Sunday, May 14, 2006

பிரபாகரன் பெயரை மாற்றவேண்டும்.

சோதிடம் பற்றி, அதன் புரட்டுக்கள் பற்றி பலர் எழுதிவிட்டார்கள். தருமி ஒரு வேள்வியாகவே செய்து வருகிறார்.

எனக்கு அண்மையில் சோதிடக்கட்டுரையொன்று வாசிக்கக் கிடைத்தது. நல்ல சுவாரசியமான கட்டுரை. அதைப்பார்த்த பிறகு ஒரு பதிவு போடாட்டி எப்படி?

சோதிடர் சொல்வதையும் அதற்கு என்கருத்தையும் தருகிறேன்.
கட்டுரையாளரே 'தலைவர் பிரபாகரன்' என்றுதான் முழுவதும் சொல்லிக் கொண்டு வருகிறார். ஆகவே எனக்கும் 'தலைவர் பிரபாகரன்' என்று பாவிப்பதில் எந்தச் சிக்கலுமில்லை.


"தமிழ் நெட் இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை Pirapakaran அல்லது. Pirahbakaran என்று ஆங்கிலத்தில் போடுகிறார்கள். அவரின் பெயரை Pirabaharan என்று உச்சரிப்புடன் எழுதுவதாயிருந்தால் அது அவருக்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று பயப்படுகிறார்களாம். V.Pirapakaran -35>3+5=8 என்று முடிவதால் அவருடய பிறந்த நாளான 8ம் திகதியுடன் சேர்ந்து 8 இலக்கத்திற்குரிய இரட்டைப் பலங்கள் தொடரும். V.Pirapakaran என்பதால் 37, 3+7=10=1 என்று மாற்றிவைத்துச் சிறந்த பலனடைய நினக்கிறார்கள் அவரின் விசுவாசிகள்."

முதலில் எண்சாத்திரம் பார்த்துப் பெயர் எழுதுகிறார்கள் என்ற கதை முட்டாள் தனமானது.
தலைவர் பிரபாகரனின் பெயரை Pirabaharan அல்லது Pirabaaharan என்றுதான் எழுத வேண்டுமென்பது என் கருத்து. இந்த விசயத்தில் சோதிடருடன் ஒத்துப்போகிறேன்.(இது சோதிடத்தால் வந்ததில்லை. சரியான உச்சரிப்புப்படி அப்படித்தான் வருமென்று நான் கருதுகிறேன்) ஆனால் பெரும்பாலானோர் விடும் தவறுதான் இதுவும். சொல்லினிடையில் வரும் 'க' கரம் 'ஹ' உச்சரிப்பில் வந்தாலும் 'K' என்ற எழுத்தைத்தான் பெரும்பாலானோர் பாவிக்கிறார்கள். (த - Dh, ழ-Zh or Z, மொழித்தொடக்கத்தில் வரும் ப -Ba என்பவை எனக்கு ஒத்துவராத விசயங்கள். அவைபற்றி பிறகு தனியே கதைக்கலாம்.)

பிரபாகரன் என்ற பெயரை ஆங்கிலத்தில் பலர் பலவிதங்களில் எழுதுகிறார்கள். வித்தியாசமான முறையில் கூகிளில் தேடினால் எல்லாவற்றுக்கும் 'தலைவர்' வருவார். புலிகள் தரப்பு வெளியீடுகளே ஒரேமுறையில் இப்பெயரை எழுதி வெளியாவதில்லை. தமிழ்நெற்றில் தேடினாற்கூட சோதிடர் சொல்வதைவிடவும் வேறு வடிவங்கள் கிடைக்கக்கூடும். Pirabaharan (சரியான வடிவமாக நானும் சோதிடரும் சொல்லுவது) கூகிளில் என்று தேடினாற்கூட புலிகளின், புலியாதரவுத் தளங்களின் இணைப்புக்கள் நிறையக் கிடைக்கின்றன.

விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்துக்கான அதிகாரபூர்வ வலைத்தளத்தில் எப்படி எழுதப்பட்டுள்ளது?
Pirabaharan என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. அதே தொகுப்பில் கீழே Prabaharan என்றும் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நெற்றை விடவும் இத்தளம் புலிகளிடமிருந்து தூரத்திலுள்ளதோ என்னவோ?

"Prabhakaran A Leader For All Seasons" என்பது 'தலைவர் பிரபாகரனின்' படத்தொகுப்புக்களடங்கிய ஒரு வெளியீடு. புலிகளின் வெளியீடுகளை இணையத்தில் விற்பனை செய்யும் 'ஈழம் ஸ்ரோர்' Pirabaharan என்று எழுதுகிறது.

ஆக, சோதிடர் தமிழ்நெற்றில் சில செய்திகளை மட்டும் பார்த்துவிட்டு பிரபாகரனின் பெயரை வைத்து சோதிடமும், தமிழ்மக்களின் போராட்டம் வெற்றிபெற வழியையும் ஆராய்கிறார். இவங்களுக்குப் பிழைப்பு இல்லாவிட்டால் எங்கயும் கருத்துச் சொல்லுவாங்கள்.
எட தமிழ்நெற் தம்பிமாரே, உந்தப் பேரை சோதிடர் சொல்லிற மாதிரி மாத்தி எழுதுங்கோவன். எங்களுக்குக் கெரியில விடிவுகாலம் பிறக்கும்.
*******************************

தலைவரின் பிறந்தநாளை வைத்துக்கொண்டு இச்சோதிடர் நிறைய விசயங்கள் சொல்கிறார்.

