Thursday, December 28, 2006

வன்னியில் புராதனகால இரும்பு உலைகள்

• 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இரும்பு உருக்கு உலைகள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வன்னியில் கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் குளத்தின் அலைகரைப்பகுதியில் இரும்பு உருக்கு உலைகள் 2002 ஆம் ஆண்டு தொல்லியல் தேடலாளர் ந. குணரட்ணத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது.

வட்டவடிவ இரும்பு உருக்கு உலையின் அடித்தளம் உலையின் ஊதுலையாக இருந்த மண் துருத்திகள், குவியல்களாக இரும்பு கசடுகள் என்பன இப்பகுதியில் கண்டு எடுக்கப்பட்டன. இந்த உருக்குலையின் கசடுகள் வேதியியல் பகுப்பாய்வுக்குட்படுத்தப்பட்டபோது அதில் 68.12 விழுக்காடு இரும்பு இருந்தது உறுதிசெய்யப்பட்டது. இதேபோன்ற இரும்பு உலை; கசடுகள் முறிகண்டி- அக்கராயன் சாலையோரம், கோணாவிலில் அக்கராயன் கழிவாறின் கரையோரம், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தின் கோட்டைகட்டினகுளம் என்பவற்றிலும் கொக்காவிலிpலும் காணப்படுகின்றன.
கொக்காவிலில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உருக்குலைப் பகுதிகள் A-9 சாலை புனரமைப்புக்காக கிரவல் மண் அள்ளப்பட்டவேளையில் அழிக்கப்பட்டுவிட்டன. ஏனைய உலைகள் அப்படியே உள்ளன. இரும்பு உருக்குலைப்பகுதிகள் காலக்கணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளன. அதன் பெறுபேறு இந்த உலை கி.மு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்தது.


இலங்கைத்தீவில் ஸ்ரீலங்கா தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி மிகத்தொன்மையான இரும்பு உருக்குலை 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இது அநுராதபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரும்பு உருக்கு உலையே சிங்கள வலராறு கூறும் விஜயன் வருகை என்பதற்கு முன்பாகவே இலங்கைத்தீவில் மனிதர்கள் வாழ்ந்து வேளாண்மை, மந்தைமேய்ப்பு, இரும்புப்பயன்பாடு என்பவற்றை மேற்கொண்டிருந்தனர் என்ற அறிக்கையை ஸ்ரீலங்காவின் தொல்லியல் திணைக்கள முன்னாள் ஆணையாளர் S.U.தெரனியகலையினை வெளியிடச்செய்தது.


இதைவிட 3000 ஆண்டுகள்வரை தொன்மையான புத்தளம் பொம்பரிப்பு முதுமக்கள் தாளிகளில் எடுக்கப்பட்ட இரும்புப் பாகங்களும்இத்தீவில் இரும்புப் பயன்பாட்டை உறுதிசெய்தது. தமிழர் தாயகப்பகுதிகளில் பூநகரியில் மேலாய்வு மேற்கொள்ளப்பட்டு இரும்பு உருவாக்கங்கள் எடுக்கப்பட்டபோதிலும் அவை காலக்கணிப்பு மூலம் இதுவரை காலம் உறுதிசெய்யப்படவில்லை.
ஆனால் அக்கராயனில் கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு உலை காபன்-14 கதிரியக்க காலக்கணிப்பு செய்யப்பட்டு அது கி.மு 1300 ஆண்டுகள் தொன்மையானது என அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது.


நவீன அறிவியல் உலகில் தொல்லியல் சான்றுகள் காலக்கணிப்பு மூலம் உறுதி செய்யப்படும்போதே அவை அங்கீகரிக்கப்படுகின்றன. ஒப்பீட்டு காலக்கணிப்பு முறைகள் தொல்லியல் என்ற அறிவியல் துறையில் ஏற்புடையதாக்கப்படுவதில்லை. அந்த ரீதியில் அக்கராயன் இரும்பு உலை அறிவியல் மூலம் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழரின் பெருங்கற்காலம் எனப்படும் (கி.மு.0 முதல் 1000 வரையான) காலம் இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. பெருங்கற்காலத்திலேயே தமிழர்கள் இரும்பினைப் பயன்படுத்தியதால் இது இரும்புக்காலம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. இத்தகைய இரும்பு உலைகள் தமிழர் தாயகத்தில் இருப்பதான விடயங்கள் ஆதாரபூர்வமாக இதற்குமுன்னர் வெளிவரவில்லை. ஆதாரபூர்வமாக காலக்கணிப்புடன் தமிழர் தயாகத்தில் இரும்பு உலைகள் பற்றிய விடயம் வெளியாவது இதுவே முதல் தடவையாகும்.


தமிழர் தாயகத்தில் இரும்புத்தாது திருக்கோணமலையின் சேருவலையில் உள்ளது. இந்த இரும்புத்தாதுதான் தமிழர்தாயக இரும்பு உலைகளில் பயன்படுத்தப்பட்டதாக கூறமுடியாது. ஏனெனில் சேருவிலை இரும்புத்தாது இன்னமும் பயன்படுத்தாத நிலையில்தான் இருக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து அது வந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. தொழில் நுட்பங்கள் எல்லாமே ஒரே இடத்தில் தோன்றின என அடிப்படை வாதம் பேசினால் அதுவே உண்மை வரலாறின் தவறாகும். ஆக எமக்கு இரும்பு நுட்பம் வேறொங்கோ இருந்தே கிடைத்திருக்க வேண்டும். 16 ஆம் நூற்றாண்டில் வருகைபுரிந்த பிரிட்டிஸ் பயணியான “றொபேட் நொக்ஸ்” ;தான் இத்தீவில் பாரம்பரிய இரும்பு உருக்கு உலைகளை கண்டதாகவும் கூறி அதன் நுட்பத்தையும் வெளியிட்டிருக்கிறார்.
நவீனத்துவம் வரும்வரை இப்பாரம்பரிய உருக்குலைகள் இத்தீவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் தமிழர் தயாகத்திலும் மூத்த இரும்பு உருக்குலைகள் உள்ளன. இதனை வன்னி இரும்பு உருக்குலைகள் எடுத்துக்கூறுகின்றன.

-தி. தவபாலன்-
_____________________________________
மூலப் பதிப்பு


நன்றி: எரிமலை.
_____________________________________
இது பற்றி ஏற்கனவே வன்னியன் எழுதிய பதிவொன்று:

நெடுந்தீவும் தமிழனின் தொன்மமும்

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, December 23, 2006

ஈழத்து முதுபெரும் அரசியலாளன் நவரத்தினம் மறைவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியை அடித்தளமிட்டவர்களில் முக்கியமான மூத்த அரசியலாளன் வி.நவரத்தினம் அவர்கள் கனடாவில் காலமானார்.
இறக்கும்போது 97 வயதுடைய நவரத்தினம் அவர்கள் 1910 ஆம் ஆண்டு பிறந்தார்.


ஈழத்தமிழரின் தொடக்ககால அரசியலில் முக்கியமாக விளங்கிய இவர் பண்டா - செல்வா ஒப்பந்தமுட்பட பல முக்கிய அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளார்.
இவர் ஈழத்து அரசியல் குறித்து முக்கியமான இரு புத்தகங்கள் எழுதியுள்ளார்.

அன்னாரின் மறைவுகுறித்த தமிழ்நெட் செய்தி:

Navaratnam, the doyen of Federal Party, passes away

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, December 18, 2006

சிங்களச் சினிமா எதிர்கொள்ளும் சிக்கல்

பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் ஹந்தகமவின் 'அக்ஷரய"

-மு. பொ-
_______________________________
எரிமலை இதழில் வெளிவந்த மு.பொ. அவர்கள்
எழுதிய கட்டுரை. எழுதப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிவிட்டாலும் மிகமுக்கியமான கட்டுரையென்பதால் பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது. இந்நேரத்தில் படத்துக்கான தடை
விலக்கப்பட்டிருக்கக் கூடும்.
_______________________________


அண்மைக்காலத்தில் கலை, இலக்கியம், சினிமா அழகியல் என்பவற்றுக்கு அப்பால் பெரும் பிரச்சினைக்குள்ளாகியிருப்பது பிரபல இளம் சிங்கள திரைப்படக் கலைஞர் அசோகா ஹந்தகமவுடைய தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படமான 'அக்ஷரய' (அக்கினி எழுத்து)தமிழ் சினிமாவைப் பார்த்துப் பழகிய நம்மவர்களுக்கு ஹந்தகமவின் 'அக்ஷர'யவை விளங்கிக் கொள்வது கடினம், காரணம், சண்டை, ஆட்டம், பாட்டு,காதல் என்கிற வாய்ப்பாட்டுக்குள் இயங்கும் தமிழ்ச்சினிமாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உயர்ந்த திரைக்கலை ஆக்கமான இது, நம்மவரின் 'ரேஸ்ட்' க்குள் அகப்படப்போவதில்லை.


அப்படியானால் இத்திரைப்படம் எதற்காக பிரச்சினைக்குள்ளாகியிருக்கிறது?
இதை விளக்குவதற்குமுன் சிங்கள சீரியஸ்ஸான சினிமா, இன்று எந்நிலையில் உள்ளது என்பது பற்றித்தெரிந்துகொள்ளுதல் அவசியம். இந்தியச் சினிமா உலகில் சீரியஸ்ஸான திரை ஆக்கங்களுக்கு சத்திய ஜித்ராய் எவ்வாறு வழிகாட்டியாய் இருந்தாரோ அவ்வாறே உயர்ந்த சிங்களச் - சினிமாவுக்கு லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ் முக்கியமானவர். அவருக்குப்பின் சிங்களத்திரையுலகில் பல இளங்கலைஞர்கள் தோன்றி பலவகையான பரிசோதனைகளைச் செய்யத் தலைப்பட்டனர். அதனால் சிங்களத் திரையுலகில் உலகத் தரம்மிக்க திரை ஆக்கங்கள் தோன்றவாரம்பித்தன.

லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் 'ரேகாவ' 'கம்பெரலிய' ஆகிய (கிராமப் பிறழ்வு) திரைப்படங்களின் வருகை சிங்களச் சினிமாவில் ஒரு உடைப்பை ஏற்படுத்திற்று. அதற்குப்பின் வந்த அவருடைய 'நிதானய' இன்னொரு மைல்கல். இதற்குபின் மளமளவென பல சிறந்த திரை ஆக்கங்கள் வரத்தொடங்கின. அதற்குக் காரணம் இளஞ்சந்ததியினர் மத்தியிலிருந்து துடிப்புள்ள இளங்கலைஞர்கள் தோன்ற ஆரம்பித்ததே. தர்மசிறி பண்டாரநாயக்கா, தர்மசேன பத்திராஜா, வசந்த லுபேசேகர, பிரசன்ன விதானகே, அசோகா ஹந்தகம, சோமரத்ன திசானாயக்க போன்றோரின் திரைப்படங்கள் சிங்களச் சினிமா உலகில் சூறாவளி ரீதியில் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கின. வசந்த ஒபேசேகராவின் 'தீர்த்த யாத்ரா' தர்மசேனபத்திராஜாவின் மத்துயம் தவச (எதிர்காலத்தில் ஒருநாள்) அசோகா ஹந்தகமவின் சந்தகின்னரி (நிலவுப்பெண்) பிரசன்ன விதானகேயின் 'புரசந்தகலுவற' (ஓர் புரணையில் மரணம்) தர்மசிறிபண்டாநாயக்காவின் 'பவதுக்க' ஆகிய திரைப்படங்கள் பிரபலமானவை மட்டுமல்ல நமது தமிழ்சினிமா உலகத்தவரால் எட்டமுடியாத தரத்தை உடையவை. (மேலே குறிப்பிட்ட அனைத்துப்படங்களும் சென்ற வருடம். தர்மசிறிபண்டாரநாயக்காவின் 'திரிகோண' அமைப்பினால் 'சினியாத்ரா' என்ற பேரில் (திரை உலா) வட கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு திரையிடப்பட்டதோடு இவை பற்றிய கலந்துரையாடல்களும் நிகழ்த்தப்பட்டன) இந்தப் பின்னணியில்தான பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் அசோக ஹந்தகமவின் 'அக்ஷரய' வைப் பார்க்க வேண்டும். ஹந்தகம இளைஞர், ஒரு கணிதப்பட்டதாரி, வங்கியொன்றில் வேலைபார்க்கும் இவர், ஏற்கனவே தயாரித்த திரைப்படங்கள் மூலம் இலங்கையிலும் வெளியிலும் புகழ்பெற்றவர். உள்நாட்டு போரினால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சிங்களக்கிராம மக்கள் பற்றியும் தமிழருக்கெதிரான இனவாதத்தில் மூழ்கியுள்ள பௌத்த சிங்களக் கிராமத்தின் தூய்மை பற்றியும் எந்த அச்சமும் இன்றி அலசிச் செல்லும் போக்கையும் இவரது திரைப்படங்கள் பின்னணியாகக் கொண்டுள்ளன. இவர் தயாரித்த 'சந்த கின்னேரி' (நிலவுப்பெண்) 1994ல் பல விருதுகளைப்பெற்றது. 'இது என்னுடைய சந்திரன்' ('மே மகே சந்தாய்) என்ற இரண்டாவது படம், யுத்தகளத்திலிருந்து தப்பியோடிக்கொண்டிருந்த போது, ராணுவவீரனொருவனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தமிழ் பெண்ணுக்கும் அந்த ராணுவக்காரனுக்கும் இடையே ஏற்படும் காதல் பற்றியது இக்கதை. இதுவும் இவருக்கு பலவிருதுகளைப் பெற்றுக் கொடுத்ததோடு வெளியுலகிலும் இவர் பிரபலமாகக்காரணமாய் இருந்துள்ளது. இத்திரைப்படம் லண்டன் திரைப்பட விழாவிலும் பரீஸ் சிங்கப+ர் டில்லி, பாங்கொக் போன்ற நகரங்களிலும் காட்டப்பெற்று பெரும் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது. இவ்வாறே இவரது 'ஒரு சிறகோடு பறத்தல்' என்ற திரைப்படம் 2004ல் பரீசிலும் லண்டனிலும் திரையிடப்பட்டு பெரும் புகழை இவருக்குத் தேடிக் கொடுத்தன.



சிங்கள சினிமா உலகில் இத்தனை சிறப்பான இடத்தைப்பெற்ற ஹந்தகமவுக்கு இப்போது ஒரு சோதனைக்காலம் எனலாம். அதற்கு காரணமாய் இருப்பது, 'அக்ஷரய' (அக்கினி எழுத்து) என்ற அவரது புதிய திரைப்படமாகும். இத்திரைப்படம் தணிக்கையாளர்களின் பார்வைக்கு விடப்பட்டு அவர்களாலும் திரையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட பின்னரும் இதற்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு காரணம் என்ன?
சினிமாவின் தரம் அதன் நுணுக்கங்கள் பற்றிய எந்த அறிவுமில்லாதோரின் தூண்டுதலினால் கலாசார அமைச்சர் இதில் தலையிட்டுள்ளார். அதனால் இத்திரைப்படம் திரையிடப்படக்கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் இப்படம் சிறுவர் துஷ்பிரயோகக் காட்சிகளைக் கொண்டதாக இருப்பது என்பதே கலாசார அமைச்சின்வாதம். இன்றைய பிரதான தேசிய ஊடகங்கள் இத்திரைப்படம் பற்றிய - அது இன்னும் திரையிடப்படாத நிலையிலும் - வாதம் பிரதிவாதங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளன.

இத்திரைப்படத்தில், குளியல் தொட்டியில் ஒரு சிறுவனை நிர்வாணமான நடிகை முன்னே நிற்பாட்டுவதன் மூலம் ஹந்கம சிறுவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதே கலாசார அமைச்சரதும் சிறுவர் துஷ்பிரயோக திணைக்களத்தின் பொலிசாரும் கண்டுள்ள குற்றமாகும். ஆனால் ஹந்தகமவுக்கு சார்பாக வாதிடுவோர் பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றனர்.
1. கலாசார அமைச்சினால் நியமிக்கப்பட்ட தணிக்கை சபை அனுமதித்த பின்னர் அதை ரத்த செய்வதற்கு அமைச்சருக்கு என்ன அதிகாரம் உண்டு? அப்படியானால் அவர் நியமித்த தணிக்கை சபை பிழையானதா? அறிவற்றதா? தமது தீர்ப்பை ரத்து செய்தமைக்குப் பின்னரும் தணிக்கை குழு ஏன் இன்னும் தமது பதவியிலிருந்து விலகாது இந்த அவமரியாதையைத்தாங்கிக் கொண்டிருக்கிறது?
2. ஏற்கனவே சோமரத்ன திசாநாயக்காவினால் தயாரிக்கப்பட்ட 'சமனலதட்டு', 'சூரிய ஆரண்ய' ஆகிய இரண்டு படங்களிலும் ஹந்தகமவின் படத்தில் உள்ள காட்சிக்கு இணையான காட்சிகள் உள்ளன. துஷ்பிரயோகத்திற்கு பின்னர் நிர்வாணமாக ரோட்டில் ஓடும் சிறுவனின் காட்சி 'சமனல தட்டு'வில் இடம் பெறுகிறது. 'சூரிய அரண்ய'வில் சிறுவனான புத்தபிக்கு காவியுடையை களைந்துவிட்டு தனது விளையாட்டுத் தோழனோடு ஓடிப்போகும் காட்சி இடம் பெறுகிறது. ஏன் இக்காட்சிகள் கலாசார அமைச்சுக்கு துஷ்பிரயோகமாகப்படவில்லை? இன்னும் இரண்டாவது படத்திலுள்ள காட்சி, பௌத்த சமயம் போற்றும் 'வினைய' கோட்பாட்டுக்கே எதிரானது. இவற்றையெல்லாம் கலாசார அமைச்சு எவ்வாறு சகித்துக் கொண்டது? இப்படங்களைத் தயாரித்தவர்' தற்போதுள்ள ஆளுங்கட்சியின் பெரும் பிரச்சாரகராக இருந்தார் என்பதாலா?

கடந்தவாரத்திற்கு முதல்வாரம் தர்மசிறிபண்டாரநாயக்காவின்' திரிகோண' நிலையத்தில் நாம் சிலர் ஹந்தகமவைச் சந்தித்து உரையாடியபோது அவர் தனது திரைப்படத்திற்கு, திரைப்படம் பற்றிய அறிவற்ற சமான்யர்களால் ஏற்படுத்தப்பட்ட அபத்தமான விளைவுகளை விளக்கினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய விசாரணையை மேற்கொள்ளும் பொலிசார், ஹந்தகமவின்மேல் சுமத்தும் குற்றம், அவர் ஒரு சிறுவனை நிர்வாண நடிகையின் முன்னால் நிறுத்திபடமெடுத்ததோடுஅவளால் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட வைத்தார் என்பதே. இதில் வேடிக்கை என்னவெனில் இன்றைய திரைப்படம் எடுத்தல் தொடர்பாகவுள்ள தொழில்நுட்பம் எதுவும் தெரியாதவர்களின் பாமரத்தனமான குற்றச்சாட்டே இது.

