Wednesday, November 21, 2007

பாமரன் பேட்டையும் இராஜராஜனும்

நான்கு மாதங்களின்முன்பு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்க்க நேரிட்டது. நிகழ்ச்சி தொடங்கி ஓரிரு நிமிடங்கள் தாமதமாகத்தான் பார்க்கத் தொடங்கினேன்.
நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று யோசித்து, பின் கண்டுபிடித்துவிட்டேன். அவர் எழுத்தாளர் பாமரன்.

நிகழ்ச்சியின் பெயர் 'பாமரன் பேட்டை'.

அன்றைய நிகழ்ச்சியில் பாமரனுடனான நேர்காணலுக்கு வந்திருந்தவர் 'பெயர் மாற்றல் நிபுணர்' இராஜராஜன். (அவர் சோழன் என்ற ஒட்டைச் சேர்த்துள்ளதாக நான் அறியவில்லை. பின் எப்படி சயந்தனின் இடுகையில் அவர் இராஜராஜ சோழன் ஆனார் என்பது விளங்கவில்லை. பெயர் மாற்ற நிபுணரின் பெயரையே மாற்றிய நிபுணர் சயந்தன்.)

முன்பு 'சிகரம்' தொலைக்காட்சி இங்கு ஒளிபரப்பாகியபோது, இராஜராஜனின் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. தமிழகத் தொலைக்காட்சியொன்றில் அவர் செய்யும் பெயர்மாற்ற நிகழ்ச்சியே இங்கு மறுஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. எங்காவது இந்நிகழ்ச்சி பார்க்க நேரிட்டால் பொழுதுபோக்காக அவ்வப்போது பார்த்திருக்கிறேன். ரி. ராஜேந்தருக்கு இவர்தான் பெயர்மாற்றினார் என்ற தகவல் அறிந்தபோது மனிதரில் ஒரு சுவாரசியமான ஈர்ப்பு ஏற்பட்டது. (கவனத்துக்குரிய கலைஞர் ஒருவரையே மடக்கிப்போட்டாரே என்ற ஆச்சரியத்தால் இருக்கலாம்). அதன்பின் சிகரம் நின்றுபோனது. தரிசனம் வந்தது. நல்லவேளையாக இந்தக் கோமாளி நிகழ்ச்சிகள் தரிசனத்தில் ஒளிபரப்பாகவில்லை.

இனி பாமரன் பேட்டைக்கு வருவோம்.
தொடக்கத்தில் தனது துறையைப் பற்றிச் சிறு அறிமுகத்தை அளித்தார் இராஜராஜன். பெயர்தான் உலகத்தில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறதென்பது அவரின் அடிப்படை வாதம். பின்னர் நடந்தது சுவாரசியமான உரையாடல்.

** இந்தியச் சிறைகளிலிருக்கும் அனைத்துக் கைதிகளையும் தன்பொறுப்பில் விடுமாறும், அவர்களை தான் பொறுப்பெடுத்து அவர்களின் பெயர்களை மாற்றி, அவர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக மாற்றிக் காட்டுவதாகச் சொன்னார்.
சிறையிலிருந்து விடுதலை செய்து கையளிப்பதா அல்லது சிறையிலிருக்கும் நிலையிலேயே கையளிப்பதா என பாமரன் கேட்க, விடுதலை தேவையில்லை; சிறையில் வைத்தே பொறுப்பளிக்கும்படி இராஜராஜன் கேட்டுக்கொண்டார்.

** தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் பற்றி பாமரன் கேட்க, அவர்தான் உலகப்பயங்கரவாதத்தின் தலைவர் என்பதை இராஜராஜன் தெளிவாகச் சொன்னார். அவரின் பெயரை மாற்றிவிட்டால் அவர் நல்லவராகிவிடுவார், அமெரிக்காவும் உலகமும் நிம்மதியாக இருக்கலாமென்பதையும் இராஜராஜன் சுட்டிக்காட்டினார். அவரின் தந்தைக்கும் புஷ் என்ற பெயர் இருப்பதையும், அவரும் பயங்கரவாதத் தலைவராக இருந்ததையும் சுட்டிக்காட்டி, பெயர்தான் இந்த மனப்பான்மைக்குக் காரணமென்ற தனது வாதத்தை இன்னும் வலுவாக்கினார்.

*சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றி பாமரன் கேட்க, அவருக்கும் அந்தப் பெயர்தான் பிரச்சினையாக இருந்ததென்றும் பெயரை மாற்றினால் அவர்கள் நல்லவர்களாக மாறி நாட்டுப்பிரச்சினை தீர்ந்துவிடுமென்றும் இராஜராஜன் கூறினார்.

** இடங்களுக்கு, நாடுகளுக்குப் பெயர்மாற்றுவது தொடர்பாக நேர்காணல் திரும்பியது.
'பம்பாய்' என்பதை 'மும்பை' என்று மாற்றியது தவறு என்றார் இராஜராஜன். அப்படி மும்பாயாக மாறியபின்புதான் அங்குக் குண்டுவெடிப்புக்கள் வன்முறைகள் என்பன தலைதூக்கின; அதற்குமுன்பு அது அமைதியான நகரமாக இருந்தது என்றார்.
இடையில் குறுக்கிட்ட பாமரன், பெயர் மாற்றத்துக்கு முன்பு நடந்த பல குண்டுவெடிப்புக்கள், அசம்பாவிதங்களைச் சொல்லிக் காட்டினார். அதற்கு, முன்பு குறைவாக இருந்தன, பெயர்மாற்றத்தின் பின்னர்தான் அவை அதிகரித்தன என்றார் இராஜராஜன். பாமரன் மேலும் சில விவரங்களைச் சொல்லப் புறப்பட்டபோது, 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சிகள் செய்துள்ளேன். தகவல்களைச் சேகரித்து வைத்துள்ளேன். இதுதொடர்பாக நான் உங்களுக்கு அவற்றைத் தரமுடியும்' என்று கூறினார். பாமரன் அத்தோடு மும்பாய் விடயத்தைக் கைவிட்டார்.

டில்லியை 'நியு டில்லி' என மாற்றியபின்பு அங்கு அமைதி நிலவுவதாகவும் அதற்குமுன் அங்கும் குண்டுவெடிப்புக்கள், வன்முறைகள் தலைவிரித்தாடின என அடுத்த விடயத்தைத் தொடங்கினார் இராஜராஜன். பாமரன் அதற்கும் சில விவரங்களைக் கொடுத்து, நியுடில்லி எனப் பெயர்மாற்றிய பின்னர்தான் அதிக வன்முறைகள் நடந்தன எனச் சொன்னார். பாராளுமன்றக் கட்டடத் தொடர் மீதான தாக்குதல் உட்பட சிலவற்றைச் சொன்னார் பாமரன். வழமைபோல 'நான் இதுபற்றி நீண்ட ஆராய்ச்சி செய்துள்ளேன்' என்ற பஞ்சாங்கத்தைப்பாடி அதிலிருந்தும் நழுவினார் இராஜராஜன்.