"சிறுவயதில பெற்றோரை விட்டுப் பிரிந்திருப்பார், பெற்றோரைப் பகைத்துக்கொண்டு செயற்பட்டிருப்பார், அதிகம் நேசித்தவர்களைச் சிறுவயதில் பிரிந்திருப்பார், எந்தநேரமும் அயராது திட்டம் தீட்டிக்கொண்டிருந்திருப்பார், திட்டங்களை இரகசியமாக வைத்திருந்திருப்பார், அவற்றை அறிந்துகொள்ள எதிரிகள் கடும் முயற்சி செய்திருப்பார்கள்"

இவ்வளவையும் தலைவரின் பிறந்த எண்ணைக்கொண்டு அந்த சோதிடர் கணித்த கணிப்புக்களாகச் சொல்கிறார்.
அடப்பாவி! இதைத்தானே உலகம் முழுக்கச் சொல்கிறார்கள். எத்தனை பேர் எழுதிக்கிழித்துவிட்டார்கள். ஏதோ பிரபாகரன் பிறக்கக முதலே அல்லது அவரின்ர சின்ன வயசிலயே தீர்க்கதரிசியாகச் சொன்னமாதிரி இப்பவந்து இவ்வளவு கதையும் விடப்படுது.
தலைவரின் பிறந்த எண், கூட்டெண்ணை வைத்துக்கொண்டு மேலும் பலவிசயங்களைச் சொல்கிறார்.
*********************************
"தலைவர் மிகவும் கடவுள் நம்பிக்கையுள்ளவர். அவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தும் ஆயுதங்கள் இராணுவத்திடம் சிக்காமற் வல்வெட்டித்துறைக்குப் போய்ச்சேர்ந்தால் திருப்பதி போய் மொட்டையடிப்பது தலைவரின் கொள்கையாயிருந்தது என்பது பலரறிந்த விடயம்."

தலைவரின் கடவுள் நம்பிக்கை எனக்குத் தெரியாது. ஆனால் தன் வாதத்துக்கு ஒரு புரட்டைச் சொல்லி வலுச் சேர்க்கிறார் சோதிடர். தலைவர் மொட்டையடித்துத் திரிந்தது உண்மை. ஆனால் எப்போது? எதற்காக?
போராட்டம் தொடங்கிய காலத்தில் தலைமறைவாகத் திரிந்தபோது தன் அடையாளத்தை மறைத்துக்கொள்ள மொட்டையடித்தபடி திரிந்தார். அப்போது மாடுவித்து, மோதிரம்வித்து ஆயுதம் வாங்க ஏங்கிய காலம். சொந்தமாக றிவோல்வர்கூட இல்லாத தொடக்க காலம். இந்தியாவிலிருந்து ஆயுதம் கடத்தும் நிலைவருவதற்கு முற்பட்ட காலம். இந்தியாவிலிருந்து ஆயுதம் கடத்தும் காலத்தில தலைவர் எப்போது மொட்டையடித்திருந்தார் என்று தெரியவில்லை. திருப்பதி மொட்டைகூட வேண்டாம். சும்மா மொட்டை. (அப்படியிருந்தால் விசயம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். தெரிந்துகொள்ளும் ஆவல்தான்)
*********************************
தலைவருக்கு உடும்பு இறைச்சி பிடிக்குமென்பதால் அந்தக் குணங்கள் அவருக்கு வரும் வாய்ப்புக்களிருப்பதாக சோதிடர் சொல்கிறார். அதே பத்தியில்,
'ஆனால் நாயைத் தின்னும் சீனர்கள் நாய் போற் குரைப்பதில்லை, பாம்பு தின்னும் சீனர்கள் பாம்பு போல் ஊர்வதில்லை'
என்றும் சொல்கிறார். ஆக பிரபாகரனுக்கு மட்டும் உடும்புக்குணம் வந்துவிடுமென்கிறார். சொன்னவர்தான் சொன்னார், உடும்புக்குணம் என்னவென்று சொல்லியிருந்தாலாவது பரவாயில்லை.

உடும்பு, யாழ்ப்பாணம் வன்னியென்று எல்லாப்பாகத்திலும் பிரபல்யமான உணவு. யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ நிறையுடைய உடும்பு நூறு ரூபாய்வரைகூட விற்பனையாகும். ஒரு நாய் மட்டுமே போதுமென்பதால் (சமயத்தில் அதுகூடத் தேவையில்லை) இலகுவான வேட்டைப்பொருள். வன்னியில் அதிகளவில் உடும்புகள் பிடிக்கப்பட்டு அவ்வினம் குறைந்து வரும் ஆபத்தை எதிர்நோக்கியதால் (ஏற்கனவே மான், மரை போன்றவற்றினை வேட்டையாடுவது தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் உடும்பு வேட்டை சடுதியாக அதிகரித்திருந்தது) உடும்பு வேட்டைமீது புலிகள் தடைபோட்டனர். நல்லவேளை வன்னித் தமிழர்கள் உடும்புப் புத்திவருவதிலிருந்து தப்பித்தனர்.
(உடும்புப்புத்தி பற்றி சோதிடர் ஏதாவது சொன்னால், என்னைப் பற்றி மற்றவர்கள் சரியாகஅறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.)
**********************************
தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை மட்டுமன்றி அவரது குடுத்தினரின் எண்சோதிடத்தையே புரட்டி மேய்ந்திருக்கிறார். மனைவி பிள்ளைகளின் சோதிடங்கள், குணங்கள் பற்றி நிறையக் கதைக்கிறார். தலைவரினதும் மனைவியினதும் எண்கள் ஒத்துவராது, நேர்மாறானவையென்று தொடங்குகிறார். பிறகு தந்தைக்கும் மகனுக்கும் ஒத்துவராது என்று தொடர்கிறார். ஆனால் தலைவரைத் தவிர மற்றவர்களின் பிறந்த திகதியை அவரகள் மேலுள்ள மரியாதையால் தான் வெளியிடவில்லையென்றும் கூட்டெண்ணை மட்டும் வெளியிடுவதாகவும் சொல்லிவிட்டு அக்கூட்டெண்ணை வைத்தே எல்லா விவரமும் சொல்கிறார். (அடேயப்பா! என்ன மரியாதை?)