ஹந்தகம பொலிசாருக்கு கொடுத்த தனது வாக்கு மூலத்தின்போது, பிரச்சினைக்குரிய காட்சியானது தனித்தனியே எடுக்கப்பட்டு எடிட்டிங்மூலம் இணைக்கப்பட்டதேயொழிய சிறுவன் நிர்வாணப் பெண்ணெதிரே குளியல் தொட்டியில் நிற்பாட்டப்படவில்லை என்பதை விளக்கினார். பொலிசாருக்கு கொடுத்த வாக்கு மூலத்தில் நடித்த சிறுவனும் இதை உறுதி செய்ததோடு படமெடுக்கப்பட்டபோது அங்கிருந்த சிறுவனின் தாயாரும் நிர்வாணப் பெண்ணின் முன்னால் தன்னுடைய மகன் விடப்படவும் இல்லை அவளால் தாக்கப்படவுமில்லை என்பதையும் உறுதி செய்தார்.
இதை விளங்கிக் கொள்ள முடியாத கலாசார அமைச்சும் சொலிசாரும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பதே வேடிக்கை.

தன்மேல் சுமத்தப்பட்ட குற்றங்கள் பற்றி ஹந்தகம இறுதியாக பின்வருமாறு கூறினார். "ஒருகட்டத்தில், இந்தப் பாமரத்தனமான குற்றங்களைக் கேட்டபோது, எனக்கு அழுகையே வந்துவிட்டது. காரணம் எனக்கும் சிறு பிள்ளைகள் இருக்கிறார்கள்".

மூலப் பதிப்பு.


நன்றி: எரிமலை.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 15, 2006

மதியுரைஞர் பாலசிங்கம் மறைவு

விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் 15.12.2006 அன்று அதிகாலை மரணமடைந்தார்.
அண்மைக்காலத்தில் புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு ஏற்பட்டதிலிருந்து அவர்களின் தத்துவ கொள்கை வகுப்பாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் தமிழர்கள் தரப்பில் பல பேச்சுக்களில் கலந்துகொண்டவர்.
இவரின் இழப்பு அரசியற்களத்தில் ஈழத்தவருக்கு மிகப்பெரும் இழப்பு.

அரசியல் ஆலோசகருக்கு எம் மனம் நிறைந்த அஞ்சலி.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, December 13, 2006

நேர்காணல்: ஓவியர் விஜிதன்

_____________________________________

இது எரிமலை சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணல்.
ஈழத்து ஓவியத்துக்குப் புது வரவான விஜிதனுடனான நேர்காணலை இங்குப் பதிகிறேன்.

_____________________________________

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை


சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி வீட்டிலவந்து ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம்.

** இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன?

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக்கொண்டு ஏதாவது புதிதாகச் செய்யவேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். படிப்பித்த மாஸ்டர்மார் அவையள் என்னென்னமாதிரி படிப்பிச்சிச்சினம் அதுகளெல்லாம் ஓவியங்களுக்கூடாக வெளிப்பட்டிருக்கு.
ஓவியர் ரமணி வந்து கூடுதலாக கூடப்படிப்பித்தார். கூடுதலான அளவு அவரைப் பின்பற்றிச் செய்திருக்கிறேன். எனக்கு அவற்ற ஸ்ரைல் பிடிக்கும் அதுகள் இந்த ஓவியங்களில வந்திருக்கு அதுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்திருக்கிறன் என்பதை இதில பார்க்கக்கூடியதாக இருக்கும்.




** இங்கே உங்களுடைய ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்ற பொழுது பயன்படுத்தின உத்திகள் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கிறது. பாணி என்று சொல்கின்ற பொழுது தனித்துவமான ஒரு பாணி மிக முக்கியமானது. இங்கே ஒவ்வொன்றும் ஒரு சாயலில் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் கற்றுக்கொள்கிற பொழுது எல்லாவற்றையும் அறிந்துகொள்வதாலா?

ஏனென்று சொன்னால் பல்வேறுபட்ட கலைஞர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வேற வேற பாடங்களை படிச்சிருக்கிறேன். அதில பல உத்திமுறைகள் இருக்கு. அதால ஒவ்வொரு உத்திமுறைகளை பயன்படுத்தி அந்தப்படங்களை செய்திருப்பன். எனக்குப் பாடத்திட்டத்தில இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி வரையறைகள் இருக்கு. அப்ப நான் அந்த வரையறைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்தப் படங்களை செய்திருக்கிறேன். அந்தப் படைப்புகள் கட்டாயம் அப்படி இருக்கும். இன்னொன்றை செய்யும் பொழுது வேறு மாதிரி செய்திருப்பேன். இந்தப் படைப்பு வித்தியாசமாக இருக்கும். இப்ப நான் படிச்சுக்கொண்டிருக்கும் காலத்தில அதில ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்வதென்பது சாத்தியமில்லா விசயம்;. ஏனென்று சொன்னால் நான் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பின்பற்றி அவர்களுடைய விருப்பத்துகேற்றமாதிரி படத்தை செய்து முடிக்கிறேன். அப்படி செய்யப்பட்டப் படங்களைத்தான் இன்றைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறன். அவை தனித்துவத்தை இழந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக நான் சொல்லப் போனால் பொதுவாக சில ஓவியங்களை தனித்துவமாக வைத்திருக்கிறேன் இருளும் ஒளியும் சம்பந்தமான விசயத்தில நான் கூடுதலாக தனித்துவம் என்று சொல்வதை விட நான் அதை எல்லா ஓவியங்களிலும் பெரும்பாலும் கொண்டுவந்திருக்கிறேன். அதாவது மிகவும் இருட்டான பின்னணியில ஓவியத்தை வரைகின்ற தன்மையைக் கொண்டுவந்திருக்கிறேன். அது நாளடைவில எனது தனித்துவமாக மாறலாம்.



** உங்களுடைய ஓவியங்களில் குறைந்த வெளிச்சத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

ஒரு ரசிகன் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது அந்த ஓவியத்தை எப்படி பார்க்கிறான் அந்த ஓவியத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டுப் போவதை விட இருட்டா இருக்கா என்ன விசயம் இருக்கென்று கிட்டப்போய் பார்க்கிறானா உண்ணிப்பாப் பார்க்கிறானா தூர நின்று பார்க்கிறானா அப்படியான விசயங்கைள தூண்டக் கூடியது மாதிரி ஒளி அமைக்கிறது முக்கியமான ஒரு விசயம். அது ஓவியத்த மிகவும் ஆழமாப் பார்க்கிற சாத்தியப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில இந்த ஓவியக்கூடத்தில ஒளியை குறைச்சு வைத்திருக்கிறேன். அதற்கும் ஓவியங்களில ஒளி இருள் தன்மைய கொண்டுவந்ததுதான் முக்கியமான காரணம் என்பேன்.

செவ்வியின் தொடர்ச்சி....
___________________________________________
செவ்வியின் தொடர்ச்சியையும் மேலதிக ஓவியத்தையும் எரிமையில் காணலாம். அப்பதிப்பும் ஒருங்குறியிலேயே இருப்பதால் அனைவராலும் வாசிக்க முடியும்.

நன்றி: எரிமலை

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, December 12, 2006

ஈழ எழுத்தாளருள் மார்க்சியப் பரிச்சயம்

________________________________
தினக்குரல் பத்திரிகையில் வந்த கட்டுரையிது.
பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது.
தகவல்களைப் பொறுக்கவோ புது விவாதமொன்றை உருவாக்கவோ உதவக்கூடும்.

________________________________

ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம்
பனுவல் - நந்தினி சேவியர்

கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே மார்க்சிய இலக்கிய பரிச்சயம் ஈழத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி ஒரு மார்க்சியக் கட்சியாக 1935 இல் உருவாக்கப்பட்டது. 1935 இல் ஐக்கிய சோஷலிசக் கட்சியாகவும் பின்னர் 1943 இல் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியாகவும் மார்க்சிய இயக்கம் வளர்ந்தது.

பொன்னம்பலம் கந்தையா, அ. வைத்தியலிங்கம், கார்த்திகேசன், வி. பொன்னம்பலம், நா. சண்முகதாசன் போன்றவர்களே மார்க்சிய சிந்தனையை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவர்களாவர்.

1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற "பாரதி" எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே. ராமநாதன் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே.

`பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி, அ.செ. முருகாநந்தன், கே. கணேஸ், மகாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்.

அ.ந. கந்தசாமி இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தேசாபிமானிப் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் `சுதந்திரன்', `வீரகேசரி' பத்திரிகையிலும் பணியாற்றினார். மறுமலர்ச்சி கால எழுத்தாளராக கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி, பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வையூர் அருளம்பலம் சுவாமிகள்தான் என்பதை தெளிவுற நிலைநாட்டியவராகும்.

யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எம்.சி. சுப்பிரமணியம் தலைமையில் உருவான சிறுபான்மை தமிழர் மகா சபையில் அங்கத்தவர்களாக இருந்த டானியல், ஜீவா, எஸ். பொன்னுத்துரை, என்.கே. ரகுநாதன், கவிஞர் பசுபதி போன்றவர்களே ஆரம்பகால முற்போக்கு எழுத்தாளர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் மார்க்சிய சிந்தனையால் கவரப்பட்டவர்களே.

இவர்களோடு செ. கணேசலிங்கன், முருகையன், சில்லையூர் செல்வராசன், அகஸ்தியர், இளங்கீரன், எச்.எம்.பி. முகைதீன் போன்ற படைப்பாளிகளும் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களும் முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இது 1954 ஜூன் 27 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அமரர் பா. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பாடல், டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் மார்க்சியத்தின் பால் ஆழமான ஈடுபாடு கொண்டார்கள்.

இவர்களது படைப்புகள் பிற்கால `ஈழகேசரி'யிலும் `சுதந்திரன்' போன்ற பத்திரிகைகளிலும் ஏராளமாக வெளிவந்தன.

1960 ஆம் ஆண்டில் மு.போ.எ. சங்கம் தேசிய இலக்கியம் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமும் ஆரம்பிக்கப்பட்டது.

1961 இல் வெளியான இளங்கீரனின் `மரகதம்' பத்திரிகையில் தேசிய இலக்கியம் பற்றிய முதலாவது கட்டுரையை க. கைலாசபதி எழுதினார். பின்னர் ஏ.ஜே. கனகரட்ணா, அ.ந. கந்தசாமி போன்றவர்கள் தேசிய இலக்கியம் பற்றி எழுதினார்கள்.