இலங்கைச் சிக்கல் பற்றியும் பேச்சு வந்தது. அது சிலோன் எனப் பெயர் இருந்தவரைக்கும் ஆசியாவின் பூந்தோட்டமாகத் திகழ்ந்ததாகவும், சிறிலங்கா எனப்பெயர் மாற்றியபின்புதான் அங்குப் பிரச்சினை தோன்றியதாகவும் இராஜராஜன் குறிப்பிட்டார்.
பா.: எப்போ இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது?
இரா: கொஞ்ச வருசத்துக்கு முன்னாடிதான்.
பா. அது சிலோனாக இந்தப்பவே 56 ஆம் ஆண்டுக் கலவரம் உட்பட பல பிரச்சினைகள் நடந்தன, தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்...
இரா: ஆமா, ஆனா பெயர் மாத்துறதுக்கு முன்னாடி பெரிசா பிரச்சினை இல்ல. அதுக்குப்பின்னாடிதான் ஒருத்தனை ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சண்டை போட ஆரம்பிச்சாங்க...

** இந்தியாவில் சில முக்கிய புள்ளிகளின் பெயர்களை மாற்றியது இந்த இராஜராஜன் தான். அதுபற்றியும், அப்படிப் பெயர்மாற்றப்பட்டவர்களில் இருவரின் தற்போதைய நிலைபற்றியும் பாமரன் கேள்வியெழுப்பினார்.
ஒருவர், தற்போது விஜய ரி. ராஜேந்தர் எனப் பெயர்மாற்றிக்கொண்டிருப்பவர்.
பெயர் மாற்றத்தின்பின்னான அவரின் தோல்வி குறித்துக் கேட்கப்பட்டபோது,
அவர் தன்னிடம் பெயர்மாற்ற வந்தபோது அரசியல் அனாதையாகத்தான் இருந்தாரென்பதைக் குறிப்பிட்டார் இராஜராஜன். இன்னும் சிலவற்றைச் சொல்லியவர், 2011 இல் ரி.ராஜேந்தர் தமிழகத்தின் மிகமுக்கிய அரசியற்புள்ளியாக வருவார் என்பதை தான் எதிர்வுகூறியதாகவும், அது கட்டாயம் நடக்குமென்றும் உறுதியளித்தார்.

இவரால் பெயர் மாற்றப்பட்ட இன்னொருவர் பா.ஜ.க. திருநாவுக்கரசு.
"அரசராக இருந்தவரை அரசுவாக பெயர் மாற்றினீர்களே, (நான் சொல்வது சரிதானே? அல்லது மறுவளமாகவா?) அந்தப் பெயர் மாற்றத்தின்பின்னர்தான் அவரின் அரசியலில் மிகப்பெரும் வீழ்ச்சியேற்பட்டது. மத்திய அரசில் முக்கியமான அரசியற்புள்ளியாக (அமைச்சராக?) இருந்தவர், பெயர் மாற்றத்தின்பின்னர் சொந்த மண்ணிலேயே போட்டிபோட முடியாத நிலைக்கு ஆளாகவிட்டாரே" என்று பாமரன் கேட்டார்.
அதற்கு இராஜராஜன் அளித்த பதில்தான் சிறப்பானது.

தனது பெயர்மாற்றத்தின்படி அவர் மிகவுயர்ந்த இடத்துக்கு வந்திருக்க வேண்டியவர். ஆனால் அவரின் தவறான அணுகுமுறையால்தான் இப்படியாகப் போனார். தவறான அணுகுமுறையென்ன என்பதை அவர் விளங்கப்படுத்தினார். அதாவது கட்சியைவிட்டு காங்கிரஸ் பக்கம் தாவியிருக்க வேண்டுமாம். சரியான நேரத்தில் தாவாதபடியால் அவரால் முக்கியமான புள்ளியாக வரமுடியவில்லையாம். அவர் சொந்தக் கட்சிக்கு விசுவாசமாக இருக்க நினைத்தார்; அதனால்தான் இப்படி ஆனார். திருநாவுக்கரசுவுக்கு அரசியல் சாணக்கியத்தனம் இல்லை. அதுதான் பிரச்சினையே ஒழிய தனது பெயர்மாற்றத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.
[இவ்விடத்தில் பாமரன் முகத்தில் தெரிந்தது நையாண்டித்தனமான சிரிப்பா அல்லது அதிர்ச்சியா என்பது தெரியவில்லை. ஆனால் மனிதர் ஆடிப்போய்விட்டார்.]

'அப்போ, அவர் வெல்லும் கட்சிக்குத் தாவியிருக்க வேண்டுமென்பதையா சொல்கிறீர்கள்?' என பாமரன் ஒரு தெளிவுக்காகக் கேட்டார்.
இராஜராஜன் அதைத்தான் தெளிவாகத் திருப்பச் சொன்னார். (அதைத்தானையா எல்லா அரசியல்வாதியும் செய்யிறான், இதுக்கெதுக்குப் பெயர் மாற்றம்?)

** தந்தை பெரியாரைப் பற்றியும் பேச்சு வந்தது. அவருக்குப் பெரியார் என்ற பெயர் வந்தபிறகுதான் அவர் பிலபலமானார் என்று இராஜராஜன் கூறினார். பெரியார் என்ற பெயர்பற்றி பாமரன் ஏதோ குறுக்கிட, 'மக்கள்தான் அந்தப் பெயரை அவருக்குக் கொடுத்தார்கள், அதன்பின்னர்தான் அவர் பிரபலமானார்' என்று இராஜராஜன் கூறினார்.
பாமரன்: அப்போ நீங்களும் பெரியார் என்ற பெயரை வைத்திருக்கலாமே? பிரபலமாவதோடு சமூகத்துக்கும் நல்லது செய்திருக்கலாம். ஏன் இராஜராஜன் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
அதற்கு இராஜராஜன் பெரிதாகச் சிரித்தபடி பாமரனுக்கு நக்கல் தொனியில் பதிலளிக்கிறார்,
"அட என்னங்க நீங்க?... இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு புரட்டுப் புரட்டப் போகிறேன் என்கிறேன், என்னைப்போய் பெரியார் என்று பெயர் வைக்கச் சொல்கிறீர்கள்? ராஜராஜன் என்ற பெயர்தான் இதற்குச் சரி."

அத்தோடு பாமரன் அடுத்த விடயத்துக்குத் தாவிவிட்டார்.;-).

** நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் இராஜராஜனைப் பார்த்து,
'முன்பு கூட்டங்களில்தான் பேசிக்கொண்டிருந்தீர்கள், இப்போது தொலைக்காட்சியிலும் இடையறாது வருகிறீர்களே?' என்று கேட்டதற்கு அதைப் பெருமைபொங்க ஒப்புக்கொண்டார் இராஜராஜன். தனது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேர அட்டவணையைச் சொன்னார்.

பாமரன்: முன்பெல்லாம் சின்னக்குழந்தைகளுக்கு உணவூட்ட உம்மாண்டி வருது என்று பயங்காட்டிச் சோறூட்டுவார்கள் தாய்மார், இப்போது இராஜராஜன் ரீவியில் வரப்போறார் என்று சொல்லித்தான் உணவூட்டுகிறார்களாம், உண்மையா?
[பாமரனின் இந்தக் கேள்வி எனக்கு பண்பற்றதாகவே தோன்றியது. என்னதான் ஒரு கோமாளியை முன்னிருத்திவைத்து நேர்காணல் செய்தாலும் இப்படி அவமதிக்கக்கூடாது. அதுவும் நாமே நேர்காணலுக்கு அழைத்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாதென்பது என் கருத்து.]

