Sunday, August 30, 2009

ஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்

இது இரண்டாவது பகுதியென்றால், முதலாவது? அது இங்கே இருக்கிறது.

ஆங்கில ஒலியியல் தட்டச்சு முறையை விமர்சிக்கவெனப் போய் அதை முழுமையாக விமர்சிக்காமல், அம்முறைக்குச் சார்பான கருத்துக் கொண்டவர்களை விமர்சித்ததால் அது திசைமாறிப்போனது. ஆங்கில ஒலியியல் தட்டச்சால் ஏற்படும் விளைவுகள் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப்படுமென்ற அறிவிப்போடு அவ்விடுகைக்கான பின்னூட்ட வசதி மூடப்பட்டுள்ளது.

ஆனால் சொல்லப்பட்ட கட்டுரைதான் இன்னும் எழுதப்படவில்லை.
இந்நிலையில் இன்று கிருத்திகனின் வலைப்பதிவில் அவர் ஆங்கில ஒலியியல், பாமினி, தமிழ்நெற்-99 முறைகளில் தட்டச்சுவது பற்றிச் சொன்ன கருத்தொன்றுக்கான எதிர்வினையாற்ற இவ்விடுகை எழுதப்படுகிறது.

தொடரிலக்கத்தைப் பார்த்து அதிகம் யோசிக்காதீர்கள்.
நாங்களெல்லாம் தொடர் எழுதினாலும் ஆண்டுக்கொரு பாகம் எழுதும் பேர்வழிகள். ‘மரங்கள்’ தொடரைப் பார்த்து விளங்கிக் கொள்க ;-)

ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும்போது தட்டச்சுபவரின் மூளையில் ஆங்கில வரிவடிவங்களூடாகவே அவர் எழுத்துக்கூட்டுவார் என்பது அம்முறைக்கெதிரான ஒரு வாதம். சிறிது கால இடைவெளியில் அது தாக்கத்தைத் தராது; ஆனால் வருடக்கணக்கில் ஒருவர் அப்படியே தொடர்ந்தும் தட்டச்சுவாராக இருந்தால் அம்முறை அவரின் தமிழ்ச்சிந்தனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஒரு விளக்கம்.

அதை மறுக்க வந்த இடத்தில் கிருத்திகன் இப்படிச் சொல்கிறார்.

//மற்றபடி Phonetic முறைப்படி ‘அம்மா' ‘ammaa' என்று பதிவது போலவே பாமினியில் 'அம்மா' ‘mk:kh' என்றும் தமிழ் 99ல் ‘அம்மா' ‘akfkq' என்றும்தான் பதியும்.//

கிருத்திகன்,
முதலில் உமக்கு எனது பாராட்டு. ஏனென்றால் ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான வாதமாக வைக்கப்படுபவற்றுள் ஒன்றான ‘ஆங்கில வரிவடிவங்கள் மூளையில் பதிதல்’ என்பதைச் சரியாக விளங்கியிருக்கிறீர். அதை ஏற்றுக்கொள்ளாதது, மறுப்பது, அது தேவையற்ற பயம் என்று சொல்வது நியாயமான நடவடிக்கையே.

இப்போது நான் மேலே மேற்கோளிட்ட உம்முடைய கருத்துக்கு வருவோம்.
உமது கருத்து முற்றிலும் தவறானது என்பது என் கருத்து. பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுவதில்லை, ஆனால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாகவே எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பது எனது கருத்து.

இவற்றில் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடாக மனதில் எழுத்துக்கூட்டுகிறார்கள் என்பதை ஒத்துக்கொள்ளும் நீர் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களும் அப்படியே என்கிறீர். உண்மையில் மற்ற வடிவங்களில் தட்டச்சுபவர்களின் நிலை அப்படியில்லை. அவர்கள் தமிழ் வரிவடிங்களூடே சிந்திக்கிறார்கள்.

ஆறு வருடங்களாக மிகமிகச் சரளமாகத் தமிழில் தட்டச்சிக் கொண்டிருக்கும் பாமினிக்காரன் ஆகிய எனக்கு அம்மா என்று தட்டச்சுவதற்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிங்களைச் சொல்ல முடியாது. நீர் தந்திருக்கும் ஆங்கில எழுத்துக்கள் சரிதானா என்பதைக்கூட நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம் ‘அ’வுக்கு எந்த விரல், ‘ம்’ எழுத எந்த விரல்கள் ‘மா’ எழுத எந்த விரல்கள் எந்த வரிசையில் தட்ட வேண்டும் என்பதே. சரளமாகத் தட்டச்சக்கூடிய தமிழ்நெற்99 முறைக்காரன் ஒருவருக்கும் அம்மா என்று தட்டச்சுவதற்கான விசைகளின் ஆங்கில வரிவடிவங்களைச் சட்டெனச் சொல்ல முடியாது. [நான் எங்காவது வேலையாக நிற்கும்போது ‘டேய் ‘கூ’வன்னா அடிக்க வேணுமெண்டா எந்தக் கீ அடிக்க வேணும்?’ என்று தொலைபேசியில் கேட்பார்கள். விசைப்பலகை என்முன் இல்லையென்றால் உடனே என்னால் சொல்லமுடியாது. ஒருசுற்றுவழி மூலம் இதைக் கண்டுபிடித்துச் சொல்வேன். அச்சுற்றுவழி இறுதியில்…]

இன்னும் விளக்கமாக ஓர் எடுத்துக்காட்டு சொல்லலாம்.

பாமினியிலோ தமிழ்நெற்99 இலோ நீண்டகாலம் தட்டச்சிக்கொண்டிருக்கும் உம்முடைய நண்பரொருவரை கடற்கரையிலோ உணவுக்கடையிலோ தெருவிலோ பூங்காவிலோ எங்கேயாவது சந்திக்கிறீர் என்று வைத்துக்கொள்வோம். முக்கியமான விடயம், உங்களிடத்தில் கணனியோ விசைப்பலகையோ இருக்கக்கூடாது.