ஆனால் தலைவருக்கு எத்தனை பிள்ளைகள் என்ற விவரங்கூட அந்தச் சோதிடருக்குத் தெரியவில்லை என்பது வேதனைதான்.

தலைவரின் திகதியில் பிறந்தவர்களுக்குக் காதல் தலைகீழாகிவிடும் என்று ஒரு குண்டைத்தூக்கிப் போடுகிறார். (வலைப்பதிவர்களே கவனிக்க)
**************************************
பொட்டம்மான், அன்ரன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன், நடேசன், புலித்தேவன் என்று சில பலபிரபலங்களும் (அவர்களின் மனைவியரும்) சோதிடச் சோதனையில் அகப்பட்டுள்ளார்கள். இந்தப்பகுதியில் இதிகாசங்களிலிருந்து பல எடுத்துக்காட்டுக்கள் வருகின்றன. இவர்களிற் பலர் அவர்களின் மனைவியரின் தாலிப்பாக்கியத்தால்தான் காப்பாற்றப்பட்டார்கள் என்பதுமுதல் பல விசயங்களை அவர்களின் எண்களை வைத்துச் சொல்கிறார்.

மகிந்த ராஜபக்ஷ பற்றியும் எண்சோதிடத்தை வைத்து ஆராயப்படுகிறது.
***************************************
இறுதியாக,
"தலைவருடனிருக்கும் வேறு ஒரு சிலரின் குறிப்புக்களை இங்கு குறிப்பிடத் தயாரில்லை. தலைவருக்கு இப்போது ஆண்டவன் அருள் இருக்கிறது. யாரை நம்பவேண்டும் என்று உள்ளுணர்வின் மூலம் தெரிந்து கொள்ளும் வல்லமையை தலைவருக்கு ஆண்டவன் கொடுத்திருக்கிறான். இந்த வரப்பிரசாதத்திற்குக் காரணம் இவர் மகள் துவாரகா (காக்கும் கடவுள் கண்ணனின் பெயரைக்கொண்டவள்) பிறந்த பலனாகும். அடுத்த வருடம் 53 (8) வயதாகும் தலைவர் வணங்கும் முருகனிடம் பிரார்த்தனைகளைச்செய்வது நல்லது. உயிருக்கு பத்துண்டு. அடுத்த வருடம் மிகவும் பயங்கரமானது (53 (8). அப்போது பொட்டுவின் வயதும் 44, நல்ல சகுனமல்ல. தலைவர் பிறந்த மாதத்திற் பிறந்த கருணாவின் வயது 40 (4). நம்பமுடியாத வாழ்க்கை மாற்றங்களைக் கருணாவுக்குக் கொண்டுவரும். அடுத்த 13 வருடங்களுக்கு இவருக்கு ஏறு பலன். தலைவருக்கு அடுத்த 3வருடங்களுக்கு இறங்கு பலன். "
என்று கட்டுரை முடிகிறது.
***************************************
சோதிடக் கட்டுரையில் பல விசயங்கள் சொல்லப்பட்டாலும் சாராம்சம் இதுதான்.
"பிரபாகரன் யாரையும் நம்பக்கூடாது. அவருடன் இருப்பவர்கள் பொல்லாதவர்கள். (இதன்மூலம் பிரபாகரன் நல்லவர்என்று கட்டுரையாளர் சொல்லவருகிறாரா என்று தெரியவில்லை) பாலசிங்கம், பொட்டு போன்றவர்கள் ஆபத்தானவர்கள், ராஜபக்ஷவுக்கு நல்லகாலமுண்டு. அவரை வெல்ல முடியாது. பிரபாகரன் தோற்கப்போகிறார். தன்னுடனிருப்பவர்களைக் கலைத்துவிட்டு சரியான சொல்கேட்க வேண்டும்."

இப்போதுள்ள யாரையும் நம்பக்கூடாது என்றுவிட்டு, யாரை நம்பவேண்டுமென்று அக்கட்டுரையாசிரியர் சொல்கிறார். அதுதான் இச்சோதிடக்கட்டுரையின் உயிர்நாடி.

