Sunday, August 30, 2009

ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்

இது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.

ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி மூடப்பட்டுள்ளது.

ஆனால் சொல்லப்பட்ட கட்டுரைதான் இன்னும் எழுதப்படவில்லை.
இந்நிலையில் இன்று கிருத்திகனின் வலைப்பதிவில் அவர் ஆங்கில ஒலியியல், பாமினி, தமிழ்நெற்-99 முறைகளில் தட்டச்சுவது பற்றிச் சொன்ன கருத்தொன்றுக்கான எதிர்வினையாற்ற இவ்விடுகை எழுதப்படுகிறது.

தொடரிலக்கத்தைப் பார்த்து அதிகம் யோசிக்காதீர்கள்.
நாங்களெல்லாம் தொடர் எழுதினாலும் ஆண்டுக்கொரு பாகம் எழுதும் பேர்வழிகள். ‘மரங்கள்’ தொடரைப் பார்த்து விளங்கிக் கொள்க ;-)

ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும்போது தட்டச்சுபவரின் மூளையில் ஆங்கில வரிவடிவங்களூடாகவே அவர் எழுத்துக்கூட்டுவார் என்பது அம்முறைக்கெதிரான ஒரு வாதம். சிறிது கால இடைவெளியில் அது தாக்கத்தைத் தராது; ஆனால் வருடக்கணக்கில் ஒருவர் அப்படியே தொடர்ந்தும் தட்டச்சுவாராக இருந்தால் அம்முறை அவரின் தமிழ்ச்சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு விளக்கம்.

அதை மறுக்க வந்த இடத்தில் கிருத்திகன் இப்படிச் சொல்கிறார்.

//மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும்.//

கிருத்திகன்,
முதலில் உமக்கு எனது பாராட்டு. ஏனென்றால் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான வாதமாக வைக்கப்படுபவற்றுள் ஒன்றான ‘ஆங்கில வரிவடிவங்கள் மூளையில் பதிதல்’ என்பதைச் சரியாக விளங்கியிருக்கிறீர். அதை ஏற்றுக்கொள்ளாதது, மறுப்பது, அது தேவையற்ற பயம் என்று சொல்வது நியாயமான நடவடிக்கையே.

இப்போது நான் மேலே மேற்கோளிட்ட உம்முடைய கருத்துக்கு வருவோம்.
உமது கருத்து முற்றிலும் தவறானது என்பது என் கருத்து. பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுவதில்லை, ஆனால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாகவே எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பது எனது கருத்து.

இவற்றில் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீர் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களும் அப்படியே என்கிறீர். உண்மையில் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களின் நிலை அப்படியில்லை. அவர்கள் தமிழ் வரிவடிங்களூடே சிந்திக்கிறார்கள்.

ஆறு வருடங்களாக மிகமிகச் சரளமாகத் தமிழில் தட்டச்சிக் கொண்டிருக்கும் பாமினிக்காரன் ஆகிய எனக்கு அம்மா என்று தட்டச்சுவதற்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிங்களைச் சொல்ல முடியாது. நீர் தந்திருக்கும் ஆங்கில எழுத்துக்கள் சரிதானா என்பதைக்கூட நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘அ’வுக்கு எந்த விரல், ‘ம்’ எழுத எந்த விரல்கள் ‘மா’ எழுத எந்த விரல்கள் எந்த வரிசையில் தட்ட வேண்டும் என்பதே. சரளமாகத் தட்டச்சக்கூடிய தமிழ்நெற்99 முறைக்காரன் ஒருவருக்கும் அம்மா என்று தட்டச்சுவதற்கான விசைகளின் ஆங்கில வரிவடிவங்களைச் சட்டெனச் சொல்ல முடியாது. [நான் எங்காவது வேலையாக நிற்கும்போது ‘டேய் ‘கூ’வன்னா அடிக்க வேணுமெண்டா எந்தக் கீ அடிக்க வேணும்?’ என்று தொலைபேசியில் கேட்பார்கள். விசைப்பலகை என்முன் இல்லையென்றால் உடனே என்னால் சொல்லமுடியாது. ஒருசுற்றுவழி மூலம் இதைக் கண்டுபிடித்துச் சொல்வேன். அச்சுற்றுவழி இறுதியில்…]

இன்னும் விளக்கமாக ஓர் எடுத்துக்காட்டு சொல்லலாம்.

பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ நீண்டகாலம் தட்டச்சிக்கொண்டிருக்கும் உம்முடைய நண்பரொருவரை கடற்கரையிலோ உணவுக்கடையிலோ தெருவிலோ பூங்காவிலோ எங்கேயாவது சந்திக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான விடயம், உங்களிடத்தில் கணனியோ விசைப்பலகையோ இருக்கக்கூடாது.

இப்போது உம்முடைய நண்பரைப் பார்த்துக் கேளும், “ஐசே, ‘அம்மா இங்கே வாவா, ஆசை முத்தம் தாதா’ எண்டு எழுதிறதுக்கு நீர் அடிக்கப்போற விசைகளின்ர ஆங்கில எழுத்துக்களை வரிசையாச் சொல்லும் பாப்பம்”.

உமது நண்பரால் சொல்ல முடியாது. எழுதிக்காட்டவும் முடியாது. (சிலவேளை ஒன்றிரண்டு எழுத்துக்கள் மிகச்சிரமப்பட்டுச் சரியாகச் சொல்லக்கூடும்). ஏனென்றால் பாமினியிலும் தமிழ்நெற்99 இலும் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடு சிந்திப்பதில்லை. (அப்படித்தான் சிந்திப்பார்களென்றால் அவர்களால் உடனடியாக உமது கேள்விக்கான பதிலை கடகடவெனச் சொல்ல முடியும். அத்தோடு ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விமர்சனம் அவர்களுக்கும் பொருந்தும். தட்டச்சத் தொடங்கி நீண்டகாலமாகியும் விசைப்பலகையைப் பார்த்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு விசையாகக் குத்திக் கொண்டிருப்பார்களென்றால் சிலவேளை அவர்கள் இந்த வகைக்குள் வரக்கூடும்.) ஆனால் இதே கேள்வியை ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும் ஒருவரிடம் கேட்டுப்பாருங்கள். தயக்கமே இல்லாமல் பதில் வரும்.

இப்போது புரிகிறதா ‘ஆங்கில வரிவடிவங்ளூடாக’ மனதில் எழுத்துக்கூட்டுவது என்று எதைச் சொல்கிறோமென்று? பாமினியிலோ தமிழ்நெற்99 முறையிலோ தட்டச்சுபவர்கள் தமிழெழுத்துக்களாகவே சிந்திக்கிறார்கள்.