இப்போது உம்முடைய நண்பரைப் பார்த்துக் கேளும், “ஐசே, ‘அம்மா இங்கே வாவா, ஆசை முத்தம் தாதா’ எண்டு எழுதிறதுக்கு நீர் அடிக்கப்போற விசைகளின்ர ஆங்கில எழுத்துக்களை வரிசையாச் சொல்லும் பாப்பம்”.

உமது நண்பரால் சொல்ல முடியாது. எழுதிக்காட்டவும் முடியாது. (சிலவேளை ஒன்றிரண்டு எழுத்துக்கள் மிகச்சிரமப்பட்டுச் சரியாகச் சொல்லக்கூடும்). ஏனென்றால் பாமினியிலும் தமிழ்நெற்99 இலும் தட்டச்சுபவர்கள் ஆங்கில வரிவடிவங்களூடு சிந்திப்பதில்லை. (அப்படித்தான் சிந்திப்பார்களென்றால் அவர்களால் உடனடியாக உமது கேள்விக்கான பதிலை கடகடவெனச் சொல்ல முடியும். அத்தோடு ஆங்கில ஒலியியல் முறைக்கெதிரான விமர்சனம் அவர்களுக்கும் பொருந்தும். தட்டச்சத் தொடங்கி நீண்டகாலமாகியும் விசைப்பலகையைப் பார்த்துப் பார்த்துத்தான் ஒவ்வொரு விசையாகக் குத்திக் கொண்டிருப்பார்களென்றால் சிலவேளை அவர்கள் இந்த வகைக்குள் வரக்கூடும்.) ஆனால் இதே கேள்வியை ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சும் ஒருவரிடம் கேட்டுப்பாருங்கள். தயக்கமே இல்லாமல் பதில் வரும்.

இப்போது புரிகிறதா ‘ஆங்கில வரிவடிவங்ளூடாக’ மனதில் எழுத்துக்கூட்டுவது என்று எதைச் சொல்கிறோமென்று? பாமினியிலோ தமிழ்நெற்99 முறையிலோ தட்டச்சுபவர்கள் தமிழெழுத்துக்களாகவே சிந்திக்கிறார்கள்.

==============================

தமிழெழுத்துக்கான விசையின் ஆங்கில வடிவத்தைக் கண்டுபிடிக்க ஒரு சுற்றுவழியைப் பயன்படுத்தலாமென்று சொல்லியிருந்தேன். அது என்னவென்றால் விசைப்பலகையில் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி அதன்மூலம் கண்டுபிடிப்பது. எடுத்துக்காட்டாக ‘அ’ என்ற எழுத்துக்கான விசையின் ஆங்கில எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று வைத்துக்கொள்வோம். விசைப்பலகையில் ‘அ’ தட்டச்சுவதைப் போன்று செய்து பார்த்துக் கொள்வது, பிறகு ஆங்கிலத்தில் அதேமுறையில் விரலைப் பயன்படுத்தும்போது வரும் எழுத்து எதுவென்று பார்ப்பது. அதுகூட சுலபமான காரியமன்று.

“அம்மா இங்கோ வாவா, ஆசைமுத்தம் தாதா” என்ற வசனத்தை நான் முயன்று பார்த்தேன். அதாவது அவற்றுக்குரிய விசைகளின் ஆங்கில வரிவடிவங்களை வரிசையாகச் சொல்ல வேண்டுமென்று. அவ்வெழுத்துக்களைத் தட்டச்சுவது போன்று கற்பனை பண்ணி ஆங்கிலத்தில் அதேபோன்று தட்டச்சும்போது உருவாகும் எழுத்துக்களைக் கண்டுபிடிக்க முயன்றேன். மிகமிகக் கடினமாக இருந்தது.

ஏனென்றால் பொதுவாக ஓரெழுத்தை எப்படித் தட்டச்சுவது என்றுதான் பழக்கப்பட்டிருக்கிறோம். விரல்கள் இயல்பாகவே அந்தந்த நிலைக்குச் சென்று விசைகளை அழுத்துகின்றன. ஆனால் இந்த விரலால் இப்படித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? என்று எதிர்வளமாக யோசித்தால் விடை காண்பது எளிதன்று. எமது மனம் அதற்குப் பழக்கப்பட்டிருக்கவில்லை. Shift உடன் வலதுகையின் நடுவிரலை நடுவரிசையில் அழுத்தினால் ‘மு’ வருமென்று கண்டுபிடித்துவிட்டேன். ஆனால் ஆங்கிலமுறையில் இதேமாதிரித் தட்டச்சினால் என்ன எழுத்து வரும்? ம்ஹும். தெரியவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் ‘K’ எழுதவேண்டுமென்று கேட்டால் தன்னிச்சையாகவே இடது சின்னிவிரல் shift விசையை அழுத்திப்பிடிக்க வலதுபக்க நடுவிரல் நடுவரிசையில் தனக்குரிய விசையை அழுத்துகிறது, அதாவது ‘மு’ எழுதுவதற்குப் பயன்படுத்திய அதே விசை.

இத்தோடு இவ்விடுகை நிறைவுபெறுகிறது.
இவ்விடுகைகூட அவசரமாகவே எழுதப்படுகிறது. நேரமிருந்தால் பிழைதிருத்தியோ இன்னும் விளக்கம் அதிகமாகவோ மேம்படுத்தலாம்.

- பின்னூட்டங்களில் சந்திப்போம்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, August 23, 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு

பதிவர்களின் கலந்துரையாடலிற் சொல்லப்பட்ட ஒரு கருத்து ஏற்படுத்திய எரிச்சலின் பலனாக இவ்விடுகை எழுதப்படுகிறது.