"தலைவரின் நெருங்கிய மனிதர்களை எடுத்துக்கொண்டால், தலைவரை மிகவும் உணர்ந்து கொண்ட ஒரேஒரு பிறவி கருணாவாகும். கருணாவின் கூட்டுத்தொகை 7-4 கும். தலைவரின் 8-2 இலக்கங்களுடன் இணையும் காந்த சக்தியுள்ள இலக்கங்கள் ( 8,4---2,7 இவற்றைக் காதல் இலக்கங்கள் என்று கூறுவதுமுண்டு). தலைவர் தளபதி என்ற உறவுக்கப்பால் ஒரு ஆத்மீக இணைப்பு இவர்களைச் சேர்த்திருக்கும். கருணாவும் தலைவர் பிறந்த மாதத்திற் பிறந்தவர். 7ம் இலக்குக்குரிய சினேகித இலட்சணம்"
என்று தொடங்கி கருணாவைப்பற்றி புகழ்ந்து அக்கட்டுரைதொடர்கிறது.
கருணா தான் அந்த மனிதன். அதையும் எண்சோதிடத்துக்குள்ளால் சொல்கிறார். பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் பூர்வ ஜென்மத்திலேயே நல்ல உறவு இருந்ததாம். பிரபாகரனுக்கு உறுதுணையான, அவர் மேல் பாசம் வைத்த, அவருக்காக எதையும் செய்யவல்ல ஒரேயொருவர் கருணாதானாம். ஒருவர் நினைப்பதை மற்றவர் சரியாப் புரிந்துகொள்ளும் அனுக்கிரகத்தை இந்த இருவருமே பெற்றுள்ளார்களாம். (இந்த விசயத்தை நான் பூரணமாக ஒப்புக்கொள்கிறேன். கடந்தகாலச் சம்பவங்களே சாட்சி;-))
அதைவிட கருணா நிறைய அனுக்கிரகம் பெற்றுள்ளாராம். கருணாவைப் பகைப்பது பிரபாகரனுக்குக் கேடு விளைவிக்குமாம். கருணா இனிவரும் காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெறுவாராம்.

இந்தக் கட்டுரை மிக அண்மையில்தான் எழுதப்பட்டுள்ளது. அதுவும் சரத் பொன்சேகா மீதான தாக்குதலின்பின்னர்.
ஆனால் கருணா குழு என்ற பெயரில் இயங்கியவர்களின் மூன்று முகாம்கள் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்டபின் எழுதப்பட்டதா என்பது தெரியவில்லை.

சோதிடரின் பெயர் மதியளி என்றும் முகவரி சென்னையென்றும் உள்ளது. ஆனால் உந்தச் சோதிடப் பாம்பு எந்தப் புத்துக்குள்ளயிருந்து வருதெண்டு தெரியாதோ?
***************************
சிலபகுதிகள் மட்டுமே நான் காட்டியுள்ளேன். விரும்புபவர்கள் முழுமையான சோதிடக்கட்டுரையைப் படியுங்கள். பயன்பெறுங்கள்.


நன்றி: தேனி
***************************

தலைப்பு கொஞ்சம் அதீதமாத் தெரியுதோ?

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பிரபாகரன் பெயரை மாற்றவேண்டும்." இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (14 May, 2006 14:36) : 

எழுதிக்கொள்வது: pot"tea"kadai

அடங்கொக்காமக்கா..:-))

நல்லா படிச்சீங்களா...அது வெறும் கருணாவா இல்ல கருணாநிதியா?:-))
ஹி...ஹி...

14.59 14.5.2006

 

said ... (14 May, 2006 14:37) : 

எழுதிக்கொள்வது: hari

இதைத் தேனியிடம் இருந்தே பெற்றுருக்கின்றீர்கள் என்பதில் இருந்தே புரிகின்றதேஇ யாருடைய கை ஆள் இவர் என்றே!!

இப்படியாவது தலைவருக்கு பக்கத்தில் உள்ளவர்களை பிரச்சனையாக்கலாம் என்று நினைக்கின்றார் போல. உலகத்தில் இவர் ஒருவர் தான் புத்திசாலி என்றும் நினை;ககின்றார் போலும்.

இதை நகைச்சுவைப் பிரவாக மாற்றி விடுங்கள் வசந்தன்

22.23 13.5.2006

 

said ... (14 May, 2006 15:51) : 

வசந்தன்,
வணக்கம்.
நேற்றும், இன்றும் Toronto வில் நடந்த Tamil Studies Conference க்குப் போய்விட்டு சற்று முன்னர் தான் வீடு வந்து சேர்ந்ததனால் மிகவும் களைப்பாக இருப்பதால் உங்களின் பதிவு பற்றி பின்னர் நேரம் கிடைக்கும் போது விபரமாக எழுதுகிறேன்.
ஆனால் உங்களின் பதிவு பற்றிய முக்கியமான சங்கதி ஒன்றை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நீங்கள் உங்கள் பதிவில் ஆதாரமாக எடுத்துக்காட்டிய இணையத்தளம் (தேனீ.com) சிங்கள அரசின் (உளவுப் படையின்) அனுசரனையோடு, விலை போன சில தமிழ் அருவருடிகளால் நடாத்தப்பட்டு வரும் இணையத்தளம் என்பதை அறியத்தர விரும்புகிறேன்.
அமெரிக்க அரசு வியற்நாமில் கையாண்ட சில அணுகு முறைகளைத்தான் இப்போது சிங்கள அரசுகள் ஈழத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் மத்தியிலும் யுத்தநிறுத்த காலத்தில் மிகவும் தீவிரமாக நடைமுறைப் படுத்தி வருகின்றனர்.
அமெரிக்கப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர். Richard H .Shultz அவர்கள் அமெரிக்கா வியற்னாமுக்கு எதிரான நிழல் யுத்தத்தை
[covert paramilitary campaign] 4 வகையாகப் பிரித்து நடைமுறைப்படுத்தியது என்று கூறுகிறார்.அதைத்தான் இப்போது சிங்கள அரசுகளும் செய்வதால் அந்த 4 வகையில் ஒரு வகை பற்றி இங்கே சுருக்கமாகச் சொல்கிறேன்.

