Saturday, October 28, 2006

இலக்கிய உலகில் மு.த.வின் சிந்தனை ஒரு திருப்புமுனையா?

பனுவல் -தீவிரன்-
-------------------------------------
தினக்குரல் வாரப்பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையிது.
பயன்கருதி வெளியிடப்படுகிறது.
-------------------------------------
ஈழத்து தமிழ் இலக்கிய உலகு பற்றிப் பேசும்போது, ஈழகேசரிக்காலம், மறுமலர்ச்சிக்காலம், `முற்போக்கு' காலம் என்று ஒவ்வொரு காலகட்டங்கள் பிரிக்கப்பட்டு பேசப்படுவது வழமை. கலை இலக்கிய மாற்றங்கள் பற்றிப் பேசப்படுவதற்கு இப்பகுப்புகள் வசதியானதும் கூட. ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்கு தலைமைதாங்கும் ஆளுமைகளால் வெளிக்கொணரப்படுகின்றன.

ஈழகேசரி காலகட்டத்து எழுத்தாளர்களின் (சம்பந்தன், வைத்தியலிங்கம், இலங்கையர்கோன்) ஆளுமை என்பது இந்தியச் செல்வாக்கிலிருந்து ஈழத்தமிழ் ஆக்க இலக்கியத்தை ஓரளவு விடுவிக்க முயன்ற பங்களிப்பைத் தந்ததெனலாம். இவர்கள் காலத்தில் இலக்கிய விமர்சனம் என்பது பின்தள்ளப்பட்டே இருந்தது. அடுத்து வந்த மறுமலர்ச்சி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் (அ.செ.மு., சு.வே, வரதர், கனகசெந்திநாதன்) பெயருக்கேற்ப முன்னவர்களுடையதைவிட முற்போக்கான விடயங்களை அணுகுபவையாகவும் ஒருவகை விமர்சன நோக்கைக் கொண்டவையாகவும் இருந்தனவெனக் கொள்ளலாம்.

இவர்களுக்கு அடுத்துவந்த முற்போக்கு எழுத்தாளர்கள் இன்னுமொருபடி மேலே சென்றனர். மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்ட கருத்தியல் ரீதியான அருட்டல் இவர்களிடம் முழுமையடைகிறது எனலாம். மண்வாசனை, பிரதேச வாசனை என்று வந்த புனைவுகளுக்கு சமூக உணர்வு பாய்ச்சப்பட்டு அவற்றை ஏற்றத்தாழ்வு, சுரண்டல் ஆகியவற்றை பிரதிபலிக்கும் இடதுசாரி (மார்க்சியக்) கருத்தியல் படைப்புகளாக மாற்றிய பெருமை முற்போக்கு எழுத்தாளர்களைச் சாரும். இவ்வாறு முற்போக்கு எழுத்தாளர்களை ஆற்றுப்படுத்திய காலகட்டத்தின் (1956 - 70) ஆளுமைகளாக க.கைலாசபதியும் கா.சிவத்தம்பியும் நிற்கின்றனர்.

முற்போக்கு காலகட்டத்தைத் தொடர்ந்து அடுத்தகட்ட பாய்ச்சலும் நேர்கிறது.

முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதன் இயக்கமும் அதன் உச்ச நிலையில் இருந்தபோது (1960-70) அதற்கு எதிரான குரல் எழத் தொடங்கிற்று. முற்போக்கு அணியினரின் கருத்தியல் பற்றியோ, அவர்கள் வாயிலிருந்து உதிர்க்கப்பட்ட `இயக்கவியல்', `கருத்துமுதல் வாதம்', `பொருள் முதல்வாதம்' `சோஷலிஸ்ற் றியலிஸம்', `வர்க்கபேதம்' என்பவற்றின் அர்த்தம் ஒன்றும் புரியாது ஏனைய `வட்டங்களை'ச் சேர்ந்த `எழுத்தாளர்கள் 'தலையைச் சொறிந்து கொண்டிருந்தபோது யாரும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து அதற்கெதிரான குரல் எழத்தொடங்கிற்று.

