Thursday, December 07, 2006

மிதிவெடி செய்வது எப்படி?

எல்லாரும் அதுசெய்வது எப்படி? இது செய்வது எப்படி? எண்டு தொடர்ச்சியாகப் பதிவுபோட்டு இப்பதான் ஓய்ஞ்சுபோய் கிடக்கினம்.
மணிமேகலைப் பிரசுரத்துக்கே உரிய இந்தத் தலைப்புக்களைக் களவெடுத்துப் பதிவெழுதியதன்மூலம் அப்பிரசுரக்காரருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவென்று சரியாத்தெரியேல.

இப்ப நீங்கள் எழுதிறதுக்கு முன்பே நானும் "எப்படி?" எண்ட தலைப்பில பதிவுகள் எழுதியிருக்கிறன்.
நான் முந்தி இப்படி எழுதின பதிவொண்டை இப்ப மீள்பதிவாக்கலாம் எண்டு நினைக்கிறன்.
'வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?' எண்டு போன பதிவில எழுதினன்.
இப்ப வேற ஒரு 'எப்படி?ப்' பதிவு.

பதிவில் புதிதாக ஏதுமில்லை. "எப்படி?" என்ற தலைப்பில் ஒரு பதிவுபோட வேண்டுமென்பதால் மீள்பதிவுமட்டுமே.
_____________________________________

உங்களுக்கு மிதிவெடியைத் தெரியுமா?
அதைப் பார்த்திருக்கிறீர்களா?
மதிவெடிகளுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எனக்கு மிதிவெடி முதன்முதல் அறிமுகமானது யாழ்ப்பாணத்தில் 1993 இன் இறுதிப்பகுதியில். மானிப்பாயிலிருந்து யாழ்நகர் நோக்கி வரும்போது, ஆனைக்கோட்டை முடிவில், உயரப்புலச் சந்தியில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது ஞாபகமிருக்கிறதா? அதன் பெயரை யாரும் மறந்துவிட முடியாது. 'சும்மா ரீ ரூம்' (SUMMA TEA ROOM) என்பதுதான் அவ்வுணவகத்தின் பெயர். அதன் பெயரே ஒரு கவர்ச்சியான விசயம்தான். நானறிந்ததிலிருந்து என் அப்பா அம்மா காலத்திலேயே அது பிரபலமான பெயர்தான். மிகச்சிறிய கடைதான். வீதிக்கரையிலிருந்ததால் அதன்வழியால் போய்வரும் எவரையும் வாயூற வைத்துவிடும். யாழ்பபாணத்திலுள்ள மற்ற எந்த உணவகங்களையும்விட அது வித்தியாசமானது. அதிகமான கடலுணவுகள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். இறால், கணவாய், சிங்கிறால், நண்டு என்று விதம்விதமான கடலுணவுப் பொரியல்களும் கறிகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். நாவாந்துறையும் காக்கைதீவும் அருகிலிருந்தது அதற்கு வசதியாக இருந்தது. பின்னேரத்தில அந்தக்கடை வலுகலாதியா இருக்கும். கடையோட சேத்தே ஒரு 'பார்' இருந்ததும், கொஞ்சம் தள்ளி பிரபலாமான 2 தவறணைகள் இருந்ததும் அதுக்குக்காரணம்.

சரி. கதைக்கு வருவோம். எனக்கு மிதிவெடி அறிமுகமானதும் இந்த 'சும்மா ரீ ரூமில்' தான். என்ன குழப்புகிறேனா? மதிவெடி எண்டா ஒருவகைச் சாப்பாடு. அதைத்தான் சொல்ல வந்தேன். நாங்கள் வழமையாகச் சாப்பிடும் 'றோல்' வகையைச் சேர்ந்தது. சற்றுப்பெரியது. உள்ளே கூடுதலான கலவைகள் இருக்கும். கட்டாயம் அவித்த முட்டையின் கால்வாசியோ, அதைவிடச் சற்றுப் பெரிய துண்டோ இருக்கும். இரண்டு வாங்கிச் சாப்பிட்டுவிட்டாலே ஒரு நேரச் சாப்பாடு நிறைந்துவிடும். இதுதான் மிதிவெடி.