"Psychological warware (psywar) - establishing a fabricated resistance (guerrrilla) movement in North Vietnam, kidnaping and indoctrinating North Vietnamese citizens, operating several falsely attributed 'black' radio stations, distributing propaganda materials, forging letters and documents, and initiating other dirty tricks"
(Dr.Richard H.Shultz, p.xi)

மேலே உள்ள ஆதாரத்தின் தமிழாக்கம்:

"உளரீதியான யுத்தம் (உள யுத்தம்)- வட வியற்னாமில் கற்பனையான ஓர் எதிர்க் (கொரில்லா) குழுவை உருவாக்குவது, வட வியற்னாம் பொதுமக்களைக் கடத்தி அவர்களுக்கு கற்பனைக் குழுவின் கொள்கைகளைப் போதிப்பது,பொய்யான வானொலிச் சேவைகள் மூலமும், பொய்யான நாளேடுகள், துண்டுப்பிரசுரங்கள், கடிதங்கள் மற்றும் பல தந்திரச் செயல்களின் மூலம் மக்களை திசை திருப்புவது"

ஆகவே இந்த தேனீ எனும் இணையத்தளமும் தமிழ் மக்கள் மீதான உளரீதியான யுத்தத்தின் ஓர் முகமே.

//தலைவருக்கு உடும்பு இறைச்சி பிடிக்குமென்பதால் அந்தக் குணங்கள் அவருக்கு வரும் வாய்ப்புக்களிருப்பதாக சோதிடர் சொல்கிறார்.//

தலைவர் பிரபாகரன் அவர்களை ஓர் மோசமானவர் என்று சித்தரிப்பதற்காக,
இப்படி ஓர் கதை விடுகிறார்கள்!!!
எல்லாத் தமிழர்களும் தங்களைப் போல் முட்டாள்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு!


//தமிழ் நெட் இணையத்தளத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெயரை Pirapakaran அல்லது. Pirahbakaran என்று ஆங்கிலத்தில் போடுகிறார்கள். அவரின் பெயரை Pirabaharan என்று உச்சரிப்புடன் எழுதுவதாயிருந்தால் அது அவருக்குத் துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்று பயப்படுகிறார்களாம்.//

தமிழ்நெற்றை மட்டம் தட்ட போடப்பட்ட வாய்க்கியங்கள் இது. தமிழர் தரப்புச் செய்திகளை உடனுக்குடன் உலகுக்கு எடுத்துச் சொல்வதால் தமிழ்நெற் மீதும் அவர்களுக்கு அருவெறுப்பு. அண்மையில் சிங்களவர்களால் நடாத்தப்படும் ஆங்கில நாளேடுகளும்
தமிழ்நெற் பற்றி அவதூறாக எழுதியது உங்களில் பலருக்கு ஞாபகம் இருக்கலாம்.

//தலைவரினதும் மனைவியினதும் எண்கள் ஒத்துவராது, நேர்மாறானவையென்று தொடங்குகிறார். பிறகு தந்தைக்கும் மகனுக்கும் ஒத்துவராது என்று தொடர்கிறார். ஆனால் தலைவரைத் தவிர மற்றவர்களின் பிறந்த திகதியை அவரகள் மேலுள்ள மரியாதையால் தான் வெளியிடவில்லையென்றும் கூட்டெண்ணை மட்டும் வெளியிடுவதாகவும் சொல்லிவிட்டு அக்கூட்டெண்ணை வைத்தே எல்லா விவரமும் சொல்கிறார்.//

தமிழன் இளிச்ச வாயன் என்ற எண்ணம் போலும் இத் துரோகக் கும்பலுக்கு!

//அடுத்த வருடம் 53 (8) வயதாகும் தலைவர் வணங்கும் முருகனிடம் பிரார்த்தனைகளைச்செய்வது நல்லது. உயிருக்கு பத்துண்டு. அடுத்த வருடம் மிகவும் பயங்கரமானது (53 (8). அப்போது பொட்டுவின் வயதும் 44, நல்ல சகுனமல்ல. தலைவர் பிறந்த மாதத்திற் பிறந்த கருணாவின் வயது 40 (4). நம்பமுடியாத வாழ்க்கை மாற்றங்களைக் கருணாவுக்குக் கொண்டுவரும். அடுத்த 13 வருடங்களுக்கு இவருக்கு ஏறு பலன். தலைவருக்கு அடுத்த 3வருடங்களுக்கு இறங்கு பலன். "//

இதைத்தான் மேலே பேராசிரியர் றிச்சார்ட் குறிப்பிட்டிருந்தார். கருனா குழு ஒன்று உண்மையில் இல்லை. சிங்கள உளவுப்படை சில தமிழ் துரோகிகள் சிலரை வைத்து இக் கற்பனை அமைப்பை , ஏதோ கருனா குழு ஒன்று இருப்பதாகவும், அக் குழு மிகவும் பலம் பொருந்தியது எனவும் ஓர் மாயையை தமிழ்மக்களிடமும் போராளிகளிடமும் தோற்றுவித்து, அவர்களின் மன உறுதியைக் குலைப்பதற்கான உளரீதியான யுத்தத்தின் ஓர் நாடகமே இது.

