Thursday, April 05, 2007

மாமனிதர் ஜெயக்குமார் - வீழ்ந்துபோன பெருவிருட்சம்

இவரைப்பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். சாவுச் செய்தியையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையும் தவிர்த்து இவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். 29.03.2007 அன்று வியாழக்கிழமை அதிகாலை திரு. தில்லை ஜெயக்குமார் அவர்கள் மெல்பேணில் அவரது வீட்டில் தனது 56 ஆவது வயதில் அகால மரணமடைந்தார். இறப்பின்பின் தமிழீழத் தேசியத்தலைவரால் தமிழீழத்தின் அதியுயர் விருதான 'மாமனிதர்' விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

தனது இருபதுகளில் இங்கிலாந்து சென்று பொறியியற்றுறை உட்பட்ட பட்டப்படிப்புக்களை நிறைவுசெய்து தாயகம் திரும்பினார். பின் 1982 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்தார். அதன்பின் நிரந்தரமாக அவுஸ்திரேலியாவில் தங்கிவிட்டார். 1984 இல் திருமணம் முடித்தார். மகனொருவர் இருக்கிறார்.

அவுஸ்திரேலியாவிலிருந்த ஈழத்தமிழர்களை ஒருங்கிணைப்பதிலும், ஈழப்போராட்டத்தோடு மக்களை ஒன்றிக்க வைப்பதிலும் அயராது உழைத்து உறுதியான கட்டமைப்பொன்றை அவுஸ்திரேலியாவில் ஏற்படுத்தினார். எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து பல்வேறு அமைப்புக்களை உருவாக்கி, ஏற்கனவே இருந்த அமைப்புக்களை ஒருகுடையின்கீழ் ஒருங்கமைத்து, சாகும்வரை அயராது உழைத்தவர் இவர். அவுஸ்திரேலியா மட்டுமன்றி நியூசிலாந்து உட்பட்ட தென்துருவ நாடுகள் அனைத்திலும் தமிழர் அமைப்புக்களின் உருவாக்கத்துக்கும் அவற்றின் ஈழப்போராட்டச் செயற்பாட்டுக்கும் அடித்தளமிட்டவர் இவரே. இன்று தென்துருவப் பகுதியில் ஈழத்தவரின் அரசியல் அமைப்புக்கள் வலுவாகவும் செயற்றிறன் மிக்கனவாகவும் இருக்கிறதென்றால் முப்பது வருடங்களுக்கு முன்பிருந்து திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களின் அயராத உழைப்பிலும் வழிகாட்டலிலும் வந்த வளர்ச்சியே.

மற்றநாடுகளின் புலம்பெயர்ந்தவர்களோடு ஒப்பிடும்போது தென்துருவ ஈழத்தவர்களின் புலப்பெயர்வு வித்தியாசமானது. தொடக்கத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்தவர்கள் இருக்கவில்லை. படித்த, மேல்தட்டு வர்க்க யாழ்ப்பாணத்தவர்களே பெரும்பாலானவர்கள். அதுவும் இனப்பிரச்சினை கூர்மையடைய முன்பே புலம்பெயர்ந்தவர்கள் பலர். பின்னர்தான் படிப்படியாக - அதுவும் மற்றநாடுகளோடு ஒப்பீட்டளவில் மிகக்குறைவாக ஈழஅகதிகள் தென்துருவத்துக்குப் புலம்பெயர்ந்தனர். எண்பதுகளின் தொடக்கத்தில் இப்பகுதியில் ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டுவதில் இருந்திருக்கக்கூடிய சிக்கலை, கடினத்தன்மையை இலகுவாகப் புரிந்துகொள்ளலாம். அந்தநேரத்திலும் சரி இப்போதும் சரி அவுஸ்திரேலியாவில் சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளநிலையில், அதுவும் ஜே.வி.பியின் தீவிர ஆதரவுத்தளமாக இருக்கும் நிலையில், அரசியல் மட்டத்தில் மிகநெருக்கமான தொடர்புகளையும் பரப்புரைகளையும் சிங்களவர் பேணிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் இவை மிகப்பெரிய சிக்கலுக்குரிய விடயம்தான். ஆனாலும் திரு. ஜெயக்குமார் அவர்கள் திறமையாக அதைச்செய்தார். கல்விச் சமூகத்தை ஈழப்போராட்டத்துக்கு உறுதுணையாக்கினார்.


