான். நல்லவேளை நீ தப்பிச்சாய்' எண்டு உண்மையைச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார். மாப்பிள்ளைத்தரப்பு, பொம்பிளை தரப்பு, இடைத்தரப்பு எண்டு மூண்டு தரப்புக்கும் மனஸ்தாபத்தோட அந்தப் பேச்சும் திருவிழாவும் முடிந்தது.

கொழுத்த சீதனச் சம்பந்தம் தொலைந்ததோடு மூவாயிரம் ரூபா கொடுத்து அயலூர்க்கோயில் திருவிழாவுக்குச் சவாரி போய்வந்த எரிச்சலும் சேர மாப்பிள்ளை வீட்டில் பிரளயமே நடந்த்து. அதுமட்டுமில்லை, விளையாட்டுக் கழகத்தோடயும் சண்டை. அவங்கள் தங்களுக்கு உப்பிடி ஒருவிசயமும் தெரியாது; தெரிஞ்சிருந்தா நாங்களே அவனை இழுத்துக்கொண்டு வந்து கோயிலில விட்டிருப்பம் எண்டிட்டாங்கள்.

ஆனாலும் அதிசயம் நடந்தது. குடும்பங்களுக்குள்ளதான் பிரச்சினை வந்ததேயொழிய, தொடர்புடைய ரெண்டு பேருக்கும் ஏதோ எங்கயோ பத்தி, சந்திப்பை டெவலப்பாக்கி, இன்னும் அட்வான்சாப் போய், திரும்பவும் ரெண்டு குடும்பத்துக்கயும் சண்டை சச்சரவுகளோட ஒருவாறு கலியாணம் முடிந்தது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனிய புகைப்படத்தில மட்டும் பார்த்தே கலியாணம் முற்றாகின நிறையக் கலியாணங்களைக் கண்டிருக்கிறம். வெளிநாட்டுக்கான கலியாணம் எண்டா அப்பிடித்தான். ரெண்டுபேருமே தனிய புகைப்படத்தை மட்டும் பார்த்தே கலியாணத்துக்குச் சம்மதிக்க வேண்டிய நிலை. சில இடங்களில் மாப்பிள்ளை இல்லாமலே கலியாணம் மாதிரி ஒரு கொண்டாட்டம் கொண்டாடுவார்கள். பொம்பிளையை கொழும்புக்கு அனுப்ப முதல், வழமையான கலியாணக் கொண்டாட்டம் மாதிரி தடல்புடலாக் கொண்டாடித்தான் அனுப்பி வைப்பினம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தன்னார்வத் தொண்டாக கலியாணம் பேசுபவர்கள் எங்கள் தமிழ்ச்சமுதாயத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். சிலர் இதையொரு தவமாகவே செய்வார்கள். பெரும்பாலும் முதியவர்கள் (என்புரிதலின்படி குறிப்பாகப் பெண்கள்) இதில் மிகஈடுபாட்டுடன் இருப்பார்கள். கண்ணிலே தென்படும் பெடி பெட்டைகளை எல்லாம் கலியாணக் கண்கொண்டுதான் பார்ப்பார்கள். யாரை யாரோட கொழுவி விடலாம் (இது வேற கொழுவி;-) எண்டுதான் யோசித்துக்கொள்வார்கள். யாரும் கேட்காமலே வலியப்போய் சேவையில் இறங்கிவிடுவார்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முள்முருக்கு நடுவது பற்றி சயந்தனின் பதிவில்தான் முதன்முதல் கேள்விப்படுகிறேன். இதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் அறிய விரும்புவது, நட்ட கதியால் முளைக்காவிட்டாலோ ஆடு காந்தியதால் பட்டாலோ ஏதாவது அபசகுணமாக நினைக்கும் வழக்கமுண்டா?

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, February 23, 2007

பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

தற்போது வலைப்பதிவுலகில் காரசாரமாக பின்னவீனத்துவம் பற்றிய கட்டுடைப்புக்கள், விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதன் அடுத்தகட்ட வடிவமாக ஒரு கலந்துரையாடலை ஒழுங்குபண்ணி இங்கு ஒலிப்பதிவாகத் தருகிறோம்.

இக்கலந்துரையாடல் ஆகலும் அடிப்படையாக இல்லாமலிருப்பதால் ஏற்கனவே கொஞ்சமாவது இதுபற்றி அறிவிருப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
எதற்கும் இப்பதிவைக் கேட்க முன்னர் கீழ்க்கண்ட இணைப்புக்களில் இருக்கும் கட்டுரைகளை வாசித்திருந்தால் நன்று.

அப்படி வாசிக்காத பட்சத்தில், வாசிக்க விருப்பமில்லாத பட்சத்தில் பேசாமல் போய்விடாதீர்கள். ஒலிப்பதிவைக் கேளுங்கள்.
ஆனால் அதன்பின் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கப்போவதில்லையென்பதே நீங்கள் செலுத்தப்போகும் விலை.

பின் நவீனத்துவம் என்னும் பேக்காட்டல். -அற்புதன்
பின்நவீனத்துவம் ➽ சில குறிப்புகள் -பாலபாரதி
ஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள் -டி.சே
பின்நவீனத்துவம் - ஓர் அறிமுகம் -பெயரற்ற யாத்ரீகன்
என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள் -டி.சே


கலந்துரையாடலில் பங்கேற்போர்:

ஆய்வாளர் கும்பரோ பூஜே,
சுசிந்தன்















postmodernsm.mp3


அவசரமாக ஒலிப்பதிய வேண்டி வந்ததால் கலந்துகொண்டவர்கள் சரியான ஆயத்தங்களின்றி பங்குபற்ற வேண்டி வந்துவிட்டது. இன்றுவிட்டால் பின் சனி ஞாயிறு என்பதால் அவசரமாக இன்றே அனைத்து வேலைகளையும் முடிக்கவேண்டி வந்தது. இதில் வரும் தொழிநுட்ப வழுக்களுக்கு முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

இதைக் கேட்டு நீங்கள் சொல்லும் கருத்துத்தான் தொடர்ந்து இடம்பெறப்போகும் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு ஊக்கமாக அமையுமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, February 13, 2007

வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -2

முந்திய நினைவு:
வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1


[படத்திலிருப்பது முத்தையன்கட்டு குளக்கட்டுப்பாதையிலுள்ள வீரை மரம். மலைநாடானின் பதிவில் வீரை பற்றிக் கதைக்கப்பட்டது.]


முத்தையன்கட்டில் குறிப்பிடத்தக்க தொழில்களிலொன்று நன்னீர் மீன்பிடி. முத்தையன்கட்டுக்குளத்தில் வாடியமைத்து வள்ளம் வைத்து நன்னீர் மீன்பிடி நடக்கும். வலையில் 'ஜப்பான்' (பேச்சுவழக்கில் 'யப்பான்' என்பதால் இனி அப்படியே வரும்) எனப்படும் மீன்வகைதான் பிடிபடும். இது உருவத்தில் கிட்டத்தட்ட விளைமீன் போலிருக்கும். கறுப்பு நிறம் அதிகமாக இருக்கும். பொழுதுபடும் நேரத்தில் வலைபடுத்தால் விடியும்போது இழுத்துத் தெரிவார்கள். சிலர் பொழுதுபடும்போது தெரிவதுமுண்டு. பிற்காலத்தில் முத்தையன்கட்டுக்குளத்தில் பின்னேரச் சந்தை இருந்ததாக ஞாபகம்.


தூண்டில் போட்டு மீன்பிடிப்பவருமுண்டு. இதில் விரால், விலாங்கு என்பனவும் மாட்டுப்படும். தூண்டில் போடுவதைப் பலர் தொழிலாகச் செய்தாலும் சிலர் அதைப் பொழுதுபோக்காகச் செய்வதுண்டு. எங்கள் தரவளியள் அந்தவகைதான்.

யாழ்ப்பாணத்தாருக்கு குளத்துமீன் எண்டா அருவருப்புத்தான். வன்னியில வந்திருந்தவையும் தொடக்கத்தில அப்பிடித்தான். அதைப்பற்றிக் கதைச்சாலே சிலர் சத்தி வாறமாதிரி ஓங்காளிச்சுக் காட்டுவினம். பிறகு கொஞ்சப்பேருக்குப் பழகிப்போக, மிச்சாக்கள் இப்பவும் அப்பிடியேதான் இருக்கினம்.

வன்னி வந்த உடனயே நான் சூழலோட இயல்பாயிட்டன். எனக்குக் கிடைச்ச நண்பர்களும் சூழலும் அப்படி வாய்த்தது. குளத்துமீன் எனக்கொரு பிரச்சினையில்லை. கடல்மீனளவுக்கு உருசியில்லைத்தான் எண்டாலும் ஒதுக்கிற அளவுக்கு அதில எதுவுமில்லை.
கறிவைக்கும்போதுதான் சிக்கல் வரும். யப்பான்மீன் வெகுவேகமாகக் கரைந்துவிடும். வெட்டியமாதிரியே முறிகளுடன் சாப்பிடக்கூடியமாதிரி கறிவைச்சு முடிப்பது தனிக்கலை.


[இவர்கள் உண்மையில் வயிற்றுப்பாட்டுக்காகத் தூண்டில் போடுகிறார்கள்]
நாங்கள் அப்பப்ப குணங்கொள்ளேக்க தூண்டிலைத் தூக்கிக்கொண்டு மீன்பிடிக்கப் போவோம். வெளிநாட்டில தூண்டில் போடுறதை பெரிய பொழுதுபோக்கா செய்யிறதைப் பாக்கேக்க 'அட! இவங்களும் எங்கள மாதிரித்தான்' எண்டு நினைச்சுக் கொண்டேன்.
தூண்டில் கொண்டுபோறோமோ இல்லையோ றேடியோ கொண்டு போகவேணும். ஏனெண்டா அதுதான் பொழுதைப் போக்கும். நான் ஏதாவதொரு புத்தகத்தையும் கொண்டு போவன்.
துண்டிலுக்குரிய புழுப்பிடிக்கிறது பெரிய வேலை. மண்புழு தான் நாங்கள் பிடிக்கிறது. நினைச்சமாதிரி புழுப்பிடிக்கிறது சின்ன வேலையில்ல. அதைத் தேடிப்போனா எதுவும் கிடைக்காது. ஆளாளுக்கு சின்ன டப்பாவோட கல்லுப்பிரட்டிக் கொண்டிருப்பம் புழுக்களைத் தேடி. எனக்குக் கடைசிவரை புழுப்பிடிக்கிற கலை கைவரேல. அதுவழிய திரியிற சின்னப் பெடிபெட்டையள் பிடிச்சுத் தருவாங்கள். எனக்கு ரெண்டுமூண்டு வட்டனுகள் கிடைச்சாங்கள். பத்து போளைக்கு ஒரு டப்பா புழு எண்ட கணக்கில புழுக்கள் வரும்.

புழுப்பிடிக்கிறது மாதிரித்தான் மீன்பிடிக்கிறதும். எனக்குத் தூண்டில் போட்டுப் பழக்கினவர் சொன்னார்:
"தக்கயப் பாத்துக்கொண்டிரு; அது அங்க இஞ்சயெண்டு சாதுவா ஓடத்தொடங்கினா சடாரெண்டு கம்பை ஒரு வெட்டு வெட்டு; மீன் மாட்டுப்பட்டிடும்" எண்டு.
முதல்நாள் அவரோடயே இருந்து ஒருமணித்தியால் தூண்டில்போட்டன். ரெண்டோ மூண்டுதரம் தக்கை ஆடிச்சு. ஆனா மீன் மாட்டுப்படேல. நான் தூண்டில வெட்டுறது சரியில்லையெண்டார். மூண்டுநாள் மினக்கெட்டன். ஒருமீனும் மாட்டுப்படேல. நல்ல தெளிவான தண்ணியில எல்லாம் வடிவாத் தெரியும். தூண்டிலுக்கு நேர மீன்கள் வரும். அதுவும் கூட்டமா வரும். தூண்டிலிலயிருந்து ரெண்டிஞ்சி தூரத்தில வந்து மணந்துபாக்கிற மாதிரிப் பாத்துக்கொண்டிருந்திட்டுப் போயிடும்.
நான் ஒருவிசயத்தை யோசிச்சன். நான் கரையில இருக்கிறது மீன்களுக்குத் தெரியுது; அதாலதான் அலேட் ஆகி ஓடுது எண்டு நினைச்சன். உடம்பை மறைக்க படுத்திருந்து தூண்டில்போட்டன். நானிருந்தது ஒரு பிட்டியெண்டபடியா அது இலகுவாக இருந்தது.
சொன்னா நம்ப மாட்டியள்! நான் பிடிச்ச முதலாவது மீன் படுத்திருந்து பிடிச்சதுதான்.