==============================

தமிழெழுத்துக்கான விசையின் ஆங்கில வடிவத்தைக் கண்டுபிடிக்க ஒரு சுற்றுவழியைப் பயன்படுத்தலாமென்று சொல்லியிருந்தேன். அது என்னவென்றால் விசைப்பலகையில் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி அதன்மூலம் கண்டுபிடிப்பது. எடுத்துக்காட்டாக ‘அ’ என்ற எழுத்துக்கான விசையின் ஆங்கில எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். விசைப்பலகையில் ‘அ’ தட்டச்சுவதைப் போன்று செய்து பார்த்துக் கொள்வது, பிறகு ஆங்கிலத்தில் அதேமுறையில் விரலைப் பயன்படுத்தும்போது வரும் எழுத்து எதுவென்று பார்ப்பது. அதுகூட சுலபமான காரியமன்று.

“அம்மா இங்கோ வாவா, ஆசைமுத்தம் தாதா” என்ற வசனத்தை நான் முயன்று பார்த்தேன். அதாவது அவற்றுக்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிவங்களை வரிசையாகச் சொல்ல வேண்டுமென்று. அவ்வெழுத்துக்களைத் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி ஆங்கிலத்தில் அதேபோன்று தட்டச்சும்போது உருவாகும் எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முயன்றேன். மிகமிகக் கடினமாக இருந்தது.

ஏனென்றால் பொதுவாக ஓரெழுத்தை எப்படித் தட்டச்சுவது என்றுதான் பழக்கப்பட்டிருக்கிறோம். விரல்கள் இயல்பாகவே அந்தந்த நிலைக்குச் சென்று விசைகளை அழுத்துகின்றன. ஆனால் இந்த விரலால் இப்படித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? என்று எதிர்வளமாக யோசித்தால் விடை காண்பது எளிதன்று. எமது மனம் அதற்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை. Shift உடன் வலதுகையின் நடுவிரலை நடுவரிசையில் அழுத்தினால் ‘மு’ வருமென்று கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் ஆங்கிலமுறையில் இதேமாதிரித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? ம்ஹும். தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் ‘K’ எழுதவேண்டுமென்று கேட்டால் தன்னிச்சையாகவே இடது சின்னிவிரல் shift விசையை அழுத்திப்பிடிக்க வலதுபக்க நடுவிரல் நடுவரிசையில் தனக்குரிய விசையை அழுத்துகிறது, அதாவது ‘மு’ எழுதுவதற்குப் பயன்படுத்திய அதே விசை.

இத்தோடு இவ்விடுகை நிறைவுபெறுகிறது.
இவ்விடுகைகூட அவசரமாகவே எழுதப்படுகிறது. நேரமிருந்தால் பிழைதிருத்தியோ இன்னும் விளக்கம் அதிகமாகவோ மேம்படுத்தலாம்.

- பின்னூட்டங்களில் சந்திப்போம்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 22, 2008

ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்?

தங்கர் பச்சானின் நெறியாள்கையில் வெளிவந்த 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பல வெளிவந்துவிட்டன. தொலைக்காட்சிகளில், வெகுசன ஊடகங்களில், வலைப்பதிவுகளில் என பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டன.
அனைத்திலும் குறிப்பிடப்பட்ட முக்கிய குறைபாடு (ஒரேயொரு குறைபாடு என்றுகூடச் சொல்லலாம்) அர்ச்சனா சத்தம் போட்டுக் கத்துவதைப் பற்றியது தான். வலைப்பதிவுகளில் காசி ஆறுமுகம் தொடக்கம் நா.கண்ணன் சுரேஷ் கண்ணன் வரை பெரிய தலைகளும் அதையே குறிப்பிட்டிருந்தார்கள்.
திகைப்பை ஏற்படுத்தும் விதமாக நா.கண்ணன் மட்டும் (நான் வாசித்த, கேட்ட அளவில்) அர்ச்சனாவின் அழுகையையும் நடிப்பையும் சரியென்று பாராட்டியிருக்கிறார்.
நா. கண்ணன் ஐயாவோடு நானும் இணைந்து கொள்கிறேன்.

இப்படம் தொடர்பாக தங்கர் பச்சானிடம் வைக்கப்பட்ட முதன்மை முறைப்பாடு இந்த அழுகைதான். இக்குற்றச்சாட்டைக் கேட்டவுடனேயே (சமயங்களில் கேள்வி தொடங்கும்போதே) தங்கருக்குக் கோபம் உச்சத்துக்கு ஏறுகிறது. மதன் திரைப்பார்வையில் தங்கர் கர்ஜித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது, கூடவே அவருடைய விளக்கமும்.

நகர்ப்புற மனிதர்களின் பார்வையில் கிராமத்துத் தாயின் கதறல் அப்படித்தான் தெரியும் என்பது தங்கரின் பதில்களிலொன்று. தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நகர்ப்புறப் பெண்ணை எப்படி கிராமத்துப் பெண்ணுக்குப் பொருத்த முடியும்? சுகாசினியும் மதனும் இன்னும் பலரும் இந்த நகர்ப்புறப் பார்வையுடன்தான் பார்க்கிறார்களென்பது விளங்குகிறது.

தங்கர் சொல்லும் இன்னொரு முக்கிய விடயம், தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் 'அம்மா' பாத்திரம். அந்தக் கட்டமைப்புக்குள் இல்லாமல் யதார்த்தமான தாயைக் காட்டியதும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்பது அவரது கருத்து.
உண்மைதான்.

தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் தாய்ப் பாத்திரம் தமிழ்ச்சூழலின் பெரும்பான்மையைப் பிரதிபலிக்காத பாத்திரம்தான். விடிய வெள்ளன முழுகி, தலைதுவட்டி, சாமிபடத்துக்கு புகைகாட்டி மணியடித்தபடி வெள்ளை வெளேரென 'மங்களகரமாக' வரும் தாய்மார்கள் நிச்சயமாக எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்த சூழலில் தாய்மாரை நினைவுபடுத்துவதில்லை. மிகப் பெரும்பான்மையானவர்களின் தாய்மாரை அப்பாத்திரங்கள் பிரதிபலிக்கா.
எத்தனை படத்தில்தான் இவர்களைப் பார்த்துச் சலிப்பது?
கிட்டத்தட்ட அரைவாசிப் படங்களிலாவது தொடக்கக் காட்சியாக அமையும் கோயிற்காட்சி, தேங்காயுடைக்கும் காட்சி, அர்ச்சனை செய்யும் காட்சி, ஆரத்தியெடுக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் எரிச்சலை இந்த தமிழ்ச்சினிமா அம்மா மாரும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதைவிட, அவர்கள் அடக்கமே உருவாக இருப்பார்களாம். சத்தம் போட்டுப் பேசமாட்டார்களாம். சத்தம்போட்டு அழக்கூட மாட்டார்களாம். கணவனுக்கு முன்னால் வாய்பொத்தி இருப்பார்களாம். இவற்றைவிட, பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்று சூப்பர் ஸ்டார் முதல் ஆளாளுக்கு உபதேசம் வேறு செய்துகொண்டேயிருப்பார்கள். இப்படியெல்லாம் கலந்துகட்டி தாய் என்ற (பொதுவாக பெண்) விம்பத்தை தமிழ்ச்சினிமாவில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது சில திரைப்படங்களில் வரும் தாய்மார்கள் ஒரு நெருக்கத்தை உணர வைப்பார்கள். அவ்வகையில் பாலு மகேந்திராவின் 'அதுவொரு கனாக்காலத்தில்' தனுசின் தாயாக வருபவரைச் சொல்லாம். பருத்திவீரனில் நாயகியின் தாயாக வருபவரின் பாத்திரம் என்னைக் கவர்ந்தது. அதுபோல் 'பொல்லாதவனில்' டானியல் பாலாஜியின் அண்ணியாக வரும் பாத்திரமும் கவர்ந்தது.