பல்கலைக்கழகமொன்றில் முழுநேர விரிவுரையாளராகத் தொழில்புரிந்தார். அதைவிட ஈழப்போராட்டத்துக்கான தனக்குரிய பணியை மேலதிகமாகச் செயதார். அவுஸ்திரேலியா என்று எடுத்துக்கொண்டாலே ஒவ்வொரு மாநிலத்துக்குமான பயணத்தூரம் மிகமிக அதிகம். அதைவிட நியூசிலாந்து, பீஜி, மொறீசியஸ, மலேசியா என்று தனது பணிக்குரிய இடங்கள் அனைத்துக்கும் இடைவிடாது பயணம்செய்து தன்பணியைச் சிறப்புற ஆற்றினார். பயண அலைச்சல்களிலேயே அவர் பலநாட்களைக் கழித்தார்.

2004 ஆம் ஆண்டு ஆசியாவைத் தாக்கிய ஆழிப்பேரலையில் தமிழீழமும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது. உலகத்தின் கண்களிலிருந்து மறைக்கப்பட்ட பகுதியாக அது இருந்தது. சரியான முறையில் உலக உதவிகள் சென்று சேரவில்லை. தமிழீழம், ஆழிப்பேரலை அனர்த்தத்திலிருந்து மீண்டது அதன் தளத்திலும் புலத்திலிருமிருந்த தமிழர்களால்தான். அந்த அனர்த்த நிவாரணப்பணியில் முக்கிய பாத்திரம் திரு. ஜெயக்குமார் அவர்களுக்குமுண்டு.
ஆழிப்பேரலை அனர்த்தம் நிகழ்ந்தபோது திரு ஜெயக்குமார் அவர்கள் தாயகத்தில்தான் நின்றார். உடனடியாகவே களத்திலிருந்து துரிதமாகச் செயற்பட்டார். துருவப் பகுதியிலிருந்து மருத்துவ உதவி, தொண்டர் சேவை, பொருளுதவி என்பவற்றைத் திரட்டி தாயகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்தார். அனைவரையும் ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்தி உதவிகளை உரியமுறையில் விரைவாகக் கிடைக்கும்டி நடவடிக்கையெடுத்தார். அவரின் வழிகாட்டலிலும் ஒருங்கிணைப்பிலும் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரணப்பணிகளின் ஒருபகுதி சிறப்பாக நடைபெற்றது.

யுத்தநிறுத்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்தில் புலம்பெயர்ந்தவர்கள் பலர் தாயகப்பகுதியில் தமது புலமையைப் பகிர்ந்திருந்தனர். நுட்பியல் கற்கை நெறிகளில் பல்வேறு நாடுகளில் இருந்தும் புலம்பெயர்ந்த புலமையாளர்கள் கலந்துகொண்டு கற்பித்தார்கள். அவ்வகையில் தென்துருவ நாடுகளில் இருந்தும் கணிசமான பங்களிப்பு வழங்கப்பட்டது. திரு. ஜெயக்குமார் அவர்கள் இவற்றை ஒருங்கிணைத்துச் சரிவரச் செய்திருந்தார். பலநவீன நுட்பங்களைத் தாயகத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்த்ததில் பெரும்பங்காற்றினார். (காகம் இருக்கப் பனங்காய் விழுந்த கதையாக, இவர்தான் புலிகளுக்கு விமானத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தார் என்று ஏசியா ரிபியூன் உட்பட்ட புலியெதிர்த்தரப்பு இப்போது புலம்பிக்கொண்டிருப்பது வேறுகதை)

தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் இவர்மேல் எவ்வளவு பாசமும் நம்பிக்கையும் வைத்திருந்தார் எனபதை இவரின் இறப்பின் பின்னான கதைகளில் இருந்து அறிந்துகொள்ள முடியும். இவரது இறுதி வணக்க நிகழ்வில் அரசியற்றுறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் வன்னியிலிருந்து வழங்கிய இரங்கலுரையை ஒளிபரப்பினார்கள். அவற்றில் திரு ஜெயக்குமார் அவர்களின் இழப்பு அவர்களிடத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை உணரமுடிந்தது.
_____________________________________
திரு. ஜெயக்குமார் அவர்கள் ஓர் இசைக்கலைஞனும்கூட. எண்பதுகளின் தொடக்கத்தில் "மெல்பேண் மெல்லிசைக்குழு" என்ற பேரில் ஈழத்து இளைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய இசைக்குழுவில் திரு. ஜெயக்குமார் அவர்கள் கிட்டார் வாத்தியக்கலைஞராகப் பங்காற்றினார். (ஆட்கள் மாறிவந்தாலும் இக்குழு இப்போதும் செயற்றிறனுடனுள்ளது).

திரு. ஜெயக்குமார் அவர்களின் வாழ்வில் சகமனிதர்களுக்கு இணையாக நீங்கா இடம்பெற்றவை மீன்கள்.
மீன்வளர்ப்புப் பைத்தியம் என்றே சொல்வார்கள். தனது நாலாவது வயதில் ஹோர்லிக்ஸ் போத்தலொன்றில் மீன் வளர்த்தது தொடக்கம் இறக்கும்வரை மீன்கள்! மீன்கள்! மீன்கள்! என்றே வாழ்ந்தார்.
இவருக்கு நெருங்கியவர்களின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் தனது பாடசாலைக் காலத்தில் ஐந்து மீன்தொட்டிகள் வைத்திருந்தவர், இங்கிலாந்தில் பொறியியற்றுறையில் பட்டப்படிப்பு முடித்துத் தாயகம் திரும்பும்போது முப்பது மீன்தொட்டிகளில் பல அபூர்வ வகை மீன்களை வளர்த்துவந்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மெல்பேணில் அவரது இறுதிக்காலம்வரை மீன்கள் வளர்த்து வந்தார்.

சிறந்த நிர்வாகி. அதிர்ந்து பேசாதவர். எந்நேரமும் ஒரு புன்சிரிப்போடுதான் அவரைப்பார்க்கலாம். பிரச்சினைகளை, கவலைகளை, அழுத்தங்களை வேறுயாருக்கும் காட்டிக்கொண்டதில்லை. ஈழப்போராட்ட அரசியலில் இயல்பாகவே எதிர்த்தரப்பினரிடமிருந்து வரக்கூடிய எதிர்ப்புக்கள், கேலிகள், ஆத்திரமூட்டும் செயற்பாடுகள், விமர்சனங்கள் என்பவற்றைப் பொறுமையாகவே எதிர்கொண்டார். எச்சந்தர்ப்பத்திலும் ஆத்திரப்பட்டோ நிதானமிழந்தோ செயற்பட்டதில்லை.

மிகநேர்மையான நல்லமனிதனை, சிறந்த நிர்வாகியை, கடுமையான உழைப்பாளியை, தென்துருவத்தில் ஈழப்போராட்ட அரசியற் செயற்பாட்டுக்கு அத்திவாரமிட்டவரை, அதைத் திறமையாகக் கட்டியெழுப்பியவரை இன்று ஈழத்தமிழினம் இழந்துநிற்கிறது. ஈழப்போராட்டத்தின் புலம்பெயர்தமிழர் செயற்பாட்டுக்கான அத்தியாயத்தில் மாமனிதர் திரு. தில்லை ஜெயக்குமார் அவர்களுக்கு என்றுமே நீங்கா இடமுண்டு.

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"மாமனிதர் ஜெயக்குமார் - வீழ்ந்துபோன பெருவிருட்சம்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (05 April, 2007 20:58) : 

புலம் பெயர்ந்த சமூகத்தில் நமது தமிழர் அமைப்பில் மிக நீண்டகாலம் பொறுப்பான பதவியினைச் சிறப்பாக வழி நடத்திய உத்தமர்.

காலம் கடக்கும் போது புதிய தலைமுறையை உள்வாங்கி அவர்களை வழி நடத்திச் செல்லவேண்டும் என்பதில் முன்மாதிரியாக இருந்தவர்.