ஒருநாள் உதைபந்தாட்டப் போட்டியொன்றைப் பார்த்துவிட்டு வரும்போது நண்பனொருவன் (இவன் உயரப்புலத்தில் அந்த சும்மா ரீ ரூமுக்கு அருகில்தான் வசிப்பவன்) சொன்னான் இந்த மதிவெடியைப் பற்றி. அப்போது நாங்களறிந்த மிதிவெடியென்பது கால்நடைகளின் (மனிதர்களும் இதற்குள் அடக்கம்) கால்களைப் கழற்றும் சிறுகண்ணிவெடிகள்தான். அப்போது மிதிவெடி என்ற சிற்றுண்டியைப் பற்றிக் கதைத்தபோது எல்லோரும் சிரித்தோம். இப்படி நாலைந்துமுறை அவன் சொல்லிவிட்டான். ஒருநாள் நக்கல் தாங்காமல் அவனே தான் மதிவெடி வாங்கித்தருவதாகச் சொல்லிக் கூட்டிச்சென்றான். காசைத்தந்து 3 மிதிவெடி வாங்கச்சொல்லி எங்களக் கேட்டான். மிதிவெடி எண்டு கடையில கேட்டு அடிவாங்க வைக்கத்தான் இவன் பிளான் போடுறான் எண்டு நினைச்சு அவனையே வாங்க வைச்சோம். உவன் மிதிவெடி எண்டுதான் கேக்கிறானோ எண்டத உறுதிப்படுத்த நான்தான் கூடப்போனன். என்ன ஆச்சரியம்! மிதிவெடி எண்டுதான் கேட்டான். அவங்களும் தந்தாங்கள். அண்டைக்கே அதின்ர சுவைக்கு அடிமையாயிட்டம். பொருளாதார அடிப்படையிலயும் மலிவாகத்தான் இருந்திச்சு. அப்ப ஒரு மதிவெடி 10 ரூபா. ஏறத்தாள 12 வருசத்துக்குப்பிறகு 5 அல்லது 7 ரூபாதான் அதிகரிச்சிருக்கு. இந்த மிதிவெடிக் கதையை நாங்கள் ஏலுமான அளவுக்குப் பரப்பினம். அப்பிடியும் கனபேர் நம்பேல.
----------------------------------------------------
ஒரு முக்கியமான 'எதிரி'ப்பாடசாலையுடனான உதைபந்தாட்டப்போட்டி அன்று நடந்தது. அதில் வென்றால் 500 ரூபா தருவதாக எங்கள் பாடசாலையின் பரமவிசிறியொருவர் சொல்லியிருந்ததால் ஒருமாதிரிக் கஸ்டப்பட்டு வெண்டாச்சு. 500 ரூபாயும் கிடைச்சிட்டுது. வழமையா இப்பிடிக் காசு கிடைச்சா யாழ்நகருக்குள்ளயே ஏதோ ஒரு கூல்பாருக்க பூந்து காசைக்கரைக்கிறதுதான் வழமை. அண்டைக்கு ஒருத்தன் சொன்னான் உந்த மதிவெடிப்பிரச்சினையை இண்டைக்குத் தீர்ப்பமெண்டு. சரியெண்டு வாயையும் வயித்தையும் கட்டிக்கொண்டு சும்மா ரீ ரூம் வந்தாச்சு. 25 மதிவெடி தரச்சொல்லிச் சொன்னம். ஆனா அங்க இருந்தது வெறும் 10 தான். சரியெண்டு அவ்வளவத்தையும் வாங்கி பங்குபோட்டுச் சாப்பிட்டம். விசாரிச்சதில வழமையா 20 அல்லது 25 மதிவெடிதான் ஒருநாளைக்குப் போடுறது எண்டார் கடைக்காரர். அதாவது அந்தநேரத்தில் மதிவெடிக்கான வாடிக்கையாளர் அவ்வளவுதான். அது பிரபலமாகாத காலம்.

