Friday, October 13, 2006

மொழிபெயர்ப்பு என்பது மீள் படைப்பா?

பனுவல்: தாவீது கிறிஸ்ரோ

______________________________________
தினக்குரல் வாரமலரில் வந்த கட்டுரை.
யாருக்காவது பயன்படும் என்ற நோக்கில் படியெடுத்துப் பதிவாக்கப்படுகிறது.
______________________________________

தமிழ் மொழி பெயர்ப்புத் துறையில் ஈடுபடுபவர்கள் இருமொழிப் புலமை மிக்கவர்களாகவும் அதே நேரம், மொழிபெயர்ப்பின் நுட்பங்களை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மூலமொழியை அறிந்திருப்பவர்களது மொழிபெயர்ப்புக்கும் ஆங்கிலம் வழி தமிழ் மொழி பெயர்ப்பாளர்களுக்கும் கூட இது பொருந்தும்.

மாப்பாசானுடைய சிறுகதைகளை மொழிபெயர்த்த புதுமைப்பித்தனின் சுயபடைப்புகளுக்கும் மொழிபெயர்ப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட மயக்க நிலைக்கு புதுமைப்பித்தனின் மொழி ஆளுமையே முக்கிய காரணியமாக அமைந்தது. அவர் ஆங்கிலம் வழி மேரி செல்லியின் பிரேத மனிதனையும் மொழிபெயர்த்திருந்தார்.

வசனநடை கைவந்த வல்லாளர் எனப் போற்றப்படும் நல்லைநகர் ஆறுமுக நாவலர் கிறிஸ்தவ விவிலியத்தை மொழிபெயர்த்தவர்கள் குழுவில் இடம்பெற்றார். சைவத்தை நிலைநிறுத்தப் போராடிய நாவலர் ஒரு பிறமத நூலை மொழி பெயர்க்க விருப்பம் கொண்டமைக்கு உரிய காரண காரியங்களை ஆராய்வதற்கு முன்னர் விவிலியத்தின் இலகு தன்மையும் இதற்கொரு காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. ஒரு போதகநூல் தம்பக்கம் மக்கள் திரள்வதை இலக்கு வைத்து எழுதப்படுவதாக இருப்பின், அது வெகுமக்களின் புரிதலுக்கு உரியதாக இருக்க வேண்டும். இவ்வகையில்தான் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்ட விவிலியம் மூலம் மொழியிலேயே இலகுத்தன்மை பெற்றிருந்தது.

உலகப் பிரசித்திபெற்ற பல புனைவுகள் ஆங்கிலம் வழியே தமிழில் எமக்குக் கிடைத்திருந்தன. அலெக்சாண்டர் டுமா, விக்டர் கியூகோ போன்றவர்களின் நாவல்கள் அமுதநிலையம், இன்பநிலைய வெளியீடுகளாக முல்லை. முத்தையா, சுத்தானந்த பாரதி போன்றவர்களால் வெளியிடப்பட்டன. புகழ்பெற்ற பிரான்ஸ் நாவல்களான எமிலிஜோலாவின் `மனிதமிருகம்', `நாநா' போன்றவையும் டால்ஸ்டாயின் `அன்னாகரினினாவும்' மார்க்ஸிம் கார்க்கியின் `அன்னை' (தாய்)யும் இன்பநிலைய வெளியீடுகளாக வெளிவந்திருந்தன. இவற்றை முழுமையான மொழி பெயர்ப்புகளாகக் கருதமுடியாது. மார்க்ஸிம் கார்க்கியின் `தாய்' நாவல் பின்னர் சிதம்பர ரகுநாதனால் முழுமையாக மொழிபெயர்க்கப்பட்டு NCBH நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இது பின்னர் மொஸ்கோ பதிப்பகத்தால் செழுமைப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டபோதும் NCBH வெளியிட்ட முதல் `தாயின்' முழுமையைக் கொண்டிருக்கவில்லை.