//சோதிடரின் பெயர் மதியளி என்றும் முகவரி சென்னையென்றும் உள்ளது. ஆனால் உந்தச் சோதிடப் பாம்பு எந்தப் புத்துக்குள்ளயிருந்து வருதெண்டு தெரியாதோ?//

இப்படி ஓர் சோதிடர் சென்னையில் உள்ளாரா என்பதே சந்தேகம். ஆக தமிழர்கள் சோதிடத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை பகடைக்காயாக வைத்து விடுதலைப் போராட்டம் மீதான தமிழர்களின் மன உறுதியைக் குலைக்க எடுத்த முயற்சியே இது. இந்த நாடகம் எல்லாம் தமிழர்கள் மத்தியில் பலிக்காது என்பதை இத் துரோகக் கும்பல்களும் அவர்களின் எசமானர்களும் புரிந்து கொள்ளும் நாள் வரும்.

 

said ... (14 May, 2006 15:52) : 

வசந்தன்,
சுவாரசியமாய் இருக்கிறது. :-)))

 

said ... (14 May, 2006 16:02) : 

முதல்ல சோதிடர் நல்லா உடும்புக்கறி சாப்பிடுவார் போல:-))))

 

said ... (14 May, 2006 17:58) : 

நான் ஏதோ இந்தியப் பத்திரிகையில் வந்த சமாச்சாரம் என்று வாசிக்கத் தொடங்கினேன். தேனீ தான் இங்கு கொட்டியுள்ளது. அது கருணாவின் தேனீ என்று உங்களுக்குத் தெரியாதோ? இதையும் ஒரு பதிவெண்டு எடுத்துப் போட்டிருக்கிறியள்.

 

said ... (14 May, 2006 18:00) : 

எழுதிக்கொள்வது: தருமி

முழுமையான சோதிடக்கட்டுரையைப் படியுங்கள்."// போதுமயா படித்தவரை!
நல்லவேளை பிரபாகரின் பெயரை, தமிழில் பிறபாகரன், பிறபாகறன், பிரபாகறன்....என்றெல்லாம் மாற்றி எழுதச் சொல்லவில்லை!

13.47 14.5.2006

 

said ... (14 May, 2006 19:57) : 

என்ன நடந்தது வசந்தன்?

 

said ... (14 May, 2006 22:41) : 

பொட்டீக்கடை,
வருகைக்கு நன்றி.
ஹரி, வருகைக்கு நன்றி.
வெற்றி,
வருகைக்கும் நீண்ட பின்னூட்டுக்கும் நன்றி.

தேனியில் இடையிடையே பயன்பாடான விமர்சனங்கள் வருகின்றன. முற்றாகக் குப்பையென்று சொல்ல முடியாது. ஆனாலும், இப்படிக் கட்டுரைகளோ, தாய்லாந்திலிருந்து கிழமைக்கொரு கப்பலில் முல்லைத்தீவுக்குச் சாப்பாடு போனது என்றோ எழுதும்போது கேலிக்கூத்தாகிறது. இதைவிட அடுத்தபடி முன்னேறி, வல்வெட்டித்துறை அம்மன் கோபுரத்தைவிட ரெண்டு அடி உயரமா கட்அவுட் வச்சதாலதான் 2004 ஆம் ஆண்டு சுனாமியே வந்து இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றது என்று எழுதும் போது வெறும் கோமாளித் தளமாகப் போய்விடுகிறது.

 

said ... (15 May, 2006 00:02) : 

///இதைவிட அடுத்தபடி முன்னேறி, வல்வெட்டித்துறை அம்மன் கோபுரத்தைவிட ரெண்டு அடி உயரமா கட்அவுட் வச்சதாலதான் 2004 ஆம் ஆண்டு சுனாமியே வந்து இலட்சக்கணக்கான மக்களைக் கொன்றது//

சுனாமி வரவழைக்க இவ்வளவு சுலபமான வழிகள் உண்டா?

 

said ... (15 May, 2006 00:08) : 

உலகில்;பலவகைக் கிறுக்குக்கள் கிறுக்கித் திரிகிறார்கள்! அதில் இது ஒரு புதுத் தினுசு!!!;
யோகன்
பாரிஸ்

 

said ... (15 May, 2006 00:10) : 

என்னத்த தவைரினர பேரைமாதிறது.
அவர் தான் எல்லோரின்ர தலையெழூத்தையும் மாத்திபோடுறாரே.......
இதுக்குள சோதிடமாவது உடும்புக்கறியாவது.......
யார் என்ன சொன்னாலும் தலைவர் எழூதிற எழூத்துத்தான்
தமிழரின்ர தலைஎழூத்து......

