Sunday, August 30, 2009

ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்

இது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.

ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி மூடப்பட்டுள்ளது.

ஆனால் சொல்லப்பட்ட கட்டுரைதான் இன்னும் எழுதப்படவில்லை.
இந்நிலையில் இன்று கிருத்திகனின் வலைப்பதிவில் அவர் ஆங்கில ஒலியியல், பாமினி, தமிழ்நெற்-99 முறைகளில் தட்டச்சுவது பற்றிச் சொன்ன கருத்தொன்றுக்கான எதிர்வினையாற்ற இவ்விடுகை எழுதப்படுகிறது.

தொடரிலக்கத்தைப் பார்த்து அதிகம் யோசிக்காதீர்கள்.
நாங்களெல்லாம் தொடர் எழுதினாலும் ஆண்டுக்கொரு பாகம் எழுதும் பேர்வழிகள். ‘மரங்கள்’ தொடரைப் பார்த்து விளங்கிக் கொள்க ;-)

ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும்போது தட்டச்சுபவரின் மூளையில் ஆங்கில வரிவடிவங்களூடாகவே அவர் எழுத்துக்கூட்டுவார் என்பது அம்முறைக்கெதிரான ஒரு வாதம். சிறிது கால இடைவெளியில் அது தாக்கத்தைத் தராது; ஆனால் வருடக்கணக்கில் ஒருவர் அப்படியே தொடர்ந்தும் தட்டச்சுவாராக இருந்தால் அம்முறை அவரின் தமிழ்ச்சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு விளக்கம்.

அதை மறுக்க வந்த இடத்தில் கிருத்திகன் இப்படிச் சொல்கிறார்.

//மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும்.//

கிருத்திகன்,
முதலில் உமக்கு எனது பாராட்டு. ஏனென்றால் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான வாதமாக வைக்கப்படுபவற்றுள் ஒன்றான ‘ஆங்கில வரிவடிவங்கள் மூளையில் பதிதல்’ என்பதைச் சரியாக விளங்கியிருக்கிறீர். அதை ஏற்றுக்கொள்ளாதது, மறுப்பது, அது தேவையற்ற பயம் என்று சொல்வது நியாயமான நடவடிக்கையே.

இப்போது நான் மேலே மேற்கோளிட்ட உம்முடைய கருத்துக்கு வருவோம்.
உமது கருத்து முற்றிலும் தவறானது என்பது என் கருத்து. பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுவதில்லை, ஆனால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாகவே எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பது எனது கருத்து.

இவற்றில் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீர் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களும் அப்படியே என்கிறீர். உண்மையில் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களின் நிலை அப்படியில்லை. அவர்கள் தமிழ் வரிவடிங்களூடே சிந்திக்கிறார்கள்.

ஆறு வருடங்களாக மிகமிகச் சரளமாகத் தமிழில் தட்டச்சிக் கொண்டிருக்கும் பாமினிக்காரன் ஆகிய எனக்கு அம்மா என்று தட்டச்சுவதற்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிங்களைச் சொல்ல முடியாது. நீர் தந்திருக்கும் ஆங்கில எழுத்துக்கள் சரிதானா என்பதைக்கூட நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘அ’வுக்கு எந்த விரல், ‘ம்’ எழுத எந்த விரல்கள் ‘மா’ எழுத எந்த விரல்கள் எந்த வரிசையில் தட்ட வேண்டும் என்பதே. சரளமாகத் தட்டச்சக்கூடிய தமிழ்நெற்99 முறைக்காரன் ஒருவருக்கும் அம்மா என்று தட்டச்சுவதற்கான விசைகளின் ஆங்கில வரிவடிவங்களைச் சட்டெனச் சொல்ல முடியாது. [நான் எங்காவது வேலையாக நிற்கும்போது ‘டேய் ‘கூ’வன்னா அடிக்க வேணுமெண்டா எந்தக் கீ அடிக்க வேணும்?’ என்று தொலைபேசியில் கேட்பார்கள். விசைப்பலகை என்முன் இல்லையென்றால் உடனே என்னால் சொல்லமுடியாது. ஒருசுற்றுவழி மூலம் இதைக் கண்டுபிடித்துச் சொல்வேன். அச்சுற்றுவழி இறுதியில்…]

இன்னும் விளக்கமாக ஓர் எடுத்துக்காட்டு சொல்லலாம்.

பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ நீண்டகாலம் தட்டச்சிக்கொண்டிருக்கும் உம்முடைய நண்பரொருவரை கடற்கரையிலோ உணவுக்கடையிலோ தெருவிலோ பூங்காவிலோ எங்கேயாவது சந்திக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான விடயம், உங்களிடத்தில் கணனியோ விசைப்பலகையோ இருக்கக்கூடாது.

இப்போது உம்முடைய நண்பரைப் பார்த்துக் கேளும், “ஐசே, ‘அம்மா இங்கே வாவா, ஆசை முத்தம் தாதா’ எண்டு எழுதிறதுக்கு நீர் அடிக்கப்போற விசைகளின்ர ஆங்கில எழுத்துக்களை வரிசையாச் சொல்லும் பாப்பம்”.

உமது நண்பரால் சொல்ல முடியாது. எழுதிக்காட்டவும் முடியாது. (சிலவேளை ஒன்றிரண்டு எழுத்துக்கள் மிகச்சிரமப்பட்டுச் சரியாகச் சொல்லக்கூடும்). ஏனென்றால் பாமினியிலும் தமிழ்நெற்99 இலும் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடு சிந்திப்பதில்லை. (அப்படித்தான் சிந்திப்பார்களென்றால் அவர்களால் உடனடியாக உமது கேள்விக்கான பதிலை கடகடவெனச் சொல்ல முடியும். அத்தோடு ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விமர்சனம் அவர்களுக்கும் பொருந்தும். தட்டச்சத் தொடங்கி நீண்டகாலமாகியும் விசைப்பலகையைப் பார்த்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு விசையாகக் குத்திக் கொண்டிருப்பார்களென்றால் சிலவேளை அவர்கள் இந்த வகைக்குள் வரக்கூடும்.) ஆனால் இதே கேள்வியை ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும் ஒருவரிடம் கேட்டுப்பாருங்கள். தயக்கமே இல்லாமல் பதில் வரும்.

இப்போது புரிகிறதா ‘ஆங்கில வரிவடிவங்ளூடாக’ மனதில் எழுத்துக்கூட்டுவது என்று எதைச் சொல்கிறோமென்று? பாமினியிலோ தமிழ்நெற்99 முறையிலோ தட்டச்சுபவர்கள் தமிழெழுத்துக்களாகவே சிந்திக்கிறார்கள்.

==============================

தமிழெழுத்துக்கான விசையின் ஆங்கில வடிவத்தைக் கண்டுபிடிக்க ஒரு சுற்றுவழியைப் பயன்படுத்தலாமென்று சொல்லியிருந்தேன். அது என்னவென்றால் விசைப்பலகையில் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி அதன்மூலம் கண்டுபிடிப்பது. எடுத்துக்காட்டாக ‘அ’ என்ற எழுத்துக்கான விசையின் ஆங்கில எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். விசைப்பலகையில் ‘அ’ தட்டச்சுவதைப் போன்று செய்து பார்த்துக் கொள்வது, பிறகு ஆங்கிலத்தில் அதேமுறையில் விரலைப் பயன்படுத்தும்போது வரும் எழுத்து எதுவென்று பார்ப்பது. அதுகூட சுலபமான காரியமன்று.

“அம்மா இங்கோ வாவா, ஆசைமுத்தம் தாதா” என்ற வசனத்தை நான் முயன்று பார்த்தேன். அதாவது அவற்றுக்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிவங்களை வரிசையாகச் சொல்ல வேண்டுமென்று. அவ்வெழுத்துக்களைத் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி ஆங்கிலத்தில் அதேபோன்று தட்டச்சும்போது உருவாகும் எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முயன்றேன். மிகமிகக் கடினமாக இருந்தது.

ஏனென்றால் பொதுவாக ஓரெழுத்தை எப்படித் தட்டச்சுவது என்றுதான் பழக்கப்பட்டிருக்கிறோம். விரல்கள் இயல்பாகவே அந்தந்த நிலைக்குச் சென்று விசைகளை அழுத்துகின்றன. ஆனால் இந்த விரலால் இப்படித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? என்று எதிர்வளமாக யோசித்தால் விடை காண்பது எளிதன்று. எமது மனம் அதற்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை. Shift உடன் வலதுகையின் நடுவிரலை நடுவரிசையில் அழுத்தினால் ‘மு’ வருமென்று கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் ஆங்கிலமுறையில் இதேமாதிரித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? ம்ஹும். தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் ‘K’ எழுதவேண்டுமென்று கேட்டால் தன்னிச்சையாகவே இடது சின்னிவிரல் shift விசையை அழுத்திப்பிடிக்க வலதுபக்க நடுவிரல் நடுவரிசையில் தனக்குரிய விசையை அழுத்துகிறது, அதாவது ‘மு’ எழுதுவதற்குப் பயன்படுத்திய அதே விசை.

இத்தோடு இவ்விடுகை நிறைவுபெறுகிறது.
இவ்விடுகைகூட அவசரமாகவே எழுதப்படுகிறது. நேரமிருந்தால் பிழைதிருத்தியோ இன்னும் விளக்கம் அதிகமாகவோ மேம்படுத்தலாம்.

- பின்னூட்டங்களில் சந்திப்போம்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, August 23, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு

பதிவர்களின் கலந்துரையாடலிற் சொல்லப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்திய எரிச்சலின் பலனாக இவ்விடுகை எழுதப்படுகிறது.

இன்று (23-08-2009) கொழும்பிலே இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பொன்று நடைபெற்றது. இது தொடர்பான விவரணங்கள், விவரங்களை தொடர்புடையவர்களே எழுதியிருப்பார்கள். ஆகவே இது தொடர்பான ஆலாபனைகள் இங்குத் தேவையில்லை.

சந்திப்பானது இணைய வழியிலே நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அதனால் எங்களைப் போன்றவர்கள் அச்சந்திப்பில் பார்வையாளராய்ப் பங்கேற்க முடிந்தது. இந்நிலையில்,மற்றவிடங்களில் நடைபெற்றது போன்று அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மூன்றாந்தரப்பாக நின்று கதைக்காமல் நேரடி அனுபவமாகவே எமது விமர்சனங்களை முன்வைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

சந்திப்பில் கதைத்தவர் தனது கருத்தை முன்வைத்தது போலவே அதில் பார்வையாளனாய்க் கலந்து கொண்ட எனக்கும் அதற்குரிய எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் உரிமையுண்டெனக் கருதி இவ்விடுகை எழுதப்படுகிறது.

இணையவழிப் பார்வையாளர்கள் தனியே பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது தமது கருத்துக்களைத் தட்டச்சிப் பரிமாறும் வசதியுமிருந்தது. நான் அரட்டைப் பெட்டியில் நுழையும்போது ஏற்கனவே இருபது வரையானவர்கள் 'குதியன் குத்தி'க் கொண்டிருந்தார்கள். கிருத்திகனும் சினேகிதியும் உசாராக நின்று ஓடியாடி வேலைசெய்துகொண்டு நின்றார்கள். (எத்தினை பேர் சந்திப்புக்கு வந்திருக்கினம் என்று யாராவது கேட்டாலும் இவர்கள்தான் பதிலளித்துக்கொண்டிருந்தார்கள். 'உடல் இங்கே, உள்ளம் அங்கே' என்று அதற்கொரு காரணமும் சொல்லப்பட்டது ;-))

சந்திப்பில் தனித்தனி ஆளாகப் பேசிமுடிய கலந்துரையாடல் நேரம் வந்தது (அல்லது அப்படியொரு புதுத் திசைக்கு நிகழ்வு சென்றது). அதிலே தமிழில் தட்டச்சுவது பற்றிய கருத்துப் பரிமாற்றம் தொடங்கியதும்தான் நான் கொஞ்சம் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அதுவரைக்கும் நடைபெற்றவற்றில் நான் ஆர்வப்படுமளவுக்கு எதுவுமிருக்கவில்லை. தட்டச்சு முறைபற்றித் தொடங்கிய கருத்து, தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகையை அறிமுகப்படுத்தல் என்பதோடு நின்றுகொண்டது. அதைத்தாண்டிச் செல்லவில்லை. அரட்டைப் பெட்டியில் நான் எழுதிக்கொண்டிருந்தேன், பாமினி, தமிழ்நெற் 99, Tamil phonetic முறைகள் பற்றிய கலந்துரையாடலைச் செய்யும்படி. அத்தோடு வந்திருக்கும் பதிவர்களிடத்தில் அவர்கள் பயன்படுத்தும் விசைப்பலகை முறை பற்றிய கணிப்பீடு ஒன்றை எடுக்கும்படியும். Tamil Phonetic முறையைப் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு இலங்கைப் பதிவர்களிடம் இருக்கிறதா, ஒருவராவது அந்த விழிப்புணர்வு பற்றி அக்கலந்துரையாடலில் கதைப்பாரா என்பது என் ஆவலாயிருந்தது. ஆனால் நடக்கவேயில்லை. கணிப்பீடு எடுக்கும்படி பலதரம் கேட்டும்கூட எந்தப்பதிலுமில்லை. அரட்டைப்பெட்டியில் 'அதி முக்கியமான' வியாக்கியானங்கள் நடந்துகொண்டிருந்தன. இயலாக்கட்டத்தில் 'டோய், ஆருக்காவது நான் சொல்லிறது கேக்குதோ?' என்று கேட்டதற்கு 'ஓம்' என்று ஒரு பதிலும், 'இல்லை, கேக்கேல' என்று இன்னொரு பதிலும் மட்டும் வந்தது;-). இருவருமே இணையவழிப் பார்வையாளர்கள்.

இரண்டாவது பதிலைச் சொன்னவர் சொன்னார், 'ஓய் வசந்தன், உம்மட பிரண்ட் கதைக்கிறார்' என்று. எனக்கு எந்த நண்பனும் அங்கில்லை என்றபோதும் ஆர்வமாகப் பார்த்தேன். உடனடியாக யாரென்று தெரியாவிட்டாலும் கதைக்கத் தொடங்கி சில வினாடிகளுள் கண்டுபிடித்துவிட்டேன். அவர் மு.மயூரன். 'உம்மட பிரண்ட்' என்று மயூரனைக் குறிப்பிட்டு ஏன் சொன்னார் என்றோ அதிலுள்ள உட்குத்து என்னவென்றோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் நான்மட்டும் அரட்டைப் பெட்டியில் குத்திக்கொண்டிருந்த விடயத்தை மயூரன் வாயிலெடுத்தார் (கையிலெடுத்தார் எண்டு சொல்லேலாது பாருங்கோ). பிறகு யோசித்தேன், இதற்கு மயூரன் பேசாமலேயே இருந்திருக்கலாம்; எழில்வேந்தனைச் சாடி ஓர் இடுகை எழுதுவதிலிருந்து நானாவது தப்பியிருப்பேன்.

தொடக்கத்திலேயே மயூரன் சொன்னார், தனக்கு phonetic விசைமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லை, ஏனென்றால் தான் அதைப் பயன்படுத்துவதில்லையாம். இப்படி நழுவிய மயூரனுக்கு அரட்டைப் பெட்டியில் 'இவர் தமிழ்க் கடும்போக்காளர் போல கிடக்கு' என்ற பட்டம் கிடைத்தது தனிக்கதை. ஆனால், phonetic முறையை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள் என்று மூன்றாந்தரப்பாக நின்று அவர்களின் நியாயத்தைச் சொல்லப் புறப்பட்டார் மயூரன். அப்படி அவர் சொன்ன நியாயங்கள் phonetic முறையை எதிர்ப்பவர்களின் வலுவான வாதமாக இருக்கவில்லை என்பதுதான் சோகம்.

