Monday, March 28, 2005

தேங்காயும் ஒரு தமிழனும்…

வணக்கம்!

ரெண்டு நாளுக்கு முதல் லண்டனிலயிருக்கிற என்ர நண்பனொருவனோட கதச்சுக்கொண்டு இருக்கேக்க அவன் கேட்டான்,
இண்டைக்கு இரவு என்ன சாப்பிட்டனி?
வேறயென்ன?...இடியப்பமும் சம்பலும், அதோட தக்காளிச் சொதியும்.’
உங்களுக்கடாப்பா சொல்லிச் சொல்லிப் பழகிப்போச்சு. பகிடி விடாம சொல்லு.
இதிலயென்ன பகிடிவிடக்கிடக்கு? உண்மையா அதத்தான் சாப்பிட்டனான்.’

இதக்கேட்ட அவனுக்கு ஆச்சரியமா இருந்தீச்சாம்.
டேய்! நீ குடுத்து வச்ச ஆள்தான். நானெல்லாம் சொதியும் சம்பலும் சாப்பிட்டு 6 மாதமாச்சு.’
எனக்கு விளங்கேல. எங்கட ஆக்கள் சொதியில்லாம இருக்க மாட்டினமே? அவனிட்ட தீர விசாரிச்சதில, வெளிநாடுகளில எங்கட சனம் தேங்காய்ப்பால் பாவிக்கிறது குறைவாம். சிலர் தொடுறதுகூட இல்லையாம். எல்லாம் கொலஸ்றோல் வந்திடுமெண்ட பயம்தானாம். என்னையும் பாவிக்கிறதக் குறைக்கச் சொன்னான்.

இதென்ன கோதாரி? தேங்காயில்லாம மனுசன் எப்பிடியாம் சாப்பிடுறது? இவன் வேற நல்லாப் பயப்பிடுத்திறான். கொலஸ்றோல் வாறதெண்டது ஒருபக்கம் இருக்க, இனி தேங்காய் பாவிக்காமல்தான் சாப்பிடவேணுமெண்டது பெரிய சங்கடமா இருந்தீச்சு. இஞ்ச வந்தப்பிறகு ஊரில சாப்பிட்டமாதிரித்தான் சாப்பிடுறன். எந்த மாற்றமுமில்ல. அதே சாப்பாடு வகையள்தான். ஒவ்வொருநாளும் சொதி, அடிக்கடி சம்பல். எல்லாக்கறியுமே தேங்காப்பால் விட்டுத்தான். என்ன... விறகடுப்புக்குப் பதிலா வாயு அடுப்பு. பயந்தென்ன செய்யிறது? இதுபற்றிக் கேக்க தெரிஞ்ச டாக்குத்தரிட்டப் (வைத்தியர்) போனன். ஆள் யாழ்ப்பாணத்தான் தான். அவரிட்ட என்ர பிரச்சினயச் சொன்னன். தேங்காப்பால் பாவிச்சா கொலஸ்றோல் வருமெண்டது உண்மையே எண்டு என்ர சந்தேகத்தக் கேட்டன். ஆனா மனுசன் சொல்லிச்சு,
ச்சா… ஆர் சொன்னது அப்பிடி. அப்பிடியொண்டுமில்ல. நீ தாராளமாச் சாப்பிடலாம். ஆனா குளிர்காலத்தில கொஞ்சம் குறைச்சுக் கொள். சும்மா இருக்காம உடம்புக்கு -ஏதாவது வேல குடு. அது காணும்.’

சரியெண்டு ஆளிட்டயிருந்து சந்தோசமா வெளிக்கிட்டன். ஆனா வெளிக்கிடேக்க,
ஒருநாள் உன்ர வீட்ட வாறன். நல்ல ஒரு சொதி வச்சுத்தா
எண்டு மனுசன் கேட்டபிறகு அந்தாளில எனக்கு ஒரு சந்தேகம் வந்திட்டுது. இவற்ற வீட்டில சொதி வைக்கிறேலயெண்டா ஏதோ பிசகு இருக்கத்தான் வேணும் எண்டு மனம் கொஞ்சம் குழம்பீற்றுது. இஞ்ச வலைப்பிதியிற ஆக்கள் ஆருக்காவது சரியான விளக்கமும் தீர்வும் தெரிஞ்சாச் சொல்லுங்கோவன்.