அதுக்குப்பிறகு மீன்பிடிக்கிறது கொஞ்சம் பழகீட்டுது. நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு ஒவ்வொரு மூலையிலயோ பிட்டியிலயோ நிண்டு தூண்டில் எறிவம். ஒருத்தனுக்கு மீன் பிடிபட்டா எல்லாரும் அங்கபோய் போடுவம். மீன்பிடிக்கிறமோ இல்லையோ நல்லாப் பொழுது போகும்.

தூண்டிலை நோக்கி மீன்களை வரவைக்க சாப்பாடு போடுவம். பாண்துண்டுகள், சோறு, தோசைத்துண்டுகள் எண்டு சிலதுகளை தூண்டில் முள்ளடியில எறிவம். மீன்கள் நிறைய வரும். ஆனா தூண்டிலில இருக்கிற புழுவைமட்டும் விட்டிட்டு நாங்கள் போட்ட சாப்பாட்டைத் திண்டிட்டு 'தண்ணி' காட்டீட்டுப் போயிடுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனநாளைக்குப்பிறகுதான் சுகமா மீன்பிடிக்கிற இன்னொரு வழிமுறை தெரியவந்தது. அது வாய்க்காலில மீன்பிடிக்கிறது. போகச்செய்கைக்கு தண்ணீர் திறந்துவிட்டா அதோட நிறைய மீன்களும் வரும். சிலர் என்ன செய்வினமெண்டா வாய்க்கால் ஒடுங்கிப்பாயிற இடத்தில சின்னதா ஒரு வலைவைச்சு அதால பிடிப்பினம். போக் ஒண்டுக்கால தண்ணி வந்து பாயிற இடத்தில நாங்களும் அப்பிடிப் பிடிக்க வெளிக்கிட்டு வலைகிடைக்காததால சாறத்தைப் பாவிச்சம். எங்களில ஒருத்தனின்ர சாறத்தை விரிச்சுவைச்சு ஒருக்கா கோலி எடுத்ததில நாலோ அஞ்சோ வந்துது.
'இஞ்ச தண்ணி அகண்டுபோகுது; போக்குக்குக் கிட்டவாப் போய் போடுவம்' எண்டு ஒருத்தன் சொல்ல ரெண்டாம்தரம் குழாய்க்குக்கிட்டவாய்ப் போய் சாறத்தை விரிச்சம். தண்ணி சாறத்தைக் கிழிச்சுக் கொண்டு போட்டுது.

[இது படத்தை வலப்பக்கம் தள்ள]


இரவு நேரத்தில தண்ணிபாயிற மதகில அரிக்கன் லாம்போட சிலர் இருப்பினம். தண்ணிவெளியேறிற பக்கத்தில லாம்பை தண்ணிக்குக் கிட்டவாப் பிடிக்க வேணும். மதகு தாண்டிவாற மீனெல்லாம் தண்ணியை எதிர்த்தபடி லாம்புவெளிச்சத்தில குமிஞ்சு நிப்பினம். இதைப்பற்றிக்கூட ஆராய்ச்சி செய்திருக்கிறம். மீன்கள் இயல்பாகவே மதகுதாண்டிவந்து தண்ணியை எதிர்த்து குமியுமா? அல்லது லாம்பு வெளிச்சத்துக்காகத்தான் அப்பிடிக் குமியுதா எண்டு வாதிச்சிருக்கிறம். மதகடியில லாம்பில்லாமல் ரோச்லைட் அடிச்சு, மதகில்லாத சாதாரண வாய்க்காலி்ல் லாம்பு வைச்சு, பகலில அதே இடங்களில மீன்கள் குமியுதா இல்லையா எண்டெல்லாம் சில பரிசோதனைகள் செய்திருக்கிறம். [நாயாத்தில வேற நண்பர்களோட இறால் பிடிக்கப்போகேக்கயும் இப்பிடி வாதம் வந்தபோது அவைக்கு விளங்கப்படுத்த எனது முந்திய பரிசோதனைகள் கைகுடுத்தன.]

வெளிச்சத்தில குமிஞ்சிருக்கிற மீன்களை அடிச்சுப்பிடிப்பினம். ஒரேயடியில நாலைஞ்சு மீன்கள் கிடைச்சாலும் கிடைக்கும். அடிபட்ட மீன் தண்ணியோட போகாமல் அங்கால ஒருத்தர் நிண்டு பிடிக்கவேணும். அனேகமா தடியாலதான் அடிப்பினம். ஓரிடத்தில தென்னம்பாளை பாவிக்கிறதைப் பார்த்திருக்கிறன். கற்சிலைமடுவில சிலர் வாளால வெட்டிறதைப் பாத்திருக்கிறன். கொஞ்சம் பெரிய மீனா வந்திட்டா வாளால ஒரே வெட்டுத்தான். அது சிலநேரம் ரெண்டுதுண்டாக்கூடப் போகும். 'உதென்ன விசர்வேலை பாக்கிறாங்கள்?' எண்டு நினைச்சதுண்டு.

[முத்தையன்கட்டுக்குளத்தின் கிளைவாய்க்காலொன்று]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லாத்தையும்விட சுகமான மீன்பிடிக்கிற முறையொண்டிருக்கு. அதுதான் வத்தின குளத்தில மீன்பிடிக்கிறது. 'குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல்' எண்டு இதைத்தான் சொல்லிறவை போல.
தண்ணி வத்திக்கொண்டுபோற நேரத்தில குளத்திலயோ மோட்டையிலயோ மீன்பிடிக்கிறது லேசான வேலை. அதுவும் எருமைகள் இறங்கி சேறடிச்சு வைச்சா அந்தமாதிரியிருக்கும். வெயில் நேரத்தில சேத்துக்கு மேல்மடத்தில விரால், விலாங்கு எல்லாம் மினுங்கிக்கொண்டிருக்கும். தண்ணியில ஓடுறமாதிரி அவையால தப்பியோடவும் முடியாது.
அப்பிடி வத்தின குளத்தில மீன்பிடிச்ச ஒரு சுவாரசியமான சம்பவம் இனி வருகிறது.

முத்தையன்கட்டுக்குப் பக்கத்தில புளியங்குளம் எண்டு ஓரிடம் இருக்கு. இது 'ஜெயசிக்குறு' புகழ் புளியங்குளமில்லை. அது கண்டிவீதியில இருக்கு. இது ஒட்டுசுட்டானிலயிருந்து முள்ளியவளை வாற றோட்டில கொஞ்சத் தூரத்தில வரும். புளியங்குளம் எண்ட குளத்தை மையமாக வைச்சுத்தான் அந்தக் கிராமத்துக்கு இந்தப்பேர். இதுவும் முத்தையன்கட்டுக் குளத்துக்குரிய நீர்ப்பாசனப் பகுதிதான்.
அந்தக்குளத்தில நிறைய மீன்கள் இருக்கும். 1997 இல தண்ணிவத்தின கோடையில அந்தக் குளத்துமேல ஒரு தாக்குதல் நடத்தினோம். வேறென்ன? மீன்பிடிக்கிற தாக்குதல்தான்.

வழமையாகவே அந்தக்குளம் எருமைகளின் குளம். அந்தச் சுற்றுவட்டார எருமைகளெல்லாம் அந்தக்குளத்திலதான் பிரண்டெழும்புங்கள். தண்ணிவத்திக்கொண்டு போற காலத்தில சொல்லத் தேவையில்லை. தண்ணிதேங்கி நிண்ட சிறுபகுதி முழுவதையும் சேறடிச்சு வைச்சிருந்துதுகள். வெயில்நேரத்தில சேத்துக்கு மேல மினுமினுத்துக்கொண்டிருக்கிற விலாங்குகள் வேற ஆசையை இன்னும் தூண்டிவிட்டுதுகள். அந்தக்குளத்தில முதலை இல்லை எண்டதை ஏற்கனவே கனபேரிட்ட கேட்டு உறுதிப்படுத்தியிருந்தம். இனி இறங்கவேண்டியதுதான் மிச்சம்.

'விலாங்கு லேசில கையில அம்பிடாது. வழுக்கிக்கொண்டு போகும்; அதைப்பிடிக்கேக்க பாம்பைப் பிடிக்கிறமாதிரியொரு உணர்வு வரும்; பயப்பிடக்கூடாது; அரியண்டப்படக்கூடாது; பிடிச்சுப்பிடிச்சு கரைக்கு எறியவேண்டியதுதான்'
எண்டு திட்டங்கள் விளங்கப்படுத்தி அணி தயாராயிட்டுது. அந்த அணியில நான்தான் இளையவன். எண்டாலும் வளத்தி எண்டபடியா கூட்டத்தில சேத்திருந்தாங்கள். கரையில நாலுபேர் நிக்க நாங்கள் நாலுபேர் சேத்துக்க இறங்கிறதெண்டு முடிவாயிட்டுது. தூரத்திலயிருந்து பாக்க எதுவும் தெரியேல. ஆனா கிட்டவரேக்கதான் குளத்தின்ர நாத்தம் மூக்கை அடிச்சுது. ஏற்கனவே மீ்னகள் செத்துக்கிடந்தது தெரிஞ்சுது. குளத்தில தண்ணியே இல்லை, வெறும் சேறுதான். சேறடிச்ச வயல்மாதிரி கறுத்த நிறத்தில கிடந்தது.
நடுவில கொஞ்ச இடத்தைவிட்டு சுத்திவர எருமைகள் படுத்துக்கிடந்தன. ஒருபக்கத்தில கிடந்த எருமைகளை கஸ்டப்பட்டு எழுப்பிக் கலைச்சம். எழுப்பிக்கலைச்சதில ஏற்கனவே சேறாக்கிடந்த இடம் இன்னும் நல்லாப் பதப்பட்டிருந்திச்சு;-).
அந்தப்பாதையாலதான் உள்ள இறங்கவேணும்.

சேறையும் நாத்தத்தையும் நினைச்சா ஒருமாதிரியிருந்திச்சு. உதைப்பாத்தா முடியுமோ? நாலுபேரும் சேந்து இறங்கினம். முழங்காலளவு சேத்திலயே கையால துலாவி ரெண்டு மூண்டு விலாங்கு பிடிச்சாச்சு. எண்டாலும் நடுவிலதான் நிறைய விலாங்குகள் மினுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் முன்னேறினோம். ஆனா நினைச்சமாதிரியில்லை. ஒரு காலடி எடுத்துவைக்கவே நிறைய கஸ்டப்பட வேண்டியிருந்தது. அடியில் அப்படியான சதுப்பு. புதைந்த காலை மேலே இழுக்க உன்னினால் மற்றக்கால் இன்னும் அதிகம் புதையும்.
இப்போது இடுப்பளவு சேத்தில் நிக்கிறோம். மீன்கள் மாட்டுப்பட்டன. ஆனால் ஓரடிதானும் எடுத்துவைக்க முடியாது. பிடித்தமீனை கரைக்கு எறியிறதுக்குக்கூட முடியாத நிலை. ஒருகாலை எடுத்துவைச்சு பின்பக்கம் திரும்ப முடியாது. ஏற்கனவே அப்பிடி திரும்பின நிலையில நிக்கிற ஒருத்தனிட்ட குடுக்க அவன் கரைக்கு எறிவான். ஆனா அவனின்ர எறி கரைக்குப் போகாது. ரெண்டுகாலும் வேர் விட்டமாதிரி நிண்டுகொண்டு என்னெண்டு கனதூரம் எறியிறது? எறியிறதெல்லாம் கரையிலயிருந்து பத்தடி பதினைஞ்சடி தூரத்தில விழுந்துது. சின்னமீன்கள் மட்டும்தான் கரைக்குப் போயின.

கரையில நிண்டவங்கள் நாலுபேரும் நல்ல நோனாக்கள். எறிஞ்சமீனுகளை சேத்துக்க இறங்கி எடுக்கமாட்டாங்களாம்.
'இன்னும் கொஞ்சம் வீச்சா எறி' எண்டு கொமாண்ட் வேற. நாங்கள் படுற பாட்டைப்பாத்துச் சிரிச்சுக்கொண்டும் நிக்கிறாங்கள். நடுவில நிண்ட நாலுபேருக்கும் ஆத்திரம் ஒருபக்கம்; எப்பிடித் திரும்பிப் போறதெண்ட யோசினை ஒருபக்கம். கால்கள் சோர்ந்து போச்சு. நாரி கடுத்தது. நாலுபேரும் ஒண்டாச் சேந்து திரும்பினம். ஒருவரையொருவர் மாறிமாறி இழுத்தெடுத்து கரைக்கு வந்து சேர்ந்தாச்சு. நோனாக்கள் நாலுபேரையும் பிடிச்சு சேத்துக்குள்ள உருட்டிப்பிரட்டிப் போட்டுத்தான் கூட்டியந்தம். இப்ப நாத்தமொண்டும் அடிக்கேல. கிட்டத்தட்ட ஒரு உரைப்பை விலாங்கு பிடிச்சிருந்தம். தடியில கொழுவிக் காவிக்கொண்டு வந்தம்.