இன்று (23-08-2009) கொழும்பிலே இலங்கை வலைப்பதிவர்களின் சந்திப்பொன்று நடைபெற்றது. இது தொடர்பான விவரணங்கள், விவரங்களை தொடர்புடையவர்களே எழுதியிருப்பார்கள். ஆகவே இது தொடர்பான ஆலாபனைகள் இங்குத் தேவையில்லை.

சந்திப்பானது இணைய வழியிலே நேரடி அஞ்சல் செய்யப்பட்டது. அதனால் எங்களைப் போன்றவர்கள் அச்சந்திப்பில் பார்வையாளராய்ப் பங்கேற்க முடிந்தது. இந்நிலையில்,மற்றவிடங்களில் நடைபெற்றது போன்று அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று மூன்றாந்தரப்பாக நின்று கதைக்காமல் நேரடி அனுபவமாகவே எமது விமர்சனங்களை முன்வைக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது.

சந்திப்பில் கதைத்தவர் தனது கருத்தை முன்வைத்தது போலவே அதில் பார்வையாளனாய்க் கலந்து கொண்ட எனக்கும் அதற்குரிய எதிர்க்கருத்தைத் தெரிவிக்கும் உரிமையுண்டெனக் கருதி இவ்விடுகை எழுதப்படுகிறது.

இணையவழிப் பார்வையாளர்கள் தனியே பார்ப்பதோடு மட்டும் நின்றுவிடாது தமது கருத்துக்களைத் தட்டச்சிப் பரிமாறும் வசதியுமிருந்தது. நான் அரட்டைப் பெட்டியில் நுழையும்போது ஏற்கனவே இருபது வரையானவர்கள் 'குதியன் குத்தி'க் கொண்டிருந்தார்கள். கிருத்திகனும் சினேகிதியும் உசாராக நின்று ஓடியாடி வேலைசெய்துகொண்டு நின்றார்கள். (எத்தினை பேர் சந்திப்புக்கு வந்திருக்கினம் என்று யாராவது கேட்டாலும் இவர்கள்தான் பதிலளித்துக்கொண்டிருந்தார்கள். 'உடல் இங்கே, உள்ளம் அங்கே' என்று அதற்கொரு காரணமும் சொல்லப்பட்டது ;-))

சந்திப்பில் தனித்தனி ஆளாகப் பேசிமுடிய கலந்துரையாடல் நேரம் வந்தது (அல்லது அப்படியொரு புதுத் திசைக்கு நிகழ்வு சென்றது). அதிலே தமிழில் தட்டச்சுவது பற்றிய கருத்துப் பரிமாற்றம் தொடங்கியதும்தான் நான் கொஞ்சம் ஈடுபாடு காட்டத் தொடங்கினேன். அதுவரைக்கும் நடைபெற்றவற்றில் நான் ஆர்வப்படுமளவுக்கு எதுவுமிருக்கவில்லை. தட்டச்சு முறைபற்றித் தொடங்கிய கருத்து, தமிழெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட விசைப்பலகையை அறிமுகப்படுத்தல் என்பதோடு நின்றுகொண்டது. அதைத்தாண்டிச் செல்லவில்லை. அரட்டைப் பெட்டியில் நான் எழுதிக்கொண்டிருந்தேன், பாமினி, தமிழ்நெற் 99, Tamil phonetic முறைகள் பற்றிய கலந்துரையாடலைச் செய்யும்படி. அத்தோடு வந்திருக்கும் பதிவர்களிடத்தில் அவர்கள் பயன்படுத்தும் விசைப்பலகை முறை பற்றிய கணிப்பீடு ஒன்றை எடுக்கும்படியும். Tamil Phonetic முறையைப் பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு இலங்கைப் பதிவர்களிடம் இருக்கிறதா, ஒருவராவது அந்த விழிப்புணர்வு பற்றி அக்கலந்துரையாடலில் கதைப்பாரா என்பது என் ஆவலாயிருந்தது. ஆனால் நடக்கவேயில்லை. கணிப்பீடு எடுக்கும்படி பலதரம் கேட்டும்கூட எந்தப்பதிலுமில்லை. அரட்டைப்பெட்டியில் 'அதி முக்கியமான' வியாக்கியானங்கள் நடந்துகொண்டிருந்தன. இயலாக்கட்டத்தில் 'டோய், ஆருக்காவது நான் சொல்லிறது கேக்குதோ?' என்று கேட்டதற்கு 'ஓம்' என்று ஒரு பதிலும், 'இல்லை, கேக்கேல' என்று இன்னொரு பதிலும் மட்டும் வந்தது;-). இருவருமே இணையவழிப் பார்வையாளர்கள்.

இரண்டாவது பதிலைச் சொன்னவர் சொன்னார், 'ஓய் வசந்தன், உம்மட பிரண்ட் கதைக்கிறார்' என்று. எனக்கு எந்த நண்பனும் அங்கில்லை என்றபோதும் ஆர்வமாகப் பார்த்தேன். உடனடியாக யாரென்று தெரியாவிட்டாலும் கதைக்கத் தொடங்கி சில வினாடிகளுள் கண்டுபிடித்துவிட்டேன். அவர் மு.மயூரன். 'உம்மட பிரண்ட்' என்று மயூரனைக் குறிப்பிட்டு ஏன் சொன்னார் என்றோ அதிலுள்ள உட்குத்து என்னவென்றோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவ்வளவு நேரமும் நான்மட்டும் அரட்டைப் பெட்டியில் குத்திக்கொண்டிருந்த விடயத்தை மயூரன் வாயிலெடுத்தார் (கையிலெடுத்தார் எண்டு சொல்லேலாது பாருங்கோ). பிறகு யோசித்தேன், இதற்கு மயூரன் பேசாமலேயே இருந்திருக்கலாம்; எழில்வேந்தனைச் சாடி ஓர் இடுகை எழுதுவதிலிருந்து நானாவது தப்பியிருப்பேன்.