மார்க்ஸிம் கார்க்கியின் கருத்தோடு உடன்பாடு கொண்டவரும் படைப்பாளுமை மிக்கவருமான சிதம்பர ரகுநாதனின் மொழிபெயர்ப்பில் கார்க்கியின் பல படைப்புகள் உயிர்ப்போடு வெளிவந்திருந்த போதும் `தாய்' நாவல் தந்த நிறைவை மற்றவை தரவில்லை.

ரஸ்யப்படைப்புகளை குறிப்பாக, டால்ஸ்டாய், அன்ரன் செகாவ், த்ஸ்தாவெஸ்கி போன்றோரை பூ.சோமசுந்தரம் , ரா.கிருஷ்ணையா போன்றோர் மொழி பெயர்த்துள்ளனர். போரும் அமைதியும் என்ற மிகப் பெரும் நாவலும் `டான்நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது', `வீரம் விளைந்தது', `உண்மை மனிதனின் கதை' போன்ற பிற எழுத்தாளர்களின் சிறந்த புதினங்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

ரஸ்ய ஆட்சியமைப்பை நிராகரித்த `விலங்குப் பண்ணை' போன்ற நாவல்களும் மார்க்சிய உடன்பாடில்லாதவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மாயாகோவ்ஸ்க்கி எனும் கவிஞன் எழுதிய `லெனின் கவிதாஞ்சலி' சிதம்பர ரகுநாதனால் மொழிபெயர்க்கப்பட்டது. உண்மையில் உன்னதமான ஒரு கவிதையை யாப்பு இலக்கண ரீதியில் குறைப்பிரசவமாக ரகுநாதன் மொழிபெயர்த்திருந்தார். நவீன கவிதை எனும் வடிவத்திலுள்ள லெனின் கவிதாஞ்சலியின் உயிர்த்துடிப்பை அழித்த கைங்கரியம் ரகுநாதனைச் சாரும். ஏர்னஸ்ட் கேமிங்வேயின் `கடலும் கிழவனும்' சா.து.சு.யோகியாரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்திருந்தது. சமீபத்தில் இந்நாவல் `கிழவனும் கடலும்' என சு.ரா.வால் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு வெளியீடாக வெளிவந்துள்ளது.

தமிழுக்கு வந்த பிறமொழி நாவல்களில் சுந்தர ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்ட தகழி சிவசங்கரப்பிள்ளையின் `செம்மீன்' ஒரு சிறந்த மொழிபெயர்ப்பு நாவலாகும். சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த தகழியின் `தோட்டியின் மகன்' நாவலைவிட செம்மீன் நிறைவான ஒரு நாவலாகும். இந்திய சாகித்திய அகடமிக்காக இந்நாவலை மொழிபெயர்த்த சுந்தர ராமசாமி `ஒரு கார்த்திகை தீப நாளன்று வீதியில் வலம் வந்து மனம் ரம்மியமான நிலையில் இருந்தபோது புது வேகத்தோடு இந்நாவலை மொழிபெயர்த்தேன்' எனக் கூறியிருந்தார். சுந்தர ராமசாமிக்கு மலையாள மொழியும் தெரிந்திருந்தது. எனவே, அவருக்கு மொழிபெயர்ப்பில் தடங்கல் எதுவும் நிகழவில்லை. அவர் ஒரு ஆளுமை நிறைந்த படைப்பாளியாகவும் இருந்தார். வைக்கம் முகம்மது பசீரின் `இளம்பருவத்துத் தோழி', `பாத்துமாவுடைய ஆடு', `எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது' போன்ற படைப்புகளும் கேசவதேவின் `கண்ணாடி' போன்ற நாவல்களும் தமிழுக்கு வந்திருக்கின்றன. சாகித்ய அகடமி பல வங்க, கன்னட, தெலுங்கு நாவல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளது.

