Sunday, April 02, 2006

யார் முட்டாள்கள்?

தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் - என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று ஒரு தினம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பிரச்சனை என்னவென்றால் மற்றைய 'விசேட' தினங்களில் தமக்குப் பங்கிருப்பதாகக் காட்டிக் கொள்கின்ற மனிதர்களில் எத்தனை பேர் இந்த 'முட்டாள்கள் தினத்தில்' தமக்கும் பங்கிருப்பதாக சொல்லிக் கொள்ள முன்வருவார்கள் என்பதுதான்! அதனால்தானோ என்னவோ தம்மை அடையாளப்படுத்திக் காட்டாமல் பிறரை மட்டும் முட்டாளாக அடையாளப்படுத்திக் காட்டும் தினமாகவும் இந்த முட்டாள்கள் தினம் அமைந்துள்ளது. அதுதான் இந்த ஏப்பிரல் முதல் திகதியாகும்.!
விடயங்களை அறிந்து கொள்பவன் 'அறிஞன்' ஆகின்றான். அதேபோல் ஒரு முட்டாள் 'தான் ஒரு முட்டாள்' - என்பதை அறிந்து கொள்ளும்போது அவனும் ஒரு 'அறிஞனாக' ஆகிவிடுகின்றான் - என்று எமக்கும் முட்டாள்தனமாக சிந்திக்க தோன்றுகின்றது.

நாங்கள் ஓர் ஆண்டின் மற்றைய 364 நாட்களில் எப்படிப்பட்டவர்களாக இருந்திருக்கின்றோம் என்பதை ஞாபகப்பத்துவதுதான் இந்த முட்டாள்கள் தினமான ஏப்பிரல் முதலாம் திகதியாகும் என்று பிரபல எழுத்தாளரான Mark Twin கூறியுள்ளார். கற்றாரைக் கற்றாரே காமுறவதுபோல் ஒரு முட்டாளை அவனை விடப் பெரிய முட்டாள் மெச்சுவான் - என்று 'யாரோ' ஒருவரும் (சத்தியமாக நாங்கள் இல்லை) கூறியுள்ளதாக அறிகின்றோம்.

ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியை முட்டாள்கள் தினமாக-April Fool's Day ஆகச்சொல்லி வருவதற்கு காரணம் என்ன?
ஏப்பிரல் மாதம் முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினமாக அழைக்கப்பட்டு வருவதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அவற்றில் ஏற்புடையதாக விளங்குகின்ற காரணத்தை முதலில் கவனிப்போம்.

16 ஆம் நூற்றாண்டுவரை ஐரோப்பியாவின் பல தேசங்களில் ஏப்பிரல் முதலாம் திகதியைத்தான் தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தன. பின்னர் 1562 ஆம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13 ஆவது கிரகரி அவர்கள் பழைய ஜீலியன் ஆண்டுக் கணிப்பு முறையைப் புறம் தள்ளி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி மாதம் முதலாம் திகதியன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.

எனினும் இந்தப் 'புதிய' புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் தேசம் 1852 ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜேர்மனி, டென்மார்க், நோர்வே, போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்டன. கிறிஸ்தவர் உலகிற்குப் புதிய புத்தாண்டுத் தினமும், புதிய நாட்காட்டி கணிப்பும் அறிமுகமாகியது.
ஆயினும் சராசரிப் பொதுமக்கள் இந்தப் புதிய வழக்கத்தை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஏப்பிரல் முதலாம் திகதியைத்தான் தமது புத்தாண்டுத் தினமாகத் தொடர்ந்தும் கொண்டாடி வந்தார்கள். அதற்குக் காரணங்கள் பல உண்டு.

அன்றைய கால கட்டத்தில் இது போன்ற செய்திகள் அல்லது மாற்றங்கள் சகலரையும் சென்றடைவதற்குரிய தகுந்த சாதனங்கள் இருக்கவில்லை. அத்தோடு பழைய வழக்கத்தைப் புறம் தள்ளி புதிய வழக்கத்தை ஏற்றுக் கொள்ளவதையும் அம் மக்கள் மறுத்திருக்கலாம். ஆகவே இம் மக்கள் தொடர்ந்தும் ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியையே தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடி வந்தார்கள்.

ஆனால் புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று- என்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

என்றாலும் 1582 ஆம் ஆண்டுக்கு முன்னரேயே 1508 ஆம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறியக் கூடியதாக உள்ளது.

1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய தினம்தான் ஏப்பிரல் முதலாம் தினம் என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.
ஏப்பிரல் முதலாம் திகதியன்று தனி மனிதர்களை மட்டும் முட்டாளாக்காமல் பெரிய கூட்டத்தையே முட்டாளாக்கக் கூடிய சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. ஊடகங்கள் தொடர்பாக உதாரணத்திற்கு இரண்டு சம்பவங்களைச் சொல்ல விழைக்pன்றோம்.

