Sunday, September 14, 2008

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி

கோவணக் கொடை வள்ளலின் முகமூடி இன்னொருமுறை  கிழிந்திருக்கும் இவ்வேளையில் பொருத்தம் கருதி இக்கவிதை மீள இடப்படுகிறது.

வள்ளல் வாழ்த்து
-------------

வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.

மீதியும் மிதியும்
-------------------

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.

மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.

திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.

கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.

அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.

இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.


14/ஜூன்/'00

====================================
படைப்பு என்னுடையதன்று.

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, August 10, 2008

தலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவிதை மீளிடுகை

2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் இக்கவிதை மீள இடப்படுகிறது.
==============================

* தலைப்பில்லாக்கனவு.

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.

இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.

~~~~~

அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.

உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்துவலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன்
கடப்பார்கள்.

என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை
விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.

அன்று
இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றியை
அறைகூவித்தான் அலறும்#

~~~~~

அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.

அதனால்,
நினைவுகளின் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல
விளைந்து.

~~~~~

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி
ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.


* இஃது
எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல;
இன்றைய நாளினை நினைவிலே
வைத்துக்கொள்ளமட்டும்
எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே

#"My country did not send me to Mexico City to start the
race. They sent me to finish the race."


- During
1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen
Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place
winner.

மூலவிடுகை எழுதப்பட்டது: 12/17/2004 01:53:00 AM
===============================

எம்மைப் போன்றோர்க்குப் பொதுவான கனவு.
வாசிக்கும்போதே விளங்கியிருக்கும்; இக்"கவிதை" என்னால் எழுதப்பட்டதன்று.
இச்சொற்கூட்டச் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன?

முன்பொருநாள் படியெடுத்துச் சேமித்து வைத்திருந்ததைப் பதிந்திருக்கிறேன். விரைவில் மூலவிணைப்பை வழங்குகிறேன்.

===============================

மீளிணைப்பு:

மேற்கண்ட கவிதையின் மூலவிணைப்பு:
http://kanam.blogspot.com/2004/12/blog-post_110326651516180283.html

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, February 07, 2007

எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...-2

கடந்த கிழமை மெல்பேணில் நடந்த தமிழ் எழுத்தாளர் விழாவில் மூத்த எழுத்தளார் எஸ்.பொ. அவர்கள் ஆற்றிய உரையை முன்னர் ஒலிவடிவில் பதிவாக்கியிருந்தேன்.
இப்போது எஸ்.பொ. அவர்களின் மிகுதி ஒலிப்பதிவுகளைப் பதிகிறேன். மூன்று ஒலிப்பதிவுகளும் mp3, rm ஆகிய வடிவங்களில் தரப்பட்டுள்ளன.

அவ்விழாவில் வழங்கப்பட்ட கேள்விபதில் நேரத்தில் எஸ்.பொ.விடம் கேட்கப்பட்ட கேள்விகளைம் அவற்றுக்கான பதில்களையும் முதலிரு பகுதிகளும் கொண்டுள்ளன.
இரண்டாவது ஒலிக்கோப்பில், 'பின்னவீனத்துவம், நவீனத்துவம்' போன்ற சொல்லாடல்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, "அச்சொற்கள் வாசகனை வெருட்டி பேப்பட்டம் கட்டவே சிலரால் பாவிக்கப்படுகின்றன" என்று எஸ்.பொ. பதிலளிக்கிறார்.



எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு ஒன்று
S.PO-Q&A1.mp3





எஸ்.பொ. கேள்விபதில் - கோப்பு இரண்டு.

S.PO-Q&A2.mp3




அவ்விழாவில் எஸ்.பொ. அவர்களுக்கு வழங்கப்பட்ட பவளவிழா விருதைப் பெற்றுக்கொண்ட பின் அவர் ஆற்றிய உரை மூன்றாவது கோப்பாக வருகிறது.
உரையின் தொடக்கத்தில் இரண்டு நிமிடங்கள் பதிவாகவில்லை.
தனக்கு இதுவரை சாகித்திய மண்டலப் பரிசு கிடைக்காதது குறித்துக் கதைத்தவை அந்த விடுபட்ட பகுதிக்குள் போய்விட்டன.
S.PO-pathilurai.mp...


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, January 29, 2007

ஈழத்து முதற் புதுக்கவிதை

தை -2007 'ஞானம்' சஞ்சிகை அண்மையில் மறைந்த ஈழத்து எழுத்து முன்னோடி வரதரின் நினைவுச் சிறப்பிதழாக வந்துள்ளது. அதில் ஈழத்து முதற் புதுக்கவிதை என்ற தகவலோடு வரதரின் கவிதை வெளிவந்துள்ளது. 1943 இல் வரதர் எழுதி ஈழகேசரியில் வெளியான இக்கவிதை தான் ஈழத்தின் முதலாவது புதுக்கவிதையாகும் என்ற குறிப்பு காணப்படுகிறது. மாற்றுப்பார்வையேதுமிருந்தால் அறிய ஆவல். இனி கவிதை.

ஓர் இரவிலே

இருள்! இருள்! இருள்!
இரவினிலே, நடு ஜாமத்திலே,
என்கால்கள் தொடும் பூமிதொடங்கி,
கண்பார்வைக் கெட்டாத மேகமண்டலம் வரை
இருள் இருள்!

பார்த்தேன்.
பேச்சுமூச்சற்று
பிணம்போல் கிடந்தது பூமி
இது பூமிதானா?
மனித சந்தடியே யற்ற,
பயங்கரமான பேய்களின் புதிய உலகமோ?
'ஓவ் ஓவ்' என்றிரைவது
பேயா? காற்றா? பேய்க்காற்றா?

ஹா!

மனிதன் சக்தியற்றுக் கிடக்கும் இந்த வேளையில்,
அவனுடைய சி்ன்னமே அற்றுப் போகும்படி
பூமியை ஹதம் செய்யவோ வந்தது இப்பேய்க்காற்று!
ஹா, ஹா, ஹா!

'பளிச்! பளிச்!'
அதன் ஒளியிலே இன்பம் வளைவிலே இன்பம்.
ஓ!
ஒளியிலே பயங்கரம்! வளைவிலே பயங்கரம்!
மேகத்தின் கோபம்.
அவன் கண்கள்.... கண்கள் ஏது?
உடம்பிலிருந்து பீறிட்டுக் கிளம்பும் கோபாக்கினி!
விளக்கில் விழுகின்ற விட்டிலைப்போல,
மின்னலின் அழகிலே கண் கெட்டுப்போகாதே!
பத்திரம்!
கண்ணை மூடிக்கொள்.
'பளிச்! பளிச்! பளிச்!'

'பட், பட்... படாஹ்........ பட், படப்....
ஓ!...... ஹோ!...'
முழக்கம்!
இடி!
பேய்க்காற்றின் ஹூங்காரத்தோடு
வேதாள முழக்கம்! முழக்கம்!
காது வெடித்துவிடும்!
உன் ஹிருதயத் துடிப்பு நின்றுவிடும்!
காதைப்பொத்திக்கொள், வானம் வெடித்து விடுகிறது!
"டபார்!"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மேற்படிக்கவிதையில் ஜாமம், ஹதம், ஹூங்காரம், ஹிருதயம் போன்ற சொற்கள் வருகின்றன.
அறுபது வருடங்களின்முன் எங்களிடமிருந்த சொற்பயன்பாடு எப்படியிருந்ததென்று புலப்படுகிறது. அண்மையில் மீள் வெளியீடு செய்யப்பட்ட, நூற்றாண்டுக்கு முன் தொகுத்து வெளியிடப்பட்ட 'யாழ்ப்பாண அகராதி' யில் அதன் மூலத்தொகுப்பாளர் உரை படித்தேன். நூறாண்டுகளுக்கு முன் எங்கள் எழுத்துத்தமிழ் இப்படியா இருந்தது என்றுதான் தோன்றியது.
ஒப்பீட்டளவில் இப்போது நன்கு தேறிவிட்டோமென்றுதான் படுகிறது.
இதற்காகப் போராடியோருக்கு நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்த 'ஞானம்' இதழில் வரதரின் இறுதி நேர்காணல் இடம்பெற்றுள்ளது. அவரின் 'கற்பு' சிறுகதை மீள வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞர் வில்வரத்தினம் தொடர்பான நினைவுக்குறிப்புகள் சில இருவரால் எழுதப்பட்டுள்ளன.