மீன்கறியில சேத்துநாத்தம் வருதெண்டீச்சினம். முழுமீனும் குப்பைக்குத்தான் போனது. எங்களிலயும் நாறுது எண்டினம். நல்லவேளை குப்பையில போடேல. ஆனா அதைவிட கொடுமை நடந்தது. மூண்டுநாளா யாருமே எங்களை அண்டேல. அந்தளவுக்கு நாறினோமாம். ஆனா எங்களுக்கு எந்த நாத்தமும் தெரியேல.
சவுக்காரம் நெருப்பு விலை விக்கேக்க டெற்றோல் போட்டுக் குளிச்சம். பிரியோசினமில்லை.
ஒரு மனுசன்ர கதையக்கேட்டு சாம்பல் போட்டு பொச்சுமட்டையால உரஞ்சிக் குளிச்சம். ஓரளவு பயனிருந்தது.
நானெண்டாலும் பரவாயில்லை. எங்களில ஒருத்தனை வீட்டுக்குள்ளயே விடேல. அவன்ர வீட்டுப் பின்பத்தியிலயே உடுப்பெல்லாம் தூக்கிப்போட்டு அங்கயே சிங்கனுக்குச் சாப்பாடெல்லாம் வச்சுவிட்ட கொடுமை நடந்தது.

எங்களுக்கு இண்டைவரைக்கும் விளங்காத விசயமென்னெண்டா, அதே குளத்துச்சேத்தில நாள்முழுக்கக் கிடக்கிற எருமைகளை அண்டிற சனம், அதுகளிலயிருந்தே பாலெடுத்துப் பாவிக்கிற சனம், எங்களுக்கு மட்டும் ஏன் இப்பிடி கொடுமை செய்தது எண்டதுதான். அந்த மூண்டுநாளா கவட்டுக்கயும் காலிலயும் சொறிசொறியெண்டு சொறிஞ்சு வந்த வேதனையை விட இதுதான் அதிக வேதனை.


[பதிவுக்கும் இந்தப்படத்துக்கும் நேரடியாத் தொடர்பில்லை. ஆனா முத்தையன்கட்டுப் பற்றிச் சொல்ல வந்திட்டதால இப்படம் பொருத்தம்தான். இது முத்தையன்கட்டுத் தவறணைகளில ஒண்டு.]
(பிளா பற்றித் தெரியாத அம்மணியள் பாத்துத் தெரிஞ்சு கொள்ளுங்கோ)
_______________________________
படங்களுக்கு நன்றி: அருச்சுனா

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, February 07, 2007

நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்

குரற்பதிவும் இடப்பட்டுள்ளது.
கேட்டுக்கொண்டே வாசியுங்கள்.

EnKavithaihal.mp3


கவிதை ஒன்று - விலகுகிறது இருள்

நதி,
விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி
அவர்களின் மொழியிலேயே
அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
சுகுணா திவாகர்
கூறிய வியப்புத்தான் -
எழுத்து நடையைப்பார்த்து-
எனக்கும் வந்தது.
....
புதிய மொழிநடைகள்,
பரந்த வாசிப்பு,
பன்முகப்பட்ட்ட முயற்சிகள்
இல்லாமற்தான்
புலம்பெயர் இலக்கியம்
தேங்கிக்கிடக்கின்றது.
தேக்கமுடைக்கும் புள்ளிகள் -முக்கியமாய்
உங்களைப் போன்ற
பெண்படைப்பாளிகளிடமிருந்து
புலத்தில்(?) ஆரம்பிப்பது
உண்மையிலேயே
மகிழ்ச்சி தருகின்றது.

ஈழத்துக் கவிதைகளுக்கு
ஒருகாலத்தில்
தமிழ்ச்சூழலில் மதிப்பிருந்ததுபோல
இனி மீண்டும் வருவதாயிருந்தால்
அது புலத்தில்/ஈழத்தில்
எழுதும்
பெண்படைப்பாளிகளால்தான்
வரமுடியும் என்று
யோசித்துக்கொண்டிருந்தேன்.