1965 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று BBC சேவை ஓர் அறிக்கையை வெளியிட்டது. புதிய தொழில் நுட்பத்தினை உபயோகித்து தம்முடைய வானலைகள் ஊடாக நறுமணத்தைப் பரப்புவதாக BBC அறிவித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் பல நேயர்கள் BBC ஐத் தொடர்பு கொண்டு 'நறுமண முயற்சி' வெற்றி பெற்றுள்ளதாக பாராட்டுகள் வழங்கியதுதான்.!

1976 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று பட்ரிக் மூர் என்கின்ற பிரிட்டிஷ் விண்வெளி வீரர் BBC வானொலிச் சேவையினூடாக ஒரு தகவலை வெளியிட்டார். விண்வெளியில் இரண்டு கிரகங்கள் ஒரு வித்தியாசமான கோண நேர்கோட்டில் வரவிருப்பதாகவும,; அந்த நேரத்தில் புவியீர்ப்புச் சக்தியின் வலு குறைந்து விடும் என்றும் பட்ரிக் வானொலி ஊடாக அறிவித்தார்.

இந்த இரண்டு கிரகங்களும் இந்த நேர் கோட்டில் வரவிருக்கும் நேரம் காலை 9-47 மணி என்றும் அந்த நேரத்தில் துள்ளிக் குதிப்பவர்கள் அதிக உயரத்திற்கு துள்ளிக் குதிக்க முடியும் என்றும் பட்ரிக் கூறினார். ஆகவே 1976 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் முதலாம் திகதியன்று காலை 9.47 மணிக்கு எவ்வளவோ பேர் துள்ளிக் குதித்து இன்புற்றார்கள். துள்ளிக் குதித்தவர்களில் பலர் வானொலி நிலையத்திற்கு தொலைபேசி தங்களுடைய புதிய அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்கள்.

ஏப்பிரல் முதல் திகதி இப்படியான வேடிக்கைகளை மட்டுமல்லாது பல வினைகளையும் கொண்டு வந்துள்ளது. அத்தோடு பல மூட நம்பிக்கைகளையும் இந்த ஏப்பிரல் முதல் திகதி மக்களுக்கு வழங்கியிருக்கின்றது. (அல்லது மக்களே தங்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்றும் சொல்லலாம்.)
ஏப்பிரல் முதலாம் திகதியன்று திருமணம் செய்கின்றவன் தனது மனைவிக்கு வாழ்நாள் முழுவதும் அடங்கியிருப்பான் அவனது மனைவி அவனை நிரந்தரமாகவே ஆட்சி செய்து வருவாள் என்று ஏப்பிரல் முதல் திகதி குறித்து ஒரு மூடநம்பிக்கை உண்டு (மற்றைய நாட்கள் மட்டும் விதிவிலக்கா? என்ற கேள்விக்கு யார் பதில் சொல்லக் கூடும்?)
அதேபோல் எப்பிரல் முதலாம் திகதியன்று பிறப்பவர்களுக்கு அநேகமான அதிர்ஷ்டங்கள் காத்திருக்கின்றன என்றும் ஆனால் இவர்களுக்கு சூதாட்டம் கைகெடுக்காது என்றும் இன்னுமொரு மூடநம்பிக்கையும் உண்டு.
அட மூட நம்பிக்கைகள் என்பது முட்டாள்கள் தினக் கொண்டாட்டங்களில் மட்டும்தானா, மற்றைய கொண்டாட்டங்களில் இல்லையா என்று நேயர்கள் கேட்கக் கூடும். அத்தோடு மற்றைய தினங்கள் மட்டும் புத்திசாலித்தனமான தினங்களா? என்றும் சிலர் எண்ணக் கூடும்!

இந்த வேளையில் ஒரு விடயத்தைச் சற்று வித்தியாசமாக மறுவழமாகச் சிந்தித்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.!

இந்த ஏப்பிரல் முதல் திகதியான முட்டாள்கள் தினத்தின் அடிப்படையே புத்தாண்டுக் கால மாற்றம் என்பதுதான். ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டு தினமாகக் கொண்டு வந்ததற்கு நவீனக் காலக்கணிப்பு முறையும் பொருந்தி வந்தது. ஆனால் தமிழர்களின் புத்தாண்டு ஏப்பிரல் மாத்தில் கொண்டாடப்படுவதற்கு என்ன காரணத்தை சொல்வது? முன்னர் தமிழர் கொண்டாடிய புத்தாண்டுத் தினம்தான் என்ன?