ஒன்று எஸ்.பொ.வுடையகுரல், அதேகாலத்தில் எழுந்த அடுத்த குரல் மு.த.வுடையது. எஸ்.பொ.வைப் பொறுத்தவரை தான் மு.போ.எ.சங்கத்தி லிருந்து வெளியேற்றப்பட்ட ஆத்திரத்தின் விளைவாய், அதற்குக் காரணமாய் இருந்த க.கை., சிவத்தம்பி ஆகியோர் மேல் அவர் ஆரம்பத்தில், வியாசிகதேசிகர் என்ற பேரில் அள்ளிக் கொட்டிய வசைபாடும் விமர்சனங்களையோ அல்லது அதற்குப்பின் `நற்போக்கு' என்ற பேரில் எவ்.எக்ஸி. நடராசா, சதாசிவம் ஆகிய பண்டிதர்க ளையும் கனகசெந்திநாதன் போன்ற எழுத்தாளர்களையும் கூட்டுச் சேர்த்து முன்வைத்த வாதங்களையோ, விமர்சனங்களையோ ஈழத்து இலக்கிய உலகில் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு எதிராக வைத்த எதிர்வினை என்றோ ஒரு புதுக்கருத்தியல் என்றோ சொன்னால் அது நகைப்பிற்கிடமான ஒன்றே. எஸ்.பொ. ஒரு சிறுகதை ஆசிரியராகவோ, நாவலாசிரியரா கவோ இருக்கலாம். ஆனால், அவர் ஒரு சிந்தனையாளரோ அல்லது தரிசனம் மிக்க எழுத்தாளரோ அல்லர். இதுவே அவரது அத்தனை சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்துள்ளது. அத்தனைகாலம் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் அவரைவிடக் கல்வியறிவில் குறைவான சக முற்போக்கு எழுத்தாளர்களிடம் டானியல் ஜீவா இருந்த கருத்தியல் ரீதியான ஒழுங்கமைவு கூட இவரிடம் இல்லாமல் போனதற்கும் காரணம் இதுவே. ஆரம்பத்தில் க.கை.யின் தூண்டுதலின் பேரில் இவர் தினகரனில் `நாவலாசிரியர் வரிசையில்' என்ற தொடரில் அல்பட்டோ மொறாவியாவை பற்றி எழுதியது கூட இவரின் சொந்த அறிதலால் வந்த ஒன்றல்ல. (பார்க்கவும் விமர்சக விக்கிரகங்கள் -மு.த.)