இருள்
விலகுகிறது போலும் :-)..

~~~~~~~~~~~~~~~~~
கவிதை இரண்டு -ஏன் வரவில்லை பாராட்டு?

இந்த மாதிரியான
நல்ல கதைகளைத் தேடி
ஏன் அதிகமும்
பாராட்டுகள்
வருவதில்லை?
சிந்தாநதி
பங்காளி
போன்ற
உங்கள் ரசிகப்பரிவாரங்கள்
எங்கே?
ஒருவேளை
நான் பாராட்டினால்
அதிகமாய்
பாராட்டுக் கொமொண்ட்கள்
குவியுமோ என்னவோ?

_________________________________
மேலே இடப்பட்டவை கவிதையா என்று சந்தேகம் கொள்பவர்கள் தயவு செய்து என் குரற்பதிவைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கவும்.
_________________________________
"வசந்தன், சுகுனாதிவாகர், டிசே போன்ற பெரிய ஆட்களெல்லாம் நிறையச் சொல்லிவிட்டபடியால்"
என்று என்னையும் மற்றவர்களுடன் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட்ட அம்மணி செல்வநாயகியின் வாக்குப் பொய்க்கக் கூடாதென்பதற்காக சிரமப்பட்டு நானெடுத்த முயற்சியிது.
ஆம்! நானும் பெரிய அள்தான்.

இதன் முதற்கட்டமாக நானெழுதிய இரு கவிதைகளை இங்குத் தந்துள்ளேன்.
கவிதை எழுதியது நானென்றாலும் அதன் பாடுபொருள், என்னோடு 'பெரிய மனிதர்கள்' பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மற்ற இருவருக்குமுரியது.
தமிழ்நதியின் "அந்த எசமாடன் கேக்கட்டும்" என்ற பதிவில் அவர்கள் இருவரும் இட்ட பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து நானெழுதிய கவிதைகளே மேலே தரப்பட்டவை.

பெரிய ஆளென்று உறுதிப்படுத்தும் அடுத்த கட்டம் கதையெழுதுவதுதான்.
யாருடைய கருத்தாவது மாட்டாமலா போய்விடும்?

எதிர்பார்த்திருங்கள் "நான் பெரிய ஆள்-2".
அதுவரை வணக்கம் கூறிவிடைபெறுவது

அ.ஆ.இ. வசந்தன்.........

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 23, 2007

கதைத்தல் - பேசுதல்

'கதைத்தல்' தொடர்பில் எனக்கு அண்மையில் ஒரு குழப்பம் வந்தது.
இச்சொல்லை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் பயன்படுத்துகிறோம்.
பேசுதல் என்பதற்கு எம்மிடையே 'திட்டுதல்' என்ற ஒரு பொருளுமுண்டு.

இந்த 'கதைத்தல்' என்பதை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அண்மையில் கேட்ட ஒருபாடல் அக்கருத்தைக் குழப்பிவிட்டது.
வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்வருகிறது.
'பார்த்த முதல்நாளே' என்று தொடங்கும் அப்பாடலில் இரண்டாவது சரணத்தில் ஒருவரி வருகிறது இப்படி:

கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒருபெண்ணும் நீதான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒருபெண்ணும் நீதான்"

இதில், 'கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்' என்று வரும் வரியில் நாங்கள் பயன்படுத்தும் பொருளில் 'கதைத்தல்' வருகிறது.
இது தமிழகத்திலும் இருக்கும் வழக்கா? குறைந்தபட்சம் சில ஊர்களிலாவது பயன்பாட்டிலிருக்கும் சாத்தியமுண்டா? அல்லது ஈழத்தமிழ் வழக்குத்தான் பாடலிற் புகுந்ததா?

பாடலை எழுதியவர் தாமரை என்று நான் கருதுவதால் இரண்டாவது சாத்தியமென்று நம்ப இடமுண்டு.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, January 08, 2007

உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு

உச்சரிப்புத் தொடர்பான ஒலிப்பதிவுகளை இணைத்துள்ளேன். இருபகுதிகளாக உள்ள ஒலிக்கோப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஒலிக்கோப்புக்கள் இணைத்துள்ளேன். தரவிறக்கிக் கேட்க இறுதியில் இணைப்புக்கொடுத்துள்ளேன். ஒலிப்பதிவுகளைக் கேட்டுக்கொண்டே பதிவைப் படிப்பது பயனளிக்கும்.

பகுதி ஒன்று




பகுதி இரண்டு







தமிழ் வலைப்பதிவுகளில் நீண்டகாலமாகவே ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஈழத்தமிழர் அவற்றைப் பலுக்கும் விதம் தொடர்பில் - குறிப்பாக 'ர'கரத்தைச் செருகுதல் தொடர்பாக சர்ச்சைகள், பதிவுகள், பின்னூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே நீண்ட பதிவுகள், பலபல பின்னூட்டங்கள் என்று எழுதித் தள்ளியாயிற்று. என்றாலும் சீரான கால இடைவெளியில் யாராவது ஒருவர் இந்தப் பிரச்சினையை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்.

எனது முடிபு என்னவென்றால், தமிழில்தான் எங்களுக்குள் வேறுபாடுண்டு. அதுதான் அடிப்படை. அந்த வேறுபாடுதான் பிறமொழிச் சொற்களை தமிழிற் பலுக்கும்போதும் வருகிறது.
சரி, தமிழிற் சில சொற்களை நாங்கள் எப்படி உச்சரிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கூடாக ஒரு தெளிவைப் புகுத்த விரும்புகிறேன்.

அதற்குமுன், இதுதான் சரியென்று நான் சொல்லவரவில்லை. சில ஈழத்தவர்களின் பின்னூட்டங்கள் இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவை மிகத் தவறானவையென்பதை திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன்.

அதேபோல் ஈழத்தமிழ் என மற்றவர்களால் உணரப்பட்டது பொதுவாக யாழ்ப்பாணத் தமிழே என்பதையும், ஈழத்துள்ளேயே பிரதேசங்களைப்பொறுத்து உச்சரிப்புகள் மாறுபடுமென்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
அந்தவகையில் இந்த 'ர'கர சிக்கல்கூட யாழ்ப்பாணத் தமிழருக்குரியதென்று சொல்லிக்கொண்டு மேற்செல்கிறேன். ஆனால் மயூரன் சொன்னதுபோல் 'ர'கர விசயத்தில் திருகோணமலைக்காரர் யாழ்ப்பாணத்தவர் போல் உச்சரிப்பதோ எழுதுவதோ இல்லையென்தை என்னால் இன்றுவரை நம்ப முடியவில்லை. திருகோணமலைக்காரராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட மலைநாடான், பெயரிலி போன்றோர் இப்போதுவரை நான் எழுதுவபோல், - யாழ்ப்பாணத்தார் எழுதுவதுபோற்றான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையோடு ஒத்துப்போதல் என்பதை இதற்குக் காரணமாகச் சொன்னாற்கூட பெயரிலி விசயத்தில் இது சாத்தியமற்றதென்றே நம்புகிறேன்.

யாப்பாணத்தில் 'ர'கர உச்சரிப்பு சிறுவயதிலிருந்து அறுத்து உறுத்துச் சொல்லப்படுமொன்று. இந்த மெல்லின எழுத்தைப் பெரும்பாலான இடங்களில் வல்லின உச்சரிப்பாகவே சொல்வோம். அவ்வுச்சரிப்பில் தனிக்கவனம் செலுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். என் பாலர் வகுப்பில் 'ர'கரச் சொற்கள் தனிக்கவனமெடுத்துச் சொல்லித் தரப்பட்டது இப்போது எனக்கு நல்ல ஞாபகம். உறுப்பெழுத்து என்று தனிப்பாடநேரம் ஒதுக்கியது போலவே உச்சரிப்புக்கும் தனிநேரம் ஒதுக்கிச் சொல்லித்தரப்பட்ட நினைவிருக்கிறது. பொதுவாக நான் பார்த்தளவில் இது யாழ்ப்பாணச் சமூகத்தின் மற்ற இடங்களிலும் இருக்கிறது.

இனி சில சொற்களைப் பார்ப்போம்.
அரசு
அரசி
அரக்கன்
அரி
அரிவாள்
கரி
பரி
சரி
முரசு
பரிசு
இரு
எரு
கரு
உரு
நெருக்கு
நொருக்கு
கரும்பு
கருத்து

இப்படித்தான் சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லித் தரப்பட்டது. இன்றுவரை நான் பெருமளவுக்கு மாறாமல் அப்படியேதான் உச்சரித்து வருகிறேன். சமகாலத்தவர்களே நிறையப்பேர் ஓரளவு மாறிவிட்டார்கள்.

பலவிடங்களில் தமிழகத்தாருக்கும் ஈழத்தாருக்கும் வித்தியாசமேயில்லாமலும் 'ர'கரம் உச்சரிக்கப்படுகிறது.
ராணி என்ற பேரை நான் இன்றுவரை வல்லின உச்சரிப்பிலேயே சொல்லிவருகிறேன். ஆனால் மிகப்பெரும்பான்மையானோர் (வயது முதிர்ந்தவர்களையும் கிராமத்தார்களையும்விட) இடையின ஒலியில் (Rani) என்றுதான் சொல்கிறார்கள்.
இதுபோல்தான் ரவி என்ற பெயரும்.
ரோசா என்ற பூவின் பெயரை எப்படி எழுதுகிறீர்கள், உச்சரிக்கிறீர்கள் என்று பார்த்தால் இருதரப்புமே ஒரேமாதிரித்தான்.

'ர'கர, 'ற'கர உச்சரிப்பைப் பொறுத்தவரை இரண்டு எழுத்துக்குமே தமிழகத்தில் ஓரளவுக்கு ஒரேமாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை நேரிலும் உணர்ந்துள்ளேன். கிளிநொச்சியில் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த சில தமிழறிஞர்கள் சிலரோடு உரையாடியபோது ர, ற போன்ற எழுத்துக்களைக் குறிக்க அவர்கள் சின்ன ற பெரிய ற என்று பல சந்தர்ப்பங்களில் சொன்னார்கள். எங்களிடத்தில் இரண்டெழுத்துக்களையும் இப்படி வேறுபடுத்தும் முறை இல்லவேயில்லை.

அதனால்தானோ என்னவோ வலைப்பதிவுகளில் நான் கவனித்தளவில், அக்கறை - அக்கரை, பொறுப்பு - பொருப்பு, நொருக்கு - நொறுக்கு, பறவாயில்லை - பரவாயில்லை என்பவற்றுக்கு ஈழத்தவர்கள் தெளிவான உச்சரிப்பு வித்தியாசம் வைத்திருப்பதால் மேற்கண்ட தவறுகளைச் செய்யாமலிருக்க, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தொடர்ச்சியாக இச்சொற்கள் மட்டில் தவறாகவே எழுதிக்கொண்டிருக்கும் நிலை உள்ளதென்று நினைக்கிறேன். இது என் அவதானம் மட்டுமே.

அடிப்படையில் தமிழில் 'ர' கரத்தில் இருக்கும் இந்த உச்சரிப்புப் பேதம் தான் வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் வருகிறது. பொதுவாக நாங்கள் 'ர' வரிசை உயிர் மெய்களுக்கு ஆங்கிலத்தின் T என்ற உச்சரிப்பைக் கொண்டிருப்பதாலும் அதையே நியம உச்சரிப்பாகக் கருதுவதாலும் 'ர'கரத்தைப் போட்டு எழுதுகிறோம்.
அதனால்தான் ரிவி, ரின், ரொறண்ரோ, ரிக்கற், ரொம் குறூஸ் என்பவற்றை இடையினத்திலேயே தொடக்கி எழுதுகிறோம். ஆனால் வல்லினத்தில் உச்சரிக்கிறோம். இப்படி எழுதியவற்றை வாசிக்கும்படி தமிழகத்தாரிடம் சொன்னால், அவர்கள் வேறுமாதிரித்தான் உச்சரிப்பார்கள்.

ஆகவே தமிழில் எழுதிய ஒன்றை உச்சரிப்பதில்தான் இருதரப்புக்குமிடையில் வேறுபாடுண்டு.

யாழ்ப்பாணத்தவர் ரிவி என்று எழுவதை தமிழகத்தவர்கள் Reevi என்று உச்சரிப்பார்கள். தமிழகத்தவர்கள் டிவி என்று எழுதுவதை நாங்கள் DV என்றுதான் உச்சரிப்போம். ஆனால் இன்று அவர்களும் DV என்றுதான் உச்சரிக்கிறார்களோ என்ற ஐயம் வருகிறது. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் TV ஐ எப்படி உச்சரிக்கார்கள் என்று கூர்ந்து பார்த்தால் எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. Sun TV என்றா Sun DV என்றா உச்சரிக்கிறார்கள்?
