Monday, January 08, 2007

உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு

உச்சரிப்புத் தொடர்பான ஒலிப்பதிவுகளை இணைத்துள்ளேன். இருபகுதிகளாக உள்ள ஒலிக்கோப்புகளில் ஒவ்வொன்றிலும் இரண்டு ஒலிக்கோப்புக்கள் இணைத்துள்ளேன். தரவிறக்கிக் கேட்க இறுதியில் இணைப்புக்கொடுத்துள்ளேன். ஒலிப்பதிவுகளைக் கேட்டுக்கொண்டே பதிவைப் படிப்பது பயனளிக்கும்.

பகுதி ஒன்று




பகுதி இரண்டு







தமிழ் வலைப்பதிவுகளில் நீண்டகாலமாகவே ஆங்கிலச் சொற்களைத் தமிழில் எழுதும்போது ஈழத்தமிழர் அவற்றைப் பலுக்கும் விதம் தொடர்பில் - குறிப்பாக 'ர'கரத்தைச் செருகுதல் தொடர்பாக சர்ச்சைகள், பதிவுகள், பின்னூட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே நீண்ட பதிவுகள், பலபல பின்னூட்டங்கள் என்று எழுதித் தள்ளியாயிற்று. என்றாலும் சீரான கால இடைவெளியில் யாராவது ஒருவர் இந்தப் பிரச்சினையை எழுப்பிக்கொண்டேயிருக்கிறார்.

எனது முடிபு என்னவென்றால், தமிழில்தான் எங்களுக்குள் வேறுபாடுண்டு. அதுதான் அடிப்படை. அந்த வேறுபாடுதான் பிறமொழிச் சொற்களை தமிழிற் பலுக்கும்போதும் வருகிறது.
சரி, தமிழிற் சில சொற்களை நாங்கள் எப்படி உச்சரிக்கிறோம் என்பதைச் சொல்வதற்கூடாக ஒரு தெளிவைப் புகுத்த விரும்புகிறேன்.

அதற்குமுன், இதுதான் சரியென்று நான் சொல்லவரவில்லை. சில ஈழத்தவர்களின் பின்னூட்டங்கள் இவ்வாறான ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருக்கின்றன. அவை மிகத் தவறானவையென்பதை திரும்பவும் சொல்லிக்கொள்கிறேன்.

அதேபோல் ஈழத்தமிழ் என மற்றவர்களால் உணரப்பட்டது பொதுவாக யாழ்ப்பாணத் தமிழே என்பதையும், ஈழத்துள்ளேயே பிரதேசங்களைப்பொறுத்து உச்சரிப்புகள் மாறுபடுமென்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
அந்தவகையில் இந்த 'ர'கர சிக்கல்கூட யாழ்ப்பாணத் தமிழருக்குரியதென்று சொல்லிக்கொண்டு மேற்செல்கிறேன். ஆனால் மயூரன் சொன்னதுபோல் 'ர'கர விசயத்தில் திருகோணமலைக்காரர் யாழ்ப்பாணத்தவர் போல் உச்சரிப்பதோ எழுதுவதோ இல்லையென்தை என்னால் இன்றுவரை நம்ப முடியவில்லை. திருகோணமலைக்காரராக தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட மலைநாடான், பெயரிலி போன்றோர் இப்போதுவரை நான் எழுதுவபோல், - யாழ்ப்பாணத்தார் எழுதுவதுபோற்றான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையோடு ஒத்துப்போதல் என்பதை இதற்குக் காரணமாகச் சொன்னாற்கூட பெயரிலி விசயத்தில் இது சாத்தியமற்றதென்றே நம்புகிறேன்.

யாப்பாணத்தில் 'ர'கர உச்சரிப்பு சிறுவயதிலிருந்து அறுத்து உறுத்துச் சொல்லப்படுமொன்று. இந்த மெல்லின எழுத்தைப் பெரும்பாலான இடங்களில் வல்லின உச்சரிப்பாகவே சொல்வோம். அவ்வுச்சரிப்பில் தனிக்கவனம் செலுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். என் பாலர் வகுப்பில் 'ர'கரச் சொற்கள் தனிக்கவனமெடுத்துச் சொல்லித் தரப்பட்டது இப்போது எனக்கு நல்ல ஞாபகம். உறுப்பெழுத்து என்று தனிப்பாடநேரம் ஒதுக்கியது போலவே உச்சரிப்புக்கும் தனிநேரம் ஒதுக்கிச் சொல்லித்தரப்பட்ட நினைவிருக்கிறது. பொதுவாக நான் பார்த்தளவில் இது யாழ்ப்பாணச் சமூகத்தின் மற்ற இடங்களிலும் இருக்கிறது.

