Tuesday, February 13, 2007

வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -2

முந்திய நினைவு:
வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -1


[படத்திலிருப்பது முத்தையன்கட்டு குளக்கட்டுப்பாதையிலுள்ள வீரை மரம். மலைநாடானின் பதிவில் வீரை பற்றிக் கதைக்கப்பட்டது.]


முத்தையன்கட்டில் குறிப்பிடத்தக்க தொழில்களிலொன்று நன்னீர் மீன்பிடி. முத்தையன்கட்டுக்குளத்தில் வாடியமைத்து வள்ளம் வைத்து நன்னீர் மீன்பிடி நடக்கும். வலையில் 'ஜப்பான்' (பேச்சுவழக்கில் 'யப்பான்' என்பதால் இனி அப்படியே வரும்) எனப்படும் மீன்வகைதான் பிடிபடும். இது உருவத்தில் கிட்டத்தட்ட விளைமீன் போலிருக்கும். கறுப்பு நிறம் அதிகமாக இருக்கும். பொழுதுபடும் நேரத்தில் வலைபடுத்தால் விடியும்போது இழுத்துத் தெரிவார்கள். சிலர் பொழுதுபடும்போது தெரிவதுமுண்டு. பிற்காலத்தில் முத்தையன்கட்டுக்குளத்தில் பின்னேரச் சந்தை இருந்ததாக ஞாபகம்.


தூண்டில் போட்டு மீன்பிடிப்பவருமுண்டு. இதில் விரால், விலாங்கு என்பனவும் மாட்டுப்படும். தூண்டில் போடுவதைப் பலர் தொழிலாகச் செய்தாலும் சிலர் அதைப் பொழுதுபோக்காகச் செய்வதுண்டு. எங்கள் தரவளியள் அந்தவகைதான்.

யாழ்ப்பாணத்தாருக்கு குளத்துமீன் எண்டா அருவருப்புத்தான். வன்னியில வந்திருந்தவையும் தொடக்கத்தில அப்பிடித்தான். அதைப்பற்றிக் கதைச்சாலே சிலர் சத்தி வாறமாதிரி ஓங்காளிச்சுக் காட்டுவினம். பிறகு கொஞ்சப்பேருக்குப் பழகிப்போக, மிச்சாக்கள் இப்பவும் அப்பிடியேதான் இருக்கினம்.

வன்னி வந்த உடனயே நான் சூழலோட இயல்பாயிட்டன். எனக்குக் கிடைச்ச நண்பர்களும் சூழலும் அப்படி வாய்த்தது. குளத்துமீன் எனக்கொரு பிரச்சினையில்லை. கடல்மீனளவுக்கு உருசியில்லைத்தான் எண்டாலும் ஒதுக்கிற அளவுக்கு அதில எதுவுமில்லை.
கறிவைக்கும்போதுதான் சிக்கல் வரும். யப்பான்மீன் வெகுவேகமாகக் கரைந்துவிடும். வெட்டியமாதிரியே முறிகளுடன் சாப்பிடக்கூடியமாதிரி கறிவைச்சு முடிப்பது தனிக்கலை.


[இவர்கள் உண்மையில் வயிற்றுப்பாட்டுக்காகத் தூண்டில் போடுகிறார்கள்]
நாங்கள் அப்பப்ப குணங்கொள்ளேக்க தூண்டிலைத் தூக்கிக்கொண்டு மீன்பிடிக்கப் போவோம். வெளிநாட்டில தூண்டில் போடுறதை பெரிய பொழுதுபோக்கா செய்யிறதைப் பாக்கேக்க 'அட! இவங்களும் எங்கள மாதிரித்தான்' எண்டு நினைச்சுக் கொண்டேன்.
தூண்டில் கொண்டுபோறோமோ இல்லையோ றேடியோ கொண்டு போகவேணும். ஏனெண்டா அதுதான் பொழுதைப் போக்கும். நான் ஏதாவதொரு புத்தகத்தையும் கொண்டு போவன்.
துண்டிலுக்குரிய புழுப்பிடிக்கிறது பெரிய வேலை. மண்புழு தான் நாங்கள் பிடிக்கிறது. நினைச்சமாதிரி புழுப்பிடிக்கிறது சின்ன வேலையில்ல. அதைத் தேடிப்போனா எதுவும் கிடைக்காது. ஆளாளுக்கு சின்ன டப்பாவோட கல்லுப்பிரட்டிக் கொண்டிருப்பம் புழுக்களைத் தேடி. எனக்குக் கடைசிவரை புழுப்பிடிக்கிற கலை கைவரேல. அதுவழிய திரியிற சின்னப் பெடிபெட்டையள் பிடிச்சுத் தருவாங்கள். எனக்கு ரெண்டுமூண்டு வட்டனுகள் கிடைச்சாங்கள். பத்து போளைக்கு ஒரு டப்பா புழு எண்ட கணக்கில புழுக்கள் வரும்.