ஆனால் எந்தச் சலனமுமில்லாமல் சிரித்துக்கொண்டே, ஆஆ... அப்படியா? என்று கேட்டார் இராஜராஜன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னர் பார்த்த நிகழ்ச்சி. இன்னும் சில சுவாரசியமான சம்பவங்கள் விடுபட்டிருக்கின்றன என நினைக்கிறேன்.

இவ்விடுகையெழுதத்தூண்டிய சயந்தனுக்கு நன்றி.

Labels: , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, February 07, 2007

நான் பெரிய ஆள் -1 : நானெழுதிய கவிதைகள்

குரற்பதிவும் இடப்பட்டுள்ளது.
கேட்டுக்கொண்டே வாசியுங்கள்.

EnKavithaihal.mp3


கவிதை ஒன்று - விலகுகிறது இருள்

நதி,
விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி
அவர்களின் மொழியிலேயே
அருமையாக எழுதியிருக்கின்றீர்கள்.
சுகுணா திவாகர்
கூறிய வியப்புத்தான் -
எழுத்து நடையைப்பார்த்து-
எனக்கும் வந்தது.
....
புதிய மொழிநடைகள்,
பரந்த வாசிப்பு,
பன்முகப்பட்ட்ட முயற்சிகள்
இல்லாமற்தான்
புலம்பெயர் இலக்கியம்
தேங்கிக்கிடக்கின்றது.
தேக்கமுடைக்கும் புள்ளிகள் -முக்கியமாய்
உங்களைப் போன்ற
பெண்படைப்பாளிகளிடமிருந்து
புலத்தில்(?) ஆரம்பிப்பது
உண்மையிலேயே
மகிழ்ச்சி தருகின்றது.

ஈழத்துக் கவிதைகளுக்கு
ஒருகாலத்தில்
தமிழ்ச்சூழலில் மதிப்பிருந்ததுபோல
இனி மீண்டும் வருவதாயிருந்தால்
அது புலத்தில்/ஈழத்தில்
எழுதும்
பெண்படைப்பாளிகளால்தான்
வரமுடியும் என்று
யோசித்துக்கொண்டிருந்தேன்.