முன்பு சொன்னபடி அடக்கமே உருவாகச் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து முற்றிலும் விலகி தங்கர் பச்சானின் வேலாயி இருப்பது பலருக்கு அதிர்ச்சி.

ஒரு பெண் இப்படியெல்லாம் ஓலமிடுவது யதார்த்தத்துக்குப் புறம்பானதென்று இணைய இதழொன்றில் பார்த்தேன். என்ன முட்டாள்தனமான வாதம்? பெண்களால் மட்டும்தான் அப்படிக் கதற முடியும். அவர்கள் மட்டும்தான் அப்படிப் கதறியழுகிறார்கள்.

எங்காவது ஆண்கள் அப்படிக் கதறிப் பார்த்திருக்கிறீர்களா?
இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பது யார்? நூறு வீதமும் பெண்கள்தாம். சில புறநடைகளை விட்டால் ஆண்களுக்கு குரலெடுத்து அழத்தெரியாது, அல்லது அப்படி அழ விரும்புவதில்லை. தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற மனோபாவமும் ஒரு காரணம். ஆனால் பெண்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் அவற்றுக்கு வெட்கப்படுவதில்லை. அழுகை வருகிறதோ இல்லையோ செத்த வீடொன்றில் குரலெடுத்து அழுதே ஆக வேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்கிறது.

கிராமங்களில் பெண்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், அவர்களின் சத்தத்தின் வலிமை. ஆண்களிடையே நடக்கும் சண்டை சிலவேளை அடுத்த வீட்டுக்கே கேட்காது. அதிக நேரம் நீடிக்கவும் மாட்டாது. சில நொடிகளிலேயே கைகலப்பு வரை வந்து முடிந்துவிடும். அனால் இரண்டு பெண்களிடையில் சண்டை மூண்டால் இடைவேளைகள் விட்டுக்கூட நாள் முழுவதும் சண்டை பிடிப்பார்கள். அக்கம் பக்கத்திலிருக்கும் நாலைந்து வீடுகளுக்கு அன்று பெரும் சமாதான். (அந்நேரத்தில் அவ்வீடுகளில் இருக்கும் அண்களின் நிலை பரிதாபமாக இருக்கும். குடிக்க தேத்தண்ணி கூடக் கிடைக்காது. நான் பார்த்தளவில் அவர்கள் செய்யும் வேலை, சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்காவது மதவடியில் போய் கடுதாசி விளையாடிவிட்டு பொழுதுபட வீட்டுக்கு வருவதுதான்)

என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெருத்த சத்தத்தில் கத்துவது, கதறுவது, சண்டை பிடிப்பதெல்லாம் பெண்களுக்கு மிக யதார்த்தமான, இயல்பான விடயங்கள். ஆண்களுக்குத்தான் அவை மிகையான விடயங்கள்.

இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டில் அர்ச்சனா கத்துவது, புலம்புவது, அழுவது எல்லாமே படு யதார்த்தமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அர்ச்சனா போன்ற ஏராளம் ஏராளம் தாய்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எடுத்ததுக்கெல்லாம் 'மாதாவே, யேசுவே, தொம்மையப்பரே, இதுகளைப் பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறீரோ?' என்று ஓலமிடத் தொடங்கிவிடும் பல தாய்மார் எனது சுற்றமாக இருந்திருக்கிறார்கள்.
அதுவும், என்ன விசயத்துக்கு யார் யாரிடம் எப்படிப் புலம்ப வேண்டுமென்றுகூட ஓர் ஒழுங்குமுறை வைத்திருப்பார்கள். ஆருக்காவது சாபம் விட வேணுமெண்டால் மிக்கேல் சம்மனசானவரைக் கூப்பிடுறது தொடக்கம் மிக நுணுக்கமாக அவர்களது புலம்பல் இருக்கும்.

பிள்ளைகள் எதிர்த்துக் கதைத்தவுடன் சாமி படத்தின்முன் போயிருந்து அர்ச்சனா புலம்புவாரே, அப்படி அவர் புலம்பாவிட்டால்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~
அர்ச்சனா கதறும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் என்பதும் ஒரு விமர்சனம். அது பார்ப்பவர்களின் பிரச்சினையே ஒழிய அழும் தாய்க்கு எண்ணிக்கை பிரச்சினையில்லை என்பது தங்கரின் வாதம். நேற்று அதிகம் அழுதுவிட்டேன், இன்று குறைத்து அழவேண்டும் என்று திட்டம்போட்டு எந்தத் தாயும் அழ மாட்டாள் என்று தொடர்ந்து சொல்கிறார் தங்கர்.

முடிவாக, ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அர்ச்சனாவின் அழுகை எவ்விதத்திலும் எனக்கு உறுத்தவில்லை. மிகமிகக் கச்சிதமாக அவரின் பாத்திரம் படத்தோடு பொருந்துகிறது என்பதே என் கணிப்பு.

சுரேஸ் கண்ணன் சொல்லும் "டெக்னிகல்" விசயமும் எனக்கு விளங்கவில்லை. கதறியழுவதை, சத்தம் வெளியில் வராமல் காட்சியாக மட்டும் காட்டுவதைப் பற்றி ஏதேனும் சொல்கிறாரோ தெரியவில்லை.

மற்றும்படி அர்ச்சனாவின் அழுகையை நிறுத்துவதென்பது பாத்திரச் சிதைப்பு என்பதோடு யதார்த்தமாகவும் இராது என்பதே என் கருத்து. அந்தந்தக் காட்சிகளில், அர்ச்சனா வாயைத் திறக்காமல் கண்ணீர் மட்டும் விடுவதுபோன்று படத்தை எடுத்திருந்தால், என் பார்வையில் நிச்சயமாக அதுவொரு பாத்திரச் சிதைவை ஏற்படுத்தியிருக்கும்.

ஒன்பது ரூபாய் நோட்டில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையாகவும் உறுத்தலாகவும் எனக்குப்பட்டவை பாடல்கள் தாம். 'மார்கழியில் குளித்துப்பார்' என்ற, கதை நகர்வுக்கு உறுதுணையான பாடலைத் தவிர்த்து மற்றக் காதல்பாடலெல்லாம் படத்துக்குத் தேவையற்றவை.

விஜய் தொலைக்காட்சியின் அனுகாசனின் 'கோப்பி வித் அனு' நிகழ்வில், தங்கர் பச்சான் கலந்து கொண்டார். 'எதைச் செய்தால் தமிழ்ச்சினிமா முன்னேறும்?' என்ற அனுவின் கேள்விக்கு தங்கர் சடுதியாகப் பதிலளிக்கிறார், 'பாடல்களை நிறுத்திவிட்டாலே போதும்' என்று.