ஆகவே, இக்காலகட்டத்தில் முற்போக்கு எமுத்தாளர்களுக்கு எதிராக எழுந்த நியாயமான ஒரே குரல் மு.த.வுடையதே. அத்தோடு, அவர்கள் போக்கை அவர் எதிர்கொண்டவிதமும் தனியானது. 1962 இல் `முற்போக்கு இலக்கியம்' என்ற தலைப்பில் (இது நூலாக 1984 `கிரியா' வால் வெளியிடப்பட்டது) மு.த .கலைச் செவ்வி யில் மூன்று தொடராக எழுதிய கட்டுரை பெரும்பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திற்று. அந்த விவாதத்தில் பங்குபற்றுவதாக இருந்த க.கைலாசபதி, அதைப்படித்த பின்னர் ஏதோ நொண்டிச் சாட்டுக் கூறிக்கொண்டு அதிலிருந்து விலகிக் கொள்கிறார். ஆனால், மு.த.அத்துடன் நிறுத்தாது, `ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' என்னும் தொடர் கட்டுரையை (இது கிரியாவினால் 1984 இல் நூலாக வெளியிடப்பட்டது) எழுதுகிறார். அதில் முற்போக்கு இயக்கத்தின் பிதாமகரான க.கை.ஈழத்து இலக்கியத்தின் தரத்தை மேன்மைப்படுத்த ஆற்றிய பங்களிப்பை பாராட்டிய அதேவேளை, அவரின் போதாமைகளையும் அதன்மூலம் ஈழத்து எதிர்கால இலக்கியப் போக்கு ஒரு திருகப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டும் விவகாரமாக மாறியமையும் சுட்டியதோடு முற்போக்குச் சம்பந்தப்பட்ட மாயையையும் தகர்க்கிறார். இதுமட்டுமல்லாமல் இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் மறைக்கப்பட்டும் பிற்போக்கானதாகவும் பார்க்கப்பட்டுவந்த ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் அவசியத்தையும் தமிழ்த் தேசியத்தின் நியாயப்பாட்டையும் மு.த.முன்வைக்கிறார். இதற்கிடையில் மு.த.`விடுதலையும் புதிய எல்லைகளும்' என்ற கட்டுரைத் தொடரை அறுபதுகளின் இறுதியில் `மல்லிகை'யில் எழுதுகிறார். இது அவரால் விரைவாக வெளியிடப்படவிருந்த `போர்ப்பறை'என்ற நூலின் அறிமுகமாகவும் அதன் கருத்தியலின் எளிமை விளக்க மாகவும் வந்துகொண்டிருந்தது. இதுகால வரை முற்போக்கு எழுத்தாளர்களால் ஒதுக்கப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும் கிடந்த பல இலக்கிய வட்டங்களைச் சேர்ந்த ஏனைய எழுத்தாளர்கள் பலர் அதைப்படித் ததும் புதுவிதத்தெம்பும் தமக்கும் ஒரு கருத்தியல் இருக்கென்ற பார்வை பெற்றவர்க ளாகவும் நிமிர்கின்றனர். இதை அவர்கள் மு.த.வை நேரில் சந்தித்த போதும் அவருக்கு கடிதம் எழுதியதன் மூலமும் தெரிவித்தனர் என்பது பழைய கதை. இதைத் தொடர்ந்து மு.த.வின் `போர்ப்பறை' நூல் வெளியீடு வருகிறது. இதைப் படித்த போது பேராசிரியர் சிவத்தம்பி, ஏனைய எழுத்தாளர்கள் போலல்லாது, காழ்ப்புணர்வற்று, தனக்கேயுரிய நேர்மையோடு, "60களில் ஈழத்தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட தேக்கத்தை உடைத்தநூல் இது" என்று மல்லிகையில் எழுதினார்.

இச்சந்தர்ப்பத்தில் நாம் ஆரம்பத்தில் குறிப்பட்ட, ஒவ்வொருகால கட்டத்துக்கும் ஒரு தேவை இருக்கிறது. அந்தத்தேவை அக்காலகட்டத்திற்குத் தலைமை தாங்கிய ஆளுமைகளால் வெளிக்கொணரப்படு கின்றன என்பதை சிறிது விசாரணைக்குட் படுத்த வேண்டும். சமூக வரலாற்று ஓட்டமே ஆளுமைகளைத் தீர்மானிக்கிறது. அவர்களுக்கென்று ஒரு தனித்தன்மை மிக்க ஆளுமை என்ற ஒன்றில்லை என யாந்திரீக முறையில் ஆளுமைகளை விளக்கும் வைதீக மார்க்சிய வாதிகள் இன்றும் உள்ளனர். ஆனால், அவை சிரிப்புக்கிடமான வகையில் ஒதுக்கப்படுபவையாக உள்ளன என்பதற்கு ஈழத்து இலக்கிய உலகில் நிகழ்ந்த பின்வரும் நிகழ்ச்சிகளாய் சாட்சியாய் உள்ளன:

ஈழத்து இலக்கிய உலகில் அறுபதுகளில் க.கை.யின் தலைமையில் ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களால் கட்டியெழுப்பப்பட்ட சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக இரண்டு குரல்கள் எழுந்தன. ஒன்று எஸ்.பொ.வுடை யது. அடுத்தது மு.த.வுடையது. இந்த இருவரில் எஸ்.பொ.வின் ஆளுமையானது, அவரைப் பண்டிதர்களோடு கூட்டுச் சேரவைத்து, `நற்போக்கு' என்ற பேரில் படுபிற்போக்கு வாதத்திற்குத் தலைமை தாங்க வைக்க, மு.த.வுடையதோ க.கை ஆகியோர் காட்டிய முற்போக்குவாதத்தின் போதாமைகளைச் சுட்டிக் காட்டியதோடு அதற்குமப்பால் சென்று இனிவரப்போகும் உலக இலக்கியப் போக்கையும் சுட்டுவதாய் அமைந்தது என்பதிலிருந்து ஆளுமைகளும், அவற்றின் தனித்தன்மைகளும் எவ்வாறு சமூகவரலாற்று ஓட்டத்தைத் தீர்மானிக் கின்றன என்பதை அறியலாம் (இவ்விடத் தில் ரஷ்ஷியாவில் ஸ்ரலின் இருந்த இடத்திற் குப் பதிலாக புகாரினோ ட்றொஸ்கியோ இருந்திருந்தால் வரலாற்றோட்டம் எவ்வாறு மாறியிருக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பது சுவாரஸ்யமானது) ***