இருள்
விலகுகிறது போலும் :-)..

~~~~~~~~~~~~~~~~~
கவிதை இரண்டு -ஏன் வரவில்லை பாராட்டு?

இந்த மாதிரியான
நல்ல கதைகளைத் தேடி
ஏன் அதிகமும்
பாராட்டுகள்
வருவதில்லை?
சிந்தாநதி
பங்காளி
போன்ற
உங்கள் ரசிகப்பரிவாரங்கள்
எங்கே?
ஒருவேளை
நான் பாராட்டினால்
அதிகமாய்
பாராட்டுக் கொமொண்ட்கள்
குவியுமோ என்னவோ?

_________________________________
மேலே இடப்பட்டவை கவிதையா என்று சந்தேகம் கொள்பவர்கள் தயவு செய்து என் குரற்பதிவைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கவும்.
_________________________________
"வசந்தன், சுகுனாதிவாகர், டிசே போன்ற பெரிய ஆட்களெல்லாம் நிறையச் சொல்லிவிட்டபடியால்"
என்று என்னையும் மற்றவர்களுடன் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட்ட அம்மணி செல்வநாயகியின் வாக்குப் பொய்க்கக் கூடாதென்பதற்காக சிரமப்பட்டு நானெடுத்த முயற்சியிது.
ஆம்! நானும் பெரிய அள்தான்.

இதன் முதற்கட்டமாக நானெழுதிய இரு கவிதைகளை இங்குத் தந்துள்ளேன்.
கவிதை எழுதியது நானென்றாலும் அதன் பாடுபொருள், என்னோடு 'பெரிய மனிதர்கள்' பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்ட மற்ற இருவருக்குமுரியது.
தமிழ்நதியின் "அந்த எசமாடன் கேக்கட்டும்" என்ற பதிவில் அவர்கள் இருவரும் இட்ட பின்னூட்டங்களை அடிப்படையாக வைத்து நானெழுதிய கவிதைகளே மேலே தரப்பட்டவை.

பெரிய ஆளென்று உறுதிப்படுத்தும் அடுத்த கட்டம் கதையெழுதுவதுதான்.
யாருடைய கருத்தாவது மாட்டாமலா போய்விடும்?

எதிர்பார்த்திருங்கள் "நான் பெரிய ஆள்-2".
அதுவரை வணக்கம் கூறிவிடைபெறுவது

அ.ஆ.இ. வசந்தன்.........

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Tuesday, April 26, 2005

ரஜனியின் விஸ்வரூபம்

சந்திரமுகியில் தலைவர் பின்னியெடுத்திருக்கிறார். ரஜனி படத்துக்குரிய அத்தனை சூத்திரங்களையும் உள்ளடக்கி (அரசியல் உட்பட) வெளிவந்து சக்கை போடு போடுகிறது சந்திரமுகி. ஏறத்தாழ 3 வருடங்களின் பின் வரும் படமிது. பாபா படத்தோல்வியில் துவண்டிருந்த ரசிகர்களுக்கு நல்ல தீனி. எல்லோரும் ‘ஜென்ம சாபல்யம்’ அடைந்து விட்டார்கள். பிறவிப் பயனை அடைந்த அவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்தாலே புரியும். இனி படத்திற்கு வருவோம்.

திரைக்கதை அழகாக அமைக்கப்பட்டுள்ளது. மணிச்சித்திரதாழின் படி தானென்றாலும் அருமையாக கதை பின்னப்பட்டுள்ளது. அழகான படியெடுப்பாளன் என்ற பட்டம் வாசுவுக்குத் தரலாம். ரஜனி பின்னியெடுத்திருக்கிறார். அவர் அறிமுகமாகும்போது சருகுகள் அந்தரத்தில் நிற்பது அழகான ‘சூப்பர்’ கற்பனை. அறிமுகக் காட்சியில் அவர் ஆட்களைத் துவைத்தெடுப்பது கலக்கல். பிரபுவும் நடித்திருக்கிறார். அடிக்கடி அவர் சீரியசாகக் கதைக்கும்போது எல்லோரும் சிரிக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை.

வடிவேலு நகைச்சுவைக்காக வருகிறார். ஆனால் நிறைய காட்சிகள் அருவருப்பாக இருக்கின்றன. நாசர் ஒப்புக்கு நடித்துள்ளார். படம் முழுவதும் ரஜனி ஆதிக்கம் தான். ஜோதிகா கடைசி 30 நிமிடங்களில் தான் யாரென்று நிருபிக்கிறார். அழகான ஆக்ரோசமான நடிப்பு. சந்திரமுகியின் ஆவி புகுந்த பின் அவரின் நடிப்புத்திறன் ‘சூப்பர்’.

இசை பரவாயில்லை ரகம். தேவுடா பாட்டு வழமையான ரஜனியின் அறிமுகப் பாட்டுக்கள்(opening song) போல் வரவில்லை. படத்தில் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் வருகின்றன. அறிவியல் உண்மைகளின் படிதான் எல்லாக் காட்சிகளும் போகிறது என்று சொல்ல முடியாது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் அறிவியல் உண்மைகளை எதிர்பார்க்க முடியாது. இதில் மிகை நடிப்பு இருப்பதாகவும் சொல்ல முடியாது. ஆனால் இருப்பதாகப் படுகிறது. மிகக் கவனமாக மூடநம்பிக்கை பற்றிய விமர்சனங்களிலிருந்து தப்புகிறது. ஆனால் மூடநம்பிக்கை ரசிகர்களையும் திருப்திப்படுத்துகிறது. அது எப்படி சாத்தியப்படுகிறது என்பதில்தான் நெறியாள்கையின் (டைரக்சன்) திறமை உள்ளது. உண்மையில ஆவி இருப்பதாகச் சொல்லப்படுகிறதா? அல்லது அதெல்லாம் பொய், வெறும் ‘பிளவாளுமை’ என்று சொல்லப்படுகிறதா? தீர்மானமாச் சொல்ல முடியாது. நல்ல பட்டிமன்றம் ஒன்றுக்கான அருமையான தலைப்பு.

படத்தில் ஒரு பாம்பு காட்டப்படுகிறது. அது ஏன் என்று பலரும் குழம்புகிறார்கள். அதில்தான் படத்தின் மையமே இருக்கிறது. அதை பலவிதமான வாசிப்புக்கு உட்படுத்தலாம். எப்படியெப்படி வாசிக்கலாம் (பாக்கிறதைத் தான் சொல்லிறன்) என்பதை நான் இங்கே சொன்னால் சுவையில்லை. உங்களின் அனுமானத்துக்கே விட்டுவிடுகிறேன்.

மேற்குறிப்பிட்டவைகள் அனைத்தும் உண்மையா என்பதை இனி படம் பார்க்கும்போதுதான் தெரிந்துகொள்ள வேண்டும்.
அப்ப இன்னும் படம் பார்க்கவில்லையா? என்று கேட்கிறீர்களா?
இல்லை. படம் பார்க்கவில்லை.
பிறகெப்படி இவ்வளவும் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா?
தமிழ்மணத்தில் சந்திரமுகி பற்றி எழுதப்பட்ட பதிவுகளில் பொறுக்கியைவதாம். மேற்கூறியவைகள் எவையும் என் கருத்துக்களே அல்ல.
அப்போ ஏன் எழுதப்பட்டது? என்று கேட்கிறீர்களா?
அதுதான் முக்கியமே. இப்போது கொஞ்ச நாட்களாக எழுத முடியாமல் நிறைய வேலை. பரீட்சைகள் வேறு நெருங்கி வருகிறது. கொஞ்ச நாளா எழுதுவதில்லை என்று இருந்த நான் திடீரென்று அவசர அவசரமாக இந்தப் பதிவை எழுதுகிறேன். ஏனென்றால்;