"phonetic முறையில் தட்டச்சிக்கொண்டு போனால் எதிர்காலத்தில் தமிழ் தனது வரிவடிவங்களை இழந்து ஆங்கில வரிவடிவங்களால் எழுதப்படும் நிலைக்குப் போய்விடும் என்பது phonetic முறையின் எதிர்ப்பாளர்களின் வாதம். மலாய் மொழிக்கு நடந்ததைப் போல தமிழுக்கும் நடந்துவிடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் யுனிகோட் வந்ததால் தமிழ் தப்பித்தது"
என்பது மயூரன் "மூன்றாந்தரப்பாக" நின்று phonetic முறை எதிர்ப்பாளர்கள் சார்பில் சொன்ன நியாயம்.

ஒருங்குறி வந்ததால் தமிழ் அடைந்த நன்மையைக் குறிக்க இதையொரு காரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் phonetic முறையை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணமாக இதைச் சொன்னார் மயூரன். (ஒருங்குறியே ஓர் அரைகுறைத் தீர்வு என்பது இன்னும் வாதமாக இருக்கிறது. இராம.கி இது குறித்து முன்பு எழுதினார். இன்னொருவரும் (கவிதா கயீதா ஆன கதை - WOW?)இது குறித்து எழுதினார். ஆனால் ஒருங்குறி மீதான முரட்டுத்தனமான காதலால் அக்கருத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் விளங்காதது போல் நடித்து ஒரு கூட்டம் எதிர்த்தது. பிறகு அதுபற்றிய கதைகள் வலைப்பதிவில் அடங்கிவிட்டன.)

phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்த்து வலைப்பதிவுகளிலேயே நிறைய எழுதப்பட்டாயிற்று. இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார்கள் சிலர். "ammaa ≠ அம்மா" என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து அதை முன்னெடுத்தார்கள். வலைப்பதிவுகளில் தட்டிகள் எல்லாம் வைத்தார்கள். இப்போதும் சில வலைப்பதிவுகளில் அவை இருக்கக் கூடும். (அவற்றுக்கான இணைப்புக்களைத் தேடியெடுத்துப் போட நேரமோ ஊக்கமோ இல்லையென்பதால் நண்பர்கள் யாராவது பின்னூட்டங்களில் இடுவீர்களாக!)

phonetic முறையை எதிர்ப்பவர்கள் சார்பில் கதைக்கப் புறப்பட்ட மயூரனும் அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை. (அவரே சொன்னதுபோல் அதை எதிர்ப்பது, ஆதரிப்பது தொடர்பில் அவருக்குக் கருத்தில்லையாதலால் அது தொடர்பில் அவர் ஆராயவில்லையென்று விட்டுவிடலாம். ஆனால் அப்படி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பது 'தமிழ்ச்சிந்தனை'யில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி சிந்திப்பாரானால் அவர் தனது நிலையை மாற்றக் கூடும்)

ஆனால் அதற்குப் பிறகு வந்த சிறப்பு விருந்தினர் (நானும் அவர் வலைப்பதிவராகத்தான் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் என்று நினைத்திருந்தேன் வந்தியத்தேவனின் இடுகையைப்பார்க்கும்வரை) எழில்வேந்தன் phonetic முறையில் தட்டச்சுவதற்கு வக்காலத்து வாங்க வந்து சொன்ன கருத்துக்கள் எரிச்சலைக் கிழப்பியதுடன், எழுதாமலே விட்டிருந்த இவ்வலைப்பதிவில் ஓரிடுகை எழுத வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாயின.

"இன்று ஏராளமான குழந்தைகளுக்குத் தமிழ் பேசவே வரவில்லை. தமிழ் சுத்தமாக எழுதவே தெரியாது. வெளிநாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்ச் சொற்களைப் பிறநாட்டு மொழிகளிலேயே எழுதி வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த phonetic முறையில் தட்டச்சுவது நல்ல வரப்பிரசாதம். ammaa என்று எழுதினால் 'அம்மா' என்று வரும். அம்மா என்பதற்கான தமிழ் வரிவடிவங்கள் எப்படியிருக்குமென்று அந்தப் பிள்ளைகள் அறிவார்கள். எனவே phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்க்காதீர்கள்"
என்பதாக அவரது வாதம் அமைந்திருந்தது.

தமிழ்ச்சொல்லைப் பிறமொழி வரிவடிவங்களில் எழுதி வாசிக்கும் அந்தக் குழந்தைகளின் நிலைக்குத்தான் தமிழ்வலைப்பதிவாளர்களையும் போகச் சொல்கிறார் எழில்வேந்தன். அம்முறையில் தட்டச்சிக் கொண்டிருந்தால் அதுதான் நடக்கும் என்பதைச் சூசகமாகவேனும் ஒத்துக் கொண்ட எழில்வேந்தனைப் பாராட்டத்தான் வேண்டும். கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் phonetic முறை எதிர்ப்பாளர்களும் சொல்லிக் கொண்டிருப்பது ஏனோ உறைக்கவில்லை. சிலவேளை தான் தமிழ் வலைப்பதிவர்களிடத்தில் பேசுகிறேன் என்பதை மறந்து எங்கோ புலம்பெயர்ந்திருக்கும் - தமது பிள்ளைகளுக்கு தமிழெழுத்துக்கள் எப்படியிருக்குமென்று காட்ட அவாப்படும் பெற்றோர் யாருக்காவது வகுப்பெடுக்கிறேன் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

'என்னப்பா இந்தாள் இப்பிடிக் கதைக்குது? என்று எனது விசனத்தை அரட்டைப் பெட்டியில் வெளியிட்டபோது,
'ஓய்! அவர் மூத்த வலைப்பதிவாளர் தெரியுமோ?' என்று ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டார்.
எனக்கு அது தெரியும். ஆனால் அவ்வெதிர்க் கேள்வி கேட்டவர் என்ன கருத்தில் அதைக் கேட்டாரோ தெரியாது, எனக்கென்னவோ நையாண்டி பண்ணுவதைப் போலவே இருந்தது. அப்படியென்றாலும்கூட என்னையா எழில்வேந்தனையா என்பதையும் அவர்தான் சொல்ல வேண்டும் ;-).

அம்மா என்று காகிதத்தில் எழுதும்போது ஆனா, இம்மன்னா, மாவன்னா என்றுதான் மனதில் எழுத்துக் கூட்டி எழுதுவோம். பாமினி முறையிலோ தமிழ்நெற் 99 முறையிலோ தட்டச்சுபவர்களும் அப்படியே எழுத்துக்கூட்டித் தட்டச்சுவார்கள். ஆனால் phonetic முறையில் தட்டச்சுபவர்கள் அம்மாவை ஆனா, இம்மன்னா, மாவன்னா என்று மனதுள் எழுத்துக்கூட்டுவதில்லை. மாறாக a m m a a என்றுதான் மனதுள் எழுத்துக்கூட்டுவார்கள். இந்தச் சின்னப் புள்ளியிலிருந்து யோசிக்கத் தொடங்குங்கள். phonetic முறையில் தட்டச்சுவதால் தனிமனிதனுக்கு, அதன் தொடர்ச்சியாக சமுதாயத்துக்கு ஏற்படப்போகும் தீங்கை. தீங்கென்பது இரண்டொரு வருடத்தில் வருவதைப்பற்றியன்று; அல்லது ஒருவருடைய வாழ்நாளில் வருவதைப்பற்றிய பயம் மட்டுமன்று. இவற்றின் தொடர்ச்சியாக ஒரு மொழிக்குழுமத்தில் நடைபெறப்போகும் தாக்கத்தைப் பற்றியது. கணனித் தட்டச்சைத் தவிர்த்து எவருமே பயணிக்க முடியாத நிலை எமது சமுதாயத்திலும் ஏற்படத்தான் போகிறது. இந்நிலையில் இப்படியான தட்டச்சு முறையினால் எமது மொழிக்குழுமம் அடையப்போகும் பாதிப்பு பற்றிய அறிவு, சில தலைமுறைகள் கடந்தபின் எமது குழுமத்தின் மொழிவளம் பற்றிய "பிரக்ஞை" (இந்தச் சொல்லில சிரிக்கக் கூடாது. சீரியசாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்) எமக்கு இருக்க வேண்டும்.

முந்தியொருக்கா எழில்வேந்தன் அண்ணர், அகிலனுக்குக் குடுத்த செவ்வியொண்டு இந்த நேரத்தில் ஞாபகம் வந்து துலைக்குது. திரும்ப ஒருக்கா அதைக் கேக்க வேணும். நேரமிருந்தாப் பாப்பம். ஆனா ஒண்டு நல்ல ஞாபகமிருக்கு. அதில மூச்சுக்கு ஒருதரம் "தமிழ் பற்றிய 'பிரக்ஞை' இப்ப குறைஞ்சு கொண்டு வருது. அது எல்லாருக்கும் இருக்க வேணும்" எண்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

===========================
கலந்துரையாடல் குறித்துப் பாராட்ட நிறையவே உள்ளன. சும்மா நாலுபேர் மதகில் குந்தியிருந்து பீடி குடித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்காமல் உண்மையிலேயே அதிக சிரத்தையெடுத்துச் செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு தனிப்பட எனது பாராட்டு. குறிப்பாக உலகெங்கும் இணையவழியில் அதை நேரடி ஒளிபரப்புச் செய்தது. அந்த வசதியால்தான் நாங்கள் நேரடியாகப் பங்குகொண்ட உணர்வோடு இந்த விமர்சனத்தை எழுத முடிகிறது.

இது உண்மையிலேயே உளமார்ந்த பாராட்டே. பின்னூட்டத்தில் யாராவது வந்து 'ஏய் இவ்வளவு நல்ல விசயம் நடந்திருக்கு நொட்டை மட்டும் பிடிச்சுக் கொணடிருக்கிறாய்' என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டதன்று. அப்படியாக நடுநிலையாளன், நியாயவாதி என்ற பட்டங்களைப் பேணவேண்டிய நிலை எனக்கில்லை.

மேலும், அச்சந்திப்பிலேயே மருதமூரான் குறிப்பிட்ட கருத்தொன்று பிடித்திருந்தது. யாழ்தேவி என்ற பெயர் குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது, "இவ்வளவுநாளும் ஆகா ஓகோ என்று புகழ மட்டுமே செய்தீர்கள், ஒருவராவது இப்படியான விமர்சனத்தை இவ்வளவு நாட்களில் எழுப்பவேயில்லை. தேவையில்லாத புகழ்ச்சியை விட்டுவிட்டு சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைத்திருக்க வேண்டும்" என்று ஆதங்கத்தோடு சொன்னது பிடித்திருந்தது.
அதையே நான் செய்கிறேன், புகழ்ந்துகொண்டிருப்பதைவிட சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைப்போமென்று.

நிற்க, மருதமூரான், யாழ்தேவி என்ற பெயரை மாற்றுவதே நன்று என்பது எனது கருத்து. இவ்வளவு நாட்களும் ஓடிவிட்ட, பிரபலமாகிவிட்ட அப்பெயரை இப்போது மாற்றுவதென்பது சங்கடமானதே. உண்மையில் இன்று உங்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும்வரை எனக்கு அப்படியொரு திரட்டி இருப்பதே தெரியாது.

=====================================
ரவிசங்கர் முன்பு எழுதிய தமிழ்நெற்99 விசைப்பலகைக்கு ஆதரவான இடுகைகளுக்கான இணைப்புக்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நெற்99 முறையைப் பரப்புவதையே முதன்மை நோக்கமாக அவை கொண்டிருந்தால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதிலுள்ள அபத்தத்தை அவை பேசுகின்றன. அவ்விடுகைகள் சிலருக்காவது விளக்கத்தை அளிக்கலாம்.

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?


தமிழ்99


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, May 27, 2008

'கேள்விக்குறி' இயக்குநரின் பதில்

"கேள்விக்குறி - கவர்ந்த தமிழ்த் திரைப்படம்" என்ற தலைப்பில் முன்பொரு இடுகை இட்டிருந்தேன்.
அவ்விடுகைக்கு அத்திரைப்படத்தின் இயக்குநர் ஜெய்லானி பின்னூட்டத்தில் பதிலளித்திருந்தார்.

அப்பதிலை இங்குத் தனியிடுகையாக இடுகிறேன்.
இது அவ்வியக்குநருக்கு நானளிக்கும் மரியாதை எனக்கொள்க.

முந்திய இடுகையில் அப்படம் தொடர்பில் நான் குறிப்பிட்ட சில குறைபாடுகள் தொடர்பான விளக்கத்தை இயக்குநர் அளித்திருந்தார்.

விளக்கத்துக்கு நன்றி ஜெய்லானி.
உங்களின் திரைத்துறைப் பயணம் மேலும் சிறக்க ஓர் இரசிகனாக எனது ஆசிகள்.

இனி இயக்குநர் ஜெய்லானியின் பதில்.


Jailani(Director) said ... (19 May, 2008 03:09) :

வசந்தன், கேள்வி சரிதான்:-)
நான் இயக்குனர் தான். எனது இ-மெயில் : mjailani அட் gmail டாட் com. ஆர்குட்டில் இதெ இ-மெயிலை தேடினால் எனது பக்கம் கிடைக்கும், புகைப்படத்துடன். ஆனால் அதிலும் தில்லுமுல்லு செய்ய இயலும் என்பது வேறு விசயம்.

மீண்டும், என் படத்தை பற்றிய உங்களின் மனமார்ந்த பாரட்டுகளுக்கு நன்றி. மிகச்சில உறுத்தல்களையும் சுட்டிக்காட்ட்டியுள்ளீர்கள்.

//"நாயகனிடம் அடிவாங்கியிருக்கும் காவல்துறையினரைப் பார்த்துப் பரவசப்படும் நபர்கள், 'என்ன இன்னும் போட்டுத்தள்ளலையா?' என்று நிமிடத்துக்கொருதரம் கேட்டு அந்தரித்துக்கொண்டிருக்கும் நபர் போன்ற பாத்திரங்கள் அதீதமானவையாகப் படுகின்றன."//

இந்த படம் முழுக்க முழுக்க காவல்துறையினரால் அன்றாடம் பாதிக்கப்படும் சாமான்ய மக்களின் பார்வையில் எடுக்கப்பட்டது. அதை இன்னும் அழுத்த்தமாக்கும் நோக்கத்த்தில் தான் 'போட்டுத்தள்ளலயா' நபரின் கோபமான வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் உங்களைபோல இன்னும் சிலரும் அது எரிச்சலூட்டுவதாய் உணர்ந்து என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

//"ஏ.கே இரக துப்பாக்கியை ஒற்றைக் கையால் சுடுவது. 'றம்போ' இரகப் படங்களைப் பார்த்துக் கெட்டுப்போனாரா இயக்குநர்?"//

இது தெரிந்தே செய்த பிழை.. தவிர்க்கமுடியாத நிலை. காரனம் வேடிக்கையானது. இந்த காட்சி படப்பிடிப்பின் போது, இதற்கு முந்தைய மற்றும் அடுத்த காட்சிகள் ஏற்கனவே படமாக்கபட்டுவிட்டன.

இக்காட்சியில் நான் இரன்டு கைத்துப்பாக்கிகளுடன் வெளியெ வருவேன், கமிஷனரையும் உதவி கமிஷனரையும் மிரட்டியபடி.. இந்த நிலையில் மூன்றாவதாய் ஏ கே ரக துப்பாக்கியை பறித்து நான் சுட வேன்டிய நிலை. கமிஷனரையும் விட்டுவிடக்கூடாது. அப்போதே ஒரு விதமான காமெடியாய் தோன்றியது எனக்கு. மற்ற காட்சிகளை திரும்ப எடுத்து சரி செய்ய பொருளாதார நிலை இல்லை.ஒரு வழியாய் சமாளித்து ஒரு கையில் கைதுப்பாக்கியுடன் கமிஷனரை மிரட்டியபடி இன்னொரு கையால் ஏ கே ரக துப்பாக்கியால் சுடுவதாக எடுத்தோம்.:-)

//"சித்திரவதை செய்து விசாரணை செய்யக்கூடாது என்ற கருத்தை விவாதப்பொருளாக வைத்து நகர்த்தப்பட்ட கதையில் நாயகனின் விசாரணை முறையும் அதேபாணியில் - அதாவது காவல்துறையினரை அடித்துத் துன்புறுத்தி விசாரிக்கும் முறையிலேயே இருக்கிறது.
அது முரணாக இல்லையா?
படத்தில் நேரடியாக அதற்குப் பதிலில்லை. பத்திரிகையாளரை வைத்து இப்படியொரு கேள்வியை எழுப்பி அதற்குரிய விளக்கத்தை இயக்குநர் கொடுத்திருக்கலாம்.(அல்லது இயக்குநரிடமே அற்குரிய பதிலில்லையோ என்னவோ?)
"//


:-) என்னிடம் நீங்கள் சொன்ன அதே பதிலிருந்தது. ஆனால் அதை சொல்லவேண்டுமென அப்போது தோன்றவில்லை.