ஆங்கிலம் மட்டும் தெரிந்த மூலநூல்களின் பரிச்சயமில்லாத பலரது மொழி பெயர்ப்பில் மார்க்சிய நூல்களை வாசித்த என் போன்றவர்கள் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. `லெனின் படைப்புகள்', `மாஓவின் படைப்புகளை' மொஸ்கோ பதிப்பகமும் இலங்கையின் மக்கள் பிரசுராலயமும் வெளியிட்டிருந்தன. தொழில் முறை மொழி பெயர்ப்பாளர்களின் வறண்ட மொழி நடையில் மார்க்சியக் கருத்துகள் நம்மை வெருட்சியடையச் செய்தன. இதற்கு விதிவிலக்காக தமிழகத்தின் பாட்டாளி வெளியீடாக இலகுதமிழில் மாஓவின் படைப்புகளை பின்னர் நாம் வாசித்தோம்.

இலங்யைில் கே.கணேஸ் போன்றவர்கள் உலகபிரசித்தி பெற்ற படைப்புகளை ஆங்கிலம் வழி தமிழில் மொழிபெயர்த்திருந்தனர். ஆனால், சமீபத்தில் தமிழகத்தில் மூல நூல்களிலிருந்து அம்மொழியை அறிந்தவர்கள் மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருப்பதை நாம் அறிகிறோம். `பிரெஞ்', பாஷையை அறிந்துள்ள ஷ்ரீராம் போன்றவர்கள் அல்பட் காம்யூவையும் பேர்ஹேவையும் காப்தாவையும் குறிப்பாக, `அந்நியன்' `விசாரணை' போன்றவற்றையும் மொழிபெயர்த்துள்ளனர்.

தமிழுக்கு நவமார்க்சியம் அறிமுகமாகிய ஆரம்ப காலங்களில் எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா போன்றவர்கள் பலவகையில் பிறமொழி ஆளுமைகளை எமக்கு அறிமுகப்படுத்தியிருந்தனர். `அந்நியமாதல்', `இருப்பியல்வாதம்' பற்றியும் அன்ரனியோ கிராம்சி', `அல்தூஸர்' போன்றோரைப் பற்றியும் இவர்கள் நல்ல முறையில் அறிமுகம் செய்திருந்தனர். தமிழவனின் `அமைப்பியல்வாத' (ஸ்ரக்சரலிச) அணுகுமுறையும் தமிழுக்குள் படிப்படியாக நுழைந்தன. இதேகாலத்தில் பிரக்ட் போன்றோரின் நாடகங்களும் சர்ரியலிச பாணி கவிதைகளும் தமிழுக்கு அறிமுகமாகின.

இன்று `பின்நவீனத்துவம்', `மெஜிக்கல் ரியலிசம்' (மாந்திரீக யதார்த்தம்) என தமிழ்ப்படைப்பாளிகள் பேசவும் எழுதவும் கூடிய விதத்தில் பூக்கோ, தெரிதா போன்றோரின் கருத்துகள் தமிழ்ப்படுத்தப்படுகின்றன. மார்க்கோஸ் போன்ற லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளின் படைப்புகள் தமிழுக்கு வந்துவிட்டன. `கல்குதுரை' இதழ் மொழிபெயர்ப்புத் தொகுப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ளது.

கூகிவாதியாங்கோ எழுதிய `சிலுவையில் தொங்கும் சாத்தான்' அமரந்தாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திரன் போன்றவர்களால் `அறைக்குள் வந்த ஆபிரிக்க வானம்' போன்ற கவிதைத் தொகுதிகள் வெளியிடப்படுகின்றன.இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழில் எப்.ஏ. நுஃமான், மொழிபெயர்த்த `பலஸ்தீனக் கவிதை'களுடன் எம்.கே.எம். ஷகீப் மொழிபெயர்த்து `நிகரி' வெளியிட்ட கவிதைத் தொகுதியும் குறிப்பிடத்தக்கன.