சந்திரமுகி பற்றி நாலு வார்த்தை எழுதாவிட்டால் எங்கே நாம் தொலைந்து போவோமோ, மறக்கடிக்கப்பட்டு விடுவோமோ, தனித்துப் போய்விடுமோ என்று எழுந்த பயத்தில், கும்பலில் கோவிந்தாவாக கோசம் போட்டு எழுதின பதிவுதான் இது.
என்னையும் உங்கள் ஆலாபனையில் சேர்த்துக்கொள்வீர்கள் தானே.
சந்திர முகிக்கு ஒரு ஓ............

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, March 19, 2005

"படலையும்" பால்ய நினைவும்.

வணக்கம்!
இந்த முறையும் நான் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒண்டச் சொல்லப்போறன். போன முற நான் என்ர குரலில கதைச்சு உங்களக் கேக்க வச்சன். ஆனா ஒருத்தரும் அந்த ஒலிப்பதிவு முயற்சியப் பற்றி ஒண்டும் சொல்லேல. அது வேல செய்யுதோ இல்லையோ எண்டு கூட சொல்லேல. இந்த முற அந்த ஒலிப்பதிவு இல்லாமல்தான் போடுறன்.

மதியக்கா சொன்னதுக்காக ஒலி வடிவத்தப் போட்டிருக்கிறன். கீழ இருக்கிற செயலியளில ஒவ்வொண்டையும் முயற்சித்துப் பாருங்கோ.

Padalai.mp3









இல்லாட்டி கீழயிருக்கிற இணைப்புக்கள அழுத்திப் பாருங்கோ.
இணைப்பு ஒன்று
இணைப்பு இரண்டு
இணைப்பு மூன்று.

ஊரிலயிருந்து இடம்பேந்து (இடம்பெயர்ந்து) மானிப்பாயில தங்கியிருந்த காலம். அப்ப பின்னேரப் பள்ளிக்கூடம்தான் எங்களுக்கு. பின்னேரம் பள்ளிக்கூடத்தில இருக்கிறதும் பகலில வீட்டில இருக்கிறதும் உடனடியா ஒத்து வரேல. அதோட மானிப்பாய்ப் பெடியளுக்குக் காலமயும், எங்களுக்குப் பின்னேரமும் எண்டு பள்ளிக்கூடம் இருந்ததால அவங்களோட பழகி சினேகிதம் பிடிக்கிறதுக்குக் கொஞ்ச நாளெடுத்திச்சு. இதுக்கு உதவியா இருந்தது தனியார் நடத்திற ரியூசன் தான். சனி ஞாயிறில எல்லாருக்கும் ஒண்டாத்தான் வகுப்புகள் நடக்கிறதால எல்லாரும் பழகி சினேகிதம் பிடிச்சம்.

இப்பிடியா இருக்கேக்க, ஒருநாள் விஞ்ஞான வாத்தி வராதபடியா சும்மா வகுப்பிலயிருந்து எங்களுக்குள்ள கதச்சுச் கொண்டிருந்தம். அப்ப ஊரிலயிருந்து ஓடி வரேக்க நடந்த அனுபவத்த அவயளுக்குச் சொல்ல வேண்டி வந்துது. என்னச் சுத்தி அஞ்சாறு பேர் கத கேட்டுக்கொண்டு இருந்தீச்சினம். (அங்காலயிருந்த கொஞ்சம் “பாரடா உவன. நல்லா செல் குத்துறான்” எண்டு பொருமிக்கொண்டு இருந்தது கடைக்கண்ணால பாக்கத் தெரிஞ்சது). என்ர கதயச்சொல்லிக்கொண்டு வரேக்க
எதிர் வீட்டு லீலியாச்சியின்ர படலேக்க ஒரு செல் விழுந்தீச்சு
எண்டு ஒரு இடத்தில சொன்னன்.

என்னது.. படலையோ… அப்பிடியெண்டா?”
எண்டு கத கேட்டுக்கொண்டிருந்த ஒருத்தன் சந்தேகமாக் கேட்டான்.
என்ன?... படலையெண்டா உனக்கு என்னெண்டு தெரியாதோ? எனக்கு வண்டில் விடுறியோ?”
எண்டு அவனக் கேட்டன். பிறகுதான் பாத்தா கத கேட்டுக்கொண்டிருந்த மற்ற நாலு பேருக்கும் தெரியாது. சுதுமலைக்காரன் ஒருத்தன் மட்டும்
நான் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனா நாங்கள் பாவிக்கிறேல.” எண்டு சொன்னான். இதென்ன கோதாரி? படலையெண்டா என்னெண்டு தெரியாமலும் மனுசர் இருக்கினமோ (அது தெரியாட்டி தமிழே தெரியாது எண்டது மாதிரி அப்ப நினச்சனான்) எண்டு திகச்சுப்போனன். நேரா வீட்டுக்கு வந்து நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்காரரிட்ட (அவயளுக்கு மானிப்பாய் தான் சொந்த இடம்) கேட்டன். அவயளுக்கும் தெரியேல. கிழிஞ்சுது போ… எண்டு போட்டு அம்மாவிட்ட போய்
அம்மா அவேக்கு படலையெண்டா என்னெண்டு தெரியாதாமெல்லே...”
எண்டு ஒரு இளப்பாரமா சொன்னன். அம்மா என்ன வேலயில அல்லது கொதியில நிண்டாவோ தெரியேல (அவ பள்ளிக்கூடத்தில ரீச்சர், அதுவும் கணக்குப்பாடம்) என்ர கதய காதிலயே வேண்டேல. அதுக்குப் பிறகு படலயெண்டா என்னெண்டு தெரியுமோ எண்டு காணுகிற சிலரிட்ட கேட்டுப்பாத்தன். சிலருக்கு அதின்ர பொறிமுறை செயல்முறையெல்லாம் கீறி விளங்கப்படுத்தினனான்.

ஒரு விசயம் சொல்ல வேணும். மானிப்பாயில நாங்கள் இருந்த பகுதியில பெரும்பாலும் எல்லாம் கல் வீடுகள் தான். சுத்துமதிலெல்லாம் கட்டி வசதியாத்தான் இருந்தீச்சு. எல்லா வீட்டுகளுக்கும் தகர கேற் போட்டிருந்தவை. ஆத கேற் எண்டு தான் சொல்லிறவை. (வேற என்னெண்டு சொல்லிறது?) அதாலதான் எங்கட படல பற்றி இவைக்குத் தெரியேல. “சரி இதுக்குள்ளயே எங்கயெண்டாலும் படலை இல்லாத வீடொண்டு காணக்கிடைக்காமலே போகப்போகுது. அப்ப தெரியும் தானே” எண்டு விட்டுவிட்டேன். இதுக்குள்ள வேறயும் சில சொல்லுகள் இப்பிடி அவயளுக்குத் தெரியாமல் இருக்கிற பட்டியலில சேந்திட்டுது. இதுபற்றிப் பிறகொருக்கா எழுதிறன்.

ஒருநாள் பெடியளோட நாவாலிப்பக்கம் போக வேண்டி வந்திட்டுது. அப்ப தான் நான் தேடிக்கொண்டிருந்த படலையைக் காணிற சந்தர்ப்பம் கிடைச்சுது. சடாரெண்டு பாதையிலயே சைக்கிள நிப்பாட்டிப்போட்டன். சின்னதா மண்ணெண்ணை பரல் தகரத்தில சட்டமடிச்சு ஒரு யார் அகலத்தில ஒரு படலை. அதுக்கு தானாக மூடக்கூடியமாதிரி பாரம் கட்டிவிட்டிருந்தீச்சினம். படலையில ஒரு சிலுவையும் “அறையப்பட்டிருந்தீச்சு”. படலைக்க ரியூசனுக்குப் போறதுக்காக்கும் புத்தகங்களோட ஒரு அக்கா நிண்டு கொண்டிருந்தா. (அப்ப எனக்கு ஆக 13 வயதுதான்). நான் நிண்டோடன கொஞ்சம் தாண்டிப் போய் பெடியளும் நிண்டிட்டாங்கள். நான் கொஞ்சமும் வெக்கப் படாமல் நேரா அவவிட்டப் போய்
அக்கா இத என்னெண்டு சொல்லிறனியள்?”
எண்டு அந்தப் படலையக் காட்டிக் கேட்டன். அக்கா கொஞ்சம் குழம்பித்தான் போனா. பின்னயென்ன?.. முன்னபின்ன தெரியாத ஒருத்தன் இப்பிடி அதிமுக்கியமான ஒரு கேள்வி கேட்டா? கொஞ்சம் யோசிச்சவ (நிச்சயமா அதின்ர பேர யோசிக்கேல. இவன் ஏதாவது குறளி வேல பாக்கிறானோ? இல்லாட்டி இரட்டை அர்த்தத்தில ஏதாவது கேக்கிறானோ எண்டு தான் யோசிச்சிருப்பா) பிறகு பதில் சொன்னா.