தேசிய இலக்கியம் முன்வைக்கப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி வந்ததனால் ஆத்திரம் கொண்ட இலக்கிய சனாதனிகள், படைப்பிலக்கியவாதிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். போதிய கல்வியறிவு இல்லாதவர்கள், தமிழ் மரபு தெரியாதவர்கள், மரபை மீறி எழுதும் மட்டமான எழுத்தாளர்கள், இவர்கள் எழுதும் இலக்கியம் இழிசினர் இலக்கியம் என்றெல்லாம் இகழப்பட்டன.

1962 இல் தினகரனில் ஆரம்பிக்கப்பட்ட விவாதத்தில் மரபுவாதிகள் தரப்பில் கலாநிதி அ. சதாசிவம், பண்டிதர் இளமுருகனார், பண்டிதர் வ. நடராஜா போன்றவர்கள் வாதிட எழுத்தாளர் தரப்பில் இளங்கீரன் அ.ந.க. சிவத்தம்பி போன்றோர் வாதிட்டு வென்றனர். க. கைலாசபதி `தினகரன்' ஆசிரியராக இருந்த காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நிறைய ஊக்கம் வழங்கினார். இளங்கீரன், செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன் போன்ற எழுத்தாளர்கள் மிகவும் உற்சாகமாக தமது படைப்புகளை வெளியிட்ட காலகட்டமும் அதுவே.

கைலாசபதி பல்கலைக்கழக விரிவுரையாளராகிய பின்னர் மார்க்சிசத்தை ஆதரித்த பல எழுத்தாளர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து தோன்றினார்கள். செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன் போன்றவர்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். யோ. பென்டிக்ற்பாலன் இவர்களது சமகாலத்தவரே. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலரும் இருந்துள்ளனர். வ.அ. இராசரத்தினம், அ.ச. அப்துஸ்சமது, மருதூர் கொத்தன் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.

சமசமாஜக் கட்சியினைச் சேர்ந்த சு. இராசநாயகன் மார்க்சிய எழுத்தாளராக தம்மை இறுதிவரை காட்டிக்கொள்ளவில்லை. இன்னுமொரு முக்கிய விசேடம் க. கைலாசபதியினால் அறிமுகமான அ. முத்துலிங்கம் ஒரு மார்க்சிய எழுத்தாளராக உருவாகாமல் போனார். இளங்கீரனின் தென்றலும் புயலும், நீதியே நீ கேள், செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், ஒரே இனம், நல்லவன், சடங்கு, டானியல் கதைகள், மேடும் பள்ளமும், (நீர்வை பொன்னையன்) குட்டி, (யோ. பெனடிக்ற்பாலன்), ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை சாலையின் திருப்பம், என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம், யோகநாதன் கதைகள், கவிஞர் பசுபதியின் புது உலகம் முதலியன அறுபதுகளில் வெளிவந்தவையாகும். சோசலிச யதார்த்தவாத படைப்புகள் பற்றிய கருத்துகளும் மார்க்சிய விமர்சகர்களால் இக்கால கட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டன.

கவிதைத் துறையில் முருகையன், சில்லையூர், கவிஞர் பசுபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக அறியப்பட்டதுபோல் மகாகவி அறியப்படவில்லை. அவர் மார்க்சியத்தின்பால் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கவில்லை. இத்தலைமுறையினைத் தொடர்ந்து சண்முகம் சிவலிங்கம், நுஃமான் போன்றவர்கள் அறிமுகமானார்கள். கவிதை புதுவீச்சுக் கொண்டது. மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் முற்போக்காளர்களோடு முரண்பட்ட காலகட்டமும் இதுவே. விமர்சன விக்கிரகங்கள், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம் ஆகிய கட்டுரைகள் இக்காலகட்டத்தில் மு. தளையசிங்கத்தால் எழுதப்பட்டன.

எஸ்.பொ. முற்போக்கு அணியினரால் வெளியேற்றப்பட்டு, நற்போக்கு இயக்கத்தை ஆரம்பித்து, முற்போக்காளரை எதிர்த்ததும் இக்கால கட்டத்தில்தான்.

தமிழ் நூல்களுக்கு சாகித்திய மண்டல பரிசில்கள் வழங்கப்பட ஆரம்பித்ததும் டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் பரிசு பெற்றதும் இக்காலகட்டத்தில் தான். இதனை அடுத்து, புகழ் பெற்ற முட்டை எறிவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இழிசினர் வழக்கு மண்வாசனை என்றெல்லாம் பேசப்பட்ட இலக்கிய வகைக்கமைய மரபு வாதிகள் எழுதத் தொடங்கினார்கள். பின்னர் மண்வாசனையின் பிதாமகர்கள் தாமே என மார்தட்டும் நிலைக்கு அவர்கள் வந்தனர். இந்த ஆரோக்கிய நிலைக்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட இயக்கத்தினரின் போராட்டமே காரணியெனலாம்.

இலங்கை கம்னியூஸ்ட் கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பாக பிளவுபட்ட காலத்தில் க. கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், என்.கே. ரகுநாதன், செ. கணேசலிங்கம் போன்ற எழுத்தாளர்களும் யாழ்ப்பாணக் கவிராயர் சுபத்திரன் போன்ற கவிஞர்களும் சீனச்சார்பு எடுத்தார்கள். க. சிவத்தம்பி, ஜீவா, அகஸ்தியர் போன்றோர் ரஷ்ய சார்பு எடுத்தனர்.

"வசந்தம்" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இ.செ. கந்தசாமியால் வெளியிடப்பட்டது.

இதன்பிறகு, டொமினிக் ஜீவாவினால் "மல்லிகை" ஆரம்பிக்கப்பட்டது.

ரஷ்ய சார்பு எழுத்தாளர்களின் படைப்புகளின் உத்வேகம் மந்த நிலையை அடைந்திருந்தமையால் மு. போ. எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள், 1963 இற்கும் 1973 இற்கும் இடையில் பெரும் தேக்கம் அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகவும் பிரேம்ஜி ஆயுள்காலச் செயலாளர் என கிண்டலாகப் பேசப்பட்ட நிலையும் தோன்றியது.

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றப் பாதைக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்று வந்தன. செ. கணேசலிங்கனின் செவ்வானம், தரையும் தாரகையும், யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் நாவல்களும், நீர்வை பொன்னையனின் உதயம், செ. கதிர்காமநாதனின் கொட்டும் பனி, செ. யோகநாதனின் `ஒளி நமக்கு வேண்டும்' தொகுதிகளும் வெளிவரத் தொடங்கின. தமிழக விமர்சகர்களான க.ந. சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்றவர்களுக்கு பதிலிறுக்கும் க. கைலாசபதியின் மார்க்சிய விமர்சனக் கட்டுரைகளும் நாவலிலக்கியம் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்தன.

தீண்டாமை ஒளிப்பு வெகுஜன இயக்கம் போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற அறை கூவலுடன் இயக்கம் வளர்ந்தது. புகழ் பெற்ற மாவிட்டபுரப் போராட்டம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசப் போராட்டம், நிச்சாமம், மந்துவில், மட்டுவில், அச்சுவேலி, கன்பொல்லை என்ற சாதி அமைப்புக்கெதிரான அலை கொதித்தெழுந்தது.

போராட்ட இலக்கியங்கள் உருவாகின. சுபத்திரனின் இரத்தக்கடன், என்.கே. ரகுநாதனின் மூலக்கதையுடன் அம்பலத்தாடிகள் அவைக்காற்றிய கந்தன் கருணை, மௌனகுருவின் சங்காரம் என்பன தோன்றின. களனி, தாயகம், சமர் அணு, வாகை என முற்போக்குச் சஞ்சிகைகள் பல ஆரம்பிக்கப்பட்டன. டானியலின் பஞ்சமர், செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் போன்ற நாவல்கள் வெளிவந்தன.

சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களின் எழுச்சியைக் கூறும் இலக்கியங்கள், மார்க்சிய இலக்கியங்களாக விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டன. புதுக்கவிதை முற்போக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் நிகழ்ந்தது.

மு.போ.எ. சங்க செயற்பாடுகளில் அதிருப்பியுற்றவர்களால் செம்மலர்கள், இலக்கியவட்டம், தேசியகலை, இலக்கியப்பேரவை, திருகோணமலை முன்னோடிகள், சங்கப்பலகை போன்றவை தோற்றுவிக்கப்பட்டன. இவைபோன்ற இயக்கங்கள் கல்முனை, மன்னார் போன்ற பிரதேசங்களில் உருவாகின.

இவர்கள் திருகோணமலையில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி புதிய ஜனநாயக கலாசாரத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட டானியல், என்.கே. ரகுநாதன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன் போன்றவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மு.போ.எ. சங்கம் 1975 இல் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை கொழும்பில் நடத்தியது. தேசிய இனப் பிரச்சினைத் தீர்விற்கான 12 அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கவியரங்கில் சண்முகம் சிவலிங்கம் மாநாட்டின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் கவிதை ஒன்றைப்பாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மார்க்சிசத்தை ஏற்றுக்கொண்ட டானியல், அன்ரனி, நந்தினி சேவியர், வ.ஐ.ச. ஜெயபாலன், சாருமதி, சசி, கிருஷ்ணமூர்த்தி, நல்லை அமிழ்தன், தில்லை முகிலன், இராஜ தர்மராஜா, பாலமுனை பாறூக் அன்புடீன், முல்லை வீரக்குட்டி, முருகு கந்தராசா, க. தணிகாசலம், சி. சிவசேகரம் போன்றவர்களும் மு. நித்தியானந்தன், சமுத்திரன் சித்திரலேகா போன்ற விமர்சகர்களும் உருவானார்கள்.