இந்த இடறுப்பாடுகளுக்குள்ள உயிர்த்த ஞாயிறுக்குப் பால்புட்டு அவிக்கிறதெண்ட திட்டம் தவிடுபொடியாப் போச்சு. நானறிய பால்புட்டுச் சாப்பிடாம விட்ட உயிர்த்த ஞாயிறு இதுவாத்தான் இருக்கும். தேங்காய் எண்டது எங்கட சனத்தின்ர சாப்பாட்டில தவிர்க்கவே ஏலாத சாமான். இந்தியாவில கொஞ்ச நாள் இருக்கேக்க தேங்காய்க்கு இருந்த ‘மவுசு’ தெரியும். சின்னச் சின்னச் சொட்டுக்களா வாங்கியந்து அத அரைச்சுக் கறி வக்கிறதைப் பாத்திருக்கிறன். ஆனா ஊரில இந்தத் தேவையே இல்ல. வளவுக்க கிடைக்கிற தேங்காயே தாராளமாக் காணும். இடம்பெயர்ந்தப்பிறகு தேங்காய்க்குக் கஸ்டம்தான். அந்த நேரத்தில தேங்காயும் சரியான வில. ஒரு தேங்காய் 40 ரூவா கூட வித்தது. ஆனா ஒருநாளும் தேங்காயக் குறச்சதில்ல.

அங்க 'சொதி'யெண்டு ஒரு திரவம் வைக்கிறனாங்கள். (எல்லாருக்கும் தெரியும்) அதில்லாம ஒருத்தருக்கும் சாப்பபாடு இறங்காது. சொதியில கனவகை இருக்கு, மீன்சொதியிலயிருந்து மாங்காய்ச் சொதிவரைக்கும். எங்கட ஊர் முரலுக்குப் பேர் போன இடம். (ஊரைக் கண்டுபிடிக்கிற ஆக்களுக்கு எப்பிடி முரல்சொதி வக்கிறதெண்ட விவரம் சொல்லித்தரப்படும்) யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலயிருந்து கூட இரவில 8 மைல் தாண்டி முரல் வேண்ட ஆக்கள் வாறது எனக்கு ஞாபகமிருக்கு. மாசி மாசத்திலதான் இந்த முரல் கூடதலாப் படும். அப்ப இரவு 10 மணி வரைக்கும் கூட காத்திருந்து உடன் முரலில சொதி வச்சுச் சாப்பிட்டிருக்கிறம். அம்மம்மா வக்கிற முரல்சொதிக்கு இணையா வேற சாப்பாடே இல்ல எண்டுதான் இண்டை வரைக்கும் நினைச்சுக் கொண்டிருக்கிறன். போன வருசம் மாசிமாதம் போகேக்க, ஒருத்தரும் வடிவாத் தொழில் துடங்கேல. அதோட நேவியின்ர கெடுபிடியளும் நிறைய இருந்தீச்சு. அதால முரல் சரியாப் பிடிபடேல. ஒரு முரல் 15 ரூவாக்கு வேண்டி சொதிவச்சுச் சாப்பிட வேண்டியிருந்தீச்சு.

சரி. எங்க விட்டனான்?... ஆ… சொதிபற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தனான். எத்தின வகையான கறியள் வச்சாலும் சொதி இல்லாம சாப்பிடவே ஏலாது எண்ட நிலைமைதான் இண்டை வரைக்கும். ஆனா யாழ்ப்பாணத்தார் எல்லாரும் அப்பியெண்டு இல்ல. மானிப்பாயில நாங்களிருந்த வீட்டுக்காரர் எப்பவாவது தான் சொதி வப்பினம். நகர்ப்புறத்திலயும் சில இடங்களில சொதிவக்கிறது குறைவு. சொதிக்குக் கட்டாயம் மீனோ மரக்கறியோ போட்டுத்தான் வைக்கோணுமெண்டில்ல. ஒண்டுமில்லாட்டிக்கூட வெங்காயமும் பச்சமிளகாயும் இருந்தாக்கூடப் போதும். எங்கட அம்மம்மா காயவச்ச றால் மூக்குகள (றாலின் தலைப்பகுதி) சேத்துவச்சிருந்து அப்பப்ப சொதிக்குள்ள போடுவா. அதின்ர மணமும் சுவையும் தனி. எந்தச்சாப்பாட்டுக்கு இல்லாட்டியும் இடியப்பத்துக்கு சொதி முக்கியம். சொதியில்லாம இடியப்பம் சாப்பிடலாமோ?... நானும் முடியாது எண்டுதான் நினைச்சுக் கொண்டு இருந்தனான், அண்டைக்கு வரைக்கும்.