கேற்”.
எண்டு அவ பதில் சொன்னோடன கொடுப்புக்க வந்த சிரிப்ப அடக்கிறதுக்குச் சரியாக் கஸ்டப்பட்டனான். திருப்பவும் கேக்கிறன்
இத கேற் எண்டே சொல்லிறனியள்?”
“ஓமோம். கேற் எண்டு தான் சொல்லிறனாங்கள்
."

சரியாப் போச்சு. அக்கா படலை எண்டு சொல்லுவா எண்ட எதிர்பார்ப்போட போய் அசடு வழிஞ்சு கொண்டு திரும்பின என்னப் பாத்ததும் பெடியளுக்குக் குழப்பம்.
என்னடா கதச்சனி?”
“ஒண்டுமில்லடா. அத என்னெண்டு சொல்லிறனியள் எண்டு கேட்டனான்
.”
அவங்கள் ஒருத்தருமே நம்பேல நான் இதத்தான் போய்க்கேட்டனான் எண்டு. பின்ன? ஆராவது ஒருத்தன் இப்படி விவஸ்தை இல்லாமல் போய் “படலை” தேடிக்கொண்டு திரிஞ்சிருப்பானா?

அண்மையில் தொலைக்காட்சியொண்டில “படல படல” எண்டு ஒரு நிகழ்ச்சியின்ர விளம்பரம் பாத்தன். ஆதில வாற விளம்பரப் பாட்டக் கேக்கேக்க வழமையா இந்திய நகைச்சுவைத் தொடர்களுக்கு வாறமாதிரியே தான் இருந்தீச்சு. அட அங்கயும் படல எண்ட சொல்லப் பாவிக்கினம் போல கிடக்கே எண்டிட்டு விட்டிட்டன். (நகைச்சுவை உட்பட எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியளையும் பாக்கிறதில்ல. தவிர்க்க ஏலாமல் எங்கயாவது மாட்டுப்பட்டுப் பாத்தாச் சரி.) ஒருநாள் தற்செயலா அந்த படல படல தொடரப் பாக்க வேண்டி வந்தீச்சு. அட… எங்கட தமிழ். பத்து வருசத்துக்கு முந்தி வரைக்கும் நான் கேட்ட, பேசின தமிழ். அதே உச்சரிப்பு, அதே லயம். குறிப்பாக அதே வேகம். நெஞ்சு ஒருக்கா குளிந்திது பாருங்கோ. அதுக்குப் பிறகு என்ன கஸ்டப்பட்டெண்டாலும் "படல படல" பாக்கிறதெண்டு வெளிக்கிட்டிட்டன். அதில எங்கட சனத்தின்ர குசுகுசுப்புக்களும் விடுப்புக் கேக்கிற தன்மையும் வியாக்கியானம் செய்யிற லாவகம் எண்டு அத்தனையும் அப்பிடியே வரும். எழுதி வச்சு வாசிக்காமல், பாடமாக்கி ஒப்பாமல் இயல்பா வாற அந்தக் கததான் பிடிச்சிருக்கு. நான் மொழி நடைக்காக ரசிக்கிற இன்னொரு தொடர் "நையாண்டி மேளம்". தமிழ் சினிமாவில யாழ்ப்பாணத்தமிழ் பயன்படுத்த நினைக்கிற ஆக்களுக்கு கேட்டுப்பழகிறதுக்கு நான் சிபாரிசு செய்யக் கூடிய ரெண்டு நிகழ்ச்சிகள் இதுகள்தான். (ஆராவது கமல், மணிரத்தினத்துக்குச் சொல்லுங்கோ)

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, March 13, 2005

கால் பிரேக்…- “ஒர் அலசலும் அனுபவமும்.”

வணக்கம்!

இங்கே எனது பதிவின் ஒலி வடிவத்தையும் இணைத்துள்ளேன். அதை என் பேச்சுத் தமிழிலேயே பதிவு செய்துள்ளேன். தரம் குறைவென்றாலும் விளங்கக் கூடியமுறையில் உள்ளது. செயலி தொழிற்படாவிட்டால் கீழுள்ள உரலை கிளிக்கி கேட்டுக்கொள்ளுங்கள். ஒலி வடிவ முயற்சி பற்றிய உங்கள் கருத்துக்களைத் தவறாது எழுதுங்கள்.




http://www.geocities.com/maathahal/Voice/Aboutcylebreak.rm
இல்லாவிட்டால் இங்கே முயற்சியுங்கள்.
இல்லாவிட்டால் இங்கே முயற்சியுங்கள்.
இதுவுமில்லையென்றால் உங்கள் அதிஸ்டம் அவ்வளவுதான். (என் அமுதக் குரலைக் கேட்க முடியாமற்போகும்)

சைக்கிள் ஓட்டத் தெரிஞ்ச உங்களுக்கு கால்பிரேக் அடிக்கிறதப் பற்றித் தெரியும். சரியான முறையில பிரேக் இல்லாத சைக்கிளுகளுக்கு பிரேக் அடிக்க காலைப் பாவிக்கிறது தான் அந்த முறை. சிலர் ரெண்டு காலையும் பாவிப்பினம், சிலர் ஒத்தக் காலப் பாவிப்பினம். செயின் கவர் இருந்தாத் தான் ரெண்டு காலும் பாவிக்கலாம். கால் பிரேக் அடிக்கேக்க வால்வ்கட்டை களண்டு காத்துப் போன சம்பவங்களும் இருக்கு. கூடுதலா றிம்மில பிரேக் அடிக்கிற ஆக்களுக்குத்தான் அப்படி. (யாழ்ப்பாணமெண்டாலும் பரவாயில்ல. வன்னியில இப்படி கால்பிரேக் அடிக்கேக்க காத்துப்போய் மைல்கணக்கில சைக்கிள் உருட்டியிருக்கிறம்.) சிலர் டயரில குதிக்காலத் தேச்சு அடிப்பினம். சிலர் றிம்மில குதிக்காலத் தேச்சு அடிப்பினம். இப்பிடி கால்பிரேக் பற்றிக் கதைச்சுக் கொண்டே போகலாம்.

யாழ்ப்பாணத்தில சைக்கிளுக்கு கால்பிரேக் அடிக்கிறது சர்வசாதாரணம். பொம்பிளயள் பெரிசா அடிக்கிறேல. ஆனா கவுரவம் அதுஇது எண்டு பாக்காத ஆக்களெல்லாம் கால்பிரேக் அடிக்கிறதப் பற்றி யோசிக்கிறேல. பெட்டையள் பாக்கிறாளவ எண்டுகூட கவலப்படிறேல. அவ்வளவுக்கு கால்பிரேக் அடிக்கிறதெண்டது சர்வசாதாரணம். சைக்கிள் பிரேக் பிசகினாலும் பிசகும் கால்பிரேக் ஒருக்காலும் பிசகாது. கால் பிரேக் அடிச்சுப் பழகினவனுக்கு சைக்கிளில புது பிரேக் பூட்டிக் குடுத்துப் பாருங்கோ, அவன் கால்பிரேக் தான் அடிப்பான். கால் தன்னிச்சையா பொசிசனுக்கு வந்திடும். அதிலயிருந்து மீளிறதுக்குக் கொஞ்ச நாளெடுக்கும்.

இப்ப கால்பிரேக் அடிக்கிறதப் பற்றி நான் பாத்த சுவாரசியமான சம்பவமொண்டச் சொல்லப்போறன்.

போன வருசம் யாழ்ப்பாணத்திக்குப் போனனான். கிட்டத்தட்ட பன்ரெண்டு வருசத்துக்குப் பிறகு சொந்த ஊருக்குப் போறன். அங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரிண்ட வீட்டுக்குப் போனன். ஆள் எங்களுக்குத் தூரத்துச் சொந்தம் தான். நானறிய அந்தாள் எந்த நேரமும் தண்ணியில மிதக்கிறவர். தண்ணியெண்டு நான் சொல்லிறது பனங்கள்ளத்தான். ஒரு பறணச் சைக்கிளில (அதுக்கு செயின்கவர், மட்காட், பெல் எண்டு எதுவுமிருந்ததா ஞாபகமில்ல.) தான் மனுசன் திரியும். கூத்து நடிக்கிறதிலயும் பாடுறதிலயும் ஆள் விண்ணன். கிட்டத்தட்ட ஒரு அண்ணாவி மாதிரி. செயின்கவர் இல்லாட்டியும் மனுசன் ரெண்டு காலாலையுந்தான் பிரேக் அடிப்பார். எனக்கு அது ஆச்சரியமாத்தான் இருந்திச்சு. இருக்கிற சீற்றிலயிருந்து கீழ வாற பாரில ரெண்டு பாதத்தின்ர முன்பக்கத்தையும் சேத்து வச்சுக் கொண்டு ரெண்டு குதியாலயும் பிரேக் அடிக்கிறது சாதாரணமா செய்யக்கூடியதில்ல.