"கலை இலக்கியவாதிகள் சிலரும் உதைபந்தாட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. இதில் யாழ்ப்பாணத்தின் உதைபந்தாட்ட வரலாறின் ஒருபகுதி, முக்கியமாக வடமராட்சியில் உதைபந்தாட்ட நினைவுக்குறிப்புக்கள் பதியப்பட்டுள்ளன. இக்கட்டுரையை எழுதிய வதிரி.சி.ரவீந்திரன், தான் பார்த்த, அறிந்த தகவல்களோடு ஒரு விளையாட்டு வீரனாக தனது அனுபவங்களையும் பதிந்துள்ளார். இன்னும் இக்கட்டுரை படித்துமுடிக்கவில்லை. காலம் பெரும்பாலும் எழுபதுகள் என்பதால் எமக்கு இவை புதுத்தகவல்களாகவே இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முந்தநாள் (27.01.2007) மெல்பேணில் எழுத்தாளர் விழா நடந்தது. ஈழத்தின் மூத்தவர்கள் மூவர் சிறப்பிக்கப்பட்டனர். எஸ்.பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, கலைவளன் சிசு.நாகேந்திரன் ஆகியோரே அம்மூவர்.
இவ்விழா பற்றிய குறிப்புக்களைப் பின்னர் தருகிறேன். எஸ்.பொ. வின் உரையை ஒலிப்பதிவு செய்தேன். தெளிவாக இருந்தால் அதையும் தரமுயல்கிறேன்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, December 13, 2006

நேர்காணல்: ஓவியர் விஜிதன்

_____________________________________

இது எரிமலை சஞ்சிகையில் வெளிவந்த நேர்காணல்.
ஈழத்து ஓவியத்துக்குப் புது வரவான விஜிதனுடனான நேர்காணலை இங்குப் பதிகிறேன்.

_____________________________________

கற்கை, ஆர்வம், தேடல் புதுமை நோக்கிய பயணத்துக்கான துடிப்புக்கொண்ட இளம் ஓவியனின் வருகை


சின்ன வயசிலேயே எனக்கு ஓவியத்தில் ஈடுபாடிருந்தது, வீட்டில நான் ஓவியத்துறையில போறது பற்றி வீட்டிலவந்து ஒரு பிரச்சினையும் இல்லை. நானும் என்னுடைய வழியில் ஓவியத்துறையிலேயே சின்னன் சின்னனாக வளர்ந்து வந்து பாடசாலை, பல்கலைகழகம் அந்த வகையில வெளிப்பட்டதுதான் இந்த ஓவியக் கண்காட்சி என்று சொல்லலாம்.

** இந்த விதி முறைகளை தெரிவுசெய்ய அடிப்படைக் காரணம் என்ன?

பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிப் போனவுடன், எண்ணெய் வர்ணத்தை பாவிக்கின்ற முறையை அறிந்து கொண்டேன். அந்த முறையை வைத்துக்கொண்டு ஏதாவது புதிதாகச் செய்யவேண்டும் என்று யோசித்ததால் சில விடயங்களை புதிதாக செய்திருக்கிறேன். படிப்பித்த மாஸ்டர்மார் அவையள் என்னென்னமாதிரி படிப்பிச்சிச்சினம் அதுகளெல்லாம் ஓவியங்களுக்கூடாக வெளிப்பட்டிருக்கு.
ஓவியர் ரமணி வந்து கூடுதலாக கூடப்படிப்பித்தார். கூடுதலான அளவு அவரைப் பின்பற்றிச் செய்திருக்கிறேன். எனக்கு அவற்ற ஸ்ரைல் பிடிக்கும் அதுகள் இந்த ஓவியங்களில வந்திருக்கு அதுகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு நான் என்ன செய்திருக்கிறன் என்பதை இதில பார்க்கக்கூடியதாக இருக்கும்.




** இங்கே உங்களுடைய ஓவியங்கள் எல்லாவற்றையும் பார்க்கின்ற பொழுது பயன்படுத்தின உத்திகள் வித்தியாசங்கள் அதிகமாக இருக்கிறது. பாணி என்று சொல்கின்ற பொழுது தனித்துவமான ஒரு பாணி மிக முக்கியமானது. இங்கே ஒவ்வொன்றும் ஒரு சாயலில் இருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம் நீங்கள் கற்றுக்கொள்கிற பொழுது எல்லாவற்றையும் அறிந்துகொள்வதாலா?

ஏனென்று சொன்னால் பல்வேறுபட்ட கலைஞர்களை ஆசிரியர்களாகக்கொண்டு வேற வேற பாடங்களை படிச்சிருக்கிறேன். அதில பல உத்திமுறைகள் இருக்கு. அதால ஒவ்வொரு உத்திமுறைகளை பயன்படுத்தி அந்தப்படங்களை செய்திருப்பன். எனக்குப் பாடத்திட்டத்தில இப்படித்தான் செய்யவேண்டும் என்று சொல்லி வரையறைகள் இருக்கு. அப்ப நான் அந்த வரையறைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு அந்தப் படங்களை செய்திருக்கிறேன். அந்தப் படைப்புகள் கட்டாயம் அப்படி இருக்கும். இன்னொன்றை செய்யும் பொழுது வேறு மாதிரி செய்திருப்பேன். இந்தப் படைப்பு வித்தியாசமாக இருக்கும். இப்ப நான் படிச்சுக்கொண்டிருக்கும் காலத்தில அதில ஒரு தனித்துவத்தை ஏற்படுத்திக்கொள்வதென்பது சாத்தியமில்லா விசயம்;. ஏனென்று சொன்னால் நான் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பின்பற்றி அவர்களுடைய விருப்பத்துகேற்றமாதிரி படத்தை செய்து முடிக்கிறேன். அப்படி செய்யப்பட்டப் படங்களைத்தான் இன்றைக்கு காட்சிக்கு வைத்திருக்கிறன். அவை தனித்துவத்தை இழந்திருக்கலாம். ஆனால் குறிப்பாக நான் சொல்லப் போனால் பொதுவாக சில ஓவியங்களை தனித்துவமாக வைத்திருக்கிறேன் இருளும் ஒளியும் சம்பந்தமான விசயத்தில நான் கூடுதலாக தனித்துவம் என்று சொல்வதை விட நான் அதை எல்லா ஓவியங்களிலும் பெரும்பாலும் கொண்டுவந்திருக்கிறேன். அதாவது மிகவும் இருட்டான பின்னணியில ஓவியத்தை வரைகின்ற தன்மையைக் கொண்டுவந்திருக்கிறேன். அது நாளடைவில எனது தனித்துவமாக மாறலாம்.



** உங்களுடைய ஓவியங்களில் குறைந்த வெளிச்சத்தை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன?

ஒரு ரசிகன் ஓவியத்தைப் பார்க்கும் பொழுது அந்த ஓவியத்தை எப்படி பார்க்கிறான் அந்த ஓவியத்தை மேலோட்டமாக பார்த்துவிட்டுப் போவதை விட இருட்டா இருக்கா என்ன விசயம் இருக்கென்று கிட்டப்போய் பார்க்கிறானா உண்ணிப்பாப் பார்க்கிறானா தூர நின்று பார்க்கிறானா அப்படியான விசயங்கைள தூண்டக் கூடியது மாதிரி ஒளி அமைக்கிறது முக்கியமான ஒரு விசயம். அது ஓவியத்த மிகவும் ஆழமாப் பார்க்கிற சாத்தியப்பாடுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த வகையில இந்த ஓவியக்கூடத்தில ஒளியை குறைச்சு வைத்திருக்கிறேன். அதற்கும் ஓவியங்களில ஒளி இருள் தன்மைய கொண்டுவந்ததுதான் முக்கியமான காரணம் என்பேன்.

செவ்வியின் தொடர்ச்சி....
___________________________________________
செவ்வியின் தொடர்ச்சியையும் மேலதிக ஓவியத்தையும் எரிமையில் காணலாம். அப்பதிப்பும் ஒருங்குறியிலேயே இருப்பதால் அனைவராலும் வாசிக்க முடியும்.

நன்றி: எரிமலை

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, December 12, 2006

ஈழ எழுத்தாளருள் மார்க்சியப் பரிச்சயம்

________________________________
தினக்குரல் பத்திரிகையில் வந்த கட்டுரையிது.
பயன்கருதிப் பதிவாக்கப்படுகிறது.
தகவல்களைப் பொறுக்கவோ புது விவாதமொன்றை உருவாக்கவோ உதவக்கூடும்.

________________________________

ஈழத்து எழுத்தாளர்கள் மத்தியில் மார்க்சிய இலக்கிய பரிச்சயம்
பனுவல் - நந்தினி சேவியர்

கடந்த நூற்றாண்டின் மத்திய பகுதியிலேயே மார்க்சிய இலக்கிய பரிச்சயம் ஈழத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டது. இலங்கையின் முதல் இடதுசாரிக் கட்சியான சமசமாஜக் கட்சி ஒரு மார்க்சியக் கட்சியாக 1935 இல் உருவாக்கப்பட்டது. 1935 இல் ஐக்கிய சோஷலிசக் கட்சியாகவும் பின்னர் 1943 இல் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியாகவும் மார்க்சிய இயக்கம் வளர்ந்தது.

பொன்னம்பலம் கந்தையா, அ. வைத்தியலிங்கம், கார்த்திகேசன், வி. பொன்னம்பலம், நா. சண்முகதாசன் போன்றவர்களே மார்க்சிய சிந்தனையை தமிழ் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்தவர்களாவர்.

1946 இல் கே. கணேஸ், கே. ராமநாதன் போன்றவர்களால் வெளியிடப்பெற்ற "பாரதி" எனும் சஞ்சிகையே தமிழின் முதல் முற்போக்குச் சஞ்சிகை என கருதப்படுகின்றது. இதன் ஆசிரியர்கள் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களாகும். கே. ராமநாதன் இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தமிழ் பத்திரிகையான `தேசாபிமானி'யின் ஆசிரியராகவும் விளங்கினார். இலங்கை எழுத்தாளர் சங்கத்தை 1947 இல் உருவாக்கியவர்களும் இவர்களே.

`பாரதி' சஞ்சிகையில் அ.ந. கந்தசாமி, அ.செ. முருகாநந்தன், கே. கணேஸ், மகாகவி போன்றவர்கள் எழுதியுள்ளனர்.

அ.ந. கந்தசாமி இலங்கைக் கம்னியூஸ்ட் கட்சியின் தேசாபிமானிப் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் `சுதந்திரன்', `வீரகேசரி' பத்திரிகையிலும் பணியாற்றினார். மறுமலர்ச்சி கால எழுத்தாளராக கணிக்கப்படும் அ.ந. கந்தசாமி, பாரதியாரின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வையூர் அருளம்பலம் சுவாமிகள்தான் என்பதை தெளிவுற நிலைநாட்டியவராகும்.

யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக எம்.சி. சுப்பிரமணியம் தலைமையில் உருவான சிறுபான்மை தமிழர் மகா சபையில் அங்கத்தவர்களாக இருந்த டானியல், ஜீவா, எஸ். பொன்னுத்துரை, என்.கே. ரகுநாதன், கவிஞர் பசுபதி போன்றவர்களே ஆரம்பகால முற்போக்கு எழுத்தாளர்களாகக் கருதப்பட்டனர். இவர்கள் மார்க்சிய சிந்தனையால் கவரப்பட்டவர்களே.

இவர்களோடு செ. கணேசலிங்கன், முருகையன், சில்லையூர் செல்வராசன், அகஸ்தியர், இளங்கீரன், எச்.எம்.பி. முகைதீன் போன்ற படைப்பாளிகளும் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போன்றவர்களும் முற்போக்கு அணியைச் சேர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். இவர்களால் உருவாக்கப்பட்ட இயக்கமே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம். இது 1954 ஜூன் 27 ஆம் திகதி உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அமரர் பா. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பாடல், டொமினிக் ஜீவா, டானியல் போன்றவர்கள் மார்க்சியத்தின் பால் ஆழமான ஈடுபாடு கொண்டார்கள்.

இவர்களது படைப்புகள் பிற்கால `ஈழகேசரி'யிலும் `சுதந்திரன்' போன்ற பத்திரிகைகளிலும் ஏராளமாக வெளிவந்தன.

1960 ஆம் ஆண்டில் மு.போ.எ. சங்கம் தேசிய இலக்கியம் என்ற கொள்கையைப் பிரகடனம் செய்தது. அதே ஆண்டில் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகமும் ஆரம்பிக்கப்பட்டது.

1961 இல் வெளியான இளங்கீரனின் `மரகதம்' பத்திரிகையில் தேசிய இலக்கியம் பற்றிய முதலாவது கட்டுரையை க. கைலாசபதி எழுதினார். பின்னர் ஏ.ஜே. கனகரட்ணா, அ.ந. கந்தசாமி போன்றவர்கள் தேசிய இலக்கியம் பற்றி எழுதினார்கள்.

தேசிய இலக்கியம் முன்வைக்கப்பட்டு அதற்கு ஆதரவு பெருகி வந்ததனால் ஆத்திரம் கொண்ட இலக்கிய சனாதனிகள், படைப்பிலக்கியவாதிகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினார்கள். போதிய கல்வியறிவு இல்லாதவர்கள், தமிழ் மரபு தெரியாதவர்கள், மரபை மீறி எழுதும் மட்டமான எழுத்தாளர்கள், இவர்கள் எழுதும் இலக்கியம் இழிசினர் இலக்கியம் என்றெல்லாம் இகழப்பட்டன.

1962 இல் தினகரனில் ஆரம்பிக்கப்பட்ட விவாதத்தில் மரபுவாதிகள் தரப்பில் கலாநிதி அ. சதாசிவம், பண்டிதர் இளமுருகனார், பண்டிதர் வ. நடராஜா போன்றவர்கள் வாதிட எழுத்தாளர் தரப்பில் இளங்கீரன் அ.ந.க. சிவத்தம்பி போன்றோர் வாதிட்டு வென்றனர். க. கைலாசபதி `தினகரன்' ஆசிரியராக இருந்த காலத்தில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு நிறைய ஊக்கம் வழங்கினார். இளங்கீரன், செ. கணேசலிங்கன், நீர்வை பொன்னையன் போன்ற எழுத்தாளர்கள் மிகவும் உற்சாகமாக தமது படைப்புகளை வெளியிட்ட காலகட்டமும் அதுவே.

கைலாசபதி பல்கலைக்கழக விரிவுரையாளராகிய பின்னர் மார்க்சிசத்தை ஆதரித்த பல எழுத்தாளர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து தோன்றினார்கள். செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன் போன்றவர்கள் அதில் குறிப்பிடப்பட வேண்டியவர்கள். யோ. பென்டிக்ற்பாலன் இவர்களது சமகாலத்தவரே. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் மார்க்சியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலரும் இருந்துள்ளனர். வ.அ. இராசரத்தினம், அ.ச. அப்துஸ்சமது, மருதூர் கொத்தன் போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள்.

சமசமாஜக் கட்சியினைச் சேர்ந்த சு. இராசநாயகன் மார்க்சிய எழுத்தாளராக தம்மை இறுதிவரை காட்டிக்கொள்ளவில்லை. இன்னுமொரு முக்கிய விசேடம் க. கைலாசபதியினால் அறிமுகமான அ. முத்துலிங்கம் ஒரு மார்க்சிய எழுத்தாளராக உருவாகாமல் போனார். இளங்கீரனின் தென்றலும் புயலும், நீதியே நீ கேள், செ. கணேசலிங்கனின் நீண்ட பயணம், ஒரே இனம், நல்லவன், சடங்கு, டானியல் கதைகள், மேடும் பள்ளமும், (நீர்வை பொன்னையன்) குட்டி, (யோ. பெனடிக்ற்பாலன்), ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை சாலையின் திருப்பம், என்.கே. ரகுநாதனின் நிலவிலே பேசுவோம், யோகநாதன் கதைகள், கவிஞர் பசுபதியின் புது உலகம் முதலியன அறுபதுகளில் வெளிவந்தவையாகும். சோசலிச யதார்த்தவாத படைப்புகள் பற்றிய கருத்துகளும் மார்க்சிய விமர்சகர்களால் இக்கால கட்டத்திலேயே வலியுறுத்தப்பட்டன.

கவிதைத் துறையில் முருகையன், சில்லையூர், கவிஞர் பசுபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக அறியப்பட்டதுபோல் மகாகவி அறியப்படவில்லை. அவர் மார்க்சியத்தின்பால் ஈடுபாடு கொண்டவராகவும் இருக்கவில்லை. இத்தலைமுறையினைத் தொடர்ந்து சண்முகம் சிவலிங்கம், நுஃமான் போன்றவர்கள் அறிமுகமானார்கள். கவிதை புதுவீச்சுக் கொண்டது. மு. தளையசிங்கம், மு. பொன்னம்பலம் போன்றவர்கள் முற்போக்காளர்களோடு முரண்பட்ட காலகட்டமும் இதுவே. விமர்சன விக்கிரகங்கள், ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி, முற்போக்கு இலக்கியம் ஆகிய கட்டுரைகள் இக்காலகட்டத்தில் மு. தளையசிங்கத்தால் எழுதப்பட்டன.

எஸ்.பொ. முற்போக்கு அணியினரால் வெளியேற்றப்பட்டு, நற்போக்கு இயக்கத்தை ஆரம்பித்து, முற்போக்காளரை எதிர்த்ததும் இக்கால கட்டத்தில்தான்.

தமிழ் நூல்களுக்கு சாகித்திய மண்டல பரிசில்கள் வழங்கப்பட ஆரம்பித்ததும் டொமினிக் ஜீவாவின் தண்ணீரும் கண்ணீரும் பரிசு பெற்றதும் இக்காலகட்டத்தில் தான். இதனை அடுத்து, புகழ் பெற்ற முட்டை எறிவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

இழிசினர் வழக்கு மண்வாசனை என்றெல்லாம் பேசப்பட்ட இலக்கிய வகைக்கமைய மரபு வாதிகள் எழுதத் தொடங்கினார்கள். பின்னர் மண்வாசனையின் பிதாமகர்கள் தாமே என மார்தட்டும் நிலைக்கு அவர்கள் வந்தனர். இந்த ஆரோக்கிய நிலைக்கு மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட இயக்கத்தினரின் போராட்டமே காரணியெனலாம்.

இலங்கை கம்னியூஸ்ட் கட்சி சீன சார்பு, ரஷ்ய சார்பாக பிளவுபட்ட காலத்தில் க. கைலாசபதியுடன் இளங்கீரன், டானியல், என்.கே. ரகுநாதன், செ. கணேசலிங்கம் போன்ற எழுத்தாளர்களும் யாழ்ப்பாணக் கவிராயர் சுபத்திரன் போன்ற கவிஞர்களும் சீனச்சார்பு எடுத்தார்கள். க. சிவத்தம்பி, ஜீவா, அகஸ்தியர் போன்றோர் ரஷ்ய சார்பு எடுத்தனர்.

"வசந்தம்" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இ.செ. கந்தசாமியால் வெளியிடப்பட்டது.

இதன்பிறகு, டொமினிக் ஜீவாவினால் "மல்லிகை" ஆரம்பிக்கப்பட்டது.

ரஷ்ய சார்பு எழுத்தாளர்களின் படைப்புகளின் உத்வேகம் மந்த நிலையை அடைந்திருந்தமையால் மு. போ. எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகள், 1963 இற்கும் 1973 இற்கும் இடையில் பெரும் தேக்கம் அடைந்திருந்தமை அவதானிக்கத்தக்கதாகவும் பிரேம்ஜி ஆயுள்காலச் செயலாளர் என கிண்டலாகப் பேசப்பட்ட நிலையும் தோன்றியது.

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றப் பாதைக்கு எதிரான சக்திகள் வலுப்பெற்று வந்தன. செ. கணேசலிங்கனின் செவ்வானம், தரையும் தாரகையும், யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன் நாவல்களும், நீர்வை பொன்னையனின் உதயம், செ. கதிர்காமநாதனின் கொட்டும் பனி, செ. யோகநாதனின் `ஒளி நமக்கு வேண்டும்' தொகுதிகளும் வெளிவரத் தொடங்கின. தமிழக விமர்சகர்களான க.ந. சுப்பிரமணியம், வெங்கட் சாமிநாதன் போன்றவர்களுக்கு பதிலிறுக்கும் க. கைலாசபதியின் மார்க்சிய விமர்சனக் கட்டுரைகளும் நாவலிலக்கியம் பற்றிய கட்டுரைகளும் வெளிவந்தன.

தீண்டாமை ஒளிப்பு வெகுஜன இயக்கம் போராட்ட இயக்கமாக உருவெடுத்தது. சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும் என்ற அறை கூவலுடன் இயக்கம் வளர்ந்தது. புகழ் பெற்ற மாவிட்டபுரப் போராட்டம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயப் பிரவேசப் போராட்டம், நிச்சாமம், மந்துவில், மட்டுவில், அச்சுவேலி, கன்பொல்லை என்ற சாதி அமைப்புக்கெதிரான அலை கொதித்தெழுந்தது.