//"ஒரேயொரு பாடல் படத்தின் இறுதிப் பாகத்தில் வருகிறது. அதுகூட கதைக்குத் தேவையான சந்தர்ப்பத்தில் வருவதாகவே கருதவேண்டும். கணவனுக்கும் மனைவிக்குமிடையிலான நெருக்கத்தை, அன்பை, காதலைச் சொல்ல வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் அப்பாடல் வருகிறது. அதைக்கூட பாடலில்லாமல் வேறு முறைகளில் காட்டியிருக்கலாமென்பது எனது கருத்து."//

படம் துவக்கிய நேரத்தில் பாடல் வைப்பதாய் எண்ணமே இல்லை. ஆனால் இருவரின் நெருக்கத்தை ஒரு சிறு கவிதையாய் சொல்லவேண்டுமெனெ நினைத்திருந்தேன். அதே காட்சிகளை ஒரு பாடலின் பின்னனியில் காட்டினால் படத்தின் விளம்பரத்திற்க்கும் உதவும் என்ற கருத்து வந்த போது அது தவறாகவோ, திணிப்பதாகவோ எனக்கு தெரியவில்லை.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, February 01, 2008

தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!

படியெடுக்கப்பட்ட கட்டுரையை வாசிப்பதற்கு முன்னர் எனது குறிப்புக்கள் சில:

தைத்திருநாளை தமிழர் புத்தாண்டுத் தொடக்கமாகக் கொணடாடுவது தொடர்பாக இரு வருடங்களின் முன்பே வலைப்பதிவில் கதைத்துள்ளேன். அப்போது கல்வெட்டு(எ) பலூன்மாமா பொங்கலைத் தமிழர் திருநாளாகக் கொண்டாடுவது தொடர்பாக பெரியளவில் முயன்றிருந்தார். தைத்திருநாள் சயம நிகழ்வன்று என்பதைச் சொல்லி அவர் விவாதத்தைத் தொடக்கிவைத்தார். அப்போதே எனது இக்கருத்தையும் சொல்லியிருந்தேன்.

எனது கருத்தென்பது விடுதலைப்புலிகளால் உருவானது என்பதைச் சொல்லியாக வேண்டும். இன்றல்ல; பல ஆண்டுகளின் முன்பே விடுதலைப்புலிகளின் முக்கியத்தர்களால் சித்திரைப் புதுவருடத்துக்கெதிரான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே தமிழரின் ஆண்டுத் தொடக்கமாக இருக்க வேண்டுமென்ற பார்வையும் வெளியிடப்பட்டு வந்துள்ளன.தமிழீழ நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி, தமிழீழக் கல்விக் கழகப்பொறுப்பாளர் இளங்குமரன் (பேபி சுப்பிரமணியம்), தற்போது வரலாற்றுத்துறைப் பொறுப்பாளராக இருக்கும் யோகரத்தினம் யோகி ஆகியோர் இவர்களுள் முதன்மையானவர்கள்.

ஓரளவுக்குப் பெரியாரின் தாக்கம் இவர்கள்மேல் இருந்தபோதிலும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் தீவிர தொண்டர்கள் எனலாம் (சொற்பிறப்புப் பற்றிய விவாதங்களில் சிலவிடங்களில் பாவாணரிடத்தில் மாறுபாடுடையவர்கள் என்றபோதும்கூட). அவ்வழியே மறைமலை அடிகள், கி.ஆ.பெ. விசுவநாதன் போன்றோரின் கருத்துக்களால் உள்வாங்கப்பட்டவர்கள். அதனாலேயே சித்திரை வருடப்பிறப்பு மீதான கடுமையான எதிர்ப்பும், தைத்திருநாளே ஆண்டுத்தொடக்கமென்ற வாதமும் இவர்களிடமிருந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
(கி.ஆ.பெ. விசுவநாதன் பற்றிய சராசரி ஈழத்தவர்களின் அறிவுத்தொடக்கம், தலைவர் பிரபாகரன் பற்றி அவர் வெளியிட்ட கருத்துடன்தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். அதன்பின் அவர் பற்றிய தேடல் அதிகரித்ததோடு அவரின் கருத்துக்கள் பெருமளவில் மக்களிடம் சென்றன என்பதும் குறிப்பிடப்பட வேண்டிவை.)

ஆனால் தமது அரசாங்கத்தில் இதையொரு ஆணையாகக் கொண்டுவராமல் பரப்புரை மூலம் செய்ய இவர்கள் முயற்சித்தார்கள்; முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் ஐயமில்லை. நிலைமை சீராக வரும்போது ஒருநாள் இவர்களிடமிருந்து அறிப்பு வரும். தமிழீழத்தில் மொழி தொடர்பில் நடைபெற்ற நிறையப் புரட்சிகளுக்கு தமிழேந்தியும், இளங்குமரனும் அத்திவாரங்கள். போராளிகளுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், கடைகள் - நிறுவனங்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள், பொருட்களுக்கான தனித்தமிழ்ப் பெயர்கள் எப்போதோ நடைமுறைக்கு வந்துவிட்ட, வெற்றிபெற்ற பல நடவடிக்கைகளுக்கு இவர்களே கால்கள். இராணுவத்துறையிற்கூட தமிழ்க்கட்டளைகளைப் பயன்படுத்த முடியுமா என்ற கேள்விகளைப் புறந்தள்ளி அதைச் செய்துகாட்டியவர்கள். தமிழ் மீட்பை ஒரு வெறியாகவே செய்துவருபவர்கள்.

இந்திய இராணுவம் ஈழத்தைவிட்டு வெளியேற்றப்பட்ட பின்னர், "யாழ்ப்பாணத்தில்" தமிழ்த் தேசியம் மீளெழுச்சியுற்ற ஒரு பொற்காலம் எனலாம். யாழ்ப்பாணத்தில் சடுதியான மாற்றங்கள் நிகழ்ந்தன. "முத்தமிழ் விழா" என்ற பெயரில் சில இடங்களில் நடத்தப்பட்ட மூன்றுநாள் பெருவிழாவை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். மிகப்பெருமெடுப்பில் புலிகளால் நடத்தப்பட்ட இவ்விழா உண்மையில் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இவ்விழா குறித்து எதிர்த்தரப்புக்கள் அதிகம் கவலைப்பட்டது உண்மை. 'புலிகள் தமது படைப்பலத்தால் தோற்றாலும்கூட இவ்விழாக்கள் மூலம் மீளவும் தம்மைக் கட்டியெழுப்பி விடுவார்கள்' என்று கொழும்புப் பத்திரிகைகள் எழுதின.
தென்மராட்சியில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தலைவர் பிரபாகரன் பகிரங்கமாகத் தொன்றி பொதுமக்களுக்கு மேடையில் வைத்துப் பரிசளித்தார்.

அதேகாலத்தில் அறிவிப்புப் பலகைகளின் பெயர்களைத் தமிழில் மாற்றுவது, நிறுவனப்பெயர்களை தமிழில் மாற்றுவது உட்பட பல வேலைத்திட்டங்கள் புலிகளால் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன. தைத்திருநாளை எழுச்சியாகக் கடைப்பிடிப்பதும் அப்போதே தொடங்கியது. அதுவரை தைப்பொங்கல் இந்துக்களுக்குரிய நாள் என்றிருந்த கருத்துருவாக்கம் உடைக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டுக்குரிய தைத்திருநாளை, யாழ்ப்பாணத்துக் கத்தோலிக்கத் தலைமை கொண்டாடி, அது தமிழர் திருநாளே என அறிவித்தது. அவ்வாண்டுக்குரிய தைப்பொங்கல் கத்தோலிக்கத் தேவாலங்களில் கொண்டாடப்பட்டது. தைத்திருநாள் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோவிலிலேயே பொங்கி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன்பிறகு கத்தோலிக்கர் வீடுகளிலும் பொங்கும் நிகழ்வை அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கினர்.