தொடக்கத்திலேயே மயூரன் சொன்னார், தனக்கு phonetic விசைமுறையைப் பயன்படுத்துவது தொடர்பில் எதிர்ப்போ ஆதரவோ இல்லை, ஏனென்றால் தான் அதைப் பயன்படுத்துவதில்லையாம். இப்படி நழுவிய மயூரனுக்கு அரட்டைப் பெட்டியில் 'இவர் தமிழ்க் கடும்போக்காளர் போல கிடக்கு' என்ற பட்டம் கிடைத்தது தனிக்கதை. ஆனால், phonetic முறையை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள் என்று மூன்றாந்தரப்பாக நின்று அவர்களின் நியாயத்தைச் சொல்லப் புறப்பட்டார் மயூரன். அப்படி அவர் சொன்ன நியாயங்கள் phonetic முறையை எதிர்ப்பவர்களின் வலுவான வாதமாக இருக்கவில்லை என்பதுதான் சோகம்.

"phonetic முறையில் தட்டச்சிக்கொண்டு போனால் எதிர்காலத்தில் தமிழ் தனது வரிவடிவங்களை இழந்து ஆங்கில வரிவடிவங்களால் எழுதப்படும் நிலைக்குப் போய்விடும் என்பது phonetic முறையின் எதிர்ப்பாளர்களின் வாதம். மலாய் மொழிக்கு நடந்ததைப் போல தமிழுக்கும் நடந்துவிடுமென்று அவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால் யுனிகோட் வந்ததால் தமிழ் தப்பித்தது"
என்பது மயூரன் "மூன்றாந்தரப்பாக" நின்று phonetic முறை எதிர்ப்பாளர்கள் சார்பில் சொன்ன நியாயம்.

ஒருங்குறி வந்ததால் தமிழ் அடைந்த நன்மையைக் குறிக்க இதையொரு காரணமாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் phonetic முறையை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணமாக இதைச் சொன்னார் மயூரன். (ஒருங்குறியே ஓர் அரைகுறைத் தீர்வு என்பது இன்னும் வாதமாக இருக்கிறது. இராம.கி இது குறித்து முன்பு எழுதினார். இன்னொருவரும் (கவிதா கயீதா ஆன கதை - WOW?)இது குறித்து எழுதினார். ஆனால் ஒருங்குறி மீதான முரட்டுத்தனமான காதலால் அக்கருத்துக்களை விளங்கிக் கொள்ளாமல் அல்லது விளங்கியும் விளங்காதது போல் நடித்து ஒரு கூட்டம் எதிர்த்தது. பிறகு அதுபற்றிய கதைகள் வலைப்பதிவில் அடங்கிவிட்டன.)

phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்த்து வலைப்பதிவுகளிலேயே நிறைய எழுதப்பட்டாயிற்று. இதை ஓர் இயக்கமாகவே முன்னெடுத்தார்கள் சிலர். "ammaa ≠ அம்மா" என்ற முழக்கத்தை அடிப்படையாக வைத்து அதை முன்னெடுத்தார்கள். வலைப்பதிவுகளில் தட்டிகள் எல்லாம் வைத்தார்கள். இப்போதும் சில வலைப்பதிவுகளில் அவை இருக்கக் கூடும். (அவற்றுக்கான இணைப்புக்களைத் தேடியெடுத்துப் போட நேரமோ ஊக்கமோ இல்லையென்பதால் நண்பர்கள் யாராவது பின்னூட்டங்களில் இடுவீர்களாக!)

phonetic முறையை எதிர்ப்பவர்கள் சார்பில் கதைக்கப் புறப்பட்ட மயூரனும் அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தவில்லை. (அவரே சொன்னதுபோல் அதை எதிர்ப்பது, ஆதரிப்பது தொடர்பில் அவருக்குக் கருத்தில்லையாதலால் அது தொடர்பில் அவர் ஆராயவில்லையென்று விட்டுவிடலாம். ஆனால் அப்படி தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருப்பது 'தமிழ்ச்சிந்தனை'யில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் பற்றி சிந்திப்பாரானால் அவர் தனது நிலையை மாற்றக் கூடும்)

ஆனால் அதற்குப் பிறகு வந்த சிறப்பு விருந்தினர் (நானும் அவர் வலைப்பதிவராகத்தான் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் என்று நினைத்திருந்தேன் வந்தியத்தேவனின் இடுகையைப்பார்க்கும்வரை) எழில்வேந்தன் phonetic முறையில் தட்டச்சுவதற்கு வக்காலத்து வாங்க வந்து சொன்ன கருத்துக்கள் எரிச்சலைக் கிழப்பியதுடன், எழுதாமலே விட்டிருந்த இவ்வலைப்பதிவில் ஓரிடுகை எழுத வேண்டிய சூழ்நிலைக்கும் காரணமாயின.

"இன்று ஏராளமான குழந்தைகளுக்குத் தமிழ் பேசவே வரவில்லை. தமிழ் சுத்தமாக எழுதவே தெரியாது. வெளிநாட்டில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தமிழ்ச் சொற்களைப் பிறநாட்டு மொழிகளிலேயே எழுதி வாசிக்கிறார்கள். அவர்களுக்கு இந்த phonetic முறையில் தட்டச்சுவது நல்ல வரப்பிரசாதம். ammaa என்று எழுதினால் 'அம்மா' என்று வரும். அம்மா என்பதற்கான தமிழ் வரிவடிவங்கள் எப்படியிருக்குமென்று அந்தப் பிள்ளைகள் அறிவார்கள். எனவே phonetic முறையில் தட்டச்சுவதை எதிர்க்காதீர்கள்"
என்பதாக அவரது வாதம் அமைந்திருந்தது.

