Friday, May 06, 2005

உறவு முறைகள் 2.

பிறை - நான்கு.
நாலாம்பிறை பார்த்தா நாயலைச்சல்.

உறவு முறைகள் 2.
வணக்கம்!
தொடர்ச்சியா ஒரே உறவு முறையில கனபேர் இருந்தா என்னெண்டு அவயளக் கூப்பிடுறது? அவயின்ர பேரயும் உறவு முறையையும் சொல்லிக் கூப்பிடலாம். ஆனா எங்கட இடத்தில அப்பிடிக் கூப்பிடிறது குறைவு. பேரச்சொல்லிறது மரியாதைக் குறைச்சல் எண்டு நினைச்சினமோ தெரியாது.
இப்ப அப்பிடிச் சில உறவுமுறையளச் சொல்லப்போறன். இதின்ர ஒழுங்குமுறை சிலவேள இடத்துக்கு இடம் மாறுபடலாம். ஆனாபடியா உங்கட கருத்துக்களையும் சொல்லுங்கோ.

எங்கட அம்மம்மாதான் அவயின்ர குடும்பத்தில மூத்தவ. மொத்தம் எட்டில ரெண்டு ஆம்பிளயள். மிச்ச ஆறுபேரும் பொம்பிளயள் எண்டு நான் சொல்லத் தேவயில்ல. அந்த ஆறு பேரையும் உறவு முறை சொல்லிக்கூப்பிட வேணும். ஆனா பேரும் சொல்லக்கூடாது. எனக்கு அவயள் அம்மம்மா முறை. அதால என்ர அம்மம்மாவ நான் தனிய அம்மம்மா எண்டு கூப்பிடுவன். மற்றாக்கள் பெரியம்மம்மா எண்டுவினம்.அடுத்ததா வாற உறவு முறை ஒழுங்கைப் பாருங்கோ.

சின்ன அம்மம்மா
ஆசை அம்மம்மா
சீனி அம்மம்மா
சூட்டி அம்மம்மா
குட்டி அம்மம்மா

இது தனிய அம்மம்மாவுக்கு மட்டுமில்ல எல்லா உறவு முறைக்கும் இது பொருந்தும். இந்த ஒழுங்கிலதான் நாங்கள் பாவிக்கிறது. ஆனா இதையே வன்னியல வந்து சீனியம்மம்மா எண்டு நான் கூப்பிட எல்லாரும் சிரிச்சினம். அவயள் சிரிக்கினம் எண்டதுக்காக நான் என்ர உறவு முறைய மாத்த ஏலுமே. அப்பிடிக் கூப்பிட்டாத்தான் ஒரு உறவே எனக்குத் தெரியுது. வேற மாதிரிக் கூப்பிடுறது பாசாங்குமாதிரிக் கிடக்கு எனக்கு.

இதவிட இத்தினியக்கா எண்டொரு உறவுமுறையை என்ர பக்கத்துவீட்டில கேட்டிருக்கிறன். குஞ்சியாச்சி, குஞ்சியப்பு எண்டும் உறவு முறையள் இருக்கு. ஆறுபேர விடக் கூடுதலா இருந்தா என்னெண்டு கூப்பிடுவினம் எண்டு அறிய ஆவல். ஆருக்கேன் இதவிட உறவு முறையள் தெரிஞ்சாச் சொல்லுங்கோ. (தற்செயலா எனக்கு நிறையப் பிள்ளயள் பிறந்தா அவயக் கூப்பிடுறதுக்குப் பழக்க வேணுமெல்லே)
------------------------------------------------
எங்கட பெரியம்மாவின்ர பிள்ளயள் (என்னவிட வயது கூடின ஆக்கள்) என்ர அம்மாவ சித்தியெண்டுதான் கூப்பிடோணும். ஆனா சின்னனில ஆரோ சின்னம்மா எண்டு சொல்லிக்குடுத்து (சின்னம்மா எண்ட பாவனை எங்களிட்ட இல்ல) அதுகள் ரெண்டும் வாய் தவறி சின்னனிலயே 'மென்னம்மா' 'மென்னப்பா' எண்டுதான் கூப்பிடுறவை. இண்டைக்கும் அப்பிடித்தான். 5 வயசிலயே அது பிழையான வடிவமெண்டு தெரிஞ்சாலும் அந்த உறவுமுறை மாறேல. புதுசாக் கேக்கிற ஆக்கள் கட்டாயம் சிரிப்பினம். ஆனா என்ர அம்மாவுக்கும் அப்பாவுக்கும் 30 வயதில அவயள் மென்னம்மா மென்னப்பா எண்டு கூப்பிறதும் மழலையாத்தான் தெரியுதோ என்னவோ. இஞ்ச டி.சே ஐ, 'சித்தியா' எண்டு கூப்பிடுறதக் கேள்விப்படேக்க எனக்கு இந்த ஞாபகம் தான் வருது.

Labels: , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


"உறவு முறைகள் 2." இற்குரிய பின்னூட்டங்கள்

 

Anonymous Anonymous said ... (06 May, 2005 00:50) : 

எழுதிக்கொள்வது: kulakaddan

விட்டில அல்லது ஒன்று விட்ட சகோதரங்கள் அதிகமிருந்த கூபபிடறது

பெரியண்ணா
ஆசையண்ணா
சின்னண்ணா

இப்படி போரும். ஆனால் எங்கடை வீட்டில

எல்லாருக்கும் மூத்த அண்ணாவ பெரியண்ணா எண்டும் மற்றாக்களை பெயரை சொல்லி அண்ணா எண்டு தான் கூப்பிடுறது.