எப்போதும் புலிப் பிரதிநிதிகள் எங்கேயாவது மேடையில மைக பிடித்து
பேசும்போது.....
தலைவர் சொன்னார்....
தலைவர் அறிவிச்சு போட்டார்......
தலைவர் முடிவெடுத்துப் போட்டார்....
தலைவருக்கு பின்னால மக்கள் வெள்ளம்....
தலைவருக்கு பிடிச்சா உடனே செய்து போடுவார்.....
தலைவர் பொறுமையோடு இருக்கிறார்....

இப்பிடி பேசவந்த விஷயத்தை விட்டுப்போட்டு தலைவரின்ர தலைய சுத்திச் சுத்தி பேசிக்கொண்டே இருப்பினம்.. இதிலயிருந்து அவர்தான்
எங்களின்ர சோதிடர் என்கிறத நாங்கள் தெரிந்து கொள்ளலாம்.

(லொள்ளு பாண்டி)

 

said ... (15 May, 2006 02:26) : 

//தேனியில் இடையிடையே பயன்பாடான விமர்சனங்கள் வருகின்றன. முற்றாகக் குப்பையென்று சொல்ல முடியாது. //

இங்கே தான் நீங்கள் ஏமார்ந்து விட்டீர்கள். இங்கே தான் துரோகக் கும்பல் வென்று விட்டது. மாற்றுக் கருத்துக்களை நாம் மதிக்க வேண்டும், ஆனால் மாயையான கருத்துக்களுக்கு நாம் பலியாகிவிடக் கூடாது. எமது விடுதலைப் போராட்டம் பற்றிய மாற்றுக்கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு விவாதிப்பது வரவேற்கத்தக்கது, தேவையானதும் கூட. ஆனால் மாற்றான் கருத்தை [சிங்கள பேரினவாதிகளினதும் துரோகக்கும்பல்களினதும்] அப்படியே நம்பி அவர்களின் வலைக்குள் வீழ்ந்து விடுவது அறிவீனம். நான் இங்கே ஓர் சங்கதியை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். தலைவர் பிரபாகரன் அவர்கள் ஓர் முடிவு எடுக்கும் போது தானே ஏகபோகமாக ஒர் முடிவை எடுப்பதில்லை. பலருடன் கூடி பல நாட்கள் விவாதித்த பின்னரே முடிவு எடுப்பார்கள். எடுத்துக்காட்டாக, பாலகுமாரன் ஓர் கருத்தைச் சொன்னால், பாலசிங்கம் மாற்றுக்கருத்தை வைப்பார். தலைவர் இன்னுமோர் கருத்தை முன் வைப்பார். இப்படிச் சூடாக விவாத்திதுத்தான் அவர்கள் ஓர் முடிவுக்கு வருவார்கள். ஆகவே நல்ல ஆக்கபூர்வமான மாற்றுக்கருத்துக்களை நாம் வரவேற்க வேண்டும், விவாதிக்க வேண்டும்.

//தேனியில் இடையிடையே பயன்பாடான விமர்சனங்கள் வருகின்றன. முற்றாகக் குப்பையென்று சொல்ல முடியாது. //

அவர்கள் தாங்கள் ஏதோ உண்மையை எழுதுவது போலவும், நடுநிலையாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மக்களைத் திசை திருப்புவதற்காக கையாளும் உத்தியே இது. "ஆகா, இவங்கள் சொல்லிறதும் உண்மை போல தான் இருக்கு" என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நம்பக் கூடிய விதமாக எழுதுவார்கள்.
"எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொரூள் மெய்ப் பொருள் காண்பதரிது" எனும் வள்ளுவன் வாக்குப் போல அரசியல் அறிவு குறைந்த மக்கள் , இவர்களின் மாயைக் கருத்துக்களின் மெய்ப்பொருளை அறியாமல் நம்பி குழப்பமடைந்து விடுவதும் உண்டு. இக் கும்பலுக்கு உண்மையில் எம் மக்களின் விடுதலையில் அக்கறை இருந்தால், இக்கருத்துக்களை புலிகளின் தலைமைக்கு எடுத்துச் சொல்லி ஏன் தலைமையுடன் விவாதிக்கக் கூடாது? நேரடியாக விவாதிக்க முடியாவிட்டால் இக் கருத்துக்களை தலைமைப் பீடத்திற்கு கடித மூலமாகவே அனுப்பி விளக்கம் கேட்கலாமே? இங்கே உங்களுக்கு ஓர் சங்கதியைச் சொல்ல விரும்புகிறேன். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் பல தமிழ்ப் புத்திஜீவிகளும், பல தமிழ் அரசியல் அறிஞர்களும் பல விமர்சனங்களை , மாற்றுக்கருத்துக்களை, தமது கருத்துக்களை நாள் தோறும் புலிகளின் தலைமைப் பீடத்திற்குச் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் இவர்கள் சிங்கள அரசுகளினதும் துரோகக் கும்பல்களினதும் பரப்புரை ஊடகங்கள் மூலம் மக்களைத் திசை திருப்பி விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் விதத்தில் சொல்வதில்லை. ஆகவே, இப்படியான துரோகக் கும்பல்களின் கபடத் தந்திரங்களுக்கு[dirty tricks] பலியாகி விட வேண்டாம் என என் உறவுகளைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

 

said ... (15 May, 2006 02:45) : 

//சிறுவயதில பெற்றோரை விட்டுப் பிரிந்திருப்பார், பெற்றோரைப் பகைத்துக்கொண்டு செயற்பட்டிருப்பார், அதிகம் நேசித்தவர்களைச் சிறுவயதில் பிரிந்திருப்பார், எந்தநேரமும் அயராது திட்டம் தீட்டிக்கொண்டிருந்திருப்பார், திட்டங்களை இரகசியமாக வைத்திருந்திருப்பார், அவற்றை அறிந்துகொள்ள எதிரிகள் கடும் முயற்சி செய்திருப்பார்கள்//

இதெண்டால் உண்மைதான்.. வசந்தன்.. இதையே தான் தலைவரும் தனது பேட்டியொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.. :)

இப்படிக்கு கொழுவியெண்டு வைச்சுக்கொள்ளும்..

