Tuesday, January 10, 2006

பவளக் கொடி - சிறுவர் பாடல்

வறிய சிறுமியொருத்தியின் கனவும், அது சிதைந்த விதமும் பற்றி சோமசுந்தரப் புலவர் எழுதிய பாடல்.

இதை நாலாம் தரத்திற் படித்ததாக நினைவு.

யாழ்ப்பாணத்தின் வடபகுதியில் இருப்பது பருத்தித்துறை (இலங்கையின் வடமுனையும் இதுதான்). அங்கே 'பவளக்கொடி' எனும் சிறுமியொருத்தி இருந்தாள். அவள் சந்தையில் பால்விற்று வருபவள். அரியமலர், அம்புசம், பூமணி, பொற்கொடி முதிலியோர் அவள் வயதொத்தவர்கள்.

ஒருநாள் பவளக்கொடி சந்தைக்குப் பால்கொண்டு போனாள். வழக்கம்போல பாற்பானையைத் தலையில் வைத்துக்கொண்டு சென்றாள். வழியில் தனக்கேயுரியபடி மனக்கோட்டை கட்டிக்கொண்டு சென்றாள். அவளின் கற்பனைக்கோட்டை எப்படியிருந்ததென்றும் இறுதியில் அது எப்படி இடிந்தது என்றும் பாடலிற் சொல்கிறார் புலவர்.

பருத்தித்துறை யூராம்
பவளக்கொடி பேராம்
பாவைதனை யொப்பாள்
பாலெடுத்து விற்பாள்
அங்கவட்கோர் நாளில்
அடுத்ததுயர் கேளிர்!

பாற்குடஞ் சுமந்து
பையப்பைய நடந்து
சந்தைக்குப் போம்போது
தான்நினைந்தாள் மாது:
"பாலையின்று விற்பேன்
காசைப்பையில் வைப்பேன்"

முருகரப்பா வீட்டில்
முட்டைவிற்பாள் பாட்டி
கோழிமுட்டை வாங்கிக்
குஞ்சுக்குவைப் பேனே



புள்ளிக்கோழிக் குஞ்சு
பொரிக்குமிரண் டைஞ்சு
குஞ்சுகள் வளர்ந்து
கோழியாகும் விரைந்து
விரந்துவளர்ந் திடுமே
வெள்ளைமுட்டை யிடுமே

முட்டைவிற்ற காசை
முழுதுமெடுத் தாசை
வண்ணச்சேலை சட்டை
மாதுளம்பூத் தொப்பி
வாசனை செருப்பு
வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட் டுடுத்து
மினுங்குதொப்பி தொடுத்துக்
கையிரண்டும் வீசிக்
கதைகள்பல பேசிச்
சுந்தரிபோல் நானே
கடைக்குப்போ வேனே



அரியமலர் பார்ப்பாள்
அம்புசமும் பார்ப்பாள்
பூமணியும் பார்ப்பாள்
பொற்கொடியும் பார்ப்பாள்

சரிகைச்சேலை பாரீர்
தாவணியைப் பாரீர்
வண்ணச்சட்டை பாரீர்
வடிவழகு பாரீர்
என்றுயாரும் புகழ்வர்
என்னையாரோ இகழ்வர்?

'பாரும்பாரும்' என்று
பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நமிர்ந்தாள்
தையலென்ன செய்வாள்?

பாலுமெல்லாம் போச்சு
பாற்குடமும் போச்சு
மிக்கதுய ரோடு
வீடுசென்றாள் மாது
**கைக்குவரு முன்னே
நெய்க்குவிலை பேசேல்.**
---------------------------------
மேற்கூறிய பாடலில் கவிஞர் இறுதியாகக் கூறும் **அறிவுரை** மட்டில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சிறுவர்களுக்குச் சொல்லப்படும் அறிவுரையாக இது பொருந்தாது.
--------------------------------

நன்றி: சோமசுந்தரப் புலவரின் சிறுவர் பாடல்கள்


எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"பவளக் கொடி - சிறுவர் பாடல்" இற்குரிய பின்னூட்டங்கள்

 

said ... (10 January, 2006 01:46) : 

எழுதிக்கொள்வது: வசந்தன்

பரிசோதனை

2.14 10.1.2006

 

said ... (10 January, 2006 02:37) : 

மிகவும் அழுத்தமான அற்புதமான பாடல். சந்தமும் சொற்களும் கருத்தும் ஒன்றையொன்று போட்டி போடுகின்றன.