______________________________
இவ்வளவும் போதுமென்று நினைக்கிறேன்.
இங்கு, யாழ்ப்பாணத்தவர் சில சொற்களை எப்படி உச்சரிக்கார்கள், எப்படி உச்சரிக்கப் பழக்கப்பட்டார்கள், அதன்வழியே T என்ற வல்லின உச்சரிப்புக்குரிய நியம வரிவடிவமாக எதைக் கருதுகிறார்கள் என்தையும் ஒலிக்கோப்பைப் பயன்படுத்திச் சொல்லியுள்ளேன்.

சம்பந்தப்பட்ட சில பதிவுகள்:
http://elavasam.blogspot.com/2007/01/blog-post_07.html
http://mauran.blogspot.com/2005/08/blog-post_23.html


_______________________________
மயூரன் முன்பு இதுதொடர்பில் ஒலிப்பதிவு செய்த கோப்பைக் கீழே இணைத்துள்ளேன்.
அதையும் கேளுங்கள்.





தரவிறக்க:
குரற்பதிவு பகுதி -1
குரற்பதிவு பகுதி -2
மயூரனின் குரற்பதிவு

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, December 07, 2006

மிதிவெடி செய்வது எப்படி?

எல்லாரும் அதுசெய்வது எப்படி? இது செய்வது எப்படி? எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம்.
மணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல.

இப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் "எப்படி?" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன்.
நான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன்.
'வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?' எண்டு போன பதிவில எழுதினன்.
இப்ப வேற ஒரு 'எப்படி?ப்' பதிவு.

பதிவில் புதிதாக ஏதுமில்லை. "எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே.
_____________________________________

உங்களுக்கு மிதிவெடியைத் தெரியுமா?
அதைப் பார்த்திருக்கிறீர்களா?
மதிவெடிகளுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு மிதிவெடி முதன்முதல் அறிமுகமானது யாழ்ப்பாணத்தில் 1993 இன் இறுதிப்பகுதியில். மானிப்பாயிலிருந்து யாழ்நகர் நோக்கி வரும்போது, ஆனைக்கோட்டை முடிவில், உயரப்புலச் சந்தியில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது ஞாபகமிருக்கிறதா? அதன் பெயரை யாரும் மறந்துவிட முடியாது. 'சும்மா ரீ ரூம்' (SUMMA TEA ROOM) என்பதுதான் அவ்வுணவகத்தின் பெயர். அதன் பெயரே ஒரு கவர்ச்சியான விசயம்தான். நானறிந்ததிலிருந்து என் அப்பா அம்மா காலத்திலேயே அது பிரபலமான பெயர்தான். மிகச்சிறிய கடைதான். வீதிக்கரையிலிருந்ததால் அதன்வழியால் போய்வரும் எவரையும் வாயூற வைத்துவிடும். யாழ்பபாணத்திலுள்ள மற்ற எந்த உணவகங்களையும்விட அது வித்தியாசமானது. அதிகமான கடலுணவுகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இறால், கணவாய், சிங்கிறால், நண்டு என்று விதம்விதமான கடலுணவுப் பொரியல்களும் கறிகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாவாந்துறையும் காக்கைதீவும் அருகிலிருந்தது அதற்கு வசதியாக இருந்தது. பின்னேரத்தில அந்தக்கடை வலுகலாதியா இருக்கும். கடையோட சேத்தே ஒரு 'பார்' இருந்ததும், கொஞ்சம் தள்ளி பிரபலாமான 2 தவறணைகள் இருந்ததும் அதுக்குக்காரணம்.

சரி. கதைக்கு வருவோம். எனக்கு மிதிவெடி அறிமுகமானதும் இந்த 'சும்மா ரீ ரூமில்' தான். என்ன குழப்புகிறேனா? மதிவெடி எண்டா ஒருவகைச் சாப்பாடு. அதைத்தான் சொல்ல வந்தேன். நாங்கள் வழமையாகச் சாப்பிடும் 'றோல்' வகையைச் சேர்ந்தது. சற்றுப்பெரியது. உள்ளே கூடுதலான கலவைகள் இருக்கும். கட்டாயம் அவித்த முட்டையின் கால்வாசியோ, அதைவிடச் சற்றுப் பெரிய துண்டோ இருக்கும். இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டாலே ஒரு நேரச் சாப்பாடு நிறைந்துவிடும். இதுதான் மிதிவெடி.

ஒருநாள் உதைபந்தாட்டப் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு வரும்போது நண்பனொருவன் (இவன் உயரப்புலத்தில் அந்த சும்மா ரீ ரூமுக்கு அருகில்தான் வசிப்பவன்) சொன்னான் இந்த மதிவெடியைப் பற்றி. அப்போது நாங்களறிந்த மிதிவெடியென்பது கால்நடைகளின் (மனிதர்களும் இதற்குள் அடக்கம்) கால்களைப் கழற்றும் சிறுகண்ணிவெடிகள்தான். அப்போது மிதிவெடி என்ற சிற்றுண்டியைப் பற்றிக் கதைத்தபோது எல்லோரும் சிரித்தோம். இப்படி நாலைந்துமுறை அவன் சொல்லிவிட்டான். ஒருநாள் நக்கல் தாங்காமல் அவனே தான் மதிவெடி வாங்கித்தருவதாகச் சொல்லிக் கூட்டிச்சென்றான். காசைத்தந்து 3 மிதிவெடி வாங்கச்சொல்லி எங்களக் கேட்டான். மிதிவெடி எண்டு கடையில கேட்டு அடிவாங்க வைக்கத்தான் இவன் பிளான் போடுறான் எண்டு நினைச்சு அவனையே வாங்க வைச்சோம். உவன் மிதிவெடி எண்டுதான் கேக்கிறானோ எண்டத உறுதிப்படுத்த நான்தான் கூடப்போனன். என்ன ஆச்சரியம்! மிதிவெடி எண்டுதான் கேட்டான். அவங்களும் தந்தாங்கள். அண்டைக்கே அதின்ர சுவைக்கு அடிமையாயிட்டம். பொருளாதார அடிப்படையிலயும் மலிவாகத்தான் இருந்திச்சு. அப்ப ஒரு மதிவெடி 10 ரூபா. ஏறத்தாள 12 வருசத்துக்குப்பிறகு 5 அல்லது 7 ரூபாதான் அதிகரிச்சிருக்கு. இந்த மிதிவெடிக் கதையை நாங்கள் ஏலுமான அளவுக்குப் பரப்பினம். அப்பிடியும் கனபேர் நம்பேல.
----------------------------------------------------
ஒரு முக்கியமான 'எதிரி'ப்பாடசாலையுடனான உதைபந்தாட்டப்போட்டி அன்று நடந்தது. அதில் வென்றால் 500 ரூபா தருவதாக எங்கள் பாடசாலையின் பரமவிசிறியொருவர் சொல்லியிருந்ததால் ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு வெண்டாச்சு. 500 ரூபாயும் கிடைச்சிட்டுது. வழமையா இப்பிடிக் காசு கிடைச்சா யாழ்நகருக்குள்ளயே ஏதோ ஒரு கூல்பாருக்க பூந்து காசைக்கரைக்கிறதுதான் வழமை. அண்டைக்கு ஒருத்தன் சொன்னான் உந்த மதிவெடிப்பிரச்சினையை இண்டைக்குத் தீர்ப்பமெண்டு. சரியெண்டு வாயையும் வயித்தையும் கட்டிக்கொண்டு சும்மா ரீ ரூம் வந்தாச்சு. 25 மதிவெடி தரச்சொல்லிச் சொன்னம். ஆனா அங்க இருந்தது வெறும் 10 தான். சரியெண்டு அவ்வளவத்தையும் வாங்கி பங்குபோட்டுச் சாப்பிட்டம். விசாரிச்சதில வழமையா 20 அல்லது 25 மதிவெடிதான் ஒருநாளைக்குப் போடுறது எண்டார் கடைக்காரர். அதாவது அந்தநேரத்தில் மதிவெடிக்கான வாடிக்கையாளர் அவ்வளவுதான். அது பிரபலமாகாத காலம்.

நானறிய யாழ் நகருக்குள்ள இந்த மிதிவெடிக்கலாச்சாரம் வரவே நீண்டகாலம் எடுத்திச்சு. பிறகு இடப்பெயர்வோட வன்னிக்கும் வந்திட்டுது. வன்னி தாண்டியும் அது போயிருக்கும் எண்டதில ஐயமில்லை. ஆனா கடைக்குக் கடை அதின்ர தரம், சுவை, விலை எல்லாம் மாறத்தொடங்கீட்டுது. அதின்ர பெயர்தான் மாறேலயே ஒழிய அடிப்படைக் கட்டமைப்பு ஆளாளுக்கு மாறிப்போச்சு.
------------------------------------------------------
சரி. ஏன் இந்தப் பேர் வந்தது? எனக்குச் சரியாத் தெரியேல. இது சம்பந்தமா பெடியளுக்குள் அடிக்கடி கதைச்ச ஞாபகம் வருது. அப்பவே 'சும்மா ரீ ரூம்' முதலாளி அன்ரனிட்டயே கேட்டிருக்கலாம். அவர்எங்கயிருந்து இதை அறிஞ்சார் எண்ட விவரங்கள் சேகரிச்சிருக்கலாம். எல்லாம் தவற விட்டாச்சு. ஒரு கவர்ச்சிக்காகத்தான் அந்தப்பேர் வந்திருக்கலாம். சனங்களுக்குப் போர் சம்பந்தமான சொற்களை தங்கட வாழ்க்கையில பாவிக்கிறது வழமையாயிருந்திச்சு. தங்கட சைக்கிளுக்கோ, மோட்டச்சைக்கிளுக்கோ குண்டுவீச்சு விமானங்களின்ர பேரை வைக்கிறது, ஆக்களுக்குப் பட்டப்பேர் வைக்கேக்ககூட ஆயுதங்களின்ர கடற்கல, வான்கலப் பெயர்களை வைக்கிறது எண்டு வழமை இருந்திச்சு. அதின்ர ஒரு தொடர்ச்சியா இந்த மதிவெடியும் வந்திருக்கலாம். சந்திரிக்கா சாறி, ரம்பா ரொட்டி, நதியா சாறி போல, குமரப்பா குண்டு, கடாபி ரொபி எண்டும் எங்கட சனத்திட்ட பெயர்கள் உலாவினது.

இன்னொண்டும் ஞாபகம் வருது. வெளியிற் கழிக்கப்பட் மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இப்பவும் இருக்கு. ஆனா அதுக்கு வலுவான காரணமிருக்கு. ஆனா இந்தச் சிற்றுண்டிக்கு???
ஆருக்காவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ.
***************
மூலப்பதிவு
***************


Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, October 21, 2006

வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1

வன்னியில் நான் வாழ்ந்த இடங்களில் ஒன்று. என்னை அதிகம் கவர்ந்த இடம். ஏற்கனவே சில இடங்களில் முத்தையன்கட்டைச் சிலாகித்துச் சொல்லியிருக்கிறேன். கிராமம் என்றும் சொல்ல முடியாது. பட்டினம் என்றும் சொல்ல முடியாது. ஆனால் மிகப்பரந்த நிலப்பரப்பைக் கொண்டது. முத்தையன்கட்டுக்குளம் என்ற வன்னியின் - ஏன் வட இலங்கையின் மிகப்பெரும் நீர்வளமொன்றை மையப்படுத்தியே அவ்விடம் பிரசித்தம்.

சில நாட்களுக்கு முன் (13.10.2006) அன்று இந்நிலபரப்பின்மீது சிறிலங்கா வான்படை மிகக்கோரமான வான்தாக்குதலைச் செய்துள்ளது. காலை ஏழு மணிதொடக்கம் ஒன்பது மணிவரையான இரண்டு மணித்தியால இடைவெளிக்குள் 48 குண்டுகளை வீசியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு குண்டும் குறைந்தபட்சம் 250 கிலோகிராம் கொண்டவை.
முழுப்போர்க்காலத்திலும் ஈழத்தில் வாழ்ந்தவன் என்றவகையில் இப்படியான அகோர வான்தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதன்முறை என்று நினைக்கிறேன்.
ஒன்றுமட்டும் விளங்கிக்கொள்ள முடிந்தது, கடந்த பதினோராம் திகதி முகமாலை - கிளாலியில் சிங்களப் படைகளுக்கு நடந்தது எவ்வளவு தாக்கம் நிறைந்ததென்று.

முதற்கட்டத் தகவலின்படி இத்தாக்குதலில் பல மாடுகள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. போராளிகளுக்கோ மக்களுக்கோ ஏதும் சேதங்களிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் நிறைய வயல், தோட்ட நிலங்கள் தாக்குதலுக்குள்ளானதாகத் தெரிய வருகிறது.