புழுப்பிடிக்கிறது மாதிரித்தான் மீன்பிடிக்கிறதும். எனக்குத் தூண்டில் போட்டுப் பழக்கினவர் சொன்னார்:
"தக்கயப் பாத்துக்கொண்டிரு; அது அங்க இஞ்சயெண்டு சாதுவா ஓடத்தொடங்கினா சடாரெண்டு கம்பை ஒரு வெட்டு வெட்டு; மீன் மாட்டுப்பட்டிடும்" எண்டு.
முதல்நாள் அவரோடயே இருந்து ஒருமணித்தியால் தூண்டில்போட்டன். ரெண்டோ மூண்டுதரம் தக்கை ஆடிச்சு. ஆனா மீன் மாட்டுப்படேல. நான் தூண்டில வெட்டுறது சரியில்லையெண்டார். மூண்டுநாள் மினக்கெட்டன். ஒருமீனும் மாட்டுப்படேல. நல்ல தெளிவான தண்ணியில எல்லாம் வடிவாத் தெரியும். தூண்டிலுக்கு நேர மீன்கள் வரும். அதுவும் கூட்டமா வரும். தூண்டிலிலயிருந்து ரெண்டிஞ்சி தூரத்தில வந்து மணந்துபாக்கிற மாதிரிப் பாத்துக்கொண்டிருந்திட்டுப் போயிடும்.
நான் ஒருவிசயத்தை யோசிச்சன். நான் கரையில இருக்கிறது மீன்களுக்குத் தெரியுது; அதாலதான் அலேட் ஆகி ஓடுது எண்டு நினைச்சன். உடம்பை மறைக்க படுத்திருந்து தூண்டில்போட்டன். நானிருந்தது ஒரு பிட்டியெண்டபடியா அது இலகுவாக இருந்தது.
சொன்னா நம்ப மாட்டியள்! நான் பிடிச்ச முதலாவது மீன் படுத்திருந்து பிடிச்சதுதான்.

அதுக்குப்பிறகு மீன்பிடிக்கிறது கொஞ்சம் பழகீட்டுது. நண்பர்கள் எல்லாரும் கொஞ்ச கொஞ்ச இடைவெளி விட்டு ஒவ்வொரு மூலையிலயோ பிட்டியிலயோ நிண்டு தூண்டில் எறிவம். ஒருத்தனுக்கு மீன் பிடிபட்டா எல்லாரும் அங்கபோய் போடுவம். மீன்பிடிக்கிறமோ இல்லையோ நல்லாப் பொழுது போகும்.

தூண்டிலை நோக்கி மீன்களை வரவைக்க சாப்பாடு போடுவம். பாண்துண்டுகள், சோறு, தோசைத்துண்டுகள் எண்டு சிலதுகளை தூண்டில் முள்ளடியில எறிவம். மீன்கள் நிறைய வரும். ஆனா தூண்டிலில இருக்கிற புழுவைமட்டும் விட்டிட்டு நாங்கள் போட்ட சாப்பாட்டைத் திண்டிட்டு 'தண்ணி' காட்டீட்டுப் போயிடுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கனநாளைக்குப்பிறகுதான் சுகமா மீன்பிடிக்கிற இன்னொரு வழிமுறை தெரியவந்தது. அது வாய்க்காலில மீன்பிடிக்கிறது. போகச்செய்கைக்கு தண்ணீர் திறந்துவிட்டா அதோட நிறைய மீன்களும் வரும். சிலர் என்ன செய்வினமெண்டா வாய்க்கால் ஒடுங்கிப்பாயிற இடத்தில சின்னதா ஒரு வலைவைச்சு அதால பிடிப்பினம். போக் ஒண்டுக்கால தண்ணி வந்து பாயிற இடத்தில நாங்களும் அப்பிடிப் பிடிக்க வெளிக்கிட்டு வலைகிடைக்காததால சாறத்தைப் பாவிச்சம். எங்களில ஒருத்தனின்ர சாறத்தை விரிச்சுவைச்சு ஒருக்கா கோலி எடுத்ததில நாலோ அஞ்சோ வந்துது.
'இஞ்ச தண்ணி அகண்டுபோகுது; போக்குக்குக் கிட்டவாப் போய் போடுவம்' எண்டு ஒருத்தன் சொல்ல ரெண்டாம்தரம் குழாய்க்குக்கிட்டவாய்ப் போய் சாறத்தை விரிச்சம். தண்ணி சாறத்தைக் கிழிச்சுக் கொண்டு போட்டுது.