மிக அண்மையில் புதிய இயக்குநர் ஒருவரும் (மிஷ்கின்?) படங்களில் பாடல்களைச் சேர்ப்பது தனக்குப்பிடிப்பதில்லையென்றும், வியாபார ரீதியில் வேறுபலரைத் திருப்திப்படுத்த அவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும் படவிழாவில் பேசினார்.
இயக்குநர் சேரனும் பாடல்கள் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்ற விவாதத்தை முன்பு முன்வைத்திருந்தார். கமலகாசன் இருபது வருடங்களின் முன்பிருந்தே இதைத் தீவிரமாகச் பேசியிருக்கிறார். தன்னளவில் முயற்சித்தும் இருக்கிறார்.

ஆனாலும் எமது சாபக்கேடு, எல்லாம் பேச்சளவோடு நின்றுவிடுகிறது. பாடல்கள் இல்லாமல் தமிழ்ப்படங்கள் (அட வருடத்துக்கு ஒன்றிரண்டாவது?) வரும் காலமொன்றையும், அதனூடு தமிழ்ச்சினிமா ஓரிருபடிகள் முன்னேறுமென்பதையும் கனவு கண்டுகொண்டேயிருக்கிறேன்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, December 31, 2007

என்னத்தைச் செய்தோம் இவ்வாண்டில்?

இவ்வாண்டில் நானெழுதிய மொத்த இடுகைகள்: 33.
சயந்தனால் எழுதப்பட்டது: ஒன்று.
கிடைத்த மொத்தப் பின்னூட்டங்கள்: 353.
அதிக பின்னூட்டங்கள் கிடைத்த இடுகை (37 பின்னூட்டங்கள்):
பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

இவ்வாண்டில் நானெழுதிய முதலாவது இடுகை:

கிளாலிக் கடனீரேரி - சில நினைவுகள்

இறுதியிடுகை: இவ்விடுகை.


இவ்வாண்டில் நானிட்ட ஒலிப்பதிவுகள் ஆறு:

உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு


கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு


நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்


பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு


நினைவுப்பயணம்-1 (பண்டத்தரிப்பு) - ஒலிப்பதிவு

இவற்றைவிட மற்றவர்களின் குரல்களை ஒலிப்பதிவாக்கி இட்ட இடுகைகள் மூன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இவ்விடுகை எழுதுவதற்கான ஆராய்ச்சியிலீடுபட்டிருந்தபோது இடுகைகளுக்கிடையிலான கால இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளேன்.
2005 இல் எழுதிய இடுகைகள்: 111.
2006 இல் எழுதிய இடுகைகள்: 83
2007 இல் எழுதிய இடுகைகள்: 32. [இவற்றுள் மீளிடுகை, படியிடுகை என்பவற்றைக் கழித்தால் 25 தாம் வரும்.(2005 மேயில் நட்சத்திரக் கிழமையில் எழுதிய இடுகைகள் மட்டுமே 26)].
இருந்தாலும் நான் வலைப்பதிவு தொடங்கிய காலத்தில் எழுதத்தொடங்கியவர்கள் பலரைவிட அதிகமான இடுகைகள் எழுதியிருக்கிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*** இதுதான் இவ்வாண்டின் கடைசியிடுகை.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, February 13, 2007

மறுக்கப்பட்ட உரிமையும் புதிய வலைப்பதிவும்

விக்ரோறிய மாநிலம் (அவுஸ்திரேலியா) தொடர்பான சில தகவல்களையும் படங்களையும் பகிர்ந்துகொள்ள "மெல்பேர்ண் எனும் மெல்லியமகள்" என்ற வலைப்பதிவு நிறுவப்பட்டுள்ளது.
அவ்வலைப்பதிவு நிறுவப்பட்ட பின்னணி, முன்னணி பற்றி விரிவாக அங்குச் சொல்லப்பட்டுள்ளது.

விக்ரோறிய மாநிலம் என்று இருந்தாலும் தொடக்கத்தில் மெல்பேர்ண் நகரை மையப்படுத்தியதாகவே பதிவுகள் இருக்கும்.

வலைப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்கும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.
அதற்குமுன் ஓர் அறிமுகத்தைக் கொடுக்கவே இப்பதிவு.

அங்கு பின்னூட்ட வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் இப்பதிவிலேயே பின்னூட்டமிடவும்.


Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, February 07, 2007

நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்

குரற்பதிவும் இடப்பட்டுள்ளது.
கேட்டுக்கொண்டே வாசியுங்கள்.

EnKavithaihal.mp3


கவிதை ஒன்று - விலகுகிறது இருள்

நதி,
விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி
அவர்களின் மொழியிலேயே
அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
சுகுணா திவாகர்
கூறிய வியப்புத்தான் -
எழுத்து நடையைப்பார்த்து-
எனக்கும் வந்தது.
....
புதிய மொழிநடைகள்,
பரந்த வாசிப்பு,
பன்முகப்பட்ட்ட முயற்சிகள்
இல்லாமற்தான்
புலம்பெயர் இலக்கியம்
தேங்கிக்கிடக்கின்றது.
தேக்கமுடைக்கும் புள்ளிகள் -முக்கியமாய்
உங்களைப் போன்ற
பெண்படைப்பாளிகளிடமிருந்து
புலத்தில்(?) ஆரம்பிப்பது
உண்மையிலேயே
மகிழ்ச்சி தருகின்றது.

ஈழத்துக் கவிதைகளுக்கு
ஒருகாலத்தில்
தமிழ்ச்சூழலில் மதிப்பிருந்ததுபோல
இனி மீண்டும் வருவதாயிருந்தால்
அது புலத்தில்/ஈழத்தில்
எழுதும்
பெண்படைப்பாளிகளால்தான்
வரமுடியும் என்று
யோசித்துக்கொண்டிருந்தேன்.