போராட்ட இலக்கியங்கள் உருவாகின. சுபத்திரனின் இரத்தக்கடன், என்.கே. ரகுநாதனின் மூலக்கதையுடன் அம்பலத்தாடிகள் அவைக்காற்றிய கந்தன் கருணை, மௌனகுருவின் சங்காரம் என்பன தோன்றின. களனி, தாயகம், சமர் அணு, வாகை என முற்போக்குச் சஞ்சிகைகள் பல ஆரம்பிக்கப்பட்டன. டானியலின் பஞ்சமர், செ. கணேசலிங்கனின் போர்க்கோலம் போன்ற நாவல்கள் வெளிவந்தன.

சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் மக்களின் எழுச்சியைக் கூறும் இலக்கியங்கள், மார்க்சிய இலக்கியங்களாக விமர்சகர்களால் அடையாளம் காணப்பட்டன. புதுக்கவிதை முற்போக்காளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் நிகழ்ந்தது.

மு.போ.எ. சங்க செயற்பாடுகளில் அதிருப்பியுற்றவர்களால் செம்மலர்கள், இலக்கியவட்டம், தேசியகலை, இலக்கியப்பேரவை, திருகோணமலை முன்னோடிகள், சங்கப்பலகை போன்றவை தோற்றுவிக்கப்பட்டன. இவைபோன்ற இயக்கங்கள் கல்முனை, மன்னார் போன்ற பிரதேசங்களில் உருவாகின.

இவர்கள் திருகோணமலையில் மாபெரும் மாநாடு ஒன்றை நடத்தி புதிய ஜனநாயக கலாசாரத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட டானியல், என்.கே. ரகுநாதன், சில்லையூர் செல்வராசன், செ. கணேசலிங்கன் போன்றவர்களும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.

மு.போ.எ. சங்கம் 1975 இல் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை கொழும்பில் நடத்தியது. தேசிய இனப் பிரச்சினைத் தீர்விற்கான 12 அம்சத் திட்டம் முன்வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கவியரங்கில் சண்முகம் சிவலிங்கம் மாநாட்டின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் கவிதை ஒன்றைப்பாடி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மார்க்சிசத்தை ஏற்றுக்கொண்ட டானியல், அன்ரனி, நந்தினி சேவியர், வ.ஐ.ச. ஜெயபாலன், சாருமதி, சசி, கிருஷ்ணமூர்த்தி, நல்லை அமிழ்தன், தில்லை முகிலன், இராஜ தர்மராஜா, பாலமுனை பாறூக் அன்புடீன், முல்லை வீரக்குட்டி, முருகு கந்தராசா, க. தணிகாசலம், சி. சிவசேகரம் போன்றவர்களும் மு. நித்தியானந்தன், சமுத்திரன் சித்திரலேகா போன்ற விமர்சகர்களும் உருவானார்கள்.

சுந்தரலிங்கம், மௌனகுரு, தாசிசியஸ், பாலேந்திரா, இளைய பத்மநாதன் போன்ற நாடக நெறியாளர்கள் உருவானதும் இக்காலகட்டத்திலேயே நிகழ்ந்தது.

செ. கணேசலிங்கனின் குமரன் சஞ்சிகையில் அ. யேசுராசா ஒரு கவிதையை எழுதியமையும் பின் `அலை' சஞ்சிகையை ஆரம்பித்ததும் இக்காலத்தில்தான். மல்லிகையில் கூட அ. யேசுராசாவின் முற்போக்கான ஒரு கவிதை வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. "ஊரில் பெருமனிதர் எடுத்த விழாவிடை பேருரைகள் ஆற்ற சில பெரிய மனிதர் மேடை அமர்ந்திருந்தார்...." என அக்கவிதை தொடங்குகிறது.

தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தொகுப்பின் காரசார விமர்சனம் அவரை எதிரணிக்கு தள்ளியது என்ற கருத்தும் நிலவியது.

பிரசார இலக்கியங்கள் என அக்காலத்தில் வெளிவந்த இலக்கியங்களை விமர்சிக்கப்பட்டபோது புதிய இளந்தலைமுறை கலைத்துவப்பாங்கான இலக்கியங்களை உருவாக்கும் முனைப்புடன் செயற்பட்டது. பழைய தலைமுறை எழுத்தாளர்கள் விமர்சகர்களின் தொடர்புகளைத் தவிர்த்து சுயமாக இயங்கும் பக்குவம் இத்தலைமுறைக்கு இருந்தது.

மா.ஓ. வின் யெனான் கருத்தரங்கு உரை அவர்களுக்கு ஆதர்சமாக இருந்தது.

செ. கணேசலிங்கன், டானியல் போன்றோரின் படைப்புகளை தோழமையுணர்வுடன் கடுமையான விமர்சனத்துக்கு இவர்கள் உள்ளாக்கினார்கள்.

பஞ்சமர் நாவல் வெளியீட்டு விழாவில் அன்றைய தினம் தினகரனில் க. கைலாசபதி தாம் எழுதிய விமர்சனத்திற்கு முற்றிலும் மாறான ஒரு விமர்சனத்தை முன்வைக்கும் ஒரு நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகும் அளவிற்கு விமர்சனம் மிகவும் காத்திரமான முறையில் வளர்ச்சி கண்டது.

சீனாவில் நடைபெற்ற கலாசாரப் புரட்சியின் தாக்கம் இலங்கை விமர்சனத்துறையிலும் படைப்பிலக்கியத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

. ஏ.ஜே. கனகரட்ணா போன்றவர்களே கலாசாரப் புரட்சியை வரவேற்று கருத்துக் கூறும் நிலை இருந்தது. சீனாவில் இருந்து நாடு திரும்பிய மாதகல் வ. கந்தசாமி, பாரதியார் கவிதைகளை விமர்சிக்கும் தீவிர போக்கு எடுத்தார். காலக்கிரமத்தில் அவர் தனது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டி ஏற்பட்டது.
திக்வெல்லை, நீர்கொழும்பு, அநுராதபுரம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கல்முனை, அக்கரைப்பற்று என்று முற்போக்கு சிந்தனைகளை அங்கீகரித்தவர்கள் பரஸ்பரம் இணைந்து கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகின.

டானியல் பஞ்சமர் வரிசை நாவல்களை முனைப்புடன் எழுதத் தொடங்கினார். இன்று தலித்திலக்கிய முன்னோடியாக கணிக்கப்படும் டானியல் தன்னை ஒரு மார்க்சிய எழுத்தாளராகவே இறுதிவரை கூறி வந்துள்ளார் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது.

1983 க்குப் பின்னர் ஈழத்தில் ஏற்பட்ட மாற்றம் மிக முக்கியமானது. தேசிய ஐக்கியத்தை வலியுறுத்திய முற்போக்கு எழுத்தாளர்கள் தவிர்க்க முடியாதபடி தமிழர் பிரச்சினைகளை எழுதத் தலைப்பட்டனர்.

1986 செப்டெம்பர் 17 இல் இனப்பிரச்சினையில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிலைப்பாட்டை வலியுறுத்தும் மாநாடு ஒன்று யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றதும் குறிப்பிடப்பட வேண்டியது.

வானம் சிவக்கிறது எழுதிய புதுவை இரத்தினதுரை, தமிழரின் ஆஸ்தான கவிஞராக மாறினார். இரவல் தாய்நாடு போன்ற செ. யோகநாதன், செ. கணேசலிங்கன் ஆகியோரின் நாவல்கள் வெளிவரத் தொடங்கின.

இது சிலரால் முற்போக்கு எழுத்தாளர்களின் பின்னடைவாக கருதப்பட்டது. ஆனாலும், இதுவும் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்களின் ஒரு முற்போக்கான நிலைப்பாடாகவே கருதப்பட வேண்டும். பேராசிரியர் சிவத்தம்பியின் மறுபரிசீலனை விமர்சனங்கள் வெளிப்பாடடைந்தது இந்தக் காலகட்டத்தில்தான்.

மார்க்சிய விமர்சனத்தை அங்கீகரிக்காது இருந்த ந. சுப்பிரமணியம் போன்றவர்கள் மார்க்சிய விமர்சகர்களாக மாறியதும் இக்காலத்தில்தான்.

ஈழத்தின் தமிழ் இலக்கிய வரலாற்றில் மிக முக்கிய விடயம் மார்க்சிய எழுத்தாளர்களையும் மார்க்சிய இலக்கியத்தையும் எதிர்த்தவர்கள், மார்க்சியத்தை எதிர்க்கவில்லை என்பதுதான்.

இதற்கு சில உதாரணங்களைக் குறிப்பிடலாம். எஸ். பொ. சுபமங்களா பேட்டியில் தன்னை ஒரு மார்க்சியத்து உடன்பாட்டுக்காரராக குறிப்பிடுகிறார். அதேபோல், மு. பொன்னம்பலம் மூன்றாவது மனிதன் பேட்டியில் தன்னை மார்க்சிய விரோதியாகக் காட்டவே இல்லை. அத்தோடு, தீவிரமாக கவனிக்க வேண்டிய விடயம் மு.பொ. 50 இக்குப் பின் ஈழத்து இலக்கியம் பற்றிய பார்வை என்ன என்ற மூன்றாவது மனிதன் கேள்விக்கு.

50 க்குப் பின் ஈழத்து தமிழ் இலக்கியம் வளர்ச்சியுற்றுத்தான் வந்திருக்கிறது என ஆரம்பித்து.....

முற்போக்கு எழுத்தாளர்கள் டானியல், டொமினிக் ஜீவா, எஸ். பொன்னுத்துரை, காவலூர் ராசதுரை, அ.ந. கந்தசாமி, சில்லையூர் செல்வராசன் போன்றவர்களின் பணியைக் குறிப்பிட்டுச் சொல்லி `கைலாசபதி' தினகரன் ஆசிரியராக இருந்ததும் முக்கிய பங்களிப்பு என்றும் கூறிவிட்டுத்தான் கைலாசபதி போன்றவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களையே தூக்கிப்பிடித்து நின்றார்கள் என்று கூறுகிறார்.

எம்.ஏ. நுஃமான் `ஞானம்' சஞ்சிகைப் பேட்டியில் பின்வருமாறு ஒரு கருத்தை வைத்துள்ளார்.

குழு விமர்சனம் நமது மார்க்சிய விமர்சகர்களைக் குற்றக் கூண்டில் நிறுத்துவதற்கு மற்றவர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் யாவரும் வெவ்வேறு குழுக்களாக இயங்கினார்கள். ஆயினும், மார்க்சிய விமர்சகர்களின் சாதனையை இவர்கள் எட்டவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டும் குழு விமர்சகர்கள் என்று குற்றம் சாட்டுவதற்கு இவர்களில் யாருக்கும் தார்மீக உரிமையில்லை. மார்க்சிய விமர்சகர்களை விட மற்றவர்களே வசை விமர்சனத்திற்கு அதிக பங்களிப்புச் செய்துள்ளார்கள் என்ற பொருள்பட சில விடயங்களைக் கூறியுள்ளார். இதே பேட்டியில் இன்னோரிடத்தில், நான் ஒருபோதும் எந்த ஒரு மார்க்சிய இயக்கத்துடனும் என்னை இணைத்துக்கொண்டு செயற்பட்டவனில்லை. தத்துவார்த்த ரீதியில் மார்க்சியத்துடன் எனக்கு உடன்பாடு இருந்தது என்றும் பல அம்சங்களில் அந்த உடன்பாடு தொடர்கிறது என்று கூறியிருக்கிறார்.