செய்தி கேட்டதும் ஒருமாதிரித்தான் இருந்தது. உடனடியாக ஏதாவது எழுதத் தோன்றினாலும் சற்று ஆறப்போட்டு அவ்விடம் பற்றி சிலவற்றைப் பதியலாம் என்று நினைக்கிறேன்.

பொதுவாக வன்னி என்றாலே மாடுகள் அதிகமுள்ள இடம்தான். அதிலும் முத்தையன்கட்டு இன்னுமதிகம். பெரும்பாலும் வீடுகளிலோ பட்டிகளிலோ அவை இருப்பதில்லை. வீதிகளில் நூற்றுக்கணக்கில் திரியும், வீதிகளிலேயே படுத்தெழும்பும். வன்னி வந்த தொடக்கத்தில் அதிகாலையில் வீதியால் போவது பெரிய கரைச்சல். சிலவேளைகளில் சுவாரசியமாகவும் இருந்தது. சைக்கிளில் போபவர்கள் ஒருவாறு சமாளித்துப் போய்விடலாம். வாகனக்காரரின் பாடு பெரும்பாடு. காலை ஏழுமணிவரைக்கும் மாடுகள் வீதியை விட்டு நகரா. அந்தந்த நிலையிலேயே படுத்திருக்கும். வாகனத்தை எவ்வளவுதான் உறுமி, சத்தம் போட்டாலும் அவை நகரா. அதிலும் எருமைகள் இன்னும் சுத்தம். எழும்பக்கூட மாட்டா. யாராவது இறங்கிப்போய் எழுப்பிக் கலைத்தால்தான் உண்டு. பின்பு போகப்போக, சனத்தொகையும் அடர்த்தியாக மாடுகளும் கொஞ்சம் திருந்திவிட்டன.


ஓரிருவர் ஐநூறு, அறுநூறு மாடுகள் என்றுகூட வைத்திருந்தார்கள். அண்ணளவாகத்தான மாடுகளின் கணக்குச் சொல்வார்கள். நூறு மாடுகள்வரை வீட்டில் வைத்திருப்பார்கள், மிகுதியை முத்தையன்கட்டுக் குளத்தின் அக்கரைக்கு அனுப்பிவிடுவார்களாம். அவை பல்கிப்பெருகும், சிலதுகள் வேட்டைக்குச் சுடுபடும். சில மாதங்களின்பின் அந்தக் கூட்டத்தை வரவழைத்து புதிதான அங்கத்தவர்களுக்குக் குறிசுட்டுவிடுவார்கள். நாங்கள் 'குழுவன்' என்று சொல்லும் மாடுகள் இப்படியானவற்றிலிருந்து பிரிந்து காட்டிலேயே வளர்ந்துவிடுபவைதாம். காட்டெருமை என்றும் சொல்வார்கள், ஆனால் பேச்சுவழக்கில் குழுவன்தான்.

வேட்டையில் ஒரு நடைமுறை பின்பற்றப்படும். குறிசுடப்படாத மாடுகள் எல்லாம் குழுவன்கள்தாம். பிரச்சினை ஏதும் வராது. மிக ஆபத்தானவை என்று செவிவழியாகக் கேள்விப்பட்டாலும் இவற்றால் தாக்கப்பட்டு காயமடைந்ததாக நான் கேள்விப்படவில்லை. ஆனால் ஒருமுறை இப்படியான மாட்டுக்கூட்டத்தால் நாக்குத் தொங்கத் துரத்தப்பட்ட அனுபவமுண்டு.

யாழ்ப்பாண நடைமுறைகளுக்கும் வன்னி நடைமுறைகளுக்கும் பல விசயங்களில் நிறைய வித்தியாசங்களுண்டு. முதன்முதல் இவற்றை எதிர்கொள்ளும்போது ஆச்சரியப்பட்டதுண்டு. ஆடுமாடுகள் விசயத்திலும் அப்படித்தான்.
யாழ்ப்பாணத்தில் ஓர் ஆடு குட்டி போடுவதென்றாலோ அல்லது ஒரு மாடு கன்று போடுவதென்றாலோ பெரிய விசயம். அக்கம்பக்கத்துக்குச் சொல்வதுண்டு. மற்ற வீட்டாரும் ஒருமுறை வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போவர்.
ஆனால் வன்னியில் அதை யாரும் கணக்கெடுப்பதில்லை. பெரும்பாலான ஆடுமாடுகள் தாஙகள் மேய்ச்சலுக்குப் போன இடங்களிலேயே குட்டியையோ கன்றையோ ஈன்றுவிட்டு அவற்றை பத்திரமாக வீட்டுக்கும் கூட்டிவந்துவிடுங்கள். உண்மையில் முதலில் இது பெரிய ஆச்சரியமாகத்தான் இருந்தது.
கற்சிலைமடுவில் எங்களுக்கு எதிர்வீட்டில் பத்துப்பதினைந்து ஆடுகள் இருந்தன. ஓர் அழகான செவியாடு நிறைமாசமா இருந்தது. இரணைக்குட்டி போடுமென்றார்கள். ஏற்கனவே அதேவீட்டில் இன்னோர் ஆடு ஒரேதடவையில் மூன்றுகுட்டி போட்டு, அதிலொன்றுக்குக் குறிப்பிட்ட காலம் 'போச்சி'யில் பால்பருக்கிய சுவாரசியமான சம்பவம் நடந்ததாலோ என்னவோ இந்த ஆட்டின் பிரசவத்திலும் எனக்கு ஆர்வம் இருந்தது. கடைசி இரண்டுமூன்று நாட்கள், ஆடு குட்டி போட்டிட்டுதா எண்டு விசாரித்திருந்தேன். ஒருமாதிரியாகப் பார்ததார்கள்.
அண்டைக்குப் பொழுதுபட பேப்பர் வாங்கப்போனபோது பார்த்தால் அந்த ஆட்டைக்காணேல. விசாரிச்சா அது வீட்டுக்கு வந்துசேரேலயாம். மற்றதுகள் எல்லாம் வந்திட்டுதுகள்.
'ஆரேன் தேடப்போனதோ?' எண்டு கேட்டால், இல்லயாம். 'அது ஈண்டிருக்கும்போல. விடிய வந்து சேர்ந்திடும்' எண்டு அலட்சியமான பதில்வேற. குழப்பமாகத்தான் இருந்தது எண்டாலும் கிட்டத்தட்ட பெரும்பாலான ஆக்கள் இப்பிடித்தான் எண்டதால பேசாமல் இருந்திட்டன்..
அடுத்தநாள் காலம ஒரு பத்துமணிபோல ரெண்டுகுட்டிகளோட செவியாடு வீட்டுக்கு வந்திட்டுது.

யாழ்ப்பாணத்தில குட்டியோ கண்டோ ஈண்ட பிறகு சீம்பால் ('கடும்பு' எண்டுதான் எங்கட வீட்டுப்பக்கம் சொல்லிறதா ஞாபகம். சரிதானே?)எடுத்துக்காய்ச்சிறது முக்கியமான விசயம். 'எள்ளெண்டாலும் ஏழாப்பகிர்' எண்டமாதிரி சொட்டுச் சொட்டா எண்டாலும் சண்டைபோட்டு பங்கிடுவம். வன்னியில பெரும்பாலும் அந்தக் கதையே இல்லை. இருந்தாலும் விடுவமே? அக்கம்பக்கத்தில குட்டியோ கண்டோ போட்டால் சொல்லிவைச்சு கடும்பு காய்ச்சிப்போடுவம். அவையள் என்ன நினைச்சிருப்பினம எண்டு தெரியேல.
குட்டிகளுக்கோ கண்டுகளுக்கோ அந்தப்பாலை விட்டா அதுகளுக்கு வருததம் வந்திடும் எண்டு சின்ன வயசில எனக்கு (எனக்கென்ன - மற்றவர்களுக்கும் இப்பிடித்தான் கிடைச்சிருக்கும்) விளக்கம் தரப்பட்டதாக நினைவு.

யாழ்ப்பாணத்தில் குழைகட்டியே ஆடு வளத்துப்போடுவம். பொழுதுபட்டா குழைமுறிக்கிறது ஒரு கடமை. ஊரான்வீட்டு வேலியில குழைமுறிச்சு பேச்சு வாங்கிறதும் கலைபடுறதும் இடைக்கிடை நடக்கும். எங்கட வீட்டு ஆட்டுக்கு வாதனாராணிக்குழை குடுத்துப் பழக்கினப்பிறகு அதுக்குப் பூவரசங்குழை பிடிக்காமல் போட்டுது. யாழ்ப்பாணததில பூவரசை விட்டா வேற நாதி? கொஞ்சநாள் பட்டினி கிடந்திட்டு பூவரசுக்கே வந்திட்டுது எங்கட ஆடு.
வன்னியில குழைகட்டி வளக்கிறது எண்ட கதைக்கே இடமில்லை.
_______________________________________________

முத்தையன்கட்டு என்று எடுத்துக்கொண்டால் சிறிய இடத்தைத் தவிர மக்கள் நெருக்கமென்பது குறைவு. ஒரு வீதியை மையமாக வைத்து இரண்டொரு கோவில்கள், சில கடைகள், அத்தோடு இணைந்த சில வீடுகள் என்று சனம் நெருக்கமாயுள்ள சிறிய பகுதியுண்டு. மற்றும்படி வயல்களையும் தோட்டங்களையும் வாய்க்கால்களையும் மையமாக வைத்து மிகமிக ஐதான சனப்பரம்பலுடைய இடம் அது. யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்தபின் கணிசமான யாழ்ப்பாணத்தவர்கள் ஊர் திரும்பியதால் இன்னுமின்னும் ஐதாகிக்கொண்டு வந்தது அவ்விடம்.

முத்தையன்கட்டுக் குளத்தின் துலுசுக் கதவுகள் பழுதடைந்து பெருமளவு நீர் ஆண்டுமுழுவதும் வீணாக வெளியேறிக்கொண்டிருந்தாலும் சிறுபோக நெல்விளைச்சலுக்கோ தோட்டப் பயிர்ச்செய்கைக்கோ வஞ்சகம் இல்லாமல் நீர் வழங்கிக்கொண்டிருந்தது முத்தையன்கட்டுக்குளம். அக்குளத்தின் கீழான நூறுவீத விவசாய நிலங்களும் பயிச்செய்கைக்குப் பயன்படுத்தப்படவில்லையென்பதும் ஒரு காரணம்.

[முத்தையன்கட்டுக் குளத்தின் ஒருபகுதியின் பின்னேரத் தோற்றம்.]

மாரிகாலத்தில் குளம்நிரம்புவதால் நீர் வெளியேற்றப்படும்போதும் சிறுபோகத்தின்போது நீர் வெளியேற்றப்படும்போதும் முத்தையன்கட்டுக்குளத்தின் வாய்க்கால்களில்தான் பெருமளவு மக்களின் குளிப்பு. சிறுவர் சிறுமிகளுக்கு அது பெரும் கொண்டாட்டம். பெரியவர்கள்கூட அவ்வாய்க்காலில் குளிப்பதே வழக்கம். முத்தையன்கட்டுக்குளத்திற்கு இரு பெரும் வாய்க்கால்கள். இடதுகரை, வலதுகரை என்று பெயர்கள்.

[முத்தையன்கட்டு வாய்க்கால்]

அவ்வாய்க்கால்கள் பல கிலோமீற்றர்களுக்கு நீரைக்கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. இடையிடையே பல சிறுகுளங்களை நிரப்பியபடியே போகின்றன. இக்குளங்களைவிட வாய்க்கால்களின் இடையில் நீர் தேங்கி நிற்கும் அகண்ட பரப்புக்கள் வரும். அவற்றை "மோட்டை" என்றுதான் சொல்வார்கள். யாரும் 'குளம்' என்று சொல்வதில்லை. யாழ்ப்பாணத்திலென்றால் அவையெல்லாம் குளங்கள்தாம். ஆரியகுளம் அளவுக்கு நீர் தேங்கிநின்றாற்கூட அவை மோட்டை என்றுதான் அழைக்கப்படுகின்றன.

பெருமளவு நெற்பயிர்ச்செய்கை நிலங்கள் 'சேறடித்து' விதைக்கப்படுவன. 'சேறடிப்பு' என்றுதான் அச்செயற்பாடு மக்களாற் குறிப்பிடப்படுகிறது. அதாவது வயலில் பலநாட்கள் நீரைத் தேக்கிவைத்து, புற்களை அழுகவிட்டு, பின் உழுது சேறாக்குவார்கள். கறுத்த நிறத்தில் குழாம்பாணியாக இருக்கும். குறைந்தபட்சம் முக்கால் அடி ஆழத்துக்குப் புதையும்வகையில் வயல்நிலம் கறுப்பு நிறத்தில் கூழாக்கப்பட்டிருக்கும். பின் விதைநெல்லைத் தூவிவிடுவார்கள்.

இதற்கு எருமை மாடுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. சிலர் உழவு இயந்திரத்தைப் பாவிப்பார்கள். எருமையால் உழுவதெல்லாம் எங்களுக்குப் புதிது. (எருமையே எங்களுக்குப் புதுசுதானே?) எருமைகளை நினைத்து ஆச்சரியப்பட்டுவதுண்டு. அந்தச் சேற்றுக்குள் எங்களால் நடக்க முடியாது. உழுபவர் சேறடிக்கும் கலைப்பைக்கு மேல் ஏறிநின்றுகொள்வார். சாதாரண கலப்பையிலிருந்து இது வேறுபட்டது. நல்ல அகலமானது. உழுபவர் கையில் ஒரு வானொலிப்பெட்டியோடு அவர் சங்கமமாகிவிடுவார். எருமைகள் அவைபாட்டுக்குச் சுத்திச்சுத்தி இழுத்துக்கொண்டிருப்பினம்.

புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில மன்னாகண்டல் சந்தி எண்டு ஒரு சந்தி இருக்கு. அதிலயிருந்து ஒருபாதைமுத்தையன்கட்டுக்கு வருது. அந்தச் சந்தியில இருந்து குளத்துக்கு வரேக்க பாதையின்ர வலப்பக்கம் குளத்தின்ர இடதுகரை வாய்க்கால் வந்துகொண்டிருக்கும். வாய்க்காலை அடுத்து பெருங்காடு. இடைக்கிடை நாலைஞ்சு மோட்டைகளும் இருக்கு. இடப்பக்கம் வயல்வெளிகள். வாற பாதையில பாத்துக்கொண்டுவந்தா பகல் நேரத்தில வலப்பக்கம் இருக்கிற வாய்க்காலுக்க மூக்கை மட்டும் வெளிய நீட்டிக்கொண்டு எருமைகள் கூட்டம்கூட்டமாப் படுத்திருக்கும். இரவில அப்பிடியே ஏறி பாதையில படுத்திருக்கும். எங்க மேயுது, எப்ப மேயுது எண்டு தெரியாது.