இருள்
விலகுகிறது போலும் :-)..

~~~~~~~~~~~~~~~~~
கவிதை இரண்டு -ஏன் வரவில்லை பாராட்டு?

இந்த மாதிரியான
நல்ல கதைகளைத் தேடி
ஏன் அதிகமும்
பாராட்டுகள்
வருவதில்லை?
சிந்தாநதி
பங்காளி
போன்ற
உங்கள் ரசிகப்பரிவாரங்கள்
எங்கே?
ஒருவேளை
நான் பாராட்டினால்
அதிகமாய்
பாராட்டுக் கொமொண்ட்கள்
குவியுமோ என்னவோ?

_________________________________
மேலே இடப்பட்டவை கவிதையா என்று சந்தேகம் கொள்பவர்கள் தயவு செய்து என் குரற்பதிவைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கவும்.
_________________________________
"வசந்தன், சுகுனாதிவாகர், டிசே போன்ற பெரிய ஆட்களெல்லாம் நிறையச் சொல்லிவிட்டபடியால்"
என்று என்னையும் மற்றவர்களுடன் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட்ட அம்மணி செல்வநாயகியின் வாக்குப் பொய்க்கக் கூடாதென்பதற்காக சிரமப்பட்டு நானெடுத்த முயற்சியிது.
ஆம்! நானும் பெரிய அள்தான்.

இதன் முதற்கட்டமாக நானெழுதிய இரு கவிதைகளை இங்குத் தந்துள்ளேன்.
கவிதை எழுதியது நானென்றாலும் அதன் பாடுபொருள், என்னோடு 'பெரிய மனிதர்கள்' பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மற்ற இருவருக்குமுரியது.
தமிழ்நதியின் "அந்த எசமாடன் கேக்கட்டும்" என்ற பதிவில் அவர்கள் இருவரும் இட்ட பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து நானெழுதிய கவிதைகளே மேலே தரப்பட்டவை.

பெரிய ஆளென்று உறுதிப்படுத்தும் அடுத்த கட்டம் கதையெழுதுவதுதான்.
யாருடைய கருத்தாவது மாட்டாமலா போய்விடும்?

எதிர்பார்த்திருங்கள் "நான் பெரிய ஆள்-2".
அதுவரை வணக்கம் கூறிவிடைபெறுவது

அ.ஆ.இ. வசந்தன்.........

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, February 05, 2007

பிரிவுகள்

இது ஒரு சோதனை முயற்சி.
புதிய புளொக்கருக்கு மாறிய பின் பதிவுகளை வகைப்படுத்தல் தொடர்பில் செய்யப்பட்ட ஒரு சோதனை.
பக்கத்தில் பதிவு வகைகள் என்ற தலைப்பின் கீழ் இருக்கும் தலைப்புக்களைச் சொடுக்கினால் அவ்வகைப்படுத்தலின் கீழான பதிவுகள் இப்பக்கத்தில் திரட்டப்படும்.





Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, January 14, 2007

கலந்துரையாடல் ஒலிப்பதிவு -தைப்பொங்கல் சிறப்புப் பதிவு

வலைப்பதிவு அனுபவங்கள் பற்றி வலைப்பதிவாளர் இருவர் கலந்துரையாடிய ஒலிப்பதிவை இங்குப் பதிவாக்குகிறோம்.
தைப்பொங்கலை முன்னிட்டு நாம் தரும் சிறப்புப் பதிவு இது.

நானும் சயந்தனும் மூன்று மாதங்கள் இடைவெளியில் வலைப்பதிய வந்தவர்கள். இரண்டு வருடங்கள் நிறைவாகிவிட்டன.
இந்நிலையில் நாங்கள் வந்த காலப்பகுதி பற்றிய சில மீளும் நினைவுகளோடு குறுகியநேர கலந்துரையாடலொன்றை கணினி-தொலைபேசி வழித் தொடர்புமூலமாகச் செய்தோம். இதுவரை கட்டிக்காத்த சில இரகசியங்கள் இதில் கசியவிடப்பட்டுள்ளன.

எதுவித ஆயத்தமுமின்றி திடீரென கதைத்ததில் இருபத்தைந்து நிமிடங்கள் வரை நீண்ட கலந்துரையாடலை வெட்டிச் சுருக்கித் தொகுத்தவர் சயந்தன். கலந்துரையாடலின் தொடக்கப்பகுதியும் முடிவுப்பகுதியும் தெளிவற்றுப் பதிவாகியதால் அவையும் வெட்டப்பட்டன. எனவே சிலருக்கு தொகுப்பு மொட்டையாகத் தொடங்கி மொட்டையாகவே முடிவதுபோல் தோன்றலாம். மீண்டும் ஒலிப்பதிவு செய்ய நாங்களெடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே அப்படியே தருகிறோம்.

ஒலிப்பதிவைக் கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.




Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, July 05, 2006

சக வலைப்பதிவாளரின் திருமணம்

இது தமிழ் வலைப்பதிவாளர்களின் திருமணக் காலம் போலுள்ளது. அடுத்தடுத்து சில திருமணங்கள்.
அந்தவகையில் ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தமிழ்மணத் திரட்டியில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவான "சாரல்" என்ற வலைப்பக்கத்துக்குரிய பதிவாளர் திரு. சயந்தன் அவர்களுக்கு திருமணம்.

இப்போது ஏராளமான புதிய வலைப்பதிவாளர்கள். கொஞ்சம் பழையவர்கள் வசந்தனையும் சயந்தனையும் மறந்திருக்க மாட்டார்கள் ;-).
கொஞ்சக்காலமாக 'சாரல்' வலைப்பதிவில் பதிந்து வருவதைக் குறைத்துக் கொண்டார். (பதியாமலே இருப்பதற்கு தன்னைப் பயிற்றுவித்திருப்பார் போலும்) பதிந்த காலங்களிற்கூட அடிக்கடி பதிவுகளை வெட்டிக் கொத்தித் திருத்துவதும், சிலசமயம் வெளியிடப்பட்ட பதிவையே ஒளித்து வைப்பதுமாக அவர் அல்லாடியதை உணர்ந்தவர்களுக்கு 'ஆட்டிப்படைத்த கை' பற்றி ஓரளவு புரிந்திருக்கும். ஆனாலும் ஆங்காங்கே அவரின் கைவண்ணத்தைக் கண்டுகொண்டுதான் இருக்கிறோம்.

சரி. தகவலுக்கு வருகிறேன். இந்த மாதம் எட்டாம் மற்றும் ஒன்பதாம் திகதிகளில் சுவிஸ் நாட்டில் Zug என்ற நகரத்தில்
செல்வன் கதிர் சயெந்திரன் அவர்களுக்கும்
செல்வி Virginia தேவசகாயம் அவர்களுக்கும்
திருமணம் இனிதே நடைபெற உள்ளது.

அன்பர்கள், நண்பர்கள், சகவலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவரும் தங்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே வாழ்த்தவும்.
(அப்படியே தொடர்ந்தும் வலைப்பதிவுத் தொடர்போடு இருக்கும்படியும் அறிவுறுத்துங்கள்.)