மு.த. இவ்வாறு தனது இலக்கிய விமர்சனங்கள், புனைவியல், தத்துவார்த்த எழுத்துகள் மூலம் பாரிய புரட்சியொன்றை முன்வைத்த போதும், ஈழத்துத்தமிழ் இலக்கிய உலகு அதனால் எந்தவித அதிர்வுகளையும் பெற்றதில்லை. ஆகக் கூடிப்போனால் முற்போக்கு அமைப்பையும் அதற்குத்த லைமை தாங்கிய க.கை.யையும் எதிர்த்து எழுதினார் என்பதற்குமேல் எதுவும் தெரியாத தட்டையான புரிதலுடைய வைதீக மார்க்சியவாதிகளும் `நற்போக்கு' `சற்போக்கு' படைப்பாளிகளுமே அன்றும் இன்றும் இங்கு பொதுவிதியான நிலையில் இவர்களிடம் மு.த.வின் எழுத்துகள் பற்றி எதுவும் எதிர்பார்க்க முடியாது. அதன் அதிர்வுகளை உள்வாங்கும் frequency இருந்தால்தானே அது பற்றிப் பேசவும் அது ஒரு திருப்புமுனையா என்று அறியவும் முடியும்?

ஆனால், வரலாற்று ஓட்டம், இவர்களிடம் போய் தீக்கோழிபோல் தலையோட்டிக் கொண்டு நிற்பதில்லை. அதன் அதிர்வுகள் இலங்கையைவிட்டு தமிழ் நாட்டில் பலரைத்தொட்டது. ஆரம்பத்தில் மு.த.வோடு தொடர்புகொண்டிருந்த வெங்கட் சாமிநாதன், மு.த. `முற்போக்கு இலக்கியம்'தொடரைக் கலைச் செவ்வியில் எழுதியபோது `எவ்வாறு இதை நீங்கள் தனியனாய் நின்று செய்யமுடியும்?' என்று வியந்தவர். பின்னர் அவரது `போர்ப்பறை' நூல் வெளிவந்தபோது இதை விமர்சிப் பதாகக் கூறிவிட்டு அப்படிச் செய்யாது, தருமு சிவராமின் `கைப்பிடியளவு கடல்' கவிதைநூலுக்கு போர்ப்பறையில் காணப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி முன்னுரையாக எழுதினார். இதை `வெ.சாமிநாதன் ஏடு பற்றி சரிநிகரில் மு.பொ. விமர்சித்தபோது சுட்டிக்காட்டினார் என்று நினைக்கிறேன். அடுத்து, தமிழ்நாடு `சமுதாயம் வெளியீடு' உரிமையாளர் கோவிந்தன் மு.தவின் எழுத்துகளால் கவரப்பட்டு - இதற்கு இராஜநாராயணனும் தூண்டுதலாய் இருந்தார்- அவரது முக்கியமான அனைத்து ஆக்கங்களையும் நூலுருவில் கொணர்ந்தார். இதற்கிடையில் அமரர் சு.ரா. மு.த.வின் எழுத்துகளை வாசித்து, தன்னைப் போன்ற சுயமான சிந்தனையாளனை வரவேற்கும் பாணியில் அவர் பற்றி பின்வருமாறு எழுதினார். (பார்க்கவும் `மு.த.வின் பிரபஞ்ச யதார்த்தம், சு.ரா.)