நானறிய யாழ் நகருக்குள்ள இந்த மிதிவெடிக்கலாச்சாரம் வரவே நீண்டகாலம் எடுத்திச்சு. பிறகு இடப்பெயர்வோட வன்னிக்கும் வந்திட்டுது. வன்னி தாண்டியும் அது போயிருக்கும் எண்டதில ஐயமில்லை. ஆனா கடைக்குக் கடை அதின்ர தரம், சுவை, விலை எல்லாம் மாறத்தொடங்கீட்டுது. அதின்ர பெயர்தான் மாறேலயே ஒழிய அடிப்படைக் கட்டமைப்பு ஆளாளுக்கு மாறிப்போச்சு.
------------------------------------------------------
சரி. ஏன் இந்தப் பேர் வந்தது? எனக்குச் சரியாத் தெரியேல. இது சம்பந்தமா பெடியளுக்குள் அடிக்கடி கதைச்ச ஞாபகம் வருது. அப்பவே 'சும்மா ரீ ரூம்' முதலாளி அன்ரனிட்டயே கேட்டிருக்கலாம். அவர்எங்கயிருந்து இதை அறிஞ்சார் எண்ட விவரங்கள் சேகரிச்சிருக்கலாம். எல்லாம் தவற விட்டாச்சு. ஒரு கவர்ச்சிக்காகத்தான் அந்தப்பேர் வந்திருக்கலாம். சனங்களுக்குப் போர் சம்பந்தமான சொற்களை தங்கட வாழ்க்கையில பாவிக்கிறது வழமையாயிருந்திச்சு. தங்கட சைக்கிளுக்கோ, மோட்டச்சைக்கிளுக்கோ குண்டுவீச்சு விமானங்களின்ர பேரை வைக்கிறது, ஆக்களுக்குப் பட்டப்பேர் வைக்கேக்ககூட ஆயுதங்களின்ர கடற்கல, வான்கலப் பெயர்களை வைக்கிறது எண்டு வழமை இருந்திச்சு. அதின்ர ஒரு தொடர்ச்சியா இந்த மதிவெடியும் வந்திருக்கலாம். சந்திரிக்கா சாறி, ரம்பா ரொட்டி, நதியா சாறி போல, குமரப்பா குண்டு, கடாபி ரொபி எண்டும் எங்கட சனத்திட்ட பெயர்கள் உலாவினது.

இன்னொண்டும் ஞாபகம் வருது. வெளியிற் கழிக்கப்பட் மலத்தையும் மிதிவெடி எண்டு சொல்லிற வழக்கம் இப்பவும் இருக்கு. ஆனா அதுக்கு வலுவான காரணமிருக்கு. ஆனா இந்தச் சிற்றுண்டிக்கு???
ஆருக்காவது தெரிஞ்சாச் சொல்லுங்கோ.
***************
மூலப்பதிவு
***************


Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மிதிவெடி செய்வது எப்படி?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (07 December, 2006 15:23) : 

எழுதிக்கொள்வது: சிந்தாநதி

மிதிவெடி செய்வது எப்படின்னு தலைப்பு

மிதிவெடி சாப்பிடுவது பற்றி தான் பதிவு

எப்படி செய்வதுன்னு விளக்குங்களேன்.

10.17 7.12.2006

 

said ... (07 December, 2006 19:31) : 

உந்த மிதிவெடி நானும் சாப்பிட்டிருக்கிறன்

 

said ... (08 December, 2006 03:49) : 

ஞாபகப்படுத்தாதங்கோ. வயிறு பத்தி எரியுது. இங்க ஒரு கடையிலயும் இப்ப அது இல்ல. முட்டை 60 க்கு வாங்கி அதுக்குள்ள வைக்கேலுமோ எண்டு ஒரு கடைக்காரரும் செய்யிறேல்ல. கடைசியா திறம் மிதிவெடி தின்னவேலி சந்தி கடையில 25 ரூபாக்கு சாப்பிட்டது (யூலையில). அதுக்கு பிறகு இல்லை.

சிந்தாநதி செய்யிறது ஒண்டும் பெரிய விசயமில்லை. உந்த றோல்ஸ் தெரியுமெல்லோ அதை கொஞ்சம் பெரிசா செய்து அதுக்குள்ள ஒரு பாதி அல்லது முழு முட்டை அப்பிடியே வைச்சு இறைச்சி உருளைக்கிழங்கெல்லாம் போட்டு பொரிச்செடுக்கிறது தான். மரக்கறி மிதிவெடி எண்டும் ஒரு தனிரகம் இருக்கு. மச்சம் சாப்பிடாதாக்களுக்கு.

வசந்தன் இந்த மிதிவெடியின்ர பிறப்பிடம் வன்னிக் கடைகள் தான் எண்டு சொல்லுவினம். எதுக்கும் விசாரிச்சு பாருங்கோவன்.