(ஏன் இரண்டு நாட்கள் திருமணம் நடக்கிறதென்று என்னைக் கேட்காதீர்கள்.
அதெல்லாம் பிறப்பில் வந்த பலன். எல்லோருக்கும் இப்படியொரு பாக்கியம் கிடைக்காது;-))

"இன்னும் 34 நாட்கள்தாம்" என்று நான் பதிவு போட்டு உங்களை ஆவலில் காத்திருக்க வைத்ததை இப்பதிவு மூலம் தீர்த்துக் கொள்கிறேன்.
"மூன்று வருட ஆவலை" இந்நாளில் அவர் தீர்த்துக் கொள்வார்.

_____________________________________________

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, April 26, 2005

ரஜனியின் விஸ்வரூபம்

சந்திரமுகியில் தலைவர் பின்னியெடுத்திருக்கிறார். ரஜனி படத்துக்குரிய அத்தனை சூத்திரங்களையும் உள்ளடக்கி (அரசியல் உட்பட) வெளிவந்து சக்கை போடு போடுகிறது சந்திரமுகி. ஏறத்தாழ 3 வருடங்களின் பின் வரும் படமிது. பாபா படத்தோல்வியில் துவண்டிருந்த ரசிகர்களுக்கு நல்ல தீனி. எல்லோரும் ‘ஜென்ம சாபல்யம்’ அடைந்து விட்டார்கள். பிறவிப் பயனை அடைந்த அவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தாலே புரியும். இனி படத்திற்கு வருவோம்.

திரைக்கதை அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மணிச்சித்திரதாழின் படி தானென்றாலும் அருமையாக கதை பின்னப்பட்டுள்ளது. அழகான படியெடுப்பாளன் என்ற பட்டம் வாசுவுக்குத் தரலாம். ரஜனி பின்னியெடுத்திருக்கிறார். அவர் அறிமுகமாகும்போது சருகுகள் அந்தரத்தில் நிற்பது அழகான ‘சூப்பர்’ கற்பனை. அறிமுகக் காட்சியில் அவர் ஆட்களைத் துவைத்தெடுப்பது கலக்கல். பிரபுவும் நடித்திருக்கிறார். அடிக்கடி அவர் சீரியசாகக் கதைக்கும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.

வடிவேலு நகைச்சுவைக்காக வருகிறார். ஆனால் நிறைய காட்சிகள் அருவருப்பாக இருக்கின்றன. நாசர் ஒப்புக்கு நடித்துள்ளார். படம் முழுவதும் ரஜனி ஆதிக்கம் தான். ஜோதிகா கடைசி 30 நிமிடங்களில் தான் யாரென்று நிருபிக்கிறார். அழகான ஆக்ரோசமான நடிப்பு. சந்திரமுகியின் ஆவி புகுந்த பின் அவரின் நடிப்புத்திறன் ‘சூப்பர்’.

இசை பரவாயில்லை ரகம். தேவுடா பாட்டு வழமையான ரஜனியின் அறிமுகப் பாட்டுக்கள்(opening song) போல் வரவில்லை. படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன. அறிவியல் உண்மைகளின் படிதான் எல்லாக் காட்சிகளும் போகிறது என்று சொல்ல முடியாது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அறிவியல் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது. இதில் மிகை நடிப்பு இருப்பதாகவும் சொல்ல முடியாது. ஆனால் இருப்பதாகப் படுகிறது. மிகக் கவனமாக மூடநம்பிக்கை பற்றிய விமர்சனங்களிலிருந்து தப்புகிறது. ஆனால் மூடநம்பிக்கை ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறது. அது எப்படி சாத்தியப்படுகிறது என்பதில்தான் நெறியாள்கையின் (டைரக்சன்) திறமை உள்ளது. உண்மையில ஆவி இருப்பதாகச் சொல்லப்படுகிறதா? அல்லது அதெல்லாம் பொய், வெறும் ‘பிளவாளுமை’ என்று சொல்லப்படுகிறதா? தீர்மானமாச் சொல்ல முடியாது. நல்ல பட்டிமன்றம் ஒன்றுக்கான அருமையான தலைப்பு.

படத்தில் ஒரு பாம்பு காட்டப்படுகிறது. அது ஏன் என்று பலரும் குழம்புகிறார்கள். அதில்தான் படத்தின் மையமே இருக்கிறது. அதை பலவிதமான வாசிப்புக்கு உட்படுத்தலாம். எப்படியெப்படி வாசிக்கலாம் (பாக்கிறதைத் தான் சொல்லிறன்) என்பதை நான் இங்கே சொன்னால் சுவையில்லை. உங்களின் அனுமானத்துக்கே விட்டுவிடுகிறேன்.

மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் உண்மையா என்பதை இனி படம் பார்க்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்ப இன்னும் படம் பார்க்கவில்லையா? என்று கேட்கிறீர்களா?
இல்லை. படம் பார்க்கவில்லை.
பிறகெப்படி இவ்வளவும் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா?
தமிழ்மணத்தில் சந்திரமுகி பற்றி எழுதப்பட்ட பதிவுகளில் பொறுக்கியைவதாம். மேற்கூறியவைகள் எவையும் என் கருத்துக்களே அல்ல.
அப்போ ஏன் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா?
அதுதான் முக்கியமே. இப்போது கொஞ்ச நாட்களாக எழுத முடியாமல் நிறைய வேலை. பரீட்சைகள் வேறு நெருங்கி வருகிறது. கொஞ்ச நாளா எழுதுவதில்லை என்று இருந்த நான் திடீரென்று அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏனென்றால்;

சந்திரமுகி பற்றி நாலு வார்த்தை எழுதாவிட்டால் எங்கே நாம் தொலைந்து போவோமோ, மறக்கடிக்கப்பட்டு விடுவோமோ, தனித்துப் போய்விடுமோ என்று எழுந்த பயத்தில், கும்பலில் கோவிந்தாவாக கோசம் போட்டு எழுதின பதிவுதான் இது.
என்னையும் உங்கள் ஆலாபனையில் சேர்த்துக்கொள்வீர்கள் தானே.
சந்திர முகிக்கு ஒரு ஓ............

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, April 11, 2005

மனுசப் பிறவிகள்.

இப்ப மாலனுக்கும் சிவகுமாருக்கும் நடக்கிற பிரச்சின தான் தமிழ் மணத்தில சூடான விசயமாயிருக்கு. என்ர வலைப்பதிவின்ர தீவிர வாசகர் சிலர் எனக்கு தனியாக மின்னஞ்சல் போட்டிருக்கினம். என்ர பதிவில கடசியா நான் எழுதினது 'நாய்ப் பிறப்புக்கள்' எண்ட பதிவு. என்ர வலைப்பக்கத்துக்கு இடைக்கிடை வாற ஆக்களுக்கு இந்த ‘நாய்ப் பிறப்புக்கள்’ எண்ட பதிவுதான் முதலில வரும். அது அவயளச் சங்கடப்படுத்திறதாயும் வேறயொரு பதிவ எழுதி அத பின்னுக்கு அனுப்பச்சொல்லியும் அரியண்டம் குடுக்கினம். அவயளின்ர அரியண்டத்தால தான் 'மனுசப்பிறவிகள்' எண்ட இந்தப் பதிவு. இனி கொஞ்ச நாளா இந்தப்பதிவு இருக்கேக்க வாற ஆக்களுக்கு முகஞ்சுளிக்காது.