முத்தையன்கட்டுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கையில் நெல்தான் முதன்மையானது. பெரும்போகம் சிறுபோகம் என இருபோகங்களும் விதைப்பவர்கள் இருக்கிறார்கள். இதைவிட தோட்டப்பயிர்ச்செய்கையுமுண்டு. சில மேட்டுநிலங்களில் நீரிறைப்பு இயந்திரத்தின் உதவியுடன் வாய்க்காலில் இருந்து நீரிறைத்துத் தோட்டம் செய்வார்கள். பெரும்பாலான மரக்கறி வகைகள் செய்கை பண்ணப்படும்.
நெல்லுக்கு அடுத்தபடியாக என்றுபார்த்தால் கச்சான் (வேர்க்கடலை) செய்கையைச் சொல்லலாம். சிறுபோகத்திலேயே பெருமளவு கச்சான் செய்கை பண்ணப்படுகிறது. அடுத்த நிலையில் சோளம், மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது எனலாம்.

ஏற்கனவே சொன்னதுபோல வீதியின் ஒருபுறம் பிரதான வாய்க்காலும் மற்றப்பக்கம் பயிர்ச்செய்கை நிலங்களும் இருக்கின்றன. வீதியின் இடையிடையே குழாய்கள், மதகுகள் மூலம் நீர் வீதியைக்கடந்து பயிரிச்செய்கை நிலப்பக்கம் போகிறது. ஆனால் சில இடங்கிளில் அந்த வசதி சரியான முறையில் இல்லை. அந்த நிலக்காரர்கள் நேரடியா வீதியைக்கடந்து நீரை எடுக்க வேண்டும். வீதியோ வாய்க்காலின் நீர்மட்டத்திலிருந்து சுமார் பத்து அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட்து. குழாயும் வீதியின் மேலாகத்தான் செல்ல வேண்டும்.
ஆனால் வாய்க்காலின் நீர்மட்டம் வயற்பகுதியைவிட உயரமாகவே இருக்கும்.இந்த இடங்களில் இயந்திரமில்லாமல் நீர்ப்பாசனம் செய்வதைப் பார்ப்பது சுவாரசியமானது.

வளையக்கூடிய குழாய்முழுவதும் நீரை நிறைத்துவிட்டு இரு முனைகளையும் பொத்தியபடி ஒருவர் வாய்க்காலிலும் மற்றவர் வீதியின் மறுபக்கம் வயற்பகுதியிலும் நிற்பார்கள். வாய்க்காற்பக்கமுள்ளவர் நீருக்குள் குழாய் முனையை அமிழ்த்தியபின் ஒன்று, இரண்டு, மூன்று என்று கத்தி கையை எடுப்பார். அதேநேரம் மறுபக்கத்தில் இருப்பவரும் கையை எடுக்க வேண்டும். வாய்க்கால் நீர் தொடர்ச்சியாக குழாய்வழியாக வந்துகொண்டிருக்கும். கொஞ்சம் முந்திப்பிந்தினாலும் நீர் தொடர்ச்சியாக வெளியேறாது.
சிலர் இதில் தேர்ச்சியானவர்கள். முதல்முறையிலேயே சரியாகச் செய்துவிடுவர். சிலருக்கு நாலைந்து தடவைகள் எடுக்கும்.

நாங்கள் சிலர் பொழுதுபோக்காக இதைச் செய்து பார்ப்பதுண்டு. ஒருமுறை அரைமணித்தியாலம் முயன்றும் சரிவரவில்லை.
என்ன சிக்கலென்றால் ஒருமுறை பிசகினாலும் பிறகு குழாய் முழுவதும் (கிட்டத்தட்ட இருபத்தைந்துஅடி நீளம்) நீரை நிரப்பித்தான் அடுத்த தடவை முயலவேண்டும்.
___________________________________________
முத்தையன்கட்டில இருக்கிற இன்னொரு தொழில் மீன்பிடிக்கிறது. பலருக்கு அது முழுநேரத் தொழில். எங்களப்போல ஆக்களுக்கு அதுவொரு பொழுதுபோக்கு. அதுபற்றியும் இன்னும் சிலதுகள் பற்றியும் இன்னொருக்கா...
___________________________________________

படங்கள்: அருச்சுனா தளம்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, June 06, 2005

கள்ளுக் குடிக்க வாறீகளா?


கள்ளுக் குடிக்க வாறீகளா?

வணக்கம்!
சின்ன வயசிலயே (ஒன்பது வயது) இது துவங்கீட்டுது. எங்கட வீட்டு அடிவளவு பெரிய பனங்காணிதான். அதுக்க அன்னமுனா பத்தையா வளந்திருக்கும். ரெண்டு பனையில கள்ளுச் சீவிறவை. அது சீவ விடுறதுக்குக் காசு வேண்டிறேல. பதிலா அரப் போத்தல் கள்ளுதான் ஒவ்வொரு நாளும் வேண்டுறது. எங்கட குறிச்சீக்க பெரும்பாலும் எல்லாரும் இப்பிடித்தான் செய்யிறவை. நிறைய வீட்டில குடிமக்கள் இருந்தீச்சினம். ஆனா எங்கட வீட்டில அப்பிடி ஒருத்தருமில்ல. ஆனா அந்த அரப்போத்தல் கள்ளில ஒவ்வொருநாளும் ஒரு ரம்ளர் தருவார் என்ர அப்பா. அப்பதான் இறக்கின உடன் கள்ளு. நல்ல சுவையா இருக்கும். ஆரம்பத்தில கொஞ்சம் கூச்சப் பட்டனான் எண்டாலும் பிடிச்சிட்டன். ஒவ்வொரு நாளும் கள்ளுச் சீவிறவர் அரப்போத்தல் கள்ள எங்கட கிணத்தடி முருங்கையில வச்சிட்டுப் போடுவார். நான் ஒரு கப் என்ர பாட்டில எடுத்துக் குடிச்சிடுவன். ஆனா கள்ளு வைக்கக் கொஞ்சம் பிந்தினா குடிக்கேலாது. ஏனெண்டா குடிச்சு ஒரு கால் மணித்தியாலத்துக்கு வாயில அந்த வாசம் வரப் பாக்கும். அதால பள்ளிக்கூட நாக்களில கொஞ்சம் வெள்ளன குடிச்சா நல்லது.


இப்பிடி நான் கள்ளுக் குடிக்கிறது என்ர சக நண்பர்களிட்டயோ சொந்தக் காரரிட்டயோ சொல்லேல. சொல்ல ஏலாது. என்ன ஒரு மாதிரிப் பாப்பாங்கள். குடிகாரன் மாதிரியே பாப்பாங்கள் எண்ட பயம்தான். ஆனா உண்மை நிலையும் அப்பிடித்தான். ஒரு சந்தர்ப்பத்தில என்ர அப்பா கள்ளுக் குடிக்கிறவர் என்ர தகவலச் சொல்லேக்க,
“அவர் குடிகாரரோ? நான் நம்ப மாட்டன். நீ வேறயெதையோ பாத்திட்டுச் சொல்லிறாய்”
எண்டாங்கள். அதாவது கள்ளுக்குடிச்சா அட்டகாசம் போட வேணும்; தூசணங்கள் கதைக்க வேணும்; வெறியில தள்ளாடித்தள்ளாடிக் கதைக்க வேணும், எண்டதுதான் அவங்கட கணிப்பு. என்ர அப்பர் இப்பிடியொரு சோலியுமில்ல எண்ட உடன அவர் கள்ளே குடிக்கிறேல எண்டுதான் நினைச்சினம். வீட்டில நான் ஒரு ரம்ளர் குடிக்கிறதப் பற்றி எந்தப் பிரச்சினையுமில்ல. அப்பா சில வேள இன்னும் கொஞ்சம் ஊத்தித் தருவார்.

எங்கட ஊரில அப்பம் சுடுறதுக்கோ தோச சுடுறதுக்கோ மாவுக்கு அப்பச்சோடா பாவிக்கிறேல. எல்லாம் கள்ளுத்தான். அதுவும் இனியில்லயெண்டு புளிச்ச அடிமண்டிக் கள்ளுதான் வேணும். உடன் கள்ளு ஒருக்காலும் வெறிக்காது. புளிச்ச கள்ளுத்தான் வெறிக்கும் எண்டு அப்பர் சொல்லித்தந்திருந்தார். உண்மையில நான் குடிச்ச அந்தக் கள்ளு வெறிக்கிற சந்தர்ப்பம் அறவே இல்ல. தற்செயலா ஆரும் குடிக்காம விட்டா பத்து மணிக்கெல்லாம் அம்மா அத நிலத்தில ஊத்திப்போடுவா. ஆனா இப்பிடி வீட்டுக்காரரிண்ட அனுமதியோடயே கள்ளடிக்கிறதாலயோ என்னவோ இதெல்லாம் அப்பவே அலுத்துப் போச்சு. பிறகு வேறயொரு வடிவத்தில கள்ளடிக்க வெளிக்கிட்டன்.

எங்கட வீட்டுப்பக்கத்தில கூத்துப் பழகீச்சினம். இரவிலதான் கூத்துக்கான ஒத்திக பாப்பினம். அவயள் பாடத்துடங்கினாலே ஞாமான தூரத்துக்குக் கேக்கும். உடன நான் கூத்துப் பழகிறத பாக்கப் போயிடுவன். அங்க தான் சுவாரசியமே இருக்கு. பொம்பிளயள் கூத்தில ஆடுறேல. ஆம்பிளயளே தான் பொம்பிளப் பாத்திரத்தையும் செய்வினம். பொம்பிளயள் கூத்துப் பழகிறதப் பாக்கவும் வாறேல. நாங்கள் கொஞ்சப் பொடிப்பிள்ளயள் போயிருப்பம். கூத்துப் பாடுற ஆக்கள் பெரும்பாலும் குடிமக்களாத்தான் இருப்பினம். அண்ணாவியார் குடிக்க மாட்டார். மற்றாக்கள் குடிக்கிறதத் தடுக்க பாப்பார். அதோட மரியாதைக்காக அண்ணாவியாருக்கு முன்னால குடிக்கிறேல எண்டொரு பழக்கம் இருந்திச்சு. வெளியில போயிட்டா அண்ணாவியார் காணாமப் போயிடுவார். சிலவேள சண்டையள்கூட வரும். ஆனா கூத்துப்பழகிற இடத்தில அவருக்கெண்டு மரியாதை இருக்கும்.

இப்பிடி பழகிற இடத்துக்கும் ஆக்கள் கள்ளோடதான் வருவினம். ஆனா அதுகள ஒழிச்சு வைச்சிட்டு பிறகு இடைவெளி கிடைக்கேக்க ஒழிச்சிருந்து அடிப்பினம். அந்தக் கூத்துப்பழகிற வீட்டு முத்தத்தோட சேந்து பிரண்டல் பத்தையள் கொஞ்சமிருக்கு. கூத்து ஆடவாற ஆக்கள் தாங்கள் கொண்டுவாற போத்தலுகள அந்தப் பிரண்டலுக்க தான் ஒழிச்சு வைப்பினை. பிறகு தங்கட கட்டம் முடிஞ்ச உடன நைசா வந்து ரெண்டு மிடக்கு அடிச்சிட்டுப் போவின. இதைப் பாத்த நாங்கள் என்ன செய்யிறதெண்டா ஒருத்தருமில்லாட்டி நைசாப்போய் ரெண்டு மிடக்கு அடிச்சுப் பாப்பம். அதில கவனமாயிருக்கோணும். முதல்முதல் நாங்கள்தான் போத்திலத் திறக்கிற ஆக்களா இருக்கக் கூடாது. ஏற்கெனவே பாவிக்கத் துவங்கி அரகுறையா இருக்கிறதுகளிலதான் கைவைக்கலாம். நானும் இன்னும் ரெண்டு மூண்டு பேரும் சேந்து துவங்கின இந்த விளையாட்டில பிறகு வேறயும் ஆக்கள் வந்து சேந்தாங்கள். அதில மற்றாக்களுக்கு அதுதான் முதல் தடவையா இருக்கும்போல. இருந்தாலும் பழக்கியாச்சு. அஞ்சாறு நாள் பிடிபடாம குடிச்சம். அது நான் குடிக்கிற இனிப்புக் கள் இல்ல. புளிச்ச கள். கனக்கக் குடிக்க ஏலாது. அதோட வாயிலயிருந்து வாசமும் கொஞ்சம் தூக்கலா வரும். என்ன இருந்தாலும் களவாக் குடிக்கிறது நல்லாப் பிடிச்சிருந்துது.

ஒருநாள் ரெண்டு மச்சான்காரனுகளுக்குள்ள சண்டை. இந்தக் கள்ளுப் பிரச்சினைதான். ரெண்டு பேரும் பக்கத்தில பக்கத்தில தங்கட கள்ளுப் பையள வைச்சிருக்கினம். எங்கட விளையாட்டும் நடந்திருக்கு. அப்ப கள்ளுக் குறைஞ்சிருக்கிறத தெரிஞ்சு கொண்ட ஒருத்தர் பக்கத்தல பை வைச்சிருந்தவர்தான் தன்ர கள்ளக் குடிச்சது எண்டு அவரோட சண்டை. உப்பிடியே போனா பிசகப் போகுது எண்டு நான் இந்த ஆட்டத்திலயிருந்து நிண்டிட்டன். ஆனா நான் பழக்கினவங்கள் நிண்டபாடாக் காணேல.

ஒருநாள் நான் கூத்துப் பாத்துக்கொண்டு நிக்கிறன். மற்றவங்களக் காணேல. பிரண்டலுக்க தான் போயிட்டாங்கள் எண்டிட்டு நான் கூத்தப் பாத்துக் கொண்டு நிண்டன். திடீரெண்டு 'அம்மா', 'ஐயோ' எண்டு சத்தமும் கூடவே ஆருக்கோ கும்முற சத்தமும் கேக்குது. பிரண்டலுக்க தான். எனக்கு விளங்கீட்டுது என்ன நடந்திருக்குமெண்டு. கூத்தையும் உடன நிப்பாட்டிப் போட்டு எல்லாரும் பெற்றோமக்ஸ தூக்கிக் கொண்டு (அப்ப மின்சாரம் இல்ல) பத்தைக்க போனா என்ர ரெண்டு தோழர்கள் பிடிபட்டிருக்கினம். மற்றவங்கள் வறுகீட்டாங்கள் போல. பீற்றர் அண்ணையும் இன்னொராளும் ஒழிச்சிருந்து பிடிச்சுப் போட்டாங்கள். முசுப்பாத்தியென்னெண்டா பெற்றோமக்ஸ் வெளிச்சத்திலதான் பீற்றர் அண்ணனுக்கு தெரிஞ்சுது, தான் பிடிச்சிருக்கிறது தன்ர மகனெண்டு. அதிலயே வாதனாராணியப் புடுங்கி விளாசுதான். அண்ணாவியார் இல்லாட்டி அண்டைக்கு ரெண்டு பேரிண்ட கதியும் அதோ கெதிதான். அவ்வளவு அடி வேண்டியும் என்னயும் மற்றாக்களயும் அவங்கள் காட்டிக் குடுக்கேல. இல்லாட்டி அண்டைக்கு அப்பரிண்ட மானம் காத்தோட போயிருக்கும்.

