Sunday, August 10, 2008

தலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவிதை மீளிடுகை

2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் இக்கவிதை மீள இடப்படுகிறது.
==============================

* தலைப்பில்லாக்கனவு.

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.

இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.

~~~~~

அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.

உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்துவலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன்
கடப்பார்கள்.

என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை
விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.

அன்று
இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றியை
அறைகூவித்தான் அலறும்#

~~~~~

அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.

அதனால்,
நினைவுகளின் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல
விளைந்து.

~~~~~

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி
ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.


* இஃது
எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல;
இன்றைய நாளினை நினைவிலே
வைத்துக்கொள்ளமட்டும்
எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே

#"My country did not send me to Mexico City to start the
race. They sent me to finish the race."


- During
1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen
Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place
winner.

மூலவிடுகை எழுதப்பட்டது: 12/17/2004 01:53:00 AM
===============================

எம்மைப் போன்றோர்க்குப் பொதுவான கனவு.
வாசிக்கும்போதே விளங்கியிருக்கும்; இக்"கவிதை" என்னால் எழுதப்பட்டதன்று.
இச்சொற்கூட்டச் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன?

முன்பொருநாள் படியெடுத்துச் சேமித்து வைத்திருந்ததைப் பதிந்திருக்கிறேன். விரைவில் மூலவிணைப்பை வழங்குகிறேன்.

===============================

மீளிணைப்பு:

மேற்கண்ட கவிதையின் மூலவிணைப்பு:
http://kanam.blogspot.com/2004/12/blog-post_110326651516180283.html

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________