சரி. இனி என்ன நடந்ததெண்டு சொல்லிறன். நான் அவரிண்ட வீட்ட போகேக்க மனுசன் எங்கயோ வெளிக்கிட்டுக் கொண்டு இருந்தார். சைக்கிள உருட்டிக் கொண்டு படலைக்க வரவும் நானும் அங்க போய் இறங்கவும் சரியா இருந்தீச்சு. ஆள் நல்ல நிதானமாத்தான் இருந்தார். ஆனா ரெண்டு குதிக்காலிலயும் பெரிய கட்டு. ரெண்டு நுனிக்காலாலயுந்தான் உன்னி உன்னி நடந்து வாறார். என்னக் கண்டதும் ஆள் உடன மட்டுக்கட்டாட்டியும் பிறகு பிடிச்சிட்டார். ‘இரடாப்பா ஒருக்காப் போட்டு வாறன்’ எண்டிட்டு வெளிக்கிட்டார். எனக்குத் தெரியும் மனுசன் எங்க போகுதெண்டு. வேறயெங்க தவறணைக்குத்தான். அவற்ற காண்டிலில கொழுவியிருக்கிற பைக்குள்ள இருக்கிற பிளா சொல்லிப் போட்டுது. அவர் ஒரு பொலிசி வச்சிருக்கிறார். அதென்னெண்டா தவறணையில எல்லாரும் பாவிக்கிற பிளாவில குடிக்க மாட்டார். அவங்கள் புதுசாத்தந்தாலும் குடிக்கமாட்டார். தானே தனக்கெண்டு பிளா செய்து கொண்டுபோய்க் குடிப்பார். தவறணையால ஆள் திரும்பி வரேக்க கதைக்கக் கூடிய நிலையில ஆளிருக்காது எண்டது விளங்கீற்றுது.

‘என்னண்ண நடந்தது காலில?’ இது நான்.
‘அதொண்டுமில்ல’ எண்டு சடைஞ்சவர்
‘பிறகு வந்து சொல்லிறன்’ எண்டிட்டு வெளிக்கிட்டிட்டார்.

நானும் சரியெண்டு வீட்டுக்க போனன். வழமையான புதினங்களெல்லாம் கதைச்சு முடிஞ்சப் பிறகு அவருக்கு காலில என்ன நடந்ததெண்டு அங்கயிருந்தவேற்ற கேட்டன். பெடிபெட்டயளெல்லாம் விழுந்துவிழுந்து சிரிக்குதுகள். பிறகு வெளிநாட்டிலயிருந்து கலியாணத்துக்கெண்டு வந்து நிண்ட அவரிண்ட மச்சான்காரன்தான் சொன்னார் என்ன நடந்ததெண்டு.

ஒருநாள் இரவு எட்டுமணிபோல மச்சான்காரன் ஹீரோ ஹொண்டா மோட்டச்சைக்கிளொண்டில றோட்டால வந்துகொண்டிருக்கேக்க எங்கட கதாநாயகன் நல்ல மப்பில சைக்கிளயும் விழுத்திப்போட்டு நிக்கிறார். ஆளுக்கு இடம்வலமொண்டும் தெரியாமக்கிடந்திருக்கு. உடன மச்சான்காரன் பக்கத்து வீடொண்டில சைக்கிள விட்டுட்டு கதாநாயகன மோட்டச்சைக்கிளில ஏத்திக்கொண்டு வீட்ட விட வந்திருக்கிறார். மனுசன் மோட்டச் சைக்கிளில பின்னாலயிருந்து கொண்டு பெலத்த சத்தமா சங்கிலியன் கூத்துப்பாட்டு பாடிக்கொண்டு வந்திருக்கிறார். (மனுசனுக்கு முட் வந்திட்டா சங்கிலியன், ஞானசவுந்தரி, செபஸ்தியார் எண்டு எல்லாக்கூத்தும் நடக்கும். நான் கூத்தில பைத்தியமானதே மனுசனிண்ட பாட்டக்கேட்டுத்தான்),

ஒரு ஒழுங்கைக்க திரும்பேக்க எதிர லைற் போட்டுக்கொண்டு ஒரு மோட்டச்சைக்கிள் வந்திருக்கு. எங்கட கதாநாயகனுக்கு ஏதோ தான் சைக்கிள் ஓடுறதெண்ட நினைப்பு. தன்ன இடிக்க வாறமாதிரி தெரிஞ்ச உடன மனுசன் ரெண்டு காலயும் தூக்கி அடிச்சாரே ஒரு கால்பிரேக். ஓடிக்கொண்டிருக்கிற மோட்டச் சைக்கிளிலயிருந்து கால்பிரேக் அடிச்சா எப்பிடியிருக்கும்? அப்பிடியே அள்ளீற்றுது. இவ்வளவும் கலியாண வேலப்பரபரப்புக்க நடந்திச்சு. சனத்துக்கு வியாக்கியானம் செய்ய நல்ல ஒரு கத கிடச்சிட்டுது.

நான் நினக்கிறன் மனுசன் அண்டையோட கால்பிரேக் அடிக்கிறத மறந்திருக்குமெண்டு.

குறிப்பு:
சிலருக்கு நான் பாவிச்ச சில சொல்லுகளின்ர பொருள் தெரியாமலிருக்கலாம். அதுக்காக நான் அப்பிடி நினைக்கிற சொல்லுகளின்ர கருத்துக்கள கீழ தாறன்.

படலை: இது கேற் மாதிரித்தான். வளவுக்க இருந்து வெளிய போற பாதை. ஆனா சின்ன ஒரு இடைவெளி (கிட்டத்தட்ட ஒண்டரை யார்) மட்டுந்தான் இருக்கும். ஆக்களும் சைக்கிள் மற்றது மோட்டச்சைக்கிளுகளும்தான் இதுக்கால போய் வரலாம். கிராமங்களில கூடுதலா இதுதான் இருக்கும்.
ஒழுங்கை: சின்னப் பாதை. பிரதான பாதையளிலயிருந்து பிரிஞ்சுவாற கிளைப் பாதையள். பெரும்பாலும் தார் போடப்பட்டிருக்காது. (அந்த நேரத்தில பிரதான வீதிகள் கூட தாரில இருக்காது.)
தவறணை: கள்ளு விக்கிற இடம். அங்கேயே வாங்கி அங்கேயே குடிப்பது.
பிளா: கள்ளுக்குடிக்க பாவிக்கிற பாத்திரம். பனையோலையாலேயே செய்யப்பட்டது. தோணி மாதிரி இருக்கும்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Friday, January 07, 2005

சாவின் விளிம்பில்...

உங்கள் சாவு எப்போது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
போங்கள் இங்கே.
போய் வந்த பின் "மவனே என் கையால தாண்டா உனக்குச் சாவு" என்று என்னை அடிக்க வராதீர்கள்.
இது யாழ் இணையத்திலிருந்து சுட்டது.
அது சரி, அந்த செக்கன்கள் குறைந்துகொண்டிருக்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது? (எனக்கு எதுவுமே தோன்றவில்லை). "புகைப்பவர்" (smoker) எண்டு குடுக்கேக்க 7 வருசமெல்லே குறைக்கிறானுகள் பாவியள்.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Saturday, December 25, 2004

வெற்றித் திரைப்படம் எடுப்பது எப்படி?