திபாவளிக்கெதிரான கருத்துக்கள் அன்றுதொடக்கம் விடுதலைப்புலிகளாற் சொல்லப்பட்ட வருகின்றன என்றபோதும் அவை நிறுத்தப்படவில்லை. ஆனால் இந்தியாவோடு ஒப்பிடும்போது ஈழத்தில் திபாவளியென்பது (புலிகள் கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு முன்பேகூட) முக்கியமான பண்டிகையாக இருந்ததில்லையென்றே தெரிகிறது. இன்றும் தீபாவளி தமிழருக்கான பண்டிகையன்று என்ற கருத்து வலுவாகச் சொல்லப்பட்டு வருகிறது; பெருமளவானோர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றும் கூறலாம். வன்னியில் இது சாத்தியப்படக் காரணமுள்ளது. தீபாவளியையும் சித்திரை வருடப்பிறப்பையும் கொண்டாட்டமாக்குவதில் முக்கிய காரணியாக இருக்கும் குறிப்பிட்ட நாட்களுக்குரிய சிறப்புத் திரைப்பட வெளியீடுகள் வன்னியில் இல்லையென்பதே அது.

~~~~~~~~~~~~~~~~~~~
தைத்திருநாளையே தமிழரின் ஆண்டுத்தொடக்கமாகக் கருத வேண்டும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் பல்வேறு விவாதங்கள் நிகழ்ந்தன. ஆதரவு / எதிர்ப்புப் பதிவுகளைப் படித்து இது தொடர்பான கருத்துக்களைப் பெற்றுக்கொள்வது சிறப்பு.

** இது தொடர்பான மேலதிக விவாதங்கள் நிகழ்த்தப்பட்டால் நன்று. நிறையத் தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.

என் பங்குக்கு, ஆதரவுக் கட்டுரையொன்றை இடுகிறேன். தமிழ்நாதம் இணையத்தளத்தில் வெளிவந்த கட்டுரையிது.


தைப்பொங்கல் தினமே தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!


ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திரேலியா


தமிழரின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் நாள் குறித்துப் பல கருத்துக்களை, வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், ‘பண்டைய காலக் கணக்கு முறை’ வழியாகவும் முன் வைத்துத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி, உலகளாவிய வகையில் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்களும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக் காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்!


“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?


பொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.


‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தை மாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்குத் தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே, பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.


அதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக்கணக்கைக் கணித்து, சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.


இதனைச் சற்று ஆழமாகக் கவனிப்போம்.


பண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான்! தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை, ஆகியவை மாறி மாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக் காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான் - என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.


தமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணியர்கள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது. தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத் தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (A Social history of the Tamils-Part 1)

தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.


அதாவது பண்டைக் காலத்தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.


தைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.


பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.


1. இளவேனில் - ( தை-மாசி மாதங்களுக்குரியது)


2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)


3. கார் - (வைகாசி � ஆனி மாதங்களுக்குரியது)


4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)


5. முன்பனி � (புரட்டாசி � ஐப்பசி மாதங்களுக்குரியது)


6. பின்பனி � (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)


(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை, ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை, ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான் என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்!)


காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை நேயர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.



தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பலகோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை, தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.


தமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14ம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.


தை 15ம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15ம் நாளில் FONKARA - FONKARA� என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.


தை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களைத் தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.


பருப்புத் தவிடு பொங்க - பொங்க

அரிசித் தவிடு பொங்க - பொங்க

-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘uONGA-uONGA’ என்றே பாடுகிறார்கள்.




இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.


இவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.


“சித்திரை வருடப்பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது….. …….. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம் ) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .


என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.


தமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை தமிழர்களுடைய பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும்;, பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் தர்க்கித்ததோடு, ஆரியர்கள் எம்மீது திணித்த சித்திரை வருடப் பிறப்பு குறித்தும் நாம் சில கருத்துக்களைத் தெரிவித்ததற்குக் காரணங்கள் உண்டு!


“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டுத் தினமாகும்!!”


பொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல! உண்மையில் இது, சமய சார்பற்ற, இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும்! மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஓர் அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப்பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப்பட்டிருக்கும்.


ஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல! அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும்! இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும்! இத் திருநாளைப் புறம் தள்ளுவதும், இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தைக் கேவலப்படுத்தும் செயல்களாகும்!


தைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரலாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.


1935ம் ஆண்டு திருச்சியில் அகிலத் தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தரப் பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில்
கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா? இல்லை சமயமற்ற விழாவா? என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.


“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா! எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான்? எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது? எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது? ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டங்கொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” - என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.


“இல்லை - நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.


ஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல! தமிழரின் பண்பாட்டு விழா! காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்!


பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி -போகியது). இத் தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற்குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)


தமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகுபடுத்தல், பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.


தைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு, தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் மாட்டுப் பொங்கலின் மறுநாள், உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். , தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது அருகி விட்டது. யாழ்ப்பாணத்தில், வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன்-இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள், அரங்கேற்ற நிகழ்வுகள், புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.


தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில்; போற்றப்படுவதை நாம் காணலாம்.



அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில், எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும்.


தனித்துவமான மொழியைப் பேசுகின்ற, தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள, தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள, தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள், ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.



அன்புக்குரிய எமது வாசகர்களே! தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்துச் சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!



இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு, தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு - மலேசியச் சிறப்பு மலர், தமிழர் - யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.


இவ் ஆய்வு மீள்பிரசுரமாகும்.(2008)

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 22, 2008

ஒன்பது ரூபாய் நோட்டு அர்ச்சனா எப்படி அழுதிருக்க வேண்டும்?

தங்கர் பச்சானின் நெறியாள்கையில் வெளிவந்த 'ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பல வெளிவந்துவிட்டன. தொலைக்காட்சிகளில், வெகுசன ஊடகங்களில், வலைப்பதிவுகளில் என பல்வேறு விமர்சனங்கள் வந்துவிட்டன.
அனைத்திலும் குறிப்பிடப்பட்ட முக்கிய குறைபாடு (ஒரேயொரு குறைபாடு என்றுகூடச் சொல்லலாம்) அர்ச்சனா சத்தம் போட்டுக் கத்துவதைப் பற்றியது தான். வலைப்பதிவுகளில் காசி ஆறுமுகம் தொடக்கம் நா.கண்ணன் சுரேஷ் கண்ணன் வரை பெரிய தலைகளும் அதையே குறிப்பிட்டிருந்தார்கள்.
திகைப்பை ஏற்படுத்தும் விதமாக நா.கண்ணன் மட்டும் (நான் வாசித்த, கேட்ட அளவில்) அர்ச்சனாவின் அழுகையையும் நடிப்பையும் சரியென்று பாராட்டியிருக்கிறார்.
நா. கண்ணன் ஐயாவோடு நானும் இணைந்து கொள்கிறேன்.

இப்படம் தொடர்பாக தங்கர் பச்சானிடம் வைக்கப்பட்ட முதன்மை முறைப்பாடு இந்த அழுகைதான். இக்குற்றச்சாட்டைக் கேட்டவுடனேயே (சமயங்களில் கேள்வி தொடங்கும்போதே) தங்கருக்குக் கோபம் உச்சத்துக்கு ஏறுகிறது. மதன் திரைப்பார்வையில் தங்கர் கர்ஜித்த விதம் எனக்கு மிகப் பிடித்திருந்தது, கூடவே அவருடைய விளக்கமும்.

நகர்ப்புற மனிதர்களின் பார்வையில் கிராமத்துத் தாயின் கதறல் அப்படித்தான் தெரியும் என்பது தங்கரின் பதில்களிலொன்று. தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் நகர்ப்புறப் பெண்ணை எப்படி கிராமத்துப் பெண்ணுக்குப் பொருத்த முடியும்? சுகாசினியும் மதனும் இன்னும் பலரும் இந்த நகர்ப்புறப் பார்வையுடன்தான் பார்க்கிறார்களென்பது விளங்குகிறது.

தங்கர் சொல்லும் இன்னொரு முக்கிய விடயம், தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் 'அம்மா' பாத்திரம். அந்தக் கட்டமைப்புக்குள் இல்லாமல் யதார்த்தமான தாயைக் காட்டியதும் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்பது அவரது கருத்து.
உண்மைதான்.

தமிழ்ச்சினிமா கட்டமைத்து வைத்திருக்கும் தாய்ப் பாத்திரம் தமிழ்ச்சூழலின் பெரும்பான்மையைப் பிரதிபலிக்காத பாத்திரம்தான். விடிய வெள்ளன முழுகி, தலைதுவட்டி, சாமிபடத்துக்கு புகைகாட்டி மணியடித்தபடி வெள்ளை வெளேரென 'மங்களகரமாக' வரும் தாய்மார்கள் நிச்சயமாக எங்களைப் போன்றவர்கள் வாழ்ந்த சூழலில் தாய்மாரை நினைவுபடுத்துவதில்லை. மிகப் பெரும்பான்மையானவர்களின் தாய்மாரை அப்பாத்திரங்கள் பிரதிபலிக்கா.
எத்தனை படத்தில்தான் இவர்களைப் பார்த்துச் சலிப்பது?