இனி சில சொற்களைப் பார்ப்போம்.
அரசு
அரசி
அரக்கன்
அரி
அரிவாள்
கரி
பரி
சரி
முரசு
பரிசு
இரு
எரு
கரு
உரு
நெருக்கு
நொருக்கு
கரும்பு
கருத்து

இப்படித்தான் சின்ன வயசில் எங்களுக்குச் சொல்லித் தரப்பட்டது. இன்றுவரை நான் பெருமளவுக்கு மாறாமல் அப்படியேதான் உச்சரித்து வருகிறேன். சமகாலத்தவர்களே நிறையப்பேர் ஓரளவு மாறிவிட்டார்கள்.

பலவிடங்களில் தமிழகத்தாருக்கும் ஈழத்தாருக்கும் வித்தியாசமேயில்லாமலும் 'ர'கரம் உச்சரிக்கப்படுகிறது.
ராணி என்ற பேரை நான் இன்றுவரை வல்லின உச்சரிப்பிலேயே சொல்லிவருகிறேன். ஆனால் மிகப்பெரும்பான்மையானோர் (வயது முதிர்ந்தவர்களையும் கிராமத்தார்களையும்விட) இடையின ஒலியில் (Rani) என்றுதான் சொல்கிறார்கள்.
இதுபோல்தான் ரவி என்ற பெயரும்.
ரோசா என்ற பூவின் பெயரை எப்படி எழுதுகிறீர்கள், உச்சரிக்கிறீர்கள் என்று பார்த்தால் இருதரப்புமே ஒரேமாதிரித்தான்.

'ர'கர, 'ற'கர உச்சரிப்பைப் பொறுத்தவரை இரண்டு எழுத்துக்குமே தமிழகத்தில் ஓரளவுக்கு ஒரேமாதிரியான உச்சரிப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை நேரிலும் உணர்ந்துள்ளேன். கிளிநொச்சியில் சந்தித்த தமிழகத்தைச் சேர்ந்த சில தமிழறிஞர்கள் சிலரோடு உரையாடியபோது ர, ற போன்ற எழுத்துக்களைக் குறிக்க அவர்கள் சின்ன ற பெரிய ற என்று பல சந்தர்ப்பங்களில் சொன்னார்கள். எங்களிடத்தில் இரண்டெழுத்துக்களையும் இப்படி வேறுபடுத்தும் முறை இல்லவேயில்லை.

அதனால்தானோ என்னவோ வலைப்பதிவுகளில் நான் கவனித்தளவில், அக்கறை - அக்கரை, பொறுப்பு - பொருப்பு, நொருக்கு - நொறுக்கு, பறவாயில்லை - பரவாயில்லை என்பவற்றுக்கு ஈழத்தவர்கள் தெளிவான உச்சரிப்பு வித்தியாசம் வைத்திருப்பதால் மேற்கண்ட தவறுகளைச் செய்யாமலிருக்க, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தொடர்ச்சியாக இச்சொற்கள் மட்டில் தவறாகவே எழுதிக்கொண்டிருக்கும் நிலை உள்ளதென்று நினைக்கிறேன். இது என் அவதானம் மட்டுமே.

அடிப்படையில் தமிழில் 'ர' கரத்தில் இருக்கும் இந்த உச்சரிப்புப் பேதம் தான் வேற்றுமொழிச் சொற்களைத் தமிழில் எழுதும்போதும் வருகிறது. பொதுவாக நாங்கள் 'ர' வரிசை உயிர் மெய்களுக்கு ஆங்கிலத்தின் T என்ற உச்சரிப்பைக் கொண்டிருப்பதாலும் அதையே நியம உச்சரிப்பாகக் கருதுவதாலும் 'ர'கரத்தைப் போட்டு எழுதுகிறோம்.
அதனால்தான் ரிவி, ரின், ரொறண்ரோ, ரிக்கற், ரொம் குறூஸ் என்பவற்றை இடையினத்திலேயே தொடக்கி எழுதுகிறோம். ஆனால் வல்லினத்தில் உச்சரிக்கிறோம். இப்படி எழுதியவற்றை வாசிக்கும்படி தமிழகத்தாரிடம் சொன்னால், அவர்கள் வேறுமாதிரித்தான் உச்சரிப்பார்கள்.

ஆகவே தமிழில் எழுதிய ஒன்றை உச்சரிப்பதில்தான் இருதரப்புக்குமிடையில் வேறுபாடுண்டு.