 

said ... (15 May, 2006 02:59) : 

வடகிழக்கிலிருந்த முஸ்லிம்களை கொன்றஒழித்தபோதும்.
அவர்களை விரட்டியடித்தபோதும். தலைவர் அவர்கள் இவர்களுடன்
கலந்துரயாடித்தான் முடிவெடுத்தாரா? அண்ணன் வெற்றி.....
இதை குறிப்பிடுவதால் இலங்கை அரசு செய்யும் கோரப் படுகொலைகளை
நான் நியாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம்........!

 

said ... (15 May, 2006 03:39) : 

வசந்தன்,
//இதெண்டால் உண்மைதான்.. வசந்தன்.. இதையே தான் தலைவரும் தனது பேட்டியொன்றில் சில வருடங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.. :)

இப்படிக்கு கொழுவியெண்டு வைச்சுக்கொள்ளும்..
//

இதைத் தான் நான் மேலே எழுதிய பின்னூட்டத்தில் துரோகக் கும்பலின் உத்தி என்று சொன்னேன்.

நான் மேலே சொன்ன கருத்தை தேவை கருதி மீண்டும் இங்கே பதிகிறேன்.
//அவர்கள் தாங்கள் ஏதோ உண்மையை எழுதுவது போலவும், நடுநிலையாளர்கள் போலவும் காட்டிக்கொண்டு மக்களைத் திசை திருப்புவதற்காக கையாளும் உத்தியே இது. "ஆகா, இவங்கள் சொல்லிறதும் உண்மை போல தான் இருக்கு" என்று மக்கள் சொல்லும் அளவுக்கு நம்பக் கூடிய விதமாக எழுதுவார்கள்.//

பல மக்கள் அறிந்த, உண்மையாக நடந்த சில சம்பவங்களைத் தமது கட்டுரைகளில் சேர்த்தால், அரசியல் விவேகம் குறைந்த பல அப்பாவித் தமிழர்கள் படிக்கும் போது, "ஆகா, இவங்கள் இதில சொல்லுறது உண்மைதான், அப்ப உவங்கள் சொல்லுற மற்ற விசயங்களும் சில வேளை உண்மையாய் இருக்கும்" என்று நம்ப வைக்கும் கபட நாடக்ம் தான் இது. ஆக , தமிழ்மக்கள் இப்படியான துரோகக் கும்பல்களின் சதி வலைக்குள் வீழ்ந்து விடக் கூடாது.
நன்றாகச் சிந்தித்து செயற்பட வேண்டும்.

 

said ... (15 May, 2006 04:12) : 

திரு வசந்தன்.

புலி எதிர்ப்பு கருத்துக் கொண்டோரை புலிகளால் மட்டுமல்ல.
சாதாரண ஒரு தமிழனலே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஆனால் நுனாலும் தன் வாயலே கெடும் என்பது போல் இந்த புலி ஆதரவளர்கள் புலி களையே வம்பில் அடிக்கடி மாட்டிவிடுவது பெரிய வேதனை. ஏதோ இவர்களுக்கு அறிவித்து விட்டு எல்லாமுடிவும் எடுப்பதுபோல் கதை விடுவதுதான் இவர்களுக்கு தெரிந்தது......
இந்த ஒட்டு உண்ணிகளால் தான் புலிகளுக்கு ஆபத்து......!

 

said ... (15 May, 2006 05:27) : 

//"எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொரூள் மெய்ப் பொருள் காண்பதரிது" எனும் வள்ளுவன் வாக்குப் போல //

வெற்றி,வள்ளுவர் இப்படியோ வாக்குச் சொல்லியிருக்கிறார்?... ம் ...நீங்கள் சொன்னால் சரிதாம்!

 

said ... (04 February, 2007 07:05) : 

திருக்குறள்:
அதிகாரம் 43, குறள் 423

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


வெற்றியின் குறள்:

"எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொரூள் மெய்ப் பொருள் காண்பதரிது"

பொருள் என்பதைப் பொரூள் என்றும், காண்பதறிவு என்பதைக் காண்பதரிது என்றும் எழுதிய புளுகன் வெற்றி Tamil Studies Conference இற்குப் போனார் என்பது தான் இன்று தமிழுக்கு வந்த சோதனை.

 

said ... (04 February, 2007 10:05) : 

//உந்தச் சோதிடப் பாம்பு எந்தப் புத்துக்குள்ளயிருந்து வருதெண்டு தெரியாதோ?//

உதுகளை எல்லாம் நம்புறத்திக்கு நங்களென்ன காதில பூவே வைச்சிருக்கிறம்.

 

post a comment

© 2006  Thur Broeders

________________