கிட்டத்தட்ட அரைவாசிப் படங்களிலாவது தொடக்கக் காட்சியாக அமையும் கோயிற்காட்சி, தேங்காயுடைக்கும் காட்சி, அர்ச்சனை செய்யும் காட்சி, ஆரத்தியெடுக்கும் காட்சிகள் ஏற்படுத்தும் எரிச்சலை இந்த தமிழ்ச்சினிமா அம்மா மாரும் ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதைவிட, அவர்கள் அடக்கமே உருவாக இருப்பார்களாம். சத்தம் போட்டுப் பேசமாட்டார்களாம். சத்தம்போட்டு அழக்கூட மாட்டார்களாம். கணவனுக்கு முன்னால் வாய்பொத்தி இருப்பார்களாம். இவற்றைவிட, பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும் என்று சூப்பர் ஸ்டார் முதல் ஆளாளுக்கு உபதேசம் வேறு செய்துகொண்டேயிருப்பார்கள். இப்படியெல்லாம் கலந்துகட்டி தாய் என்ற (பொதுவாக பெண்) விம்பத்தை தமிழ்ச்சினிமாவில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது சில திரைப்படங்களில் வரும் தாய்மார்கள் ஒரு நெருக்கத்தை உணர வைப்பார்கள். அவ்வகையில் பாலு மகேந்திராவின் 'அதுவொரு கனாக்காலத்தில்' தனுசின் தாயாக வருபவரைச் சொல்லாம். பருத்திவீரனில் நாயகியின் தாயாக வருபவரின் பாத்திரம் என்னைக் கவர்ந்தது. அதுபோல் 'பொல்லாதவனில்' டானியல் பாலாஜியின் அண்ணியாக வரும் பாத்திரமும் கவர்ந்தது.

முன்பு சொன்னபடி அடக்கமே உருவாகச் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து முற்றிலும் விலகி தங்கர் பச்சானின் வேலாயி இருப்பது பலருக்கு அதிர்ச்சி.

ஒரு பெண் இப்படியெல்லாம் ஓலமிடுவது யதார்த்தத்துக்குப் புறம்பானதென்று இணைய இதழொன்றில் பார்த்தேன். என்ன முட்டாள்தனமான வாதம்? பெண்களால் மட்டும்தான் அப்படிக் கதற முடியும். அவர்கள் மட்டும்தான் அப்படிப் கதறியழுகிறார்கள்.

எங்காவது ஆண்கள் அப்படிக் கதறிப் பார்த்திருக்கிறீர்களா?
இழவு வீடுகளில் ஒப்பாரி வைப்பது யார்? நூறு வீதமும் பெண்கள்தாம். சில புறநடைகளை விட்டால் ஆண்களுக்கு குரலெடுத்து அழத்தெரியாது, அல்லது அப்படி அழ விரும்புவதில்லை. தனது ஆண்மைக்கு இழுக்கு என்ற மனோபாவமும் ஒரு காரணம். ஆனால் பெண்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. குறிப்பாகக் கிராமத்துப் பெண்கள் அவற்றுக்கு வெட்கப்படுவதில்லை. அழுகை வருகிறதோ இல்லையோ செத்த வீடொன்றில் குரலெடுத்து அழுதே ஆக வேண்டிய தேவைகூட அவர்களுக்கு இருக்கிறது.

கிராமங்களில் பெண்களிடையே நடக்கும் வாய்ச்சண்டையைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், அவர்களின் சத்தத்தின் வலிமை. ஆண்களிடையே நடக்கும் சண்டை சிலவேளை அடுத்த வீட்டுக்கே கேட்காது. அதிக நேரம் நீடிக்கவும் மாட்டாது. சில நொடிகளிலேயே கைகலப்பு வரை வந்து முடிந்துவிடும். அனால் இரண்டு பெண்களிடையில் சண்டை மூண்டால் இடைவேளைகள் விட்டுக்கூட நாள் முழுவதும் சண்டை பிடிப்பார்கள். அக்கம் பக்கத்திலிருக்கும் நாலைந்து வீடுகளுக்கு அன்று பெரும் சமாதான். (அந்நேரத்தில் அவ்வீடுகளில் இருக்கும் அண்களின் நிலை பரிதாபமாக இருக்கும். குடிக்க தேத்தண்ணி கூடக் கிடைக்காது. நான் பார்த்தளவில் அவர்கள் செய்யும் வேலை, சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்காவது மதவடியில் போய் கடுதாசி விளையாடிவிட்டு பொழுதுபட வீட்டுக்கு வருவதுதான்)

என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெருத்த சத்தத்தில் கத்துவது, கதறுவது, சண்டை பிடிப்பதெல்லாம் பெண்களுக்கு மிக யதார்த்தமான, இயல்பான விடயங்கள். ஆண்களுக்குத்தான் அவை மிகையான விடயங்கள்.

இந்நிலையில் ஒன்பது ரூபாய் நோட்டில் அர்ச்சனா கத்துவது, புலம்புவது, அழுவது எல்லாமே படு யதார்த்தமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அர்ச்சனா போன்ற ஏராளம் ஏராளம் தாய்களைப் பார்த்திருக்கிறேன், அவர்களோடு வாழ்ந்திருக்கிறேன். எடுத்ததுக்கெல்லாம் 'மாதாவே, யேசுவே, தொம்மையப்பரே, இதுகளைப் பாத்துக்கொண்டு சும்மா இருக்கிறீரோ?' என்று ஓலமிடத் தொடங்கிவிடும் பல தாய்மார் எனது சுற்றமாக இருந்திருக்கிறார்கள்.
அதுவும், என்ன விசயத்துக்கு யார் யாரிடம் எப்படிப் புலம்ப வேண்டுமென்றுகூட ஓர் ஒழுங்குமுறை வைத்திருப்பார்கள். ஆருக்காவது சாபம் விட வேணுமெண்டால் மிக்கேல் சம்மனசானவரைக் கூப்பிடுறது தொடக்கம் மிக நுணுக்கமாக அவர்களது புலம்பல் இருக்கும்.

பிள்ளைகள் எதிர்த்துக் கதைத்தவுடன் சாமி படத்தின்முன் போயிருந்து அர்ச்சனா புலம்புவாரே, அப்படி அவர் புலம்பாவிட்டால்தான் எனக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~~~
அர்ச்சனா கதறும் இடங்களின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் என்பதும் ஒரு விமர்சனம். அது பார்ப்பவர்களின் பிரச்சினையே ஒழிய அழும் தாய்க்கு எண்ணிக்கை பிரச்சினையில்லை என்பது தங்கரின் வாதம். நேற்று அதிகம் அழுதுவிட்டேன், இன்று குறைத்து அழவேண்டும் என்று திட்டம்போட்டு எந்தத் தாயும் அழ மாட்டாள் என்று தொடர்ந்து சொல்கிறார் தங்கர்.

முடிவாக, ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் அர்ச்சனாவின் அழுகை எவ்விதத்திலும் எனக்கு உறுத்தவில்லை. மிகமிகக் கச்சிதமாக அவரின் பாத்திரம் படத்தோடு பொருந்துகிறது என்பதே என் கணிப்பு.

சுரேஸ் கண்ணன் சொல்லும் "டெக்னிகல்" விசயமும் எனக்கு விளங்கவில்லை. கதறியழுவதை, சத்தம் வெளியில் வராமல் காட்சியாக மட்டும் காட்டுவதைப் பற்றி ஏதேனும் சொல்கிறாரோ தெரியவில்லை.

மற்றும்படி அர்ச்சனாவின் அழுகையை நிறுத்துவதென்பது பாத்திரச் சிதைப்பு என்பதோடு யதார்த்தமாகவும் இராது என்பதே என் கருத்து. அந்தந்தக் காட்சிகளில், அர்ச்சனா வாயைத் திறக்காமல் கண்ணீர் மட்டும் விடுவதுபோன்று படத்தை எடுத்திருந்தால், என் பார்வையில் நிச்சயமாக அதுவொரு பாத்திரச் சிதைவை ஏற்படுத்தியிருக்கும்.

ஒன்பது ரூபாய் நோட்டில் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவையாகவும் உறுத்தலாகவும் எனக்குப்பட்டவை பாடல்கள் தாம். 'மார்கழியில் குளித்துப்பார்' என்ற, கதை நகர்வுக்கு உறுதுணையான பாடலைத் தவிர்த்து மற்றக் காதல்பாடலெல்லாம் படத்துக்குத் தேவையற்றவை.

விஜய் தொலைக்காட்சியின் அனுகாசனின் 'கோப்பி வித் அனு' நிகழ்வில், தங்கர் பச்சான் கலந்து கொண்டார். 'எதைச் செய்தால் தமிழ்ச்சினிமா முன்னேறும்?' என்ற அனுவின் கேள்விக்கு தங்கர் சடுதியாகப் பதிலளிக்கிறார், 'பாடல்களை நிறுத்திவிட்டாலே போதும்' என்று.

மிக அண்மையில் புதிய இயக்குநர் ஒருவரும் (மிஷ்கின்?) படங்களில் பாடல்களைச் சேர்ப்பது தனக்குப்பிடிப்பதில்லையென்றும், வியாபார ரீதியில் வேறுபலரைத் திருப்திப்படுத்த அவற்றைச் செய்ய வேண்டியிருக்கிறதென்றும் படவிழாவில் பேசினார்.
இயக்குநர் சேரனும் பாடல்கள் இல்லாமல் படமெடுக்க வேண்டும் என்ற விவாதத்தை முன்பு முன்வைத்திருந்தார். கமலகாசன் இருபது வருடங்களின் முன்பிருந்தே இதைத் தீவிரமாகச் பேசியிருக்கிறார். தன்னளவில் முயற்சித்தும் இருக்கிறார்.

ஆனாலும் எமது சாபக்கேடு, எல்லாம் பேச்சளவோடு நின்றுவிடுகிறது. பாடல்கள் இல்லாமல் தமிழ்ப்படங்கள் (அட வருடத்துக்கு ஒன்றிரண்டாவது?) வரும் காலமொன்றையும், அதனூடு தமிழ்ச்சினிமா ஓரிருபடிகள் முன்னேறுமென்பதையும் கனவு கண்டுகொண்டேயிருக்கிறேன்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, December 19, 2007

விருது வழங்குவது சரியா?

தமிழ் வலைப்பதிவுச்சூழலில் அவ்வப்போது ஏதாவது குளறுபடி நடந்துகொண்டேயிருக்கும். இப்போது விருது என்றொரு பிரச்சினை வந்துள்ளது. என்ன நடக்கிறது என்பது தெரியாமலே பலரைப்போல நானும் விருது பற்றியோர் இடுகை எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிட்டேன்.
ஒன்றைப்பற்றி எழுதியே ஆகவேண்டிய நிலைக்கு பதிவர்கள் ஆளாவது அவ்வப்போது நடப்பதுதான். சந்திரமுகி, சிவாஜி பற்றி கட்டாயம் ஓரிடுகையாவது எழுதியாக வேண்டிய நிலையிருந்தது. அதனாலேயே படம் பார்க்காமலேயே விமர்சனம் எழுத வேண்டிய நிலை எனக்கும் வந்தது. அதுபோல் விருது பற்றியும் ஏதாவது உளறி வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் வலைப்பதிவராக இருக்க முடியாது. எனவே இவ்விடுகை எழுதப்படுகிறது.
அதைவிட, வருடம் முடிகிறது; நீண்டகாலமாக ஏதும் எழுதவில்லை; இவ்விடுகை மூலம் நானும் இருக்கிறன் என்று காட்டிக்கொள்வதும் ஒரு காரணம்.


தற்போது வலைப்பதிவுகளோடு அதிக நேரம் செலவிடுவதில்லையென்பதால் இந்த விருதுக்கூத்து எப்போது தொடங்கியது, அதில் என்ன சிக்கல் என்பவை தொடர்பில் முழுமையான அறிவில்லை. மோகன்தாசின் எழுத்தைப்பார்த்தால் இது தமிழ்மண நிர்வாகத்துக்குப் போட்டியாக யாரோ செய்யும் நரிவேலை என்பதாகப் புலப்படுகிறது. விருது கொடுத்து அப்படி என்னதான் கிழித்துவிட முடியுமென்றும் தெரியவில்லை. அவர் சொல்வது உண்மையாயின் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வலைப்பதிவுகளில் வரும் பெரும்பாலான எதிர்ப்புப் பதிவுகள் மேலெழுந்தவாரியான எதிர்ப்பையே வெளிப்படுத்துகின்றன.

தற்போது பார்த்தளவில் அனேகம்பேர் இந்த விருது வழங்கலை எதிர்த்து எழுதிக்கொண்டிருப்பது தெரிகிறது.
அவற்றில் பெரும்பாலானவை கும்பலில் கோவிந்தாவாக வெளிப்படும் கருத்துக்களென்பதே எனது எண்ணம். விருதை ஆதரித்து ஒரு போக்கு இருந்திருந்தால் இவற்றில் பெரும்பாலானவர்கள் அதையாதரித்து இடுகை எழுதியிருப்பார்கள். யாரோ காரசாரமாக எதர்த்தெழுதத் தொடங்கியதன் பின்னணியில் அதைத்தொடர்ந்து தாங்களும் ஏதாவது எழுதியாகவேண்டுமென எழுதுபவர்கள் பலர். (இது தமிழ்வலைப்பதிவுலகில் காலகாலமாக நிலவிவரும் ஒரு நடைமுறைதான். வேண்டுமானால் கடந்த சிலநாட்களில் விருது வழங்குவதை எதிர்த்து வெளிவந்த இடுகைகளை வாசித்துப் பாருங்கள். அடிப்படைத் தர்க்கமேதுமற்ற இடுகைகள் பல.)

சிலர் மட்டும் (சங்கமம் குழுவை மட்டுமன்றி) விருது வழங்கும் நடைமுறையை பொதுவாகவே கேள்விக்குட்படுத்தியிருக்கிறார்கள். பலர் இதைமட்டும் குறிவைத்துத் தாக்குகிறார்கள்.
வலைப்பதிவுகளுக்கு விருது வழங்குவது இதுதான் முதுன்முறையன்று. இதற்குமுன் வலைப்பதிவு விருதுகளை எதிர்த்து காரசாரமாக யாரும் பிரச்சினை பண்ணியதாக நினைவில்லை. அப்படி வந்தவைகூட, போட்டியில் அதிக தமிழர்கள் கலந்துகொள்ளவில்லையென்ற குறையைத்தான் (முக்கியமானவர் தருமி) சொன்னதாக ஞாபகம். மற்றும்படி அனைவரும் விருது வழங்குவதை ஏற்றுக்கொண்டனர். விருதில் வெற்றிபெற்றவர்களை வாழ்த்தி ஒரு கிழமை வாழ்த்துப் பதிவுகளெழுதிக் கொண்டாடினர்.

சரி, அவை குறிப்பிட்ட நடுவர்களன்றி, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்ற வாதத்தை வைக்கலாம். ஆனால் வாக்குப்போட்டவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறு என்றுதான் ஞாபகம். (போட்டி நடைபெறப்போவது தங்களுக்குத் தெரியாது, சரியான முறையில் விளம்பரப்படுத்தப்படவில்லையென்ற குறைகள் பலரால் வைக்கப்பட்டன). அங்கே இருநூறு பேரால் தெரிவு செய்யப்பட்டது போன்று, இங்கே பதினேழு பேரால் தெரிவுசெய்யப்படப் போகிறார்கள்.

விருது வழங்குவது பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற வாதம் ஏன் வந்ததென்று தெரியவில்லை. இதே கோணத்தில் ஆழப்போனால் தமிழ்மணத்திரட்டியில் நட்சத்திரக் குத்துக்கள் வந்தது, பின்னூட்டங்கள் திரட்டப்பட்டது என 'பதிவர்களிடையே சண்டையை மூட்டும்' சமாச்சாரங்கள் பலவற்றைக் கேள்விக்குட்படுத்த வேண்டும். அப்படி பல சண்டைகள் வலைப்பதிவுலகில் நடந்துள்ளன. ஒரு கட்டத்தில் பின்னூட்டத் திரட்டிச் சேவையை நிறுத்திவிடுவதென்று தமிழ்மணம் முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பும் வெளியாகியது. அண்மையிற்கூட நாற்பதுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெறும் இடுகைகள் திரட்டப்படா என திரட்டி அறிவித்து பெரிய கலவரமே நடந்து முடிந்தது. அதற்கு முன்பு பின்னூட்ட மட்டுறுத்தலை திரட்டி கட்டாயப்படுத்தியபோது, சில பதிவர்களை திரட்டியை விட்டு நீக்கியபோது என வலைப்பதிவுலகம் கொந்தளித்த பல சம்பவங்களுள்ளன.
ஓரிடுகைக்கு யார் அதிகபட்சப் பின்னூட்டங்கள் வாங்குவதென்ற போட்டி சுவாரசியமான முறையில் நடந்தது. [டோண்டு தனது பின்னூட்டங்களை ஒரேயிடுகையில் திரட்டி 500 வரை போய் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு முன்பு இருநூறு என்ற இலக்கை முதன்முதல் எட்டியவர் இட்லிவடையென்பதும், அந்தப் பின்னூட்டவிழாவை வெற்றிகரமாகத் தொடக்கிவைத்தவன் நானென்பதும் ஒரு துணைத்தகவல்.;-)]
எல்லாம் கடந்துதான் தமிழ்வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். இவ்வளவு கடந்து வந்தவர்கள் கேவலம் ஒரு விருதுக்காக தங்களுக்குள் சண்டை போடுவார்களென்பதோ, அப்படிச் சண்டைபோடுவது எப்போதும் நடக்காதது என்பதோ அபத்தமென்றே படுகிறது. சண்டை போட்டால் போட்டுவிட்டுப் போகிறார்கள். அதற்காக விருது கொடுக்காமலிக்க முடியுமா? சண்டை போடுகிறார்கள், தனது பதிவு தொடர்ந்தும் திரட்டியில் தெரியவேண்டுமென்பதற்காக தமக்குத்தாமே பின்னூட்டமிடுகிறார்கள், பின்னூட்டங்களில் சாராம்சமில்லை என்ற காரணங்களால் பின்னூட்டத் திரட்டி நிறுத்தப்பட்டுவிட்டதா என்ன?

தமிழ் வலைப்பதிவுலகம் என்பது எல்லோரையும் சேர்த்தது. சில்லறை விசயத்துக்கு வருடக்கணக்கில் சண்டை பிடிப்பவர்களும் இருக்கிறார்கள். மிகப்பெரிய விசயத்தைக்கூட அன்றோடே முடித்துவிட்டுப் போய்விடும் பதிவர்களும் இருக்கிறார்கள். மொக்கை, கும்மியுட்பட ஒருவகைப்பதிவுகளும் மிகவும் காத்திரமான படைப்புக்களும் ஒரேநேரத்தில் தமிழ்மணத்தில் வருகின்றன. ஒருவரிடமிருந்தேகூட அவை வருகின்றன. இந்த விருதைப் பிரச்சினையாக்குபவர்கள் இருப்பார்கள் என்பதைப்போல அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்பவர்களும், ஏன் அதையொரு பொருட்டாகக்கூட கவனிக்காதவர்களும் இருக்கிறார்கள்.

எனவே விருது கொடுப்பவர்கள் கொடுக்கட்டும், பங்குபற்றுபவர்கள் பங்குபற்றட்டும், வெல்பவர்கள் வெல்லட்டும். இவற்றில் நொட்டை பிடித்துக்கொண்டிருப்பது தேவையற்றது.