ஜெயக்குமார் அண்ணையின் சிரித்த முகம் தான் இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

 

said ... (05 April, 2007 21:23) : 

வசந்தன்!

உண்மை. இறப்பின் பின்னே இவரைப்பற்றி நான் அறிந்து கொண்டேன். உங்களின் இப்பதிவு, அவரது பணித்தளத்தின் கடினத்தை உணர்தியது. தேசாத்துக்கான ஒரு மனிதனை இழந்துவிட்ட துயரம்.
அஞ்சலிகள்.

 

said ... (05 April, 2007 21:50) : 

மேடைகளில் அதிகம் தோன்றாதவர். ஆனால் அனைத்துத் தமிழர்களையும் ஒருங்கிணைப்பதில் வெற்றி கண்டவர். முக்கியமாகத் துறைசார் நிபுணர்களை ஒருங்கிணைத்து விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்கச்செய்தவர். அவருடைய இழப்பு ஈடு செய்ய முடியாதது. அந்த மாமனிதரைப் பற்றிய பல தகவல்களையும் தந்தமைக்கு நன்றிகள்.

 

said ... (05 April, 2007 23:33) : 

வசந்தன்!
இவரைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். உங்கள் பதிவு மூலம் தான் அவர் சேவைத் தளம் பற்றி அறிகிறேன்.
அன்னார் ஆத்மா சாந்தியடையப் பிராத்திக்கிறேன்.

 

said ... (06 April, 2007 01:05) : 

வசந்தன்,
பதிவுக்கு நன்றி.

/* இவரைப்பற்றி அதிகம்பேர் அறிந்திருக்க மாட்டீர்கள். சாவுச் செய்தியையும் அதைத்தொடர்ந்த நிகழ்வுகளையும் தவிர்த்து இவர் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். */

உண்மை. இவர் இறந்த பின் தமிழ்நெற்றில் வந்த செய்திகளின் பின்னர்தான் இவைரைப் பற்றிக் கேள்விப்பட்டேன்.

தலைவரால் மாமனிதர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டதிலிருந்தே அன்னார் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு எவ்வளவு பங்காற்றியிருக்கிறார் என்பதை யூகிக்க முடிகிறது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

"மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்சிக் கடலில் தமிழ்மண் மிதக்கும்"

 

said ... (06 April, 2007 01:55) : 

பலரும் அதிகம் அறிந்திரா ஒருவரின்
உழைப்பையும் பங்களிப்பையும்
பதிவு செய்துள்ளீர்கள்
பாராட்டுக்கள்.

 

said ... (06 April, 2007 10:05) : 

கானாபிரபா,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

நீங்கள் ஓரிடுகை இடுவீர்களென்று நினைத்தேன். பிறகு நானே எழுதிவிட்டேன். குறைந்தது பத்தாண்டுகளாவது இங்கு இருக்கும் நீங்கள் எழுதியிருந்தால் இன்னும் வலுவானதாக இருந்திருக்கும்.
________________________

மலைநாடான்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

உண்மையில், இவரின் பங்களிப்புகளில் வெளியே சொல்லக்கூடியவை சிலவே.
கனகசிறிதரன் சொன்னது போல், இதுவோர் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றால் மிகையன்று.

 

said ... (06 April, 2007 10:11) : 

வணக்கம் வசந்தன்

12 ஆண்டு அவுஸ்திரேலிய வாழ்வில் முதல் வருடத்திலிருந்தே ஏதோ ஒருவகையில் அவருடைய ஆளுமை என் போன்ற இளைஞர்களுக்கு (மெல்பனில் இருந்த காலத்தில்) இருந்தது. என்னை 97 ஆமாண்டு முதலில் 3 ZZZ வானொலிக்கு இழுத்துப் போனதே அவர்தான். ஆனால் சில விஷயங்களை எழுதும் போது இவன் என்ன தற்புகழ்ச்சி பாடுகிறானே என்ற தொனி வந்துவிடக்கூடாதோ என்று தவிர்த்துவிட்டேன். உண்மையில் இன்னும் என்னால் அவருடைய மரணம் மனதளவில் ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிட்டது. என் மனம் ஒரு நிலைப்பட்டு பதிவு மூலம் முடிந்தால் தருகின்றேன்.