சுந்தரலிங்கம், மௌனகுரு, தாசிசியஸ், பாலேந்திரா, இளைய பத்மநாதன் போன்ற நாடக நெறியாளர்கள் உருவானதும் இக்காலகட்டத்திலேயே நிகழ்ந்தது.

செ. கணேசலிங்கனின் குமரன் சஞ்சிகையில் அ. யேசுராசா ஒரு கவிதையை எழுதியமையும் பின் `அலை' சஞ்சிகையை ஆரம்பித்ததும் இக்காலத்தில்தான். மல்லிகையில் கூட அ. யேசுராசாவின் முற்போக்கான ஒரு கவிதை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. "ஊரில் பெருமனிதர் எடுத்த விழாவிடை பேருரைகள் ஆற்ற சில பெரிய மனிதர் மேடை அமர்ந்திருந்தார்...." என அக்கவிதை தொடங்குகிறது.

தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பின் காரசார விமர்சனம் அவரை எதிரணிக்கு தள்ளியது என்ற கருத்தும் நிலவியது.

பிரசார இலக்கியங்கள் என அக்காலத்தில் வெளிவந்த இலக்கியங்களை விமர்சிக்கப்பட்டபோது புதிய இளந்தலைமுறை கலைத்துவப்பாங்கான இலக்கியங்களை உருவாக்கும் முனைப்புடன் செயற்பட்டது. பழைய தலைமுறை எழுத்தாளர்கள் விமர்சகர்களின் தொடர்புகளைத் தவிர்த்து சுயமாக இயங்கும் பக்குவம் இத்தலைமுறைக்கு இருந்தது.

மா.ஓ. வின் யெனான் கருத்தரங்கு உரை அவர்களுக்கு ஆதர்சமாக இருந்தது.

செ. கணேசலிங்கன், டானியல் போன்றோரின் படைப்புகளை தோழமையுணர்வுடன் கடுமையான விமர்சனத்துக்கு இவர்கள் உள்ளாக்கினார்கள்.

பஞ்சமர் நாவல் வெளியீட்டு விழாவில் அன்றைய தினம் தினகரனில் க. கைலாசபதி தாம் எழுதிய விமர்சனத்திற்கு முற்றிலும் மாறான ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் அளவிற்கு விமர்சனம் மிகவும் காத்திரமான முறையில் வளர்ச்சி கண்டது.

சீனாவில் நடைபெற்ற கலாசாரப் புரட்சியின் தாக்கம் இலங்கை விமர்சனத்துறையிலும் படைப்பிலக்கியத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

. ஏ.ஜே. கனகரட்ணா போன்றவர்களே கலாசாரப் புரட்சியை வரவேற்று கருத்துக் கூறும் நிலை இருந்தது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய மாதகல் வ. கந்தசாமி, பாரதியார் கவிதைகளை விமர்சிக்கும் தீவிர போக்கு எடுத்தார். காலக்கிரமத்தில் அவர் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
திக்வெல்லை, நீர்கொழும்பு, அநுராதபுரம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கல்முனை, அக்கரைப்பற்று என்று முற்போக்கு சிந்தனைகளை அங்கீகரித்தவர்கள் பரஸ்பரம் இணைந்து கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகின.

டானியல் பஞ்சமர் வரிசை நாவல்களை முனைப்புடன் எழுதத் தொடங்கினார். இன்று தலித்திலக்கிய முன்னோடியாக கணிக்கப்படும் டானியல் தன்னை ஒரு மார்க்சிய எழுத்தாளராகவே இறுதிவரை கூறி வந்துள்ளார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

1983 க்குப் பின்னர் ஈழத்தில் ஏற்பட்ட மாற்றம் மிக முக்கியமானது. தேசிய ஐக்கியத்தை வலியுறுத்திய முற்போக்கு எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாதபடி தமிழர் பிரச்சினைகளை எழுதத் தலைப்பட்டனர்.

1986 செப்டெம்பர் 17 இல் இனப்பிரச்சினையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் மாநாடு ஒன்று யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடப்பட வேண்டியது.

வானம் சிவக்கிறது எழுதிய புதுவை இரத்தினதுரை, தமிழரின் ஆஸ்தான கவிஞராக மாறினார். இரவல் தாய்நாடு போன்ற செ. யோகநாதன், செ. கணேசலிங்கன் ஆகியோரின் நாவல்கள் வெளிவரத் தொடங்கின.

இது சிலரால் முற்போக்கு எழுத்தாளர்களின் பின்னடைவாக கருதப்பட்டது. ஆனாலும், இதுவும் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களின் ஒரு முற்போக்கான நிலைப்பாடாகவே கருதப்பட வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியின் மறுபரிசீலனை விமர்சனங்கள் வெளிப்பாடடைந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

மார்க்சிய விமர்சனத்தை அங்கீகரிக்காது இருந்த ந. சுப்பிரமணியம் போன்றவர்கள் மார்க்சிய விமர்சகர்களாக மாறியதும் இக்காலத்தில்தான்.

ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய விடயம் மார்க்சிய எழுத்தாளர்களையும் மார்க்சிய இலக்கியத்தையும் எதிர்த்தவர்கள், மார்க்சியத்தை எதிர்க்கவில்லை என்பதுதான்.

இதற்கு சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். எஸ். பொ. சுபமங்களா பேட்டியில் தன்னை ஒரு மார்க்சியத்து உடன்பாட்டுக்காரராக குறிப்பிடுகிறார். அதேபோல், மு. பொன்னம்பலம் மூன்றாவது மனிதன் பேட்டியில் தன்னை மார்க்சிய விரோதியாகக் காட்டவே இல்லை. அத்தோடு, தீவிரமாக கவனிக்க வேண்டிய விடயம் மு.பொ. 50 இக்குப் பின் ஈழத்து இலக்கியம் பற்றிய பார்வை என்ன என்ற மூன்றாவது மனிதன் கேள்விக்கு.

50 க்குப் பின் ஈழத்து தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றுத்தான் வந்திருக்கிறது என ஆரம்பித்து.....

முற்போக்கு எழுத்தாளர்கள் டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பணியைக் குறிப்பிட்டுச் சொல்லி `கைலாசபதி' தினகரன் ஆசிரியராக இருந்ததும் முக்கிய பங்களிப்பு என்றும் கூறிவிட்டுத்தான் கைலாசபதி போன்றவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களையே தூக்கிப்பிடித்து நின்றார்கள் என்று கூறுகிறார்.

எம்.ஏ. நுஃமான் `ஞானம்' சஞ்சிகைப் பேட்டியில் பின்வருமாறு ஒரு கருத்தை வைத்துள்ளார்.

குழு விமர்சனம் நமது மார்க்சிய விமர்சகர்களைக் குற்றக் கூண்டில் நிறுத்துவதற்கு மற்றவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் யாவரும் வெவ்வேறு குழுக்களாக இயங்கினார்கள். ஆயினும், மார்க்சிய விமர்சகர்களின் சாதனையை இவர்கள் எட்டவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டும் குழு விமர்சகர்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு இவர்களில் யாருக்கும் தார்மீக உரிமையில்லை. மார்க்சிய விமர்சகர்களை விட மற்றவர்களே வசை விமர்சனத்திற்கு அதிக பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்ற பொருள்பட சில விடயங்களைக் கூறியுள்ளார். இதே பேட்டியில் இன்னோரிடத்தில், நான் ஒருபோதும் எந்த ஒரு மார்க்சிய இயக்கத்துடனும் என்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டவனில்லை. தத்துவார்த்த ரீதியில் மார்க்சியத்துடன் எனக்கு உடன்பாடு இருந்தது என்றும் பல அம்சங்களில் அந்த உடன்பாடு தொடர்கிறது என்று கூறியிருக்கிறார்.

செங்கையாழியான் `ஈழகேசரி'க் கதைகள் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "கலைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் சிறுகதை படைக்கின்ற காலச்சூழலை நாம் கடந்த இந்த மண்ணில் ஏற்றத்தாழ்வற்ற சகல சுதந்திரங்களையும் அனுபவிக்கும் மானிட இருப்பினை நிலைநாட்டுவதற்கான தத்துவப் புரிதலோடு புனைகதைகளைப் படைக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்ச முன்னேற்றத்திற்கும், உலக சமூகத்தின் ஒருங்கிணைந்த விடுதலைக்கும், உயர் மானிடன் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களுக்கும் உகந்த தத்துவப்புரிதலை மார்க்சியம் ஒன்றுதான் இன்றும் கொண்டிருக்கின்றது."

இக்கருத்துகள் சமீபத்தில் வெளிவந்தவையே. எனவே, மார்க்சிய இலக்கியத்தையோ விமர்சனத்தையோ எவரும் நிராகரிக்கவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டுமே எதிர்த்தார்கள் என்பது தெளிவு.

இன்றைய நிலையில் தமிழர் பிரச்சினையை விட்டு விட்டு இலக்கியம் படைப்பது என்பது சாத்தியமற்றதாகிவிட்டது.

இயக்கம் சார்ந்த படைப்புகளாக நிராகரிக்கப்பட்ட முற்போக்கு இலக்கியங்களை விஞ்சுமளவுக்கு, தமிழ்ப் போராளிகள் குழுக்களை ஆதரித்த, எதிர்த்த படைப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை புலம்பெயர்ந்தோர் சஞ்சிகைகளில்தான் வெளி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு.

இது சென்ற நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியத்தின் வெற்றியென்றே கருதப்பட வேண்டும்.

நமது ஈழத்து நிலைமை தமிழக நிலைமையை விட வித்தியாசமானது. எமது சூழலை நிகர்த்த வேறு பல நாடுகளின் இலக்கியங்களோடு எமது இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு இலக்கிய விமர்சன முறைமையை நாம் செய்வதுதான் தற்போதைய கடப்பாடாக நாம் கருத வேண்டும். அதுவே இந்த நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியவாதிகளின் முக்கிய பணியாகவும் இருக்க வேண்டும்.