 

said ... (10 January, 2006 03:34) : 

வசந்தன் பாடலுக்கு நன்றி. சிறுவயது நினைவுகளை இரைமீட்கச் செய்கிறது.

 

said ... (10 January, 2006 04:12) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

வசந்தன் மீள நினைவுட்டியதற்கு நன்றி.... இனிமையான பாடல்

18.42 9.1.2006

 

said ... (10 January, 2006 05:53) : 

இனிமையான பாடல் வசந்தன். நீங்கள் சொன்ன மாதிரி நானும் அந்த கடைசியில் வரும் அறிவுரையை ஏற்க மாட்டேன். கனவுகள் காண்பது தானே சாதிப்பதற்கு முதல் படி. கனவில்லையெனில் வெறும் வாசற்படி.

 

said ... (10 January, 2006 06:21) : 

வசந்தன் மிக்க நன்றி. அருமையான பாடல்களை தேடி கொடுக்கிறீங்க.

நீங்க சொன்னமாதிரி கடைசி வரிகள் குழந்தைகளுக்கு பொருந்தாது, அவர்களுக்கு எப்போவும் பாசிட்டிவாகவே சொல்லி கொடுக்க வேண்டும்.

 

said ... (10 January, 2006 09:27) : 

எழுதிக்கொள்வது: சுந்தரவடிவேல்

நல்ல பாட்டு. இறுதியில் சிறுவர்களுக்கு மட்டுமில்லாது பெரியவர்களுக்குமான 'eat while you eat' வகையான நல்ல அறிவுரை!

17.48 9.1.2006

 

said ... (10 January, 2006 10:04) : 

வசந்தன் ஜேர்மனிய மொழியில் "நகைச்சுவைக் கதைகள்"என்ற சிறாருக்கான தொகுப்பில் ஒரு கதை வருகிறது.
அதிலொரு பெண்மணி தன்னிடமுள்ள 5-6 கோழிகளிட்ட முட்டைகளைச் சந்தைக்கு எடுத்துச் செல்கிறாள்,பணமாக்கும் நோக்கோடு!வழியில் கற்பனையில் மூழ்கிறாள்... முட்டைவிற்றுப் பசு வேண்டுவேன்,பால்விற்றுப் பண்டி வேண்டுவேன்,பண்டி இறைச்சி விற்றுத் தோட்டம் வேண்டுவேன்,தோட்டத்தில் பண்ணை வைப்பேன்,பண்ணையில் பலபேரை வேலைக்கு வைப்பேன்,அவர்களோடு பல பத்துப் பசுவும் ,பண்டியும்,கோழியும்,பயிர்களும் வைத்துப் பணக்காறியாவேன்... என்று கற்பனையில் மூழ்கி,இறுதியில் தலையிலிருந்த கூடை சறுக்கி விழுந்து முட்டைகள் உடைந்தது அவளது கனவைப்போல்.இக்கதை 1756ம் வருஷம் எழுதப்பட்டது.

சோம சுந்தரப் புலவரின் பாடலும் இக்கதையை ஒத்திருப்பதால், மனிதர்களின் சிந்தனை எங்கும் ஒரேமாதிரித்தாம் உருவாகிறது என்றதையறியும்போது ஆச்சரியமாகத்தாம் இருக்கிறது.

 

said ... (10 January, 2006 14:02) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (10 January, 2006 14:07) : 

This comment has been removed by a blog administrator.

 

said ... (10 January, 2006 14:35) : 

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
டி.சே,
உங்களுக்கு 'இரைமீட்கும்' பழக்கமிருக்கா?