நான் கலந்துகொள்ளவில்லையென்பதைப் போலவே நிறையப்பேர் கலந்துகொள்ளப்போவதில்லை. நானும்தான். இதுவரை எந்தப்போட்டியிலும் கலந்துகொண்டதில்லை. போட்டியென்ன? ஆறு போட, எட்டுப்போட, நாலுபோட என வந்த அழைப்புக்களைக்கூட ஏற்றுக்கொண்டதில்லை. (ஒரேயொரு தடவைமட்டும் - அதுவும் வேறோர் பிரச்சினையைத் திசைதிருப்ப எழுதினேன்). அந்த அழைப்புக்கள்கூட வலைப்பதிவர்களிடையே சண்டையை, பிரச்சினையை மூட்டும் வல்லமை வாய்ந்தவை. பதிவர்களின் வாசிப்பு, அவர்கள் வைத்திருக்கும் புத்தகங்கள் பற்றிய (புத்தக மீம் என்று நினைக்கிறேன். பிரகாஷரால் தொடக்கப்பட்டது) அழைப்பு பதிவர்களிடையே தாழ்வுமன்பபான்மை ஏற்படுத்துகிறது, அது தவிர்க்கப்பட வேண்டியது என சுந்தரமூர்த்தி இடுகையெழுதினார், பலர் அக்கருத்தை ஆமோதித்தனர். பலர் புழுகிக்கொள்ள வேண்டி நேர்ந்த அந்த அவல நிலையை இந்த விருது ஒருபோதும் ஏற்படுத்திவிடாது என நினைக்கிறேன்.

விருது, பதிவர்களிடையே சண்டையை மூட்டிவிடுமென்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்து ஒரு கேள்வி.
இரண்டு நடுவர்களை மட்டும்கொண்ட புகைப்படப் போட்டி எந்தவிதத்தில் சரியென்று நினைக்கிறீர்கள்?
பதினேழு நடுவர்களைக் கொண்ட (ஒப்பீட்டளவில் சரியான முடிவு வருவதற்கு அதிக சாத்தியமுள்ள) சங்கமம் விருது எப்படி தவறென்று கருதுகிறீர்கள்?
புகைப்படப் போட்டி முடிவால் பதிவர்களிடையே சண்டை மூண்டதா?

*** கவனிக்க: புகைப்படப் போட்டி தவறென்று நான் சொல்லவில்லை. விருதை எதிர்க்கும் சிலரின் குற்றச்சாட்டுக்குரிய விளக்கத்தைக் கோரியே இது சொல்லப்பட்டது. அவர்கள் சொல்லிய கருத்துக்கள் எவ்விதத்தில் புகைப்படப் போட்டிக்குப் பொருந்தாமற்போகுமென்ற கேள்வி எனக்குள் எழுகிறது. பொருந்தினால் அப்போட்டியை எதித்து ஏன் பிரச்சினைகள் எழவில்லையென்ற கேள்வியும் வருகிறது. உண்மையிலேயே விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.

*** சங்கமம் விருதின் பின்னாலிருக்கும் அரசியல், இராஜதந்திரம், மந்திரம், சூனியம், நயவஞ்சகம் என்றெல்லாம் கருத்துச் சொல்லிப் பின்னூட்டமிட வேண்டாம். அவற்றைப் புறந்தள்ளியே எனதிடுகையுள்ளது.

*** ஒரு விருது யாரால் கொடுக்கப்படுகிறதென்பதை வைத்தே அதற்குரிய மதிப்பைக் கொடுக்க நாங்களெல்லாம் பழகிவிட்டோம். சகட்டு மேனிக்கு முளைக்கும் டாக்டர்கள், கலைமாமணிகள் தொடக்கம் நிறையப் பேரைப் பார்க்கிறோம். திரைத்துறைக்கு தமிழ்நாட்டு அரசாங்கம் அளிக்கும் விருதுக்கும் தேசிய விருதுக்குமுள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாக அறிந்தே அணுகுகிறோம். அதுபோற்றான் எல்லா விருதுகளும்.

*** இது இவ்வருடத்தின் கடைசி இடுகையன்று.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, November 09, 2007

வை.கோ உலகத்தமிழர்களுக்குப் பதில் சொல்ல வேண்டுமா?

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'உதயன்' செய்தியேடு, வை.கோ இன்னமும் ஜெயலிதாவுடனான அரசியற்கூட்டணியில் தொடர்வது பற்றி உலகத்தமிழர்களுக்கு விளக்கம் தரவேண்டுமென ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது.

வை.கோ ஜெயலலிதாவுடன் அரசியற்கூட்டணி வைத்திருப்பது தவறாம்; அதன் காரணத்தால் உலகத் தமிழர்களுக்கு அவர் பதில் தரவேண்டுமாம். ஜெயலிதாவுடன் கூட்டணி வைத்தது ஏன் தவறென்றால் அவர் (ஜெயலலிதா) ஈழத்தமிழர்களுக்கு எதிரானவராம். உதயனின் ஆசிரியர் தலையங்கத்தின் இறுதிப் பந்தி இங்குத் தரப்படுகிறது.

ஈழத் தமிழர்களுக்கும், அவர்தம் நியாயம் மிக்க போராட்டத்துக்கும் முழு ஆதரவாளர் என உலகுக்குத் தம்மை அடையாளப்படுத்தி, வெளிப்படுத்தி நிற்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் வைகோ போன்றோர், இத்தகைய ஈழத் தமிழர் விரோதப் போக்குடைய ஜெயலலிதாவுடன் அணி சேர்ந்து அவருக்கு வால் பிடிப்பதாகக் காட்டிக் கொள்வது என்ன நியாயம்? உலகத் தமிழர் சமூகத்துக்கு அவர் உரிய பதில் தருவது இன்றைய நிலையில் தவிர்க்க முடியாத கட்டாயமாகும்.


வை.கோ மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள், நையாண்டிகள் வைக்கப்படுகின்றன. யாரும் என்னவும் செய்துவிட்டுப் போகட்டும். வை.கோ தொடர்பில் அவரவருக்குப் பல பிரச்சினைகள். ஆனால் நான் கொண்டிருக்கும் அரசியல் நிலைப்பாடுடைய, தன்னைத் தமிழ்த்தேசிய ஊடகமாகக் காட்டிக்கொள்ளுமோர் ஊடகம் இதை எழுதியபோது என்னுணர்வையும் பதிந்து வைக்கும் தேவையுள்ளதாக நினைக்கிறேன். உதயன் எழுதியதாலேயே அது ஈழத்தவர்களின் நிலைப்பாடாகக் கருதப்படக்கூடிய ஏதுநிலைகள் தென்படுவது ஒரு காரணமாகிறது.
போதாததற்கு, அங்கிங்குப் பொறுக்கி ஒட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்ட - 'டமில்' தேசிய ஊடகங்களாகத் தம்மைக் கட்டமைத்துக்கொண்டவை, உதயனின் இவ்வாசிரியர் தலையங்கத்தைத் தமது இணையத்தளங்களில் ஒட்டிக்கொண்டிருப்பதாலும், அவ்வூடகங்களில் வரும் அனைத்தையும் ஒட்டிக்கொண்டிருக்கும் வலைப்பதிவுகள் சிலவற்றிலும் அத்தலையங்கம் வெளியிடப்பட்டதாலும் தனிப்பட்ட என்னுணர்வைப் பதிவாக்குவது அவசியமாகிறது; அது எவனுக்குமே தேவைப்படாதென்றபோதும்கூட.

உதயன் இப்படியொரு தலையங்கம் எழுதவேண்டிய வந்ததன் முதற்காரணம், அண்மையில் தமிழக முதல்வர் மு.கருணாநிதி எழுதிய "இரங்கற் பதிவொன்றுக்கு" ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம்தானெனக் கருதமுடிகிறது. அதை முதன்மைப்படுத்தி ஜெயலலிதா, சோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட கும்பலுக்குத் திட்டு விழுகிறது. முதல்வருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படுகிறது. இறுதியில் ஜெயலலிதாவோடு அரசியற்கூட்டணி வைத்துக்கொண்டு அவருக்கு 'வால்பிடித்து'க்கொண்டிருக்கம் வை.கோ.வுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு அவர் "உலகத்தமிழர்களுக்கு" விளக்கம் கொடுக்க வேண்டுமென முடிகிறது.

[முதலில், உதயன் உலகத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா ஈழத்தமிழர்கள் சார்பாகக் கதைக்கிறதா எனக் குழப்பம் வந்தது. 'உலகத் தமிழர்கள்' அனைவருமே வை.கோ பதில்சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கிறார்களா என்ற கேள்வியும் வந்தது. "ஈழம் என் வீடு, தெற்காசியா என் முற்றம், உலகம் என் கிராமம்" என்றெழுதிய கவிஞர் ஜெயபாலன் உதயனுக்குள் ஊடுருவிவிட்டாரா, அல்லது கனியன் பூங்குன்றன் சொன்ன 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எண்டநோக்கிலதான் உதயன் சொல்ல வருதோ - அப்பிடிச் சொன்னாலும் ஏன் தமிழரைமட்டும் சொல்லுறாங்கள் எண்டெல்லாம் நிறைய வழிகளில் இதைக் 'கட்டுடைக்க'ப் புறப்பட்டு, அதற்கெல்லாம் நேரமில்லாத காரணத்தால், தட்டச்சும்போது போகிறபோக்கில் உலகத்தமிழர்களென்று தட்டிவிட்டார்களென நினைத்துக்கொண்டேன். ஈழத்தமிழர்களை - குறிப்பாக புலிகளை அரசியற்றலைமையாக ஏற்றுக்கொண்டவர்களையே உதயன் குறிப்பிடுகிறது எனக் கருதிக்கொண்டு எனது கருத்தைத் தெரிவிக்கிறேன்.]

இங்கு எனக்கொரு குழப்பம் வந்துவிட்டது.
வை.கோ எந்தக் கட்சியோடு கூட்டணி வைக்கவேண்டும், எப்படி அரசியல் நடத்த வேண்டுமெனச் சொல்வதற்கு ஈழத்தவர்கள் யார்? உதயன் யார்? அது முழுவதும் தமிழக அரசியலோடு தொடர்புடையது. நீங்களா போய் வை.கோ. வின் கட்சிக்கு வாக்களிக்கப்போகிறீர்கள்? தமிழக அரசியலில் ஒருவரோ ஒரு கட்சியோ எடுக்கும் முடிவுக்கும் செயன்முறைக்குக்கும் கட்டளையிட நீங்கள் யார்? உங்களுக்கு என்ன அருகதையிருக்கிறது? தமது 'தமிழக அரசியல்' செயற்பாடுகளுக்கெல்லாம் ஈழத்தவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய தேவை அவர்களுக்கெங்கே இருக்கிறது?

சரி, இவ்வளவு கதைக்கும் நீங்கள் வை.கோ. வுக்கு இருந்த - இருக்கும் தெரிவுகளை யோசித்தீர்களா? கூட்டணி தொடர்பில் வை.கோ என்ன செய்திருக்க வேண்டுமேனக் கருதுகிறீர்கள்?
தனித்துப் போட்டியிடுவதையா? அல்லது சுந்தரமூர்த்தி போன்ற பதிவர்கள் சொன்ன இன்னொரு தெரிவான கட்சியைக் கலைத்துவிட்டு வாக்கு அரசியலில் இருந்து விலகிக் கொள்வதையா? ஈழத்தவர்களுக்கு வை.கோ மூலம் கிடைக்கும் நன்மையே அவர் வாக்கரசியலில் முக்கிய புள்ளியாக இருப்பது மட்டும்தான். வாக்கரசியலை விட்டு வெளியிலே ஈழத்துக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்த ஏராளம் திராவிட, பெரியாரிய, இவற்றிலே சேராத தொண்டர்கள் இருக்கிறார்கள்.

தமிழக அரசியலில் ஒருவரின் செயற்பாட்டையும் அவரின் ஈழம் தொடர்பான நிலைப்பாட்டையும் ஒன்றாகக் குழப்பக்கூடாதென்பதே எனது கருத்து. இதை வலுப்படுத்த, நாங்களெல்லாம் தலையில் தூக்கிவைத்தாடும் ஒருவரைக் கொண்டே விபரிக்கலாம்.
மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை, புலிகளும் சரி, புலிகளின் ஆதரவாளர்களும் சரி, எப்படிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்களென்பது அனைவருக்கும் தெரியும். மிக முக்கிய காலகட்டத்தில் செயற்கரிய உதவிகளைச் செய்து புலிகளை வளர்த்ததற்காகவும் அதன்மூலம் ஈழப்போராட்டத்திற்கு உதவியளித்ததற்காகவும் "மட்டுமே" - ஆம் அதற்காக மட்டுமே - நாம் எம்.ஜி.ஆரை நன்றியோடு நினைவுகூர்கிறோம்.
யாராவது அவரின் தமிழக அரசியல் நிலைப்பாடு, செயற்பாடுகளைக் கருத்திற்கொண்டுள்ளோமா? அவரின் ஊழல்கள், மோசடிகள், அடாவடிகள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையாவது இதற்குள் கலந்தோமா? அப்படிக் கருதப்புறப்பட்டால் அவர் மீதான எமது நிலைப்பாடு மாறக்கூடுமல்லவா? அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி தனியே எம்மோடு தொடர்புடைய விடயத்தை மட்டும் கருத்திற்கொண்டுதான் இன்றுவரை எம்.ஜி.ஆரை அணுகிவருகிறோம்.

ஆனால் எம்.ஜி.ஆர் அளவுக்குக்கூட எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தமுடியாத, தனிப்பட்ட வாழ்விலும்சரி, அரசியல்வாழ்விலும் சரி அப்பழுக்கற்ற வை.கோ. மீது, அவரின் அரசியற்கூட்டணி நிலைப்பாடு தொடர்பாக விமர்சனம் வைத்து அதற்குரிய விளக்கத்தைச் சொல்ல வேண்டுமெனக் கேட்குமளவுக்கு நீங்கள் வந்துவிட்டது எவ்வாறு?

இந்தப்பிரச்சினையில் வை.கோ. கேட்கும் எதிர்க்கேள்விகள் மிகமிக நியாயமானவை. பலசந்தர்ப்பங்களில் கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாது; ஆனால் எதிர்க்கேள்விகள் மூலம் எதிராளிக்கான பதிலைக் கொடுக்கலாம். இப்போது வை.கோ செய்வதும் ஒருவகையில் அப்படித்தான் தெரிகிறது. வை.கோ. வால் நிச்சயமாக தகுந்த விளக்கத்தைக் கொடுக்க முடியாத சூழ்நிலைதான் இப்போதுள்ளதாகப் படுகிறது. ஆனால் அவரின் எதிர்க்கேள்விகள் பல நியாயமானவை.

வை.கோ பாணியிலேயே நானும் உதயனைப் பார்த்துச் சில எதிர்க்கேள்விகள் கேட்க முடியும்.
ஓர் இரங்கற்பதிவெழுதியதற்காக தற்போது திடீரென தலையில் தூக்கிவைத்தாடும் தமிழக முதல்வர் இப்போதும் காங்கிரஸ் கட்சியோடுதான் கூட்டணி வைத்துள்ளார். அது பிரச்சினையில்லை. ஆனால் தமிழ்ச்செல்வனின் படுகொலைக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ளார். (கவனிக்க: காங்கிரஸ் தலைவர் ஒருவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடியது புகைப்படத்துடன் தினக்குரலில் செய்தியாக வந்துள்ளது. இச்செய்தி பிழையானதென சரியான முறையில் மறுத்தால் நான் இப்பத்தியை நீக்கிவிடுவேன்). அதைவிட, முதல்வரின் இரங்கற்பதிவுக்கு ஜெயந்தி உட்பட வேறும் சில காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவர்களோடுதான் கருணாநிதி இன்னமும் கூட்டணி வைத்துள்ளார். முதல்வரின் இரங்கற் பதிவு பற்றி ஜெயலலிதா சொன்னதற்கும் காங்கிரஸ் பிரமுகர்கள் சொன்னதற்குமுள்ள வித்தியாசத்தை உதயன் விளக்குமா? ஜெயலலிதாவாவது இனிப்பு வழங்கிக் கொண்டாடாமல் விட்டார்.
இப்போது என் கேள்வியென்னவென்றால், இரங்கற்பதிவைப் பழித்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்திருக்கும் முதல்வர், உலகத்தமிழரெல்லாம் வேண்டாம், ஈழத்தமிழர்களுக்கு ( வேண்டாம் யாழ்ப்பாணத்தமிழர் - அதுவும் வேண்டாம், சங்கானை, சித்தங்கேணி, சண்டிலிப்பாய் எண்டு ஏதாவது ஓர் ஊர்த்தமிழர்களுக்கு) விளக்கமளிக்கக் கடமைப்பட்டுள்ளாரென அடுத்த ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்களா?

** கவனிக்க: முதல்வர் காங்கிரசோடு கூட்டணி வைத்திருப்பது தவறென்றோ, அவர் அதற்கான விளக்கத்தை ஈழத்தவர்களுக்கு அளிக்க வேண்டுமென்றோ நான் கேட்கவில்லை. உதயன் நாளிதழுக்கான ஓர் எதிர்க்கேள்வியே அது. இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை இறுதியில் ஓரிரு வரியில் எழுதுகிறேன்.

ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்ததற்கோ வால்பிடிப்பதற்கோ ஈழத்தவர்கள் கவலை கொள்ளவும் உணர்ச்சிவசப்படவும் எதுவுமில்லையென்பதே என்கருத்து. அது அந்த மாநில அரசியல் சார்ந்தது. அந்தக் கூட்டணிக்குப் போனதாலேயே வை.கோ. ஈழத்தமிழரின் போராட்டம் தொடர்பாக ஏதாவது சமரசம் செய்துகொண்டாரா, மாறுபாடான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளாரா என்பதே நாம் கனிக்க வேண்டியது. வை.கோ மாறவேயில்லை. முன்பு போலவே அதே தீவிரத்துடன்தான் இயங்குகிறார். இந்நிலையில் அவரின் அரசியற்கூட்டணி தொடர்பாக நாம் கவலைகொள்ளவோ கரிசனை கொள்ளவோ தேவையில்லை. அதையும்விட அதற்கான உரிமை எமக்கில்லை.
இதை இன்னும் உறைக்கும்படி வேறொரு முறையில் சொல்கிறேன்.

வை.கோ. வோ அல்லது தமிழகத்தைச் சேர்ந்த தீவிர ஈழவிடுதலை ஆதரவாளர்களோ புலிகளைப் பார்த்து,
'நீங்கள் ஏன் சமாதானப் பேச்சுக்குப் போனீர்கள்? நீங்கள் ஏன் சண்டையைத் தொடக்கினீர்கள்? நீங்கள் ஏன் யுத்தநிறுத்தம் அறிவித்தீர்கள்? நீங்கள் ஏன் ரணிலை வெல்லவைப்பதை விட்டுவிட்டு ராஜபக்ஷவை வெல்ல வைத்தீர்கள்? நீங்கள் ஏன் நோர்வேயோடு பேசுகிறீர்கள்?'
இதற்குரிய விளக்கத்தை எமக்குச் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்"
என உளறிக்கொண்டிருந்தால் நாம் என்ன நிலையிலிருப்போம்?