உசாத்துணை

1. புதுமை இலக்கியம் 2. சிறுபான்மை தமிழர் மகாசபை மலர் 3. இளங்கீரனின் தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் 4. புதுமை இலக்கியம் பேரரங்கு- 96 5. மூன்றாவது மனிதன் இதழ்- (04) 6. மூன்றாவது மனிதன் இதழ்- (05) 7. ஞானம் இதழ்- 02 8. ஞானம் இதழ்- 03 9. சுபமங்களா நேர்காணல் 10. ஈழகேசரிக் கதைகள் முன்னுரை

பின் இணைப்பாக சில குறிப்புகள்

மார்க்சியத்தை அங்கீகரிக்கும் கே.ஆர். டேவிட், ந. ரவீந்திரன் (வாசீகன்), எம்.வை. ராஜ்கபூர் போன்றவர்களும் எழுபதுகளில் முன்பின்னாக அறிமுகமாகியவர்களே. ந. ரவீந்திரனின் விமர்சனக் கட்டுரைகள் மார்க்சிய நோக்கிலானவை. லெனின் மதிவாணம் ஒரு மார்க்சிய விமர்சகராக 90 களில் அறிமுகமாகியுள்ளார்.

தனது 25 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய தேசிய கலை இலக்கியப் பேரவை கடந்த நூற்றாண்டில் வெளியீட்டுத் துறையில் மிகக் காத்திரமான பங்கினைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்க்சிய இலக்கியவாதிகள் அல்லாதவர்களினதும் படைப்புகளையும் தே.க.இ. பேரவை வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என பல்துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு வருவது ஈழத்து மார்க்சிய இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயமாகும். `தாயகம்', பத்திரிகையை மிகுந்த நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திலேயே வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய நிகழ்வாகும்.

______________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 10, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, December 10, 2006

கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார்

ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார்.
புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார்.

இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்திருந்தது.

இவரது "காற்றுவழிக் கிராமம்" என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

56 வயதான இவர், 2 பிள்ளைகளின் தந்தை ஆவார்.



மயூரன் போன்றோர் மேலதிக தகவல்களைப் பதிவார்கள் என்று நினைக்கிறேன்.
செய்தி: புதினம்.
________________________________
கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தன் குரலிலேயே பாடிய பாடல்களின் ஒலிவடிவங்களடங்கிய மதி கந்தசாமியின் முன்யை பதிவை இஙகுக் காணலாம்.

சு.வில்வரத்தினம் குரல்பதிவு

பெயரிலியின் பதிவு -சு. வில்வரத்தினம் மறைவு

சோமிதரனின் பதிவு - சு. வில்வரத்தினம். . .

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 08, 2006

படைப்பாளிகளின் பட்டியல்: படைப்புலக அடக்குமுறை

"ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்" என்ற தலைப்பில் தினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரையொன்றை ஏற்கனவே பதிவாக்கியிருந்தேன்.
இம்முறை அக்கட்டுரையை விமர்சித்து ஒரு கட்டுரை தினக்குரலில் வந்துள்ளது.
எதிர்வினைக் கட்டுரையில் பெரியளவில் குறிப்பிடக்கூடியவையில்லையென்று நான் கருதினாலும் அதையும் இங்குப் பதிவாக்குகிறேன்.


இங்கும் சொந்தப்பேரில் எழுதும் பிரச்சினை வருகிறது. ;-)

ஏற்கனவே "பட்டியலிடுதல்" தொடர்பாக பெயரிலியுட்பட சிலரால் வலைப்பதிவுகளில் கதைக்கப்பட்டதென்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
_________________________________________________


படைப்பாளிகளின் பட்டியல் படைப்புலக அடக்குமுறை!
-எம்.நவாஸ்சௌபி-

படைப்பாளர்களை பட்டியல் படுத்தும் ஒரு நடைமுறை இலக்கிய உலகில் காணப்பட்டு வருகிறது. இதற்காக சரியான மதிப்பீடுகள் அல்லது அளவுகோல் பற்றிய ஒரு வரையறையை முன்வைக்காமல் இவ்வாறு பட்டியல் படுத்தும் முயற்சிகள் இன்னும் இடம் பெறுவது தான் பலவீனமான ஒரு விடயமாக இருக்கிறது.

`தினக்குரல்' பனுவல் பகுதியில் `ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்' எனும் தலைப்பில் தாவிது கிறிஸ்ரோ - என்பவர் படைப்பு சார்ந்த பட்டியலுடன், பின் நவீனத்துவத்திற்கான பெருத்த கண்டனத்தையும் எழுதியிருந்தார்.

அவரிட்ட பட்டியலும் புதியதல்ல. இதற்கு முன்னும் பட்டியலிட்டவர்களினால் காட்டப்பட்டுள்ள அனேக பெயர்கள் இதில் இடம் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது. அவர்களது பெயர்களை நானும் சொல்வது மீண்டும் ஒரு பட்டியலை நானும் இடுவதாய் ஆகி விடும் என்பதால் அதிலிருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

படைப்புலகில் பரிசோதனை முயற்சிகள் என்று எதுவுமில்லை அவை படைப்புகளின் `வித்தியாசம்' என்று தான் பார்க்கப்பட வேண்டும். ஒரு படைப்பின் வாசிப்பை ஒரு சார்பாக கொண்டு ஏனைய படைப்புகளை புறம் தள்ளுவது என்பது படைப்புலக அடக்கு முறையாகும்.

தாவிது கிறிஸ்ரோ எழுதிய பரிசோதனை முயற்சிகள் என்ற கதையாடல் படைப்புலகின் வித்தியாசங்கள் என்று திருத்தப்பட வேண்டியது. இவ்வாறு ஒரு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுகிறவர்கள் ஒரு வரையறைக்குள்ளானவர்களாக ஆளாக்கப்படுகிறார்கள் என்பது ஒரு மறைமுகமான உளவியல் பார்வையாகும். இது அவர்களின் விசாலமான படைப்புச் செயற்பாட்டை குறுகியதாக்கி ஒரு முகப்பட்ட பார்வையை அவர்களது படைப்புகளுக்கு கொடுத்து விடுகிறது.

ஆனால் படைப்பு என்பது பன்முகப்படுத்தப்பட்ட பார்வையினைக் கொண்டது. அதனை வாசகர்கள் தங்களது வாசிப்பு பிரதி மூலம் அப்படைப்பின் வேறுபட்ட கூறுகளையும் தங்களது ஆளுமைகளுக்கேற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்து கொள்வார்கள்.இந்த வகையில் விமர்சனம் என்பதும் ஒரு படைப்பிற்கு போலித்தன்மையை உருவாக்கி விடுகிறது. அப்படைப்பின் பன்முகத் தன்மையை அது அழித்து விடுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

ஒரு படைப்பின் பரிசோதனை முயற்சியை அளவிட வித்தியாசமான உருவ அமைப்பை அடிப்படையாகக் கொள்வது தவறான ஒரு புரிதலாகும். ஒரு படைப்பிற்கு உருவ அமைப்பு என்பது கூட நிலையான ஒரு விடயமல்ல. அது மாறிக் கொண்டு வந்த வரலாறு நம்மிடமுண்டு மரபை உடைத்துக் கொண்டு புதிய கவிதை அமைப்பு உருவானது. புதியதை உடைத்துக் கொண்டு நவீன கவிதை அமைப்பு உருவானது என்ற கதைகள் இதற்கு சான்று பகிர்கின்றன.

படைப்பியலைப் பொறுத்தவரை மரபு, புதியது, நவீனம், பின் நவீனம் என்ற எந்த சித்தாந்தங்களுமில்லை என்பதே எனது கருத்து. இவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் தேவையை மட்டும் திருப்திப்படுத்துகின்ற கதையாடல்களாக இருப்பவை. இந்த சித்தாந்தங்கள் எதுவும் நிலையான இருப்புக் கொள்ள முடியாமல் காலத்தால் புறம் தள்ளப்பட்டிருப்பதை சங்க காலத்திலிருந்து எம்மால் பார்க்க முடிகிறது. இது தவிர்க்க முடியாததுமாகும்.

இத்தகைய கருத்துச் சமர்களுக்கு அப்பால் உணர்வுகளை மொழிப்படுத்தும் படைப்புலகம் தன் பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கவிதை எல்லாக் காலத்திலும் கவிதையாகவே இருக்கிறது. இவர்களுடைய மதிப்பீடும் அளவுகோலுமே அவற்றை தப்பான திசைக்கு அழைத்துச் செல்கின்றது.

ஒரு படைப்பை மதிப்பிடும் பணி இன்னொரு படைப்பாளியினுடையது அல்ல. அவ்வாறான மதிப்பீட்டில் தன் படைப்பு சார் பண்புகளையே அவர் நிறுவ முனைவது குறிப்பிட்ட படைப்பின் பன்முகத்தை இல்லாது செய்கிறது. அது வாசகர்களின் வாசிப்பு மதிப்பீடாக முன்வைக்கப்படும்போதுதான் படைப்பாளியினுடைய உழைப்பிற்கான உண்மையான ஒரு வெகுமதியை கொடுப்பதாக காண முடிகிறது. எனவே, படைப்புகளுக்கும் சித்தாந்தங்களுக்குமிடையில் ஓர் தடை கல்லாக வாசகர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

படைப்புலக கருத்தியல் இவ்வாறிருக்க, பின் நவீனத்துவம் பற்றிய எதிர்வினைகள் இப்போது ஆங்காங்கே மின்னுகின்றன. இது `பெரு வெளி' எனும் சஞ்சிகையின் வருகைக்கு பின்புதான் என்பதையும் தாவிது கிறிஸ்ரோவின் கட்டுரையில் நன்றாக அறிய முடிகிறது. இவ்வாறு பின் நவீனத்துவ எதிர்வினையை செய்பவர்கள், தங்களது சொந்த பெயரில் எழுதிய கட்டுரைகள் எதனையும் காண முடியாமலிருக்கிறது. எந்த கருத்தையும் தனது சொந்தப் பெயரில் சொல்வதற்கான முதுகெலும்புடைய பேனையை வைத்துக் கொண்டு அவர்கள் எழுதிக் கொண்டால் அதன் பின்புலத்தையும் அவர்களுடைய எழுத்துக்கப்பால் அறிய உதவுமே என்பது எனது நப்பாசை.