சிங்கள கவிதைகளையும் சிறுகதைகளையும் நுஃமான், பண்ணாமத்துக்கவிராயர், தம்பி ஐயா தேவதாஸ், சிவா சுப்பிரமணியம் போன்றோர் மொழிபெயர்த்துள்ளார்கள். இப்னு அஸ்மத் அல் அஸ்மத், நீள்கரை நம்பி போன்றோரும் சிங்கள மொழிப்படைப்புகளை தமிழில் வழங்கியுள்ளார்கள். மல்லிகையில் எஸ்.எம்.ஜே.பைஸ்தீன் மொழிபெயர்த்த பல சிங்கள சிறுகதைகள் வெளிவந்துள்ளன. மல்லிகைப் பந்தல் வெளியீடாக `சிங்களச் சிறுகதைகள்' எனும் தலைப்பில் ஒரு தொகுதி வெளிவந்துள்ளது. சோ. பத்மநாதன் மொழிபெயர்ப்பில் `தென்னிலங்கைக் கவிதைகள்' என்றொரு தொகுப்பு வந்துள்ளது. சிவசேகரம் அவர்களின் மொழிபெயர்ப்பில் `பணிதல் மறந்தவர்', `மாஓ கவிதைகள்' என்பன தேசியகலை இலக்கியப்பேரவை வெளியீடாக வெளிவந்துள்ளன. கே.கணேஸின் மொழிபெயர்ப்பில் `கோசிமின் கவிதைகள், `லூசுன் கவிதைகள்' என்பன வெளிவந்துள்ளன. சி.கனகசபாபதி மொழிபெயர்த்த `லூசுன் கதைகளும்' தேசியகலை இலக்கியப்பேரவையால் வெளியிடப்பட்டுள்ளன. மகாகவி - முருகையன் மொழிபெயர்ப்பில் `ஒருவரம்' எனும் தொகுப்பு வெளிவந்துள்ளது. அழகு சுப்பிரமணியம் ஆங்கிலத்தில் எழுதிய பல கதைகளை ராஜ ஷ்ரீகாந்தன் மொழிபெயர்த்து நூலாக்கியுள்ளார்.

மொழிபெயர்ப்பின் காரணமாக மூலநூலையும் நூலாசிரியரையும் வாசகன் வெறுப்படையச் செய்த நூல்களில் முக்கிய நூலாக மார்ட்டின் விக்கிரமசிங்காவின் `கம்பரெலியா' எனும் நாவலின் தமிழாக்கத்தைக் குறிப்பிடலாம். இதனை `கிராமப்பிறழ்வு' எனும் பெயரில் ம.மு.உவைஸ் தமிழாக்கியிருந்தார்.

தமிழ், ஆங்கில மொழிப்புலமை நிறைந்த ஏ.ஜே.கனகரத்தினா தமிழில் வெளிவந்த பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்துள்ளார்.

கேதாரநாதன், திருவேணி சங்கமம் போன்றவர்கள் அவ்வப்பேது உதிரியாக சில மொழிபெயர்ப்புகளைச் செய்தபோது ஈழத்தைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்புத்துறை பின்தங்கியே உள்ளது.

காலஞ்சென்ற ஆனந்தன் பல மலையாளச் சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். `காலம்' வெளியிட்ட என்.கே.மகாலிங்கம் மொழிபெயர்த்த சின்னுவா ஆச்பேயின் `சிதைவுகள்' நாவலும் ஒரு விதத்தில் முழுமைபெறா மொழிபெயர்ப்பே.மலையாளத்திலிருந்து ஜெயமோகன் மொழிபெயர்த்த கவிதைகளும் கன்னடத்திலிருந்து பாவண்ணன் மொழிபெயர்த்த படைப்புகளும் சுயசரிதை விபரணப்பாங்கிலமைந்த தலித்திய-மராட்டிய நாவல்களும் இப்போது தமிழில் கிடைக்கின்றன. இவற்றினை வெளியிட்ட பதிப்பகங்கள் போற்றுதலுக்குரியன.