செங்கையாழியான் `ஈழகேசரி'க் கதைகள் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "கலைக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் சிறுகதை படைக்கின்ற காலச்சூழலை நாம் கடந்த இந்த மண்ணில் ஏற்றத்தாழ்வற்ற சகல சுதந்திரங்களையும் அனுபவிக்கும் மானிட இருப்பினை நிலைநாட்டுவதற்கான தத்துவப் புரிதலோடு புனைகதைகளைப் படைக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்ச முன்னேற்றத்திற்கும், உலக சமூகத்தின் ஒருங்கிணைந்த விடுதலைக்கும், உயர் மானிடன் எதிர்பார்க்கும் சமூக மாற்றங்களுக்கும் உகந்த தத்துவப்புரிதலை மார்க்சியம் ஒன்றுதான் இன்றும் கொண்டிருக்கின்றது."

இக்கருத்துகள் சமீபத்தில் வெளிவந்தவையே. எனவே, மார்க்சிய இலக்கியத்தையோ விமர்சனத்தையோ எவரும் நிராகரிக்கவில்லை. மார்க்சிய விமர்சகர்களை மட்டுமே எதிர்த்தார்கள் என்பது தெளிவு.

இன்றைய நிலையில் தமிழர் பிரச்சினையை விட்டு விட்டு இலக்கியம் படைப்பது என்பது சாத்தியமற்றதாகிவிட்டது.

இயக்கம் சார்ந்த படைப்புகளாக நிராகரிக்கப்பட்ட முற்போக்கு இலக்கியங்களை விஞ்சுமளவுக்கு, தமிழ்ப் போராளிகள் குழுக்களை ஆதரித்த, எதிர்த்த படைப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இவை புலம்பெயர்ந்தோர் சஞ்சிகைகளில்தான் வெளி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வு.

இது சென்ற நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியத்தின் வெற்றியென்றே கருதப்பட வேண்டும்.

நமது ஈழத்து நிலைமை தமிழக நிலைமையை விட வித்தியாசமானது. எமது சூழலை நிகர்த்த வேறு பல நாடுகளின் இலக்கியங்களோடு எமது இலக்கியங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் ஒரு இலக்கிய விமர்சன முறைமையை நாம் செய்வதுதான் தற்போதைய கடப்பாடாக நாம் கருத வேண்டும். அதுவே இந்த நூற்றாண்டின் மார்க்சிய இலக்கியவாதிகளின் முக்கிய பணியாகவும் இருக்க வேண்டும்.

உசாத்துணை

1. புதுமை இலக்கியம் 2. சிறுபான்மை தமிழர் மகாசபை மலர் 3. இளங்கீரனின் தேசிய இலக்கியமும் மரபுப் போராட்டமும் 4. புதுமை இலக்கியம் பேரரங்கு- 96 5. மூன்றாவது மனிதன் இதழ்- (04) 6. மூன்றாவது மனிதன் இதழ்- (05) 7. ஞானம் இதழ்- 02 8. ஞானம் இதழ்- 03 9. சுபமங்களா நேர்காணல் 10. ஈழகேசரிக் கதைகள் முன்னுரை

பின் இணைப்பாக சில குறிப்புகள்

மார்க்சியத்தை அங்கீகரிக்கும் கே.ஆர். டேவிட், ந. ரவீந்திரன் (வாசீகன்), எம்.வை. ராஜ்கபூர் போன்றவர்களும் எழுபதுகளில் முன்பின்னாக அறிமுகமாகியவர்களே. ந. ரவீந்திரனின் விமர்சனக் கட்டுரைகள் மார்க்சிய நோக்கிலானவை. லெனின் மதிவாணம் ஒரு மார்க்சிய விமர்சகராக 90 களில் அறிமுகமாகியுள்ளார்.

தனது 25 ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய தேசிய கலை இலக்கியப் பேரவை கடந்த நூற்றாண்டில் வெளியீட்டுத் துறையில் மிகக் காத்திரமான பங்கினைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்க்சிய இலக்கியவாதிகள் அல்லாதவர்களினதும் படைப்புகளையும் தே.க.இ. பேரவை வெளியிட்டுள்ளது. கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம் என பல்துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு வருவது ஈழத்து மார்க்சிய இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயமாகும். `தாயகம்', பத்திரிகையை மிகுந்த நெருக்கடிகள் மத்தியில் யாழ்ப்பாணத்திலேயே வெளியிட்டு வருவது பாராட்டப்பட வேண்டிய நிகழ்வாகும்.

______________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 10, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, December 10, 2006

கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார்

ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார்.
புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார்.

இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்திருந்தது.

இவரது "காற்றுவழிக் கிராமம்" என்னும் கவிதைத் தொகுதி விபபி சுந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

56 வயதான இவர், 2 பிள்ளைகளின் தந்தை ஆவார்.



மயூரன் போன்றோர் மேலதிக தகவல்களைப் பதிவார்கள் என்று நினைக்கிறேன்.
செய்தி: புதினம்.
________________________________
கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் தன் குரலிலேயே பாடிய பாடல்களின் ஒலிவடிவங்களடங்கிய மதி கந்தசாமியின் முன்யை பதிவை இஙகுக் காணலாம்.

சு.வில்வரத்தினம் குரல்பதிவு

பெயரிலியின் பதிவு -சு. வில்வரத்தினம் மறைவு

சோமிதரனின் பதிவு - சு. வில்வரத்தினம். . .

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, December 08, 2006

படைப்பாளிகளின் பட்டியல்: படைப்புலக அடக்குமுறை

"ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்" என்ற தலைப்பில் தினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரையொன்றை ஏற்கனவே பதிவாக்கியிருந்தேன்.
இம்முறை அக்கட்டுரையை விமர்சித்து ஒரு கட்டுரை தினக்குரலில் வந்துள்ளது.
எதிர்வினைக் கட்டுரையில் பெரியளவில் குறிப்பிடக்கூடியவையில்லையென்று நான் கருதினாலும் அதையும் இங்குப் பதிவாக்குகிறேன்.


இங்கும் சொந்தப்பேரில் எழுதும் பிரச்சினை வருகிறது. ;-)

ஏற்கனவே "பட்டியலிடுதல்" தொடர்பாக பெயரிலியுட்பட சிலரால் வலைப்பதிவுகளில் கதைக்கப்பட்டதென்பதையும் நினைவுபடுத்துகிறேன்.
_________________________________________________


படைப்பாளிகளின் பட்டியல் படைப்புலக அடக்குமுறை!
-எம்.நவாஸ்சௌபி-

படைப்பாளர்களை பட்டியல் படுத்தும் ஒரு நடைமுறை இலக்கிய உலகில் காணப்பட்டு வருகிறது. இதற்காக சரியான மதிப்பீடுகள் அல்லது அளவுகோல் பற்றிய ஒரு வரையறையை முன்வைக்காமல் இவ்வாறு பட்டியல் படுத்தும் முயற்சிகள் இன்னும் இடம் பெறுவது தான் பலவீனமான ஒரு விடயமாக இருக்கிறது.

`தினக்குரல்' பனுவல் பகுதியில் `ஈழத்து இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்' எனும் தலைப்பில் தாவிது கிறிஸ்ரோ - என்பவர் படைப்பு சார்ந்த பட்டியலுடன், பின் நவீனத்துவத்திற்கான பெருத்த கண்டனத்தையும் எழுதியிருந்தார்.

அவரிட்ட பட்டியலும் புதியதல்ல. இதற்கு முன்னும் பட்டியலிட்டவர்களினால் காட்டப்பட்டுள்ள அனேக பெயர்கள் இதில் இடம் பெற்றிருப்பதையும் அறிய முடிகிறது. அவர்களது பெயர்களை நானும் சொல்வது மீண்டும் ஒரு பட்டியலை நானும் இடுவதாய் ஆகி விடும் என்பதால் அதிலிருந்து தவிர்ந்து கொள்கிறேன்.

படைப்புலகில் பரிசோதனை முயற்சிகள் என்று எதுவுமில்லை அவை படைப்புகளின் `வித்தியாசம்' என்று தான் பார்க்கப்பட வேண்டும். ஒரு படைப்பின் வாசிப்பை ஒரு சார்பாக கொண்டு ஏனைய படைப்புகளை புறம் தள்ளுவது என்பது படைப்புலக அடக்கு முறையாகும்.

தாவிது கிறிஸ்ரோ எழுதிய பரிசோதனை முயற்சிகள் என்ற கதையாடல் படைப்புலகின் வித்தியாசங்கள் என்று திருத்தப்பட வேண்டியது. இவ்வாறு ஒரு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுகிறவர்கள் ஒரு வரையறைக்குள்ளானவர்களாக ஆளாக்கப்படுகிறார்கள் என்பது ஒரு மறைமுகமான உளவியல் பார்வையாகும். இது அவர்களின் விசாலமான படைப்புச் செயற்பாட்டை குறுகியதாக்கி ஒரு முகப்பட்ட பார்வையை அவர்களது படைப்புகளுக்கு கொடுத்து விடுகிறது.