மலேசியாவில நான் கொஞ்ச நாள் நிண்டனான். அங்க இந்தியச் சாப்பாடுதான். இட்லி, தோசை எண்டு இருக்கும். ஒருநாள் இடியப்பம் எங்கயோ இருக்கெண்டு சொல்ல நானும் அங்க போனன். தமிழ்க்கடைதான். முதலில 30 இடியப்பம் வாங்கினம். கடைக்காரர் சாம்பாறா கறியா எண்டு என்ர விருப்பத்தக் கேக்க, நானும்
எனக்குச் சாம்பாறு வேண்டாம். சொதி தாங்கோ’
எண்டு கேட்டன். அதில நிண்டவருக்கு விளங்கேல. வேற ஒராள் வந்து என்னெண்டு கேக்க, திருப்பவும்
சொதி தாங்கோ’
எண்டு சொன்னன். முனுசர் பெரிசா கெக்கட்டம் விட்டுச் சிரிச்சார். எனக்குக் குழம்பீட்டுது. சிரிச்சுப் போட்டுக் கேட்டார்,
நீங்க ஜப்னாவா?
ஓமோம்
எண்டன். எனக்கு முதலும் எங்கடஆள் ஆரோ சொதிக்கு அலைஞ்சிருக்கிறான் போல. இலங்கையிலயிருந்து தமிழ் பேசிற ஆர் வந்தாலும் இவைக்கு யாழ்ப்பாணத்தான் தானே. பிறகு, அவை சொதி வக்கிறேல அதுக்குப்பதிலா ரசம்தான் வைக்கிறவை எண்டதையும் தெரிஞ்சு கொண்டு சாம்பாரையே வேண்டிக்கொண்டு வந்திட்டன்.

ம்… இப்பிடி தேங்காயில்லாமச் சாப்பிடவே தெரியாத எங்கட சனம் என்னெண்டு இப்ப இருக்குதுகள் எண்டு எனக்கொரு வியப்புத்தான். கனடாக்காரரிட்ட கேட்ட இடத்தில 'சோயாப்பால்' பாவிக்கினமாம். சொல்லப் போனா வெள்ளக்காரனிண்ட சாப்பாட்டுக்கு என்னத்துக்குச் சொதி?
ஆர் கண்டது?...
நானும் இன்னும் ஒரு வருசத்தில சொதியெண்டா என்னெண்டதை மறந்து போயிருக்கலாம்.

சொட்டுக்கள்: சிறு துண்டுகளாய் வெட்டியெடுக்கப்பட்ட தேங்காய்த்துண்டுகள். சில்லு எண்டும் சொல்லிறனாங்கள்.

Labels: ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"தேங்காயும் ஒரு தமிழனும்…" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (28 March, 2005 14:18) : 

நல்ல பதிவு. :)

 

said ... (28 March, 2005 14:45) : 

எழுதிக்கொள்வது: karikaalan

நல்லா வாயில் நீர் ஊற வச்சுப் போட்டீங்கள்.இங்கு கனடாவிலும் தேங்காய் பாவிப்பது குறைவு.எல்லாம் பாழய்ப் போன கொலஸ்ரோல் பிரச்சனை தான்.கடையில் போய் வாங்கினால் தான் உண்டு.சொதியை ஞாபகப் படுத்திட்டீங்கள்.நான் இந்தியாவில் இருக்கும் போது சொதி இல்லாமல் பட்டபாடு என்க்கும் அந்த்த கடவுழுக்கும் தான் தெரியும்.

0.4 28.3.2005

 

said ... (28 March, 2005 18:57) : 

பசுப்பாலிலும் சொதி வைக்கலாம்.
தேங்காயப்பாலின்ரை ருசி இருக்காதுதான். ஆனால் சொதி இருக்கும்.
நிறையப் பச்சைமிளகாய் போட்டு வழிக்குக் கொண்டு வரலாம்.

 

said ... (29 March, 2005 00:40) : 

கருத்துக்கள் எழுதின ஆக்களுக்கு நன்றி. அதுசரி ஒருத்தரும் கொலஸ்றோல் கத உண்மையோ பொய்யோ எண்டு சொல்லேலயே.