இப்போது தமிழர்கள் சித்திரை மாதத்தில் கொண்டாடுகின்ற புத்தாண்டுப் பிறப்பு ஆரியர்களால் பின்னாளில் அறிமுகப் படுத்தப்பட்டதாகும். இந்த சித்திரை ஆண்டுப் பிறப்பு முறை பற்சக்கர முறையில் உள்ளது. அறுபது ஆண்டுகள் பற்சக்கர முறையில் திரும்பி திரும்பி வருவதை நாம் அவதானித்திருக்கலாம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பிரபல முதல் அட்சய என்ற அறுபது பெயர்கள் உள்ளன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூட தமிழ்ப்பெயர் இல்லை.
இந்தப் பற்சக்கர முறை வட நாட்டு மன்னனான சாலி வாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78 ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப் பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். 'கனிஷ்கன்' என்ற வடநாட்டு அரசனாலும் இது உருவாக்கப்பட்டது என்று கூறுவோரும் உள்ளார்கள். பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால்- ஆட்சியால்- இந்தப் பற்சக்கர முறை படிப்படியாகப் பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிலைநிறுத்தப் படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள் பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு.
அந்த வகையில் இந்த சாலி வாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடைமுறைப்படுத்தப்பட்டு பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை காரணமாக ஆரியரிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் 'சஷ்டி பூர்த்தி' என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

பண்டைத் தமிழரின் காலக் கணக்கு முறை பற்றி முன்னரும் நாம் கூறியுள்ளோம். தமிழன் ஓர் ஆண்டுக்குரிய வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்து தனது புத்தாண்டை இளவேனிற் காலத்தில் அதாவது தை மாதத்தில் ஆரம்பித்தான்.

தமிழனைப் போலவே மற்றைய பழங்குடி இன மக்களான சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என்று பல கோடி இன மக்களும் இளவேனில் காலத்தையே புத்தாண்டின் ஆரம்பமாக கொண்டாடி வருகின்றார்கள்.

தைத்திங்கள் முதலாம் நாளான தைப்பொங்கல் தினத்தையே தனது புத்தாண்டாக கொண்டாடி வந்த தமிழன் இடையில் தன் பெருமையை மறந்தான். அதனால் மாறினான். இன்று ஆரியர்களின் புத்தாண்டை தன்னுடைய புத்தாண்டாகத் தமிழன் கொண்டாடி வருகின்றான்.
ஐரோப்பியர்கள் பிழையான காலக்கணக்கு முறையில் இருந்து சரியான காலக்கணக்கு முறைக்கு மாறினார்கள். மாறாமல் இருந்தவர்களை 'முட்டாள்கள்' என்றார்கள்.

தமிழனோ தன்னுடைய சரியான காலக்கணக்கு முறையில் இருந்து பின்னாளில் பிழையான கணக்கு முறைக்கு மாறினான்!. இங்கு யார் முட்டாள்? தமிழனைப் பொறுத்த வரையில் முட்டாள்கள் தினம் ஏப்பிரல் நடுப்பகுதியில் வருகின்றதோ என்னவோ?
எது எப்படி இருப்பினும்,
முட்டாள்கள் வாழ்க!
*************************************
இதுவொரு படியெடுப்புப் பதிவு.
நன்றி: மெல்பேணிலிருந்து சபேசன்.
நன்றி: தமிழ்நாதம் இணையத்தளம்.



எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"யார் முட்டாள்கள்?" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (02 April, 2006 00:34) : 

எழுதிக்கொள்வது: pot"tea"kadai

நிறைய தகவல்களைச் சொல்லி இருக்கிறீர்கள்!
அதற்கு நன்றி...படியெடுப்புப் பதிவாயிருந்தாலும்...

ஏப்ரல் 1 ம் தேதி பிறரை முட்டாளாக்க வேண்டும் என்றூ கங்கனம் கட்டிக் கொண்டு வருபர்களே ஏமாறுபவர்களாகவும் இருக்கிறர்கள் என்பதே உண்மை.

0.57 2.4.2006

 

said ... (02 April, 2006 02:48) : 

பொட்டீக்கடை,
கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
சித்திரை வருடப்பிறப்புப் பற்றி உங்கள் கருத்தைச் சொல்லவில்லையே?

 

said ... (02 April, 2006 02:08) : 

எழுதிக்கொள்வது: ஜீவா

நல்லதொரு பதிவு வசந்தன்.
அன்புடன்
ஜீவா

22.5 1.4.2006

 

said ... (04 April, 2006 20:38) : 

எழுதிக்கொள்வது: thiagu

முதல் தேதி குறித்துஎனது கவிதை ஒன்றை தருகிறேன்!


தேதி ஒன்று

அத்தான்என்றழைப்பாள்
அன்பு ஊற்றெடுக்கும்
அன்றைக்கு தேதி ஒன்று!
பொத்தான் போன சட்டைகளும்
புதிதாக மாறும்
அன்றைக்கு தேதி ஒன்றே!
ஆப்பிளும் மாதுளையும்
அனைத்துப்பழங்களின் சாறும்
அன்றைக்கு கிடைக்கும் தேதி ஒன்று!
தேதிகள் மாறும்போது
சேதிகள் மாறுவது ஏனடி
மாதக்கடைசியில் மாறும் அன்பு -மீண்டும் மாறும்



16.32 4.4.2006

 

said ... (04 April, 2006 20:44) : 

எனது கவிதைகளை காண
http://thiagu1973.blogspot.com/

 

post a comment

© 2006  Thur Broeders

________________