யாழ்ப்பாணத்தவர் ரிவி என்று எழுவதை தமிழகத்தவர்கள் Reevi என்று உச்சரிப்பார்கள். தமிழகத்தவர்கள் டிவி என்று எழுதுவதை நாங்கள் DV என்றுதான் உச்சரிப்போம். ஆனால் இன்று அவர்களும் DV என்றுதான் உச்சரிக்கிறார்களோ என்ற ஐயம் வருகிறது. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் TV ஐ எப்படி உச்சரிக்கார்கள் என்று கூர்ந்து பார்த்தால் எனக்குச் சந்தேகமாகவே இருக்கிறது. Sun TV என்றா Sun DV என்றா உச்சரிக்கிறார்கள்?
______________________________
இவ்வளவும் போதுமென்று நினைக்கிறேன்.
இங்கு, யாழ்ப்பாணத்தவர் சில சொற்களை எப்படி உச்சரிக்கார்கள், எப்படி உச்சரிக்கப் பழக்கப்பட்டார்கள், அதன்வழியே T என்ற வல்லின உச்சரிப்புக்குரிய நியம வரிவடிவமாக எதைக் கருதுகிறார்கள் என்தையும் ஒலிக்கோப்பைப் பயன்படுத்திச் சொல்லியுள்ளேன்.

சம்பந்தப்பட்ட சில பதிவுகள்:
http://elavasam.blogspot.com/2007/01/blog-post_07.html
http://mauran.blogspot.com/2005/08/blog-post_23.html


_______________________________
மயூரன் முன்பு இதுதொடர்பில் ஒலிப்பதிவு செய்த கோப்பைக் கீழே இணைத்துள்ளேன்.
அதையும் கேளுங்கள்.





தரவிறக்க:
குரற்பதிவு பகுதி -1
குரற்பதிவு பகுதி -2
மயூரனின் குரற்பதிவு

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"உச்சரிப்பு மயக்கம் - ஒலிப்பதிவு" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (08 January, 2007 18:56) : 

பரிசோதனைப் பின்னூட்டம்.
பதிவர்கள் ஒலிக்கோப்புத் தொழிற்படுகிறதாவென கேட்டுச் சொல்லவும்.

 

said ... (09 January, 2007 03:20) : 

வசந்தன்!

மிக நல்ல முயற்சி. மயூரனின் குரல் பதிவும் நன்றாக உள்ளது. ஆனால் மயூரன் குறிப்பிடுவதுபோல் திரு கோணமலைப்பகுதியில், ர, ற, உச்சரிப்பில் யாழ்ப்பாணத்தவர்களை விடச் சற்று வித்தியாசம் காட்டினாலும், எழுதும்போது யாழ்ப்பாணத்தவர்கள் எழுதுவதுபோலே எழுதுவார்கள் என்பதே என் அபிப்பிராயம்.

வசந்தன்!

இந்த உச்சரிப்பு, எழுதும்வகையெல்லாம், ஈழத்தவர்கள் செய்வதே சரியென்ற எண்ணமோ, வாதமோ, எப்போதும் என்னிடமிருந்ததில்லை. என்னுடைய பின்னூட்டங்களில் அப்படியான தொனிப்பு எங்கேயாவது தென்பட்டிருந்தால் அது தவறுதலாக இடம்பெற்றதெனவே கொள்க.

 

said ... (09 January, 2007 10:17) : 

மலைநாடான்,
வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

 

said ... (09 January, 2007 17:17) : 

எழுதிக்கொள்வது: இலவசக்கொத்தனார்

வசந்தன்,
ஏதோ தொழில் நுட்ப கோளாறால் தங்கள் ஒலிப்பதிவை என் கணினியில் கேட்க முடியவில்லை. நாளை வேறு ஒரு கணினியில் இருந்து கேட்டுவிட்டு பதில் கூறுகிறேன்.

1.45 9.1.2007

 

said ... (10 January, 2007 10:11) : 

கொத்தனார்,
ஆறுதலாகக் கேட்டுவிட்டுக் கருத்தைச் சொல்லுங்கள்.

 

said ... (10 January, 2007 11:48) : 

தமிழகத்தில் பல பெரிய ஆட்களே உச்சரிப்பு மயக்கத்தில்தான் இருக்கிறார்கள். காற்று என்பதை காட்ரு என்று உச்சரிப்பதும் பழம் பளமாகிப் பலமானதும் அனைவரும் அறிந்ததே. அத்தோடு மலைப்பழம் மலப்பழமாகி நீண்ட ஆண்டுகளாகி விட்டது. ஆகையால் இந்த உச்சரிப்பு வித்தியாசங்களைப் பெரிது படுத்த வேண்டியதில்லை.

 

said ... (10 January, 2007 19:43) : 

எழுதிக்கொள்வது: petharayudu

வசந்தன் மற்றும் மயூரன்... அருமையான விளக்கம். மிக்க நன்றி.