நான் இப்ப கொஞ்ச நாளா ஒண்டும் எழுதேல. எழுத விசயமில்ல எண்டில்ல. எல்லாப் பதிவையும் வாசிச்சுக்கொண்டிருக்கிறன். அப்பப்ப பின்னூட்டங்களும் குடுத்துக்கொண்டிருக்கிறன். எனக்குத் எழுதத் தோன்றேக்க எழுதுவன். அதுக்கிடையில ரெண்டு கிழம விடுமுறைக்குப் பிறகு இண்டைக்கு பள்ளிக்கூடம் தொடங்கீற்றுது. லீவு விடேக்கயே ஏராளமான வீட்டுப்பாடங்கள் தந்திட்டாங்கள். கடசி மூண்டு நாளாத்தான் அதுகளச் செய்யத் துடங்கினனான். இன்னும் நிறைய வேலையள் மிச்சமிருக்கிறதும் நேரமில்லாததுக்குக் காரணம்.

அதுக்குள்ள என்னையும் சயந்தனையும் ஒரே ஆள் எண்டு கொஞ்சப் பேர் குழம்பிக்கொண்டு இருக்கினம். அருணன் முக்கியமான ஆள். அவரோட ரெண்டு பேருமே ஒரே நேரத்தில சற் பண்ணிக்கூட அந்தாள் நம்பேல. பரிசீலிச்சுக் கொண்டு இருக்கிறாராம். ரெண்டு பேரிண்ட எழுத்தும் ஒரே மாதிரி இருக்காம். சரி நீர் பரிசீலிச்சுக்கொண்டே இரும் எண்டு அவரிட்டச் சொல்லீட்டன்.

சீ!!!...
இப்பிடிச் சந்தேகப் படுகிறதுகளும் ஒரு மனுசப் பிறவியோ? (அப்பாடி ஒரு மாதிரி தலைப்பை பொருந்த வச்சிட்டன்)

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, March 31, 2005

படம் காட்டுறன்

வணக்கம்!

ஒஸ்ரேலியாவில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் எடுக்கப்பட்ட படம் சயந்தனின் வலைப்பதிவல் போடப்படும் என்று அறிவிப்புத் தந்து நாட்கள் சில கடந்து விட்டன. ஆனால் இன்னும் படம் வரவில்லை என்ற ஏக்கம் உங்களுக்கு இருந்திருக்கும். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான். சயந்தன் 'மசுந்திறதப்' பாக்க எனக்குச் சந்தேகம் வந்திட்டுது. அடிச்சுப்பிடிச்சு ஆளிட்ட அந்தப் படத்த வேண்டீட்டன். படத்தப் பாக்கத்தான் விளங்கீச்சு ஏன் அவர் மசுந்தினவர் எண்டு. எண்டாலும் வாசகப் பெருமக்களின்ர ஆவலப் பூர்த்தி செய்யுறதுக்காக அந்தப் படத்த இப்ப இதில வெளியிடுறன்.


Image hosted by Photobucket.com


படத்தில ஆர் எங்க நிக்கிறதெண்டு கேக்க வேண்டாம். நீங்களே கண்டு பிடியுங்கோ. சயந்தனின்ர படம் ஏற்கெனவே வெளிவந்திட்டதால ரெண்டு பேரயும் இனங்காணுறது சுகம். (மூஞ்சயளின்ர விறுத்தத்தில கண்டு பிடிக்கிறதோ?)

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, March 26, 2005

அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு.

அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த வலைப்பதிவர் மாநாடு.

வணக்கம்!

நேற்று வெள்ளிக்கிழமை, அவுஸ்திரேலிய வலைப்பதிவர் மாநாடு எதிர்பார்த்தபடி பெரு ஆரவாரமாக நடந்து முடிந்தது.

மெல்பேணில் சிறப்பாக ஒழுங்கமைக்கப் பட்ட இடத்தில் (அவ்விடத்தைத் துல்லியமாக வெளியிட முடியாதுள்ளது. தொடர்ந்தும் சந்திப்புக்கள் நடத்தப்படவுள்ளதால் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிட முடியாது.) பின்னேரம் 4.00 மணியளவில நான் மண்டபத்துக்குப் போகேக்க ஏற்கெனவே அங்க எனக்காக காத்திருந்த சயந்தன் ஓடிவந்து கைகுடுத்து வரவேற்றார். பிறகு மாநாடு துவங்கேக்க சம்பிரதாயமா ஒரு பாட்டுப் பாடி துவங்குவம் எண்டு சயந்தன் சொல்ல, எவ்வளவு யோசிச்சும் ஒரு பாட்டும் ஞாபகம் வராமப் போக, கடசியா ஒரு பெட்டியக் குடஞ்சு தேடி பாட்டுக் கசட் ஒண்டக் கண்டெடுத்து அதப் பாடவிட்டு மாநாட்டத் துவக்கி வச்சார் சயந்தன்.
பாரதிதாசனிண்ட ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ எண்ட அருமையான பாட்ட முழுக்கக் கேக்கப் பொறுமையில்லாமலே மாநாடு துவங்கீச்சு.

ஆரம்பத்தில ஊர்ப்புதினம் பிறகு வலைப்புதினம் எண்டு போய் கடசியில பொடிச்சியின்ர கவித எதிர்ப்பு இயக்கம் பற்றி வந்தீச்சு. நான் அதுக்கு ஆதரவாயும் சயந்தன் எதிராயும் வாதிச்சு, கடசியில பிரயோசினமெதுவுமில்லாம இடையிலயே அந்தக் கத நிண்டுபோச்சு. (ஆரேன் பக்கத்திலயிருந்து ஏத்தி விட வேணுமெல்லோ). இடையில, ‘எழுதுவது என்றால் என்ன’ எண்டு அதிமுக்கியமான ஒரு கேள்வியக் கேட்டு அருமையான விவாதமொண்ட துவக்கினார் சயந்தன். ‘எழுதிறதெண்டால் எழுதிறது தான்’ எண்டு சுருக்கமா நான் சொன்ன பதிலோட ஆள் கதைய திசை திருப்பினார். நான் சொன்னது விளங்கீற்றுது எண்டுதான் நினைக்கிறன். எண்டாலும் இது சம்பந்தமா சந்தேகமிருக்கிற ஆக்களுக்காக அடுத்து இதப்பற்றி ஒரு சிறுகதை எழுதலாமெண்டு யோசிக்கிறன்.

கதைச்சுக்கொண்டு இருக்கேக்கயே நான் கொண்டு போயிருந்த முக்கியமான தின்பண்டப் பாசலைப் பிரிச்சேன். ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன் எண்டு நான் கொண்டு போன அதப் பாத்த உடன சயந்தன் திகைச்சுப் போனார். அது பினாட்டு. எழுதேக்குள்ள பனாட்டு எண்டு எழுதிறவை. பனம் பினாட்டு எப்பிடிச் செய்யிறதெண்டு ஒரு பதிவு எழுதிற எண்ணமிருக்கு. அந்தப் பாசலைத் திறந்த உடன எனக்கு முகம் சுளிச்சுப்போச்சு. இவ்வளவு நாள் பொத்திப்பொத்தி வச்சிருந்ததில சாதுவா பூஞ்சணம் பிடிச்சிருந்தீச்சு. பின்னயென்ன? எங்கட ஊரிலயெண்டா அடுப்புப் 'போறணை'க்க கட்டித் தூக்கிவிட்டா ஒரு கிருமி அணுகாது. இஞ்ச 'போறணை'க்கு எங்க போறது. இருந்தாலும் பினாட்ட விடேல. மேல்ப்பக்கத்த மெதுவாத் துடச்சு எடுத்திட்டு சாப்பிட்டம். கனநாளுக்குப் பிறகு சாப்பிடிறபடியா நல்லா இருந்திச்சு. தேங்காச் சொட்டும் புளுக்கொடியலும் இல்லாத குறதான் பெரிசாத் தெரிஞ்சுது.