ஆனால் படைப்பு என்பது பன்முகப்படுத்தப்பட்ட பார்வையினைக் கொண்டது. அதனை வாசகர்கள் தங்களது வாசிப்பு பிரதி மூலம் அப்படைப்பின் வேறுபட்ட கூறுகளையும் தங்களது ஆளுமைகளுக்கேற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்து கொள்வார்கள்.இந்த வகையில் விமர்சனம் என்பதும் ஒரு படைப்பிற்கு போலித்தன்மையை உருவாக்கி விடுகிறது. அப்படைப்பின் பன்முகத் தன்மையை அது அழித்து விடுகிறது என்பது எனது அபிப்பிராயம்.

ஒரு படைப்பின் பரிசோதனை முயற்சியை அளவிட வித்தியாசமான உருவ அமைப்பை அடிப்படையாகக் கொள்வது தவறான ஒரு புரிதலாகும். ஒரு படைப்பிற்கு உருவ அமைப்பு என்பது கூட நிலையான ஒரு விடயமல்ல. அது மாறிக் கொண்டு வந்த வரலாறு நம்மிடமுண்டு மரபை உடைத்துக் கொண்டு புதிய கவிதை அமைப்பு உருவானது. புதியதை உடைத்துக் கொண்டு நவீன கவிதை அமைப்பு உருவானது என்ற கதைகள் இதற்கு சான்று பகிர்கின்றன.

படைப்பியலைப் பொறுத்தவரை மரபு, புதியது, நவீனம், பின் நவீனம் என்ற எந்த சித்தாந்தங்களுமில்லை என்பதே எனது கருத்து. இவை குறிப்பிட்ட ஒரு காலத்தின் தேவையை மட்டும் திருப்திப்படுத்துகின்ற கதையாடல்களாக இருப்பவை. இந்த சித்தாந்தங்கள் எதுவும் நிலையான இருப்புக் கொள்ள முடியாமல் காலத்தால் புறம் தள்ளப்பட்டிருப்பதை சங்க காலத்திலிருந்து எம்மால் பார்க்க முடிகிறது. இது தவிர்க்க முடியாததுமாகும்.

இத்தகைய கருத்துச் சமர்களுக்கு அப்பால் உணர்வுகளை மொழிப்படுத்தும் படைப்புலகம் தன் பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது. கவிதை எல்லாக் காலத்திலும் கவிதையாகவே இருக்கிறது. இவர்களுடைய மதிப்பீடும் அளவுகோலுமே அவற்றை தப்பான திசைக்கு அழைத்துச் செல்கின்றது.

ஒரு படைப்பை மதிப்பிடும் பணி இன்னொரு படைப்பாளியினுடையது அல்ல. அவ்வாறான மதிப்பீட்டில் தன் படைப்பு சார் பண்புகளையே அவர் நிறுவ முனைவது குறிப்பிட்ட படைப்பின் பன்முகத்தை இல்லாது செய்கிறது. அது வாசகர்களின் வாசிப்பு மதிப்பீடாக முன்வைக்கப்படும்போதுதான் படைப்பாளியினுடைய உழைப்பிற்கான உண்மையான ஒரு வெகுமதியை கொடுப்பதாக காண முடிகிறது. எனவே, படைப்புகளுக்கும் சித்தாந்தங்களுக்குமிடையில் ஓர் தடை கல்லாக வாசகர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

படைப்புலக கருத்தியல் இவ்வாறிருக்க, பின் நவீனத்துவம் பற்றிய எதிர்வினைகள் இப்போது ஆங்காங்கே மின்னுகின்றன. இது `பெரு வெளி' எனும் சஞ்சிகையின் வருகைக்கு பின்புதான் என்பதையும் தாவிது கிறிஸ்ரோவின் கட்டுரையில் நன்றாக அறிய முடிகிறது. இவ்வாறு பின் நவீனத்துவ எதிர்வினையை செய்பவர்கள், தங்களது சொந்த பெயரில் எழுதிய கட்டுரைகள் எதனையும் காண முடியாமலிருக்கிறது. எந்த கருத்தையும் தனது சொந்தப் பெயரில் சொல்வதற்கான முதுகெலும்புடைய பேனையை வைத்துக் கொண்டு அவர்கள் எழுதிக் கொண்டால் அதன் பின்புலத்தையும் அவர்களுடைய எழுத்துக்கப்பால் அறிய உதவுமே என்பது எனது நப்பாசை.

____________________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் December 03, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, November 06, 2006

ஈழத்தின் இலக்கியத்தில் பரிசோதனை முயற்சிகள்

பனுவல் -தாவீது கிறிஸ்ரோ-

___________________________
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது. பயன்கருதி இங்குப் பதிவாக்கப்படுகிறது.
___________________________

மேலைத்தேய முன் முயற்சிகளின் ஆகர்சனத்தினால்தான் தமிழிலும் இலக்கியப் பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டன. சிறுகதை, நாவல், புதுக்கவிதை எனத் தமிழில் இன்று இலக்கியம் என அங்கீகரிக்கப்பட்ட வடிவங்கள் அனைத்தினதும் நதிமூலங்கள் மேலைத்தேயங்களே.

தமிழ் புதுக்கவிதை வளர்ச்சியை ஒரு இயக்கமாக முன்னெடுத்த சி.சு.செல்லப்பாவின் ` எழுத்து'விலும் அதற்கு முன்னர் ந.பிச்சமூர்த்தி தொடக்கி வைத்த புதுக்கவிதையின் தொடர்வரவாளர்களில் ஒருவராக நம் நாட்டின் தருமு சிவராமு குறிப்பிடப்பட வேண்டியவர். அவருக்குப் பின்னரான பரிசோதனையாளர்களாக தமிழகத்தில் பலர் இருந்த போதும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் மறுமலர்ச்சிக்கால வரதர் ந. பிச்சமூர்த்தியைத் தொடர முயன்று பின்னர் அம்முயற்சியிலிருந்து விலகியவர். தா. இராமலிங்கம் அவர்களின் கவிதைகளில் இவ்வகைப் பரிசோதனைகளை நாம் அவதானித்தோம். பின்னரான காலங்களில் வானம்பாடிகளின் பாணியை ஒட்டிச் சற்று வித்தியாசமாக திக்குவல்லை கமால் ,அன்பு ஜவகர்ஷா போன்ற முஸ்லிம் கவிஞர்களும் பூனகரி மரியதாஸ், ஈழவாணன் போன்றவர்களும் புதுக்கவிதைகைளை எழுதினர்.

சண்முகம் சிவலிங்கம் மார்க்சியத்தை அங்கீகரித்தவர். அவரது கவிதைகள மிகவும் வித்தியாசமான ஒரு வெளிப்பாட்டைக் கொண்டிருந்தன. அலையில் வெளிவந்த `வெளியார் வருகை' போன்ற கவிதைகளை இங்கு எடுத்துக்காட்டலாம். இதேபோல், மல்லிகையில் இவரது கவிதைகள் உருவப் பரிசோதனையோடு ஆக்கப்பட்டு வெளிவந்தன.

இதேகாலம் முற்றிலும் வித்தியாசமான மு.கனகராஜனின் `முட்கள் முறியும் ஒசையும்' வெளிவந்தது. சோலைக்கிளியின் ஆரம்பம் கூட (இன்றுவரை அது தொடர்கிறது) ஒரு பரிசோதனையின் வெளிப்பாடே.

பாலமுனை பாறுக், அன்புடீன்,மேமன்கவி போன்றோரும் பின்னரான சேரன்,ஜெயபாலன் போன்றோரும் வானம்பாடியினரின் பாணியில் வந்தோரே. தருமு சிவராமு பாணியில் பரிசோதனை செய்தவர்களில் சபா ஜெயராஜா குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் தொகுப்பாகவராவிட்டாலும் பத்திரிகைகளில் பிரசுரமான காலத்தில் வித்தியாசமான உருவ அமைப்பைக் கொண்டிருந்தன.

வட்டம் என்பதை .எனவும், சதுரம் என்பதை எனவும் எழுத்துகளால் கோலம் போட்ட கவிதைகள் அவருடையவை.

எம்.ஏ.நுஃமான் தம்மை ஒரு போதும் புதுக்கவிதைக்காரராகக் கூறிக் கொள்வதில்லை. இவரோடு மு.பொ. ,அ. யேசுராசா , சு.வி. என ஒரு வரிசையே இங்கே அடையாளப்படுத்த முடியும்.

சிறுகதைத்துறையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்த ஒரு சில முன் முயற்சிப் பரிசோதனைகளைக் கூற முடியும். மு.தளையசிங்கம், காசிநாதர் போன்றவர்களின் சிறுகதைகள் சிலவற்றை இதற்குரியதாக உதாரணப்படுத்தலாம். ஜோர்ஜ் சந்திரசேகரனும் இவ்வகை முயற்சியில் ஈடுபட்டவராவார்.

இவர்களுக்கு முன்னதாக எஸ். பொ.வின் முயற்சிகளையும் இங்கு குறிப்பிடலாம். முற்றுத்தரிப்பு இல்லாமல் ஒரே வசனத்தில் ஒரு கதையை அவர் எழுதியிருந்தார். அணி, குளிர் போன்ற கதைகளும் இதில் அடக்கம்.

நீர்வை பொன்னையனின் 70 இற்குப் பின்னரான கதைகளும், எஸ். அகஸ்தியரின் உணர்வூற்றுருவாக்க சிறுகதைகளும் இதற்குள் அடக்கம்.

90 களில் சரிநிகரில் ` அருள் சின்னையா' எழுதிய ஒரு சிறுகதை பரிசோதனை முயற்சியின் வெளிப்பாடாக வெளிவந்தது. இதற்கு முன்னர் கோணைத்தென்றல் என வெளிவந்த ரோணியோ சஞ்சிகையில் தேஸ்விலோமன், ரிசிப்பிரப்ஞன்( இப்போது சித்தார்த்த சேகுவரா) எழுதிய கதைகளும் பரிசோதனைச் சிறுகதைகளே. இன்று வெளிவரும் பலபடைப்புக்களை பின் நவீனத்தும் எனும் சட்டகத்துக்குள் பொருத்திப் பார்க்கும் போது இத்தகு முன்முயற்சிகள் ( முன் நவீனத்துவம் என பெயர் சூட்டலாம்) ஏலவே, இங்கு நிகழ்த்தப்பட்டுள்ளன.சட்டகத்துக்குள் அடங்காதவையே பின் நவீனத்துவப் படைப்புகள் என்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது.

அருள் சின்னையாவைத் தொடர்ந்து `திருக்கோவில் கவியுவன்-( ஒரு விதத்தில் உமா வரதராஜனின் அரசனின் வருகை, கள்ளிச்சொட்டு என்பவற்றையும் இங்கு குறிப்பிடலாம்) அம்ரிதா.ஏ.எம்., ஓட்டமாவடி அறபாத், வி.கௌரிபாலன், திசேரா, மலர்ச்செல்வன் ஆகியோரை நாம் வரிசைப்படுத்த முடியும். ஷோபாசக்தி, சக்கரவர்த்தி போன்றோரின் படைப்புகள் பின் நவீனத்துவ வகை மாதிரிக்குள் அடக்கப்படாவிட்டாலும் அம் முயற்சிகளுக்கு சற்று நெருக்கமானவை எனக் கூறலாம். சமீபத்தில் மஜீத் எழுதிய ` கதையாண்டி' எனும் புதினம் வரிந்தெழுதப்பட்ட ஒரு பின் நவீனத்துவ முயற்சியாகும்.(இக்கதை பற்றிமிகவும் காட்டமான விமர்சனம் எனக்குள்ளது. அதனைப் பிறிதொரு பத்தியில் எழுதவிருப்பதால் இப்போது தவிர்த்துக் கொள்கிறேன்). புதுக்கவிதைத்துறையின் முன்முயற்சிகளுக்கு உற்சாகம் தந்த சஞ்சிகைகளாக பூரணி, அலை, களனி, அக்னி, புதுசு போன்றவற்றை கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். 80 களில் திசை பின்னர் சரிநிகர் போன்ற பத்திரிகைகளும் இவ்வகை முயற்சிகளுக்கு ஆதரவு நல்கியுள்ளன.