இப்பிடிக் “காய் பிடிக்கிற வயசில” செய்த திருகுதாளங்கள் கனக்க. (காய் பிடிக்கிற வயசு விளங்காட்டி கடைசியாத் தந்திருக்கிற விளக்கத்தைப் பாருங்கோ). அண்டையோட மற்றவங்கள் கூத்துப் பாக்கப் வாறேல. என்னால பாக்கேலாம இருக்கேலாது. நான் தொடர்ச்சியாப் போனன். நல்ல பிள்ளயா இருந்திட்டு வந்திடுவன்.

1992 இல ஊரவிட்டு வந்தப் பிறகு இண்டை வரைக்கும் நான் கள்ளுக் குடிச்சதா ஞாபகமில்ல. முல்லைத்தீவில இருக்கேக்க கருப்பணி மட்டும் இடைக்கிடை குடிச்சிருக்கிறன். உண்மையில கள்ளடிக்க வேண்டிய வயசில அத நான் சுவைக்கேல எண்டுதான் சொல்ல வேணும். எண்டாலும் நான் சொல்லக் கூடிய நீதியொண்டு இருக்கு.
உடன் கள் குடிக்கிறதில எந்தப் பிரச்சினையுமில்ல. நல்லாயிருக்கும்.
இன்னுமொரு விசயம், என்ர அவதானிப்புப் படி வெறி வந்து தூசனங்களாள பேசுறதும் சண்டைக்குப் போறதும் முக்கால்வாசி நடிப்புத்தான்.

போன வருசம் யாழ்ப்பாணம் போகேக்க பீற்றர் அண்ணையின்ர மகனப் பாத்தன். என்ர வயதுதான். உடன ஆள மட்டுக்கட்டேல. அறிமுகத்துக்குப் பிறகு இரவு வீட்ட வா எண்டு சொல்லீற்றுப் போயிட்டான். ஆனா பின்னேரமே சந்தியில அவனுக்கும் இன்னொராளுக்கும் பிரச்சின. போய்ப் பாத்த அம்மான் நல்ல வெறியில நிக்கிறார். எனக்கு உண்மையில அதிர்ச்சிதான். தாய் தேப்பனையும் மதிக்கிறேலயாம். பெரிய சண்டியனாம் எண்டு சனம் சொல்லீச்சு. இரவு அவனிண்ட வீட்ட போகேல. அடுத்த நாள் காலம என்னை றோட்டில மறிச்சுப் போட்டான். ஏன்ரா வரேல எண்டு சேட்டப் பிடிக்காத குறையாக் கேட்டான். அவன்ர முதல்நாள்க் கோலத்தச் சொல்லி எனக்கு அது பிடிக்கேலயெண்டதையும் சொன்னன்.
“ஏன்ரா இப்பிடிக் குடிக்கிறாய் முந்தி ஒழுங்காத்தானே இருந்தனி. எப்ப குடிக்கத் துவங்கினனி?”
எண்டு கேட்டன்.
சிரிச்சான்…
நல்லாயிருக்கு கத. நீ தானே பிரண்டல் பத்தையுக்க எனக்கு கள்ளடிக்கப் பழக்கினனி. பிறகு நல்ல பிள்ள மாதிரி நடிக்கிறாய்?”
எண்டான்.
எனக்கு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு. நல்ல வேள இத ஒருத்தரும் கேக்கேல. இத வேற ஆருக்கும் சொன்னானோ தெரியேல. சொல்லியிருந்தா என்னப் பற்றி என்ன் நினைப்பினம் எண்ட நினைப்புவந்து துலைச்சுது.

குறிப்பு:
காய் பிடிக்கிற வயசு: ஒரு வயசில பழங்கள விட காய்கள் பிடிக்கும். மாம்பழத்த விட மாங்காயும், விளாம்பழத்த விட விளாங்காயும், கொய்யாப்பழத்த விட கொய்யாக்காயும் பிடிக்கிற ஒரு பருவம் இருக்கே, அதுதான் காய்பிடிக்கிற வயசு. கிட்டத்தட்ட விடலை வயசு மாதிரி. ஹிஹிஹி… எனக்கு இப்பவும் பழங்களவிடக் காய்கள்தான் பிடிக்கும்.
--------------------------
பட உதவி:- ஈழநாதன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, March 28, 2005

தேங்காயும் ஒரு தமிழனும்…

வணக்கம்!

ரெண்டு நாளுக்கு முதல் லண்டனிலயிருக்கிற என்ர நண்பனொருவனோட கதச்சுக்கொண்டு இருக்கேக்க அவன் கேட்டான்,
இண்டைக்கு இரவு என்ன சாப்பிட்டனி?
வேறயென்ன?...இடியப்பமும் சம்பலும், அதோட தக்காளிச் சொதியும்.’
உங்களுக்கடாப்பா சொல்லிச் சொல்லிப் பழகிப்போச்சு. பகிடி விடாம சொல்லு.
இதிலயென்ன பகிடிவிடக்கிடக்கு? உண்மையா அதத்தான் சாப்பிட்டனான்.’

இதக்கேட்ட அவனுக்கு ஆச்சரியமா இருந்தீச்சாம்.
டேய்! நீ குடுத்து வச்ச ஆள்தான். நானெல்லாம் சொதியும் சம்பலும் சாப்பிட்டு 6 மாதமாச்சு.’
எனக்கு விளங்கேல. எங்கட ஆக்கள் சொதியில்லாம இருக்க மாட்டினமே? அவனிட்ட தீர விசாரிச்சதில, வெளிநாடுகளில எங்கட சனம் தேங்காய்ப்பால் பாவிக்கிறது குறைவாம். சிலர் தொடுறதுகூட இல்லையாம். எல்லாம் கொலஸ்றோல் வந்திடுமெண்ட பயம்தானாம். என்னையும் பாவிக்கிறதக் குறைக்கச் சொன்னான்.

இதென்ன கோதாரி? தேங்காயில்லாம மனுசன் எப்பிடியாம் சாப்பிடுறது? இவன் வேற நல்லாப் பயப்பிடுத்திறான். கொலஸ்றோல் வாறதெண்டது ஒருபக்கம் இருக்க, இனி தேங்காய் பாவிக்காமல்தான் சாப்பிடவேணுமெண்டது பெரிய சங்கடமா இருந்தீச்சு. இஞ்ச வந்தப்பிறகு ஊரில சாப்பிட்டமாதிரித்தான் சாப்பிடுறன். எந்த மாற்றமுமில்ல. அதே சாப்பாடு வகையள்தான். ஒவ்வொருநாளும் சொதி, அடிக்கடி சம்பல். எல்லாக்கறியுமே தேங்காப்பால் விட்டுத்தான். என்ன... விறகடுப்புக்குப் பதிலா வாயு அடுப்பு. பயந்தென்ன செய்யிறது? இதுபற்றிக் கேக்க தெரிஞ்ச டாக்குத்தரிட்டப் (வைத்தியர்) போனன். ஆள் யாழ்ப்பாணத்தான் தான். அவரிட்ட என்ர பிரச்சினயச் சொன்னன். தேங்காப்பால் பாவிச்சா கொலஸ்றோல் வருமெண்டது உண்மையே எண்டு என்ர சந்தேகத்தக் கேட்டன். ஆனா மனுசன் சொல்லிச்சு,
ச்சா… ஆர் சொன்னது அப்பிடி. அப்பிடியொண்டுமில்ல. நீ தாராளமாச் சாப்பிடலாம். ஆனா குளிர்காலத்தில கொஞ்சம் குறைச்சுக் கொள். சும்மா இருக்காம உடம்புக்கு -ஏதாவது வேல குடு. அது காணும்.’

சரியெண்டு ஆளிட்டயிருந்து சந்தோசமா வெளிக்கிட்டன். ஆனா வெளிக்கிடேக்க,
ஒருநாள் உன்ர வீட்ட வாறன். நல்ல ஒரு சொதி வச்சுத்தா
எண்டு மனுசன் கேட்டபிறகு அந்தாளில எனக்கு ஒரு சந்தேகம் வந்திட்டுது. இவற்ற வீட்டில சொதி வைக்கிறேலயெண்டா ஏதோ பிசகு இருக்கத்தான் வேணும் எண்டு மனம் கொஞ்சம் குழம்பீற்றுது. இஞ்ச வலைப்பிதியிற ஆக்கள் ஆருக்காவது சரியான விளக்கமும் தீர்வும் தெரிஞ்சாச் சொல்லுங்கோவன்.

இந்த இடறுப்பாடுகளுக்குள்ள உயிர்த்த ஞாயிறுக்குப் பால்புட்டு அவிக்கிறதெண்ட திட்டம் தவிடுபொடியாப் போச்சு. நானறிய பால்புட்டுச் சாப்பிடாம விட்ட உயிர்த்த ஞாயிறு இதுவாத்தான் இருக்கும். தேங்காய் எண்டது எங்கட சனத்தின்ர சாப்பாட்டில தவிர்க்கவே ஏலாத சாமான். இந்தியாவில கொஞ்ச நாள் இருக்கேக்க தேங்காய்க்கு இருந்த ‘மவுசு’ தெரியும். சின்னச் சின்னச் சொட்டுக்களா வாங்கியந்து அத அரைச்சுக் கறி வக்கிறதைப் பாத்திருக்கிறன். ஆனா ஊரில இந்தத் தேவையே இல்ல. வளவுக்க கிடைக்கிற தேங்காயே தாராளமாக் காணும். இடம்பெயர்ந்தப்பிறகு தேங்காய்க்குக் கஸ்டம்தான். அந்த நேரத்தில தேங்காயும் சரியான வில. ஒரு தேங்காய் 40 ரூவா கூட வித்தது. ஆனா ஒருநாளும் தேங்காயக் குறச்சதில்ல.

அங்க 'சொதி'யெண்டு ஒரு திரவம் வைக்கிறனாங்கள். (எல்லாருக்கும் தெரியும்) அதில்லாம ஒருத்தருக்கும் சாப்பபாடு இறங்காது. சொதியில கனவகை இருக்கு, மீன்சொதியிலயிருந்து மாங்காய்ச் சொதிவரைக்கும். எங்கட ஊர் முரலுக்குப் பேர் போன இடம். (ஊரைக் கண்டுபிடிக்கிற ஆக்களுக்கு எப்பிடி முரல்சொதி வக்கிறதெண்ட விவரம் சொல்லித்தரப்படும்) யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலயிருந்து கூட இரவில 8 மைல் தாண்டி முரல் வேண்ட ஆக்கள் வாறது எனக்கு ஞாபகமிருக்கு. மாசி மாசத்திலதான் இந்த முரல் கூடதலாப் படும். அப்ப இரவு 10 மணி வரைக்கும் கூட காத்திருந்து உடன் முரலில சொதி வச்சுச் சாப்பிட்டிருக்கிறம். அம்மம்மா வக்கிற முரல்சொதிக்கு இணையா வேற சாப்பாடே இல்ல எண்டுதான் இண்டை வரைக்கும் நினைச்சுக் கொண்டிருக்கிறன். போன வருசம் மாசிமாதம் போகேக்க, ஒருத்தரும் வடிவாத் தொழில் துடங்கேல. அதோட நேவியின்ர கெடுபிடியளும் நிறைய இருந்தீச்சு. அதால முரல் சரியாப் பிடிபடேல. ஒரு முரல் 15 ரூவாக்கு வேண்டி சொதிவச்சுச் சாப்பிட வேண்டியிருந்தீச்சு.

சரி. எங்க விட்டனான்?... ஆ… சொதிபற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தனான். எத்தின வகையான கறியள் வச்சாலும் சொதி இல்லாம சாப்பிடவே ஏலாது எண்ட நிலைமைதான் இண்டை வரைக்கும். ஆனா யாழ்ப்பாணத்தார் எல்லாரும் அப்பியெண்டு இல்ல. மானிப்பாயில நாங்களிருந்த வீட்டுக்காரர் எப்பவாவது தான் சொதி வப்பினம். நகர்ப்புறத்திலயும் சில இடங்களில சொதிவக்கிறது குறைவு. சொதிக்குக் கட்டாயம் மீனோ மரக்கறியோ போட்டுத்தான் வைக்கோணுமெண்டில்ல. ஒண்டுமில்லாட்டிக்கூட வெங்காயமும் பச்சமிளகாயும் இருந்தாக்கூடப் போதும். எங்கட அம்மம்மா காயவச்ச றால் மூக்குகள (றாலின் தலைப்பகுதி) சேத்துவச்சிருந்து அப்பப்ப சொதிக்குள்ள போடுவா. அதின்ர மணமும் சுவையும் தனி. எந்தச்சாப்பாட்டுக்கு இல்லாட்டியும் இடியப்பத்துக்கு சொதி முக்கியம். சொதியில்லாம இடியப்பம் சாப்பிடலாமோ?... நானும் முடியாது எண்டுதான் நினைச்சுக் கொண்டு இருந்தனான், அண்டைக்கு வரைக்கும்.

மலேசியாவில நான் கொஞ்ச நாள் நிண்டனான். அங்க இந்தியச் சாப்பாடுதான். இட்லி, தோசை எண்டு இருக்கும். ஒருநாள் இடியப்பம் எங்கயோ இருக்கெண்டு சொல்ல நானும் அங்க போனன். தமிழ்க்கடைதான். முதலில 30 இடியப்பம் வாங்கினம். கடைக்காரர் சாம்பாறா கறியா எண்டு என்ர விருப்பத்தக் கேக்க, நானும்
எனக்குச் சாம்பாறு வேண்டாம். சொதி தாங்கோ’
எண்டு கேட்டன். அதில நிண்டவருக்கு விளங்கேல. வேற ஒராள் வந்து என்னெண்டு கேக்க, திருப்பவும்
சொதி தாங்கோ’
எண்டு சொன்னன். முனுசர் பெரிசா கெக்கட்டம் விட்டுச் சிரிச்சார். எனக்குக் குழம்பீட்டுது. சிரிச்சுப் போட்டுக் கேட்டார்,
நீங்க ஜப்னாவா?
ஓமோம்
எண்டன். எனக்கு முதலும் எங்கடஆள் ஆரோ சொதிக்கு அலைஞ்சிருக்கிறான் போல. இலங்கையிலயிருந்து தமிழ் பேசிற ஆர் வந்தாலும் இவைக்கு யாழ்ப்பாணத்தான் தானே. பிறகு, அவை சொதி வக்கிறேல அதுக்குப்பதிலா ரசம்தான் வைக்கிறவை எண்டதையும் தெரிஞ்சு கொண்டு சாம்பாரையே வேண்டிக்கொண்டு வந்திட்டன்.

ம்… இப்பிடி தேங்காயில்லாமச் சாப்பிடவே தெரியாத எங்கட சனம் என்னெண்டு இப்ப இருக்குதுகள் எண்டு எனக்கொரு வியப்புத்தான். கனடாக்காரரிட்ட கேட்ட இடத்தில 'சோயாப்பால்' பாவிக்கினமாம். சொல்லப் போனா வெள்ளக்காரனிண்ட சாப்பாட்டுக்கு என்னத்துக்குச் சொதி?
ஆர் கண்டது?...
நானும் இன்னும் ஒரு வருசத்தில சொதியெண்டா என்னெண்டதை மறந்து போயிருக்கலாம்.

சொட்டுக்கள்: சிறு துண்டுகளாய் வெட்டியெடுக்கப்பட்ட தேங்காய்த்துண்டுகள். சில்லு எண்டும் சொல்லிறனாங்கள்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________