ஒரு காலம் தமிழகத்தின் கிக்கிங்பாதம்ஸ், பேர்ள் பதிப்பகம், அல்லயன்ஸ் பதிப்பகம் என்பனவும் அரு.ராமநாதனின் பிரேமா பிரசுரம் போன்றவையும் பல நல்லறிஞர்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்தன. இப்பிரேமா பிரசுரமே எமிலி ஜோலாவின் `சுரங்கத்தை'யும் வெளியிட்டிருந்தது. கிரியா பதிப்பகமும் பல பிறமொழி நாடகங்களை தமிழில் வெளியிட்டிருந்தது. இவற்றோடு மிகப்பெரிய மொழிபெயர்ப்புப் பங்களிப்பை கோவையின் `விடியல்' செய்துள்ளது. எஸ்.பாலச்சந்திரனின் மொழிபெயர்ப்பில் பல நூல்களை விடியல் வெளியிட்டுவருகிறது. அலைகள், சவுத்விஷன், கிழக்குப் பதிப்பகம், கீழைக்காற்று போன்றவை மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகின்றன.

50 களில் வெ.சாமிநாதன் சர்மா, க.நா.சு. போன்றவர்கள் தமிழுக்கு பிறமொழி படைப்புகளையும் அறிஞர்களையும் அறிமுகம் செய்தமையையும் இங்கு குறிப்பிட வேண்டும். தமிழக `அடையாளம் பதிப்பகம்' தேவையும் நோக்கமும் அறிந்து பல்வகையான அறிவுசார் நூல்வரிசையொன்றை வெளியிட்டு தமிழுக்கு செழுமை சேர்த்துள்ளது.

ஒரு விதத்தில் மொழிபெயர்ப்பு பற்றிக் குறிப்பிடும் போது, பின்நவீனத்துவம் கூறும் `பிரதியை பல்வகையில் வாசிக்கலாம்' எனும் கூற்றுப்பற்றி பார்க்கவேண்டும். வரிக்கு வரி மொழிபெயர்க்கும் அல்லது படைப்பாளியின் மனோநிலையில் இருந்து மொழிபெயர்க்கும் ஒரு பிரதி, மொழிபெயர்ப்பாளனை எவ்விதத்தில் பாதிக்கிறது. இப்பாதிப்பு வாசகனுக்கு ஏற்படுத்தும் தாக்கம் என்ன? என்ற பல்வகை கேள்விகள் இங்கே எழுப்பப்படலாம்.

உண்மையில் மொழிபெயர்ப்பு என்பதே ஒரு மீள்படைப்பு மீள் உருவாக்கம். இந்த மீள் ஆக்கம் வாசகனுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு அல்லது மாற்றம் மூல நூலை மொழிபெயர்த்தவருக்கு ஏற்படுத்திய பாதிப்டைவிட வித்தியாசமாக அமையலாம், அமையாதும் விடலாம். அமைய வேண்டுமென்ற கட்டாயம் கூட இல்லை, இதுவே பின் நவீனத்துவம் கூறும் செய்தி.
_______________________________________________________

நன்றி: ஞாயிறு தினக்குரல் October 01, 2006


Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மொழிபெயர்ப்பு என்பது மீள் படைப்பா?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (14 October, 2006 19:05) : 

//புகழ்பெற்ற பிரான்ஸ் நாவல்களான எமிலிஜோலாவின் `மனிதமிருகம்', `நாநா' போன்றவையும் டால்ஸ்டாயின் `அன்னாகரினினாவும்' மார்க்ஸிம் கார்க்கியின் `அன்னை' (தாய்)யும் இன்பநிலைய வெளியீடுகளாக வெளிவந்திருந்தன.//

நாநா என்ற நாவல் அ. ந. கந்தசாமி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சுதந்திரன் பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. இது நூலாக வெளிவந்ததா என்பது தெரியவில்லை. இத்தகவல் கட்டுரையில் இல்லை. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள இன்பநிலைய வெளியீடு யாரால் மொழிபெயர்க்கப்பட்டது என்பதும் தெரிவிக்கப்படவில்லை. எமது ஊடகங்களே இப்படி இருட்டடிப்புச் செய்கின்றனவே.

 

said ... (15 October, 2006 02:00) : 

கனகர்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முக்கிய தகவலுக்கு நன்றி.
எங்களுக்கெல்லாம் உதுகள் புதுவிசயங்கள்தானே?

 

post a comment

© 2006  Thur Broeders

________________