இருபதாம் நூற்றாண்டில் வாழ்வதற்கான சாயல் இவரைப் போல் முழுவீச்சோடு வெளிப்படுத்திய ஆளுமைகள் நம்மிடையே வேறு யாருளர்?... பாரதியின் கருத்துலகத்தை விடவும் தளையசிங்கத்தின் கருத்துலகம் முழுமையானது. மற்றொரு விதத்தில் சொன்னால், பாரதியின் சிந்தனையை இவர் நம்காலத்துக்கு கொண்டுவந்து இடைக்காலச் சரித்திரத்துக்கும் எதிர்வினை தந்து இடைவெளிகளை அடைத்து முழுமைப் படுத்த முயன்றார் என்று சொல்லாம்.

இவ்வாறு சு.ரா.சொன்னதற்குப் பிறகு, தமிழ்நாட்டில் தளையசிங்கம் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டார். அண்மையில் ஜெயமோகன் கூட்டிய தளையசிங்கம் பற்றிய விமர்சனக்கூட்டம் பல தமிழ்நாட்டு முன்னணி எழுத்தாளர்களைப் பங்குகொள்ள வைத்தது. மு.த.தனது போர்ப்பறை நூலை வெளியிட்டு ஏறத்தாழ 50 ஆண்டுகள் முடியுந்தறுவாயில் அவர் பற்றி மீண்டு சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவட்டில் (செப்டெம்பர் 2006) ஆனந்த என்ற தமிழ்நாட்டுக்கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்.... ஆனால் அந்தப் பரிணாம வளர்ச்சி புதிய உயிரினங்கள் தோன்றிவளர்வதைப் பற்றிய பதிவுகளாகத் தான் இருக்கு. அதாவது, evolution of forms உருவங்கள் அல்லது வடிவங்களின் தோற்றமும் வளர்ச்சியுமாகத்தான் இருக்கு. பிரக்ஞையோட பரிணாமந்தான் உண்மையான பரிணாமம். பிரக்ஞை தன்னோட பரிணாமத்தின் அந்தக்காலகட்டத் தேவைக்கு ஏற்ப புதிய உயிரினங்களின் உருவங்களை உருவாக்கிக்குதுன்னு நான் நம்பறேன். இது மிகவும் அடிப்படையான விஷயமாத்தான் படுது' என்று கூறும் அவர் விண்வெளி சென்று திரும்பியவர் அனுபவம் பற்றியும் இனி வரப்போகும் பரிணாமம் பற்றி அரவிந்தர் கூறிய supermind நீட்சே கூறிய superman பற்றியும் அவர் கூறுபவை எல்லாம் அறுபதுகளி லேயே மு.த. போர்ப்பறைப், மெய்புள்' நூல்களில் கூறியவை இன்று மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு, மு.த.முன்வைத்த சிந்தனையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது கண்கூடு.

சரி, மு.த.முன்வைக்கும் செய்தி என்ன?