சிறிரங்கன்,
இப்படி நிறைய இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
பாரதியின் வாழ்க்கையிலும் இப்படியொரு சம்பவம் நடந்ததாக அறிகிறேன்.
(கையிற் சில சில்லறைகளை வைத்துக்கொண்டு தன் தோழருடன் மனக்கோட்டை கட்டிக்கொண்டிருப்பார். அந்நேரத்தில் அவ்வழியால் வந்த பழம்விற்கும் கிழவியிடம், கையிலிருந்த அனைத்துச் சில்லறைக்கும் பழம்வாங்கிவிடுவார்.)

 

said ... (10 January, 2006 20:08) : 

ANGA SANAM SAGUTHU. UNAKU PADDU KEKUTHO?

 

said ... (11 January, 2006 16:40) : 

எழுதிக்கொள்வது: Logan

படங்கள் பொறுந்தவில்லையே. பாட்டு நன்றாயிறுக்கு.

17.8 11.1.2006

 

said ... (12 January, 2006 14:13) : 

//ANGA SANAM SAGUTHU. UNAKU PADDU KEKUTHO?//

daay EPD..peeee naayeeeeee...
unnoda velaiya parthuddu poda..
vanthuddan porampokku..

Vasanthan thanx for the song :)

 

said ... (12 January, 2006 21:38) : 

ஐயாமாரே,
கடசியா வந்த ரெண்டு அநாமதேய அன்பர்களுக்கும் நன்றி.
முதலாமவருக்கு,
உமக்குப் பதில் சொல்ல என்னால் முடியும். அதைப் பிறகொரு நேரம் வைத்துக்கொள்கிறேன்.

இரண்டாமவருக்கு,
இதைச்சொல்ல இ.பி.டி.பி யிலிருந்துதான் ஒருத்தர் வரவேண்டுமென்பதில்லை. ஏன், புலியெதிர்ப்பு அணியிலிருந்துதான் ஒருவர் வந்து இதைச் சொல்ல வேண்டுமென்பதில்லை. இது எப்பக்கமிருந்தும் வரும். ஏற்கெனவே வந்துமிருக்கிறது.

ஆகவே இ.பி.டி.பி புருடாக்களை விட்டிட்டு ஒழுங்கா ஏதாவது செய்யுங்கோ.

 

said ... (18 January, 2006 05:55) : 

எழுதிக்கொள்வது: L...aalan

வசந்தன்
அந்த மனிசன் என்ன சொல்ல வாறார் எண்டா
சின்னப்பிள்ளைகள் கூடுலா எதிர்பாக்கிறதுதானே. அதான் அப்பா அதக்கொண்டு வருவார் இதக்கொண்டு வருவார் இதக்கொண்டு வருவார் எண்டு பிள்ளைகள் ஏமாறக்கூடாதாம்.


19.15 17.1.2006

 

said ... (03 February, 2006 10:02) : 

L...aalan,
உங்கட கருத்துக்கு நன்றி.
ஆனாலும் தங்கத்தாத்தா என்ன சொல்லவாறார் எண்டத கச்சிதமாச் சொல்லிறியள் போல.

 

said ... (10 June, 2010 02:39) : 

இன்று எதிர்பாராவிதமாக இப் பக்கத்தினுள் நுழைந்தேன்.பாடலைப்பற்றி பலரின் கருத்தையும் காணும்போது புலவர் எதை வலியுறித்தினார் என்பதை பலர் சரியாக புரியவில்லையோ என்ற வில்லை ஏந்த வேண்டியதால் எனதான பார்வையில் கவிஞர் குறியிட்ட நீதி கனவல்ல மாறாக கவனயீனத்தை என்பதை கருக் கொள்க.கனவில்லாமலா கவிஞர்?கற்பனையும ஒர் கனவென்பதை மறவாதீர்.ஆக கவிஞரின் நீதி சரியே.

 

post a comment

© 2006  Thur Broeders

________________