 

said ... (29 March, 2005 01:03) : 

வசந்தன்,
இங்கு என நண்பர் ஒரு நாள் தக்காளிச் சொதி வைத்துப்பரிமாறினார். இடியாப்பம்+தக்காளிச்சொதி நல்ல காம்பினேஷன்தான். தேங்காயில் என்ன பெரிய கொழுப்பு இருக்கு ?, பால், எண்ணெய் இதிலெல்லாம் இருப்பதைவிட மிகக்குறைவுதான்.

 

said ... (29 March, 2005 01:16) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (29 March, 2005 01:17) : 

உருசையான சொதி வைக்கும் முறை.. வெண்காயம் பிஞ்சு மிளகாய் கரிவேப்பிலை போன்றவற்றை வெட்டி (கழுவிய) பாத்திரத்துக்குள் போட்டுத் தண்ணீர் விட்டு நன்னாக அவிய விடவும். அவிந்த பின்னர் சிறிது உப்புப் போட்டு (உப்பில்லாப் பண்டம் குப்பையில) ஒரு தக்காளிக்காயும் வெட்டிப்போட்டுக் கொதிக்க விடவும்.. பின்னர் சிறிது 2% பசுப்பாலை விட்டு இறக்கி வைத்து கொஞ்சம் எலும்பிச்சம் சாற்றைப் பிழிந்து விட்டுப் புட்டுடனோ இடியாப்பத்துடனோ (வாயில் சொதி ஓழுகாமல்) சாப்பிடவும்..
நல்ல பதிவு...

 

said ... (29 March, 2005 12:08) : 

கறுப்பி!
என்ன இது? இப்பிடி மொட்டையாச் சொன்னா எப்பிடியாம் சொதி வக்கிறது? எனக்குத் தேவையில்ல. ஆனா தேவையான ஆக்களுக்கு விளக்கமா எழுத வேணுமெல்லோ. சோறு காச்சிறது எப்பிடி எண்டு தனிப்பதிவே போட்ட நீங்கள் சொதி வக்கிறதப் பற்றியும் ஒரு பதிவ உங்கட தளத்தில போடுங்கோவன். அதுசரி, கழுவிய பாத்திரமா? கழுவப்பட்ட பாத்திரமா? இதுபற்றி உங்கட சோறுகாச்சிற பதிவில ஆரோ அலட்டினமாதிரிக் கிடந்துது?

 

said ... (29 March, 2005 23:40) : 

மன்னிக்க வேண்டும் வசந்தன் சொதிக்குள் சின்னச்சீரகமும் கடுகும் போட மறந்து போய் விட்டேன். கொஞ்சம் சேத்துக் கொள்ளுங்கள் நன்றாக இருக்கும்.
என்னுடைய நண்பர் சக்கரவர்த்தி சு10ப்பர் சமையல்காறன். அவர் சொன்ன ஒருவகை சொதி தொடர்கிறது.
வெள்ளரிக்காயை மெல்லியதாகக் கொஞ்சம் வெட்டி வெங்காயம் பி.மிளகாய் கருவேப்பிலை சி.சீரகம் கடுகு போன்றவற்றோடு சேர்த்து தாளித்துப் பின்னர் தண்ணீரும் உப்பும் விட்டு நன்றாக அவிந்த பின்னர் (விரும்பினால் தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்) அதற்குள் இரண்டு மூன்று பொரித்த மீனைப் போட்டு பால் விட்டு ஒரு முறை கொதிக்க விட்டு இறக்குங்கள். அதற்குள் தேசிக்காய் பிளிந்து விட்டு சிறிது பெ.சீரகத்தை வறுத்து கையால் நசித்துப் போட்டுங்கள். ஆகா சு10ப்பர் சொதி ரெடி..
உங்கள் தளத்தைக் கெடுப்பதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

 

said ... (30 March, 2005 00:10) : 

நன்றி கறுப்பி!
சரியாப் பராமரிக்காட்டி பழுதாப் போய் நாறும். அவ்வளவுதான். மற்றாக்கள் சாப்பிட்டு முடியுமட்டும் நான் என்ர பதிவ குளிர்சாதனப் பெட்டிக்குள்ள வச்சிடுறன்.

 

said ... (30 March, 2005 00:40) : 

எழுதிக்கொள்வது: karupy

எழுதிக்கொள்வது: karupy

நான் வேலைத்தளத்தில் இருந்து தங்கள் பதிலை வாசித்து விட்டு வாய்விட்டுச் சிரித்து.. மாட்டிக்கொண்டேன். சொதி கொஞ்சம் நாறினாலும் புட்டோடு சாப்பிட நல்ல இருக்கும்.