[இது படத்தை வலப்பக்கம் தள்ள]


இரவு நேரத்தில தண்ணிபாயிற மதகில அரிக்கன் லாம்போட சிலர் இருப்பினம். தண்ணிவெளியேறிற பக்கத்தில லாம்பை தண்ணிக்குக் கிட்டவாப் பிடிக்க வேணும். மதகு தாண்டிவாற மீனெல்லாம் தண்ணியை எதிர்த்தபடி லாம்புவெளிச்சத்தில குமிஞ்சு நிப்பினம். இதைப்பற்றிக்கூட ஆராய்ச்சி செய்திருக்கிறம். மீன்கள் இயல்பாகவே மதகுதாண்டிவந்து தண்ணியை எதிர்த்து குமியுமா? அல்லது லாம்பு வெளிச்சத்துக்காகத்தான் அப்பிடிக் குமியுதா எண்டு வாதிச்சிருக்கிறம். மதகடியில லாம்பில்லாமல் ரோச்லைட் அடிச்சு, மதகில்லாத சாதாரண வாய்க்காலி்ல் லாம்பு வைச்சு, பகலில அதே இடங்களில மீன்கள் குமியுதா இல்லையா எண்டெல்லாம் சில பரிசோதனைகள் செய்திருக்கிறம். [நாயாத்தில வேற நண்பர்களோட இறால் பிடிக்கப்போகேக்கயும் இப்பிடி வாதம் வந்தபோது அவைக்கு விளங்கப்படுத்த எனது முந்திய பரிசோதனைகள் கைகுடுத்தன.]

வெளிச்சத்தில குமிஞ்சிருக்கிற மீன்களை அடிச்சுப்பிடிப்பினம். ஒரேயடியில நாலைஞ்சு மீன்கள் கிடைச்சாலும் கிடைக்கும். அடிபட்ட மீன் தண்ணியோட போகாமல் அங்கால ஒருத்தர் நிண்டு பிடிக்கவேணும். அனேகமா தடியாலதான் அடிப்பினம். ஓரிடத்தில தென்னம்பாளை பாவிக்கிறதைப் பார்த்திருக்கிறன். கற்சிலைமடுவில சிலர் வாளால வெட்டிறதைப் பாத்திருக்கிறன். கொஞ்சம் பெரிய மீனா வந்திட்டா வாளால ஒரே வெட்டுத்தான். அது சிலநேரம் ரெண்டுதுண்டாக்கூடப் போகும். 'உதென்ன விசர்வேலை பாக்கிறாங்கள்?' எண்டு நினைச்சதுண்டு.

[முத்தையன்கட்டுக்குளத்தின் கிளைவாய்க்காலொன்று]
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எல்லாத்தையும்விட சுகமான மீன்பிடிக்கிற முறையொண்டிருக்கு. அதுதான் வத்தின குளத்தில மீன்பிடிக்கிறது. 'குழம்பிய குட்டையில் மீன்பிடித்தல்' எண்டு இதைத்தான் சொல்லிறவை போல.
தண்ணி வத்திக்கொண்டுபோற நேரத்தில குளத்திலயோ மோட்டையிலயோ மீன்பிடிக்கிறது லேசான வேலை. அதுவும் எருமைகள் இறங்கி சேறடிச்சு வைச்சா அந்தமாதிரியிருக்கும். வெயில் நேரத்தில சேத்துக்கு மேல்மடத்தில விரால், விலாங்கு எல்லாம் மினுங்கிக்கொண்டிருக்கும். தண்ணியில ஓடுறமாதிரி அவையால தப்பியோடவும் முடியாது.
அப்பிடி வத்தின குளத்தில மீன்பிடிச்ச ஒரு சுவாரசியமான சம்பவம் இனி வருகிறது.