____________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 03, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, December 07, 2006

மிதிவெடி செய்வது எப்படி?

எல்லாரும் அதுசெய்வது எப்படி? இது செய்வது எப்படி? எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம்.
மணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல.

இப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் "எப்படி?" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன்.
நான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன்.
'வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?' எண்டு போன பதிவில எழுதினன்.
இப்ப வேற ஒரு 'எப்படி?ப்' பதிவு.

பதிவில் புதிதாக ஏதுமில்லை. "எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே.
_____________________________________

உங்களுக்கு மிதிவெடியைத் தெரியுமா?
அதைப் பார்த்திருக்கிறீர்களா?
மதிவெடிகளுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு மிதிவெடி முதன்முதல் அறிமுகமானது யாழ்ப்பாணத்தில் 1993 இன் இறுதிப்பகுதியில். மானிப்பாயிலிருந்து யாழ்நகர் நோக்கி வரும்போது, ஆனைக்கோட்டை முடிவில், உயரப்புலச் சந்தியில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது ஞாபகமிருக்கிறதா? அதன் பெயரை யாரும் மறந்துவிட முடியாது. 'சும்மா ரீ ரூம்' (SUMMA TEA ROOM) என்பதுதான் அவ்வுணவகத்தின் பெயர். அதன் பெயரே ஒரு கவர்ச்சியான விசயம்தான். நானறிந்ததிலிருந்து என் அப்பா அம்மா காலத்திலேயே அது பிரபலமான பெயர்தான். மிகச்சிறிய கடைதான். வீதிக்கரையிலிருந்ததால் அதன்வழியால் போய்வரும் எவரையும் வாயூற வைத்துவிடும். யாழ்பபாணத்திலுள்ள மற்ற எந்த உணவகங்களையும்விட அது வித்தியாசமானது. அதிகமான கடலுணவுகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இறால், கணவாய், சிங்கிறால், நண்டு என்று விதம்விதமான கடலுணவுப் பொரியல்களும் கறிகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாவாந்துறையும் காக்கைதீவும் அருகிலிருந்தது அதற்கு வசதியாக இருந்தது. பின்னேரத்தில அந்தக்கடை வலுகலாதியா இருக்கும். கடையோட சேத்தே ஒரு 'பார்' இருந்ததும், கொஞ்சம் தள்ளி பிரபலாமான 2 தவறணைகள் இருந்ததும் அதுக்குக்காரணம்.

சரி. கதைக்கு வருவோம். எனக்கு மிதிவெடி அறிமுகமானதும் இந்த 'சும்மா ரீ ரூமில்' தான். என்ன குழப்புகிறேனா? மதிவெடி எண்டா ஒருவகைச் சாப்பாடு. அதைத்தான் சொல்ல வந்தேன். நாங்கள் வழமையாகச் சாப்பிடும் 'றோல்' வகையைச் சேர்ந்தது. சற்றுப்பெரியது. உள்ளே கூடுதலான கலவைகள் இருக்கும். கட்டாயம் அவித்த முட்டையின் கால்வாசியோ, அதைவிடச் சற்றுப் பெரிய துண்டோ இருக்கும். இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டாலே ஒரு நேரச் சாப்பாடு நிறைந்துவிடும். இதுதான் மிதிவெடி.

ஒருநாள் உதைபந்தாட்டப் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு வரும்போது நண்பனொருவன் (இவன் உயரப்புலத்தில் அந்த சும்மா ரீ ரூமுக்கு அருகில்தான் வசிப்பவன்) சொன்னான் இந்த மதிவெடியைப் பற்றி. அப்போது நாங்களறிந்த மிதிவெடியென்பது கால்நடைகளின் (மனிதர்களும் இதற்குள் அடக்கம்) கால்களைப் கழற்றும் சிறுகண்ணிவெடிகள்தான். அப்போது மிதிவெடி என்ற சிற்றுண்டியைப் பற்றிக் கதைத்தபோது எல்லோரும் சிரித்தோம். இப்படி நாலைந்துமுறை அவன் சொல்லிவிட்டான். ஒருநாள் நக்கல் தாங்காமல் அவனே தான் மதிவெடி வாங்கித்தருவதாகச் சொல்லிக் கூட்டிச்சென்றான். காசைத்தந்து 3 மிதிவெடி வாங்கச்சொல்லி எங்களக் கேட்டான். மிதிவெடி எண்டு கடையில கேட்டு அடிவாங்க வைக்கத்தான் இவன் பிளான் போடுறான் எண்டு நினைச்சு அவனையே வாங்க வைச்சோம். உவன் மிதிவெடி எண்டுதான் கேக்கிறானோ எண்டத உறுதிப்படுத்த நான்தான் கூடப்போனன். என்ன ஆச்சரியம்! மிதிவெடி எண்டுதான் கேட்டான். அவங்களும் தந்தாங்கள். அண்டைக்கே அதின்ர சுவைக்கு அடிமையாயிட்டம். பொருளாதார அடிப்படையிலயும் மலிவாகத்தான் இருந்திச்சு. அப்ப ஒரு மதிவெடி 10 ரூபா. ஏறத்தாள 12 வருசத்துக்குப்பிறகு 5 அல்லது 7 ரூபாதான் அதிகரிச்சிருக்கு. இந்த மிதிவெடிக் கதையை நாங்கள் ஏலுமான அளவுக்குப் பரப்பினம். அப்பிடியும் கனபேர் நம்பேல.
----------------------------------------------------
ஒரு முக்கியமான 'எதிரி'ப்பாடசாலையுடனான உதைபந்தாட்டப்போட்டி அன்று நடந்தது. அதில் வென்றால் 500 ரூபா தருவதாக எங்கள் பாடசாலையின் பரமவிசிறியொருவர் சொல்லியிருந்ததால் ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு வெண்டாச்சு. 500 ரூபாயும் கிடைச்சிட்டுது. வழமையா இப்பிடிக் காசு கிடைச்சா யாழ்நகருக்குள்ளயே ஏதோ ஒரு கூல்பாருக்க பூந்து காசைக்கரைக்கிறதுதான் வழமை. அண்டைக்கு ஒருத்தன் சொன்னான் உந்த மதிவெடிப்பிரச்சினையை இண்டைக்குத் தீர்ப்பமெண்டு. சரியெண்டு வாயையும் வயித்தையும் கட்டிக்கொண்டு சும்மா ரீ ரூம் வந்தாச்சு. 25 மதிவெடி தரச்சொல்லிச் சொன்னம். ஆனா அங்க இருந்தது வெறும் 10 தான். சரியெண்டு அவ்வளவத்தையும் வாங்கி பங்குபோட்டுச் சாப்பிட்டம். விசாரிச்சதில வழமையா 20 அல்லது 25 மதிவெடிதான் ஒருநாளைக்குப் போடுறது எண்டார் கடைக்காரர். அதாவது அந்தநேரத்தில் மதிவெடிக்கான வாடிக்கையாளர் அவ்வளவுதான். அது பிரபலமாகாத காலம்.

நானறிய யாழ் நகருக்குள்ள இந்த மிதிவெடிக்கலாச்சாரம் வரவே நீண்டகாலம் எடுத்திச்சு. பிறகு இடப்பெயர்வோட வன்னிக்கும் வந்திட்டுது. வன்னி தாண்டியும் அது போயிருக்கும் எண்டதில ஐயமில்லை. ஆனா கடைக்குக் கடை அதின்ர தரம், சுவை, விலை எல்லாம் மாறத்தொடங்கீட்டுது. அதின்ர பெயர்தான் மாறேலயே ஒழிய அடிப்படைக் கட்டமைப்பு ஆளாளுக்கு மாறிப்போச்சு.
------------------------------------------------------
சரி. ஏன் இந்தப் பேர் வந்தது? எனக்குச் சரியாத் தெரியேல. இது சம்பந்தமா பெடியளுக்குள் அடிக்கடி கதைச்ச ஞாபகம் வருது. அப்பவே 'சும்மா ரீ ரூம்' முதலாளி அன்ரனிட்டயே கேட்டிருக்கலாம். அவர்எங்கயிருந்து இதை அறிஞ்சார் எண்ட விவரங்கள் சேகரிச்சிருக்கலாம். எல்லாம் தவற விட்டாச்சு. ஒரு கவர்ச்சிக்காகத்தான் அந்தப்பேர் வந்திருக்கலாம். சனங்களுக்குப் போர் சம்பந்தமான சொற்களை தங்கட வாழ்க்கையில பாவிக்கிறது வழமையாயிருந்திச்சு. தங்கட சைக்கிளுக்கோ, மோட்டச்சைக்கிளுக்கோ குண்டுவீச்சு விமானங்களின்ர பேரை வைக்கிறது, ஆக்களுக்குப் பட்டப்பேர் வைக்கேக்ககூட ஆயுதங்களின்ர கடற்கல, வான்கலப் பெயர்களை வைக்கிறது எண்டு வழமை இருந்திச்சு. அதின்ர ஒரு தொடர்ச்சியா இந்த மதிவெடியும் வந்திருக்கலாம். சந்திரிக்கா சாறி, ரம்பா ரொட்டி, நதியா சாறி போல, குமரப்பா குண்டு, கடாபி ரொபி எண்டும் எங்கட சனத்திட்ட பெயர்கள் உலாவினது.

இன்னொண்டும் ஞாபகம் வருது. வெளியிற் கழிக்கப்பட் மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இப்பவும் இருக்கு. ஆனா அதுக்கு வலுவான காரணமிருக்கு. ஆனா இந்தச் சிற்றுண்டிக்கு???
ஆருக்காவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ.
***************
மூலப்பதிவு
***************


Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, December 04, 2006

வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?