17.14 5.5.2005

 

Blogger கறுப்பி said ... (06 May, 2005 00:56) : 

நல்ல உறவுமுறைக் கண்டு பிடிப்புக்கள் வசந்தன். கறுப்பி தன்ர கணவனை
"இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ" (*_*) எண்டுதான் கூப்பிடுறவள்.

 

Blogger இளைஞன் said ... (06 May, 2005 01:08) : 

மாமாக்களை (அம்மாவின் சகோதரர்களை):

பெரியமாமா
சின்னமாமா
குட்டிமாமா

அண்ணாக்களை:

பெரியண்ணா
சின்னண்ணா
குட்டியண்ணா

கூப்பிடுறனாங்கள்.

மற்றும்படி அப்பாவின் சொந்த/ஒன்றைவிட்ட சகோதரர்கள் எல்லாரையும் முன்னுக்கு பெயர்போட்டுத்தான் கூப்பிடுறனாங்கள்.

உதாரணம்: ரமேஸ் சித்தப்பா

சிறு சந்தேகம்:
அம்மாவின் தம்பியை மாமா என்று சொல்லுறனாங்கள். மாமாவின் மனைவியை மாமி என்று சொல்லுறனாங்கள்.

அதப்போல அப்பாவின் தங்கையை அத்தையென்றும், அவர் கணவரை மாமா என்றும் சொல்லுறனாங்கள்.

ஆனால் சிலபேர் அப்பாவின் தங்கையை மாமி என்றும், அம்மாவழி தம்பிமனைவியை அத்தையென்றும் கூப்பிடுவினம்.

எது சரியானது ?

 

Blogger இளைஞன் said ... (06 May, 2005 01:12) : 

கறுப்பி அத்தை,
மாமான்ர பெயரைச் சொல்லக்கூடாது எண்டு பாட்டி சொன்னவவாவோ? :)

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (06 May, 2005 01:16) : 

எங்கள் ஊரில் இரண்டு வழியுமே மாமிதான். அத்தை என்ற சொல் பாவனையிலில்லை. மானிப்பாயில் இடம்பெயர்ந்து இருந்தபோதுதான் அங்குள்ளவர்கள் அத்தையெனும் சொல்லைப்பாவிப்பதை அறிந்தேன். எங்களிடத்தில் இருவழியுமே மாமி மாமா தான்.

 

Blogger வசந்தன்(Vasanthan) said ... (06 May, 2005 01:18) : 

அட நான் 5 சகோதரங்களவிடக் கூடுதலா இருந்தா எப்பிடிக் கூப்பிடுறது எண்டு உங்கள ஆலோசனை கேக்க வெளிக்கிட்டன். ஆனா நீங்கள் வெறும் மூண்டோடயே முடிச்சிட்டியள். இதவிட வேற சிறப்பு உறவு முறையளொண்டும் இல்லயோ.

 

Anonymous Anonymous said ... (06 May, 2005 07:53) : 

//தற்செயலா எனக்கு நிறையப் பிள்ளயள் பிறந்தா அவயக் கூப்பிடுறதுக்குப் பழக்க வேணுமெல்லே//

நல்ல கதை.

 

Blogger குமரேஸ் said ... (06 May, 2005 12:05) : 

எங்ஙள் குடும்பத்தில் ஒரு புது உறவுமுறை, அம்மாவிற்கு ஒரு அண்ணாவும் இரண்டு தம்பிமாரும், நங்கள் பிறப்பதற்கு முன்னரே பெரிய மாமா திருமணம் செய்துவிட்டபடியால் அவரின் மனைவி எங்கள் அம்மாவிற்கு அண்ணி, எங்களுக்கோ அவர் அண்ணிமாமி. (சிறுவயதில் அண்ணா, அம்மா கதைப்பதைப் பார்த்து, அவரை அண்ணி என்றே கூப்பிடத் தொடங்க, அண்ணி இலலை மாமி என்று பெரியவர்கள் திருத்த, கடைசியில் அண்ணிமாமி என்று நிலைத்துவிட்டது)

இதேபோல் எங்கள் ஊரில் தம்பிஐயாவும், தம்பியண்ணாவும், தம்பிமாமாவும் இருக்கிறார்கள்.எப்படி இந்த முறை வந்தது என்று விபரம் கேட்டு எழுதுகிறேன்.

 

Blogger துளசி கோபால் said ... (06 May, 2005 14:42) : 

எங்க வீட்டுலே மாமாதாத்தான்னு கூட ஒரு உறவு இருக்கே:-))))))))

 

Blogger சயந்தன் said ... (06 May, 2005 16:07) : 

எனக்கு தங்கச்சியக்கா என்றும் ஒரு உறவு முறை உண்டு. தொட்டம்மா என்று ஒருவரும் உள்ளார். அது காரண பெயர்.

 

Anonymous Anonymous said ... (07 May, 2005 21:16) : 

எழுதிக்கொள்வது: Lingan

நான் ஒரு அத்தையை 'அத்தையம்மா' எண்டுதான் கூப்பிடுறனான்

21.43 7.5.2005

 

Anonymous Anonymous said ... (08 May, 2005 09:15) : 

சயந்தன்!
உம்ம "தொட்ட" அம்மாவச் சொன்னீரா?
அப்பிடியெண்டா எத்தின அம்மா வச்சிருக்கிறீர்?

-Mahilan.

 

post a comment

© 2006  Thur Broeders

________________