முத்தையன்கட்டுக்குப் பக்கத்தில புளியங்குளம் எண்டு ஓரிடம் இருக்கு. இது 'ஜெயசிக்குறு' புகழ் புளியங்குளமில்லை. அது கண்டிவீதியில இருக்கு. இது ஒட்டுசுட்டானிலயிருந்து முள்ளியவளை வாற றோட்டில கொஞ்சத் தூரத்தில வரும். புளியங்குளம் எண்ட குளத்தை மையமாக வைச்சுத்தான் அந்தக் கிராமத்துக்கு இந்தப்பேர். இதுவும் முத்தையன்கட்டுக் குளத்துக்குரிய நீர்ப்பாசனப் பகுதிதான்.
அந்தக்குளத்தில நிறைய மீன்கள் இருக்கும். 1997 இல தண்ணிவத்தின கோடையில அந்தக் குளத்துமேல ஒரு தாக்குதல் நடத்தினோம். வேறென்ன? மீன்பிடிக்கிற தாக்குதல்தான்.

வழமையாகவே அந்தக்குளம் எருமைகளின் குளம். அந்தச் சுற்றுவட்டார எருமைகளெல்லாம் அந்தக்குளத்திலதான் பிரண்டெழும்புங்கள். தண்ணிவத்திக்கொண்டு போற காலத்தில சொல்லத் தேவையில்லை. தண்ணிதேங்கி நிண்ட சிறுபகுதி முழுவதையும் சேறடிச்சு வைச்சிருந்துதுகள். வெயில்நேரத்தில சேத்துக்கு மேல மினுமினுத்துக்கொண்டிருக்கிற விலாங்குகள் வேற ஆசையை இன்னும் தூண்டிவிட்டுதுகள். அந்தக்குளத்தில முதலை இல்லை எண்டதை ஏற்கனவே கனபேரிட்ட கேட்டு உறுதிப்படுத்தியிருந்தம். இனி இறங்கவேண்டியதுதான் மிச்சம்.

'விலாங்கு லேசில கையில அம்பிடாது. வழுக்கிக்கொண்டு போகும்; அதைப்பிடிக்கேக்க பாம்பைப் பிடிக்கிறமாதிரியொரு உணர்வு வரும்; பயப்பிடக்கூடாது; அரியண்டப்படக்கூடாது; பிடிச்சுப்பிடிச்சு கரைக்கு எறியவேண்டியதுதான்'
எண்டு திட்டங்கள் விளங்கப்படுத்தி அணி தயாராயிட்டுது. அந்த அணியில நான்தான் இளையவன். எண்டாலும் வளத்தி எண்டபடியா கூட்டத்தில சேத்திருந்தாங்கள். கரையில நாலுபேர் நிக்க நாங்கள் நாலுபேர் சேத்துக்க இறங்கிறதெண்டு முடிவாயிட்டுது. தூரத்திலயிருந்து பாக்க எதுவும் தெரியேல. ஆனா கிட்டவரேக்கதான் குளத்தின்ர நாத்தம் மூக்கை அடிச்சுது. ஏற்கனவே மீ்னகள் செத்துக்கிடந்தது தெரிஞ்சுது. குளத்தில தண்ணியே இல்லை, வெறும் சேறுதான். சேறடிச்ச வயல்மாதிரி கறுத்த நிறத்தில கிடந்தது.
நடுவில கொஞ்ச இடத்தைவிட்டு சுத்திவர எருமைகள் படுத்துக்கிடந்தன. ஒருபக்கத்தில கிடந்த எருமைகளை கஸ்டப்பட்டு எழுப்பிக் கலைச்சம். எழுப்பிக்கலைச்சதில ஏற்கனவே சேறாக்கிடந்த இடம் இன்னும் நல்லாப் பதப்பட்டிருந்திச்சு;-).
அந்தப்பாதையாலதான் உள்ள இறங்கவேணும்.