ஜிரா..., நம்மாளுக சோம்பேறிதனத்திற்காக மொழிக்கொலையை அப்படியே உட்டுட(ர? ;-) ) முடியுமா?

1.8 10.1.2007

 

said ... (12 January, 2007 14:15) : 

எழுதிக்கொள்வது: pedharayudu

வசந்தன்,

எனக்கொரு சந்தேகம்.
நீங்கள் உச்சரிக்கும் 'ழ' பிழையானதோ எனத் தோன்றுகிறது. இதுதான் ஈழத்தில் ழ-வை உச்சரிக்கும் முறையா?

ஏனெனில் எனக்குப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்பட்ட முறையில் நாக்கை சுழற்றி இன்னும் அழுத்தமாகச் உச்சரிக்க வேண்டும்.

இப்பொழுது என்னை 'ழ'வை உச்சரிக்க சொன்னால் அம்பேல்தான் :))

பெத்தராயுடு

19.36 11.1.2007

 

said ... (12 January, 2007 17:54) : 

இராகவன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
காற்று, நெற்றி, குற்றி, பற்றை போன்ற மெய்யைத் தொடர்ந்து உயிர்மெய்யாக ''கரம் வருகிற சொற்கள் மட்டிலும் உச்சரிப்பு வித்தியாசமுண்டு.
சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

பெத்தராயுடு,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆம். எனது ''கரம் தவறுதான். தொடர்ச்சியாகக் கதைக்கும்போது என்னால் சரியாக ''கரம் உச்சரிக்க முடிவதில்லை. மற்றவர்களும் அப்படித்தானா என்று அவர்கள்தான் சொல்லவேண்டும்.

 

said ... (13 January, 2007 13:43) : 

வசந்தன், திருகோணமலையிலே ஒலிப்பதற்கும் எழுதுவதற்கும் காரணமாக மலைநாடான் சொல்வதோடு ஒத்துப்போகிறேன். மேலும், ஒருவேளை, எனக்கும் மலைநாடானுக்கும் பெற்றோர் அளவிலே யாழ்ப்பாணத்தின் ஊரொன்றின் வேரிருருப்பதும் மறைமுகமான காரணமாகியிருக்கலாம். ஆனால், அவ்வூரிலே ஓராண்டு காலம்மட்டுமே வாழ்ந்திருப்பேன் ;-)

 

said ... (18 January, 2007 15:57) : 

பெயரிலி,
வருகைக்கும் விளக்கத்துக்கும் நன்றி.

 

said ... (18 January, 2007 16:21) : 

பின்னூட்ட நாயகன் பட்டம் உமக்கும் இப்போது கிடைக்கிறது

 

said ... (19 January, 2007 13:33) : 

கானாபிரபா,

அட நீங்கள் வேற.
பின்னூட்டத்துக்காக நாங்கள் செய்யாத கூத்துக்களா?
ஆனா மாட்டுப்பட்டதென்னவோ துளசியம்மாதான்.
நாங்கள் மாட்டிவிட்டது உம்மை.

தனித்தனியப் ஒவ்வொருத்தருக்கும் பின்னூட்டம் போட்டாலும், அவையவைக்கு உடனுக்குடன் பின்னூட்டம் போடுறமாதிரி ஒரு தோற்றம் வரத்தக்கதாப் போட வேணும். இந்தப்பதிவில என்ர ஸ்டைலைப் பாத்தீரோ?

இதை இலவசக்கொத்தனாரிட்ட பாத்துப்படியும்.
;-)

 

said ... (19 January, 2007 13:46) : 

சரி சரி, இப்ப தராசு சமமா இருக்குது ;-)

இதுக்கு மேல இந்தப் பதிவை திசை திருப்பாமல் விடுவம்

 

said ... (20 January, 2007 14:36) : 

//ர, ற போன்ற எழுத்துக்களைக் குறிக்க அவர்கள் சின்ன ற பெரிய ற என்று //
நான் கொழும்பில ஒரு பள்ளிக்கூடத்தில ஒரு வருசம் இப்பிடித்தான் படிச்சனான். மற்றும்படி தெளிவாக உச்சரித்தால் 'ர'வா 'ற'வா என்று வேறுபடுத்திச் சொல்ல வேண்டிய அவசியம் எழாது என்பது என் (வழமை போல காலந் தாழ்த்திய) கருத்து.

 

said ... (22 January, 2007 12:28) : 

கானா பிரபா,
நன்றி.

ஷ்ரேயா,
தாமதமாக எண்டாலும் வந்து போறியளே, அதே காணும்.
ஏதோ, மறக்காமலிருந்தாச் சரி.

 

post a comment

© 2006  Thur Broeders

________________