அவர் இலக்கிய, தத்துவார்த்த சிந்தனை ஊடாகப் புதிய கருத்தியல் ஒன்றை முன்வைக்கிறார். இப்பொழுது மனிதன் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் காலகட்டத்தில் நிற்கிறான் என்று கூறும் அவர், மார்க்சியம் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வரவில்லை, மாறாக, 12,13 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மறுமலர்ச்சிக் காலத்தால் கொண்டுவரப் பட்ட அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் இறுதி வடிவமே மார்க்சியம் என்கிறார். அதனால்தான் அது இன்னும் மறுமலர்ச்சி காலத்திற்கு முன்னிருந்த இலக்கிய வகைக்கு (செய்யுள், காவியம்) எதிராக மறுமலர்ச்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிறுகதை, நாவல் ஆகிய இலக்கிய வடிவங்களையே இன்றும் (சோஷலிஸப் புரட்சி ஏற்பட்ட) நாடுகளில் பின்பற்றுகிறது. இன்று அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் வாயிலில் நிற்கும் நாம், அந்த அடிப்படைச் சிந்தனை மாற்றத்திற்கு தடையாக இருக்கின்ற, மறுமலர்ச்சிக்காலத்தில் ஏற்பட்டு இன்று வரை நீடிக்கின்ற சுரத்துக்கெட்ட சிறுகதை, நாவல் கவிதை என்கின்ற இந்தப்பழைய இலக்கிய வடிவங்களை உடைத்தெறிய வேண்டும் என்று கூறும் மு.த.இன்றைய அடிப்படைச் சிந்தனை மாற்றமென்பது, பரிணாமத்தோடு (evolution) தொடர்புடைய தென்றும் ஜடம், உயிர், மனம் என்று முன்னேறிவந்த பரிணாம வளர்ச்சி, மனதையும் தாண்டிச் செல்லும் - புதிய மனித இனத்தோற்றத்திற்கு வரவு கூறும் - காலகட்டத்தில் நிற்கிற தென்றும் (on the threshold of a New Life - psycho metabolism) ஜூலியன் ஹக்ஸ்லி, ரெஹார் டி சாடின் ஆகிய உயிரியல் விஞ்ஞானிகளையும் அரவிந்தர் நீட்சே. நீட்சே (supermind, superman) ஆகிய தத்துவஞானிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளார். இந்தப் புதிய அடிப்படைச் சிந்தனை மாற்றம் எப்பொழு தும் போலவே கலை இலக்கியத்திலேயே தெரியவரும் என்றும் இதுகாலவரை இருந்துவந்த கலை இலக்கிய உருவங்கள் உடைபட புதிய உருவங்கள் தோன்றும் என்றும் அத்தகைய புதிய வரவுக்கு மு.த. `மெய்யுள்' என்றும் பெயரிட்டார். கூடவே கலைஞனின் தாகம் `அண்டை வீடுகள், புதுக்குரல்கள், `உள்ளும் வெளியும் மெய்' ஆகிய புதிய வடிவங்களையும் ஆக்கிக் காட்டினார்.

ஆனால், வேடிக்கை என்னவென்றால் மு.த.வுக்குப் பின்னர் யாரும் `மெய்யுள்'எழுதிக்காட்டவில்லையே, ஆகவே, அவரது புதிய கலை இலக்கிய வடிவம் பற்றிய சிந்தனை தோற்றுப்போன ஒன்று எனச் சிலர் விமர்சித்தனர். இவ்வாறு ஸ்ரீ கணேசன் ஒருமுறை சரிநிகரில் (1998) எழுதிய போது அதற்கு மு.பொ. பின்வருமாறு பதில் அளித்ததாக எனக்கு ஞாபகம்: இன்று மு.த.வுக்கு பின் அவரது இலக்கி ஆர்வலர்கள் (மு.பொ. சு.வி) மெய்யுள் எழுதிக்காட்ட வில்லையே என்று கேட்பது அறியாமையே. இன்று நடைமுறையில் உள்ள கலை இலக்கிய வடிவங்களுக்கு எதிராக உலகெங்கும் எழுதப்படும் அனைத்து anti உருவங்களும் (அவற்றை எழுதுவோர் அவற்றை எழுதுவதற்கு பின்நவீனத்துவம், அமைப்பயல் வாதம், கட்டுடைப்பு என்று காரணம் காட்டினாலும்) மு.த.கூறிய இன்றைய பரிணாமத் தேவையின் கருத்தியல் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது அத்தனை புதிய உருவங்களும் எழுந்து கொண்டிருக்கும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தில் வசப்படும் புதிய பிரக்ஞையின் (consciousness) வெளிக் காட்டல்களே - மெய்யுள். சு.ரா.வின் ஜே.ஜே. குறிப்புகளிலிருந்து வில்லியம் பரோஸின் குலைத்துப் போடும் நாவல்கள் வரை இதன் டிப்புகளே என்று புரிந்து கொண்டால் சரி. சகோதரி நிவேதிதா `அன்னை காளி'என்ற நூலில் கூறியது இன்னும் விளக்கமானது: `ஒரு சிந்தனை மற்ற காலகட்டத்தில் இடம் பெறும் மிகக்காட்டுமிராண்டித்தனமான கொலைகள், சித்திரவதைகள் அராஜகங்கள் அநியாயங்கள் கூட எதிர்வரப்போகும் அடிப்படைச் சிந்தனை மாற்றத்தின் குருட்டுத்தனமான வெளிக்காட்டல்கள் (பார்க்கவும் `அன்னை காளி') என்றார். (இன்றைய இலங்கைக்கு இது மிகப் பொருத்தமானது)