ஒரு விதத்தில் இங்கு எழும் பிரச்சினை உருவ, உள்ளடக்கம் சார்ந்த பிரச்சினையாகவே இனங்காணப்படல் வேண்டும். சுத்த கலைவாதம் அல்லது முற்றிலும் பிரசாரம் எனும் அந்தக்காலவாதப் பிரதிவாதங்களுடன் இப்பிரச்சினையைப் பொருத்திப்பார்க்கலாம்.

மரபுப்பாணியில் சமூக உள்ளடக்கம் சார்ந்து முற்போக்கு கவிஞர்கள் பலர் எழுதிய காலத்தில் சுத்த இலக்கியவாதிகள் அவர்களை எதிர்த்தனர். நிராகரித்தனர். இம்முற்போக்கு அணியில் தான்தோன்றிக்கவிராயர், முருகையன், யாழ்ப்பாணக்கவிராயர், சுபத்திரன் போன்றோரும் எதிர் அணியில், இ.நாகராஜன்,வி.கந்தவனம், அம்பி, காசி ஆனந்தன் போன்றோரும் இருந்தனர். முன்னவர் அணியில் பின்னர் வந்த எஸ்.ஜி. கணேசவேல், புதுவை இரத்தினதுரை, முருகு கந்தராசாவைக் குறிப்பிடலாம். எதிரணிக்கு உதாரணம் காட்ட பின்னர் எவரும் கிட்டவில்லை .ஆயினும், பின்னர் வந்த முற்போக்கு அணியில் சற்று வித்தியாசமானவராக சாருமதி முகிழ்ந்தார். அவரைவிடவும் வித்தியாசமாக சிவசேகரம் பல குறிப்பிடத்தக்க கவிதைகளைத் தந்திருக்கிறார். போரின் முகங்கள், வடலி எனும் தொகுப்புகளின் கவிதைகள் இதற்கு நல்ல உதாரணங்களும்.

நமது போர்க்கால சூழலில் இப்போது ஏராளம் தமிழ், முஸ்லிம் கவிஞர்கள் தங்களது கவிதைத் தொகுதிகளுடன் நமக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். இவர்களின் கவிதைத் தொகுதிகளுக்கான தலைப்புகளும், கவிதைத் தலைப்புகளுமே வாசகனை தலை கிறுகிறுக்கச் செய்கின்றன.எழுதியவரது பெயரைத் தவிர்த்து கவிதைகளையும்,கவிதைத் தலைப்புகளையும் வாசித்தால் ஒருவரே சகல கவிதைகளையும் திரும்பத் திரும்ப எழுதுவதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தான சூழலில் நமது கவிஞர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.இது கவிதைத் தொழிற்சாலையில் இருந்து தயாரித்து வெளியிடப்படும் உற்பத்திப் பொருட்களில் ஒன்றாக கவிதைத்துறை மாறிவிட்டதன் அவலநிலையெனக் கொள்ள வேண்டும்.புதிய கவிஞர்கள் பலர் நவீனத்துவத்தை ஏற்றுக் கொண்டாலும் தம்முள் ஏதோ வகையில் ஒத்து ஓடும் வெளிப்பாட்டு முறைச் சமரசத்தைக் கொண்டுள்ளார்கள். இதேநேரம், கிழக்கிலிருந்து தீவிரத்துடனும் பின் நவீனத்துவ கதையாடலுடனும் தமது அடையாளங்களைக் காட்டும் வகையில் இப்போது பெருவெளிக்குச் சிலர் வந்துள்ளனர்.

இவர்களினால் வலிந்துரைக்கப்படும் பின் நவீனத்துவப் படைப்புகள், ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்விக்குப் பின்னால் பொதிந்துள்ள அர்த்தப்பாடு மிக முக்கியமானது. அவை பல்வேறு விதத்தில் விரித்துரைக்கப்பட்டாலும், மக்கள் திரளின் விடிவு நோக்கிய பணியை முன்னெடுப்பவர்களுக்கு இருக்கும் ஒரே ஒரு அர்த்தப்பாடு. அது மக்கள் நலன் சார்ந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பதேயாகும்.

_____________________________
நன்றி: ஞாயிறு தினக்குரல் October 29, 2006

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, September 16, 2006

ஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி

* வடமராட்சியின் இசை, நாடக கூத்து பற்றிய சில சுருக்கக் குறிப்புகள்
-தாவீது கிறிஸ்ரோ-
_____________________________________

இக்கட்டுரை நானெழுதியதன்று.
ஞாயிறுத் தினக்குரலில் வந்த கட்டுரை.
படியெத்து இங்கு இடுகிறேன்.
_____________________________________

`ஈச்சம் பத்தையுக்கை கூத்துப்பாத்த மாதிரி' என ஒரு பழமொழி யாழ்ப்பாணத்தில் வழங்கி வருகிறது. குறிப்பாக, யாழ்நகரைச் சுற்றியுள்ள, நகர்ப்புறங்களைத் தவிர்த்து, கிராமப்புறங்களில் இக் கூற்று பெரும்பாலும் பாவிக்கப்படுவதுண்டு. கூத்துகள் எனப்படுபவை வடமோடி, தென்மோடி, மன்னார்பாங்கு, காத்தான் கூத்து என பல்வகைத்தனவாக இருந்தாலும் குறிப்பாக, நகர்ப்புறம் சார்ந்தே தென்மோடி, வடமோடி கூத்துகள் அண்ணாவிமார்களால் அரங்கேற்றப்பட்டன. பூந்தான் யோசப் முதல் அண்ணாவி டானியல்வரை குருநகர், பாஷையூர், நாவாந்துறைவரை ஏராளம் அண்ணாவிமார்கள் பல்வேறு கூத்துகளை பழக்கி மேடையேற்றி உள்ளனர். கத்தோலிக்க கூத்துகளில் செபஸ்தியார், ஞானசௌந்தரி, அனற்ரோலி சரிதம் என்பன முக்கியமானவை. அரிச்சந்திரா, நல்லதங்காள், பூதத்தம்பி, கண்டி அரசன் என்பன பிறிதொரு வகைக்குள் அடங்கும். கத்தோலிக்க அண்ணாவிமார்களே இத்தகைய பிறமதக் கூத்துகளைப் பழக்கியுள்ளமை ஒரு முக்கிய செய்தியாகும்.

யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளில் வடமோடி, தென்மோடிக் கூத்துகளை விட காத்தான் கூத்துகளே அடிக்கடி நிகழ்த்தப்பட்டு வந்துள்ளன. அதிலும் விசேடமாக, வடமராட்சிப் பகுதியில் காத்தான் கூத்து பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல அண்ணாவிமார்களால் பல்வேறு இடங்களில் பழக்கப்பட்டு, நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன.

வடமராட்சியில் நெல்லண்டைப் பத்திரகாளி அம்மன் கோவில் ஒரு விதத்தில் பிரசித்தமானது. `இத்திமரத்தாள்' என அழைக்கப்படும் இந்த அம்மனுக்கு நேர்த்தி வைக்கும் பக்தர்கள் கூத்து அல்லது இசை,நாடகம் ஒன்றை மேடையிடுவதாகவே நேர்த்தி வைப்பார்கள். கூத்து அல்லது இசை நாடகம் மேடையேற்றப்படும் தினத்தில் சம்பந்தப்பட்டவர்களது பிரசன்னமில்லாமலே அவை மேடையேறும். நெல்லண்டையில் பங்குனி,சித்திரை, வைகாசி மாதங்களில் பல நாட்கள் கூத்துகளும் நாடகங்களும் தொடர்ச்சியாக நடைபெறும். சிவாலிங்கத்தின் சீன்,ஜெயா லைற்று மிசின் என்பன நெல்லண்டையில் நிரந்தரமாக இம் மாதங்களில் தங்கி விடுவதும் உண்டு.

வடமராட்சிக்கு இன்னொருவிதத்தில் பெருமைப்படக்கூடிய விதத்தில் கிருஷ்ணாழ்வாரின் பங்களிப்பு முக்கியமானது.இசை நாடகத்துறையில் இவரது பங்களிப்பு பற்றி பலர் விதந்து பாராட்டியுள்ளனர். காங்கேசன்துறையைச் சேர்ந்த வி.வி.வைரமுத்துவின் புகுந்த ஊர் வடமராட்சியைச் சேர்ந்த அல்வாய் என்றமையால் வடமராட்சியில் வைரமுத்துவின் நாடகங்கள் நிறைய மேடையேற்றப்பட்டது மட்டுமல்ல, அவரது நாடகங்களில் வடமராட்சியைச் சேர்ந்த நற்குணம், பபூன் செல்லையா, சின்னத்துரை போன்றவர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்தமையும் ஒரு சிறப்பான நிலையாகும்.

வைரமுத்துவின் நாடகங்கள் மேடையேறுகின்ற காலங்களில் வி.என். செல்வராசா சகோதரர்களின் இசை நாடகங்களும் மேடையேற்றப்பட்டாலும் வைரமுத்துவின் `மயான காண்டம்' நாடகம் மட்டும் பெரும் வரவேற்பைப் பெற்றமை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அரிச்சந்திரன் என்றால் வைரமுத்து - சத்தியகீர்த்தியென்றால் நற்குணம் - காலகண்டஐயரென்றால் சின்னத்துரை என ஒரு அடையாளம் நடிகர்கள் மேல் ரசிகர்களால் சுமத்தப்பட்டது. இதேபோல், சந்திரமதி - இரத்தினம், எமன் - மார்க்கண்டு (சத்தியவான் சாவித்திரி) என அடையாளங்கள் அக்கால நடிகர்களுக்கு சூட்டப்பட்டிருந்தன.

வடமராட்சியில் காத்தான் கூத்து உழைப்பாளர்களினால் மட்டும் மேடையிடப்பட்டமையை அவதானிக்க வேண்டியுள்ளது. மாதனையைச் சேர்ந்த கம்மாளரும், கற்கோவளம் பொலிகண்டியைச் சேர்ந்த மீனவரும் வடமராட்சி சீவல் தொழிலாளர்களும் காத்தான் கூத்துகளை தொடர்ச்சியாக ஆடி வந்துள்ளனர். காத்தான் கூத்தில் பல பின் நவீனத்துவ கூறுகளை நாம் அவதானிக்க முடியும். மரபு வழியாக கட்டமைத்து வைத்திருக்கும் சிவன், பார்வதி, விஷ்ணுவை நையாண்டல் செய்யும் பல பாடல்கள் காத்தான் கூத்தில் அமைந்துள்ளன. தொட்டியத்து சின்னான், டாப்பர் மாமா போன்ற பாத்திரங்கள் வாயிலாக இவை அம்பலப்படுத்தப்படுகின்றன. பாடல்கள் இடையிட்ட வசனங்கள் கூட பேச்சு வழக்கில் அமைந்துள்ளமையை அவதானிக்க முடியும்.