இவ்வலைத்தளத்தில் அன்பே சிவம் பற்றி நானெழுதியதைப் பார்த்த நண்பனொருவன் என்னுடன் கதைக்கும்போது, இது சிறந்த படமாக இருந்தால் தோல்வியடைந்தது ஏன்? (அவன் அதைச் சிறந்த படமாக ஏற்கவில்லை.) என்று வினவினான். “உன்னைப் போல் நிறையப்பேர் நல்ல படமில்லை என்று நினைப்பதால்தான்” என்று கூறி அத்தோடு பேச்சை முடித்து விட்டேன். ஏன் இக்கேள்வியை வலைத்தளத்திற் பதியவில்லை எனக்கேட்டதற்கு, தனக்குத் தமிழில் எழுதும் வழிமுறை தெரியவில்லை எனச் சடையத் தொடங்கினான். உண்மையில் அதற்குக் கிடைக்கும் பின்னூட்டங்களையிட்டுக் கவலைப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டேன். என் எழுத்துக்குக் கிடைத்த பின்னூட்டங்கள் என் பார்வையையொட்டியே இருந்தன. சரி, இது அவனது இரசனை. எனக்குப் பிடித்ததற்காக இன்னொருவனுக்கும் இது பிடித்திருக்க வேண்டுமென்று எதிர்பார்க்க் கூடாது தானே? ஆனால் இக்கேள்வி பற்றிப் பின்பு யோசித்தேன். இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற என்னென்ன செய்திருக்க வேண்டும் என்ற என் யோசனைகளை எழுதுகிறேன். தவறேதும் இருந்தாலோ மேலதிகமாக இருந்தாலோ தயவு செய்து எழுதவும்.

கதாநாயகன் அறிமுகமாகும் முதற் காட்சியில் ஒரு குத்தாலங்கடிப் பாட்டுக்கு நூறு பேரோடு சேர்ந்து குதியன் போட்டிருக்க வேண்டும். அப்பாடல் கதாநாயகனைப் புகழ்ந்து தள்ளுவதாயிருந்தால் நன்று.
“அன்பும் நாந்தாண்டா…ஆண்டவனும் நாந்தாண்டா
சிவனும் நாந்தாண்டா…சிங்கமும் நாந்தாண்டா
எமனும் நாந்தாண்டா….
இப்படியே தொடரலாம். வார்த்தைகள் புரியாவிட்டாற்கூடப் பரவாயில்லை. கமலால் அப்படி ஆடமுடியாதென்றால் மாதவனுக்காவது சந்தப்பம் வழங்கியிருக்கலாம்.

ஐந்தாறு சண்டைக் காட்சிகள் வைத்திருக்க வேண்டும். (படத்தில் ஒரு சண்டைக்காட்சி இருந்தாலும் இது போதாது.) குறிப்பாக, காய்கறிச் சந்தையிலும் பாத்திரக்கடையிலும் சண்டை போட வேண்டும். (குறிப்பிட்டளவு மக்களிடம் வரவேற்பைப் பெறாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்) அடிவாங்குவதற்கு ஆட்கள் இல்லாவிட்டால் மாதவனையும் கமலையுமாவது மோத வைத்திருக்கலாம்.

ஆடிக்கடி பஞ்ச் டயலாக் ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். ஆகக்குறைந்தது “அன்பே சிவம்…அன்பே சிவம்…அன்வே சிவம்...” என்றாவது எக்கோ (echo) தொனியில் அடிக்கடி சொல்லியிருக்கலாம்.

50 ஆண் பெண்கள் அரைகுறை ஆடையிற் புடைசுழ நாலு பாட்டு இருந்திருக்க வேண்டும். வெளிநாட்டுத் தெருக்களில் காட்சிப்படுத்துவது முக்கியம். கமலுக்கும் கிரணுக்குமான பாடற் காட்சியை இப்படிப் படமாக்கியிருக்கக் கூடாது. கிரணின் தொப்பையையாவது காட்டியிருக்கலாம் (திருமலை மாதிரி). பாடல் வரிகளிலும் “சரக்கு” இல்லை.

இரசிகர்களைக் கிளுகிளுப்பூட்ட எதுவுமில்லை. சகிலா வகையறாக் காட்சிகள் எதையாவது வைத்திருக்கலாம். ஆகக்குறைந்தது கமலுக்குரிய சர்ச்சையான முத்தக் காட்சியையாவது வைத்திருக்கலாம்.

நகைச் சுவைக்கென யாரையாவது தனியா வைத்துப் புலம்பச் சொல்லியிருக்க வேண்டும். கதையோடு சம்பந்தப்படாமலிருந்தாலும் பரவாயில்லை.

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய போக்கான இரண்டு கதாநாயகி முறையைக் கைவிட்டது பெரிய தவறு. அதுவும் இரண்டு கதாநாயகர்கள் இருக்கும்போது “முறைப்படி” நான்கு நாயகிகள் இருந்திருக்க வேண்டும். இரண்டு பேரையாவது உரித்துக் காட்டியிருக்கலாம். மாதவனுடன் வெளிநாட்டில் ஒருத்தி லவ்வினதாகக் காட்டினால் உரித்துக் காட்ட இன்னும் வசதி.


படத்தைச் சுபமாக முடித்திருக்க வேண்டும். சாத்தியப்படும் சில உச்சக் காட்சிகள் (climax) இதோ:

  1. எப்படியோ கிரண் கமலைக் கண்டுபிடித்து கட்டிப்பிடித்திருக்க வேண்டும்.
  2. கமல் வந்து போனதை எப்படியோ அறிந்து கமலைத் தேடி கிரண் ஒரு பாட்டுப் பாட கமல் ஓடி வந்து….
  3. தமிழ்ச் சினிமாவின் பெரும்பான்மை உச்சக் காட்சியான ரயில் நிலையத்தில் மாதவன் கமலைப் பிடித்து அழைத்து வந்து…..
  4. இறுதி நேரத்தில், கிரணுக்கு முன்னமே எல்லாம் தெரிந்திருந்து அவர்தான் மாதவன் மூலம் இப்படி ஒரு நாடகமாடி கமலை வரவழைத்தார் என்று படத்தை முடித்திருக்கலாம்.
  5. கமலின் நாய் தாலியைத் தூக்கிக் கொண்டு கமலைத் தேடி ஓட துரத்திக் கொண்டு வரும் மாதவனும் கிரணும் கமலைக் காண….
  6. கமலே நாசருடனும் அடியாட்களுடனும் பயங்கரச் சண்டை போட்டு கிரணை மீட்டிருக்கலாம். தேவையானால் மாதவனுடன் கூட சண்டை போட்டிருக்கலாம். அதிலும் பயங்கர அடிவாங்கி சாகுந்தருவாயில் கமல் இருக்கையில் காதலியின் கதறல் கேட்டு மீண்டும் சக்தி வந்து செயலற்றிருந்த கை காலெல்லாம் சரிவந்து ஒரே அடியில் அனைவரையும் தூக்கியெறிந்திருந்தால்... இன்னும் நன்று. அல்லது ஏதாவதொரு சாமியின் அருள் வந்து செய்வதாகக் கூட காட்டியிருக்கலாம். செத்துப் போனதாக மருத்துவரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு கூட இவ்வளவும் சாத்தியமே. (சொக்லேட் மாதிரி).


இன்னும் நிறைய வழிகள் இருக்கிறது. ஏதாவது செய்திருக்கலாம்.

சினிமாக் காரர்களின் உச்சக் காட்சித் தொல்லை (climax) சில படங்களில் தாங்கமுடியவில்லை. அண்மையில் ஒரு படம் பார்த்தேன். (காதல் சுகமானது என்று நினைக்கிறேன்). அதில் சினேகாவும் தருணும் மனசுக்குள் காதலித்தாலும், இறுதியில் சினேகாவுக்கும் இன்னொருவருக்கும் திருமணம். தருண்கூட திருமணத்திற்கு வந்துவிட்டு தாலிகட்டுவதைப் பார்க்கப் பொறுக்காமல் புறப்படுவார். தாலிகட்டும் போது வாசிக்கும் நாதஸ்வரமும் கெட்டிமேளச் சத்தமும் கூட கேட்டுவிட்டது. அடடா! புதுசா இருக்கே என்று திறந்த வாய் மூடவில்லை,.. வைத்தார்களே ஆப்பு. “ஓடிப் போகும்” தருண் முன் மணப்பெண் கோலத்தில் சினேகா. தொலைக்காட்சிப் பெட்டியில் மாப்பிள்ளையைத் திடீர் மணம் புரிந்த தங்கை சிறிதேவி பேசுகிறார். இருவரையும் சேர்த்து வைக்கிறார்.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________