 

said ... (06 April, 2007 13:47) : 

வசந்தான் அவரை பற்றிய தகவல்கள் பல நாடுகளையும் சேர்ந்த தமிழ் மக்களுக்கு, இறப்பின் பின்னாக தான் தெரியவந்திருகிறது. உங்கள் பதிவுக்கு நன்றி.

 

said ... (12 April, 2007 11:10) : 

வசந்தன்
நீங்கள் முதலில் எனக்கு அனுப்பிய தமிழ் மாற்றுப்பெட்டி புது பிளாக்கரில் வேலை செய்ய மறுக்கிறது,பார்த்தீர்களா?
ஏதேனும் வழி தெரியுமா?
திரு சுரதாவிடம் பேசிய போது சோர்ஸ்ஸில் தமிழ் எழுத்து தெரியாவிட்டால்,இதுவும் வேலை செய்யாது என்று சொன்னார்.
உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?
நன்றி.

 

said ... (13 April, 2007 12:20) : 

வடுவூர் குமார்,
எனக்குத் தெரியவில்லை. நான் கிளாசிக் தான் பயன்படுத்துகிறேன். எனக்குச் சரியாக வேலை செய்கிறது.

 

said ... (13 April, 2007 13:08) : 

வசந்தன்
திரு.ஜெயக்குமாரைப் பற்றி பலரும் அறியும் வண்ணம் நல்லதொரு பதிவைப் போட்டிருக்கிறீங்கள்.உண்மையில் இது மிகவும் பாராட்டப்பட வேண்டியதொரு விடயம்.
//அவுஸ்திரேலியா என்று எடுத்துக்கொண்டாலே ஒவ்வொரு மாநிலத்துக்குமான பயணத்தூரம் மிகமிக அதிகம். தனது பணிக்குரிய இடங்கள் அனைத்துக்கும் இடைவிடாது பயணம்செய்து பயண அலைச்சல்களிலேயே அவர் பலநாட்களைக் கழித்தார்//
உண்மைதான் பிறிஸ்பேனுக்கும் வந்து இங்குள்ள தமிழ்மக்களோடு பிரச்சனைகளை கலந்துரையாடினார். இங்குள்ள அனைவருக்கும் அவரை நன்கு தெரியும்.அவரது மறைவுச் செய்தி இங்கு பலரையும் கவலைக்கு உள்ளாக்கியது
இங்கு எல்லோரும் நினைவு கூர்வது அவரது மாறாத சிரிப்பு முகமும், சாந்தமும் தான்.

 

said ... (04 May, 2007 17:29) : 

வணக்கம் வசந்தன்,

கானா பிரபா அவர்கள் அவரைப் பற்றி எழுதி இருக்கலாம் என்று கூறி இருந்தீர்கள்... நான் எண்ணுகின்றேன்... அவருடன் அதிகம் பழகியவர்கள் அவரைப் பற்றி இங்கு எழுதுவதிலும் விட... அவரைப் பற்றி ஒரு புத்தகம் எழுதலாம் (அவர் வாழ்க்கை)என்று...ஏன் எனின்... இங்கு அவரைப் பற்றி எழுதப் போக.. பிரபா அண்ணா சொன்னது போன்று தான் ஆகி விடும்...
இதுவரை நான் எனது நண்பன் ஒருவனுடைய மரணத்தைத் தவிர, வேறெந்த மரணத்திற்கும் காலனைக் கடிந்ததில்லை... ஆனால் ஜெயகுமார் அங்கிள் அவர்களின் பிரிவானது காலனைக் கண்டால் கொல்வேன் போன்று இருந்தது... எல்லோரிலும் தனிப்பட்ட முறையில் மிகவும் அக்கறை எடுத்துப் பழகுவார்... இவருடைய இழப்பு... அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல... தமிழர் அனைவருக்குமே பேரிழப்பு

கரன்

 

said ... (07 May, 2007 03:05) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (20 May, 2007 11:37) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (22 May, 2007 03:49) : 

This comment has been removed by a blog administrator.

 

post a comment

© 2006  Thur Broeders

________________