எல்லாரும் அதுசெய்வது எப்படி? இது செய்வது எப்படி? எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம்.
மணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல.

இப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் "எப்படி?" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன்.
நான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன்.
கிட்டத்தட்ட ரெண்டு வருசத்துக்கு முந்தி எழுதின பதிவிது.

பதிவில் புதிதாக ஏதுமில்லை. "எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே.

இன்னுமொரு பதிவும் இருக்கு. அதை அடுத்ததாக மீள்பதிவாக்கிறன்.


_________________________________________________________

இவ்வலைத்தளத்தில் அன்பே சிவம் பற்றி நானெழுதியதைப் பார்த்த நண்பனொருவன் என்னுடன் கதைக்கும்போது, இது சிறந்த படமாக இருந்தால் தோல்வியடைந்தது ஏன்? (அவன் அதைச் சிறந்த படமாக ஏற்கவில்லை.) என்று வினவினான். “உன்னைப் போல் நிறையப்பேர் நல்ல படமில்லை என்று நினைப்பதால்தான்” என்று கூறி அத்தோடு பேச்சை முடித்து விட்டேன். ஏன் இக்கேள்வியை வலைத்தளத்திற் பதியவில்லை எனக்கேட்டதற்கு, தனக்குத் தமிழில் எழுதும் வழிமுறை தெரியவில்லை எனச் சடையத் தொடங்கினான். உண்மையில் அதற்குக் கிடைக்கும் பின்னூட்டங்களையிட்டுக் கவலைப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டேன். என் எழுத்துக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என் பார்வையையொட்டியே இருந்தன. சரி, இது அவனது இரசனை. எனக்குப் பிடித்ததற்காக இன்னொருவனுக்கும் இது பிடித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க் கூடாது தானே? ஆனால் இக்கேள்வி பற்றிப் பின்பு யோசித்தேன். இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என்னென்ன செய்திருக்க வேண்டும் என்ற என் யோசனைகளை எழுதுகிறேன். தவறேதும் இருந்தாலோ மேலதிகமாக இருந்தாலோ தயவு செய்து எழுதவும்.

கதாநாயகன் அறிமுகமாகும் முதற் காட்சியில் ஒரு குத்தாலங்கடிப் பாட்டுக்கு நூறு பேரோடு சேர்ந்து குதியன் போட்டிருக்க வேண்டும். அப்பாடல் கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவதாயிருந்தால் நன்று.
அன்பும் நாந்தாண்டா…ஆண்டவனும் நாந்தாண்டா
சிவனும் நாந்தாண்டா…சிங்கமும் நாந்தாண்டா
எமனும் நாந்தாண்டா….

இப்படியே தொடரலாம். வார்த்தைகள் புரியாவிட்டாற்கூடப் பரவாயில்லை. கமலால் அப்படி ஆடமுடியாதென்றால் மாதவனுக்காவது சந்தப்பம் வழங்கியிருக்கலாம்.

ஐந்தாறு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டும். (படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் இது போதாது.) குறிப்பாக, காய்கறிச் சந்தையிலும் பாத்திரக்கடையிலும் சண்டை போட வேண்டும். (குறிப்பிட்டளவு மக்களிடம் வரவேற்பைப் பெறாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்) அடிவாங்குவதற்கு ஆட்கள் இல்லாவிட்டால் மாதவனையும் கமலையுமாவது மோத வைத்திருக்கலாம்.

ஆடிக்கடி பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆகக்குறைந்தது “அன்பே சிவம்…அன்பே சிவம்…அன்வே சிவம்...” என்றாவது எக்கோ (echo) தொனியில் அடிக்கடி சொல்லியிருக்கலாம்.

50 ஆண் பெண்கள் அரைகுறை ஆடையிற் புடைசுழ நாலு பாட்டு இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டுத் தெருக்களில் காட்சிப்படுத்துவது முக்கியம். கமலுக்கும் கிரணுக்குமான பாடற் காட்சியை இப்படிப் படமாக்கியிருக்கக் கூடாது. கிரணின் தொப்பையையாவது காட்டியிருக்கலாம் (திருமலை மாதிரி). பாடல் வரிகளிலும் “சரக்கு” இல்லை.

இரசிகர்களைக் கிளுகிளுப்பூட்ட எதுவுமில்லை. சகிலா வகையறாக் காட்சிகள் எதையாவது வைத்திருக்கலாம். ஆகக்குறைந்தது கமலுக்குரிய சர்ச்சையான முத்தக் காட்சியையாவது வைத்திருக்கலாம்.

நகைச் சுவைக்கென யாரையாவது தனியா வைத்துப் புலம்பச் சொல்லியிருக்க வேண்டும். கதையோடு சம்பந்தப்படாமலிருந்தாலும் பரவாயில்லை.

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய போக்கான இரண்டு கதாநாயகி முறையைக் கைவிட்டது பெரிய தவறு. அதுவும் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும்போது “முறைப்படி” நான்கு நாயகிகள் இருந்திருக்க வேண்டும். இரண்டு பேரையாவது உரித்துக் காட்டியிருக்கலாம். மாதவனுடன் வெளிநாட்டில் ஒருத்தி லவ்வினதாகக் காட்டினால் உரித்துக் காட்ட இன்னும் வசதி.

படத்தைச் சுபமாக முடித்திருக்க வேண்டும். சாத்தியப்படும் சில உச்சக் காட்சிகள் (climax) இதோ:

  1. எப்படியோ கிரண் கமலைக் கண்டுபிடித்து கட்டிப்பிடித்திருக்க வேண்டும்.
    கமல் வந்து போனதை எப்படியோ அறிந்து கமலைத் தேடி கிரண் ஒரு பாட்டுப் பாட கமல் ஓடி வந்து….
  2. தமிழ்ச் சினிமாவின் பெரும்பான்மை உச்சக் காட்சியான ரயில் நிலையத்தில் மாதவன் கமலைப் பிடித்து அழைத்து வந்து…..
  3. இறுதி நேரத்தில், கிரணுக்கு முன்னமே எல்லாம் தெரிந்திருந்து அவர்தான் மாதவன் மூலம் இப்படி ஒரு நாடகமாடி கமலை வரவழைத்தார் என்று படத்தை முடித்திருக்கலாம்.
  4. கமலின் நாய் தாலியைத் தூக்கிக் கொண்டு கமலைத் தேடி ஓட துரத்திக் கொண்டு வரும் மாதவனும் கிரணும் கமலைக் காண….
  5. கமலே நாசருடனும் அடியாட்களுடனும் பயங்கரச் சண்டை போட்டு கிரணை மீட்டிருக்கலாம். தேவையானால் மாதவனுடன் கூட சண்டை போட்டிருக்கலாம். அதிலும் பயங்கர அடிவாங்கி சாகுந்தருவாயில் கமல் இருக்கையில் காதலியின் கதறல் கேட்டு மீண்டும் சக்தி வந்து செயலற்றிருந்த கை காலெல்லாம் சரிவந்து ஒரே அடியில் அனைவரையும் தூக்கியெறிந்திருந்தால்... இன்னும் நன்று. அல்லது ஏதாவதொரு சாமியின் அருள் வந்து செய்வதாகக் கூட காட்டியிருக்கலாம். செத்துப் போனதாக மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு கூட இவ்வளவும் சாத்தியமே. (சொக்லேட் மாதிரி).


இன்னும் நிறைய வழிகள் இருக்கிறது. ஏதாவது செய்திருக்கலாம்.

சினிமாக் காரர்களின் உச்சக் காட்சித் தொல்லை (climax) சில படங்களில் தாங்கமுடியவில்லை. அண்மையில் ஒரு படம் பார்த்தேன். (காதல் சுகமானது என்று நினைக்கிறேன்). அதில் சினேகாவும் தருணும் மனசுக்குள் காதலித்தாலும், இறுதியில் சினேகாவுக்கும் இன்னொருவருக்கும் திருமணம். தருண்கூட திருமணத்திற்கு வந்துவிட்டு தாலிகட்டுவதைப் பார்க்கப் பொறுக்காமல் புறப்படுவார். தாலிகட்டும் போது வாசிக்கும் நாதஸ்வரமும் கெட்டிமேளச் சத்தமும் கூட கேட்டுவிட்டது. அடடா! புதுசா இருக்கே என்று திறந்த வாய் மூடவில்லை,.. வைத்தார்களே ஆப்பு. “ஓடிப் போகும்” தருண் முன் மணப்பெண் கோலத்தில் சினேகா. தொலைக்காட்சிப் பெட்டியில் மாப்பிள்ளையைத் திடீர் மணம் புரிந்த தங்கை சிறிதேவி பேசுகிறார். இருவரையும் சேர்த்து வைக்கிறார்.

*****************
மூலப்பதிவு
*****************

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


புரிந்துணர்வு ஒப்பந்தம் புதைக்கப்பட்டாயிற்றா?

அரைகுறையாகச் சேடமிழுத்துக்கொண்டிருந்த அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான "புரிந்துணர்வு ஒப்பந்தம்" முற்றாகக் குழிதோண்டிப் புதைக்கப்படப் போவதாகத் தெரிகிறது.

CFA, buried - Tamilnet

Head of Sri Lanka's Peace Secretariat, Palitha Kohona, has told the visiting Norwegian Peace Envoy Jon Hanssen-Bauer, that the Sri Lankan government was reviewing a proposal of proscribing the Liberation Tigers of Tamil Eelam (LTTE), and had asked the Peace Envoy not to undertake his scheduled mission to Kilinochchi until a Government decision on Wednesday, according to media reports in Colombo. Analysts view the move as a step to effectively nullify the already defunct Ceasefire Agreement (CFA) that specifically prohibits all military offensives including aerial bombardment, offensive naval operations, assassinations, suicide missions and the activities by deep penetration units.

Full story >>

Sri Lanka asks Norway to suspend contacts with Tigers - Hindu

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________