தமிழ்ச்சொல்லைப் பிறமொழி வரிவடிவங்களில் எழுதி வாசிக்கும் அந்தக் குழந்தைகளின் நிலைக்குத்தான் தமிழ்வலைப்பதிவாளர்களையும் போகச் சொல்கிறார் எழில்வேந்தன். அம்முறையில் தட்டச்சிக் கொண்டிருந்தால் அதுதான் நடக்கும் என்பதைச் சூசகமாகவேனும் ஒத்துக் கொண்ட எழில்வேந்தனைப் பாராட்டத்தான் வேண்டும். கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் phonetic முறை எதிர்ப்பாளர்களும் சொல்லிக் கொண்டிருப்பது ஏனோ உறைக்கவில்லை. சிலவேளை தான் தமிழ் வலைப்பதிவர்களிடத்தில் பேசுகிறேன் என்பதை மறந்து எங்கோ புலம்பெயர்ந்திருக்கும் - தமது பிள்ளைகளுக்கு தமிழெழுத்துக்கள் எப்படியிருக்குமென்று காட்ட அவாப்படும் பெற்றோர் யாருக்காவது வகுப்பெடுக்கிறேன் என்று நினைத்தாரோ தெரியவில்லை.

'என்னப்பா இந்தாள் இப்பிடிக் கதைக்குது? என்று எனது விசனத்தை அரட்டைப் பெட்டியில் வெளியிட்டபோது,
'ஓய்! அவர் மூத்த வலைப்பதிவாளர் தெரியுமோ?' என்று ஒருவர் எதிர்க்கேள்வி கேட்டார்.
எனக்கு அது தெரியும். ஆனால் அவ்வெதிர்க் கேள்வி கேட்டவர் என்ன கருத்தில் அதைக் கேட்டாரோ தெரியாது, எனக்கென்னவோ நையாண்டி பண்ணுவதைப் போலவே இருந்தது. அப்படியென்றாலும்கூட என்னையா எழில்வேந்தனையா என்பதையும் அவர்தான் சொல்ல வேண்டும் ;-).

அம்மா என்று காகிதத்தில் எழுதும்போது ஆனா, இம்மன்னா, மாவன்னா என்றுதான் மனதில் எழுத்துக் கூட்டி எழுதுவோம். பாமினி முறையிலோ தமிழ்நெற் 99 முறையிலோ தட்டச்சுபவர்களும் அப்படியே எழுத்துக்கூட்டித் தட்டச்சுவார்கள். ஆனால் phonetic முறையில் தட்டச்சுபவர்கள் அம்மாவை ஆனா, இம்மன்னா, மாவன்னா என்று மனதுள் எழுத்துக்கூட்டுவதில்லை. மாறாக a m m a a என்றுதான் மனதுள் எழுத்துக்கூட்டுவார்கள். இந்தச் சின்னப் புள்ளியிலிருந்து யோசிக்கத் தொடங்குங்கள். phonetic முறையில் தட்டச்சுவதால் தனிமனிதனுக்கு, அதன் தொடர்ச்சியாக சமுதாயத்துக்கு ஏற்படப்போகும் தீங்கை. தீங்கென்பது இரண்டொரு வருடத்தில் வருவதைப்பற்றியன்று; அல்லது ஒருவருடைய வாழ்நாளில் வருவதைப்பற்றிய பயம் மட்டுமன்று. இவற்றின் தொடர்ச்சியாக ஒரு மொழிக்குழுமத்தில் நடைபெறப்போகும் தாக்கத்தைப் பற்றியது. கணனித் தட்டச்சைத் தவிர்த்து எவருமே பயணிக்க முடியாத நிலை எமது சமுதாயத்திலும் ஏற்படத்தான் போகிறது. இந்நிலையில் இப்படியான தட்டச்சு முறையினால் எமது மொழிக்குழுமம் அடையப்போகும் பாதிப்பு பற்றிய அறிவு, சில தலைமுறைகள் கடந்தபின் எமது குழுமத்தின் மொழிவளம் பற்றிய "பிரக்ஞை" (இந்தச் சொல்லில சிரிக்கக் கூடாது. சீரியசாச் சொல்லிக்கொண்டிருக்கிறன்) எமக்கு இருக்க வேண்டும்.

முந்தியொருக்கா எழில்வேந்தன் அண்ணர், அகிலனுக்குக் குடுத்த செவ்வியொண்டு இந்த நேரத்தில் ஞாபகம் வந்து துலைக்குது. திரும்ப ஒருக்கா அதைக் கேக்க வேணும். நேரமிருந்தாப் பாப்பம். ஆனா ஒண்டு நல்ல ஞாபகமிருக்கு. அதில மூச்சுக்கு ஒருதரம் "தமிழ் பற்றிய 'பிரக்ஞை' இப்ப குறைஞ்சு கொண்டு வருது. அது எல்லாருக்கும் இருக்க வேணும்" எண்டு சொல்லிக் கொண்டிருந்தார்.

===========================
கலந்துரையாடல் குறித்துப் பாராட்ட நிறையவே உள்ளன. சும்மா நாலுபேர் மதகில் குந்தியிருந்து பீடி குடித்துவிட்டுத் தம்பட்டம் அடிக்காமல் உண்மையிலேயே அதிக சிரத்தையெடுத்துச் செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு தனிப்பட எனது பாராட்டு. குறிப்பாக உலகெங்கும் இணையவழியில் அதை நேரடி ஒளிபரப்புச் செய்தது. அந்த வசதியால்தான் நாங்கள் நேரடியாகப் பங்குகொண்ட உணர்வோடு இந்த விமர்சனத்தை எழுத முடிகிறது.