சேறையும் நாத்தத்தையும் நினைச்சா ஒருமாதிரியிருந்திச்சு. உதைப்பாத்தா முடியுமோ? நாலுபேரும் சேந்து இறங்கினம். முழங்காலளவு சேத்திலயே கையால துலாவி ரெண்டு மூண்டு விலாங்கு பிடிச்சாச்சு. எண்டாலும் நடுவிலதான் நிறைய விலாங்குகள் மினுங்கிக் கொண்டிருந்தன. இன்னும் முன்னேறினோம். ஆனா நினைச்சமாதிரியில்லை. ஒரு காலடி எடுத்துவைக்கவே நிறைய கஸ்டப்பட வேண்டியிருந்தது. அடியில் அப்படியான சதுப்பு. புதைந்த காலை மேலே இழுக்க உன்னினால் மற்றக்கால் இன்னும் அதிகம் புதையும்.
இப்போது இடுப்பளவு சேத்தில் நிக்கிறோம். மீன்கள் மாட்டுப்பட்டன. ஆனால் ஓரடிதானும் எடுத்துவைக்க முடியாது. பிடித்தமீனை கரைக்கு எறியிறதுக்குக்கூட முடியாத நிலை. ஒருகாலை எடுத்துவைச்சு பின்பக்கம் திரும்ப முடியாது. ஏற்கனவே அப்பிடி திரும்பின நிலையில நிக்கிற ஒருத்தனிட்ட குடுக்க அவன் கரைக்கு எறிவான். ஆனா அவனின்ர எறி கரைக்குப் போகாது. ரெண்டுகாலும் வேர் விட்டமாதிரி நிண்டுகொண்டு என்னெண்டு கனதூரம் எறியிறது? எறியிறதெல்லாம் கரையிலயிருந்து பத்தடி பதினைஞ்சடி தூரத்தில விழுந்துது. சின்னமீன்கள் மட்டும்தான் கரைக்குப் போயின.

கரையில நிண்டவங்கள் நாலுபேரும் நல்ல நோனாக்கள். எறிஞ்சமீனுகளை சேத்துக்க இறங்கி எடுக்கமாட்டாங்களாம்.
'இன்னும் கொஞ்சம் வீச்சா எறி' எண்டு கொமாண்ட் வேற. நாங்கள் படுற பாட்டைப்பாத்துச் சிரிச்சுக்கொண்டும் நிக்கிறாங்கள். நடுவில நிண்ட நாலுபேருக்கும் ஆத்திரம் ஒருபக்கம்; எப்பிடித் திரும்பிப் போறதெண்ட யோசினை ஒருபக்கம். கால்கள் சோர்ந்து போச்சு. நாரி கடுத்தது. நாலுபேரும் ஒண்டாச் சேந்து திரும்பினம். ஒருவரையொருவர் மாறிமாறி இழுத்தெடுத்து கரைக்கு வந்து சேர்ந்தாச்சு. நோனாக்கள் நாலுபேரையும் பிடிச்சு சேத்துக்குள்ள உருட்டிப்பிரட்டிப் போட்டுத்தான் கூட்டியந்தம். இப்ப நாத்தமொண்டும் அடிக்கேல. கிட்டத்தட்ட ஒரு உரைப்பை விலாங்கு பிடிச்சிருந்தம். தடியில கொழுவிக் காவிக்கொண்டு வந்தம்.

மீன்கறியில சேத்துநாத்தம் வருதெண்டீச்சினம். முழுமீனும் குப்பைக்குத்தான் போனது. எங்களிலயும் நாறுது எண்டினம். நல்லவேளை குப்பையில போடேல. ஆனா அதைவிட கொடுமை நடந்தது. மூண்டுநாளா யாருமே எங்களை அண்டேல. அந்தளவுக்கு நாறினோமாம். ஆனா எங்களுக்கு எந்த நாத்தமும் தெரியேல.
சவுக்காரம் நெருப்பு விலை விக்கேக்க டெற்றோல் போட்டுக் குளிச்சம். பிரியோசினமில்லை.
ஒரு மனுசன்ர கதையக்கேட்டு சாம்பல் போட்டு பொச்சுமட்டையால உரஞ்சிக் குளிச்சம். ஓரளவு பயனிருந்தது.
நானெண்டாலும் பரவாயில்லை. எங்களில ஒருத்தனை வீட்டுக்குள்ளயே விடேல. அவன்ர வீட்டுப் பின்பத்தியிலயே உடுப்பெல்லாம் தூக்கிப்போட்டு அங்கயே சிங்கனுக்குச் சாப்பாடெல்லாம் வச்சுவிட்ட கொடுமை நடந்தது.