கவிஞர் ஆனந்த கூறிய பரிணாமம் அடையும் பிரக்ஞை பற்றி இன்று நம் எழுத்தாளர்கள் பிரக்ஞை உடையவர்களாய் இருக்க வேண்டும். இது பற்றித் தெரியாது, மு.த சிந்தனையில் ஏற்படுத்திய திருப்பு முனை பற்றி எவரும் பேசமுடியாது. 50 ஆண்டுகளுக்குப் பின் அவரது எழுத்து கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இது பற்றி இன்னும் தீவிரமாகச் சிந்திப்போமாக.

_______________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 15, 2006



Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"இலக்கிய உலகில் மு.த.வின் சிந்தனை ஒரு திருப்புமுனையா?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (28 October, 2006 05:36) : 

எழுதிக்கொள்வது: theevu

http://noolaham.net/library/books/02/121/121.htm

22.4 27.10.2006

 

said ... (28 October, 2006 22:33) : 

தீவு,
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி.

பயனுள்ள தொடுப்புக்கும் நன்றி.

 

said ... (29 October, 2006 04:58) : 

எழுதிக்கொள்வது: ஈழநாதன்

தலைப்பே கேள்வியாகவும் அமைந்தால் பதில் ஆமாம் என்பதாகத் தான் இருக்கும்.ஈழத்து இலக்கிய உலகில் மு.தளையசிங்கம் ஒரு திருப்புமுனை என்று சொன்னால் மிகையாகாது.தளையசிங்கத்துடைய ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி முக்கியமானதொரு நூலும் கூட முற்போக்கு கூட்டணிக்கும் அதனுடைய சித்தாந்தங்களுக்கும் எதிராக தளையசிங்கம் தனியொருவராக நடத்திய போர் பற்றி மு.பொன்னம்பலம் எழுதி படித்த நினைவு.மூன்றாவது மனிதன் நேர்காணலில் கூட விரிவாக இதுபற்றிக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் தளையசிங்கம் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்பட்ட கதையும் அதையொட்டி ஜெயமோகன் வேதசகாயகுமார் ராஜாங்கத்திற்கிடையே ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களும் சுவாரசியமானவை.சுந்தரராமசாமி என்ற ஆளுமைக்கெதிராக முன்னிறுத்துவதற்கு ஒருவர் தேவைப்பட்டதே தளையசிங்கம் தோண்டியெடுக்கப்பட்டதற்குக் காரணம் என நினைக்கிறேன்

2.14 5.9.2006

 

said ... (30 October, 2006 10:46) : 

/சுந்தரராமசாமி என்ற ஆளுமைக்கெதிராக முன்னிறுத்துவதற்கு ஒருவர் தேவைப்பட்டதே தளையசிங்கம் தோண்டியெடுக்கப்பட்டதற்குக் காரணம் என நினைக்கிறேன்/

அல்லது சுந்தரராமசாமியைவிட, மாக்ஸியவிமர்சகரை மறுதலித்த தளையசிங்கத்தை முன்னிலைப்படுத்தியது தானே/மேதான் என்று காட்டவா?

 

said ... (30 October, 2006 23:02) : 

ஈழநாதன், அனானி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

 

said ... (17 November, 2006 03:15) : 

ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடியான அறிஞர் அ.ந.கந்தசாமியைப் பற்றி எங்குமே மேற்படி கட்டுரையில் குறிப்பிடவில்லை. இது கட்டுரை எழுதியவரின் ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றிய அறியாமையினை அல்லது திட்டமிட்ட இருட்டடிப்பினைக் குறிக்கின்றது. அ.ந.க பற்றிய மேலதிக தகவல்களை http://www.geotamil.com/pathivukal/ank_unicode_november2006.htm , http://www.geotamil.com/pathivukal/ANKANTHASAMI.html என்னும் இணைப்புகளில் பெறமுடியும்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________