இது உண்மையிலேயே உளமார்ந்த பாராட்டே. பின்னூட்டத்தில் யாராவது வந்து 'ஏய் இவ்வளவு நல்ல விசயம் நடந்திருக்கு நொட்டை மட்டும் பிடிச்சுக் கொணடிருக்கிறாய்' என்று கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் எழுதப்பட்டதன்று. அப்படியாக நடுநிலையாளன், நியாயவாதி என்ற பட்டங்களைப் பேணவேண்டிய நிலை எனக்கில்லை.

மேலும், அச்சந்திப்பிலேயே மருதமூரான் குறிப்பிட்ட கருத்தொன்று பிடித்திருந்தது. யாழ்தேவி என்ற பெயர் குறித்த விமர்சனங்கள் வைக்கப்பட்டபோது, "இவ்வளவுநாளும் ஆகா ஓகோ என்று புகழ மட்டுமே செய்தீர்கள், ஒருவராவது இப்படியான விமர்சனத்தை இவ்வளவு நாட்களில் எழுப்பவேயில்லை. தேவையில்லாத புகழ்ச்சியை விட்டுவிட்டு சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைத்திருக்க வேண்டும்" என்று ஆதங்கத்தோடு சொன்னது பிடித்திருந்தது.
அதையே நான் செய்கிறேன், புகழ்ந்துகொண்டிருப்பதைவிட சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் வைப்போமென்று.

நிற்க, மருதமூரான், யாழ்தேவி என்ற பெயரை மாற்றுவதே நன்று என்பது எனது கருத்து. இவ்வளவு நாட்களும் ஓடிவிட்ட, பிரபலமாகிவிட்ட அப்பெயரை இப்போது மாற்றுவதென்பது சங்கடமானதே. உண்மையில் இன்று உங்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும்வரை எனக்கு அப்படியொரு திரட்டி இருப்பதே தெரியாது.

=====================================
ரவிசங்கர் முன்பு எழுதிய தமிழ்நெற்99 விசைப்பலகைக்கு ஆதரவான இடுகைகளுக்கான இணைப்புக்கள் இப்போது இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நெற்99 முறையைப் பரப்புவதையே முதன்மை நோக்கமாக அவை கொண்டிருந்தால் ஆங்கில ஒலியியல் முறையில் தட்டச்சுவதிலுள்ள அபத்தத்தை அவை பேசுகின்றன. அவ்விடுகைகள் சிலருக்காவது விளக்கத்தை அளிக்கலாம்.

ஏன் தமிழ்99 விசைப்பலகைக்கு மாற வேண்டும்?


தமிழ்99


Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Wednesday, December 10, 2008

மரங்கள் - 3 - தேன்தூக்கி -

==============================
நான் இவ்வலைப்பதிவில் எழுதத் தொடங்கி
நான்காண்டுகள் நிறைவடைகின்றன.
இதற்காக ஓரிடுகை. ;-)

==============================

மரங்கள் - 1 - வெடுக்குநாறி
மரங்கள் -2- விண்ணாங்கு



கடந்த ஈரிடுகைகளிலும் முறையே வெடுக்குநாறி, விண்ணாங்கு ஆகிய மரங்கள் பற்றிப் பார்த்திருந்தோம். இப்போது 'தேன் தூக்கி' என்றொரு மரம் பற்றி கொஞ்சம் அலசலாம்.

இதன் பெயர்க்காரணம் சரியாகத் தெரியவில்லை. தேனுக்கும் இம்மரத்துக்கும் ஏதும் தொடர்பிருப்பதாகவும் தெரியவில்லை. வேறேதேனும் பெயரிலிருந்து மருவி 'தேன் தூக்கி' என்று வந்திருக்கலாம். வேறிடங்களில் இம்மரம் வேறு பெயர்களில் அழைக்கப்படவும் கூடும்.

உருவம், பயன்பாடு:
வன்னிக் காடுகளில் இம்மரம் மிக அதிகளவில் வளர்கிறது. மிகப்பெரிய மரமாக வளராது; அதேநேரம் சிறியதாகவும் இல்லாமல் இடைப்பட்ட அளவில் வளரும். சுமார் முப்பது தொடக்கம் நாற்பது அடி உயரத்துக்கு வளரும். இளம் பருவத்தில் இதன் பட்டை மஞ்சள் கலந்த மண்ணிறமாக இருக்கும். மரத்தின் உட்பாகமும் மஞ்சளாகவே இருக்கும். முற்றிய மரமாயின் தண்டின் நடுவே கோறையாக இருக்கும். காய்ந்த நிலையில் சோத்தியான மரமாகவே இருக்கும்.

பச்சையாகவே வெட்டினால் குறிப்பிட்ட காலத்துக்கு இம்மரத்தைப் பயன்படுத்தலாம். கப்புகளுக்கு இம்மரம் பயன்படுத்தப்படுவதுண்டு.
விறகுத் தேவைக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை.

தேன்தூக்கி மரத்தின் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இது தனக்குக் கீழ் எதையும் வளரவிடாது. வெயில் கிடைக்கும் இடமாயிருந்தால் புற்கள் மட்டும் பசுமையாக வளரும், மற்றும்படி வேறெந்தத் தாவர வகைகளும் இம்மரத்தின் கீழ் வளரா. இது அனுபவத்தில் கண்டது தானேயொழிய விஞ்ஞானபூர்வமான முடிபு அன்று.

வன்னியில் 'வெட்டைக்காடு' என்ற சொல்லாடல் உண்டு. வெட்டையும் காடும் எதிர்மறையான பொருளுடைய இரு சொற்கள். வெட்டை என்பது மரஞ்செடிகளற்ற வெறும் வெளியைக் குறிக்கும். பிறகெப்படி இரண்டும் சேர்ந்து ஒரு சொல்லானது?