ஸ்ரீவள்ளி - நல்லதங்காள், பூதத்தம்பி, சாரங்கதாரா என பல இசை நாடகங்கள் அக் காலத்தில் மேடையேறின. பூதத்தம்பி, கருங்குயில் குன்றத்துக் கொலையென்றும், காத்தவராயன் ஆரியமாலா என்றும் மேடையேற்றப்பட்டன. அதேபோல், அரிச்சந்திரா, மயானத்தில் மன்னன் என்றும் மேடையேற்றப்பட்டது. விடியவிடிய சம்பூர்ண அரிச்சந்திரா என்றும் சுருக்கமாக மயான காண்டம் என்றும் மேடையேற்றப்பட்டன.

மேடையில் ஒரே நாடகத்தில் பல நாடகங்களின் காட்சிகளை இணைத்து அளிக்கை செய்யப்பட்டதும் உண்டு. வடமராட்சியில் அண்ணாச்சாமி வாத்தியாரின் நாடகங்கள் பிரசித்தி பெற்றிருந்தன. அண்ணாச்சாமியிடம் ஓவியத்திறமையும் இருந்தமையால் அவரது சீன்களும் அவரது நாடகங்களும் பயன்பட்டன. மின்சாரம், ஒலிபெருக்கி இல்லாமல் பெற்றோல் மாக்ஸ் வெளிச்சத்தில் இந் நாடகங்கள் கிராமப்புறங்களில் மேடையேற்றப்பட்டன. தங்களுக்குத் தாங்களே ஒப்பனை செய்வதிலும் இந் நடிகர்கள் திறமை பெற்றிருந்தனர்.

ஸ்ரீவள்ளி நாடகம் ஒன்றில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்த கைக்குழந்தை ஒன்றைப் பெற்று மேடையில் வள்ளியாக நடிகர்கள் பாவனை செய்தார்கள். அந்த ஆண் குழந்தை வயது வந்து பெரியவனாக மாறிய பின்னும் வள்ளியென அழைக்கப்படும் விபரீதமும் வடமராட்சியில் நிகழ்ந்துள்ளது.

ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நடிகர்களை பாராட்டுவதற்காக அவர்கள் பாத்திரமாக ஒப்பனை செய்து மேடையில் தோன்றியவுடன் மாலை அணிவித்து பொன் முடிச்சுக் கொடுக்கும் `அகோனா' எனும் கௌரவ நிகழ்ச்சிகள் அக் காலத்தில் அடிக்கடி மேடைகளில் நிகழ்ந்துள்ளன. இன்று கூத்துகளோ, நாடகங்களோ மேடையேற்றப்படாமையால் இப்படியான நிகழ்வுகளும் அருகிப் போய் விட்டன.

1960 களில் `புழுதிக் கூத்து' எனும் ஒருவகைக் கூத்து வடமராட்சியில் நிகழ்த்தப்பட்டமை பற்றி வயதானவர்கள் சிலர் மூலம் அறியக் கிடைத்தது. 60 களின் ஆரம்பத்தில் `மாயக்கை' எனும் கிராமத்தில் இவ் வகையான `குசலவன்' எனும் கூத்தைப் பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. நிலத்தில் நான்கு கம்புகள் கட்டி ஒரு வெள்ளை வேட்டியின் மறைப்பில் அண்ணாவியாரோடும் மத்தளக்காரரோடும் நாடக பாத்திரங்கள் தோன்றி பாடி ஆடும் ஒருவகை கூத்தாக அது விளங்கியது. இதற்கு `புழுதிக்கூத்து' எனும் பெயர் பொருத்தமானது தான். ஆயினும் இதன் உண்மைப் பெயரென்ன? என்பதை நாடக விற்பன்னர்கள் தான் விளக்கமாக எழுத வேண்டும். பாத்திரங்களின் உடைகள், ஆட்ட முறைகள் எல்லாமே ஒரு வித்தியாசமான முறையில் இருந்தமையையும் கரப்பு கட்டிய உடைகளுடன் அவர்கள் தோன்றியமையும் இங்கு விசேடமாகக் குறிப்பிட வேண்டும்.

வடமராட்சியின் கத்தோலிக்கக் கிராமங்களில் கோவில் திருநாள் இறுதி நாட்களில் கத்தோலிக்கக் கூத்துகள் மேடையேற்றப்படுவது வழமை. சக்கோட்டை புனித சவேரியார் ஆலயம் - தும்பளை லூர்து அன்னை தேவாலயம் போன்றவற்றில் செபஸ்தியார், பூதத்தம்பி போன்ற கூத்துகள் ஆடப்பட்டன. இக்கூத்துகள் ஆடப்பட்டவை என்பதை விட பாடப்பட்டன என்பதுவே பொருத்தமாகும். மன்னார்பாங்கில் அமைந்ததாகக் கூறப்படும் இக்கூத்துகளில் பக்கப் பாட்டுக் காரர்களின் குரலே ஓங்கி ஒலிப்பதும் `பசாம்' எனப்படும் யேசுவின் பாடுகளை வாசிக்கும் இராகத்தில் கூடுதலாக இக்கூத்துப் பாடல்கள் பாடப்படுவதும் ஒரு வித்தியாசமான விடயம். காத்தான் கூத்துகளில் வரும் சிந்துநடையை ஒத்தாக இம்மன்னார்ப்பாங்குக் கூத்துப் பாத்திரங்கள் மேடையில் நடந்தும் பாடியும் நடிப்பது முக்கியமானதாகும். ஆயினும், இவ்வகை நாடகங்களின் அளிக்கைககள் மிகக் குறைவு. காத்தான் கூத்தின் ஆதிக்கமே வடமராட்சியில் மிகக் கோலோச்சியமையை நாம் அவதானிக்க வேண்டும். 1967 ஆம் ஆண்டு மாவிட்டபுரம் ஆலயப்பிரவேச காலத்தில் உருவாகிய அம்பலத்தாடிகளின் `கந்தன் கருணை' ,காத்தான் கூத்துப் பாணியில் அமைந்தமை ஒன்றும் தற்செயலான விடயமல்ல. வடமராட்சி மக்களுக்கு மிகவும் வாலாயமான ஒரு பாணியை அம்பலத்தாடிகள் தேர்ந்தமையும் அண்ணாவியார் கணபதிப்பிள்ளையின் ஆளுமையும் இதற்கொரு காரணம். மக்கள் இலக்கியம், மக்களுக்கான இலக்கியம் பற்றிப் பேசும் அல்லது எழுதும் படைப்பாளிகள் மக்களின் மொழியை மக்களுக்குப் புரியும் விதத்தில் கொடுப்பதன் மூலம் அவர்களை ஈர்க்க முடியும் என்பதற்கு கந்தன் கருணை ஒரு முக்கிய உதாரணம். கந்தன் கருணை வடமராட்சியில் மட்டுமல்ல, திருகோணமலை, கொழும்பு மற்றும் வடபுலத்தின் பல பகுதிகளிலும் மேடையேற்றப்பட்டு வரவேற்கப்பட்டமையும் ஈண்டு குறிப்பிடல் வேணடும். பின்னர் கந்தன் கருணை தாசிசீயஸ், சுந்தரலிங்கம் போன்றவர்களால் வேறொரு விதத்தில் மேடையேற்றப்பட்ட போதும் அம்பலத்தாடிகளின் கந்தன் கருணை பெற்ற வரவேற்பையும் பலனையும் பெற முடியவில்லை.

ஒரு விதத்தில் நாடக - கூத்து ரசிகன் என்ற வகையில் சில தகவல்களை இக்கட்டுரையில் நான் கோடிட்டுக் காட்டியுள்ளேன். வடமராட்சியின் கலைப் பாரம்பரியம் பற்றி ஆராயும் ஆராய்ச்சி மாணவர்கள், நாடக வித்தகர்கள், நாடகமும் அரங்கியலும் கற்றவர்கள் இவை பற்றி விரிவாக ஆராய வேண்டும், எழுத வேண்டும் என்பதுவே எனது விருப்பம். எழுதுங்கள் எமது கலைப் பாரம்பரியத்தை இதன் மூலமாக நாமறிவதனூடாக உலகமும் அறியவரட்டும்.
________________________________________


நன்றி: ஞாயிறு தினக்குரல் Sunday, September 10, 2006


_____________________________________________

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, August 04, 2006

கவிஞர் பொன்.கணேசமூர்த்தி சுட்டுக்கொலை

ஈழத்தைச் சேர்ந்த முக்கிய படைப்பாளியான கவிஞர் பொன்.கணேசமூர்த்தி அவர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஈழத்தின் வடபுலத்தில் கவிஞர் மிகப்பிரபலமானவர்.
புலிகளின்குரல் வானொலியில் 90 இல் ஒலிபரப்பான இவரது படைப்பான 'இலங்கை வேந்தன்' 'இலங்கைமண்'என்ற இராவணனைக் கதாநாயகனாகக் கொண்ட நாடகம் இன்றும் என் மனத்தில் நிற்கிறது. அதை பின் நாட்டுக்கூத்து வடிவமாக்கினார்.
இதைவிடவும் பலமேடை நாடகங்களை இயக்கியவர். பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் என்று பல கலைவடிவங்களில் மிளிர்ந்தவர்.
பல படைப்புக்களை வெளியிட்டவர்.

இனந்தெரியாத நோயில் அவதிப்பட்டு வன்னியில் இறந்துபோன தன்னுடைய இரண்டாவது மகனான மதனரதனின் சம்பவத்தைக் கொண்டு (அவன் என்னுடைய வகுப்புத் தோழன்) அவர் எழுதிய இறுதிநாவல் (எடுக்கவோ தொடுக்கவோ???) உருக்கமானது.

இதைவிட விடுதலைப்போராட்டத்துக்கென அருமையான சில பாடல்களை எழுதியளித்துள்ளார்.

இவருடைய மூன்றாவது மகன் (மதன மெளனி) விடுதலைப்புலிகள் அமைப்பில் போராளியாயிருந்து 1996 இல் யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்தவர்.
விடுதலைக்காக நிறைவான பணியாற்றிய இக்கலைஞன் இன்று யாழ்ப்பாணத்தில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேரிலறிந்த, மிக நெருக்கமான குடும்பம் அவருடையது.

கவிஞரின் குடும்பத்துக்கு என் மனமார்ந்த வருத்தங்கள்.


_____________________________________________

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, May 16, 2005

முசுப்பாத்தி பற்றி முசுப்பாத்தியாக...

முசுப்பாத்தி...
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.
'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.

இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.

பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.

முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.

முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.

முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.

முசிப்பு < முசி = 1.மெலிவு. 2.களைப்பு. 3.அழிவு. முசிப்பாற்றி = இளைப்பாற்றுகை. (Winslow's Tamil English Dictionary)
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)

முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________