அப்படித்தான் இருக்கிறது, தமிழகத்தில் எடுக்கும் அரசியற்கூட்டணி நிலைப்பாட்டுக்காக எமக்கு விளக்கம் சொல்லவேண்டுமென வை.கோ.வைப் பார்த்துக் கேட்பது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முதல்வரின் இரங்கற்பதிவு தொடர்பானது:
அவரின் இரங்கற்பதிவு பெரியளவில் என்னைப் பாதிக்கவில்லை. அவர் எழுதியதால் மகிழ்ந்து துள்ளவில்லை; அவர் எழுதியிராவிட்டால் அதைக்குறித்துக் கவலைப்பட்டிருக்கப் போவதுமில்லை. பிறகு நடப்பவைகளைப் பார்த்தால் அவர் அதை எழுதியிருக்காமலே விட்டிருக்கலாம் எனப்படுகிறது.

இயக்குநர் சீமான் சொன்னதைப்போல, ஈழஆதரவென்பது தமிழக வாக்கரசியலைப் பாதிக்கும் நிலைவரும்வரை இவை வெறும் சலசலப்புக்களாகவே இருக்குமென்பது எனது தனிப்பட்ட கருத்து.

சங்கரபாண்டி சொல்வதைப்போல தமிழகத்தில் ஒரு நியாயமான கருத்துக்கணிப்பை நடத்தினால் நல்லதென்று படுகிறது. பூவா தலையா போல ஒரு முடிபு வெளிப்படையாகத் தெரிந்துவிடும். நாங்களும் மேற்கொண்டு செல்லலாம். இது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமலிருக்கும் நிலைதான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வை.கோ, ஈழம் தொடர்பாக வலைப்பதிவுச்சூழலில் பொதுவாகச் சில விடயங்களைப் பார்க்கலாம். வை.கோ என்றதுமே ஏதோவொரு விதத்தில் ஈழப்போராட்டத்தையும், புலிகளையும் முடிச்சுப்போட்டுத்தான் அணுகப்படுகிறது. இந்திய அரசியலில் இருக்கும் வேறெவருக்கும் இந்நிலையில்லை. அந்தளவுக்கு ஈழம் பற்றியும் புலிகள் பற்றியும் வை.கோ பேசியவை, பாடுபட்டவை ஏராளம் என்பதே உண்மை. மிக வெளிப்படையாகவும், ஆணித்தரமாகவும் என்றைக்கும் ஒன்றையே சொல்லிக்கொண்டிருப்பவர் அவர்.

வை.கோ, தி.மு.க தலைமையிலான கூட்டணியை விட்டு ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்தபோது வலைப்பதிவுலகில் பெரும் சர்ச்சை எழுந்தது. அந்நேரத்தில் வை.கோ.வுக்கு ஆதரவாக வந்தவை மிகமிகச் சில குரல்கள் மட்டுமே (டோண்டுவுடையதைச் சேர்த்தும்கூட;-)) அதுபோல் நடுநிலையாக விமர்சித்து வந்தவையும் மிகச்சில (சுந்தரமூர்த்தி போன்றவர்களது, அது பிரிவுக்கு முன்பே எழுதியிருந்தாலும்கூட)
ஆனால் வை.கோ.வைத் திட்டி வந்த குரல்களே அதிகம். அவற்றின் பின்னணி நோக்கங்கள் வேறுபட்ட தளங்களைக் கொண்டவை.

தீவிர கருணாநிதி ஆதரவாளர்களாக இருந்தவர்களிடமிருந்து (சிலருக்கு வை.கோ மீது பழைய கறளொன்று இருந்தது எனக்கருதுமளவுக்கு மிகத்தீவிரமாக இருந்தது;-)) வை.கோ. மீது வைக்கப்பட்ட கடுமையான தாக்குதல்கள் ஒருவகை.

கருணாநிதிக்கு எதிரான அரசியற்பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்டவர்கள், - ஏன் வை.கோ வுக்கும் எதிரான அரசியற்பார்வை கொண்டவர்கள்கூட இவ்விடத்தில் வை.கோ.வின் வெளியேற்றத்தை நையாண்டி பண்ணிக்கொண்டிருந்தார்கள் (முகமூடி, பி.கே.சிவகுமார் போன்றோரின் எழுத்துக்கள்). இது இன்னொரு வகை. இவர்களைப் பொறுத்தவரை, வை.கோ மீது தமது தாக்குதலை நடத்த இதையொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார்களேயன்றி மற்றும்படி நியாயமான எந்த அரசியற்பார்வைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

தனிப்பட்டளவில் வை.கோவின் ஜெயலலிதாவுடனான இணைவானது எனக்கு வருத்தத்தையளித்தாலும், இது தவிர்க்க முடியாததே என்பதோடு வை.கோ எடுத்தது சரியான முடிபே என்ற நிலையிலேயே நானிருந்தேன். (பேசியளவில் வேறும்சில ஈழத்துப்பதிவர்கள் இதேநிலைப்பாடோடு இருந்ததை அறிந்தேன்). ஆனால் நாங்கள் எல்லோரும் இந்தப்பிரச்சினையில் ஒதுங்கியிருந்தோம். கொழுவி மாத்திரம் கற்பகம் அம்மையாரோடு சண்டைபிடித்ததாக ஞாபகம்;-)

எனக்கு வருத்தமளித்த நிகழ்வு என்னவென்றால், இவர்கள் வை.கோ.வை வசைபாட ஈழத்தமிழர்களைப் பயன்படுத்திக்கொண்டமைதான். நான் மேற்குறிப்பிட்ட இருதரப்புமே வை.கோ. மீது தமது வசைமாரியைப் பொழிய பயன்படுத்திய முதல் ஆயுதம் ஈழத்தமிழர்கள்தான்.
அட! பி.கே. சிவகுமார், முகமூடி போன்றோர்கூட, ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் கரிசனை கொண்டவர்கள்போல, வை.கோ. ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்துவிட்டார் எனப் புலம்பினார்கள். வை.கோ ஈழத்தவர்களின் தலையில் மிளகாய் அரைத்தவிட்டாரென ஒப்பாரி வைத்தார்கள்.

ஆனால் சம்பந்தப்பட்ட ஈழத்தவர்களோ வை.கோ செய்தது தவறென்று எங்குமே ஒப்பாரி வைக்கவில்லை. மாறாக அம்முடிவை ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். வை.கோ.வை உயிராய் நினைத்த அவரின் சீடர்கள் மாறியபோதுகூட ஈழத்தவர் மனங்களில் வை.கோ.வின் இடம் தளம்பலடையவில்லை. உதயனின் பாணியிற்சொன்னால், ஜெயலலிதாவுக்கு வால்பிடித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்திற்கூட அது தளம்பலடையவில்லை. அந்நேரத்தில் வை.கோ.வைச் சரியாகப் புரிந்தவர்கள் ஈழத்தவர்கள் தானோ? ;-)

இப்படி மற்றவர்கள் ஈழத்தவரை வைத்து வை.கோ மீது விளையாடிக்கொண்டிருந்தது ஒருபுறமென்றால் இப்போது ஈழத்துச் செய்தியேடு ஒன்று விளையாட்டில் குதித்திருப்பது வருத்தமளிக்கிறது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதி முடித்தபோது மிகமிக நீண்டிருந்தது இடுகை. இடையிடையே வெட்டிக்கொத்திச் சுருக்கி (ஆம். இதுவே சுருக்கம்தான். வலைப்பதிவுச்சூழல் தொடர்பான நிறைய விடயங்கள் அலட்டல்களாக விளங்கியதால் வெட்டியாயிற்று.) இது வெளியிடப்படுகிறது.
மேலும் ஏதாவது சொல்ல வேண்டி வந்தால் பின்னூட்டங்களில் சொல்லலாமென நினைக்கிறேன்.

** இது உதயன் செய்தியேட்டுக்கு அனுப்பப்படவில்லை. அது எனது நோக்கமுமன்று.

** இதுவெனது தனிப்பட்ட கருத்து. இதற்குரிய எதிர்ப்புக்கள் ஈழத்தவர்களிடமிருந்தால் தெரிவிக்கவும்.

** இன்னொரு குறிப்பு:
இவ்விடுகையின் நோக்கம் உதயன் செய்தியேட்டின் நற்பெயரையோ அதன் சேவையையோ களங்கப்படுத்துவதன்று. எச்சந்தர்ப்பத்திலும் நாம் உதயனை புலம்பெயர் ஊடகங்களோடு வைத்துக் கருதுவதில்லை. அப்படி ஒப்பிடவும் முடியாது. தனக்குரிய வரலாற்றுப் பணியை உதயன் மிகுந்த தியாகங்களினூடு தொடர்ந்து செய்து வருகிறது. சிங்கள இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இயங்கும் இச்செய்தியேடு, இராணுவத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் தொடர் அச்சுறுத்தலுக்கு மத்தியில்தான் இயங்கிவருகிறது. தனது பணியாளர்களை ஆக்கிரமிப்பாளரின் துப்பாக்கிக் குண்டுக்குக் காவு கொடுத்துள்ளது. அதன்பின்னும் அது வீச்சோடு இயங்கிவருகிறது. விடுதலைப்போராட்டப் பயணத்தில் உதயன் செய்தியேட்டுக்கான பங்களிப்பை நாம் அறிவோம்.
ஆனால் இக்குறிப்பிட்ட சிக்கல் தொடர்பில் நாம் கடுமையான முறையில் உதயனோடு முரண்படுகிறோம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, February 23, 2007

பின்னவீனத்துவம்: அறிவியல்பூர்வக் கலந்துரையாடல் - ஒலிப்பதிவு

தற்போது வலைப்பதிவுலகில் காரசாரமாக பின்னவீனத்துவம் பற்றிய கட்டுடைப்புக்கள், விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
இதன் அடுத்தகட்ட வடிவமாக ஒரு கலந்துரையாடலை ஒழுங்குபண்ணி இங்கு ஒலிப்பதிவாகத் தருகிறோம்.

இக்கலந்துரையாடல் ஆகலும் அடிப்படையாக இல்லாமலிருப்பதால் ஏற்கனவே கொஞ்சமாவது இதுபற்றி அறிவிருப்பவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.
எதற்கும் இப்பதிவைக் கேட்க முன்னர் கீழ்க்கண்ட இணைப்புக்களில் இருக்கும் கட்டுரைகளை வாசித்திருந்தால் நன்று.

அப்படி வாசிக்காத பட்சத்தில், வாசிக்க விருப்பமில்லாத பட்சத்தில் பேசாமல் போய்விடாதீர்கள். ஒலிப்பதிவைக் கேளுங்கள்.
ஆனால் அதன்பின் கட்டுரைகளை நீங்கள் வாசிக்கப்போவதில்லையென்பதே நீங்கள் செலுத்தப்போகும் விலை.

பின் நவீனத்துவம் என்னும் பேக்காட்டல். -அற்புதன்
பின்நவீனத்துவம் ➽ சில குறிப்புகள் -பாலபாரதி
ஒரு நேர்காணல்: சில பின் நவீனத்துவப் புரிதல்கள் -டி.சே
பின்நவீனத்துவம் - ஓர் அறிமுகம் -பெயரற்ற யாத்ரீகன்
என்னுடைய பின்-நவீனத்துவ புரிதல்கள் -டி.சே


கலந்துரையாடலில் பங்கேற்போர்:

ஆய்வாளர் கும்பரோ பூஜே,
சுசிந்தன்















postmodernsm.mp3


அவசரமாக ஒலிப்பதிய வேண்டி வந்ததால் கலந்துகொண்டவர்கள் சரியான ஆயத்தங்களின்றி பங்குபற்ற வேண்டி வந்துவிட்டது. இன்றுவிட்டால் பின் சனி ஞாயிறு என்பதால் அவசரமாக இன்றே அனைத்து வேலைகளையும் முடிக்கவேண்டி வந்தது. இதில் வரும் தொழிநுட்ப வழுக்களுக்கு முன்கூட்டியே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்.

இதைக் கேட்டு நீங்கள் சொல்லும் கருத்துத்தான் தொடர்ந்து இடம்பெறப்போகும் இவ்வாறான கலந்துரையாடல்களுக்கு ஊக்கமாக அமையுமென்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Monday, February 05, 2007

எஸ்.பொன்னுத்துரை கதைக்கிறார்...

அண்மையில் மெல்பேணில் நடந்த எழுத்தாளர் விழாவில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவற்றின் முதற்பகுதியை ஒலிப்பதிவாக இங்கு இணைக்கிறேன்.

அன்றைய விழாவில் தமிழ்ச் சிறுகதைகள் பற்றி கருத்தரங்கில் எஸ்.பொ. அரைமணித்தியாலம் கதைத்தவற்றையே மூன்று பாகங்களாக இங்கு இணைத்துள்ளேன். mp3, rm ஆகிய வடிவங்களில் ஒவ்வொரு கோப்பும் இணைக்கப்பட்டுள்ளன. தேவையான ஒலிப்பதிவைக் கேட்கலாம்.



யாருக்காவது ஒலிக்கோப்பைத் தரவிறக்க வேண்டுமானால் கேட்கவும், இணைப்பைத் தருகிறேன்.

ஈழத்துச் சிறுகதைகள் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் சிலவற்றைச் சொல்கிறார். கிழக்கு மாகாண எழுத்தாளர்கள் பற்றிச் சொல்வதில் சில பெயர்கள் தெளிவில்லை. தகவல் தெரிந்தவர்கள் பின்னூட்டமாக இடலாம்.

எஸ்.பொ. அவர்களின் அன்றைய முத்துக்கள் சில:

**ஆறுமுகநாவலரை விடவும் தமிழுக்கு அதிகம் சேவை செய்தது விபுலானந்தர் தான்.

**வடக்கோடு ஒப்பிடும்போது கிழக்கு மாகாணத்தில் கதை இலக்கியம் தேக்கமடைந்துள்ளது.
கிழக்கில் போய் உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யாரென்று கேட்டால் நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி என்றுதான் பதில்வரும். இவர்களை ஆதர்சமாக வைத்துக்கொண்டிருந்தால் எப்படி உருப்படியான படைப்பை உருவாக்குவது?
(குறிப்பிட்ட எழுத்தாளர்கள் மேலான மயக்கம் யாழ்ப்பாணத்தாரை விடவும் கிழக்கில் அதிகமா???)

**யாழ்ப்பாண மண்வாசனையைச் சரியாக கதைகளில் கொண்டுவந்த முன்னோடி இலங்கையர்கோன்.
(இவரின் வெள்ளிப் பாதரசம் கதையைச் சிலாகித்தார்)

**எட்டாண்டுகளாக நைஜீரியாவில் எழுத்துலக அஞ்ஞாதவாசம் இருந்த தன்னை மீண்டும் எழுத வைத்தது லெ.முருகபூபதி தான்.

**சிறுகதை இலக்கியம் மீள உயிர்ப்புடன் எழுவது புலம்பெயர்ந்தவரால்தான்.

இன்னும் பல சுவாரசியமான தகவல்களுக்கு ஒலிப்பதிவை முழுமையாகக் கேளுங்கள்.
தரமற்ற ஒலிப்பதிவுக்கு மன்னிக்க.

எஸ்.பொ. பேச்சு - பகுதி ஒன்று










எஸ்.பொ. பேச்சு - பகுதி இரண்டு








S.PO.Speech2.mp3





எஸ்.பொ. பேச்சு - பகுதி மூன்று








S.PO.Speech3.mp3




________________________________________________

அன்றைய விழாவில், கருத்தரங்கு முடிந்ததும் கேள்வி - பதில் நேரத்தில் எஸ்.பொ. அவர்கள் கதைத்தவை, பின்னர் விமர்சன அரங்கு முடிந்ததும் அவர் நிகழ்த்திய பதிலுரை, இறுதியில் பவளவிழாப் பாராட்டு நிகழ்வு முடிந்ததும் அவர் நிகழ்த்திய ஏற்புரை என்பவற்றை அடுத்த பதிவில் ஒலிப்பதிவாக இணைக்கிறேன்.

இவற்றில்,
நவீனத்துவம், பின்னவீனத்துவம் போன்ற சொல்லாடல்கள் வாசகனை பேப்பட்டம் கட்ட எழுத்தாளராலும் விமர்சகர்களாலும் பயன்படுத்தபடும் ஓர் உத்தியேயன்றி வேறில்லை என்ற கருத்தைச் சொன்னதோடு இடையில் எழுத்தாளர் சாருவையும் இழுத்தது;
சாகித்திய மண்டலப் பரிசு தனக்கு இதுவரை கிடைக்காததை வருத்தமாகவோ நையாண்டியாகவோ வெளிப்படுத்தியது;

போன்றவை வருகின்றன.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, January 23, 2007

கதைத்தல் - பேசுதல்

'கதைத்தல்' தொடர்பில் எனக்கு அண்மையில் ஒரு குழப்பம் வந்தது.
இச்சொல்லை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் பயன்படுத்துகிறோம்.
பேசுதல் என்பதற்கு எம்மிடையே 'திட்டுதல்' என்ற ஒரு பொருளுமுண்டு.

இந்த 'கதைத்தல்' என்பதை 'பேசுதல்' என்ற பொருளில் ஈழத்தில் மட்டும்தான் பயன்படுத்துகிறோம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அண்மையில் கேட்ட ஒருபாடல் அக்கருத்தைக் குழப்பிவிட்டது.
வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் ஒரு பாடல்வருகிறது.
'பார்த்த முதல்நாளே' என்று தொடங்கும் அப்பாடலில் இரண்டாவது சரணத்தில் ஒருவரி வருகிறது இப்படி:

கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒருபெண்ணும் நீதான்
கண்கொட்ட முடியாமல் முடியாமல் பார்க்கும்
சலிக்காத ஒருபெண்ணும் நீதான்"

இதில், 'கண்பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்' என்று வரும் வரியில் நாங்கள் பயன்படுத்தும் பொருளில் 'கதைத்தல்' வருகிறது.
இது தமிழகத்திலும் இருக்கும் வழக்கா? குறைந்தபட்சம் சில ஊர்களிலாவது பயன்பாட்டிலிருக்கும் சாத்தியமுண்டா? அல்லது ஈழத்தமிழ் வழக்குத்தான் பாடலிற் புகுந்ததா?

பாடலை எழுதியவர் தாமரை என்று நான் கருதுவதால் இரண்டாவது சாத்தியமென்று நம்ப இடமுண்டு.
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Thursday, January 11, 2007

மண்



மண் திரைப்படம் பற்றி ஒருபக்கம் ஆகா ஓகோ என்றும் இன்னொரு பக்கம் திட்டித் தீர்த்தும் பலவாறான கருத்துக்கள் எழுதப்பட்ட நிலையில் நானும் எனக்குப்பட்டதைச் சொல்வோமென்று எழுதியது இப்பதிவு.