இங்கு 'வெட்டைக் காடு' என்பது உயரிய மரங்களைக் கொண்ட அடர்ந்த காடாகவுள்ள அதேநேரத்தில் பற்றைகளையோ உயரம் குறைந்த சிறு மரஞ்செடிகளையோ -அதாவது கீழ்வளரிகளைக் கொண்டிராத காடுகளைக் குறிக்கும்.

பெரிய மரங்களைக் கொண்டிருந்தாலும் நிலப்பகுதியில் அடர்த்தியான பற்றைகளைக் கொண்ட காடுகளுமுண்டு. இக்காடுகளில் இருபது யார் தூரத்துக்கப்பால் எதையும் அவதானிக்க முடியாதிருக்கும். இவற்றில் மனித நகர்திறன் மிக மோசமாக இருக்கும். அவ்வாறன்றி, நிலமட்டத்தில் பற்றைகளின்றி வெளியாக இருக்கும் அடர்ந்த காடுகளுமுள்ளன. நூறு யார் தூரத்துக்கும் அப்பாற்கூட நன்றாக அவதானிக்கலாம். தெருவில் நடப்பதைப் போல கைவீசிக் கொண்டு நடந்து போகலாம். அதேவேளையில் வெயில் நிலத்தில் விழாதபடி மிக அடர்ந்த காடாகவும் அது இருக்கும். இப்படியான காடுகளையே 'வெட்டைக் காடு' என்ற சொல்லால் அழைப்பதுண்டு.

தேன் தூக்கி பற்றிக் கதைக்க வந்து வெட்டைக்காடு பற்றி கதைக்கத் தேவையென்ன?
தேன்தூக்கி மரங்கள் அதிகமுள்ள காடுகள் அனேகமாக வெட்டைக் காடுகளாக இருக்கும். ஏனென்றால் தேன்தூக்கியின் கீழ் பற்றைகளோ வேறு தாவரங்களோ வளரா.

வன்னியில் முத்தையன்கட்டுப் பகுதிக் காடுகள் - குறிப்பாக முத்தையன்கட்டுக் குளத்தைச் சுற்றியுள்ள காடுகள் அடர்ந்த வெட்டைக் காடுகள்.

தமக்குக் கீழுள்ளவர்களின் வளர்ச்சியைப் பாழாக்கும் அதிகாரிகளை 'தேன்தூக்கி' என்று அழைக்கலாம். ;-)

தேன்தூக்கி தொடர்பில் இன்னொரு குறிப்புண்டு.
இம்மரத்தில் ஒருவகை உண்ணி இருக்கும். (அல்லது இவ்வகை உண்ணி இம்மரத்தில்தான் அதிகமாக இருக்கும்). தனியொரு உண்ணியை வெற்றுக்கண்ணால் உடனடியாகப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாதபடி மிகமிகச் சிறிய உண்ணி. கூட்டமாக ஊர்ந்தால்தான் உடனடியாகக் கண்ணுக்குத் தட்டுப்படும். தேன்தூக்கி இலைகளில் கும்பலாகக் குடியிருக்கும் இக்கூட்டம் அவ்வழியே நகரும் மனிதர் மீது ஒட்டிக்கொள்ளும். பின் உரோமங்கள் அதிகமுள்ள இடங்கள் தேடி அமர்ந்துகொள்ளும். தேவையான நேரத்தில் அவ்வப்போது கடித்துக்கொள்ளும். ஒருவர் முழுமையாக உண்ணி பொறுக்கி முடிய இரண்டு மூன்று நாட்கள் கூட ஆகலாம்.

ஆனால் தேன்தூக்கி உண்ணியின் தாக்குதலுக்கு உள்ளாவது மிக அருந்தலாகவே நடைபெறும். ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் அந்த அதிஷ்டம் கிடைக்கும்.

Labels: , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, September 14, 2008

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்மீதொரு சீட்டுக்கவி

கோவணக் கொடை வள்ளலின் முகமூடி இன்னொருமுறை  கிழிந்திருக்கும் இவ்வேளையில் பொருத்தம் கருதி இக்கவிதை மீள இடப்படுகிறது.

வள்ளல் வாழ்த்து
-------------

வாழ்க நீர் எம்மான்;
கன்னனும் குமணனும் போல்வீர்;
தன்னிலை மறந்தும் அள்ளிக்கொடுத்தீர்
பொன்னையும் பொருளையும்
பிற கோவணத் தும்மவர் செய்கைகட்காய்.

மீதியும் மிதியும்
-------------------

கோவணநாட்டின் கொடைவள்ளல்கள்
கோடித்துணி அள்ளிக்கொடுக்கையில்,
தேசியக்கொடியிலும் தீராத
முடைநாற்ற வீச்சம்.

மேற்குத்திசைக்கொரு வேண்டுதல் விடுக்கும்
மாற்றுக் கோவணம் இல்லான்தெரு வள்ளல்கள்,
அரச ஆவணத்தின் பேரில்
காலொடுங்கு முடுக்கு விடுத்து
கழற்றிக்கொடுத்தார்
தம் கவட்டிடுக்குக் கோவணம்,
வேற்றூர் யாசிப்போனுக்கு,
வெறி மிகுந்து
வீட்டிலிருப்போர்
கழுத்திறுக்கக் கைக்குட்டைகளாய்.

திகம்பரர் தெருவினிலே
அதை மறையா
அம்மணங்கள் அசிங்கமில்லை.
கௌபீனம் தந்தோர் காந்திகள்;
கைவிட்டுப் பெற்றோர் கௌதமபுத்திரர்.