எங்களுக்கு இண்டைவரைக்கும் விளங்காத விசயமென்னெண்டா, அதே குளத்துச்சேத்தில நாள்முழுக்கக் கிடக்கிற எருமைகளை அண்டிற சனம், அதுகளிலயிருந்தே பாலெடுத்துப் பாவிக்கிற சனம், எங்களுக்கு மட்டும் ஏன் இப்பிடி கொடுமை செய்தது எண்டதுதான். அந்த மூண்டுநாளா கவட்டுக்கயும் காலிலயும் சொறிசொறியெண்டு சொறிஞ்சு வந்த வேதனையை விட இதுதான் அதிக வேதனை.


[பதிவுக்கும் இந்தப்படத்துக்கும் நேரடியாத் தொடர்பில்லை. ஆனா முத்தையன்கட்டுப் பற்றிச் சொல்ல வந்திட்டதால இப்படம் பொருத்தம்தான். இது முத்தையன்கட்டுத் தவறணைகளில ஒண்டு.]
(பிளா பற்றித் தெரியாத அம்மணியள் பாத்துத் தெரிஞ்சு கொள்ளுங்கோ)
_______________________________
படங்களுக்கு நன்றி: அருச்சுனா

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"வன்னி ->முத்தையன்கட்டு - சில நினைவுகள் -2" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (13 February, 2007 12:24) : 

கடசியா எழுதின இந்தப்பதிவுதான்.
தமிழ்மணத்தில சேர்க்க வந்தா, புதிய இடுகைகள் எதுவுமில்ல எண்டு வந்துது.
கொஞ்சநேரத்தில தானாகவே திரட்டிப்போட்டுது. நான் வகைப்படுத்தவுமில்லை.

ஆனா இந்தப்பதிவு முன்னுக்கு வராமல், எழுதி ரெண்டுவருசமாகப்போற சந்திரமுகிப் பதிவுதான் கடசிப்பதிவாத் திரட்டப்பட்டிருக்கு.
தமிழ்மணத்திரட்டிக்குக்கூட நட்சத்திரங்களைத்தான் பிடிக்குதுபோல;-(
இல்லாட்டி சுமார் இருநூறு பதிவுகள் முன்னுக்குப்போய் 'ரஜனியின் விஸ்வரூபம்' பதிவைக் கொண்டந்திருக்குமோ?

இதுக்கு அடுத்ததாயும் பழைய பதிவுகள் ரெண்டுதான் வந்திருக்கு.
இப்ப கடசியா எழுதின பதிவு நாலாவதாகத்தான் வந்திருக்கு.

இது ஏற்கனவே எனக்கு வந்த சிக்கல்தான். மற்றவர்களுக்கும் வந்திருந்தது.
இன்றுகாலை முகமூடியின் பழையகிடங்கு கிளறப்பட்டிருந்தது.
இது ஏன் நடக்கிறது?
வலைப்பதிவில் லேபிள் இடும் வேலை நடைபெற்றால் இப்படியொரு கிளறல் நடப்பதாக நான் கருதுகிறேன்.

 

said ... (13 February, 2007 12:28) : 

எழுதிக்கொள்வது: கானா.பிரபா

பதிவை ரசித்தேன், இதைதான் உம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்,

 

said ... (13 February, 2007 15:24) : 

வசந்தன் நேற்று எனக்கும் உதே மாதிரி தான் நடந்திச்சு. பழைய பதிவுகளை எல்லாம் வகைப்படுத்த சொல்லி கெட்கப்பட்டது. பழைய பதிவுகளையே முன்னுக்கும் காட்டியது தமிழ்மணம்....

முத்தையன் கட்டு மீட்டல் நல்லா இருக்கு.

 

said ... (13 February, 2007 16:42) : 

அப்ப நீங்கள் உயரமான ஆளோ??

ம் ம்...நான் ஒரேயொருநாள் சன்னதி கோயிலுக்குப் பின்புறமா ஒரு இடம் (.பெயர் தெரியேல்ல) அங்க தூண்டில் இருக்கும்.அதிலதான் தூண்டில் போட்டனான் ஆனால் ஒரு மீன் குஞ்சு கூடப் பிடிக்கேல்ல.

பிறகு முன்னேஸ்வரம் போனபோது இறால் பண்ணைக்குப் போனம் அங்கதான் சும்மா பக்கத்தில நின்ற இறாலைத் தூக்கி அங்கால விட்டனான்.