ஈழத்துத் தமிழ்த்திரைப்படமாகப் பலராலும் கருதப்படும் 'மண்' படத்தின் கதை ஈழத்தின் வன்னியை மையமாக வைத்து நடக்கிறது. பெரியளவில் பேசப்படாமற்போன, தற்போது பலராற் பேசத் தயங்கப்படும் களமொன்றை திரைக்கதை கொண்டிருக்கிறது. என்னைப்பொறுத்தவரை, அக்களமான சாதிப்பிரச்சினை, ஒடுக்குமுறை என்பவற்றை படம் ஓரளவு வெற்றிகரமாக வெளிப்படுத்தியுள்ளது. அந்தளவில் பாராட்டும் வரவேற்புமுண்டு.
பாராட்டப்பட வேண்டி அம்சங்களிருக்கும் அதேநேரம், ஏதோ புரட்சிகரமான, வித்தியாசமான படம் என்று தூக்கிவைத்து ஆடுமளவுக்கு இல்லாமல், வழமையான தமிழ்ச்சினிமா மாசாலக்கள் இரண்டொன்றைத் தூவி சிலசந்தர்ப்பங்களில் வெகுசாதாரண படமாகத் தோன்றும்படி வந்துள்ளதுதான் மண். அவை எவையென்று பின்னர் பார்ப்போம்.

முதலில் இதுவோர் ஈழத்துத் தமிழ்ப்படம் என்றளவில்தான் நானும் கருதிக்கொண்டிருந்தேன். அதற்கான கூறுகள் நிறையவேயுள்ளன.
கதைக்களம் நடக்கும் கனகராயன்குளப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்படவில்லையென்றாலும் அம்மண்ணை, மண்வாசனையை படத்தில் கொண்டுவருகிறார்கள். குளக்கட்டுப் பாதைகள், பற்றைகள், வயல்கள், முதிரைக் கட்டைகள் நட்டு முள்ளுக்கம்பி வரிந்த வயல்வேலிகள், தென்னந்தோப்புக்கள் என்று காட்சிகள் இயல்பாகவே கதைக்களத்துக்குப் பொருந்துகின்றன. படத்தில் அவ்வப்போது வரும், குளக்கரையில் தாழ்வாக விரிந்த பெருங்கிளைகளுடன் விசாலமாக வளர்ந்த மருதமரங்கள் எனக்குக் கிளர்ச்சியூட்டின.
ஈழத்தவரின் பேச்சுவழக்கில் படம் எடுக்கிறோமென்ற பேரில் சிலர் நடத்திய கூத்துப்போலில்லாமல் கதைக்களத்துக்குரிய பேச்சுவழக்கு பெருமளவு சரியாகவே பொருந்துகிறது. ஆனால் இடையிடையே தோன்றும் - மேடைநாடகத்தில் கதைப்பதுபோன்ற இழுவையுடன் கூடிய பேச்சுவழக்கைக் குறைத்திருக்கலாம்.

பெற்றோர் கொடுக்கும் தண்டனை முறைகள் - குறிப்பாக கண்ணில் மிளகாய்த்தூள் தூவுவது குறிப்பிட்டுச சொல்லவேண்டிய காட்சிகள். சின்னச்சின்ன விசயங்கள் பலவற்றில் நல்ல முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியே பச்சைமிளகாய் தின்னவிடும் தண்டனையையும் ஒரு காட்சியாக்கியிருக்கலாம்.

பூசி மெழுகிக்கொண்டு வரும் கதாநாயகர், நாயகி, பிறபாத்திரங்கள் என்றில்லாமல் மண்ணோடு ஒட்டிய பாத்திரங்கள் நன்றாகப் பொருந்துகின்றன. இதுவரை பார்த்த தமிழ்ப்பட நாயகிகளில் அதிகம் கவர்ந்தவர் இந்த இலட்சுமிதான். ஆலங்குளம், கரப்புக்குத்தி, குறிசுட்டகுளம்... என்றுவரும் சுற்றுப்புற ஊர்களின் பெயர்களோடு கதைக்களம் மிகமிக உண்மையாக இருக்கிறது. விடுமுறைநாட்களில் வயற்காவலுக்கும் ஆடுமாடு மேய்க்கவும் மாணவர்கள் (முதலாளிகளின் மகன்மாரும்) போகவேண்டிய யதார்த்தம் நன்றாக வந்திருக்கிறது.

இவைகள் சரியாக அமைந்தமைக்கு திரைக்கதையும் இயக்கமும் ஈழத்தவரே என்பதும் முக்கிய காரணம். கதைக்களத்தையும் மக்களையும் 'கதை நடந்த காலப்பகுதியில்' நன்கறிந்தவரென்பதால் இப்படி வந்தது. [இன்னும் சிலவற்றைச் சேர்த்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். குறிப்பாக வன்னியில் இன்றியமையாமற் போய்விட்ட ஆடுமாடுகளைப் பெருமளவில் காணவேயில்லை. ஒருமுறை பட்டியொன்று காட்டப்படுகிறது. மாடுகள் மேயாத, படுத்துக்கிடந்து தொல்லைப்படுத்தாத வன்னி வீதிகள் சற்று இடறுகின்றன. அதேபோல் நாயகன் குறும்படமெடுக்க வந்த நிகழ்காலமும் சரியாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. வீதிப்போக்குவரத்தில் நிற்கும் காவற்றுறையையோ, அங்கிங்கு ஓடித்திரியும் புலிகளின் வாகனங்களையோ காணவில்லை. இப்படத்தை வன்னியில் எடுக்க முடிந்திருந்தால் இவற்றைக் கொண்டுவந்திருக்கலாம் என்பதைக் காரணமாகச் சொல்லிக்கொள்ளலாம். எனினும் இது 'இந்தியப் படமாக' திரையிடப்பட்டதும் காரணமென்றுதான் தோன்றுகிறது]

இப்படத்தின் பின்னணி பற்றிய ஒரு சம்பவம் அண்மையில் படிக்க நேர்ந்தது. முதலில் திட்டமிடப்பட்டதிலிருந்து மாற்றங்களுடன்தான் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் திரையிட வேண்டுமென்பதற்காக சிலகாட்சிகள் (தமிழீழக் காவற்றுறை சம்பந்தப்பட்ட காட்சியும் அதிலொன்று) நீக்கப்பட்டு அல்லது மாற்றியமைக்கப்பட்டு படம் இந்திய தணிக்கைக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டு வெளியிடப்பட்டது என்ற தகவலே அது. யதார்த்தத்தை மீறியதாகத் தெரியும் அக்கொலைக் காட்சிக்கு நீக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட காட்சிகளில் பதில் இருந்திருக்கக் கூடும்.
ஆக இந்தியத் தணிக்கைக் குழுவுக்கு ஏற்றாற்போல் தயாரிக்கப்பட்ட இப்படம் யாருக்குரிய திரைப்படம் என்ற கேள்வி இயல்பாகவே வருகிறது. 'ஈழத்துத் திரைப்படம்' என்று ஆவலோடிருந்த எனக்கு இது ஒருவித ஏமாற்றத்தையே தந்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை. சிலர், ஆணிவேரையே ஈழத்துத் திரைப்படமென்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

_______________________________________
இனி இப்படத்தை சராசரி தமிழ்ப்படமாகக் கருத வைப்பவற்றில் இரண்டொரு கூறுகளைப் பார்ப்போம்.

*** படம் தொடங்கி முக்கால் மணிநேரமாகியும் எதுவும் வரவில்லையென்று ஆச்சரியப்பட்டபோது அடுத்த நிமிடமே வந்தது தமிழ்ச்சினிமாவின் சாபக்கேடான பாடற்காட்சி. 'ஒரு படமெடுத்தால் கட்டாயம் சில பாட்டுக்களும் ஆட்டங்களும் இருக்கவேணும்; அதிலயும் கட்டாயம் ஒரு காதல் பாட்டு வேணும்' என்ற எழுதாத விதி இங்கும் பின்பற்றப்படுகிறது. இரண்டுபேர் காதலிக்கிறார்கள் என்பதைச் சொல்ல எங்கள் இயக்குனர்களுக்கு இருக்கும் மிகச்சுலபமான வழியாக ஒரு பாட்டுக்காட்சியைத்தான் கருதுகிறார்கள். அப்படித்தான் 'மண்' இயக்குனர் புதியவனும் நினைத்தாரோ என்னவோ?

*** BBQ பாட்டும் நடனமும்:
வெளிநாட்டிலிருந்து சுற்றுலாவுக்கோ இன்னபிற தேவைக்கோ தாயகம் வருபவர்கள் அங்கே குடிப்பதோ கூத்தாடுவதோ இல்லையென்று நான் சொல்ல வரவில்லை. வெளிநாட்டுச் சரக்கில் நாலைந்து போத்தல்கள் கொண்டுவந்து (அதற்கு வரிகட்டாமல் வருவதற்கு இவர்கள் படும்பாடு!) தங்கள் ஆடம்பரங்களை மண்ணின் மைந்தர்களுக்குக் காட்டமாட்டார்கள் என்றும் இல்லை. சொல்லப்போனால் சிலர் தாயகம் வருவதே அதற்குத்தான். வெளிநாட்டில் வெயிற்காலத்தில் எப்படி உடுத்துவார்களோ அதைவிடவும் குறைவாக உடுத்தி எங்கள் பெண்கள் வன்னியர்களுக்கு பாஸ் காட்டுவார்களென்பதையும் மறைப்பதற்கில்லை.

ஆனால் மண் படத்தில் இடம்பெற்ற இப்பாடற்காட்சி இப்படியான இயல்பைச் சொல்லும் நோக்கத்தின் பாற்பட்டதன்று. வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் தன் சொந்தங்கள், தெரிந்தவர்களுக்கு விருந்தொன்று வைக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் நோக்கமுமன்று. அல்லது பாடல்வரிகள் சொல்வதைப் போன்று வன்னிமக்களின் வாழ்வைச் சொல்வதற்காகப் புகுத்தப்பட்ட பாடற்காட்சியுமன்று.
இயக்குனருக்கு ஒரு ஆசையும் தேவையும் தெரிகிறது.. ஒரு நடனக்குழுவை வைத்து வண்டியையும் குண்டியையும் ஆட்டி வழமையான தமிழ்ச்சினிமாப் பாணியில் ஒரு பாடற்காட்சி தேவைப்படுகிறது. இன்றைய மொழியில் ஒரு 'குத்துப்பாட்டு'. 'உங்களுக்கு நாங்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்களில்லை'யென்பதை கோடம்பாக்கத்துக்கு நிரூபிக்கும் இலட்சியம் இயக்குனருக்கு இருந்திருக்க வேண்டும். அதற்கென்று கோடம்பாக்கத்திலிருந்தே நடன இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டுத்தான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
படத்துக்குச் சம்பந்தமில்லாமல், படம்பார்க்க வருபவரை கிளுகிளுப்பூட்டும் நோக்கத்தை மட்டும் கொண்டு சினிமாப் பொதுப்புத்தியோடு புகுத்தப்பட்ட பாடற்காட்சியாகவே அது தெரிகிறது. என்ன மாற்றமென்றால், கோடம்பாக்கம் கமராவைத் தூக்கிக்கொண்டு வெளிநாடு போகும்; இங்கு மாறி நடந்திருக்கிறது.

*** படத்தில் வரும் காதலை விளங்கிக்கொள்ள முடியவில்லை. நான் நினைக்கிறேன், படம் பார்த்த யாருக்குமே அது முடியாத விசயம். நாயகன் உண்மையில் காதலித்தானா இல்லையா என்பது தெளிவில்லை. முன்படத்தி்ல் வரும் காட்சிகள், அவன் மனமொத்துக் காதலிப்பதாகவே வருகிறது. காதலியை இழிவாய்ப் பேசியதற்காக நண்பனோடு அடிபடுகிறான். ஆனால் பின்னர் வரும் காட்சியில் அனைத்தும் திட்டமிட்டுச் செய்தாகக் காட்டப்படுகிறது. பொன்ராசுவைக் கொலை செய்யும் காட்சியின்பின் திரையில் வரும் வசனம்தான் இயக்குனர் படம்மூலம் சொல்ல வந்த கருத்தென்றுபடுகிறது. அந்தக் கருத்தை நியாயப்படுத்த வேண்டும்; கொலையாளியை நியாயப்படுத்த வேண்டும்; எனவே பொன்ராசுவை வில்லனாக்க வேண்டும். அல்லாதபட்சத்தில் சந்தர்ப்பவசத்தால், சமூகத்தின் தவறால் வெளிநாடு போகவேண்டிவந்த ஓர் அப்பாவியைக் கொலை செய்துவிட்டு புரட்சிவசனத்தைக் கருத்தாய்ச்சொல்லும் படத்தின் அபத்தம் உறைக்கும். இவை அனைத்துக்காகவும் படத்தின் இடையில் அடித்த குத்துக்கரணம்தான், பொன்ராசு எல்லாம் திட்டமிட்டே லட்சுமியை ஏமாற்றினான் என்ற கதை. இது பட இயக்கத்தில், திரைக்கதையில் மிகப்பெரிய பலவீனமாகவே எனக்குத் தோன்றுகிறது.

தகவற்பிழைகள், தர்க்கப்பிழைகள் என்பனவும் ஆங்காங்கே வருகின்றன.
படத்தில், 'காயாக்கன்னி' என்ற பேரில் நாயகனால் நாயகிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது ஒருமரம். 'இந்த மரத்தைப்போல உறுதியாகவும் கன்னியாகவும் எங்கட காதல் இருக்க வேணும்' என்றும் சொல்லப்படுகிறது. அதேமரத்தில் நாயகனைக் கட்டிவைத்துவிட்டு மகன்(கொலையாளி) பேசும்போது 'விளாத்தி மரத்தைக் காட்டி என்ன சொன்னனி? வைரமான மரமோ?' என்று கேட்கிறார். காயாக்கன்னி விளாத்தியானது விளங்கவில்லை.

குறும்படமெடுக்க தாயகம் திரும்பிவரும் நாயகனுக்குச் சற்று இளைத்த தோற்றத்தைக் காட்டியிருக்கலாம். கதைப்படி குறைந்தபட்சம் முப்பத்தைந்து வயது கொண்டவர். பெண்கள் எப்படியென்றாலும், பொதுவாக புலம்பெயர்ந்த எங்கட ஆண் சிங்கங்கள் விரைவில் வயக்கெட்டுப்போவார்கள் என்றுதான் நினைக்கிறேன் ;-).

அடுத்து படத்தில் வரும் இயக்கம் சம்பந்தப்பட்ட காட்சிகள்:
கொலையாளி போராளியா இல்லையா என்பது நேரடியாகக் காட்டப்படவில்லை. ஆனால் அதைவைத்தே சப்பைக்கட்டு கட்ட முடியாது. அவனும் நண்பனும் 'ஜெயசிக்குறு நேரத்தில் ஆமிக் கொமாண்டர் இருந்த வீடு' பற்றிக் கதைக்கிறார்கள். அதைவிட குறும்படம் எடுக்க வந்தவருக்கு உதவிசெய்யவென்று நியமிக்கப்பட்டவர்கள்தாம் அந்த இருவரும். மேலும் பொன்ராசு பற்றி பழைய கோப்புக்கள் பார்த்து விவரத்தை உறுதிப்படுத்துகிறார்கள்.

படத்தில் காட்டப்படும் இயக்கம் விடுதலைப்புலிகளைச் சுட்டவில்லையென்பதும் வெறும் சப்பைக்கட்டுத்தான். தெளிவாகவே காலமும் இடமும் சொல்லப்படுகிறது. யுத்தநிறுத்த ஒப்பந்த காலத்தில் கனகராயன்குளம் புலிகளின் நிர்வாகப்பகுதிதான். அங்கிருக்கும் ஆயுதம் தாங்கியவர்கள் புலிகள் மட்டுமே.

BBQ பாட்டு முடியும் நேரத்தில் பொன்ராசுவைக் காணவரும் இயக்கத் தளபதிக்கிருக்கும் பாதுகாப்பு, குறைந்தபட்சம் ஒரு கேணல் தரத்தைக் காட்டுகிறது. உடனேயே அடையாளம் கண்டது ஒருபுறமிருக்க, அடுத்தகணமே பதினெட்டு வருசத்துக்கு முன்பு பழகியதுபோலவே 'என்னடா மச்சான்' என்று பேசத்தொடங்குவதும் இயல்பாகவே இல்லை.

கனகரயான்குளத்தில் கொலையாளி கைத்தொலைபேசியில் கதைக்கிறார். மறுமுனையும் வன்னிக்குள்தான் இருக்கிறது. வோக்கி ரோக்கியில் கதைப்பது போல் எடுத்திருக்க வேண்டிய காட்சியது.

கதையில் றிவோல்வர் வருகிறது. எங்காவது ஆவணமாகப் பத்திரப்படுத்தியிருந்ததைத் தூக்கிவந்துவிட்டார்களோ? அல்லது உண்மையில் புலிகள் தவிர்ந்த வேறு யாராவதுதான் கொலையாளிகளோ தெரியவில்லை. புலிகள்தான் என்று இயக்குனர் நினைத்திருந்தால் அவர்மனதில் இருக்கும் புலிகள் இயக்கம் எண்பதுகளுக்குப்பின் Update ஆகவில்லை போலுள்ளது.

_________________________________________
மேற்குறிப்பிட்டவற்றில் நிறைய விதயங்கள் பலருக்கு பொருட்படுத்தத் தேவைற்றவையாகவே இருக்கும். அவரவர் பார்க்கும் பார்வையில் மாறுபடும். என்வரையில் மணிரத்தினமோ புகழேந்தியோ எடுக்கும் படத்துக்கும் புதியவன் எடுக்கும் படத்துக்குமிடையில் வித்தியாசத்தை எதிர்பார்க்கிறேன். முன்னவற்றை ஒரு சினிமா என்றளவில் பார்ப்பதோடு பின்னதற்கு முட்டையில் மயிர்பிடுங்கிப் பார்ப்பேன்.

இந்தியர் ஒருவர் 'மண்' பார்ப்பது வேறு; நான் பார்ப்பதும் எதிர்பார்ப்பதும் வேறு.
அதுபோல் இந்தியர்களுக்கு 'மண்' காட்டுவது வேறு; எங்களுக்குக் காட்டப்பட வேண்டியது வேறு.

முடிவாக, ஈழத்தமிழ்ச் சமூகம் சார்ந்த இறுக்கமான பிரச்சினையை அடித்தளமாகக் கொண்டு அதைப்பற்றிப் பேசப்புறப்பட்ட(தாக நானும் பலரும் கருதும்) படம், சில தவறுகளாலும் இலக்கற்ற தன்மையாலும் வழமையான சினிமாப்படமாகிப்போனது.

_________________________________________
இந்தியாவில் ஜனரஞ்சக அந்தஸ்துடன் ஓடிய ஈழத்தமிழரின் முதலாவது திரைப்படம் இதுவென்று நினைக்கிறேன்.
பயணத்தில் தொடர்ந்து முன்னேற வாழ்த்து.

_________________________________________
ரெறறிஸ்ட் படத்தின் பின்னானவை போலவே, கொலையாளி சரணடையாத பட்சத்தில் 'மண்' படத்தின் தொடர்ச்சியாக நடப்பவை குறித்தும் திகிலூட்டும் படமொன்று எடுக்கலாம்.
கொலையாளி எப்பாடுபட்டாவது வன்னிக்குள்ளிருந்து தப்பவேண்டிய சூழ்நிலையில் நடப்பவை நிச்சயம் திகிலூட்டுபவையாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும். வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவரின் கொலை வன்னி நிர்வாகம்மீது ஏற்படுத்தும் அரசியல் பிரச்சினை, நிர்வாக நற்பெயர் இழுக்கு என்பவையும் சேர்ந்துகொள்ள நடக்கும் துரிதகதி விசாரணைகளும் தேடுதல்களும், பெரும்பாலும் முடிவில் நிகழப்போகும் இன்னொரு கொலையும் என்று ஒரு விறுவிறுப்புப் படம் பண்ணலாம்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________