அடுத்த முறைச் சந்திப்புக்கு எப்பிடியெண்டாலும் புளுக்கொடியலும் பாணிப்பினாட்டும் எடுப்பிக்கிறதெண்டு சயந்தன் சொன்னவர். நல்ல யோசின தான். எனக்கு இன்னொரு ஆச இருக்கு. கள்ளும் பிளாவும் எடுப்பிச்சுக் குடிக்கோணுமெண்டு. ஆனா இதெல்லாம் நடக்கிற காரியமே? பத்தாததுக்கு வாற முற மற்ற வலைப்பதிவாளரும் வந்தீச்சினமெண்டா எங்கள் ரெண்டு பேரயும் விட மற்றதுகளெல்லாம் பெண்டுகள். அவயள வச்சுக்கொண்டு என்னெண்டு குடிக்கிறது. ஆனா 'மொடர்ன் கேரள்' குடிப்பா எண்டு நினைக்கிறன். 'நெப்போலிய'னுக்கு வக்காலத்து வாங்கினவவெல்லே.

மற்ற வலைப்பதிவாளர்மாரைக் கூப்பிட முடியாமப்போனது கவலையாத்தான் இருந்தீச்சு. நாங்களென்ன செய்ய? ஒருத்திரிண்ட மின்னஞ்சல் முகவரியோ தொலைபேசி இலக்கமோ எங்களிட்ட இல்ல. அடுத்த முறைக்கு எப்பிடியும் எல்லாரையும் கூப்பிடிறது எண்டு ஏகமனதா முடிவெடுத்தம். ஷ்ரேயா, சந்திரலேகா, மார்டன் கேர்ள் ஆக்கள் தானே அவுஸ்திரேலியாவிலயிருந்து எழுதிகினம். நட்சத்திரன் செவ்விந்தியனும் இஞ்சதான் இருக்கிறாரெண்டு சயந்தன் சொன்னார்.

மாநாடு முடிஞ்சதும் மண்டபத்துக்குப் பக்கத்திலயிருக்கிற புல்வெளியில போயிருந்து பம்பலடிச்சம். அங்க நிறைய காதல் ஜோடியள் சுத்திக்கொண்டு திரிஞ்சினம். எதிர்காலத்தில் இலக்கியத்த தலைகீழாப் பிரட்டப்போற எங்கள் ரெண்டு பேரையும்பற்றி அவயள் ஒருத்தரும் கவனமெடுக்கேல. அந்த புல்வெளியில இருக்கேக்க எனக்கொரு ஆச வந்திச்சு. இப்பிடி மாநாடுகள் நடத்தேக்க இதில 'கிட்டிப்புள்ளு' இல்லாட்டி 'கிளித்தட்டு' (இத 'தாச்சி' எண்டும் 'யாடு' எண்டும் சொல்லிறது. தமிழீழத்தின் தேசிய விளையாட்டாக இதைப் பரகடனப்படுத்தியிருக்கினம்.) விளையாட வேணுமெண்டு எனக்கொரு ஆச. ஆனா வாற பெண்டுகளுக்கு அதுகள் விளையாடத்தெரியுமோ, தெரிஞ்சாலும் விளையாட ஏலுமோ தெரியேல. இருந்தாலும் ஆக்கள் காணாது தானே.

இப்பிடியாயிருக்கேக்க, நல்ல மம்மல் நேரத்தில புகைப்படம் எடுத்தனாங்கள். ஒரு வெள்ளைச் சோடியொண்டு தான் எங்களப் படமெடுத்தது. அருமையா வந்திருக்கு. இந்தப் படத்த சயந்தன் வெளியிடுவார் எண்டு நினைக்கிறன்.

அட! நானே எல்லாத்தையும் கதச்சுக் கொண்டிருந்தா எப்பிடி? மாநாட்டில கதச்ச விசயங்கள் மற்றும் தவறுப்பட்ட விசயங்களப் பற்றி சயந்தன் எழுதுவார். அடுத்த மாநாடு கூழோடையோ கள்ளோடையோ எண்டு தீர்மானிக்கேல.

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, March 08, 2005

பெண்கள் தினம்...

வணக்கம்!
இன்று அனைத்துலகப் பெண்கள் தினம்.(இதற்கெல்லாம் வாழ்த்துச் சொல்லலாமா?)
வருடா வருடம் வந்து போகும் ஒரு நாள்.
பெண்களுக்கு இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஒரு நாள் வேண்டும் என்று ஆண்கள் ‘ஜோக்’ அடிக்கக் காரணமான நாள்.
பெண் விடுதலையைப் பற்றி ஏதாவது கதைப்பது வழக்கம்.
பெண் விடுதலையென்பது ஆணிலிருந்து விடுபடல் அல்லது ஆண்மையிலிருந்து விடுபடல் என்பது போன்ற தோற்றப்பாடுடைய விவாதங்களிலிருந்து, பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது வரை பலதரப்பட்ட தளங்களில் பலதரப்பட்ட கோணங்களில் விவாதங்கள் நடந்து விட்டன; நடந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் கதைத்ததையே திருப்பித்திருப்பிக் கதைக்க வேண்டிய நிலை.
இன்னும் எவ்வளவு காலமானாலும் பெண் விடுதலையைப் பற்றிக் கதைப்பதற்கு நிறைய விசயங்கள் இருந்து கொண்டேயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

வலைப்பதியும் நபர்களில் குறிப்பிட்டளவு பெண்கள் இருந்தாலும் இத்தொகை போதாது என்றே நினைக்கிறேன். ஆனாலும் இவர்களிற் பலர் மிகக் காத்திரமான பதிவுகளைத் தருகிறார்கள். இன்னும் நிறையப் பெண்கள் எழுத வரவேண்டும் என்பது என் அவா. இனிவரும் காலங்களில் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

இந்நிலையில் விசயம் தெரிந்தவர்கள் மறைக்கப்பட்ட, மறக்கடிக்கப்பட்ட பெண்களைப் பற்றிய பதிவுகளை எழுதலாம். மாலன் செய்துள்ளார்.

ஈழத்தில் (குறிப்பாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில்) மார்ச்-08 ஐ விட, ஒக்டோபர்-10 இல் வரும் ‘தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்’ இற்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்றைய தினமே பெண்களுக்கான சிறப்புத் தினமாகத் திகழ்கிறது.

பெண்ணானவள் அனைத்துத் தளங்களிலும் விடுதலை பெற்று, தான் தானாகவே வாழ ஆசித்து முடிக்கிறேன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, February 14, 2005

வாழ்த்துக்கள்

வணக்கம்!
அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள். (அன்பர் தின என்றும் எடுத்துக்கொள்ளலாம்)
-வசந்தன்-

Labels:

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________