ஊரோடி பகீ

 

said ... (08 December, 2006 14:05) : 

வன்னியில் பார்த்துள்ளேன்..அங்கிருந்து செய்முறையை கேட்டு எழுதி வந்தேன் :)ருசி அதிகம் தான் :)

 

said ... (09 December, 2006 02:20) : 

எழுதிக்கொள்வது: johan-paris

வசந்தன்!
இந்தப் பெயரே பிடிப்பதில்லை. அதனால் சாப்பிடுவதில்லை.ஆராயவுமில்லை.
யோகன் பாரிஸ்

16.46 8.12.2006

 

said ... (09 December, 2006 02:32) : 

எழுதிக்கொள்வது: சிறில் அலெக்ஸ்

ரெம்ப நல்ல பதிவு வசந்தன். வெளியில் கழிக்கப்பட்டதை எங்க ஊர்ல 'தீ' அல்லது 'கத்தி' என்பார்கள்.கடற்கரை கிராமங்களில் இதைப் பற்றி சொல்லவேவேண்டாம். ஆனா அங்கேயே மிதிதுவிட்டு அங்கேயே கழுவியும் கொள்ளலாம்.
:)

9.57 8.12.2006

 

said ... (09 December, 2006 16:28) : 

தலைப்பை பார்த்த உடனேயே நான் நினைச்சனான் இதாத்தான இருக்கும் எண்டு. வன்னியில் ஒரு இளவட்ட வயதுக்காரருக்கு பின்னேரங்களில் மிதிவெடியும் ரீயும் அடிக்காட்டி தூக்கமே வராத அளவுக்கு பிரபலமாயிருந்தது. அனவில பெருசாயும் இருந்ததால பசியடங்கும் அதை சாப்பிட்டா.பிறகு இப்ப இப்ப யாழ்ப்பாணத்தில சாப்பிட்டது என்ணண்டா இறைச்சிஒரு துண்டு நிறைய வாழைக்காய் முட்டை ஒரு கீத்து. ம் நான் நினைக்கிறன் மிதிவெடி மருவி வாழையடி ஆகிவிட்தென்று

 

said ... (11 December, 2006 14:06) : 

சிந்தாநதி,
வருகைக்கும் முக்கியமான கேள்விக்கும் நன்றி.
'எப்படி?' என்று எனக்குத் தெரிந்தால் இன்னொரு பதிவு போடுகிறேன்.

கானா பிரபா,
சாப்பிட்டிருக்கிறியளா?
இதுபற்றின முந்தின பதிவில இதைப்பற்றிச் சொல்லவேயில்லையே?
சும்மா ரீ ரூமைத் தெரியாது எண்டுதான் சொன்னீர்.

பகீ,
வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி.
வன்னிக்கடைகள்தான் பிறப்பிடமெண்டது நானறியாதது. இருக்கலாம்.
இதுகளைப் போய் இனி ஆரிட்ட விசாரிக்கிறது?
அப்பிடி விசாரிச்சாலும் விசர்ப்பட்டம் வாங்காமல் தப்பிறது பெரிய விசயம்.

 

said ... (11 December, 2006 14:17) : 

சும்மா ரீ ரூம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது, மிதிவெடியை மறக்க முடியுமா

 

said ... (11 December, 2006 21:37) : 

தூயா,
பிறகென்ன? நீங்களே மற்றவர்களுக்காக 'மிதிவெடி செய்வது எப்படி?' எண்டு பதிவு போட்டுவிடலாம்.

யோகன்,
பேர் பிடிக்காமலிருக்கலாம். ஆனா சாப்பிட்டபிறகு பிடிக்காமலிருக்காதெண்டுதான் நினைக்கிறன்.

 

said ... (12 December, 2006 15:10) : 

சிறில்,
வருகைக்கும் உங்கள் ஊர் விளக்கத்துக்கும் நன்றி.

அகிலன்,
வாருமப்பு.
ஏதோ ஞாபகம் இருந்தாச் சரி.
அடிக்கடி வந்து போங்கோ.

 

said ... (12 December, 2006 23:33) : 

ம் நீங்கள் என்ன மறந்தே போனியள் வசந்தண்ணை எல்லாத்தையும் நீங்கள் ஞாபகம் வைச்சு எழுதேக்க ஞாபகம் வராம இருக்குமே.அல்லது மறக்குற நினைவுகளோ இஅவை என்ன சொல்லுறியள் நான் மறக்க மாட்டன் மிதிவெடியை மட்டு மில்லை மிதிவெடிகள் நிறைந்த என்னூரையும் சரியோ

 

said ... (12 December, 2006 23:33) : 

This comment has been removed by a blog administrator.

 

post a comment

© 2006  Thur Broeders

________________