அது சரி என்னுடைய பின்னூட்டத்திற்கு மட்டும் ஏன் ஒரு கார்பேஜ் கான் (டஸ்பின் ஐரோப்பியப் பாஷையில்) நீட்டிக்கொண்டு நிற்கிறது?


10.10 29.3.2005

10.10 29.3.2005

 

said ... (30 March, 2005 00:42) : 

எழுதிக்கொள்வது: karupy

நான் வேலைத்தளத்தில் இருந்து தங்கள் பதிலை வாசித்து விட்டு வாய்விட்டுச் சிரித்து.. மாட்டிக்கொண்டேன். சொதி கொஞ்சம் நாறினாலும் புட்டோடு சாப்பிட நல்ல இருக்கும்.

அது சரி என்னுடைய பின்னூட்டத்திற்கு மட்டும் ஏன் ஒரு கார்பேஜ் கான் (டஸ்பின் ஐரோப்பியப் பாஷையில்) நீட்டிக்கொண்டு நிற்கிறது?


10.10 29.3.2005

 

said ... (30 March, 2005 17:45) : 

சுமதி
அவரவர் தமது பின்னூட்டங்களை அழிக்கலாம்.
நீங்கள் உங்கள் பெயரில் பதியும் போது அந்தக் குப்பைவாளி உங்கள் பதில்களில் வந்து நிற்கும்.
நீங்கள் எழுதியது உங்களுக்கே பிடிக்காவிட்டால் அதற்குள் தூக்கிப் போடலாம்.

 

said ... (30 March, 2005 18:37) : 

sodhi enraal enna?

 

said ... (31 March, 2005 02:30) : 

அட! கறுப்பி இதையே கேட்டவ? நானும் என்ன கேக்கிறா எண்டெல்லே யோசிச்சிட்டு விட்டிட்டன். முதலே தெரிஞ்சிருந்தா நான் அளித்திருக்க வேண்டிய பதில்
1. நீங்கள் எழுதிறதுகள் அதுக்குள்ளதான் போகோணும் எண்டு என்ர வலைப்பதிவு சொல்லுது.
2. நீங்கள் சொல்லிறமாதிரி சொதி வச்சா குப்பைக் கூடைக்குள்ளதான் போடோனும்.
சரி. சந்திரவதானா அக்கா சொன்ன படியாத் தப்பிச்சியள்.

அடுத்து அனோனிமஸ்!
நீங்கள் உண்மையிலேயே தெரியாமத்தான் கேக்கிறியளோ? அதுக்கேன் அநாமதேயமாக வந்து கேக்கோணும். சரி. சந்தேகமாயிருந்தாலும் சொல்லிறன். இது ஒரு உணவு வகை. தமிழகத்தில் மோர் அல்லது ரசம் விட்டுச் சாப்பிடுவது போல ஈழத்தில் இதைப் பயன்படுத்துவோம். திரவ உணவு. கறி எனறு சொல்ல முடியாது.

 

said ... (16 October, 2005 23:12) : 

எழுதிக்கொள்வது: அருவி

வசந்தன் நல்ல சொதிக்கதையும் தேங்காய்க் கதையும் சொல்லியுள்ளீர்கள். ஊரில எங்கடவீட்டிலேயும் தேங்காய் இல்லாமல் ஒரு நாளும் கறி சமைத்தது கிடையாது அல்லது அவையளுக்கு தேங்காய் இல்லாமல் கறி சமைக்கத் தெரியாது.

9.30 16.10.2005

 

said ... (16 October, 2005 23:14) : 

எழுதிக்கொள்வது: அருவி

எழுதிக்கொள்வது: அருவி

வசந்தன் நல்ல சொதிக்கதையும் தேங்காய்க் கதையும் சொல்லியுள்ளீர்கள். ஊரில எங்கடவீட்டிலேயும் தேங்காய் இல்லாமல் ஒரு நாளும் கறி சமைத்தது கிடையாது அல்லது அவையளுக்கு தேங்காய் இல்லாமல் கறி சமைக்கத் தெரியாது.

9.30 16.10.2005

9.40 16.10.2005

 

said ... (17 December, 2005 12:21) : 

கலக்கல் பதிவு :-)

 

post a comment

© 2006  Thur Broeders

________________