கைப்பிடி துணி கண்டோர் பூமியிலே,
கவட்டுமுடுக்குக்கும் கழுத்துமுடிச்சுக்கும்
இடையில் இருப்பதில்லை,
ஏதும் இடைவெளி;
உள்ளத்தே நொடிந்தார் கழுத்தினிலே
முடித்துக்கொண்டதெல்லாம் பிச்சைக்கௌபீனம்.
உள்ளதில் வலிந்தார் இடையிலே
ஏற்றிக்கொண்டதெல்லாம் எழிற்கைக்குட்டை.

அரைக்கோவணத்தார் தேசத்திலே,
நேர்த்தியற்றதேனும், நெய்த நூற்குட்டை,
கொடுத்தோர் கொடுங்கோலர்;
கொண்டோர் கொலைகாரர்;
குலைந்தோர் கொத்தடிமையர்.

இப்படியாய்,
எல்லாமே வல்லமையாய் உள்ளவர் போல்,
இல்லாதார் நாட்டிலும் உண்டாம், பல்லாயிரம்
கோவணக்கொடுத்தலும் வாங்கலும்;
கூடவே கொழுவி வரும்,
இல்லாமையின் இருப்பின் கருநிழலும்
கையள்ளிச் சொல்லிச் சொரியும்
முள்ளுப்பாத்தி மூச்சு முட்டிக்குத்தும்
இறைமையின் ஏழ்மையும் வறுமையும்.


14/ஜூன்/'00

====================================
படைப்பு என்னுடையதன்று.

Labels: , , , , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


Sunday, August 10, 2008

தலைப்பில்லாக்கனவு. -ஒலிம்பிக்கை முன்வைத்தொரு கவிதை மீளிடுகை

2008 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் இக்கவிதை மீள இடப்படுகிறது.
==============================

* தலைப்பில்லாக்கனவு.

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
என் நாடும் கொடிபிடித்து
கிழக்குத்தீமோர் போல்
ஒலிம்பிக்கில் நடக்கும்.

இன்னொரு நாட்டில்
ஒளிந்தோடிப்போன என்
இனிவரு தலைமுறையும்
இறந்து போயிருக்கலாம்;
ஆனாலும் யாருக்கும் அடங்காது
வரும் அப்பெரும் பொழுது.

~~~~~

அந்நாள் அந்நாட்டில்,
தீபத்தைத் தாங்கியோடுவாள்
ஓரிள மங்கை,
இந்நாள் காடுறையும் அன்னாளின்
பின்னால் பின்னாள் வந்தாள்.

உடைசற்படகுகளில் ஓயாமற்
கடல்கடந்து துடித்துவலிக்கும்
துயர்மனிதர்களின் குழந்தைகள்
துடுப்புவலித்தலிலே வெகுதூரம்
முன்
கடப்பார்கள்.

என்றாவதொரு நாள்,
எரிந்த நிலமிருந்து எழுந்துவரும்,
வாழ்தலுக்கும் கொல்தலுக்கும்
வழிபட்ட துப்பாக்கி,
வேடிக்கை
விளையாட்டில்
வெடித்து வெல்லப்பிடிக்கும்
வல்லதொரு தலைமுறை.

அன்று
இழியும் எந்தத்தோல்வியும்கூட
அந்நாளை அடைந்தோம் நாமென்ற
வெற்றியை
அறைகூவித்தான் அலறும்#

~~~~~

அடங்காத தினசரிக்கனவுக்கு மட்டும்
விழித்திரையைத் திறந்து விடுகின்றேன்.
அது எமது நிலக்கதைகளுக்கு
காலவேர் வைக்கும் கருவி.

அதனால்,
நினைவுகளின் நீர்ப்பட்டு
நீர்க்காது எனக்கிருக்கும்
இன்னும் நிறைந்து
நீங்காத கனவுகள்
பல
விளைந்து.

~~~~~

எனக்கொரு கனவுண்டு;
இனியொரு நாள்
பாலைப்பலஸ்தீனம் போல்
என் சுடுநாடும் ஒரு கொடிபிடித்து
தலைநிமிர்த்தி
ஒலிம்பிக்கில்
குளிர்காஷ்மீருடன் கூட நடக்கும்.


* இஃது
எந்தவிதத்திலும் கவிதையோ கதையோ சிறுகட்டுரையோ அல்ல;
இன்றைய நாளினை நினைவிலே
வைத்துக்கொள்ளமட்டும்
எழுதப்பட்ட கருத்துப்பரப்புகை மட்டுமே

#"My country did not send me to Mexico City to start the
race. They sent me to finish the race."


- During
1968 Mexico Olympics, said by the badly injured Tanzanian runner John Stephen
Akhwari, who staggered into the stadium more than an hour behind the first-place
winner.

மூலவிடுகை எழுதப்பட்டது: 12/17/2004 01:53:00 AM
===============================

எம்மைப் போன்றோர்க்குப் பொதுவான கனவு.
வாசிக்கும்போதே விளங்கியிருக்கும்; இக்"கவிதை" என்னால் எழுதப்பட்டதன்று.
இச்சொற்கூட்டச் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது கடினமா என்ன?

முன்பொருநாள் படியெடுத்துச் சேமித்து வைத்திருந்ததைப் பதிந்திருக்கிறேன். விரைவில் மூலவிணைப்பை வழங்குகிறேன்.

===============================

மீளிணைப்பு:

மேற்கண்ட கவிதையின் மூலவிணைப்பு:
http://kanam.blogspot.com/2004/12/blog-post_110326651516180283.html

Labels: , , ,

எழுத்துருவைத் தெரிவுசெய்ய.
பாமினி ஆங்கில உச்சரிப்பில்

[மேலுள்ள பெட்டியில் தட்டச்சினால் கீழுள்ள பெட்டியில் ஒருங்குறிக்கு (Unicode) மாற்றப்பட்ட எழுத்துரு கிடைக்கும்]


சுரதா, கிருபாவுக்கு நன்றி


© 2006  Thur Broeders

________________