போன கோடை விடுமுறைல வேலை செய்யும்போது மறக்கமுடியாத ஒரு சம்பவம்.விடுமுறைக்கு மீன்பிடிக்கப்போறது இங்க பொழுதுபோக்கு அப்பதான் ஒருநாள் மீன்பிடிக்கப் போனான்.என்ன பிடிச்சனான் என்று கேக்காதங்கோ.

 

said ... (13 February, 2007 22:24) : 

கானா பிரபா,
//பதிவை ரசித்தேன், இதைதான் உம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்,//

அப்பிடியோ?
ஆனா அற்புதன் அண்ணையிட்டதான் வேண்டிக்கட்ட வேணும்.
__________

ஜெயச்சந்திரன்,

ம். கனபேருக்கு இந்தச்சிக்கல் வருது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (13 February, 2007 22:39) : 

முத்தயன் கட்டுக் கட்டுரைக்கு படம் வேணுமெண்டால் சொல்லும். பிரத்தியேகப் படங்களை அனுப்பி வைக்கிறன். (ஆனா அதில நான் நிற்பன்.)

 

said ... (14 February, 2007 01:53) : 

\\அப்பிடியோ?
ஆனா அற்புதன் அண்ணையிட்டதான் வேண்டிக்கட்ட வேணும்.\\

:-) ena ellarum avari nakalladikira maathiri iruku ha?? avar sonathu unmaithane!

 

said ... (14 February, 2007 15:18) : 

ஜெயச்சந்திரன்,
கேட்காமல் விட்டிட்டின்,
அந்தப்பிரச்சினை வரமுதல் நீங்கள் உங்கட பதிவுகளுக்கு லேபிள் போட்டனியளோ?

எனக்கு நடந்த ரெண்டு சந்தர்ப்பத்திலயும் நான் பதிவு போடமுதல் சில பதிவுகளுக்கு லேபிள் போட்டனான்.
அதாலதான் பதிவுகள் கிளறுப்படுது எண்டு நினைக்கிறன்.


சினேகிதி,
பெரிசா உயரமெண்டில்லை.
இப்ப 5'10''.
ஆனா சின்னனில என்னொட்ட வயசு ஆக்களுக்குள்ள உயரம்.
ஆனா சரியான மெல்லிசு.
2001 இல 5 அடி 7 அங்குலமாவது இருந்திருப்பன். ஆனா நிறை அறுபதுக்குள்ளதான் இருந்தன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (14 February, 2007 16:38) : 

சயந்தன்,
ஏற்கனவே அந்த 'நெத்தலிப் பயில்வான்' படத்தை என்ர வலைப்பதிவில போட்டிருந்தேனே?
அதவிட வேற படங்கள் இருக்கோ?

(ஹிஹி.... அந்த நேரத்தில நானும் அப்பிடித்தான் செத்தலா இருந்திருப்பன். ஆனா நெடுவலா இருந்திருப்பன்.)

 

said ... (14 February, 2007 20:21) : 

பதிவு நல்லாயிருக்கு.
படங்கள் அதைவிட நல்லாயிருக்கு.
அதுவும் கடைசிப்படம் தூக்கலாயிருக்கு.

kannan.

 

said ... (17 February, 2007 05:44) : 

ஐய்யோ வசந்தன்,
உயிர்க்கொலை பாவம் எல்லோ?
அதையெல்லாம் இப்பிடி ரசிச்சு சொல்லுறியள்.
:))

வன்னிக்குள்ள இருந்தா நல்ல புது அனுபவம் எல்லாம் கனக்க கிடைக்கும் போல,
எனக்கு மிக நெருங்கின ஒரு நண்பரும் பல வருடம் வன்னிக்குள்ள இருந்திட்டு வந்தவர்.
நிறைய கதை கதையா சொல்லுவார்.

இராவணன்

 

said ... (17 February, 2007 21:30) : 

கண்ணன், இராவணன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உயிர்க்கொலை பாவமென்று யார் சொன்னது?

 

said ... (22 February, 2007 11:29) : 

அப்ப வந்த நாத்தம் இன்னும் போகேலயோ?
இப்பவும் பதிவு நாறுது?

சித்தன்.

 

said ... (01 March, 2007 03:41) : 

அந்த வன்னி வாழ்க்கை சொர்க்கம் தான்

 

post a comment

© 2006  Thur Broeders

________________